Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 12

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 12

ஹலோ பங்காரம்ஸ்,

கதையைப் பற்றிய உங்களது கருத்துக்களுக்கும் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கும் கோடான கோடி நன்றிகள். நீங்கள் சொன்னபடியே செம்பருத்தி உங்களது வாழ்க்கையிலும் ஏதோ ஓரிடத்தில் பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்துவாள் என்று நம்புகிறேன்.

சாரிப்பா, சென்ற வாரம் அலுவலக வேலைல பிஸி. அப்டேட் இரண்டு நாட்கள் தாமதமாயிருச்சு. அதை ஈடுகட்டும் விதமா இன்று பெரிய பதிவு. செம்பருத்தியின் கூடவே பயணித்து அவள் கற்றுக் கொண்டதை இன்று நாமும் அறிந்து  கொள்வோம். படிச்சுட்டு சைட்டில் உங்க கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் நானும் உங்களுக்கு இந்தக் கதையின் போக்கு எந்தளவுக்குப் பிடிச்சிருக்குன்னு தெரிந்து கொள்வேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா

அத்தியாயம் – 12

 

“என்னையா?” என்று பாலாவிடம் கேட்டு உறுதி செய்து கொண்டாள் செம்பருத்தி.  

 

அய்யாவின் கோபம் இவ்வளவு சீக்கிரமா மறைஞ்சுடுமா என்ன? அவளுக்கு நம்பிக்கையில்லை. அவன் மிகவும் வெறுக்கும் பெரியவீட்டில் இருந்துதான் இவளை வேலைக்குத் தேர்ந்தெடுத்தார்கள் போலும். அப்படியென்றால் வக்கீல், சுகுமாரன் முக்கியமாய் காவ்யா மூவரும் பெரிய வீட்டைச் சேர்ந்தவர்களோ? 

வேலையாட்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது பெரிய வீட்டைச் சேர்ந்தவர்களைப் பார்த்தால் இவனது உடல் நலனில் மிகவும் அக்கறை கொண்டவர்கள் போலவும், இவனது சுகவீனத்தைச் சரி செய்ய எந்தவித தீவிரமான நடவடிக்கைகளுக்கும் பயப்படாதவர்களாகவும் தோன்றுகிறார்கள். இவன் என்னடாவென்றால் அவர்கள் இவனைக் கொல்ல இவள் வந்திருப்பதாக முடிவே செய்துவிட்டான். 

 

இப்போது அவளை அழைத்ததற்குக் காரணம்  திட்டுறதை முறைப்படி நிக்க வச்சு அர்ச்சனை ஆராதனை எல்லாம் செய்வானாயிருக்கும். 

 

நடக்கும்போதே தபால்களை ஒருவர் தர, அதனைப் பெற்றுக் கொண்டான் பாலா. பின்னர் அவளை அழைத்துச் சென்று ஒரு தேக்கு மர அலமாரியைக் காண்பித்துத் தந்தான். அதில் ஒரு சிறிய சாவியை வைத்துத் திறந்து அதனுள் இருந்த வேலைப்பாடுகள் அமைத்த சிறு மரப்பெட்டியைத் திறந்தான். 

 

அந்தப் பெட்டியைத் திறந்தவுடன் செம்பருத்தியின் முகம் திகிலால் உறைந்தது. ஏனென்றால் அதனுள் குறுவாள்கள். அவற்றின் கைப்பிடிகள் ஒவ்வொன்றும் கண்ணைப் பறிக்கும் வேலைப்பாட்டுடன். யாளியின் தலை கொண்ட பிடி ஒன்று, பவளம் பொருத்திய கைப்பிடி, கவர்ச்சியான நடன மங்கை ஒருத்தி இப்படிப்  பல வடிவங்களில். அவற்றை சோதித்து இரண்டைத் தேர்ந்தெடுத்து செம்பருத்தியிடம் தந்தான். 

 

ஒன்று தங்க நிறத்தில் முழுவதுமாக வேலைப்பாடு செய்யப்பட்டது. மற்றொன்று மரத்தினால் செய்யப்பட்டது. அந்த வெண்ணை வெட்டும் கத்திகளைப் பார்த்தவள். 

