Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 34

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 34

அத்தியாயம் – 34

விடிவதற்கு முன்பே சித்தாராவுக்குப் பன்னீரிடம் இருந்து போன் வந்தது.

 

“நிலமை அங்க எப்படிம்மா இருக்கு?”

 

“பரவால்லண்ணா சமாளிச்சுடலாம்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அங்க அரவிந்தைக் கல்யாணம் பண்ணிக்குறதுக்கு முன்னாடி இருந்த சைலஜாவைப் பத்தி ஏதாவது தெரிஞ்சதா?”

 

“ம்ம்….. ம்ம்………. சைலஜாவைப் பத்தி நான் ஒண்ணும் பேச விரும்பல……  அவளைப் பத்தி கேள்விப் பட்டதுல ஒண்ணு கூட நல்லது இல்ல. அவளுக்கு அழகு தந்துட்டு அதை ஈடு செய்ய  கொடூரமான மனசை கொடுத்திருக்கான் அந்த ஆண்டவன்.

 

இந்த சைலஜா ஒரு செராக்ஸ் கடைல வேலை செஞ்சப்ப, அங்க சர்ட்டிபிக்கேட்டை நகலெடுக்க சைலஜாங்குற பேர் உள்ள பொண்ணு ஒண்ணு வந்திருக்கு.

இவளுக்கு சைலஜான்னு  பேர்லயே எல்லா சர்ட்டிபிகேட்டும் அல்வா மாதிரி கிடைக்கவும்,  யாருக்கும் தெரியாம அதை திருடிட்டு வந்து,  தான்தான் சைலஜான்னு சொல்லி வேலை ஒரு கால் சென்டர்ல  வாங்கிட்டா. அவளுக்கு வேலைக்குப் போறது முக்கியம் இல்லை. அந்த ஆபிஸ்ல இருக்குற பெரிய பசையுள்ள புள்ளிங்கதான் இலக்கு.

 

அங்கேயும் அவ நடை உடை பாவனை நுனி நாக்கு ஆங்கிலம் எல்லாத்தையும் பார்த்து படிச்சவளா இல்லையான்னுகுற யாருக்கும் சந்தேகம் வரல. ஆனா  அவளோட கெட்ட நேரம், அந்த கம்பனிக்கு அவளோட பழைய காதலன்ல ஒருத்தன், அவன்  பேரு மஞ்சுநாத் மேலதிகாரியா வந்துட்டான்.

 

அவனுக்கு முன்னமே இவளோட பழக்கம் இருந்திருக்கு. ஆனா ரெண்டு பேருக்கும் சரிபட்டு வராம பிரிஞ்சிருக்காங்க. இவ அவன் கிட்ட நல்லா காசைக் கறந்துகிட்டதுமில்லாம அவன் கல்யாணம் நடந்த அன்னைக்கு கல்யாணப் பொண்ணு கிட்ட “எங்களுக்கு எந்த அளவுக்கு நெருக்கம்னு கேளு”ன்னு நா கூசுற மாதிரி பேசி இருக்கா. பொண்ணு வீடு வசதியானது. நேரா  கோர்ட்டுக்கு போய் நின்னுட்டாங்க. அதே காண்டுல இருந்திருக்கான் பையன்.

 

அந்த மஞ்சுநாத் இவளை அங்க பார்த்ததும் உடனே அவளோட சான்றிதழ்கள் பொய்ன்னு கண்டு பிடிச்சுட்டான். அவ எட்டாவது பெயில் ஆனது அவனுக்குத்தான் நல்லா தெரியுமே. மேலதிகாரிகள் கிட்ட சொல்லி வேலைக்கு வேட்டு வைச்சுட்டு, கையோடு இன்னொரு நல்ல வேலையும் செஞ்சுருக்கான். சான்றிதழ்களைத் தொலைச்சுட்டு தேடி கிட்டு இருந்த உண்மையான சைலஜாவைக கண்டு பிடிச்சிருக்கான்.

 

அந்தப் பொண்ணு பாவம் பத்தாவதுல இருந்து காலேஜ் வரை வாங்கின எல்லா சான்றிதழ்களுக்கும் டுப்ளிகேட் வாங்க அலைஞ்சுட்டு இருந்திருக்கு. அந்தப் பொண்ணு மூலமா அவங்களே இவ பேர்ல போலிஸ்ல புகார் தந்துட்டாங்க. அந்த சமயம் தான் நம்ம வில்லி அங்கேருந்து  தப்பிச்சு வந்து ஹோசூர்ல இருந்த கடைல வேலைக்கு சேர்ந்தது.

