Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 29’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 29’

அத்தியாயம் – 29

ஸாம்அபிஷேக் – அருண்யா 

 

அதிகாலை ஐந்து மணிக்கே அந்த நட்சத்திர விடுதியை அடைந்து விட்டார்கள். காரிலேயே இருவரும் நன்கு தூங்கியிருக்க மலையகத்தின் கூதல் காற்று சிறு குளிரோடு உடம்பை ஊடுருவிச் செல்ல காரை விட்டு இறங்கி மெதுவாய் உடலை சிலிர்த்து கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டி அந்த இனிய அனுபவத்தை சுகமாய் ரசித்தாள் அருண்யா. 

 

 

அவள் மலையகம் வருவது இதுதான் முதல் முறை. பள்ளிக்கூட காலங்களில் யுத்த நடவடிக்கைகளால் வர முடியவில்லை. பல்கலைக்கழக காலங்களில் வார இறுதி விடுமுறைகளிலும் படிப்பு படிப்பு என்று திரிந்ததும் கிடைக்கும் சில ஓய்வு நாட்களில் வீட்டிற்கும் கொழும்பில் இருந்து சென்று விடுவதால் அவளுக்கு இந்த கண்டி மாநகரைக் காணும் பாக்கியம் கிடைக்காமலே போய் விட்டது. 

 

 

அவளின் இந்த பத்து வருட சிறை வாசத்தின் போதும் கூட சந்திரஹாசனும் கவியும் எத்தனையோ தடவைகள் கேட்டிருப்பார்கள் ஒரு மாறுதலுக்காகச் சென்று வருவோம். அருண்யாக்கு அங்கே பிடித்திருந்தால் அங்கேயே தங்குவோம் என்று. ஆனால் இவள் தான் யார் பேச்சையும் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் இருக்கவில்லையே.

 

 

இப்போது ஸாமின் நண்பர்களால் மறுக்க முடியாமல் அமைந்து விட்ட இனிய வாய்ப்பாக இந்த பயணம். உண்மையில் உள்ளுக்குள் ஆசையோடு தான் புறப்பட்டு வந்திருந்தாள். 

 

 

கொழுந்து கொய்வோமே – தேயிலை 

கொழுந்து கொய்வோமே”

 

 

பள்ளிக்கூடத்தில் இந்த நாட்டார் பாடலைப் படித்ததிலிருந்தும், கங்காணி கதைகள் கேட்டதிலிருந்தும், சமூகக்கல்வி, வரலாற்று பாடப்புத்தகங்களில் இருந்து தலதா மாளிகையைப் பற்றி அறிந்ததிலிருந்தும் கண்டிக்கு வர வேண்டும் என்பது அவளின் நெடு நாளைய கனவு. 

 

 

உடலைத் தாக்கிய மெல்லிய குளிரோடு மனமும் லேசானது போல் ஒரு உணர்வு. கனவுகள் நிறைவேறும் போது மனசு மகிழ்ச்சியில் இலேசாவது இயற்கை தானே.

 

 

ட்ரைவர் காரைப் பார்க் பண்ண செல்ல ஸாம் தங்களின் பெட்டிகளை எடுத்துக் கொண்டு வரவேற்பறையில் சென்று பெயர் விபரங்களை கூறி தங்களுக்காக முன் பதிவு செய்திருந்த அறையை பற்றி விசாரித்தான்.

 

 

ஒரு பணியாளர் அவர்களின் பயணப் பெட்டிகளைச் சுமந்து கொண்டு அவர்கள் அறைக்கு வழிகாட்ட இவர்கள் பின் தொடர்ந்து அறையை அடைந்தவர்கள் கண்கள் சொக்கிப் போய் விட்டன. 

 

 

பணியாளர் பெட்டிகளை வைத்து விட்டு போய் விட்டதும் சிறு குழந்தையாக ஓடிப் போய் நட்ட நடுவிலே போட்டிருந்த கட்டிலின் நடுவில் தொப்பென குறுக்கே விழுந்தாள் அருண்யா. அவளின் சிறுபிள்ளை தனத்தை ரசித்தவாறே

 

 

அறை சூப்பர் ஆக இருக்கு என்ன அருண்? நல்ல ஹோட்டலாகத் தான் புக் பண்ணிருக்காங்க…”

 

 

கூறியபடியே தாங்கள் வந்து சேர்ந்து விட்டதையும் நன்றியும் தெரிவித்து ஒரு குறுஞ்செய்தியை நண்பர்களுக்கும் கவிக்கும் தட்டி விட்டு அங்கிருந்த இரட்டை ஸோபாவில் சாய்ந்தான் ஸாம். 

