Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 27

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 27

அத்தியாயம் – 27

அதிர்ச்சியில் உறைந்து அப்படியே அபிராம் சிலையாய் உட்கார்ந்திருந்தான். இதுவரை யாரும் அபியின் சுண்டுவிரலைக் கூடத் தீண்டியதில்லை. இன்று லீலாம்மாவா அடித்தது. அதுவும்  பல சமயங்களில் அந்த பிஞ்சு பருவத்தில் அவனின் பயம், அச்சம் எல்லாம் ஓட ஓட விரட்டிய தேவதையா இன்று கன்னத்தில் அறைந்தது.  

 

பத்து வயது கூட நிரம்பாத அபிராம் தன்னை அடைத்து வைக்கப்பட்ட அறையிலிருந்து கத்துவான். 

 

“லீலாம்மா பயம்மாருக்கு. எங்க போன?” இருட்டு அறையில் இறைவனின் முன்னால் எறிந்த குத்துவிளக்கை சுற்றிலும் அறுக்கப்பட்ட கோழிகளையும், ரத்தத்தையும் பார்த்தவாறு அலறுவான். 

 

படார் படார் என்று கதவுகளைத் தட்டுவான். 

 

“அம்மா, அம்மா… ப்ளீஸ்மா எனக்கு பயக்குமாருக்கும்மா கதவைத் திறங்க, எனக்கு ரொம்ப பயம்மாருக்கு.” என்று கத்தி கத்தி குரல் வறண்டு பல நாட்கள் பயத்தில் அப்படியே மயங்கி உறங்கி இருக்கிறான். 

 

“அபி. அங்கேயே இரு. உன்னைப் பிடிச்ச பேய் அப்பத்தான் போகும். அந்த பொம்பளை உன் மேல சூனியம் போட்டிருக்கா… ரத்தக் காட்டேரி மந்திரம். அதனால ராத்திரி பூரா தனியா அந்த ரூமில்தான் தூங்கணும்” கடுமையான குரலில் சொல்வாள் மந்தாகினி. 

 

பயத்தில் ஓவென்று அலறுவான் அந்த சிறுவன். 

 

சற்று நேரம் கழித்து அழுவதற்குத் தெம்பின்றி தேம்பிக் கொண்டிருக்கும் சிறுவன் இருக்கும் அந்தப்  பழங்கால அறையின் உயரத்தில் இருந்த ஜன்னலில் இருந்து கயிற்றை போட்டு ஓசை எழுப்பாமல் மெதுவாக இறங்கும் ஒரு உருவம். 

 

“அபி, அபி மோனே, கரையாண்டாம். சத்தம் போடாதே… “ கிசு கிசுப்பாக சொல்லும். 

 

“லீலாம்மா” சத்தேமெழுப்பாமல் சொல்லிவிட்டுக் கட்டிக் கொள்வான். 

 

“நான் வந்துட்டேன்ல… பயப்படாம இருப்பியாம்”

 

அவளது மடியில் அமர்ந்து விசும்புவான். 

 

“அம்மாவுக்கு என்னமோ ஆயிருச்சு லீலாம்மா… பூஜை அது இதுன்னு இப்படி அடைச்சு வைக்கிறாங்க”

 

மந்தாகினிக்கு இப்போது தேவை ஒரு நல்ல வைத்தியர். அதை விட்டுவிட்டு மாயம் மந்திரம் என்று சுற்றுகிறாள். அவள் இப்படி கஷ்டப்படுவதற்கு அபியின் ஜாதக பலன்தான் காரணம் என்று யாரோ ஒரு அரைகுறை மந்திரவாதி சொன்னதின் பலன் இப்படி பயங்கரமான சோதனைகளுக்கு உட்படுத்துகிறாள். 

 

“அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை மோனே. நீ எதுக்கும் பயப்படாதே. இப்படி பூஜை ஏதாவது இருந்தா கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ லீலாம்மா ஓடி வந்து என் அபி கிட்ட துணைக்கு உக்காந்துக்குவேன். அம்மா பாக்குறதுக்குள்ள காலைல எந்திருச்சு ஓடிடுவேன். இதை அம்மாகிட்ட சொல்ல வேணாம். நம்ம சீக்ரெட்டா வச்சுக்கலாம்”

 

“நீ பக்கத்தில் இருந்தா எனக்கு பயம்மே இல்ல லீலாம்மா. உன் மடியில் படுத்துக்கவா”

 

“படுத்துக்கோ மோனே”

 

“லீலாம்மா எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு கயிறெல்லாம் கட்டி இறங்கி வந்திருக்க. நீயும் என் அம்மாதான்”

 

கண்கள் பனிக்க அவனைக் கட்டிக் கொள்வாள். 

