Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 11

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 11

அத்தியாயம் – 11

 

இப்போது என்ன செய்வதென்றே செம்பருத்திக்கு ஒன்றும் புரியவில்லை. கெட் அவுட் என்றால் இப்போதைக்கு அறையை விட்டு கெட் அவுட்டா? இல்லை நிரந்தரமாக வீட்டை விட்டே கெட் அவுட்டா? 

 

யாரிடம் கேட்கலாம்? இவளை இந்த வேலைக்குச் சேர்த்த மூவர் குழுவிடமா? சுகுமாரன்… ஒரு நாள் பார்த்ததோடு சரி. அவரது தொடர்பு எண் கூட இல்லை. வக்கில்… நேற்றுத்தான் ரயிலில் ஏற்றி என்னை இங்கு அனுப்பி இருக்கிறார். அதற்குள் சொதப்பிவிட்டேன் என்று அவரை அழைத்து சொல்ல அவளுக்கே வெட்கமாக இருந்தது. காவ்யா… அவளை அழைத்து தனது தோல்வியைச் சொல்லி, அவளது வெற்றிச் சிரிப்பைக் கேட்க வேண்டுமா? அது தேவையே இல்லை. 

 

பெரிய வீடு என்று சொன்னார்களே… அவர்கள் யார்? அவர்களால்தான் இவள் சேர்க்கப்பட்டாளோ? சே தலைவலியே வந்துடும் போலிருக்கே… இந்த இடத்தில் மேனேஜர் மாதிரி யாரும் இல்லையா? அவள் யோசிக்கும்போதே அங்கு ப்ரசன்னமானாள் காளியம்மா.

 

அவள்  கையில் இரண்டு ஒரு லிட்டர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு வந்தாள். அதில் வெள்ளையாய் என்னவோ இருக்கிறதே… ஒரு வேளை இதுதான் கள்ளோ? அய்யா காலை சரக்கில்தான்  வாய் கொப்பளிப்பார் என்று காளியம்மா  சொன்னாளே.

 

“கால சாப்பாடு நீ சரியா சாப்பிடலையே? ரொட்டி பழக்கமில்லையோ”

 

“அப்படியெல்லாம் இல்லக்கா… இந்த ப்ரெட்டு ரொம்ப கடினமா இருந்தது. முழுங்கவே முடியல. ஊருல நல்ல சாஃப்டா, இனிப்பா இருக்கும்”

 

“அது ஊர்ல செய்யுற சுவீட் ப்ரெட்டு. இது சேச்சியே வீட்டுல செய்யும். இனிப்பு இருக்காது, உப்பு கம்மியா போட்டிருப்பாங்க. இந்த ஜாமு கூட இங்க வர்ற வெளிநாட்டு பழத்தை அரைச்சு இவர்களே செய்வாங்க”

 

“அதுதான் புளிப்பா இருந்ததா?”

 

“ஆமா… ஜாம் பழத்தை அரைச்சு செய்றதால நாலு நாள்தான் தாங்கும். ப்ரெட்டு ரெண்டு நாள் வந்தா அதிகம். இதாவது பரவால்ல வெளிநாட்டு ப்ரெட்டு ஒன்னு வரும் பாரு… அப்படி மொத்தமா கடினமா இருக்கும். நடுவில் சிக்கன் இல தல எல்லாம் போட்டு அய்யாவுக்கு செய்வாங்க. 

 

சில சமயம் வெளிநாட்டிலேருந்து ஐயாவைப் பாக்க யாராவது வந்தா பெரியய்யாவோட அஞ்சு நட்சத்திர ஹோட்டல்ல இருந்து சாப்பாடெல்லாம் வரும். எங்களுக்கும் ஒரு டிரே பூரா எடுத்து சமையல் ரூமில் வச்சுடுவாங்க. யாரு வேணும்னாலும் எடுத்துக்கலாம். ஓவியாவுக்கு அதெல்லாம் ரொம்பப் பிடிக்கும். ஒரு சான்டவிச் சாப்பிட்டா கூட பழைய சோறு சாப்பிட்ட மாதிரி வயிறு கம்முன்னு இருக்கும்” காளியம்மாவின் பிரட் அனுபவங்கள் சுவாரசியமாக இருந்தது. 

 

“உங்களுக்கும் பிடிக்குமாக்கா?”