 

 

இண்டைக்கு என்ன பிளான் ஸேர்? எங்க எங்க போறம்? எத்தினை மணிக்கு ரெடியாகிற?”

 

 

ஆர்வமேயற்று கடனே என்று வந்தவள் இப்போது இத்தனை ஆர்வமாய் விசாரித்ததைப் பார்த்து இவன் முகத்தில் புன்முறுவல். அவன் சிறுநகை பார்த்து அவன் எண்ணங்களை புரிந்து கொண்டவள்

 

 

அது வந்து… இங்க வர முதல் விருப்பம் இல்லாமல் இருந்துச்சு… இங்க வந்து இந்தப் பச்சைப் பசேல் என்ற இடத்தை பார்த்ததும் வெளில சுத்த ஆசை வந்திட்டு…”

 

 

தனது மனமாற்றத்திற்கான காரணத்திற்கு தானே தன்னிலை விளக்கம் கூறினாள்.

 

 

அவள் விளக்கம் கேட்டவுடன் மேலும் புன்னகை மலர ஆனால் கொஞ்சம் சீரியசான முக பாவத்தோடு

 

 

அப்பிடித் தான் அருண் எல்லா விசயமும்… இறங்கிப் பாக்காமல் பூதம் இருக்கு… பூதம் இருக்கு…. என்றால் சரி வராது… துணிந்து இறங்கணும் முதல்…”

 

 

அவன் எதைப் பற்றி சொல்கிறான் என்று புரிந்தும் புரியாத பாவனையோடு

 

 

கொஞ்ச நேரம் தூங்கிட்டு அப்புறமாக வெளில போவமா..? காரில கை காலை சரியாக நீட்ட முடியாமல் கன நேரம் இருந்தது. அலுப்பா இருக்கு ஸேர்…”

 

 

எதுவானாலும் உங்கள் ஆசைப்படியே மகாராணி… உங்கள் உத்தரவுக்காக அடியேன் காத்திருக்கிறேன்….”

 

 

ஒரு சலாமடித்து ஸாம் கூறவும் பக்கென்று சிரித்தவள்

வந்த அலுப்புக்கு கையக் காலை நீட்டிப் படுக்காமல் உதில படுக்கப் போறியளா ஸேர்? அதுவும் இந்த சூப்பர் மெத்தையை விட்டிட்டு… நான் ஒண்டும் உங்களைக் கடிச்சு விழுங்கிட மாட்டன்… வாங்கோ… வந்து படுங்கோ… இது இந்த மகாராணியின் கட்டளை…”

 

 

கூறி விட்டு கட்டிலில் நேராக ஒரு புறமாகப் படுத்தவளை வாஞ்சையுடன் பார்த்தான். 

 

 

நல்ல காலம் மகாராணி இன்னும் பாகுபலி பாக்கேல்ல போல… இல்லாட்டில் அந்த டயலொக் எல்லாம் எடுத்து விட்டிருப்பா…’

 

 

மனசுக்குள் நினைத்தவன் சிரிப்பில் முழு நம்பிக்கை இவள் பழைய அருண்யா ஆவாளென.

 

 

அவனுக்கு முதுகு காட்டித் தூங்கும் அவளையே பார்த்து இருந்தவன் எப்போது தூங்கினானோ தெரியாது. எழுந்த போது மணி பன்னிரண்டு. அருண்யா குளியலறையில் குளிக்கும் சத்தம் கேட்டது. அவள் வரட்டும் என்று கட்டிலிலேயே புரண்டு கொண்டிருந்தான். அரைக் கண் திறந்து பார்த்தவன், அங்கே கண்ட காட்சியில் அப்படியே இறுகக் கண்களை மூடி நித்திரை போலவே படுத்து விட்டான்.

 

 

தனது வீட்டு நினைப்பிலே மாற்றுடை கொண்டு போகாமல் குளிக்க சென்று விட்டு மாருக்கு குறுக்காக துவாலையைக் கட்டிக் கொண்டு இவன் இன்னும் நித்திரை தான் என்ற நினைப்பில் பெட்டியைத் திறந்து தனது உடைகளை தேடிக் கொண்டிருந்தவள் ஒரு உடையை எடுத்து அணிந்து ஈரத் தலையைத் துவட்ட ஆரம்பிக்கவும் தான் இவன் கண்களைத் திறந்தான்.