 

இவ அங்க போய் சும்மா இருக்காம வழக்கம் போல தூண்டில் போட்டிருக்கா. இந்த தடவை கம்பெனில வேளை செய்த அனுபவத்துல வெளிநாடு போய் ஆகணும்னு வெறி. அந்த வஞ்சகத்துல  விழுந்து கடைசி நேரத்துல தப்பிச்சவன் தான் பாபு.

 

இதுக்கு நடுவுல மஞ்சுநாத் மேலையும் உண்மையான சைலஜா மேலையும் இருந்த ஆத்திரத்தைத் தீர்த்துக்க அவங்களை ஆள் வைச்சு அடிக்க ஏற்பாடு செய்திருக்கா. அவங்களும் கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாம மஞ்சுநாத் காலை உடைச்சு, சைலஜா மேல ஆசிட் ஊத்தி இருக்காங்க.

 

கவலைப்படாதே….  அந்த பொண்ணு கைல மட்டும் தான் பட்டது. ஆசிட்  ஊத்துனவங்களைப் பிடிச்சு இந்த வில்லிதான் செஞ்சதுன்னு புகார் வாங்கியாச்சு. மஞ்சுநாத் கால் உடைஞ்சு ஆறு மாசம் படுக்கைல இருந்திருக்கான். அவன் மனைவியும் மனசு மாறி இப்ப அவன் கூட சேர்ந்துட்டா”

 

“எப்படி மனசு மாறினா அந்தப் பொண்ணுன்னு கேளும்மா” இடையில் குறுக்கிட்டார் கதிர்.

 

“கதிர் அண்ணா நீங்களும் இங்கதான் இருக்கிங்களா”

 

“ஆமாம்மா நானும் பன்னீரும் உங்க வீட்டு மாடில உட்கார்ந்துதான் பேசிட்டு இருக்கோம். மத்தவங்க எல்லாரும் கீழ் வீட்டுல இருக்காங்க” என்று சொன்னார் கதிர்.

 

“சரி நீங்க சொல்லுங்கண்ணா எப்படி மஞ்சுநாத் மனைவி மனசு மாறினா?”

 

“ மஞ்சுநாத் அடிபட்டதுல காலு கொஞ்சம் விந்தி தான் நடக்க முடியுது.  அவன்தான் நடந்தது எல்லாத்தையும் சொன்னான். பன்னீர் அவன் மனைவிகிட்ட போய் சைலஜாவப்  பத்தி எடுத்து சொல்லி  தூதுவர் வேலை பார்த்து  ரெண்டு போரையும் சேர்த்து வச்சாச்சு”

 

“எப்படிண்ணா அந்தப் பொண்ணு மனசு மாறுச்சு?”

 

“காலம்மா காலம். மனசோட ரணத்தைக் குறைக்குற சக்தி காலத்துக்கு மட்டும்தான் உண்டு. அது நம்ம கதைக்கு சம்மந்தமில்லாத விஷயம் அதுனால நான் பாபு பத்தின விவரங்களை சொல்லுறேன்.

 

பாபு,  சைலஜாவைக் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி வீட்டுல சண்டை போட்டு இருந்திருக்கான். ஆனா அவளோட போட்டோவைப் பார்த்தே அவங்க அப்பா இவ குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு இல்லை. அதுனால இவளைக் கல்யாணம் செய்து வைக்க மாட்டேன்னு சொல்லி இருக்கார்.

 

இருந்தாலும் குடும்பத்துல இருக்கவங்களை எதிர்த்துட்டு அவ கழுத்துல தாலி கட்டிட்டுக் கூட்டிட்டு போற அளவு போயிருக்கான். அந்த அளவு அவனோட மூளையையும் சலவை பண்ணி இருந்திருக்கா. அவ கூட பழகுறவங்க அவள் வெள்ளக் காக்கா பறக்குது பார்ன்னு சொன்னா கூட நம்புவாங்க போலிருக்கு அந்த அளவுக்கு அவங்க மனசை வசியப் படுத்துறதுல கை தேர்ந்தவன்னு கேள்விப் பட்டேன்.

