Tamil Madhura மதுராந்தகியின் காதல் மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 5

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 5

அத்தியாயம் – 5. எதிர்பாராத நிகழ்ச்சி

 

     சோழத் தலைநகர் கங்கை கொண்ட சோழபுரம் துயரில் ஆழ்ந்திருந்தது. காலையில் வெற்றிக் களிப்பு எதிரொலித்த அந்நகரில் மாலையில் அழுகை ஓலம் எதிரொலித்தது. காலையில் மகிழ்ச்சி தாண்டவ மாடிய சோழ மக்கள் முகத்தில் மாலையில் துயரத்தின் சாயல் பிழிந்து நின்றது. காலையில் இன்பம் பெருக்கெடுத்தோடிய அந்நாட்டில் மாலையில் துன்பம் மழையாகப் பொழிந்தது.
ஆம்; சோழவள நாடு சிறிதும் எதிர்பாராத துயர நிகழ்ச்சி ஒன்று அன்று பிற்பகலில் நடைபெற்று விட்டது. பட்டத்து இளவரசர் இராசமகேந்திர தேவர் காலமாகிவிட்டார்!

அண்மையில் நடந்து முடிந்த முடக்காற்றுப் போரின் வெற்றிக்கு எண்ணற்ற சோழ வீரர்களின் வீரமும் தியாகமுமே காரணமாகும். எனினும், இறுதியாகக் குந்தளப் படையைக் கதிகலங்க அடித்துப் புறமுதுகிட்டு ஓடச்செய்த பெருமை இளைய தேவர் எனப் போற்றப்பட்டு வரும் இராச மகேந்திரருக்கெ உரியது. இளையதேவர் இன்று நேற்றல்ல, பல காலமாகப் பல போர்களில் தமது சகோதரர்களுடன் பங்கு கொண்டவர். தமது பராக்கிரமத்தாலும், போர் நுட்பத் திறனாய்வாலும், தாம் நடத்திச் சென்ற படைகளுக்கு வெற்றியைத் தேடித் தந்தவர். ஆயினும், தமது போர்த் திறமை முழுவதையும் நன்கு பயன்படுத்தி வருங்காலத்தில் சோழ அரியணையேறும் தகுதி தமக்குப் பரிபூர்ணமாக இருப்பதை நிரூபிக்கும் வாய்ப்பு அவருக்கு இந்த முடக்காற்றுப் போரிலே கிட்டியது.

முடக்காற்றுப் போர், இதுவரைச் சோழர்களுக்கும் மேலைச் சளுக்கியர்களுக்கும் இடையே நடந்த போர்கள் எல்லாவற்றிலும் பெரியது. இரு நாட்டவரும் மிகத் தீவிரமாகவும், பெரும் தீரத்துடனும் போரிட்டனர். நாள் தோறும் இரு தரப்பிலும் எண்ணற்ற வீரர்கள் உயிரிழந்தனர்; கணக்கற்ற குதிரைகளும் யானைகளும் மடிந்தன. ஆயினும், வெற்றி எந்நாட்டுக்கு என்பதை நிர்ணயிக்க முடியாதபடி இருந்தது போர் நிலை. போர்க்கலையில் வல்ல சோழப்படைத் தலைவர்களுக்கு இணையாகப் பகைவர்களாகிய மேலைச் சளுக்கியர்களின் படைத்தலைவர்கள் தங்கள் படைகளைப் போரிடச் செய்தனர். இதுவரையில் மேலைச் சளுக்கியர்கள் இத்தனை திறமையுடன் போரிட்டதே இல்லை. எப்படி அவர்களுக்குத் திடீரென்று இத்தனை திறமையும், போர் நுட்பமும் ஏற்பட்டன என்று சோழர்கள் வியந்தனர்.