 

“நான் இதெல்லாம் சாப்பிடுறதில்லப்பா… பழைய சோறும் பச்சை மிளகாயும்தான். மோர் எடுத்துட்டு வந்திருக்கேன். ஒரு வாய் குடி”

 

அவளிடம் ஒரு பாட்டிலைத் தந்தாள். 

 

“மோராக்கா இது? நான் கூட நீங்க கள்ளு எடுத்துட்டு வந்திருக்கிங்கன்னு நினைச்சேன்” சொல்லிவிட்டுச் சிரித்தாள். 

 

“கள்ளு கிள்ளு இந்த வீட்டுக்குள்ள வந்தது, பெரிய வீட்டில் என் கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளிடுவாங்க. ஆமா… நீ ஐயாவைப் பார்க்கல?” 

 

“பார்த்தேன்கா… கெட் அவுட்டுன்னு சொல்லிட்டார். இப்ப என்ன செய்றதுன்னே தெரியல” செம்பருத்தியின் முகம் முழுவதும் கவலையின் சாயல். 

 

“கெட் அவுட் தானே? உடனே பெட்டி படுக்கையெல்லாம் கட்டிக்கிட்டுக் கிளம்பத் தோணியிருக்குமே? இங்கிருக்குற எல்லாரும் அவருக்கு கெட்டவுட்டுதான். நிகிலாவத் தவிர. என்னையெல்லாம் அவரு சொன்ன ஒரு கெட்டவுட்டுக்கு பத்தடி போயிருந்தா கூட இந்நேரம் திருகோண மலைல நின்னிருப்பேன்”

 

பாட்டிலைக் குலுக்கிவிட்டு மூடியைத் திறந்து ஒரு வாய் முழுவதும் நீர் மோரைக் கவிழ்த்த காளியம்மாவைப் பார்த்து தானும் அவ்வாறே செய்தாள். சில்லென்று, கறிவேப்பிலை, தாளித்த பெருங்காயம், அரைத்த இஞ்சியுடன் மணத்த அந்த நீர்மோர் அப்படியே தொண்டையில் இறங்கி வயிற்றின் அமிலத்தன்மையைக் குறைத்தது. 

 

“நிகிலா எப்படிக்கா” 

“எப்படின்னா… நீ இப்படி என் கூட நின்னு பேசுறியே.. நிகிலாவா இருந்தா இது தராதரம் இல்லைன்னு சொல்லுவா… நேத்து என்னோட பொண்ணு கூடத் தூங்கினியே நிகிலா ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணி இந்த மாடிலேயே பெரிய ரூமா வாங்கிருப்பா… “

 

“நிறைய படிச்சு இருக்காங்களோ? நிறைய தகுதி இருக்கும்கா”

 

அவளைப் பார்த்து சிரித்தவள் “நிறைய படிச்ச தகுதி இருந்தா எதுக்கு இங்க வந்து அவ பார்த்த வேலை எல்லாம் செய்யணும்?” 

 

அதே வேலைக்கு வந்தவள் தானே அவளும். வருத்தத்தில் முகம் சிறுத்துப் போனது செம்பருத்திக்கு. 

 

“நானும் கூட டிகிரிதான் படிச்சிருக்கேன்கா”

அவளைப் புரியாமல் பார்த்த காளியம்மா சுருங்கிப் போன அவளது முகத்தைப் பார்த்து “பாப்பா… நீ உன்னை நினைச்சுகிட்டியா? நான் சொன்னது அவ பாத்த வேற வேலை. உனக்கு சுருக்குன்னு பட்டா மன்னிச்சுக்கோ… எனக்கு இப்படித்தான் சில சமயம் பேசவே தெரியாம உளறிடுவேன்”

 

“பரவால்லக்கா” என்று சொன்னாலும் அப்போதே தனது தகுதியை அதிகரிக்க வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டாள். 

 

“நிகிலா செம்ம அழகு. ஒரு பெட்டி முழுசும் பவுடரும் லிப்ஸ்டிக்கும்தான். வேலைன்னு பார்த்தா இங்க கணக்கு வழக்கு பாக்குறது, அய்யாவோட பேசி என்னவோ ப்ராஜெக்ட் பண்றது இப்படித்தான். நிகிலாவைப் பாக்கணுமே! மூணு வேளையும் தினுசு தினுசா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு, அய்யாவோட உக்காந்து பேசிட்டு இருப்பா… பாலா செய்யுற வேலை எல்லாம் வலுக்கட்டாயமா பிடிங்கி செய்வா… ஒரு நாள் நாங்க எதிர்பார்த்த மாதிரி..”