 

பாபுக்கு இவளைப் பத்தின  விஷயம் அவன் பெங்களூர்ல டோபில்க்குப் படிச்சப்பக் கூடப் படிச்ச பையன், அதாவது மஞ்சுநாத் அலுவலகத்துல வேலை பார்த்திட்டு இருந்தவன்  மூலம் தெரிய வந்திருக்கு. அதனால பாபு கடைசி நேரத்துல சுதாரிச்சுட்டு கம்பி நீட்டிட்டான்.

 

ஆனா அவனோட வாக்குப் படி அவனும் அரவிந்த் இதுல மாட்டிக்குவான்னு சத்தியமா எதிர்பார்க்கல. அரவிந்தும் அன்னைக்குக் காலைல ரூமக் காலி பண்ணனும்னுதான் இருந்தான். விபத்துன்னு கேள்விப் பட்டு உதவி செய்யலாம்னு போனவனை அந்த விஷ சிலந்தி தன்னோட வலைல சிக்க வச்சுடுச்சு.”

 

“என்னண்ணா செய்யுறது இதெல்லாம் நேரம்தான். பாபு மாதிரி ஆளாயிருந்தா சைலஜா கிட்ட இருந்து தப்பிச்சு இருந்துந்திருப்பான். அரவிந்த் வாயில்லா பூச்சி. அதுனாலதான் இன்னமும் அவர்  வாழ்க்கைல விளையாடுறா”.

 

“அப்பறம் ஒரு விஷயம் சொல்லுறேன். அதிர்ச்சி ஆகாதே”

 

விஷயத்தை சொன்னதும் சிரித்தாள் சித்தாரா.

 

“அடப்பாவி முன்னமே உனக்குத் தெரியுமா?”

 

அதற்கும் சித்தாராவிடம் இருந்து சிரிப்புத்தான் பதிலாக வந்தது.

 

“சரிம்மா சாரிகா உன்கிட்ட என்னமோ முக்கியமான விஷயம் பேசணும்னு  சொன்னா “ அவ கிட்ட போன் தரேன் பேசு” என்றவர் கீழ் வீட்டில் இருந்த சாரிகாவிடம் சென்று கைப்பேசியைக் கொடுத்தார்.

 

“சித்தாரா நானும் ரொம்ப நாளா உன்கிட்ட பேசனும்னு நினைச்சுட்டே இருந்தேன் ஆனா சந்தர்ப்பமே வரல” குசலங்களை விசாரித்த பின் நேரடியாக விஷயத்துக்கு வந்தாள்.

 

“உனக்கு அண்ணன் ஏன் எங்க மேல அவநம்பிக்கையா பேசுது. சாந்தா மேல ஏன் எல்லாருக்கும் கோவம் இப்படி பல விதமான சந்தேகம் இருக்கும். நான்  அதுக்கு பதில் உனக்கு சொல்லுறேன்.

 

சத்யக்காவுக்கு வேலை கிடைச்சதும் நாங்க சென்னைக்கு வந்தோம். நான் காலேஜ்ல படிச்சிட்டு இருந்தேன். சாந்தாவுக்கு படிப்புல அவ்வளவா நாட்டம் இல்ல. அதுனால காலேஜை விட்டு நின்னுட்டு தையல் கிளாஸ், கிண்டில தொழிற்பயிற்சி, லைப்ரரி, தோழிகள் வீடுன்னு அவ பொழுது ஓடிட்டு இருந்தது.

 

 

சாந்தாவுக்கு சுயநலம் அதிகம்.அவளுக்கு வேணும்னா அதை எப்படியாவது நடத்திக்குவா. அதுல பாதிக்கப் படுற மத்தவங்களைப் பத்தி அவளுக்குக் கவலையே இல்லை. வீட்டுல சும்மா உட்கார்ந்திருந்தா  எங்கிட்டயும் அம்மாகிட்டயும் ஏதாவது பேசி சண்டை போடுவா. அதுனால அவ கிளாஸ் போற நேரம்தான் வீடு கொஞ்சம் அமைதியா இருக்கும்.

