அத்தியாயம் – 23
‘எங்கே போனாய் என் கவிதைப் பெண்ணே’ என்று அரவிந்தின் மனது துடித்துக் கொண்டிருந்தது.
‘சித்து உன்னை குள்ளக் கத்திரிக்காய்ன்னு கிண்டல் பண்ண மாட்டேன். எவ்வளவு மோசமா சமைச்சாலும் முழுங்கிடுறேன். ஆனா நீ மட்டும் சீக்கிரம் கண்ணுல பட்டுடு’ என்று புலம்பிக் கொண்டே தேடினான்.
நான்கைந்து முறை கடை முழுவதும் சுற்றியும் சித்தாரா கண்ணில் படவில்லை. ஒரு வேளை வீட்டிற்கு வந்திருப்பாளோ என்ற எண்ணத்தில் சந்திரிகாவை அழைத்து விசாரித்தான்.
“இல்லை அரவிந்த். வனி ஸ்னோல விளையாடிட்டு, அஸ்வின் ஹரிதா கூட சேர்ந்து சாப்ட்டுட்டு தூங்கிட்டா. வனி பத்தி கவலைப் படாதிங்க நான் காலைல வீட்டுல கொண்டுவந்து விடுறேன். சித்துவ பத்திரமா கூட்டிட்டு வாங்க. ஸ்னோ அதுக்குள்ளே ஒரு அடிக்கு மேல வந்துடுச்சு. ஒரு வேளை சித்தாரா வீட்டுக்கு வந்துட்டு இருக்காளோ?”
என்று சொல்ல அரவிந்தும் வழியில் எங்காவது தென்படுகிறாளா என்று பார்த்தவாறே கிளம்பினான். லேசாக தூர ஆரம்பித்திருந்த பனி மழை கொஞ்சம் கொஞ்சமாக தனது வேகத்தை அதிகரித்திருந்தது.
பஸ்சில் எறியவனுக்கு பல பஸ்கள் நடுவிலே நின்றது நினைவுக்கு வர, எங்காவது பஸ் ஸ்டாப்பில் ஒதுங்கி இருக்கிறாளா என்ற கேள்வி வரவும் ஒவ்வொரு நிறுத்தத்திலும் இறங்கி சற்று பார்த்துவிட்டு அடுத்த பேருந்தில் ஏறினான். ஏழெட்டு நிறுத்தங்கள் கடந்துவிட்டன அதிலும் தோல்விதான். சித்துவைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அரவிந்தின் கண்கள் அவளைத் தேடித் தேடிக் களைத்துவிட்டன.
‘சமயபுரம் மாரியம்மா என் சித்துவ பத்திரமா எனக்குத் திருப்பித் தா அடுத்த தடவை ஊருக்கு வரப்ப மொட்டை அடுச்சுக்குறேன்’ மனமுருகி வேண்டிக் கொண்டான்.
அதுதான் அவனது அதிகபட்ச வேண்டுதல். அவனது வீட்டில் ஏதாவது வேண்டுதல் இருந்தால் அரவிந்தின் அம்மா சுமித்ராவுக்கு கண்ணில் முதலில் படுவது என்னவோ அரவிந்தின் அடர்த்தியான சிகைதான். இப்போது அவன் அம்மா செய்யும் காரியத்தை அவனும் செய்தான்.
ஏதோ உள்ளுணர்வு தோன்ற ஓட்டுனர் அருகில் நின்று கொண்டு ரோட்டில் நடந்து போகும் ஆட்களை கூர்ந்து கவனித்தான். அவனது தேடுதலுக்குப் பலனாக சித்தாரா போன்ற ஒரு உருவம் தேங்காய்ப் பூவாய் சிதறிக் கிடந்த பனியில், நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தது பஸ்சின் ஹெட் லைட் வெளிச்சத்தில் தெரிந்தது. வேகமாக அடுத்த நிறுத்தத்தில் இறங்கியவன், சித்தாராவை நெருங்கினான்.
தொலைவில் இருந்தே சித்தாராவைப் பார்த்துக் கத்தினான்
“சித்தாரா”
“அரவிந்த்”
புதிதாகப் பெய்த பனி ஆதலால் மணல் போல் இருந்தது. கால்கள் புதைந்து வேகமாக நடக்க விடாமல் தடுத்தது. இவை எல்லாமா காதல் கொண்ட மனதைத் தடுத்து விட முடியும்?
“சித்து, சித்து என்னம்மா நடந்து வர்ற?” வேகமாக நெருங்கியவன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். மனதில் இதுகாலமும் அசோகவனத்தில் சிறையிருந்த சீதையைக் கண்ட ராமனின் நிம்மதி.