 

 

அவனுக்கு பயம்… எங்கே தான் அவளை அரைகுறையாக பார்த்து விட்டோம் என்று தெரிந்தால் திரும்பவும் நத்தையாய் தன்னை ஓட்டுக்குள் சுருக்கிக் கொள்வாளோ என்று.  கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தலை நீட்டத் தொடங்கியிருக்கும் அவள் குணங்களை அடியோடு அறுத்து விட அவன் என்ன முட்டாளா?

 

 

குட் மோர்னிங் ஸேர்…. நீங்களும் போய்க் குளிச்சிட்டு வாங்கோ… இப்ப தான் ப்ரெஷ்ஷா இருக்கு…”

 

 

அவன் எழுந்ததைப் பார்த்ததும் மலர்ந்த முகமாக கூறியவளைப் பார்த்து இவன் முகத்திலும் மென்னகை.

 

 

குட் மோர்னிங் அருண்… ஓகே மகாராணி… நீங்க ரெடியாகுங்கோ… நானும் குளிச்சிட்டு வாறன்…”

 

 

அவனும் வர இருவர் வயிற்றையும் பசி என்ற உணர்வு அடிவயிற்றைப் பிறாண்ட முதலில் கீழே சென்று மதிய உணவை முடித்துக் கொண்டார்கள். 

 

 

முதலில் தலதா மாளிகை செல்ல வேண்டும் என்ற அவள் ஆசைப்படி அங்கே சென்றார்கள். 

 

 

புத்த பெருமானின் புனித தந்த தாது போற்றிப் பாதுகாக்கப்படும் பௌத்த மக்களின் பெரு மதிப்பிற்குரிய புனித தலம் அது. 

 

 

பௌத்தர்கள் விகாரைக்கு எப்போதும் வெள்ளை உடையணிந்து தான் செல்வார்கள். அது தெரிந்திருந்த தம்பதியினரும் வெள்ளை ஆடையே உடுத்தியிருந்தனர். அருண்யா வெள்ளை டொப்பும், ஜீன்ஸ்சும் அணிந்து வெள்ளை ஷாலால் உடலைப் போர்த்திருக்க ஸாமும் முழுக்கை வெள்ளை ரீசேர்ட் அணிந்து டெனிம் ஜீன்ஸ் அணிந்திருந்தான். ஒரே வண்ண உடையில் அவர்கள் ஜோடிப் பொருத்தம் அவ்வளவு அழகாய் இருந்தது. இன்னாருக்கு இன்னார் தான் என்று ஆண்டவன் எழுதிய எழுத்தை யாரால் மாற்ற முடியும்…

 

 

அந்த மூன்றடுக்கு வெள்ளை மாளிகை வாயிலில் வைத்து விற்றுக் கொண்டிருந்த வெண் தாமரை மலர்களில் சிலவற்றை வாங்கிச் சென்று உள்ளே சாந்த சொரூபியாக வீற்றிருந்த புத்த பெருமானின் முன் வைத்து வணங்கி விட்டு அங்கேயே இணைந்திருந்த கண்டிய இராசதானி மன்னர்களின் உடமைகள் பேணிப் பாதுகாக்கப்பட்ட அருங்காட்சியகத்தையும் பார்த்து வியந்து விட்டு வெளியே வந்தவர்கள் அங்கே பெரஹராக் காலங்களில் வீதி உலா வரும் யானைகளில் ஒன்று வெளியே கட்டி வைக்கப் பட்டிருந்ததைக் கண்டதும்

 

 

ஐ… யானை…”

 

 

கூவிக் கொண்டே அந்த மிகப் பெரிய உருவத்தை நோக்கி ஓடியது ஸாமோடு கூட வந்த வானரம். ஸாமோ பயந்து நடுங்கி விட்டான். இவள் மிக அருகில் செல்லவும் அது ஏதாவது கோபப்பட்டு செய்து விட்டாலும் என்று. 

 

 

ஹேய் அருண்… ப்ளீஸ் கிட்டப் போகாதே… அது தூக்கி எறிஞ்சாலும்… ஏதோ காணாததைக் கண்டது மாதிரி ஓடுறாய்…”

 

 

கடிந்து கொண்டே அவள் பின்னால் ஓடினவன் அவளைப் பிடித்து இழுத்து நிறுத்தினான். 