 

“நன்றி பெரியய்யா” சற்று சத்தமாகவே ஒரு முறை சொல்லிவிட்டாள்.

 

“அப்பாவுக்கு ஏன் தாங்க்ஸ் சொல்ற”

 

“எனக்கு ரெண்டு பெறாத மகன்களைத் தந்திருக்காரே. அதுதான்.. “

 

“லீலாம்மா இன்னொரு மகன் யாரு?”

 

“அதை ஒரு நாள் உன்கிட்ட சொல்லுவேன்”

 

“இப்பயே சொல்லேன்”

 

“உனக்கு அதைப் புரிஞ்சுக்குற அளவுக்கு முதிர்ச்சி இல்லை மோனே. ஒரு நாள் வரும். அப்ப நானே அந்தக் கதையை சொல்லுவேன். அன்னைக்கு என்னை நிறுத்த சொல்லாம கேட்கணும்”

 

“ஏன் நிறுத்த சொல்லுவேன்? அதெல்லாம் மாட்டேன்”

 

“ஏன்னா நீ உண்மைன்னு நினைச்சது எல்லாம் அன்னைக்கு பொய்யா தோணலாம். நல்லவங்க கெட்டவங்களாவும், கெட்டவங்க நல்லவங்களாவும் மாறலாம்”

 

“நீ நல்லவளா கெட்டவளா?”

 

“அதையும் நீதான் எனக்கு சொல்லணும். நீ நல்லவன்னு நினைச்சா நான் நல்லவ, கெட்டவன்னு நினைச்சா நான் கெட்டவ”

 

அப்பா வேறு வீட்டுக்கு வருவதில்லை. 

 

“அம்மா…. அப்பா கூட இல்லாததால தான் அம்மா இப்படி உடம்பு சரியில்லாம போனாங்க”

 

“யாரு இதெல்லாம் உனக்கு சொன்னா?”


“சுகுமாரன் மாமா சொன்னார். அவரு பொண்ணு காவ்யாவும் அப்பா கெட்டவருன்னு சொன்னா”

 

இப்படி ஒரு பிஞ்சின் மனதில் குடும்பமே சேர்ந்து நஞ்சை விதைக்கலாமா?

 

“எனக்கு இங்க இருக்கவே பயம்மா இருக்கு லீலாம்மா”

 

“ஹாஸ்டெல்ல படிக்கிறியா?” 

 

“நான் ஹாஸ்டெல் போனா அம்மாவை நீ பாத்துக்கிறியா?”

 

“பாத்துக்குறேன்”

 

“ப்ராமிஸ்”

 

“ப்ராமிஸ் அபி. என்னால முடிஞ்ச அளவுக்கு அவங்களைப் பாத்துக்குறேன்”

 

ஏதேதோ வேலைகள் செய்து மந்தாகினியின் மனதில் அபியை விடுதியில் சேர்க்கும் எண்ணத்தை ஏற்படுத்தினார். 

 

***

 

இன்று, அறையின் படுக்கையில் உடைந்து போன சிங்கமாய் பழைய நினைவுகளை அசை  போட்டபடி அபிராம். ஜன்னலைப் பார்த்து வெளியே வெறித்தவண்ணம் காயம் பட்ட சிங்கமாய் அவினாஷ். யாருக்கு ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் இடையில் அலையில் சிக்கிய படகாய் செம்பருத்தி.  

முக்கியமான சிலரைத் தவிர மற்றவர்கள் யாரும் அங்கில்லை. 

 

“மோனே!! அழைத்தார் சேச்சி. அவனிடமிருந்து எதிரொலி இல்லை. 

 

“மோனே அபி” நீண்ட நாட்களுக்குப் பின்னர் அப்படி அழைத்தார். 

 

“இதை மனசார சொல்றிங்களா லீலாம்மா?” அவன் குரலில் ஒரு விரக்தி. 