 

அப்பத்தான் அரவிந்த் அண்ணன், சைலஜா அண்ணி இறந்துட்டதால ஸ்ராவணியை வீட்டுல கொண்டு வந்து விட்டுட்டு போனார். எங்க எல்லாருக்கும்  செல்லமாகிப் போனா வனி. குறைப் பிரசவத்துல பிறந்ததால ஊட்டசத்து போதுமான அளவு இல்லாம சோனி மாதிரி இருப்பா குழந்தை. பார்க்கவே பரிதாபமா இருக்கும்.

 

அம்மா நல்லா பாப்பாவை கவனிச்சுகிட்டாங்க. சில மாசங்கள் போனது. அப்பத்தான் சுதா அக்காவுக்கு பயங்கரமா முதுகு வலி வந்து எந்திரிக்கக் கூட முடியல. அம்மா அக்காவை மதுரைக்குப் போய் கவனிக்க வேண்டிய நிலைமை உண்டாச்சு”.

 

னி நீராடு’ என்று மூத்தோர் சொன்ன வாக்கைக் கண்டிப்பாக கடை பிடிப்பார் நாதன். இதனால் சுதாவுக்குத் தான் உயிர் போகும். சனிக் கிழமையானால் உடம்பு முழுவதும் நல்லெண்ணெயைத் தடவிக் கொண்டு ஊறவைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார். வீட்டில் காயவைத்து அரைத்த சிகைக்காய்த் தூளை அவரது பதத்திற்குத் தகுந்தாற்போல் கரைத்து வைக்க வேண்டும்.

 

சோப்பு, தலை துவட்ட துண்டு அனைத்தையும் பாத்ரூமில் எடுத்து வைக்க வேண்டும். எண்ணெய் தடவும் போதே அவருக்கு மதியம் சாப்பிடத் தோன்றும் பதார்த்தங்களை சொல்லுவார். நாதனுக்கும் சேவகம் செய்து கொண்டு இடையிடையே அவரது மெனுவையும் சமைத்து முடிக்க வேண்டும் சுதா.

 

இதை எல்லாம் கூட சமாளித்து விடுவாள். ஆனால் அவருக்கு வெந்நீர் வைத்துக் கொடுப்பதற்குள் அவள் உயிரே போய்விடும். யாரோ, ஒரே சூட்டில், பச்சைத் தண்ணீரை விளாவாமல் சூடாக குளித்தால் உடலுக்கு நல்லது என்று சொல்லி விட, வீட்டில் இரண்டு காஸ் அடுப்பிலும் வெளியில் விறகடுப்பில் ஒன்றுமாய் மூன்று பெரிய தவலைகளில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, என்றைக்கு முதுகு முறிந்து விழுந்து விடப் போகிறதோ என்ற பயத்தில் ஒவ்வொரு பானை சுடுதண்ணியாய்  ஒற்றை ஆளாய் தூக்கி வந்து அண்டாவில் ஊற்றுவாள்.

 

“என் கையெல்லாம் எண்ணெய். இத்தோடத் தண்ணித் தவலையைத் தூக்கினேன் கால்ல விழுந்திடும். நான் காலொடைஞ்சு கிடந்தா உன் ஒடுகாலித் தம்பியா நம்ம குடும்பத்துக்கு சோறு போடுவான்?”

 

“மூணு வேளை மூக்குப் பிடிக்கக் கொட்டிக்கிறேயே, அது செரிக்க வேண்டாம்?”

 

“தாலி  கட்டின புருஷனுக்காக உன்னால இது கூடவா செய்ய முடியாது”

 

என்று ரக ரகமாய் பேசி  மனைவியை அதட்டுவார்.

 

உதவிக்கு ஒரு கை பிடிக்கக் கூப்பிட்டால், மாமியாரோ,  எனக்கு முடியாதும்மா என்று சொல்லி விடுவார். நாதனின் அன்புத் தங்கை  செல்வியோ,  அந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டுக்கு சப்தம் காட்டாமல் கம்பி நீட்டிவிடுவாள்.

 

சுதா பயந்தது போல் ஒரு முறை தவலையைத் தூக்கும் போது முதுகில் சொடக்கு விழுந்தாற்போல் ஒரு மின்னல், வலி விண்ணெனத் தெறிக்க, அவள் கண்களில் பூச்சி பறந்தது. படுத்தால் எழ முடியவில்லை, உட்கார்ந்தால் நிற்க முடியவில்லை.

