Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 24

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 24

  1. அத்தியாயம் – 24

 

சூரிய விளக்கில் சுடர்விட்ட கிழக்கு அன்றைக்கு என்னவோ வித்தியாசமாகத் தெரிந்தது ராதிகாவிற்கு.

 

செம்பருத்தி தன்னை  ஒர விழிப் பார்வையில் சிறை பிடித்தவாறே விட்டு விலகி ஜாகிங் சென்ற அவினாஷைப் பார்த்தாள். சாம்பிள் கொடுத்திருந்த பொருட்களின் டெஸ்ட் ரிசல்ட் நாளை வந்துவிடும் என்று சொல்கிறார்கள். நான் தந்திருந்தால்தானே பயமிருக்கும். எனக்கு பயமே இல்லை. ஆனாலும் பிரச்சனைகள் சரியாகும் வரை அவினாஷுடன் மனம் விட்டுப் பேச வாய்ப்பில்லை. 

 

“மோளே! சாயா” கண்ணாடி டம்ளரை அவள் முன் வைத்தார் சேச்சி. 

 

“வேண்டாம் சேச்சி”

 

“செம்பா குட்டி, பல சமயங்களில் நம்ம செய்யாத தப்புக்கு இந்த சமுதாயத்தால் சிலுவை சுமக்க வைக்கப்படுறோம். அந்த சிலுவையை சுமக்கவாவது நமக்குத் தெம்பு வேணுமே… குடி” என்று தாயினும் சாலப் பரிந்து சொன்னவரை மறுக்க முடியாமல் அருந்தினாள். 

 

“எப்படி சேச்சி தப்பாச்சு. என்னோட கவனக் குறைவு தானே”

 

“அவினாஷுக்கு சொன்னதேதான் உனக்கும் சொல்றேன். நம்ம எல்லாரும் கண்ணு  மூடாமத்தான் பாத்துக்கிட்டோம். ஆனாலும் ஒரு மனுஷன் தப்பு பண்றதுன்னு முடிவு பண்ணிட்டான்னா ஏழு கடல் ஏழு மலை தாண்டி உக்கார வச்சாலும் அவனைத் தடுக்க முடியாது. ஒருத்தன் இப்படித்தான் வாழணும் தீர்மானம் செஞ்சு வாழுறான். அவனை உன் போக்குக்கு வளைக்க நினைச்சா கடைசில தோல்விதான் மிஞ்சும். கடைசியா ஒன்னு மாற்றம் அபிராமோட மனசுக்குள்ள இருந்து தானா வரணும். நம்ம திணிக்கக் கூடாது”

 

“ஆமாம் சேச்சி. ஆனால் அவர் சுற்றுப்புறம் சரியாத்தானே இருக்கு. எப்படி போதை மருந்தைத் தேடினார்”

 

“கொலைப்பட்டினி இருக்குறவனுக்கு ஒரு வேளை சோறு அமிர்தம். தினமும் விருந்து சாப்பாடு சாப்பிடுறவனுக்கு அவனுக்குப் பிடிச்ச ஊறுகாய் சாப்பாட்டில் வைக்கலைன்னா கூட அது ஒரு பெரிய குறை. அதுதான் அபிராம் கேஸ். பர்ஸ்ட் வேர்ல்டு ப்ராப்ளம்… “

 

“சேச்சி பர்ஸ்ட் வேர்ல்டு ப்ராபளம் பத்தி எல்லாம் வெளுத்து வாங்குறிங்க. உண்மையிலேயே கேக்கணும்னு பாக்குறேன். ஒரு நேரம் கிராமத்து சமையலில் கஞ்சியும்  கருவாடும்னு கலக்குறிங்க இன்னொரு நேரம் அபிராம் சாருக்காக ஸ்காட்டிஷ் பை செஞ்சு வைக்கிறிங்க. இதெல்லாம் எப்படி சேச்சி. நீங்க யாரு? எல்லாரும் சொல்றமாதிரி ஏஜென்ட் டீனாவா?”