ஆனால் விரைவில் அவர்களுக்கு இதன் ரகசியம் வெளியாகியது. மேலைச் சளுக்கர்களின் இந்தத் திடீர்ப் போர் நுட்பத்துக்கும், அதன் காரணமாகப் பிறந்திருந்த திறமைக்குப் பின்னணியில் இருந்தவன் அவர்களது புதிய தண்டநாயகன் வாலாதேவன் என்பது சோழர்களுக்குத் தெரிய வந்தது. வாலாதேவன் சளுக்கியர் படையை நடத்தியதோடு, தானே போர்க்களத்தில் குதித்து, நாள் தோறும் எண்ணற்ற சோழ வீரர்களை நமனுலகுக்கு அனுப்பி வந்தான். ஆதலால் அந்த வாலாதேவனை ஒழித்தாலன்றி, சோழர்கள் முடக்காற்றுப் போரில் வெற்றி கான முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

போர் மும்மரமாக நடந்து கொண்டிருக்கையில் ஒருநாள் இரவு முடக்காற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த பாசறையில் மாமன்னர் இரண்டாம் இராசேந்திர தேவர், பட்டத்து இளவரசர் இராச மகேந்திரர், இளங்கோ வீரராசேந்திரர் மற்றும் முக்கியமான சோழப் படைத்தளபதிகள் ஒன்று கூடி, வாலாதேவனை ஒழிப்பது பற்றித் தீவரமாக மந்திராலோசனை நடத்தினர். வாலாதேவன் சளுக்கியப் படையை நடத்துவதில் கவனம் செலுத்த முடியாதவாறு, தங்களுள் யாராவது ஒருவர் அவனுடன் நேர் நின்று போர் செய்வதென அவர்கள் முடிவு செய்தனர். அவ்வாறு இரண்டு மூன்று நாட்கள் செய்து வந்தால் பகைவர் படையைச் சிதறி ஓடச் செய்து விடலாமென்பது அவர்கள் கருத்து. வாலாதேவனுடன் நேர்நின்று போர் செய்யும் பொறுப்பை இளையதேவர் இராசமகேந்திரர் ஏற்றுக் கொண்டார்.

இந்தப் புதிய போர் நுணுக்கச் செயலாற்றல் காரணமாக மறுநாள் தொட்டு முடக்காற்றுப் போரில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. இளையதேவர் ஆக்ரோஷத்துடன் போர் செய்து, கணநேரங்கூட வாலாதேவனின் கவனம் பிற போர் நிகழ்ச்சிகளில் திரும்பாதபடி செய்தார். அவ்விருவரிடையே நிகழ்ந்த அந்த நேரிடைப் போரானது வலிமை மிக்க இரண்டு சிங்கங்களுக்கிடையே நிகழ்ந்த கோரச் சண்டையை ஒத்திருந்தது. பகைவர்களாக ஒருவரை ஒருவர் வீழ்த்தத் தருணம் பார்த்திருந்த போதிலும், ஒருவர் திறமையைக் கண்டு மற்றவர் வியக்கும் வண்ணம் இருவரும் போர் செய்தனர். ஆயிரக் கணக்கான படைவீரர்கள் ஒருபுறம் போர் செய்து கொண்டிருந்த போதிலும், வெற்றி-தோல்வி, இந்த இரு மாவீரர்களிடையே நிகழும் போரின் முடிவைப் பொறுத்தே இருக்கிறது என்று அனைவரும் கருதும் வண்ணம் அவ்விருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் வீரப் போர் புரிந்தனர்.

இவ்வாறு அந்த இரு தனிப்பட்ட வீரர்களிடையே நிகழ்ந்த போரானது இரண்டு நாட்களே நீடித்தது. இரண்டாம் நாள் மாலையில் இளைய தேவரின் வீரவாளுக்கு வாலாதேவன் இரையானான். வாலாதேவன் வீழ்ந்து விட்ட செய்தி பரவியதுமே குந்தள வேந்தன் ஆகவமல்லன், அவன் மகன் விக்கிரமாதித்தன், மற்றும் இருகையன் ஆகியோர் இடிந்து விட்டனர்; இதரப் படைத் தலைவர்களும் மனம் சோர்ந்து விட்டனர். கடைசியில் இம்முறையும் அவர்கள் தோல்வியை எதிர்கொண்டு புறமுதுகிட்டு ஓட்டம் பிடித்தனர்.