ஏதேதோ டெஸ்ட் செய்துவிட்டு என்னென்னவோ சொன்னார்கள். ஒரு மாதம் கட்டாயம் பெட் ரெஸ்ட்டில் இருக்க வேண்டும். தரும் மாத்திரைகளை உன்ன வேண்டும். முக்கியமாக எடை அதிகமான பொருட்களைத் தூக்கவே கூடாது என்று உத்தரவு போட்டார் மருத்துவர்.

 

சுதா நன்றாக இருக்கும் போது எல்லாருக்கும் தேவைப்பட்டாள். ஆனால் அவள் படுத்துக் கொண்டாள் யார் பார்ப்பது? சுதாவின் அம்மா  வீட்டிலும் அரவிந்த் கல்யாணத்தை ஒட்டி உறவை வெட்டி விட்டிருந்தார். இப்போது நாதனின் அம்மாவும், செல்வியும் அவர்கள் குடும்பத்துக்கு நெருக்கமான  உறவினரான, நாதனின் பாட்டியின் ரெண்டு விட்ட தம்பியின் பேரனின் மனைவியின் அண்ணனின் கல்யாணத்திற்கு ஓடிப் போனார்கள். போகும்போது மகனின் காதைக் கடித்தார்  நாதனின் அம்மா.

 

“இங்க பாருடா,பொம்பளைங்க உடம்பு சரியில்லாம போனா அம்மா வீட்டுலதான் செலவு பண்ணி, வைத்தியம் பார்த்து சரியாக்கி அனுப்பனும். அதுதான் வழக்கம், முறை. சுதா உடம்பு இருக்குற நிலைமைக்கு பஸ்ல பயணம் செய்ய முடியாது. அதுனால, நீ வீம்பு பண்ணாம பேசாம உன் பொண்டாட்டியோட ஆத்தாளுக்கு சொல்லி அனுப்பு.

 

நாங்க வர்றதுக்கு இன்னும் ஒரு மாசமாகும். அதுவரை சோத்துக்கு என்ன பண்ணுவ?  சுதாவுக்கு கொஞ்சம் தெம்பு வந்ததும் அவங்க கார்ல அலுங்காம கூட்டிட்டு போய் உடைஞ்ச முதுகை சரி பண்ணி அனுப்பட்டும். சரி பண்ண வழியில்ல, வீட்டுல இருக்குற மத்த பொண்ணுங்கல்ல ஒன்ன அவளுக்கு பதிலா கல்யாணம் செஞ்சு அனுப்பட்டும்.”

 

எகிறினார் நாதன். “இங்க பாரும்மா. நீ என்ன சொன்னாலும் ஒத்துக்குறேன். ஆனா நான் ராமன். ரெண்டாங் கல்யாணம்னு பேசின பாரு”

 

“எனக்குத் தெரியாதாடா உன்னை பத்தி, நீ கஷ்டப்படுறதைப் பாக்கப் பொறுக்காம அம்மா தெரியாம சொல்லிபுட்டேன் மன்னிச்சுடு ராசா. உன் மச்சினனோட பொண்டாட்டி செத்து போச்சுல்ல. அதைக் கேள்வி பட்டதுல இருந்து செல்வி அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஒத்தக் கால்ல நிக்குது.

அவ செத்தது கூட நமக்கு நல்லதுதாண்டா. அவனை மாதிரி படிப்பு, பதவிசா ஒரு மாப்பிள்ளை கிடைக்குறது கஷ்டம். உனக்கு பயந்துட்டு செல்வி என்ன அலும்பு செஞ்சாலும் அனுசரிச்சு போய்டுவான். கைக்கு அடக்கமா சொன்னப பேச்சைக் கேட்டுட்டு இருப்பான். பெருசா நாம நகை நட்டு  ஒண்ணும் செய்ய வேண்டியதில்ல”

 

கால் மனதுடன் தலையாட்டினார். அம்மா, தங்கையை பஸ் ஏற்றி விட்டவர். பாசமிகு கணவனாய் மாறி சுதாவிடம் சொன்னார்.