 

“அப்படியும் சொல்லலாம். எங்க தாத்தா காலத்தில் இருந்து அரச குடும்பத்து வேலைதான் பார்த்துட்டு வர்றோம். எனக்கு சமையலில் இருக்குற இன்டெரெஸ்ட்டைப் பார்த்துட்டு நம்ம பெரிய அய்யா லண்டன்ல சேர்த்து படிக்க வச்சார். அதுக்கப்பறம் அங்கேயே ஒரு மிஷிலின் ஸ்டார் உணவகத்தில் சேர்ந்தேன். இங்கிலாந்து அரச குடும்பம் மாதிரியே ஸ்காட்லாண்டிலும் இருக்கு. அங்க படிச்சுட்டு ஒரு லார்டு வீட்டில் கிட்சன்ல இந்தியன் செஃப்பாவும் வேலை பார்த்தேன்.  ஒரு நாள் நம்ம பெரிய அய்யாவை மறுபடியும் அங்க நடந்த விழாவில் சந்திச்சேன். அவர்தான் அபிராமையும் மந்தாகினி அம்மாவையும் பார்த்துக்க என்னை இங்க வந்து சேரச் சொன்னார்”

 

“அவ்வளவு பெரிய வேலையை விட்டுட்டு இந்தக் குட்டியோண்டு லங்கைக்கு ஓடி வந்துட்டிங்களா சேச்சி”

 

“இந்த குட்டியோண்டு லங்கைதானே நான் பிறந்த மண் மோளே. இங்க கவுரவமான வாழ்க்கை கிடைச்சா வேண்டாம்னா சொல்லுவேன். அதுவும் இந்த வாழ்க்கை பெரிய அய்யா தந்தது. அவருக்கு நன்றிக் கடனைத் திருப்ப செலுத்துற வாய்ப்பு அத்தோட பெறாத இரண்டு பிள்ளைகள் அபிராம், அவினாஷ் இதெல்லாம் கசக்கவா செய்யும்?”

 

“உண்மைதான் சேச்சி. தாய்மடி மாதிரி பாதுகாப்பான இடம் வேறெங்கே இருக்கு? இன்னொரு சந்தேகம் எதுக்காக பெரிய அய்யா அபிராமைப் பத்தி இவ்வளவு கவலைப் பட்டார்? அபிராமும் எதனால அவினாஷையும் அவர் குடும்பத்தையும் இவ்வளவு வெறுக்கிறார்?”

 

“என்னத்த சொல்ல, மகனை  உலகம் தெரியாம மந்தாகினி அம்மா வளர்த்திருந்தா கூட தெரிஞ்சுக்க வைக்கலாம்.. ஆனால் தன் சுயலாபத்துக்காக அம்மா வார்த்தை தான் உலகம்னு ஆழமா பதிய வச்சாச்சு. உலகத்தில் இன்னும் நிறைய தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. அவனோட வாழ்க்கை எவ்வளவு உயர்ந்ததுன்னு அவனுக்குப் புரியல” 

 

தூரத்தில் நடை பயிற்சி முடித்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த மங்கையர்கரசியைப் பார்த்ததும், “மேடம் காப்பி குடிச்சாங்களா?”

 

“குடிச்சிருப்பாங்க… “ என்றார் பட்டும் படாமல். 

 

“நீங்க தரலையா சேச்சி” என்றாள் செம்பருத்தி திகைப்புடன். 

 

“நான் இந்த வீட்டிலிருந்து தர்ற பச்சைத் தண்ணி கூட குடிக்க மாட்டாங்க. அவங்களுக்கு எல்லாம் ஹோட்டலில் இருந்து வருது”

 

“அப்ப அவினாஷுக்கு?” 

 

“அவருக்கும் தான். ஹ்ம்ம்.. வேற வழியில்லாம இங்க தங்கி இருக்காங்க. இல்லாட்டி மதியாதார் வாசல்படி கூட மிதிக்க மாட்டாங்க” என்று சொல்லிவிட்டு செம்பருத்தியின் காப்பி கப்பை வாங்கி கொண்டு சென்றார். 