 

“இது கூர்மையாவே இல்லையே” என்றாள்.

 

“ஆமாம்மா. கூர்மையானது எதுவும் அய்யா கைல தர வேண்டாம். அவர் லெட்டர் வெட்டக் கத்தி கேட்டாருன்னா இந்த மாதிரி கத்தியே தாங்க” என்றான். 

 

லெட்டர் வெட்டக் கத்தியா? அதுவும் இவ்வளவு வேலைப்பாட்டுடன். ஆள்காட்டி விரலை வச்சு சரக் சரக்குன்னு கிழிக்கிறதை  எவ்வளவு ப்ரமாண்டமா செய்றானுங்கப்பா? என்று வியந்தவண்ணம் பாலாவுடன் அலுவலக  சென்றாள். 

 

அறைக்குள் நுழைந்த போது அலுவலகத்தில் லக்சுரி நாற்காலி ஒன்றில் அய்யா அட்டகாசமான லைட் நிற ஒரு பருத்தி சட்டை ஒன்றில் இருந்தான். முழு நீள உடையை பாதியாய் மடித்து விட்டிருந்தார்கள். மிக சிறிய வகை காலர் ஒன்று குர்திகளில் இருப்பதைப் போல. குர்தி போலவே சட்டையிலும் முன்புறம் இரண்டு மூன்று பொத்தான்கள் மட்டுமே. அதில் கூட மேல் பட்டனைத் திறந்துவிட்டிருந்தான். வெள்ளை நிறத்தில் பேண்ட் கொஞ்சமாய் தெரிந்தது. 

 

உள்ளே நுழைந்ததும் “பாலா, இந்த ஹிப்பி காசுவல் காட்டன் ஷர்ட்டை இந்த வாரம் மார்னிங் வார்டுரோபில் எடுத்து வைக்க சொல்லிடு. ஈவினிங் இந்த வாரம் நம்ம வீட்டில் மூணு டின்னர் அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு. அதுக்கு மூணு டின்னர் சூட் ரெடி பண்ணிடு”

 

“யாரு கூடங்கய்யா”

 

“அந்த லிஸ்ட் எல்லாம் இவங்ககிட்ட சொல்லி அனுப்புறேன். மெனு பிளான் ஈவினிங் வேணும்”

 

“சரிங்கய்யா” என்று சொல்லிவிட்டு உத்தரவு வாங்கிக் கொண்டு நகர்ந்தான் பாலா. 

 

அவன் சென்றதும் “க்கும்…” என்று குரலை சரி செய்தவாறே தன் முன் வைத்திருந்த பழச்சாறை எடுத்து மிக மெதுவாக சிப் செய்ய ஆரம்பித்தான். அந்த உடல் மொழியைத் தனக்குப் பேச அளித்த அறிகுறியாக எடுத்துக் கொண்டு செம்பருத்தி ஆரம்பித்தாள். 

 

“சாரி சார். காலைல உங்க அனுமதி வாங்காம அறைக்குள்ள நுழைஞ்சதுக்கு. உங்க இருமல் கேட்டதும் உடனே தண்ணி தரணும்னு தோணுச்சே தவிர அனுமதி வாங்கணும்னு என் மூளைக்கு உரைக்கவே இல்லை. மன்னிச்சுடுங்க”

 

அவன் முகத்தில் இருந்து அவளால் எதையும் சொல்ல முடியவில்லை. பேனாவை எடுத்து பேப்பர்களில் என்னவோ கிறுக்கிக் கொண்டிருந்தான். 

 

“உன் பேர் என்ன சொன்ன?”

 

“செம்பருத்தி”

 

“சரி, இந்த கெஸ்ட் லிஸ்ட்டை பாலாகிட்ட கொடுத்துடு. அங்கிருக்குற டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் யூசர் நேம் பாஸ்வேர்ட் இதில் இருக்கு. மனப்பாடம் பண்ணிட்டு இந்தப் பேப்பரை உடனே கிழிச்சுப்போட்டுடு. அதில் என்னோட அப்பாயிண்ட்மெண்ட்ஸ் பத்தின விவரங்களைப் பார்த்து இனிமே பாலாகிட்ட கம்யூனிகேட் பண்ண வேண்டியது உன் பொறுப்புகளில் ஒண்ணு”

 

“சரிங்க சார்” 

 

“முதலில் லெட்டர்ஸ் எல்லாம் அரேஞ் பண்ணி தா”

 

அடுக்கித் தரணுமோ? எப்படி அடுக்கித் தருவது? சிறிய கவர்கள் பெரிய கவர்கள் எல்லாவற்றையும் அப்படியே  சைஸ் வாரியாகப் பிரித்து அடுக்கித் தந்தாள்.