 

 

அது ஒண்டும் செய்யாது ஸேர்… உண்மையிலயே இண்டைக்குத் தான் முதன்முதலாக யானையை நேரில பாக்கிறன் தெரியுமா? தெஹிவளை சூவில யானை டான்ஸ் பார்க்க வேணும் என்று எத்தினையோ நாள் பிளான் பண்ணினது. கிளாஸ் அது இதென்று பார்க்க முடியாமலேயே போச்சு… எவ்வளவு பெருசு என்ன சேர்?”

 

 

குழந்தையாய் குதூகலித்தவளைத் திட்ட முடியாமல் தன் கோபம், பயத்தை அடக்கி வாயைக் காது வரை இழுத்து இளித்து வைத்தான். 

 

 

இவள் குதூகலத்தைப் பார்த்த யானைப் பாகன் யானையில் ஏறிப் புகைப்படம் எடுக்கப் போகிறாயா என்று கேட்க இந்த அரிய வாய்ப்பை விடுவாளா என்ன? அவள் ஸாமைப் பார்க்க அவனும் வேறு வழி என்பது போல் உதட்டைப் பிதுக்க அதையே ஸாமின் சம்மதமாக ஏற்று பாகனின் வழிகாட்டுதலோடு மண்டியிட்டு அமர்ந்த அந்த பெரிய உருப்படி மேல் ஏறி அமர்ந்தே விட்டாள்.

 

 

இமயமலைச் சிகரத்தையே தொட்டு விட்ட பூரிப்போடு ஜான்சி ராணியின் கம்பீரத்தோடு அமர்ந்திருந்தவளை தனது ஐபோனில் கிளுக்கிக் கொண்டான். 

 

 

நீங்க ஏறி எடுக்கேலையா சேர்…?” பாசமாகக் கேட்டவளை முறைப்பாய் பார்த்தான் ஸாம்.

 

 

ஐயோ சாமி… ஆளை விட்டால் போதும்… இந்த வீர விளையாட்டையெல்லாம் உன்னோடேயே வைத்துக் கொள்…”

 

 

சிரித்து கொண்டே மாலையாகி விட அடுத்து என்ன செய்வது என்று யோசித்தார்கள். பேராதனை தாவரவியல் பூங்காவிற்குச் செல்வோமா என்று கேட்டவளை மறுத்து விட்டான். 

 

 

இப்ப போனால் சுற்றிப் பார்க்க நேரம் காணாது… அங்க நாளைக்குப் போகலாம்.. இப்ப சொப்பிங் போவோம்… உன்னட்ட வேற ஸ்வெட்டரோ ஜக்கெட்டோ இல்லாமல் நடுங்கிட்டு இருக்கிறாய்…”

 

 

சரி… ஓகே ஸேர்… ஆனால் முதல்ல ஏதாவது சாப்பிடுவம்… எனக்குப் பசிக்குது…”

 

 

அவள் பசி என்றதும் துடித்தவன் எதிரிலே கண்ணில் பட்ட ஒரு பெரிய ரெஸ்டோரன்ற் ஒன்றுக்குள் நுழைந்தான் அவளையும் கூட்டிக்கொண்டு. 

 

 

மெனு கார்ட்டைப் பார்த்து என்ன வேணும் என்று கேட்க இவளுக்கு அந்த அட்டையில் இருந்த ஐஸ்கிரீம் கண்ணில் பட்டு விட,

 

 

எனக்கு ப்ளூபெரி ஐஸ்கிரீம்…”

 

 

அருண்… பசிக்குது என்று சொன்னீ… ஐஸ்கிரீம விட்டிட்டு சாப்பிட என்ன வேணும் என்று சொல்லு முதல்ல…” 

 

 

என்ன ஆள் ஸேர் நீங்க… லண்டனில இருந்து வந்து இருக்கிறீங்க… கட்டின பொண்டாட்டிக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கித் தர கணக்கு பார்க்கிறியளே…”

 

 

ஆஹா… மகாராணிக்கு கட்டின புருஷன் என்ற ஞாபகம் இருக்குப் போல…” 

 

 

சொல்லிவிட்டு அவசரமாக நாக்கைக் கடித்தவாறே அவள் முகத்தைப் பார்த்தான். ஆனாலும் அவள் எந்த வித்தியாசமும் காட்டாமல் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்வதைப் பார்த்ததும் தான் இவன் நிம்மதியாக மூச்சு விட்டான் என்றால் மிகையல்ல. 

