மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 1

ம்மன் கோவில் மணி சத்தம் தூரத்தில் ஒலித்தது. கவலைபடாதே சுஜி உனக்கு நானே துணை இருப்பேன் என்று கூறியது போல் இருந்தது. கடவுள் கண்டிப்பாக என்னைக் கைவிடமாட்டார். எனது வெற்றி தள்ளிபோகிறது அவ்வளவுதான் என்று எண்ணியபடியே வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தாள்.

இப்போது சற்று சுஜி பற்றி பார்போம். சற்றே ஒல்லியான உடல்வாகு. ஐந்திரை அடி உயரம். சுருட்டைமுடி. அதுவே அவளுக்கு ஒரு அழகாக இருந்தது. செதுக்கி வைத்தாற் போல் முகம். பொன்னிறம் என்று சொல்ல முடியாது அதற்கு சிறிது கம்மி. காதில் சிறிய பவளதோடு. கழுத்தில் மெல்லிய சங்கிலி. கைகளில் கண்ணாடி வளையல். எளிமையான சுடிதார். இதுதான் சுஜி. அவள் பேசுவதைவிட அவள்கண் ஆயிரம் கதை பேசும்.

வீடு பூட்டி இருந்தது. எதிர்பார்த்ததுதான்.

 “சுஜி வழக்கம் போல உன் சித்தி ஊர் சுத்த போய்ட்டா. வந்து சாவி வாங்கிட்டு போ”என்றார் பக்கத்து வீட்டு கமலம்.

உள்ளே செல்ல திரும்பிய கமலம் ஏதோ நியாபகம் வந்தவராக சுஜியிடம், “சாப்டியா?”என்றார்.

“இதோ இப்ப வீட்ல போய் சாப்பிடபோறேன்”என்ற சுஜி பதிலில் திருப்தி அடையாமல்,

“ஆமா நீ போய் சமைச்சு சாப்பிடறதுக்குள்ள மயக்கமே வந்திடும். கொஞ்சம் உட்காரு மத்தியானமே சாப்பிட்டியோ என்னமோ தெரியல” என்றபடியே ஒரு தட்டிலே சூடாக இரண்டு தோசையும் கொத்துமல்லி சட்னியும் கொண்டு வந்தார்.

சுஜிக்கு உண்மையிலே ரொம்ப பசி. வீட்டில் ஒன்றும் இருக்காது. இப்போது உள்ள மனநிலையில் சமைத்து சாப்பிடுவது முடியாத காரியம். தன் முடிவைச் சொல்லி வாதாடுவதற்கு நிறைய தெம்பும் தேவை. மறுப்பேதும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தாள்.

“நில்லுடி போய்டாதே, இன்னொரு தோசை கொண்டு வரேன்”என்று சூடாக ஒரு கையில் தோசையையும் இன்னொரு கையில் பில்ட்டர் காபியும் எடுத்து கொண்டு வந்த கமலத்தைப் பார்க்க அன்னபூரணி போல் தோன்றியது சுஜிக்கு. ஆமாம் வயிற்றுப் பசி அறிந்து அன்போடு சாப்பாடு தருபவர் எல்லாம் அன்னபூரணிதானே?

“என்னடி இப்படி பார்க்குற?”

“இல்லத்த உங்கள பார்க்க இப்ப அன்னபூரணி போல தோணுது”.

“போடி ஊருக்கே சமைச்சுபோடுறார் உங்கப்பா. என்னமோ, ரெண்டு தோசைக்காக எனக்கு அன்னபூரணி பட்டம் கொடுக்கற” என்றார் சிரித்தபடி.

சுஜி தோசை சாப்பிடுவதை வாஞ்சையுடன் பார்த்திருந்தாள். இந்த பதினெட்டு வருஷத்தில் இந்தப் பெண் எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டாள். கடவுளே இனிமேயாவது இந்தக் கொழந்தைக்கு வாழ்க்கைல நிம்மதிய கொடு.

“என்னடி முடிவடுத்து இருக்க?” என்ற கமலத்துக்குப் பதிலாக,

“அன்னபூரணி ஆகலாம்ன்னு” என்றாள் சுஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page