 

“செம்பருத்தி” என்று அழைத்தார் மங்கை. 

 

“சொல்லுங்க மேம்”

 

“லவங்கம் இருக்குற இடத்துக்கு என்னைக் கூட்டிட்டு போக முடியுமா?”

 

“போலாம் மேம்” என்றவாறு அந்த வீட்டிற்கு அருகிலேயே இருந்த ஒரு சின்ன ஒற்றை படுக்கை அறை சமையலறை அதில் டீ போட்டுக் கொள்வதற்காக சின்ன ஸ்டவ் சில பாத்திர பண்டங்கள். 

 

“வாங்கம்மா… சொல்லி அனுப்பியிருந்தா நானே வந்திருப்பேனே” காலையில் அவர்களை எதிர்பார்க்காத லவங்கம் பதறியபடி வரவேற்றார். 

 

“நன்றி சொல்ல நான்தானே உங்களைத் தேடி வரணும்”

 

“புரியலைங்கம்மா” தலையை சொரிந்தார். 

 

“உங்க பசங்களுக்கு நன்றி சொல்லத்தான் வந்தேன். அவனுங்க வீட்டைப் பாத்து குரைச்சு ஆளுங்களை வேட்டியைப் பிடிச்சு இழுத்துட்டு வந்தானுங்களாமே. அதனாலதான் சரியான நேரத்தில் அபியைக் காப்பாத்த முடிஞ்சதுன்னு சொன்னாங்க”

 

அபிராம் நீச்சல் குளத்தில் தத்தளித்த சமயத்தில் அந்தப் பகுதியில் சுற்றிக் காவல் காத்தது லவங்கம் போற்றிப்  பராமரித்து வளர்க்கும் செல்ல நாய்கள்தான். அவற்றை பாராட்டியதைக் கேட்டு தன்னையே பாராட்டியத்தைப் போல அகமகிழ்ந்து போனார். அதுவும் உதவிக்கு ஆட்கள் வரும் வரை ஒரு நாய் பாய்ந்து அவனது சட்டையைப் பற்றி மீண்டும் மூழ்காதவாறு கவ்விப் பிடித்திருந்ததாம்.

 

“ஆமாம்மா… பசங்க ரொம்ப அறிவாளிங்கம்மா… யாரைப் பாதுகாக்கணும்னு ஒரு கோடி காட்டிட்டா போதும் பிடிச்சுக்குவானுங்க. இல்லைன்னா வேட்டைக்கு கூட்டிட்டு போக முடியுமா சொல்லுங்க”

 

“உண்மைதான். உங்க பசங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்குத் தெரியல” 

 

“நேரம் கிடைக்கிறப்ப ஒரு பத்து பதினஞ்சு நிமிஷம் அவனுங்க கூட விளையாடுங்கம்மா… சந்தோஷப் படுவானுங்க”

 

“அன்பைக் காட்ட நேரத்தைத் தாங்கன்னு சொல்றிங்க”

 

“ஆமாம்மா நேரத்தை விட சிறந்த பரிசு உலகத்தில் இல்லைங்களே”

 

“அது போதுமா? ஸ்பெஷல் விருந்து சாப்பாடு எதுவும் சொல்லட்டுமா?”

 

“வேட்டையாடி இரை தேடிப் பழகுனவனுங்க. அதைத்தான் விரும்புவானுங்க”

 

“அப்ப ஒரு நாள் வேட்டைக்கு கூட்டிட்டுப் போலாம். அபிராம் உடம்பு தேரட்டும்”

 

“பழையபடிக்கு வேட்டைக்கு போக ஆரம்பிச்சா அய்யா மனசும் தேறிடும்மா”

 

பெருமூச்சு விட்டபடி அவரது பசங்களைத் தடவித் தந்தார். அவைகளும் ஆர்வத்துடன் அவரது மடியில் தலையை சாய்த்து செல்லம் கொஞ்சின. 

 

“அம்மா ஒரு விண்ணப்பம். இந்த  நேரத்தை சாதகமா எடுத்துக்கிடுறதா நினைக்கக் கூடாது”

 

“சொல்லுங்க லவங்கம்”

 

“பாதுகாப்புக்கு நாய் வளர்கிறதா இருந்தா நாட்டு நாய் வளக்குறதை பரிசீலிக்கிறிங்களாம்மா?”

 

அவரைக் கேள்வியாக நிமிர்ந்து பார்த்தார்.

 

“நாட்டு நாய்கள் இனமே குறைஞ்சுகிட்டு வருதும்மா. பிள்ளைக எல்லாருக்கும் புசு புசுன்னு பாரின் நாயைத் தான் வாங்கித் தராங்க.அந்த நாய்களுக்கு அங்கீகாரம் இருக்கு. நம்ம பிள்ளைக நம்மை மாதிரியே அமுங்கிப் போயி இருக்காங்க.  நம்ம ராஜபாளையமோ கன்னியோ நம்ம ஊருக்குத் தகுந்தாப்பில உடல்வாகும் அறிவும் இருக்கும். நீங்க அரண்மனையில் இவனுங்களை வளக்குறப்ப அதைப் பாத்து மத்தவங்களும் வாங்குவாங்கம்மா”

 

பெரிதாகப் புன்னகைத்தார் மங்கை “சரி எங்க வாங்குறதுன்னும் சொல்லிடுங்க”

 

“மதுரைல வருஷத்துக்கு ஒரு தடவை எக்ஸிபிஷன் நடக்கும்மா எல்லா நாட்டு வகை நாய்களையும் அங்க பாக்கலாம்”

 

“சரி, ஒன்னு பண்ணுங்க யாரு யாரு இந்த பிசினெஸ்ல இருக்கா, எவ்வளவு விலைன்னு முறைப்படுத்தி நேர்மையான வெப்சைட் ஒன்னை உங்க கூட்டாளிகளை ஆரம்பிக்க சொல்லுங்க. நிறைய பேர் பலனடைவாங்களே”

 

“சரிம்மா”

 

தான் சொல்வது லவங்கத்துக்குப் புரிகிறதா என்று தெரியாமல் தடுமாறியவரிடம் 

 

“நான் அவரு தம்பி பய்யன் கிட்ட சொல்லிடுறேன் மேம். அவருக்கு இந்த விஷயத்தில் கொஞ்சம் க்னோலெட்ஜ் இருக்கு”

 

இருவரும் கிளம்பினார்கள். 

 

அவர்களை எதிர்கொண்டு அழைத்தான் அவினாஷ். 

 

“அம்மா, சாப்பாடு சாப்பிட்டுட்டு வந்துடலாம்” என்றான். 

 

“பசிக்கலடா… “

 

“எல்லாம் ஹோட்டலுக்கு போறதுக்குள்ள பசி வந்துடும்”

 

“எதுக்குடா அங்க போகணும்”

 

“ஏன், எங்கப்பாவைப் பாக்க வேணாமா? அபியைப் பார்த்ததும் உலகமே மறந்துரும். நாங்கல்லாம் கண்ணுக்குத் தெரிஞ்சாதானே” ஓரக்கண்ணால் செம்பருத்தியைப் பார்த்தபடி சொன்னான். 

 

“ஐயோ… ஆமாம் கண்ணா. அவரு காத்திருக்காரா?” என்றவாறு விரைந்தார் மங்கை. 

 

செம்பருத்தி என்ன செய்வது என்று புரியாமல் அவர்களை பின்தொடராது அங்கேயே நிற்க, அவள் பின்னால் வராதது கண்டு முறைத்தபடி வந்தான். 