இப்படி முடக்காற்றுப் போரில் வெற்றியைத் தேடித் தந்த வீரச் சிங்கம் இளையதேவர், அவ்வெற்றியை உடலில் வடுக்கூடப் படாமல் தேடிக்கொண்டுவிடவில்லை. போரில் அசகாய சூரனான வாலாதேவனின் வாளும் அம்புகளும் இளையதேவரின் உடலைப் பல இடங்களில் பதம் பார்த்திருந்தன. போர்க்களத்திலிருந்து திரும்புபவர்களுக்கு இத்தைகய உடற்காயங்களும், அவற்றுக்குரிய சிகிச்சைகளும் சகஜ மானவைதாம். அவ்வாறே இளையதேவரின் உடற்புண்களுக்கும் உடனடியாக மூலிகைகள் வைத்துக் கட்டப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சோழப்படை ஊர் திரும்பும் பயணத்தை மேற்கொண்ட சில நாட்களுக்குள்ளே ரணமாற்றும் குணம் மிக்க அந்த மூலிகைகளால் அவரது புண்களில் பெரும்பாலனவை ஆறித் தழும்பிட்டு விட்டன. ஆனால் அவருடைய நெஞ்சின் இடப்பாகத்தில் அம்பு ஒன்று பாய்ந்து ஏற்படுத்தியிருந்த ஆழமான புண் ஒன்று மட்டும் எளிதில் ஆறாமல் இளையதேவருக்கு கொடுந்துன்பம் விளைவித்து வந்தது. அவர் நெஞ்சிலே பாய்ந்த அந்த அம்பானது விஷம் தோய்க்கப்பட்டதாக இருந்ததே அப்புண் ஆறாமைக்குக் காரணம்.

போர்ப் படையுடன் சென்றிருந்த ராணுவ மருத்துவர் தமது திறமை அனைத்தையும் காட்டி, பல்வேறு மூலிகைகள் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த போதிலும், அந்த ரணம் நாள்படப் புறையோடிப் பெரிதாகி வந்ததேயன்றிக் குணமாகவில்லை. வீரம் செறிந்த இளையதேவர் அப்புண் அளித்த தாங்கொண்ணா வேதனையை வெளிக் காட்டிக்கொள்ளவில்லை. வேறு எவராகவேனும் இருந்தால், அந்த ரண வேதனையைப் பொறுக்க மாட்டாமல் படுக்கையில் விழுந்து அலறித் துடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இளையதேவரோ வேதனையை மறைத்துக் கொண்டதோடு நாடு திரும்பும் நெடும் பயணத்தையும் மேற்கொண்டார்.

இதன் பயனாக அன்று காலையில் கங்கைகொண்ட சோழபுரம் திரும்பி, வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிந்து, தமது அரண்மனைக்கு வந்த சிறிது நேரத்துக்கெல்லாம் இளையதேவருக்கு சன்னி கண்டுவிட்டது. உடனே அரசாங்கத்தின் தலைமை மருத்துவர் காலாந்தக மால்வேளார் வரவழைக்கப்பட்டார். சக்தி மிக்க பல மருந்துகள் அவருக்குக் கொடுக்கப்பட்டன. ஆனால் அவை எதுவும் பலனளிக்கவில்லை. மாலை நேரத்துக்குச் சற்று முன், சோழப் பேரரசின் வருங்கால வேந்தராக விளங்க வேண்டிய வீரதிலகத்தின் உயிர் உடற்கூண்டைவிட்டுப் பறந்தோடி விட்டது.

மணிமுடி தரித்த மன்னரேயாயினும், மண்ணிலே நெளியும் கேவலம் புழுவேயாயினும், உயிரினங்கள் யாவற்றுக்கும் பிறப்பும் இறப்பும் நிலையான நிகழ்ச்சிகள்தாம். ஆனால் சோழப் பேரரசை நிறுவிய விசயாலய சோழர் காலந்தொட்டு, அந்நாட்டில் மணிமுடி தரித்து செங்கோலோச்சிய மன்னர்கள் யாவருக்கும் ஏற்படாத புதுவகை மரணம் இளையதேவரான இராச மகேந்திரருக்கு ஏற்பட்டது. ஆம், அவரது முன்னோர்களில் முதுமையில் மரணமடைந்தோரும் இருந்தனர்; இளமையில் மரணமடைந்தோரும் இருந்தனர். ஆனால் பெரும்பாலும் அவர்களுக்குக் கிட்டிய சாவு வீரச் சாவு. போர்க்களத்தில் வீரச் சமர் புரிந்து பெற்ற சாவு. முதுமை காரணமாக, நீடித்த நோய் வாய்ப்பட்டு இறந்தவர்களும் ஓரிருவர் இருந்தனர். எனினும் இத்தனை இளம் வயதில் நோய்ப் படுக்கையில் சாயாமலே ஓர் அம்புப் புண்ணுக்கு இரையானவர்கள், அதிலும் வெற்றி கொண்டு தலைநகர் திரும்பிய சில நாழிகைப் பொழுதுக் கெல்லாம் மரண தேவனை எதிர் கொண்டவர்கள் அன்றுவரைச் சோழப் பரம்பரையில் யாருமே கிடையாது.

தவிர, இளையதேவர் சோழ அரச குடும்பத்தினருடையவும், குடிமக்களுடையவும் பேரன்புக்குப் பெரிதும் பாத்திரமாக விளங்கியவர். எவ்வளவுக்கு எவ்வளவு வீரம் செறிந்தவரோ, அவ்வளவுக்கு அவ்வளவு அன்புருவாக விளங்கியவர். மாமன்னர் சோழ தேவரையும், இளையதேவர் இராச மகேந்திரரையும் நாட்டு மக்கள் தங்கள் இரு கண்களாகப் போற்றி வந்தனர். ஆதலால் அவரது திடீர் மரணம் நாட்டை ஒரே துயரில் ஆழ்த்திவிட்டது.

அது மட்டுமா?

தந்தையின் ஒரு சொல்லசைவிலே தனது ஆணையை நிறைவேற்றிவிட முடியுமென இறுமாந்திருந்த மதுராந்தகியின் எண்ணத்திலே ஏற்கெனவே மண்ணைத் தூவிவிட்டார் சோழ தேவர். இப்பொழுது அவளுடைய கை மேலும் ஒருபடி தாழ்ந்து விட்டது. ஆம், இளையதேவரின் மறைவு காரணமாக, இதுவரையில் இளங்கோவாக விளங்கி வந்த வானவியின் தந்தை வீரராசேந்திரன் அடுத்த பட்டத்து இளவரசர் ஆகிவிடுகிறார். பட்டத்து இளவரசருக்கும், அவரது மக்களுக்கும் உரிய அரசியல் சலுகைகள் இனி வானவிக்கும் கிட்டும். அதாவது, கிட்டத்தட்ட மதுராந்தகியின் அரசியல் அந்தஸ்துக்கு வானவியும் உயர்ந்து விடுகிறாள். இது மதுராந்தகிக்குத் தன் ஆணையை நிறைவேற்றிக் கொள்ள ஒரு குந்தகமாக இருக்கப் போவதோடு, வானவி தனது ஆணைகளை நிறை வேற்றிக் கொள்ள பெரிதும் சாதகமாகவும் அமையப் போகிறது.

எடுத்த எடுப்பிலே மதுராந்தகிக்கு இரு தோல்விகள். ஆனால், தோல்விகளே வெற்றிச் சிகரத்துக்கு ஏறும் படிகள் என்ற கருத்துடைய அவள் இதனால் மனம் தளர்ந்து விடவில்லை. அன்று தந்தை தனக்கு உணர்த்திய ‘உரிமை அல்லது வீரம்’ என்று இரு தாரக மந்திரங்களை அவள் வலுவாகப் பற்றிக்கொண்டாள். குலோத்துங்கனைப் பொறுத்தவரையில் அவனுக்குச் சோழ அரியணைமீது எவ்வித உரிமையும் இல்லை. ஆதலால் வீரத்தின் மூலந்தான் அவனைத் தன் ஆணையை நிறைவேற்றச் செய்ய வேண்டும் என்ற உறுதியும் கொண்டாள்.