 

அதைப் பார்த்ததும் அவனது எரிச்சல் ஆரம்பமானது. “இப்படியா அரேஞ் பண்ண சொன்னேன்? நான் படிக்கிறதுக்கு வசதியா பிரிச்சு அடுக்கித் தா”

 

ஓ கட் செய்து பிரித்து அடுக்கச் சொல்கிறானோ? அந்த குட்டி லெட்டர் பிரிக்கும் கத்தியை எடுத்து கவனமாகக் கிழிக்க ஆரம்பித்தாள். ஒரு நான்கைந்து கடிதங்களைப் பிரித்ததும் மற்ற கடிதங்களைப் பிரிக்கும் நேரத்தில் அவன் அதனைப் படித்துவிடலாமே என்ற ஓவர் சிந்தனையில் அடுக்கி அவனிடம் தர, 

 

“இதெல்லாம் ஏதோ நிகழ்ச்சிக்கு வந்த அழைப்புகள். இதை ஏன் இப்பவே தர? நீ முதலில் படிச்சுப் பாத்தியா?”

 

“சார், அதெல்லாம் உங்களுக்கு வந்த லெட்டர்ஸ். உங்களோட அனுமதி இல்லாம எப்படி பாக்குறது” திகைப்போடு கேட்டாள்.

 

“கடவுளே! இப்படி ஒருத்தியை அனுப்பி என் உயிரை வாங்குறியே. இந்த பாரு என் ரூமுக்குள்ள வர அனுமதி வாங்கணும். ஆனால் என்னோட ஆஃபீசியல் லெட்டரைப் பிரிச்சு படிச்சு தேவையானதை மட்டும் எனக்குப் படிக்கத் தரணும், பெர்சனல் லெட்டரைப் படிக்காம என் பார்வைக்குத் தரணும்”

 

“வந்து, ஒரு சந்தேகம்”

 

கடுப்போடு “சொல்லு”

 

“படிக்காம எப்படி கடிதம் அஃபிஷியலா இல்லை பெர்சனலான்னு கண்டு பிடிக்கிறது”

 

“ஹ்ம்… டூ அட்ரஸ்ல ராஜா, பேலஸ், வீரபாகு இந்த மாதிரி டிராமாத்தனமா இருந்தா அதெல்லாம் அபிஷியல். என் பேரில் வந்திருந்தா அது பெர்சனல் போதுமா?”

 

“போதாதே சார்”

 

“இன்னும் என்னம்மா உனக்கு சந்தேகம்?”

 

“உங்க பேரு சார். எல்லாரும் அய்யா, அய்யான்னு சொல்றாங்க உங்க பேரே எனக்குத் தெரியல”

 

“என்ன? என் பேரு கூட உனக்குத் தெரியாதா? இந்தக் கதையெல்லாம் வேற யார்கிட்டயாவது விடு”

 

“சத்தியமா சார். சொல்லவே இல்லை. கான்டராக்ட்ல கூட இல்லை. ஒரு நபர்ன்னு தான் சொன்னாங்க. நான் யாராவது பாட்டிம்மாவா இருக்கும்னு நினைச்சேன்”

 

“நானா… பாட்டிம்மாவா? ஆமா யாரு உன்னை இன்டெர்வியூ பண்ணது”

விவரங்களைச் சொன்னாள். 

 

“யாருன்னு சொன்ன?”

 

“வக்கீல் நம்பிராஜன், சுகுமாரன்னு ஒருத்தர் அப்பறம் காவியா மேடம்”

 

அவனது முகம் உணர்ச்சிகளைத் துடைத்தது போல மாறியது.  