 

“சுதா, உடம்பு சரியில்லாம இருக்குறப்ப பொண்ணுங்க எல்லாருக்கும் அம்மா நியாபகம் இருக்குமாம். எங்க அம்மா என்கிட்ட சொல்லி உங்கம்மாவைக் கூப்பிட சொல்லுச்சு. எங்கம்மா இருந்தாத்தான் உங்கம்மாகிட்ட வம்பிழுக்கும். இப்ப அது வர ஒரு மாசமாகும். நீ வேணும்னா உங்கம்மாவை இங்க வர சொல்லு”

 

பேசுவது தன் கணவன்தானா? தான் காண்பது கனவா இல்லை நெனவா? என்று குழம்பிப் போனாள் சுதா.

 

“நிஜமாத்தான், அவங்கள வர சொல்லு. கொஞ்சம் உடம்பு தேறுனதும் உங்க அம்மா வீட்டுல போய் ஓய்வெடுத்துட்டு மெதுவா வா” என்றார்.

 

சந்தோஷமாய் அம்மாவுக்கு போன் செய்து வீட்டுக்கு வரச் சொன்னாள் சுதா. சுமித்ராவுக்கு மூத்த மகள் பேசியதும், முதுகு வலியால் படுத்தப் படுக்கை என்றதும் சென்னையில் இருப்புக் கொள்ளவில்லை. இருந்தாலும் தன்னை நம்பிக் கைக்குழந்தையை ஒப்படைத்துவிட்டுச் சென்ற தன் மகனிடம் சொல்லாமல் கிளம்ப மனசில்லை. அரவிந்தை அழைத்து சொன்னார்கள். சாரிகா முந்திரிக் கொட்டையாய் முந்திக் கொண்டு அண்ணனிடம் சொன்னாள்.

 

“அண்ணா ஸ்ராவணியைப் பத்திக் கவலைப் படாதே. இப்பவே நான் பாதி நாள் கிளாஸ் கட் பண்ணிட்டு மூணு மணிக்கே வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன். காலைல சத்யாக்கா ஒன்பதரை மணிக்குத் தான் ஆபிஸ் போகும். ஒன்பதரைல இருந்து மூணு மணி வரை குழந்தையப் பாத்துக்குறது சாந்தாக்குப் பெரிய கஷ்டமில்ல. வேணும்னா அம்மா வர்ற வரைக்கும் அவ காசைக் கரியாக்கிட்டு போற வம்பு மடத்தை எல்லாம் ரத்து  பண்ண சொல்லிடலாம்”

 

சம்மதத்தின் அறிகுறியாய் அனைவரின் முகத்தில் நிம்மதி தெரிய, சாத்தாவின் முகமோ ரத்தப் பசியின்றி வெளுத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 28தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 28

  குண்டூர், கிருஷ்ணா டெல்டாவிலிருக்கும் வளம் கொழிக்கும் பகுதி. உலகத்தரம் வாய்ந்த மெக்சிகன் மிளகாய்களுக்கு சவால் விடும் தரத்தில் மிளகாய்களை விளைவித்து இந்திய மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் நகரம். ஆசியாவின் மிகப் பெரிய மிளகாய் சந்தையைக் கொண்டது. மிளகாயை மட்டுமே நம்பியிராமல்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 11தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 11

லக்ஷ்மியின் முயற்சியால் சரயு சற்று தேறினாள். தாயின் படம், அவரின் பொருட்கள் என சரயுவுக்கு அம்மாவை நினைவுபடுத்தும் பொருட்களை தந்தையின் உதவியோடு கண்ணுக்கு மறைவாக வைத்தாள். சிவகாமியின் சிறிய படம் ஒன்று மட்டும் பூஜை அறையில் வைக்கப்பட்டது. காலையில் எழும் சரயுவுக்கு

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 10தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 10

“மாமியார் வீட்டுக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி அம்மாவக் கும்பிட்டுக்கோ” பக்கத்து வீட்டு அவ்வா பார்வதியிடம் சொன்னார். சிவகாமியின் மறைவால் ஒரு வருடம் தள்ளிப் போயிருந்த திருமணம் அப்போதுதான் நடந்திருந்தது. கண்ணீருடன் படமாயிருந்த தாயை வணங்கிக் கிளம்பினாள் பார்வதி. கிளம்பும்போது ஒரு கேவல் எழுந்தது