 

முடிக்க விடாமல் அவளது செல் மூன்று முறை அடித்து ஓய… 

 

“அய்யா குளிக்க போயிட்டாரு, நான் ரூமை ரெடி பண்ணனும்” வேகமாக தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள் காளியம்மா. அவள் உள்ளே நுழைந்து ஒரு நிமிடத்திற்குள் இரண்டு மூன்று பேர் சத்தமில்லாமல் அறைக்கு உள்ளே நுழைய மெதுவாக பின்னே சென்று அறையின் திரைசீலையை விலக்கிப் பார்த்தாள் செம்பருத்தி. 

 

பரபரவென காளியம்மா இன்னொரு வேலையாள் துணையுடன் படுக்கையைத் தட்டிப் போட்டு புது விரிப்பை விரித்து பொருத்தமான தலையணை உரைகளை மாற்றினாள். ஒருவன் சன்னல்களைத் தூசி தட்டித் துடைத்தான். விரிப்பினை விரித்தவுடன், காளியம்மா பெருக்க அவளுக்கு விரிப்பை விரிக்க உதவி செய்தவன் மாப்பை வைத்து துடைத்தான். முடித்தவுடன் அங்கே இருந்தவன் ஒரு சிறிய பொத்தானை அழுத்தி திரைசீலையைப் பாதி மட்டும் திறந்து வைக்க… இப்படித்தான் ஜன்னலைத் திறந்து வைக்கிறாங்களா என்று வியந்து பார்த்தாள்  செம்பருத்தி. 

 

பேச்சே பேசாமல் ஒரு குழுவே வேலை செய்ய, அய்யா குளியலறையில் இருந்தார். ஓ அவர் குளித்து விட்டு வருவதற்குள் இந்த வேலைகள் முடிய வேண்டுமாக்கும்! சொகுசு தான்… 

 

எல்லா வேலையும் முடித்துவிட்டு மூச்சு வாங்க வெளியே வந்தாள் காளியம்மா… தன்னிடம் மிச்சமிருந்த அரை பாட்டில் மோரை அவளிடம் தந்தாள் செம்பருத்தி “என்னை விட உங்களுக்குத்தான் இப்ப அவசியம் தேவைக்கா… “

 

நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டதைப் போல வேர்க்க விறுவிறுக்க வெளியே வந்த காளியம்மா நன்றியுடன் வாங்கிக் கொண்டாள். 

 

“இதெல்லாம் துவைக்கணுமாக்கா?”

 

“அதுக்கு தனியா ஆளிருக்கு… அய்யா உபயோகிக்கிற ஒவ்வொரு ரக துணியையும் துவைக்க ஒவ்வொரு முறை இருக்கு. எனக்கு அதெல்லாம் தெரியாது. என்னை விட்டா எல்லாத்தையும் சர்ப்பில் ஊற வச்சு ரெண்டு கும்மு கும்மிக்  காயப்போட்டுடுவேன். அப்பறம் துணி பாழாப் போயிடும்”

 

ஏற்கனவே கனமாய் இருந்த விரிப்புக்களை மற்றவர்கள் எடுத்துச் சென்றிருக்க, லேசாய் இருந்த படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், சோபாவின் புது திண்டுகள் இவற்றைத்தான் எடுத்து வந்திருந்தாள் காளியம்மா. 

 

“இதை வெயிலில் காயப்போடணும்”

 

“நானும் வரேன்கா… இவரு கூப்பிடுவாரா இல்லையான்னே தெரியல”

 

யோசித்துவிட்டு “சரி வா… நீயும் இந்த வீட்டை சுத்திப் பார்க்கலையே” என்றபடி நடந்தாள். அவளைத் தொடர்ந்தாள் செம்பருத்தி. 

 

மாடியின் மற்றொரு பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தபோது வெளியே இருந்த டால்பின் நீரூற்றை நிறுத்திவிட்டு சுத்தம் செய்துக் கொண்டிருந்தனர் இருவர். 

 

“அவங்க தோட்டக்காரங்க. வெளிய இருக்குற புல்தரையை பராமரிக்கிறது, மரங்களை ட்ரிம் பண்றது இதைத் தவிர இந்த நீரூத்து, நீச்சல் குளம், மீன் தொட்டி இதெல்லாம் கழுவி எந்த நேரத்துலையும் உபயோகிக்க தகுந்த மாதிரி வச்சுக்கிறது இதெல்லாம் இவங்க வேலைகள்”

 

“நீச்சல் குளம் வேற இருக்கா?”

 

“நீ பாக்கலையா… கிரௌண்ட் ப்ளோர்ல இருக்கு. துணிய காய வச்சுட்டுப் போகும்போது காமிச்சுத் தரேன்”

 

மொட்டை மாடிக்கு வந்துவிட்டார்கள். அங்கே மேலே ஒரு சிறிய கண்ணாடி அறை  போன்ற ஒன்று. உறுதியான பிளாஸ்டிக் மாதிரி உடையாமல் ஒரு பொருள். அதனை வைத்து வெளிச்சம் ஊடுருவும் வகையில்  கூரை வேயப்பட்டு இருந்தது. அதனுள் துணிக்கடைகளில் துணிகளை ஹாங்கரில் அடுக்குவது போல நிறைய ஸ்டாண்டுகள். சில உடைகளை காயப்போட்டு இருந்தனர். திண்டுகளைக் கூட காயப்போடுவதற்கு ஒரு இடம் அங்கு இருந்தது. மேல் கூரையிலிருந்து சூரிய வெளிச்சம் பட்டு இவை காயும். ஆனால் மழை பெய்யும்போது நனையாது. நல்ல யோசனை இந்தக் கேரளாவில் மழை பெய்யும் நேரத்தில் இவ்வளவு தூரம் ஓடி படிகள் ஏறி வந்து துணிகளை எடுப்பது முடியாத காரியம். 

 

“தினமும் இவ்வளவு துணியும் துவைப்பிங்களாக்கா? அழுக்கே இல்லையே”

 

“அட உனக்குத் தெரியாது. இப்பத்தான் இவ்வளவு சுத்தமா இருக்கு. முன்னாடில்லாம் தண்ணி கறையும் புகை வாடையும் அப்படியே இந்தத் துணில இருக்கும். துவைச்சாத்தான் போகும். சில மாசத்துக்கு முன்னாடி வரை நம்ம அய்யா ஒரு மீன் மாதிரி தண்ணிலேயேதான் இருப்பார். புகை வண்டி மாதிரி சதா புகை விட்டுக்கிட்டே இருப்பார்”

 

“இப்பயும் சிகிரெட் குடிக்கிறாரே”

 

“அப்பக்கூட ஒப்பிட்டுப் பாத்தா இப்ப ஒண்ணுமே இல்லை. என்ன கோவம் அதிகமாயிருக்கு…  உன் மேல இருக்குற கோபத்தில் காலைல சாப்பாட்டுத் தட்டை உடைச்சுட்டார் போலிருக்கு”

 

“அப்படியாக்கா… சத்தம் கேட்டது. ஆனா என்ன உடைஞ்சதுன்னு தெரியல. இப்படித்தான் எப்போதுமே இருப்பாரா”

 

“எந்திரிச்சதும் அவருக்குப் பழக்கமானது எதுவுமே இப்ப கிடைக்காதுன்னு தெரிஞ்சு கொதிப்புல இருப்பாரு. இன்னும் கொஞ்ச நேரத்தில் கோபம் குறைஞ்சுடும். அவரே கூப்பிட்டுப் பேசுவாரு”

 

அதையே செம்பருத்தியும் நம்பினாள்.

 

“நிறைய ஆளுங்க வேலை பாக்குறாங்க போலிருக்கேக்கா”

 

“இந்த வீடு ஆனை  மாதிரி. இதைப்  பராமரிக்க நிறைய ஆட்கள் தேவை”

 

உண்மைதான். ஒரே ஒரு நபர் தங்க ஒரு ‘கொச்சு’ வீடு. இந்த வீட்டை பராமரிக்க ஒரு பெரிய வேலையாட்கள் கூட்டம். அவர்களுக்கு மாதா மாதம் சம்பளச் செலவு மட்டும் லட்சக்கணக்கில். இவ்வளவு பணச்செருக்கு அவசியமா என்று  திட்டுவதா இல்லை இத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறதே என்றெண்ணி வாயை மூடிக் கொள்வதா?