 

அடுத்து என்ன சொல்லப் போகிறானோ சிலவினாடிகள் என்றெண்ணி நின்று கொண்டிருந்தவளைப் பார்த்து “இங்க என்ன சினிமாவா காமிக்கிறாங்க. போயி இந்த லிஸ்டை பாலா கிட்ட கொடுத்துட்டு எனக்கு மத்தியானம் லஞ்ச்க்கு ப்ரூட் சாலட், டீ கொடுத்து அனுப்பச் சொல்லு”

 

“இந்த லெட்டர்ஸ்… அடுக்கி வைக்கணுமே?”

 

“அதெல்லாம் நானே பாத்துக்குறேன். டெஸ்க்ல வச்சுட்டுப் போ. வெளில ஒருத்தன் வெயிட் பண்ணுவான். அவனை வர சொல்லிட்டுப் போ. நீ ஒரு மணி நேரம் கழிச்சு வந்தால் போதும்”

 

விட்டால் போதும் என்று அந்த இடத்தை விட்டு ஓடினாள் செம்பருத்தி. 

 

‘வேலைக்குப் போகும்போது யாரிடம், அவர் பெயர் என்ன என்ற விவரங்களை எல்லாம் கேட்டுக் கொண்டுதானே வந்திருக்க வேண்டும். சே என்ன ஒரு மடச்சி நான். விவரங்கள் தெரிந்திருந்தால் கூகிள் செய்து இவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டு வந்திருக்கலாமே? ஆனால் இந்த விவரங்களை முன் கூட்டியே தெரிந்துக் கொள்ளக் கூடாது என்றே என்னிடம் இருந்து மறைத்திருப்பார்களோ?’ அவளது மனதில் சந்தேகம் தோன்றி வலுப்பெற்றது. 

 

வேகம் வேகமாய் அவனது அறையிலிருந்து ஓடினாள்.

 

முதலில் சமயலறைக்கு செல்ல வேண்டும். சேச்சியிடம் அவனது மதிய மெனுவைத் தந்துவிட்டு, மாடியில் இருந்த சிறு ஸ்டாப் ரூமில் காத்திருந்த பாலாவிடம் லிஸ்டைத்  தர வேண்டும். 

 

சமையல் அறையில் சேச்சி, “ஏம்மா, இதை இன்டெர்காமில் சொல்லியிருக்கலாமே? ஏன்  ஓடி வந்த?” என்றார். 

 

‘சொல்லிருக்கலாமே’ என்று அப்போதுதான் தோன்றியது செம்பருத்திக்கு. 

 

“சரி வியர்க்க விறுவிறுக்க வந்திருக்க, சாலட் தரேன் சாப்பிடு” 

 

செம்பருத்திக்கும் அப்போதுதான் பசி உரைத்தது. 

 

வெள்ளரிக்காய், லெட்டூஸ் என்று காலையில் அவள் பேரைக் கண்டுபிடித்திருந்த முட்டைகோஸ் போன்றதொரு காய், கேரட், இனிப்பு மக்காச்சோளம் எல்லாவற்றையும் கலந்து, அரை எலுமிச்சம்பழம் பிழிந்து, அதன் மேல் தாராளமாக  தயிரும் சேர்த்துத் தந்திருந்தார். சாப்பிட சூப்பராக இருந்தது செம்பருத்திக்கு. 

 

“இந்த வீட்டில் இப்படித்தான் ஓடிக்கிட்டே இருக்கணும். பணக்கார வீட்டில் நம்ம சாப்பாட்டை நாமதான் பாத்துக்கணும். நீ சாப்பிடன்னு தனியா எல்லாம் நேரம் தர மாட்டாங்க. கிடைச்ச நேரத்தில் வயித்தைக் காயப்போடாம இந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டுக்கோ. ராத்திரி வேலை முடிஞ்சதும் எல்லாரும் கூடி அமர்ந்து சாப்பிட இங்க ஸ்டாப் கிட்சன் இருக்கு. வா காணிச்சுத் தரேன். சண்டே ஆனால் இங்க எல்லாரும் வந்துடுவோம். சூப்பரா இருக்கும்”

 

“சண்டேதான் எல்லாருக்கும் லீவா சேச்சி”

 

“அப்படி சொல்ல முடியாது. அய்யா வெளிய போகணும்னா அன்னைக்கு ட்ரைவர் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நான் காலைல சர்ச்சுக்கு சர்வீஸ்கு போறதால முன்னெல்லாம் அன்னைக்கு ஆப் எடுத்துக்குவேன். கோபன் மண்டே வரமாட்டான்”

 

“அப்ப சமையல்”

 

“இங்க சின்ன வீடு, அதனால லீவு எடுக்க முடியாது. அதனால காளியம்மாவை பாத்துக்கச் சொல்லிட்டு சர்ச்சுக்குப் போயிட்டு வந்துடுவேன். இந்த லீலாம்மா இல்லாம சர்வீஸ் தொடங்காதுன்னு பாதர் சொல்லிருக்காரு”

 

என்றபடி செம்பருத்தியை சமையலறைக்கு உள்ளடங்கி இருந்த அந்த சிறு அறைக்கு அழைத்துச் சென்றார். நல்ல விசாலமான அந்த அறையில் தாராளமாக வெளிச்சம் வரும்படி கண்ணாடி ஜன்னல்கள். அலமாரிகளில் பீங்கான் தட்டுகள், கப்புகள், நடுநாயகமாக ஒரு பத்து பன்னிரண்டு நபர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து உணவு உண்ண வசதியாகப் போடப்பட்டிருந்த ஒரு டைனிங் டேபிளும் சேர்களும். அறையின் மூலையில் பெரிய பிரிட்ஜ். 

 

“சாலட், பிரூட் ஜூஸ், பிரட் சாண்ட்விச் எல்லாம் இங்க நேரம் கிடைக்கும்போது செஞ்சு அடுக்கி வச்சிருப்போம். அதோ அந்த கூடைல பழங்கள் இருக்கும். யாருக்காவது பசிச்சா தயங்க வேண்டியதில்லை. இங்கேருந்து எடுத்து சாப்பிட்டுட்டுப்  போய்டலாம். நீயோ, கோபனோ, பாலாவோ சில சமயம் அய்யா கூட வெளிய போக வேண்டியது வரும். சாப்பாட்டு நேரம் தாண்டி காத்திருக்க வேண்டி இருக்கும். அதனால எப்ப கிளம்பினாலும் இதை எடுத்து பேக் பண்ணிட்டு கிளம்பு” என்று விளக்கினார். 

 

இன்டெர்க்காம் பற்றி அவர் சொன்னது நினைவிற்கு வர, 

 

“இன்டெர்க்காம் தொடர்பு கொள்ள நம்பர் பத்தி யாருகிட்ட கேக்குறது சேச்சி?”

 

“பாலா இதெல்லாம் சொல்லலையா? அவன்கிட்ட பிரிண்ட் அவுட் எடுத்து வாங்கி வச்சுக்கோ. எனக்கெல்லாம் அடிக்கடி மறந்துடுது”

 

“நான் கூட பாலாவைப் பாக்கணும். சார் மூணு டின்னர் பத்தித் தகவல் சொல்லச் சொன்னார்?”

 

“மூணு டின்னரா? இந்த வாரமா?”

 

“ஆமாம் சேச்சி. டின்னர் சூட் எல்லாம் ரெடி பண்ணனும்ல?” என்றாள் அறையில் நடந்த உரையாடலை மனதில் வைத்துக் கொண்டு. 

 

“அது சரிதான். எந்த மாதிரி நிகழ்ச்சிக்கு டின்னர்? வீட்டு டின்னரா இல்லை வெளியாவான்னு தெரிஞ்சாத்தானே அதுக்கு ஏத்த மாதிரி சூட்டை ரெடி பண்ணனும்”

 

வீட்டில் சாப்பிடக் கூட டின்னர் சூட்டா? திகைப்பாக இருந்தது செம்பருத்திக்கு. 

 

“பெரிய விருந்தாளியா இருக்காதுன்னு நினைக்கிறேன். பெரியவங்கன்னா பரிமாற ஆளுங்களை வேற ஹோட்டலில் இருந்து வர சொல்லணும்”

 

“நம்ம எல்லாரும் இருக்கோமே சேச்சி”

 

“ராஜ குடும்பத்து விருந்தினர் யாராவது வந்தா அவங்களுக்கு எப்படி பரிமாறுறதுன்னு ஒரு முறை இருக்குல்ல மோளே. தப்பா செஞ்சுறக் கூடாதே, இங்க வா… “ என்று அழைத்து ஒரு வாஷிங் மெஷின் மாதிரி ஒன்றின் கதவை மேலிருந்து திறந்தார். அதில் வரிசையாக பாத்திரங்கள். மேலடுக்கில் கப்புகள் மற்றும் கிளாசுகள், கிண்ணங்கள்,  கீழடுக்கில் தட்டுகள், கரண்டிகள் வைக்க சின்ன அறைகள் நிறைந்த சல்லடை டப்பா ஒன்று. ஓ! இதுதான் பாத்திரம் கழுவும் மெஷினா?

 

அதில் இருந்து பெருசும் சிறுசுமான ஸ்பூன்கள் சிலவற்றை எடுத்து செம்பருத்தியின் முன்பு போட்டார். 

 

“இதெல்லாம் என்ன வகை ஸ்பூன்னு சொல்லு பாக்கலாம்?”

 

ஒவ்வொன்றும் ஒவ்வொரு சைஸ், ஒவ்வொரு வடிவம். இதெல்லாம் எதற்கு? சுவீட் கடையில் அளவு பார்க்கப் பயன்படும் பதங்களை நினைவில் கொண்டு வந்து 

 

“இது சாம்பார் கரண்டி, இது தேக்கரண்டி, இது மேஜைக்கரண்டி மத்தது…. தெரியல சேச்சி” தோல்வியை ஒத்துக் கொண்டாள்.

 

அவளுக்குத் தெரிந்த கரண்டிகளை எல்லாம் தனியே எடுத்து வைத்துவிட்டு சேச்சி ஆரம்பித்தார் “கொஞ்சம் பெருசா இருக்கு பாரு, இதுதான் பரிமாறுற கரண்டி, இது சர்க்கரை போடுற சுகர் ஸ்பூன், இது டீஸ்பூன், இது காப்பி ஸ்பூன், இது சோடா ஸ்பூன், இது சூப் குடிக்கிறதுக்கான  ஸ்பூன், இது டெஸெர்ட் ஸ்பூன், இது ஐஸ்க்ரீம் ஸ்பூன்”

 

சாப்பிடுற ஸ்பூனில் இத்தனை வகையா என்று திகைத்து போய்விட்டாள். 

 

“அரை வேக்காடா காலைல இவங்க வேக வச்சு சாப்பிடுற முட்டைக்கு எக் ஸ்பூன் வேணும்”

 

“மொத்தம் எத்தனை வகை ஸ்பூன் இருக்கு சேச்சி?”

 

“45 வகைன்னு யாரோ சொன்னாங்க. இது தவிர ‘கத்தி’ கூட வெண்ணை தடவ, மீன் வெட்டி சாப்பிட இப்படி ஏகப்பட்டது இருக்கு. அவங்க சாப்பிட சாப்பிட உணவுக்குத் தகுந்த மாதிரி இதை எல்லாம் நைசா டின்னர் டேபிளில் வைக்கணும்”

 

மலைப்பாய் இருந்தது செம்பருத்திக்கு. தனது கை விரல்களைப் பெருமையாகப் பார்த்துக் கொண்டாள். ‘சபாஷ் கண்ணுங்களா 45 வகை ஸ்பூன்கள் செய்யுற வேலையை நீங்க அஞ்சு பேரும் சேந்து செஞ்சு கலக்குறீங்க’

 

“செம்பருத்தி, நான் போய் தம்பிக்கு பழரசம் ரெடி பண்றேன். நீ நம்ம வீட்டுல விருந்தா இருந்தா மெனு ஒண்ணு ரெடி பண்ணிடு”

 

மெனுவா? அவளா? ஒரு ஸ்பூனில் இத்தனை வகைகள் இருக்கும் என்றே இப்பொழுதுதான் அவளின் அறிவுக்கண் திறந்து வைக்கப் பட்டது அதற்குள் விருந்து மெனுவைத் தயாரிக்கச் சொல்வது என்ன ஒரு நம்பியார்த்தனம்?

 

கவலையாய் அமர்ந்தேவிட்டாள்.

 

‘செம்பருத்தி!!!!!….’ 

 

“யாரது”

 

‘உன் தலை’

 

“தலையா”

 

‘தலையே தான். உன் தலைக்குள்ள இருந்து மூளை பேசுறேன்’

 

“நீ இருக்கியா?”

 

‘செக்கு மாடாட்டம் ஒரே மாதிரி ஓடிட்டு இந்தியா.. எனக்கு வேலையே இல்லை. அதனால கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தேன்’

 

“சரிதான் எப்ப முழிச்ச?”

 

“வெளியூருக்கு ஒரு சாகசப் பயணமா கிளம்புனியே. அப்பெலிருந்து கொஞ்ச கொஞ்சமா முழுச்சுக்கிட்டிருந்தேன். இப்ப காலைல இருந்து பட்டினி போட்டுக் கொன்னியே அப்ப முழுசா முழிப்பு தட்டிருச்சு’

 

“நீ முழிச்சிருந்துமா இவ்வளவு திட்டு வாங்கினேன்”

 

‘நீ ஒரு உண்மையைப் புரிஞ்சுக்கணும் செம்பருத்தி. நான் ஒன்னும் கடவுள் கிடையாது எல்லா விஷயத்தையும் தெரிஞ்சிருக்க. 

என்னைப் பொருத்தவரை நீதான் என்னோட பயிற்சியாளர். நீ இதைக் கத்துக்கணும்னு முழு மனசோட உழைச்சா நான் அதுக்குத் தேவையான உதவிகளைச் செய்வேன். 

ஆனால் இத்தனை நாள் என்ன செஞ்ச? ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் உன்னைப் பத்தின கழிவிரக்கத்தில் சோகத்தை நினைச்சு நினைச்சு மூக்கை சிந்தின.அதனால  எனக்கும் வேலை ஈஸியாயிடுச்சு. 

நீ கொஞ்சம் மறந்தாலும் பாத்தியா உன் அத்தக்காரி செஞ்சதை? அம்மா அப்பா இல்லாம கஷ்டப்படுறியே, இந்த சொந்தக்காரங்க கூட உன்னைக் கழட்டி விட்டுட்டாங்க பாரு? இப்படி தூண்டி விட்டா போதும் நீ மறுபடியும் கவலைப்பட ஆரம்பிச்சுடுவ. நானும் இந்த சோக டிராமாவைப் பாக்காம தூங்க ஆரம்பிச்சுடுவேன்”

“இருபது மணி நேரம் இதையேவா செஞ்சிருக்கேன்? மிச்ச நாலு மணி நேரம்?”

 

“அது சாப்பிட, முழிச்சு உக்காந்து இந்தா இதை சாப்பிடு, அந்தா  அதை சாப்பிடுன்னு தூண்டி விடுவேன்”

 

“கீழ தள்ளி விட்டதுமில்லாம சாப்பிட வேற வச்சிருக்க? அதை ஏன் செஞ்ச?”

 

“நீ சோகம் தாங்காம செத்துப் போய்ட்டா? உணர்ச்சிகளின் பிடியில் அதிக நேரம் உன்னை வச்சிருந்தா ஒரு சமயத்தில் என்னால உன்னைக் கண்ட்ரோல் பண்ண முடியாது. அதனால சாப்பிடச் சொல்லி உயிர் வாழ ஆசையைத் தூண்டி விட்டேன்”

 

“நீ எங்கத்தை எங்களை ஏமாத்தினப்ப எங்க போயிருந்த?”

 

“செம்பருத்தி, பெரியவங்க இருக்கும்போது நாங்க ரெஸ்ட் பேசுக்குப் போயிடுவோம். நம்ம ஊரில் பெரியவங்க பலர் பிள்ளைங்க சொல்றதைக் காது கொடுத்துக் கேக்குறதில்லை. பிள்ளைகளை அவங்க சொல்றதைக் கேக்குற மெஷினா, கட்டளைக்குக் கீழ் படியிற ஒரு உயிரினமாத்தான் நடத்துறாங்க. அதனால எங்களுக்கு அங்க வேலையே இருக்காது. எப்ப பிள்ளைகள்  தனக்கான வாழ்க்கையை அமைச்சுக்க முதல் அடி எடுத்து வைக்கிறார்களோ அந்த விநாடியிலிருந்து அவங்களோட செல்ல நாய்க்குட்டியா மாறிடுவோம்”

 

“இனிமேலாவது எனக்கு ஹெல்ப் பண்ணுவியா?”

 

“கண்டிப்பா… ஆனால் எனக்கு சரியான தீனி போடணும். நல்லதைப் போட்டால் உன்னை நினைக்கவே முடியாத உயரத்துக்குக் கூட்டிட்டு போவேன். கெட்டதைப் போட்டா அதல பாதாளத்தில் தள்ளிடுவேன்”

 

‘இப்ப இந்த அய்யா பேரை எப்படி கண்டு பிடிக்கிறது? சேச்சி கிட்ட இல்ல பாலாகிட்ட கேட்கட்டுமா?’

 

‘பேரைக் கூடத்  தெரிஞ்சுக்காம வேலைக்கு வந்திருக்கிற உனக்கு அதுக்கப்பறம் மரியாதை இருக்காது’

 

‘வேற எப்படித்தான் தெரிஞ்சுக்கிறது?’

 

‘கூகிள் பண்ணி உங்கய்யா சொன்ன வீரபாகுவைத் தேடு. பழைய லெட்டர்களைப்  பாரு. அதில் பேரு கண்டுபிடிச்சுடலாம்’

 

சூப்பர் என்றவண்ணம் சேச்சியிடம் கேட்டுவிட்டு பழைய லெட்டர்கள் இருந்த இடத்திற்கு சென்றாள். பெறுநர் பேர்களை நோட் செய்து கொண்டே வந்தவள் ஓரிடத்தில் ஹுர்ரேய் என்று கத்திவிட்டாள். அய்யாவோட பேரு அபிராமா?

 

11 thoughts on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 12”

  1. அட அட அட! என்னோட மைண்ட் வாய்ஸ் கேட்டுச்சு போல…

    பேர் தெரிஞ்சிடுச்சே!!!

  2. Wow! Nice epi… semba and her conversation with her brain is really sensible and informative. ஒரு மூளை மனிதின் உணர்வுகளை எப்படி கட்டுப்படுத்துகிறது என்பதை இலகுவாக சொல்லியிருக்கிறீர்கள். Waiting for the next episode.

Leave a Reply to Jay Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 18தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 18

அத்தியாயம் – 18   அவினாஷ் விமானப்பயணத்தின் முடிவில் டோக்கியோவில் இறங்கியபோது மிகுந்த களைப்புடன் காணப்பட்டான். அவனுக்கு ஓயாத வேலைகள். அவனது வேலைகளைப் பார்ப்பதுடன் சேர்த்து அபிராமின் தொழிலையும் கவனிக்க வேண்டும். இது அதிக சுமைதான். ஆனால் சுமையைத் தாங்கும் வயதுதானே

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 11தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 11

அத்தியாயம் – 11   இப்போது என்ன செய்வதென்றே செம்பருத்திக்கு ஒன்றும் புரியவில்லை. கெட் அவுட் என்றால் இப்போதைக்கு அறையை விட்டு கெட் அவுட்டா? இல்லை நிரந்தரமாக வீட்டை விட்டே கெட் அவுட்டா?    யாரிடம் கேட்கலாம்? இவளை இந்த வேலைக்குச்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 19தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 19

அத்தியாயம் – 19 மாலை நேரக் கல்லூரியில் செம்பருத்தியுடன் பயிலும் ஜோஸி அவளிடம் ரகசியமாய் கேட்டாள். “உண்மையை சொல்லு அந்த குக் ராஜாவோட கீப் தானே?” மேனேஜர் – டைப்பிஸ்ட், எம்டி – செக்ரெட்டரி, டாக்டர்-நர்ஸ், எஜமானன்-வேலைக்காரி  என்று வரும் செய்திகளைப்