 

“உனக்கு வேற தனியா சொல்லனுமா? நீதானே எங்கம்மாவுக்குக் கம்பெனி கொடுக்கணும்”

 

“அபிராம் சார்” மூணு வரிக்கு முன்னாடிதான் டைலாக் சொல்லிருக்கேன். புரிஞ்சுக்குறாளா பாரு என்று ஒரு லுக் விட்டான் 

 

“அந்தக் கண்ணனுக்கு பணிவிடை செய்ய ஒரு கோபிகா, சாரி ராதிகா வான்டெட்டா வந்திருக்காங்க. அவரு அவங்க கூட ஜொள்ளுக் கடலில் மிதந்துகிட்டு இருப்பார். நீ எங்கம்மா கூடக் கிளம்பு”

 

சரி என்று ஓடப் போனவள் கைகளைப் பற்றி நிறுத்தி “இப்படியே போகாதே. எங்கப்பா வேற அங்க இருப்பாரு. பர்ஸ்ட் இம்ப்ரெஷன் கொஞ்சம் நல்லா தா தாயே!”

 

வேகமாய் சென்று நன்றாக முகம் கழுவிக் கொண்டு வேறு உடை மாற்றி வந்தாள். நல்ல க்ரே கலர் காட்டன் சுடிதாரில் சில்வர் பார்டர் போட்டிருந்தது. அப்படி கச்சிதமாகப் பொருந்தி இருந்தது. அவளை அந்த தோற்றத்தில் பார்த்ததும் அவினாஷின் கண்களில் ஒரு பளிச் தோன்றி மறைந்தது. 

 

“மேக் அப் எல்லாம் போடத் தெரியாது அவினாஷ்”

 

“இனிமே ஓவியா கிட்டக் கத்துக்கோ. போன தடவை அவளுக்கு மேக் அப் செட் வாங்கித் தந்திருக்கேன்”

 

“அதில்தான் தினமும் மூஞ்சிக்கு வெள்ளையடிக்கிறா”

 

“ஐயோ… ரெண்டு பேரும் ராதிகாகிட்ட கேளுங்க”

 

“காவ்யாகிட்ட கேட்கட்டுமா? உங்களுக்குப் பிடிச்ச மாதிரி கத்துத் தருவாங்களோ அவி” என்றாள் காவ்யாவின் பாணியில். 

 

யோசித்தவன் “நல்ல யோசனை. செய்” என்றவனைப் பார்த்து முறைத்தாள்.

 

“கவனி செம்பருத்தி, நீ மட்டும்தான் அம்மா கூட போற. நான் இங்க இருக்கேன்.  எங்கம்மா இங்க இருக்குறது எனக்குப் பிடிக்கவே இல்லை. உங்க சார் எப்ப அவங்களை அவமானப் படுத்துவானோன்னு முள் மேல நிக்குற மாதிரி நிக்குறேன். அவங்களை முடிஞ்ச அளவுக்குக் கன்வின்ஸ் பண்ணி ஹோட்டலில் இருக்க வை” என்றான். 

 

“எனக்கும் அதே மாதிரிதான் உங்களை நினைச்சு எனக்குத் தவிப்பா இருக்கு அவினாஷ். நான் வரும்போது நீங்க சாப்பிட சாப்பாடு எடுத்துட்டு வரேன்”  

 

கலங்கிய அந்தக் கடல் போன்ற கண்களில் அப்படியே தானும் அமிழ்ந்து சந்தோஷமாய் மூழ்கிவிடலாமா என்று யோசித்தான் அவினாஷ். 

 

தாயை அனுப்பிவிட்டு அதே மகிழ்ச்சியுடன் அபிராமைப் பார்க்க அறைக்கு சென்றவனைக் கண்டு முகம் கொதித்தான் அவன். 

 

“உன்னை யாருடா இங்க என் வீட்டுக்குள்ள விட்டது? கதவைத் திறந்து போட்டு வச்சிருந்தாங்களா? கெட் அவுட்” என்றான் கடுமையான குரலில். 

 

அதைக் கேட்டு அருகில் நின்றிருந்த ராதிகா திகைக்க, பக்கத்தில் மறைவாக பேசுவது அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டிருந்த காவ்யாவின் முகத்தில் மலர்ச்சி. 