 

அத்தனை உயரத்தில் நின்று பார்க்கு போது சின்னச் சின்ன வீடுகள் தலையில் கவிழ்த்த ஓடுகளுடன் மழையில் முளைத்த காளான்களைப் போல இங்கும் அங்கும் தலை நீட்டி நின்றன. சுற்றிலும் தாராளமாக இடம். ஒவ்வொரு வீட்டிலும் நான்கைந்து தென்னை மரங்கள். 

 

அதனை காளியம்மாவிடம் பகிர்ந்த போது வீட்டை சுற்றிலும் மரவள்ளிக் கிழங்கு செடிகளைக் காணலாம் என்று சொன்னாள். 

 

“நம்ம ஊரு மாதிரி அரிசியை விதைச்சு, பாதுகாத்து, களையெடுத்து, அறுப்புக்கு ஆளுங்களைக் கெஞ்சி கூட்டிட்டு வந்து… இந்த வேலை எல்லாம் இங்க இல்லை. கிழங்கை விதைச்சா அடிக்கிற மழைக்குத் தன்னால வளந்துடும். வேணும்போது வீட்டுக்குப் பின்னாடி தோண்டி, நல்ல கிழங்கா வெட்டி எடுத்து, அவிச்சு, மீன் குழம்போ, மிளகா சம்மந்தியோ தொட்டு சாப்பாட்டை முடிச்சுக்குவாங்க”

 

“சம்மந்தியா?”

 

“சே! சேச்சி கிட்ட பேசிப் பேசி நானும் மலையாளத்தில் பேச ஆரம்பிச்சுருவேன் போலிருக்கு. சம்மந்தின்னா துவையல். நம்ம சேச்சி தோசைக்கு வழக்கமா செய்யுறது தேங்கா, தக்காளி, பூண்டு சம்மந்தி. அசைவத்தில் கூட இறாலில் செஞ்சு பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் வச்சிருப்பாங்க. அது பேரு…ஹான்… ‘உனக்கா செம்மீன் சம்மந்தி’ ”

 

பேசிக் கொண்டே கீழ்த்தளத்திற்கு வந்துவிட்டார்கள். இரண்டாவது வரவேற்பறையில் இரவு கிட்டத்தட்ட ஒரு பக்கத்து சுவற்றையே மறைத்தவண்ணம் இருந்த திரைசீலை விலகி அங்கே நீல வண்ணத்தில் நீர் ததும்பிக் கொண்டிருந்த சிறிய நீச்சல் குளம் தெரிந்தது. 

 

அப்படி அழகாய் பரிசுத்தமாய், நிர்மலமான நீலத்தில் மேற்கூரையில் தெரிந்த சூரியனின் ஒளி பட்டு ஒளிர்ந்தது. அவளுக்கு நீச்சல் தெரியாது இருந்தாலும் இந்த நீரில் இறங்கும் ஆசை வந்தது. 

 

“இது சார் உபயோகிக்கிறதா?”

 

“ஆமாம். வீட்டில் இருந்தால் நீச்சல் குளத்தில்தான் வாசம். விபத்துக்கப்பறம் பைக்கில் போறதில்லை. அவர் சும்மா இருந்தாலும் நிகிலா விடமாட்டா, அவர் கவலையைப் போக்கன்னு சாக்கு சொல்லிட்டு இங்க கூட்டிட்டு வந்துடுவா. ரெண்டு பேரும் இங்க நீச்சல் அடிச்சுட்டு இருக்கும்போது என்னென்ன வேணும்னு சொல்லுவாங்க. நாங்க சமைச்சுப் பரிமாறனும். அப்பறம் அங்க பாரு”

 

காளியம்மா சுட்டிக் காட்டிய இடத்தில் ஒரு பெரிய தேக்கு மர அலமாரி. கண்ணாடி வேய்ந்திருந்த அதில் ஒரு பக்கம் முழுவதும் விதவிதமான கண்ணாடி கோப்பைகள். இன்னொரு பக்கம் அழகழகான வடிவங்களில் மதுபான பாட்டில்கள். அதில் பல காலியாக இருந்தது. சிலவற்றில் மிகக் குறைந்த  மதுபானம். 