 

“அதில் என்ன சந்தேகம் அபி”

 

“சந்தேகம்தான். இது வரைக்கும் வாரிசைப் பத்தி சொல்லாத நீங்க இன்னைக்கு அவினாஷுக்கு சப்போர்ட் பண்ணி என்னை அடிச்சுட்டிங்க. ஐ ஹேட் யூ”

 

“இல்ல மோனே, இல்லவே இல்லை… அவினாஷுக்கு சப்போர்ட் பண்ணல, ஆனா அவங்க அம்மாவைப் பத்தி நீ பேசின வார்த்தை தப்புத்தானே?”

 

“ஓ… அதுக்காக அடிப்பீங்களா?”

 

“நீ என் மகன்தானே அபி. என்னைப் பழிச்சுப் பேசினப்பக் கூட பொறுத்துக்கிட்டேன். ஆனா அந்த உத்தமியைப் பத்தி பேசினதும் என்னால தாங்க முடியல”

 

“அந்தம்மா உத்தமி, பத்தினி ஆனா கல்யாணம் ஆகி குழந்தை இருக்குற ஒரு நபரைப் பிரிச்சு ஒரு குடும்பத்தை சின்னா பின்ன மாக்கியிருக்காங்க. என் குழந்தை பருவத்தை அழிச்சிருக்காங்க. எங்கம்மா மனசு குழம்பி மந்திரம் மாயம் இப்படி போனதுக்கு என்ன காரணம் லீலாம்மா? முழு காரணமும் அந்தம்மா தான். அந்தம்மா குடும்பத்தை இழந்ததா? இல்லையே… ஆனா நான், நான்… அப்பா இல்லாம அம்மா மனசு பேதலிச்சு… “ விசும்பினான். 

 

“எத்தனை பேர் உங்கம்மாவுக்கு பைத்தியம்னு சொல்லிருக்காங்க தெரியுமா?” அவனது கேள்விக்கு என்ன பதில் சொல்வது. இருந்தாலும் முயற்சித்தார். 

 

“இல்ல மோனே… நிஜ சூழ்நிலை அப்படி இல்லவே இல்லை… “

 

“என்ன இல்லை… நீங்க என்ன சொல்லப்போறிங்க? அந்தம்மா நல்லவங்க எங்கம்மாதான் கெட்டவங்கன்னு நீங்க வாங்கின காசுக்குக் கூவப் போறிங்களா?”

 

அத்தனை நேரம் அங்கு அமைதியாக நின்றிருந்த செம்பருத்தி “மன்னிச்சுக்கோங்க சேச்சி பாத்ரூம் போறேன்னு சொல்லிட்டு இதை உங்களுக்குத் தெரியாம எடுத்துட்டு வந்துட்டேன். அபிராம் சார். இதெல்லாம் சேச்சி சமையல் துறையில் வாங்கின செர்டிபிகேட்ஸ். அவங்க நினைச்சிருந்தா வெளிநாட்டில் ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சுட்டு உக்காந்திருக்கலாம். ஆனால் இங்க உங்க வீட்டில் ஒரு சாதாரண சமையல்காரியா உக்காந்திருக்கிறதுக்குக் காரணம் நீங்க நீங்க நீங்க மட்டும்தான். அவினாஷைப் பிடிச்சிருந்தா அவரு கூட ஸ்டே பண்ணிருக்கலாமே?”

 

தன் கண்முன் இருந்த சான்றிதழ்களைக் கண்டு அவன் மனதில் குழப்பம். 

 

“உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் குழப்பத்துக்கெல்லாம் விடை இங்கேயே சுத்திகிட்டு  இருக்கு. யோசிங்க சார். நாங்க எல்லாரும் இந்த வீட்டில்தான் இருப்போம். உங்களோட அழைப்புக்காகக் காத்துகிட்டு இருப்போம்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டாள் செம்பருத்தி. 

 

தன்னைக் கடந்து செல்ல முயன்ற அவினாஷின் கைகளை பற்றி இழுத்து பக்கத்து அறைக்கு சென்றாள் செம்பருத்தி. 

 

கண்கள் கலங்க நின்றிருந்தவனைப் பார்த்து “ஆன்ட்டி சாப்பாடு கொடுத்து விட்டாங்க” என்று கையில் இருந்த டிபன் பாக்ஸைத் தந்தாள். 

 

“பச்.. வேண்டாம் மூடில்லை”

 

கிளம்பும்போது அங்கிருந்த காப்பி பிளாஸ்கை கேட்டு எடுத்து வந்திருந்தாள். அதில் இருந்த காப்பியை மூடியில் ஊற்றித் தந்தாள். 