 

மங்கையை விடுதிக்கு விரட்டியாச்சு. கூடவே பதிலுக்கு பதில் பேசி கடுப்பைக் கிளப்பும் செம்பருத்தியும் சென்றுவிட்டாள். புதிதாக வந்த ராதிகா அபிராமின் படுக்கையை விட்டு இம்மி கூட நகர்வதில்லை. அபியோ அவளது கையைப் பிடித்துக் கொண்டே தூங்குகிறான். இந்தக் கூத்தெல்லாம் எனக்குத் தெரியாதென்றா நினைக்கிறது இந்தக் குடும்பம். 

 

அவளது மனக்கண்ணில் ஸ்விம்மிங் பூலில் நீச்சலடித்துவிட்டு வெயிலில் காய்ந்து கொண்டிருந்த அபிராம் தெரிந்தான். அவனது கால் விரல்களை வருடியவாறு சொன்னாள் காவ்யா. 

 

“அபிராம், நான் கூட மார்டர்ன் பொண்ணுதான். ராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை படப் போற பெண்கள் உடை ட்ரடிஷனலா இருக்கணும்னு அப்பா சொன்னதாலதான் இந்த ஸ்டைல். மத்தபடி உன் மனசுப்படி நடந்துப்பேன். இப்ப ஸ்விம் சூட்டில் இல்லையா அது மாதிரி”

 

கால்களை வலுக்கட்டாயமாக விடுவித்துக் கொண்ட அபிராம் சொன்னான் “நோ காவ்யா… சின்ன வயசில் இருந்து கசின்னு சொல்லி சேர்ந்து வளந்தோம். உன்னைக் கல்யாணம் பண்ணிக்க துளி கூட ஐடியா இல்லை” இலகுவாக அவளை விலகிச் சென்றுவிட்டான். 

 

‘என்னை உதாசீனப்படுத்தின எல்லாருக்கும் பதில் மரியாதை கண்டிப்பா கிடைக்கும். என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு எட்டி உதைச்ச அபிராம் அந்தக் காலே நடக்க முடியாம கிடக்கான். 

 

அவினாஷ் என்னை அந்த வேலைக்காரி முன்னாடி எப்படி அவமானப் படுத்தின? உன்னை அபிராம் வீட்டுல எல்லார் முன்னாடியும் அவமானப் படுத்துறான். செம்பருத்தி துரோகியே… இருக்குடி உனக்கு உன் முடியைப் பிடிச்சு தர தரன்னு இழுத்துட்டுப் போக உன் அத்தைக்காரி வந்துகிட்டே இருக்கா’ வில்லத்தனமான புன்னகை அவளது இதழ்களில். 

 

2 thoughts on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 24”

Leave a Reply to helenjesu Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 19தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 19

அத்தியாயம் – 19 மாலை நேரக் கல்லூரியில் செம்பருத்தியுடன் பயிலும் ஜோஸி அவளிடம் ரகசியமாய் கேட்டாள். “உண்மையை சொல்லு அந்த குக் ராஜாவோட கீப் தானே?” மேனேஜர் – டைப்பிஸ்ட், எம்டி – செக்ரெட்டரி, டாக்டர்-நர்ஸ், எஜமானன்-வேலைக்காரி  என்று வரும் செய்திகளைப் 

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 11தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 11

அத்தியாயம் – 11   இப்போது என்ன செய்வதென்றே செம்பருத்திக்கு ஒன்றும் புரியவில்லை. கெட் அவுட் என்றால் இப்போதைக்கு அறையை விட்டு கெட் அவுட்டா? இல்லை நிரந்தரமாக வீட்டை விட்டே கெட் அவுட்டா?    யாரிடம் கேட்கலாம்? இவளை இந்த வேலைக்குச்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 37தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 37

அத்தியாயம் – 37   அபிராம் வளர்ந்தான். அவன் வளர வளர நாகேந்திரனுக்கும் மந்தாகினிக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே சென்றது.    அதற்குக் காரணம் மங்கை என்று மந்தாகினி சொன்னாலும் மந்தாகினியின் ஆசை என்று அடித்து சொல்வார் நாகேந்திரன்.    சிலரை