 

 

இந்த செயினையும் மோதிரத்தையும் பார்க்க ஞாபகம் வருதே… நான் என்ன செய்ய…?”

 

 

சரி… சரி… இப்ப சாப்பிட ஏதும் சொல்லு முதல்ல…”

 

 

இந்த ஐஸ்கிரீம் போர்ட் கண்ணில பட்டதும் தானே எனக்கு பசியே எடுத்தது ஸேர்…”

 

 

தாங்க முடியாமல் உண்மையைச் சொல்லி விட்டு அசடு வழிந்தவளைப் பார்த்து நகைத்துக் கொண்டே இருவருக்கும் சமோசாவும் ஐஸ்கிரீமும் ஓர்டர் செய்தான். 

 

 

தலதா மாளிகையில் பார்த்த விடயங்களைப் பற்றிப் பேசிச் சிலாகித்தவாறே சாப்பிட்டுக் குடித்து முடித்து விட்டு நோ லிமிட்டுக்கும் ஃபசன் பக்குக்கும் (பிரபல ஆடைக் கடைகள்) போனார்கள். 

 

 

அருண்யாக்கு தானே சில உடைகளைத் தெரிவு செய்தான். மெல்லிய லெதர் ஜக்கெட் ஒன்றும் மறக்காமல் எடுத்துக் கொள்ள

 

 

எதுக்கு ஸேர்… எனக்கு இப்ப அள்ளிக் குவிக்கிறியள்…? நான் எங்க போகப் போறன்…?”

 

 

அதெல்லாம் லண்டனில வந்து போடலாம்…”

 

 

அந்த நேரத்துக்கு வாயில் வந்ததைத் சொல்லி அவளை அடக்கியவன் அவள் சில்க் சேலைகள் பக்கம் நிற்பதைப் பார்த்து விட்டு,

 

 

சாறி வேணுமா அருண்…? பிடிச்சதாப் பார்த்து எடன்… என்ன யோசினை வேண்டிக் கிடக்கு…?”

 

 

இல்ல… நாங்க இங்க வந்த ஞாபகமாக கவியக்காக்கு எடுத்துக்கொண்டு போவம் என்று பார்க்கிறன்…”

 

 

அதுக்கென்ன… கவிக்கு பிடிச்ச கலர்ல நாலைஞ்சு பார்த்து எடும்…”

 

 

அருணியும் மகிழ்ச்சியாக மூன்று சேலைகளை கவிக்கு எடுத்துக் கொள்ள கை நிறைய பைகளோடு மகிழ்ச்சியாக ஹோட்டல் அறைக்குத் திரும்பினார்கள். 

 

 

அங்கேயே இரவு உணவை முடித்து விட்டு அறைக்குத் திரும்பியவர்களுக்கு அறையை பார்த்ததும் என்ன செய்வது என்று புரியவில்லை.

 

 

அங்கே வெண்மை உறை விரிக்கப்பட்டிருந்த கட்டிலின் மேலே துவாலையால் செய்யப்பட்ட இரு வெள்ளை அன்னங்கள் சிவப்பு ரோஜா இதழ்களால் வரையப்பட்டிருந்த ஒரு இதயத்தின் இரு பக்கமும் நின்றன. ஆங்காங்கே தூவப்பட்ட ரோஜா இதழ்களும் எரிந்து கொண்டிருந்த மெழுகுதிரியின் இனிய சுகந்தமும் சொர்க்கலோகம் வந்துவிட்ட உணர்வைக் கொடுத்தன.

 

 

அருண்யா கல்லாய் சமைந்திருக்க அந்த ரோஜா இதழ்களைப் பொறுக்கி அங்கிருந்த மேசையில் போட்டு விட்டு

 

 

நமக்குத் தான் இதுக்கெல்லாம் கொடுப்பினை இல்லையே”

 

 

என்றவாறு சோகப் பெருமூச்சொன்றையும் நீளமாக வெளியேற்றிக் கொண்டு அருண்யாவைப் பார்த்தான். ஆனால் அவள் முகத்தில் இருந்த இறுக்கம் அவன் மனதைக் கலவரப் படுத்த தான் அவசரப்பட்டு வாயை விட்ட தன் மடத்தனம் புரிந்து நிலைமையை சமாளிக்க முயன்றான். 