 

“இது ஹோட்டலில் வாங்கினதுதான். குடிங்க” வறுபுறுத்தி குடிக்க வைத்தாள். 

 

“நான் இன்னமும் இங்க இருக்கணுமா செம்பருத்தி?”

 

“கண்டிப்பா இருக்கணும். ஒரு கலகம் பொறந்திருக்கு. இது தெளியும்போது பிரச்சனைகள் தீரும்”

 

“வேண்டாம்”

 

“ஏன் வேண்டாம்?”

 

“உயிருக்கு உயிரானவங்க செய்யுற தப்பைப் பத்திக் கேள்விப்படும்போது அபி துடிச்சுடுவான். அவன் கண்மூடித்தனமான நம்பிக்கையும் பிரியமும் வச்சுருவான். அது கலையும்போது அவனால் தாங்கவே முடியாது”

 

அவினாஷின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் செம்பருத்தி. 

 

“வேலைக்கு ஆளுங்களைப் போட்டு அவனைக் கட்டுப்படுத்துறதா நினைச்சுட்டு இருக்கான் பைத்தியக்காரன். அவன் அம்மாவோட அன்புக்கு ஏங்கும் சவலைப் பிள்ளை செம்பருத்தி. அதனாலதான் அவனுக்குத் தேடித் தேடி அம்மாவா அனுப்பினேன்”

 

கண்ணில் ஒரு வலி இருந்தால் அதில் கனவுகள் வருவதில்லை என்று சொல்வார்கள். இதயத்தில் ஒரு காயம் இருந்தால் அங்கு யார்மேலும் நம்பிக்கை வருவதில்லை. அபிராமின் காயத்தை ஆற்ற தேடித் தேடி அன்னையின் பரிவோடு அவனை கவனிக்க ஒரு கூட்டத்தையே தயார் படுத்தி இருக்கிறான்அவினாஷ். இவனைப் போய் காயப்படுத்துகிறானே அபிராம், செம்பருத்தியின் மனம் வலித்தது. 

 

பாலனிடமிருந்து அவினாஷுக்கு அழைப்பு வந்தது. “சொல்லு பாலன்”

 

“என்ன செம்பருத்தியோட சொந்தக் காரங்களா? இதென்ன புது குழப்பம்?”

 

“என்னாச்சு அவி?”

 

“உன்னோட சொந்தக்காரங்கன்னு ஒரு பாமிலி வந்து வாசலில் நின்னு சத்தம் போடுதாம்”

 

“சொந்தக் காரங்களா?”

 

“போட்டோ எடுத்து அனுப்ப சொல்லிருக்கேன்” 

 

சில வினாடிகளில் வாசலில் இருப்பவர்களின் புகைப்படம் வாட்ஸப்பில் வந்தது. 

 

“இது என் அத்தை பாமிலி. இவங்க எப்படி இங்க…” செம்பருத்திக்கும் குழப்பம். 

 

“உங்க சொத்தை எழுதி வாங்கிட்டு, உனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டு ஜகா வாங்கின குடும்பம்தான?”

 

“எஸ் அவி. ஆனா என் அட்ரஸ் எப்படித் தெரியும்?”

 

“உன் பிரெண்ட்ஸ் யாராவது தந்திருப்பாங்களோ?”

 

“வக்கிலைத் தவிர வேற இந்த விலாசம் யாருக்கும் தெரியாது”

 

யோசித்தவன் “சுகுமாரன், காவ்யா இவங்களுக்கு உன்னோட விலாசம் தெரியுமே”

 

“ஆமாம். வீட்டு விலாசம் இருக்கும். ஆனால் அத்தையோட விலாசம். இப்ப நினைவு வருது. அத்தை வீட்டில் அட்ரஸ் தேடிட்டு இருந்ததா ஜலப்பிரியா சொன்னா… வக்கிலைக் காண்டாக்ட் பண்ண சொல்லி இருக்காங்க. ஒரு வேளை ஆபிஸ்ல அவங்களைப் பாத்து”

 

“அதே தான் ஒன்னும் ஒன்னும் ரெண்டு. சுகுமாரன் குடும்பம் உதவி செய்யுறேன்னு சொல்லிட்டு செய்யுற குழப்பம் இருக்கே போதும்டா சாமி” என்றான். 

 

“சொல்லு… இப்ப என்ன செய்யுறது செம்பருத்தி. உன் ஆசை அத்தானை வர சொல்லலாமா இல்லை அனுப்பி விட்டுடலாமா?”