அவனது கழுத்தைக் கட்டிக் கொண்ட சித்து , தேம்பிக் கொண்டே சொன்னாள்
“அரவிந்த், அரவிந்த் பர்ஸயும், செல் போனையும் யாரோ திருடிட்டாங்க. நம்ம ஊர் லேடி ஒண்ணு ப்ரூட் ஜூஸ்ச என் மேல கொட்டிடுச்சு. அதைத் துடைச்சுட்டு இருந்தேனா யாரோ என்னோடது எல்லாத்தையும் திருடிட்டு போய்ட்டாங்க. கடைல சாமான் எல்லாம் வாங்குனதுக்கு அப்பறம் தான் கவனிச்சேன். கைல பணம் வேற இல்ல. அதுனால வீட்டுக்கு நடந்தே வந்துடலாம்னு கிளம்பினேன். அதுக்குள்ளே பனி மழை அதிகமாகி நடக்கக் கூட முடியல”
திக்கித் திணறி சொல்லி முடித்தாள்.
தனது அலைப்பேசியில் டாக்ஸி ஒன்று பஸ் ஸ்டாப்புக்கு வர சொன்னான். நடுங்கிக் கொண்டிருந்த அவளது கைகளை தேய்த்து விட்டான். கேப் வந்ததும் ஏறி அமர்ந்து வீட்டு முகவரியை சொல்லி விட்டு சித்தாராவிடம் பேசினான்.
“சித்து கடைல ப்ரீ போன் இருக்குல்ல அதுல போன் பண்ணி டாக்ஸி கூப்பிட்டு வீட்டுக்கு வந்திருக்கலாம்ல. சந்திரிகா கிட்ட பணம் வாங்கித் தந்திருக்கலாமே”
சின்ன பிள்ளையாய் பேந்தப் பேந்த விழித்தவள், ” எனக்கு எதுவும் தோணவே இல்ல அரவிந்த். நம்ம ஊர்னா ஆட்டோ பிடிச்சு வந்திருப்பேன். இங்க கொஞ்ச நேரத்துல பனி வேற கொட்ட ஆரம்பிச்சதா, ரொம்ப பயந்துட்டேன். பனில பொதைஞ்சு செத்துடுவேனோன்னு”
மேலே தொடர விடாமல் அவள் வாயைப் பொத்தினான். “பைத்தியமாட்டம் பேசாதே. உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நானும் வனியும் உயிரோடவே இருக்க மாட்டோம்”
பேசாமல் வந்தார்கள். தெரியாத ஊரில் இருள் நேரத்தில் பழக்கமில்லாத புது இடத்தில் மாட்டிக் கொண்டு பயந்து போயிருந்த சித்துவின் சில்லிட்டிருந்த கைகளை தேய்த்துக் கொண்டே வந்தான் அரவிந்த்.
“அரவிந்த் பத்திரமாத்தான் எல்லாத்தையும் வச்சிருந்தேன். இப்பத்தான் ஜூஸ் கொட்டின அந்தப் பொண்ணு மேல சந்தேகம் வருது. ஹெல்ப் பண்ணுற மாதிரி அவதான் அந்த பொருள் எல்லாத்தையும் திருடி இருக்கணும். ஆள பாத்தா கௌரவமான குடும்பம் மாதிரி இருந்துட்டு ஏன்தான் இந்த மாதிரி திருட்டு புத்தியோ? அப்பறம் கவுன்ட்டர்லதான் பணம் இல்லாததை கவனிச்சேன். ரொம்ப இருட்டிடுச்சா பயம்மா வேற போச்சு. வேகமா நடந்து வீட்டுக்கு வந்துடலாம்னு நெனச்சு நடக்க ஆரம்பிச்சேன். ஆனா பனி மழை வந்தவுடனே சரியாவே நடக்க முடியல” தன்னிலை விளக்கம் கொடுத்தாள்
தானாக இருந்திருந்தாலும் அவள் செய்ததைத் தான் செய்திருப்போம் என்று நினைத்தான். சித்துவின் தலையை மென்மையாகக் கோதிவிட்டு தனது தோளில் சாய்த்து அணைத்துக் கொண்டான்.
” அரவிந்த், பயத்துல என்னால சரியா யோசிக்கக் கூட முடியல. எல்லாரும் சேர்ந்து மிரட்டவும் இப்படித்தான் நீயும் என்ன செய்யுறதுன்னு புரியாம பயத்துல ஸ்ராவணி அம்மா கழுத்துல தாலி கட்டிட்டியா? அவங்கள நீ உண்மைலயே லவ் பண்ணலதானே” என்றாள் கெஞ்சலாக. அவன் ஆமாம் என்று சொல்ல வேண்டுமே என்ற வேண்டுதலும் அதில் அடங்கி இருந்தது.