 

 

மதியம் வரை தூங்கியிருந்த படியால் தூக்கமும் வரவில்லை. வெளியேயும் சுற்ற முடியாமல் குளிர் வாட்டியது. அதோடு இரவில் இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் காலைக் கவ்வினாலும் தெரியாமல் போய்விடும். 

 

 

என்ன செய்வது என்று யோசித்தவர்கள் அறையில் இருந்த தொலைக்காட்சியில் காற்றுவெளியிடை போட்டுப் பார்த்து குறை, நிறைகள் அலசி ஆராயத் தொடங்கினார்கள். 

 

 

பாவம் கார்த்தி. மணிரத்னம் ரசிகையான அருணியால் அவரைக் குறை கூற முடியவில்லை. அதனால் கார்த்தி தான் சரியாக நடிக்கவில்லை என்று அவனைப் போட்டு ஒரு வாங்கு வாங்கிக் கழுவி ஊத்திக் கொண்டிருந்தாள். 

 

 

அவன் திருட்டு முழியைப் பாருங்கோவன் ஸேர்… இதெல்லாம் ரொமான்ஸ் பார்வையா… இவனெல்லாம் அலைபாயுதே நூறு தரம் பார்த்திட்டு நடிக்க வந்திருக்க வேணும்… இல்லாட்டில் அரவிந்த சுவாமிட்ட நடிப்புப் பழகப் போயிருக்கோணும்… மணிரத்னத்திட படத்தில நடிக்க எல்லாம் ஏன் ஆசை வந்திச்சு இவனுக்கு… இவனுக்கு சிறுத்தை மாதிரி கள்ளன் கரெக்டர்ஸ் தான் சரி…”

 

 

அவள் சளசள பேச்சை ரசித்தபடி சில இடங்களில் அவளுக்கு ஜால்ரா போட்டும் சில இடங்களில் எதிர்த்துக் கதைத்து அவள் கோபத்தை இரசித்துக் கொண்டும் அந்த இரண்டரை மணி நேரங்கள் அற்புதமாக கழிந்தது. 

 

 

படம் முடிய குட்நைட் சொல்லி இருவரும் கண்ணை மூடித் தூங்க முனைந்தார்கள். காலையில் அலுப்பில் படுக்கும் போது அருகருகே படுத்திருந்தது களைப்பில் உணர்ந்து விடாமல் போயிருக்க இப்போது கண் மூடியிருந்தாலும் அருகே கேட்டுக் கொண்டிருந்த அடுத்தவரின் சுவாச ஒலி கேட்டு இருவர் இதயமும் படபடத்தது. 

 

 

வெவ்வேறு சிந்தனைகளோடு மூடியிருந்த கண்களில் சிறிது நேரம் கழித்து தூக்கம் தன்பாட்டில் அவர்களைத் தன் வசப்படுத்தியது.

 

 

இல்லறத்தில் இணையுமா இந்த ஜோடி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 4’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 4’

அத்தியாயம் – 04 திட்டுவது ஏனோ? சில பல மாதங்கள் உருண்டோடின. எல்லோர் வாழ்க்கைகளிலும் பல மாற்றங்களும் நடந்தேறின. இரு பாடசாலைகளதும் கட்டடங்கள் சில இன்னும் இராணுவத்தினர் வசம் இருந்தாலும் சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு சோதனைகளின்றி மாணவர்கள் நேரடியாக பாடசாலைக்குச் செல்ல

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 26’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 26’

அத்தியாயம் – 26 நல்ல முடிவாய் எடுப்பானா ஸாம்?     அடர்ந்து பரந்து நிழல் பரப்பியிருந்த பெரிய சவுக்கு மரத்தின் கீழே ஜமுக்காளம் பரப்பி உணவுப் பொருட்களைக் கடை பரப்பி சுதனின் கர்ப்பிணி மனைவி காவல் இருக்க மீதி அனைவரும்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 6’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 6’

அத்தியாயம் – 06 கவி சந்தித்தாளா ஸாமை?    கவின்யாவுக்கு பல்கலைக்கழக விரிவுரைகள் ஆரம்பமாகியது. பல்கலைக் கழக வாழ்விலே முதலாவது நாள்.      வெண்ணிற பருத்தி ஷல்வாரில் இடப் பக்கத் தோளில் ஷோலை நீள வாக்கில் போட்டிருந்தாள். இடது கையில்