 

“பெரிய வீட்டில் இதெல்லாம் தரக்கூடாதுன்னு சொல்லியும் அவரோட கவலையைப் போக்கன்னு சொல்லிச் சொல்லியே பக்கத்தில் உக்காந்து ஊத்தி ஊத்திக் கொடுப்பா”

 

இப்போது செம்பருத்திக்குத் தெளிவாகப் புரிந்தது எதனால் நிகிலா வெளியே அனுப்பப் பட்டாள் என்று. எதனால் அந்த விளம்பரத்தில் வித்தியாசமாய் அழகு குறைவு, மேக் அப் போடக் கூடாது என்றெல்லாம் கேட்டிருந்தார்கள் என்றும் தெளிவானது. 

 

வீட்டின் பின்புறம் மட்டும் நாலைந்து கார்களை பார்த்த நினைவு. அதெல்லாம் அய்யாவின் உபயோகத்திற்காக என்று ஓவியா சொல்லி இருந்தாள். இவர்கள் டவுனுக்கு சென்று வர இண்டிகா கார் ஒன்று இருந்தது. இது தவிர பைக் வேறா. ஆனால் பைக்கைப் பார்த்த நினைவே இல்லையே. விபத்து என்று வேறு காளியம்மா சொன்னாளே…

 

“முன்னெல்லாம் அவர் பைக்கில்தான் சுத்துவார். வெளிநாட்டு பைக் அப்படியே காத்தாட்டம் பறக்கும்”

“விபத்தில் என்னாச்சுக்கா?”

 

அவளை புரியாது பார்த்தவள் “அதில்தான் அய்யாவோட கால் அடிபட்டது. அந்த விபத்தில் அவர் பொழைச்சதே பெரியய்யாவும் அம்மாவும் செய்த புண்ணியம். அந்த பைக் அப்படியே சல்லி சல்லியா உடைஞ்சுடுச்சு. என்னதான் சொன்னாலும் கம்பீரமா ஸ்டைலா நடந்து வந்தவர் இப்ப இருக்குற நிலமையைப் பார்த்து நெஞ்சே வெடிச்சுடும் போல இருக்கு” 

 

செம்பருத்தியின் அதிர்ச்சியைக் கவனிக்காது பேசிக் கொண்டே சென்றாள் காளியம்மா. 

 

அந்த அறைக்கு வந்த பாலா “அய்யா உங்களைக் கூப்பிடுறாரும்மா” என்றான். 

8 thoughts on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 11”

  1. சுவாரஸ்யமாக செல்கிறது கதை.

    அந்தக் கோவக்கார “சின்னய்யா”வின் பெயர் மட்டும் இன்னும் தெரியவில்லை

  2. செம்பருத்தி யோடு இணைந்து பயணிக்கிறோம். உங்கள் கதை நாயகியர் அனைவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். அருமை

  3. Really interesting akka… Aduthu ennava irukum nu yosika vaikuthu…. Chintragatha mathiri namma nenaichathu illama puthu vithamana story. Lovely waiting for next Saturday

Leave a Reply to VPR Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 38தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 38

அத்தியாயம் – 38 சுகுமாரனுக்கு மந்தாகினியை பார்க்கவே பயமாக இருந்தது.  “சுகுமாரண்ணா! சுகுமாரண்ணா!” என்று தன்னை சுற்றி வரும் அந்தக் கள்ளம்  கபடம் இல்லாத குழந்தை அல்ல இவள். பணத்தாசை, பதவி ஆசை, ராணி ஆசை என்று தனது ஆசையினாலேயே கொஞ்சம்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 22தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 22

அத்தியாயம் – 22   பரபரப்பான காலை வேளையில் அந்தப் பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஆசிரியர் பாடம் நடத்தும் குரல் மட்டுமே ஒலித்தது. முதல் பீரியட் என்பதால் மாணவர்களின் முழுக்கவனமும் பாடத்திலேயே இருந்தது.    “ஸ்போர்ட்ஸ் மீட்டுக்கு தயார் பண்ணிட்டிங்களா? பார்ட்டிசிபேட்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 18தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 18

அத்தியாயம் – 18   அவினாஷ் விமானப்பயணத்தின் முடிவில் டோக்கியோவில் இறங்கியபோது மிகுந்த களைப்புடன் காணப்பட்டான். அவனுக்கு ஓயாத வேலைகள். அவனது வேலைகளைப் பார்ப்பதுடன் சேர்த்து அபிராமின் தொழிலையும் கவனிக்க வேண்டும். இது அதிக சுமைதான். ஆனால் சுமையைத் தாங்கும் வயதுதானே