 

“பிரச்சனையை ஏன் தள்ளிப் போடணும். கையோட பைசல் பண்ணிடலாம்”

 

***

 

வீட்டைக் கண்களை விரித்து பார்த்துக் கொண்டே வந்தனர் அத்தையின் குடும்பத்தினர். எவ்வளவு பெரிய வீடு? இந்த வீட்டலயா வேலை செய்யுறா? எங்கிருந்து இப்படி ஒரு வேலை கிடைச்சது? இங்க இருக்குற விளக்கையும் அலங்காரப் பொருள்களையும் சுருட்டிட்டுப் போயி வித்தாலே ஒரு வருசம் உக்காந்தே சாப்பிடலாம் போல இருக்கே. 

 

அவர்கள் வீட்டில் நுழைந்து வரவேற்பறையில் இருக்கும் பொருட்களை ஆசையோடு தடவி விலையை மதிப்பீடு செய்ய முயல்வதை காமிரா வழியாகக்  கண்டு ‘காசாசை’ என்றான். 

 

“பேராசை” என்றாள் செம்பருத்தி. 

 

அதற்குள் மற்றொரு அழைப்பு வர, அதனை எடுத்தான் அவினாஷ். அவன் என்ன சொன்னானோ

 

“சரி, எனக்கு கனெக்ட் பண்ணு” என்றான். 

 

மறுமுனையில் இருப்பவர்களிடம் பேசினான். “எதிர்பார்த்தேன். ஆனால் உண்மையை அபியே சொன்னா நல்லாருக்கும்” 

 

….

 

மறுமுனையில் பேசியதைக் கேட்டுவிட்டு “நீங்க உங்க பார்மாலிட்டியை ஆரம்பிச்சுடுங்க”

 

பேசி முடித்து அலைபேசியை வைத்தான். 

 

“என்னாச்சு அவி” என்று கேட்டாள் செம்பருத்தி கவலையான குரலில்.

 

சொன்னால் தாங்குவாளா? ஆனால் அவள் வருங்காலத்தில் நடக்கப் போவது பூ மேடையில் இல்லை. என்னுடன் அவள் பயணிக்க வேண்டும் என்றால் இத்தகைய முள் பாதையில்தான் செம்பருத்தியின் பயணம் இருக்கும்.அவள் இதைத்  தாங்கித்தான் ஆக வேண்டும். 

 

“ட்ரக் ட்ரேஸ்  நீ வச்சிருந்த கூல் ட்ரிங்க்ஸ்ல இருக்கிறதா கண்டு பிடிச்சிருக்காங்க” என்றான். 

 

அவளது அதிர்ச்சியைப் படம் பிடித்தவாறு “இன்வெஸ்டிகேஷனுக்காகப் போலீஸ் டீம் வந்துட்டு இருக்காங்க” என்று மற்றொரு குண்டைப் போட்டான்.

3 thoughts on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 27”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 6தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 6

அத்தியாயம் – 6   அதன் பின் நாட்கள் வேகமாக ஓடின. வக்கிலிடம்  பேசி, தனக்கு அந்த விளம்பரத்தில் இருக்கும் வேலையில் தோன்றிய ஆர்வம் பற்றியும், அந்த வேலை தனக்கு பொருத்தமாக இருக்குமா என்றும் விசாரித்தாள்.    அவருக்கு திகைப்பு தோன்றினாலும்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 24தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 24

அத்தியாயம் – 24   சூரிய விளக்கில் சுடர்விட்ட கிழக்கு அன்றைக்கு என்னவோ வித்தியாசமாகத் தெரிந்தது ராதிகாவிற்கு.   செம்பருத்தி தன்னை  ஒர விழிப் பார்வையில் சிறை பிடித்தவாறே விட்டு விலகி ஜாகிங் சென்ற அவினாஷைப் பார்த்தாள். சாம்பிள் கொடுத்திருந்த பொருட்களின்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 10தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 10

அத்தியாயம் – 10   காலை குளிக்கும்போது கூட அதே நினைப்பு செம்பருத்திக்கு. யார் இந்த சிங்கம்? ஏன் இவ்வளவு பில்ட் அப் இவனுக்கு. இதுவரை சொன்னதில் ஒருத்தன் கூட நல்லவிதமான அபிப்பிராயத்தை சொல்லல. தான் அறிந்த விஷயங்களைப் புள்ளியாய் எடுத்துக்