மென்மையாகத் தலையாட்டினான் அரவிந்த். சித்தாராவின் வேண்டுதல் பலித்து விட்டது. முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிய அவனது மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.
இதற்குள் வீடு வந்து சேர்ந்து விட்டது. வாசலில் காபி டிபனுடன் நின்றிருந்த சந்திரிகா
” சித்து பிளாஸ்க்ல சூடா காபி இருக்கு, இட்லி ஹாட் பாக்ல இருக்கு ரெண்டு பேரும் சாப்பிடுங்க. நாளைக்கு வனிய காலைல வீட்டுக்குக் கொண்டு வந்து விடுறேன். அதுனால காலங்காத்தால எட்டு மணிக்கெல்லாம் போன் பண்ணி எங்களை எழுப்பி விட்டுடாதே” என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
இருவரும் வீட்டின் உள்ளே சென்றனர். ஈரமாயிருந்த சித்தாராவின் கோட்டைக் கழற்ற உதவி செய்தான் அரவிந்த். அவன் கனவில் அடிக்கடி வரும் வெள்ளுடை தேவதை நேரில் நிற்பதைக் கண்டு திகைத்து வார்த்தை வராமல் தவித்தான்.
தலையைத் துடைக்க துண்டினைத் தேடியபடியே
“நீ சொன்னது சரி அரவிந்த். இந்த ஊருக்கு ஜீன்ஸ் தான் லாயிக்கு. நான் முட்டாள்தனமா இன்னைக்கு என்னோட வைட் சுடிதாரை போட்டுட்டு போயிட்டேன்” அவனிடம் இருந்து பதில் வராமல் போகவே திரும்பி அவனைப் பார்த்தாள்.
அவனது பார்வை அவளைக் குறுகுறுக்க வைக்க தனது மாற்றுடையை எடுத்துக் கொண்டு சென்றவளின் கையைப் பற்றின அரவிந்தின் கைகள்.
“ஹே ஏஞ்சல் என்னை விட்டு போயிடாதே” என்று குரல் கம்ம உருகிக் கேட்டான் அரவிந்த்
திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தாள் சித்தாரா.
அவள் கையில் இருந்த பூந்துவலையை வாங்கி அவளது கூந்தலில் இருக்கும் ஈரத்தை மென்மையாகத் துவட்டி விட்டான். அந்த மென்மை சிதாராவை அசைத்துப் பார்த்தது. திகைத்துப் போய் வாய் பேசத் தோன்றாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சித்தாரா. கைகளைத் துடைத்து விட்டான்.
“கலைமானே உன் விரல் கோதவா?
இறகாலே உன் உடல் நீவவா?
உன் கையிலே பூ வளை போடவா?”
பதில் பேச முடியாமல் ஆச்சிரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சிதாராவின் முகத்தைப் பார்த்தான். முகம் இன்னும் துடைக்காமல், தண்ணீர்த் துளிகளுடன் இருந்தது. கன்னங்களிலும், மூக்கின் நுனியிலும் , நெற்றியிலும் இருந்த நீர் முத்துக்கள் அந்த மஞ்சள் நிற வெளிச்சத்தில் பொன்னாய் ஒளி வீசின. அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவனது கண்கள் இப்போது அவளது கண்களை உற்றுப் பார்த்தன. அதில் அவனே தெரிந்தான் .
‘அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா?’
“சித்து எனக்கு இன்னைக்கு தூக்க மாத்திரை தரியா? இல்லைனா இன்னைக்கு நைட் உன் கிட்ட அடி வாங்கிடுவேன்” பலவீனமாய் ஒலித்தது அரவிந்தின் குரல்.
சித்தாராவின் வெளுத்த முகமும் அதில் தெரிந்த கருத்த கண்களும் குருநகை தோற்றுவித்தன அவனுக்கு.
அவனது தேவதைகருகில் தாபத்துடன் நெருங்கினான். அவள் கண்கள் வானளவு விரிந்தன. அவளது முகத்தில் இருந்த முத்துச் சிதறல்களை அரவிந்த் துடைத்து விடத் தொடங்கினான் தனது இதழ்களால். நெற்றி, கண்கள், கன்னம் என்று மெதுவாகப் பயணம் செய்த அரவிந்தின் இதழ்கள் பின்னர் அவளது இதழ்களில் இருந்த ஈரத்தை அழுத்தமாகத் துடைத்து விட்டது.