இளையதேவரின் எதிர்பாராத மரணத்தால் குலோத்துங்கனின் வேங்கிப் பயணம் திட்டமிட்டிருந்தவாறு அன்று மாலையில் தொடங்க முடியாததாயிற்று. அடுத்து வந்த மூன்று நாட்களும் துக்கம் கொண்டாடும் நாட்களாக அமைந்து விட்டமையாலும், அரச குடும்பத்தினர் அந்நாட்களில் பயணத்தை மேற்கொள்வது இயல்பில்லை ஆதலாலும், அந்நாட்களிலும் அவன் புறப்பட இயலாதவனானான். ஆதலால், வெற்றி விழா முடிந்த ஐந்தாவது நாள்தான், குலோத்துங்கன் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து புறப்பட முடிந்தது. அன்று பகலில் இரு சோழ வீரர்களுடன் அவன் புறப்பட இருந்தான். பிரயாணத்துக்கான ஏற்பாடுகள் அரண்மனையில் நடந்து கொண்டிருந்தன.

அப்பொழுது காலை பத்து நாழிகைப் பொழுதிருக்கும், குலோத்துங்கன் அரசகுலப் பெண்டிரிடம் விடை பெற்றுக் கொள்ள சோழ கேரளன் அரண்மனை அந்தப்புரத்துக்கு வந்தான். தன் அத்தை கிழானடிகளிடமும், திறைலோக்கியமுடையாளிடமும் விடைபெற்றுக் கொண்டபின், அவனுடைய கண்கள் மதுராந்தகிக்காக் அந்தப்புரமெங்கும் துழாவின.

“யாரைத் தேடுகிறாய், *அபயா?” என்று அவன் நோக்கை உணர்ந்த கிழானடிகள் முறுவலித்தவாறு வினவினாள்.

(*குலோத்துங்கனுக்கு அபயன் என்ற பெயரும் வழங்கி வந்துள்ளது. S.S.I., Vol. IV.NO.1338)

குலோத்துங்கன் மறுமொழி கூறுமுன், அருகில் அமர்ந்திருந்த திரைலோக்கியமுடையாள் ‘கொல்’லென நகைத்து, “இது என்ன கேள்வி அக்கா? அந்தப்புரத்தில் அபயனின் விழிகள் அலைபாய்ந்து கொண்டிருந்தால், அவை யாருக்காக அலைபாயும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று கூறிவிட்டுக் குலோத்துங்கனை நோக்கி, “தம்பி அபயா, காதலர் விடைபெறுவதற்குத் தனியிடம் தேவை அப்பா. அதை உணர்ந்துதான் போலும், நீ இங்கே வந்து கொண்டிருப்பதாகப் பணிப்பெண் வந்து அறிவித்ததும், மதுராந்தகி அரண்மனைப் பூங்காவுக்குப் போவதாகக் கூறிச் சென்று விட்டாள். போ, விரைவாக அங்கே போ. உன் காதலி உனக்காக அங்கே காத்திருக்கப் போகிறாள்,” என்று சொன்னாள்.

குலோத்துங்கன் கிளம்பினான். ஆனால் அச்சமயம், “நில் அபயா!” என்ற கிழானடிகளின் அவசரக்குரல் அவனை நிறுத்தியது.

அவன் திரும்புமுன் கிழானடிகளே எழுந்து அவனிடம் நடந்தாள். அன்புடன் அவன் தோள் மீது கைவைத்து, “அபயா, அந்தப் பித்துக் கொண்ட பெண்ணுக்கு நீ தான் அறிவுரை கூற வேண்டும். நம் வானவி விளையாட்டாக ஏதோ கூறியதற்கு இவள் திடுக்கிடும்படியான ஆணை ஒன்றை இட்டிருக்கிறாளாம், ஆணை!…” என்றாள்.

“ஆணையா?”

“ஆம், உன்னை இந்தச் சோழ நாட்டின் வேந்தனாக்குவதாக!”

“என்ன?” குலோத்துங்கன் திடுக்கிட்டான்.

