Tamil Madhura குறுநாவல் மன்னிப்பு – 2

மன்னிப்பு – 2

2

“நீ செத்த அன்னைக்கு என்ன நடந்தது? எப்படி செத்த? நினைச்சுப்பாரு…” சித்ராவின் குரல் ஒலித்தது.

அந்தக் கணமே என் முகத்தின் முன்னே டார்ட்டாய்ஸ் கொசுவர்த்திச் சுருள் சுழன்றது. எனது கடைசி நாளை நானே பார்த்தேன். நம்மை நாமே பார்ப்பது புதுமையான அனுபவம்தான். கொஞ்சம் கொஞ்சமாக அந்த தினத்திற்கு சென்றேன் என்றே சொல்லலாம்.

காலையில் கல்லூரி செல்லும்  குழந்தைகளுக்கும், கணவன் ராகவனுக்கும் உணவு தந்து அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தனக்கான ஆறிப் போன இட்டிலிகளை காப்பியுடன் எடுத்து வந்து அமர்ந்தபோதே தலை கிறுகிறுத்தது வசுமதிக்கு. சில மாதங்களாக இந்தத் தலை சுற்றல் இருக்கிறது. டாக்டரிடம் போக வேண்டும் என்று ராகவனிடம் பல முறை சொல்லிவிட்டாள்.

ஆபிஸிலிருந்து வந்ததும் பேப்பர் படித்துக் கொண்டு டிவி பார்த்தபடியே உணவை முடித்துவிட்டு, ஆபிஸ் வேலை என்று அலுவலக அறையில் கதவை சாத்திக் கொள்கிறான். காலையிலும் அப்படியே. அவளது முகத்தைப் பார்த்து பேசியே பல வருடங்களாகிவிட்டது. அவனது நடவடிக்கைகளில் நெருடல். யாரோ ஒரு பெண்ணுடன் அவனை விடுதி அறையில் பார்த்ததாக சொன்னதை அவள் நம்பவில்லை.

சே, தலைக்கு உயர்ந்த பிள்ளைகளை, அதுவும் கடைசி வருடம் கல்லூரியில் படிக்கும் மகளை வைத்துக் கொண்டு எந்த ஆணாவது தனக்கு பெண் தேடி அலைவானா?

ஹாலில் அவளது அலைப்பேசி யாரோ அழைக்கிறார்கள் என்று பாட்டுப் பாடி  அலறியது.

பெரிய, பெரிய மனுஷன்னின்னு ஒரு சிலர் இங்க வருவாங்க

ஒழுக்கமுன்னா நானேதான்னு ஒளறி சிலரு திரிவாங்க

ஒழுக்க சீலன், ஒசந்த மனிஷன் வெளிய போடும் வேஷம்ங்க

முதல்ல இந்த ரிங் டோனை மாத்தணும் என்றபடியே எடுத்தேன். அழைத்தது அவளது தோழிதான்.

“வசு, உன் வீட்டுக்காரரும் அந்தப் பொண்ணும் ஹோட்டல்ல ரூம் போட்டு கதவை சாத்திருக்காங்கடி. நான் அட்ரஸ் ஷேர் பண்ணிருக்கேன் உடனே வா… “

போட்டது போட்டபடியே அப்படியே கிளம்பினேன்.

“டேய் கேப்மாரி, மொள்ளமாரி ராகவா உனக்கு என்னடா குறை வச்சேன்? தலைக்கு மேல வளந்த  பொண்ணை வச்சுட்டு எப்படிடா வேற பொண்ணு  கூட ஜல்சா பண்ணுற?”

அறைக்கு வெளியே நின்று காட்டுக் கத்தல் கத்தினேன். பூட்டியிருந்த கதவை டங் டங் என்று மண்டையாலேயே தட்டு உடைக்கப் பார்த்தேன். என் தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. கதவு திறக்க, அரைகுறை  ஆடையில் அந்தப் பெண்ணும், பட்டன் போடாத சட்டையுடன் ராகவனும்.

இவ எங்க பிளாட்டில் குடியிருக்கும் பெண் அல்லவா? குழந்தைகள் கூட ஸ்கூலில் படிக்கிறாங்களே? பாவிகளே…

“டேய் ராகவா? கருமம் பிடிச்சவனே! அடுத்தவன் பொண்டாட்டி கூட இதென்னடா கூத்து. ”

பல்லைக் கடித்தபடி ராகவன் “இதென்னடி ஆளுங்களைக் கூட்டிட்டு வந்து டிராமா போடுற… இவளுக்கு நான்தான் எல்லாம். ஏய் சொல்லுடி இந்த மரமண்டைக்கு” என்றான் அவளிடம் அதிகாரமாய்.