“அசட்டுத்தனமாக அப்படி ஓர் ஆணையிட்டதோடு நில்லாமல், அதனை நிறைவேற்றித் தருமாறு தன் தந்தையிடமும் வெட்கமின்றிக் கேட்டு விட்டாள்!”

“இது என்ன கேலிக்கூத்து? மதுராந்தகியா இப்படியெல்லாம் நடந்து கொண்டாள்? என்னால் நம்ப முடியவில்லையே?”

“எங்களாலுந்தான் நம்ப முடியவில்லை. ஆனால் அவள் தந்தையார் அவளுக்குச் சரியான விடை பகர்ந்து விட்டார்.”

“மாமன் என்ன கூறினார்கள்?”

“இந்தச் சோழநாட்டின் அரியணையில் ஒருவன் அமர, ஒன்று அவன் இந்நாட்டின் அரசுரிமை பெற்றவனாக இருக்க வேண்டும்; அல்லது தன் போர் வலிமையால் அதைக் கைப்பற்றிக் கொள்ளவேண்டும் என்றார்கள்.”

“நன்கு கூறினார்கள்; நன்கு கூறினார்கள்! அந்த இரண்டும் என்னிடம் கிடையா. நான் இந்தச் சோழ அரியணையை மனத்தால் நினைப்பதற்குக் கூட உரிமையற்றவன். தவிர, வளர்த்த வீட்டையே சூரையாடும் வஞ்சகனுமல்ல நான். அத்தை, நீங்கள் கவலை விடுக. உங்கள் மகளின் பைத்தியக்கார எண்ணத்தில் நான் ஒருபோதும் பங்குகொள்ளமாட்டேன்.”

“அது சரிதான், அபயா. உன் மனப்போக்கை நாங்கள் நன்கு அறிவோம். இருப்பினும் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்களே?” என்று இன்னும் ஐயம் நீங்காதவளாக குலோத்துங்கனின் முகத்தை நோக்கினாள் கிழானடிகள்.

“ஆமாம், அதோடு காதல் கிழத்தி கரைக்கும்போது…?” என்ற இடைச் சொருகலை நுழைத்து முகத்தை நெளித்தாள், அருகில் அமர்ந்திருந்த திரைலோக்கியமுடையாள்.

குலோத்துங்கனுக்கு ரோசம் பொத்துக்கொண்டு வந்தது. “என்னை அத்தனை பெரிய பித்தனாகவா எண்ணுகிறீர்கள், அத்தை?” என்று குமுறினான் அவன். “உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கும் துரோகியாக நான் ஒருபோதும் மாற மாட்டேன். என்னை நம்புங்கள் அத்தை; நோய் வாய்ப்பட்டிருக்கும் என் தந்தையார் மீது ஆணையாகக் கூறுகிறேன்: இத்தவத் திருநாட்டுக்காக நான் எத்தகைய தியாகமும் செய்யத் தயாரயிருப்பேனேயன்றி, இந்த அரியணையைப் பெற சிறு துரும்பைக்கூட நான் ஒருநாளும் அசைக்க மாட்டேன்.”

“நீ கூறுவது மெய்தான், அபயா. ஆயின் இராசரீகமும் நியதிக் கோட்பாடுகளும் முற்றிலும் மாறுபட்டவை. தனது அரசைப் பெருக்குவது அரசர்களின் கடமை; அதுதான் அவர்களது வீரத்துக்கு அறிகுறி. அதிலே நியாய வாதங்களைப் பொருத்திப் பின் வாங்குபவனைக் கோழை என்கின்றது இராசரீகம். தவிர, நீ இந்நாட்டின் மீது அழியாப் பற்றுடையவன் என்பது நாடறிந்த உண்மை. அந்தப் பற்று, ஆளும் ஆசையாக உருப்பெறுவது இயற்கையென்றே இந்நாட்டு மக்கள் கருதுவார்கள். அதிலும் என் விந்தை மகள் செய்திருக்கும் ஆணையைப்பற்றி இச்சோணாட்டு மாந்தர் கேள்வியுறும் போது அவர்கள் குமுறுவார்கள்; உங்கள் இருவருக்கும் துரோகி என்ற பட்டத்தைச் சூட்டி வெறுப்பார்கள். அத்தகைய நிலை ஏற்படுவதை நாங்கள் எங்ஙனம் பொறுப்போம், அபயா?” கிழானடிகள் குரல் கரகரத்தது: அவளது நயனங்களிலே நீர்ப் பொட்டுக்கள் துளிர்ந்தன.

மதுராந்தகியின் ஆணையின் விபரீதப் போக்கை உணர்ந்தான் குலோத்துங்கன். அவன் உள்ளம் விம்மிற்று. “ஆம் அத்தை!” என்றான் அவன். “அதைத் தவிர்க்க நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்.”

“செய்ய வேண்டியது பெரிதாக ஒன்றும் இல்லை, அபயா. நீ நலமுற நாடு சேர்ந்து, நோயுற்றுள்ள உன் தந்தையாரிடமிருந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இந்த வீணாசைக் காரியையும் மணந்து அங்கே அழைத்துச் சென்றுவிட வேண்டும். அதுதான் எங்களுக்கு நீ செலுத்தும் நன்றிக் கடன்; அது தான் உன்னை வளர்த்து ஆளாக்கிவிட்ட இந்தச் சோழ வளநாட்டுக்கு நீ செய்யும் அருந்தொண்டு.”

“அப்படியே செய்கிறேன், அத்தை,” என்று உணர்ச்சி பெருகக் கூறினான் குலோத்துங்கன். “மதுராந்தகியின் அசட்டுத்தனத்தால் எங்களையும் உங்களையும் சூழ இருக்கும் அவப்பெயரைத் துடைக்க அவ்வாறே செய்கிறேன், அத்தை. இனி, இந்நாடு உதவி கோரி என்னை அழைத்தாலன்றி, அல்லது நான் நாடிழந்து நடுத்தெருவில் நிற்கும் நிலை தோன்றினாலன்றி இச்சோழ மண்ணில் அடி எடுத்து வையேன். வருகிறேன் அத்தை. வணக்கம்…!” அவன் அவ்விருவரது பாதங்களையும் தொட்டு வணங்கிவிட்டு விர்ரென நடந்தான்.

மாமன் மனைவியை மாமி என்று அழைப்பதற்குப் பதிலாக அத்தை என்று அழைக்கும் பழக்கம் அன்று சோழ அரச பரம்பரையினரிடையே இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 7மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 7

அத்தியாயம் – 7. மந்திராலோசனை        வேங்கியிலிருந்து வந்த தூதன் உடனே நாடு திரும்ப வேண்டுமென்று விடைபெற்றுச் சென்று விட்டான். எவ்வித அதிர்ச்சியும்மின்றி அச்செய்தியை அமைதியுடன் ஏற்று நின்ற குலோத்துங்கனுக்கும் சோழ தேவர் விடை கொடுத்து அனுப்பினார். அங்கு ஒரு தூணருகில்

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 13மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 13

இரண்டாம் பாகம்   அத்தியாயம் – 3. வேங்கியில் நடந்த விஷமம்        “சோழ அரியணையில் உங்களுடன் அமரக் காலம் வரும்; அது வரையில் காத்திருப்பேன்!” என்றாள் மதுராந்தகி. “என் ஆணைகள் நிறைவேறி, அன்புக்குரிய உங்களோடு கல்யாணபுரத்தில் வாழ ஆயிரங்கோடி காலமானாலும்

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 1மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 1

அத்தியாயம் – 1. வெற்றி வீரர்களுக்கு வரவேற்பு        அன்று கங்கை கொண்ட சோழபுரம் அல்லோல கல்லோலப்பட்டது. அதன் பல்வேறு பகுதிகளான *உட்கோட்டை, மளிகை மேடு, ஆயிரக்கலம், வாணதரையன் குப்பம், கொல்லாபுரம், வீரசோழ நல்லூர், சுண்ணாம்புக்குழி, குருகை பாலப்பன் கோவில் ஆகியவை