மற்றவர்கள் எல்லாரும் குடும்பச் சண்டை பேசித் தீர்த்துக் கொள்ளட்டும் என்று என்னை மட்டும் அறையில் விட்டுவிட்டு  வெளியே சென்றுவிட்டார்கள்.

“அக்கா… இவரும் நானும் லவ் பண்ணுறோம். எனக்கு உலகத்திலேயே இவரு மட்டும் போதும்” என்றாள் என் சக்களத்தி.

“ஏய், இந்தாளு வயசு என்ன, உன் வயசு என்ன? போயி உன் குடும்பத்தைப்  பாருடி லூசு” என்று அவளைப் பார்த்துக் கத்தினேன்.

“இவருதான் என் குடும்பம். எங்க காதலை மனுஷங்களால புரிஞ்சுக்க முடியாது” மயக்கத்தில் பிதற்றியது.

“தூ… இது நாய்க் காதல், டேய் ராகவா… உன்னை எவ்வளவு நம்புனேன்.  இதெல்லாம் உனக்கே அடுக்குமாடா?”

பக்கத்தில் இருந்த கனமான மர நாற்காலியை  அவனை அடித்துக் கொல்லும் வெறியுடன் கஷ்டப்பட்டுத் தூக்கினேன். அவன் என்னைத் தடுத்தான். நான் தடுமாறி நாற்காலியின் பிடியை விட்டுவிட்டேன். அந்த கனமான நாற்காலி வேறு என் மண்டையில் விழுந்து விண் விண்ணென்று வலிக்க, நான் அப்படியே மயங்கி விழுந்தேன். இல்லை இல்லை இறந்து விட்டேன் போல

சித்ரா சொன்னாள் “கிட்டத்தட்ட வசுமதி”

ஓ பிளாஷ் பேக் முடிந்துவிட்டதா?

“இதென்ன கிட்டத்தட்டன்னே எல்லாரும் சொல்றிங்க? அதுக்கு என்ன அர்த்தம்?”

“பூலோகத்தில் டாக்டர்கள் ரெகார்டுபடி கோமால இருக்க, இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள எல்லாம் முடிஞ்சுரும்”

“அதுக்காகத்தான் காத்திருக்கிங்களா? அப்பறம் சொர்க்கத்துக்கு அனுப்பிடுவிங்களா?”

“அதை நீயே கெடுத்துகிட்ட வசு”

“நானா? எப்படி?”

“நீ ஒவ்வொரு ஸ்டெப்பும் கரெக்ட்டா எடுத்து வச்ச, ஆனால் லாஸ்ட் ஸ்டெப் உன் வீட்டுக்காரனைத் திட்டி அவனோட கோபத்தை சம்பாதிச்சுக்கிட்ட அதனால உனக்கு சொர்க்கம் கிடையாது. இந்த இந்த புக்கில் பேஜ் நம்பர் 1343947938594 ல அந்த ரூல் பத்தின டீடெயில்ஸ் இருக்கு”

வேகமாய் அந்தப் பக்கம் தானாகத் திறந்தது. இதற்கு பிராயச்சித்தம் கணவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எழுத்துக்கள் என் கண்முன் மின்னியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

காஞ்சனை – 2காஞ்சனை – 2

காஞ்சனை –புதுமைப்பித்தன்  நான் மறுநாள் விடியற்காலம் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும்போது காலை முற்பகலாகிவிட்டது. ஜன்னல் வழியாக விழுந்து கிடந்த தினசரிப் பத்திரிகையை எடுத்துக்கொண்டு வீட்டின் வெளிமுற்றத்துக்கு வந்து பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தேன். கிரீச்சிட்டு ஆட்சேபித்துவிட்டு அது என்னைச் சுமந்தது. “ராத்திரி பூராவும்

சிநேகிதனேசிநேகிதனே

வணக்கம் தோழமைகளே, இந்த முறை எழுத்தாளர் உதயசகி அழகான  குறுநாவல் ஒன்றைத் தந்துள்ளார். மனதினுள் உருகி உருகி சரணைக் காதலிக்கும் மித்ரா அவன் தனது காதலைச் சொன்னபோது ஏன் மறுக்கிறாள்? நான்கு வருடங்களுக்குப் பின் தாய்நாடு திரும்பியவளுக்கு சரணின் கோபம் மட்டும்

கணினிக் காதல் – குறுநாவல்கணினிக் காதல் – குறுநாவல்

வணக்கம் பிரெண்ட்ஸ், எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள் தனது கணினிக் காதல் குறுநாவல் வழியாக உங்களை மீண்டும் சந்திக்க வந்துள்ளார். படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=378257368 key=key-4jbNVBFy2ZsbKji6fjM2 mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா