Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 10

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 10

அத்தியாயம் – 10

 

காலை குளிக்கும்போது கூட அதே நினைப்பு செம்பருத்திக்கு. யார் இந்த சிங்கம்? ஏன் இவ்வளவு பில்ட் அப் இவனுக்கு. இதுவரை சொன்னதில் ஒருத்தன் கூட நல்லவிதமான அபிப்பிராயத்தை சொல்லல. தான் அறிந்த விஷயங்களைப் புள்ளியாய் எடுத்துக் கொண்டு இணைத்து, அவனைப் பற்றிய கோலம் ஒன்றினை வரைந்தது அவளது மனம்.

 

ராவணன், தூணுக்கு சேலை கட்டினால் கூட விடமாட்டான். அதனாலேயே அழகு குறைவான ஒரு பெண்ணைத் தேடித் தேடித் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி இருப்பவன். ஆனால் ஆண்களை விட பெண்கள் சொல்லுக்கு மரியாதை தருபவன். அல்லது ஆண்களுக்கு இவனை மேய்க்கும் அளவுக்குப் பொறுமை இல்லை. 

 

நல்லது… இதெல்லாம் இருப்பதால்தானே அவளுக்கு நல்ல சம்பளம் கொடுத்து, தங்க இடம், மூன்று வேளை ராஜ சாப்பாடு என்று கிட்டத்தட்ட அரைலட்சம் இவள் ஒருத்திக்கு மட்டும் செலவு செய்கிறார்கள். 

 

 ஒரு சின்ன விஷயம்ன்னா கூட கோச்சுக்கிட்டுப் போயிடுவான், சாப்பாட்டில் கோபம், சொந்த அரண்மனையில் கூடத் தங்காம ஊரார் கூற்றுப்படி பழனி மலையில் உக்காந்த ஆண்டியப்பன் மாதிரி இங்க வந்து உக்காந்திருக்கான். வீட்டில் கோச்சுக்கிட்டு தொழில் நிறுவனத்துக்குப் போகல… 

 

காலை பத்து மணி வரை தூக்கம். எதனால்? கோபன் கூட சொன்னானே மருந்து மாத்திரை சாப்பிடுபவன், ராத்திரி பசிக்கும் என்று… ஆக ஆரோக்கியத்தில் என்னவோ அசௌகரியம். அவன் கத்துவதற்குக் காரணம் அந்த  வலி, அசௌகரியத்தால் எழுந்த கோபமாகக் கூட இருக்கலாம். உடல் வேதனையில் இருப்பவர்களுக்கு சிடுசிடுப்பு அதிகமாக இருக்கும். எனவே அதையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். 

 

யோசித்து முடித்துவிட்டு வெளியே வந்த பொழுது எதை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்ளலாம் என்ற தெம்பு அவளுக்கு ஏற்பட்டிருந்தது. 

 

அவள் குளித்து முடித்துவிட்டு வந்ததும் காலை உணவாகத் தந்த பிரட் ஜாமை விழுங்கவே முடியாமல் தொண்டையை அடைத்தது செம்பருத்திக்கு. இட்டிலி தோசை எல்லாவற்றையும் மறந்துவிட்டு ரெடிமேட் உணவு உணவுகளின் பின் ஓடுகிறோமே இது எங்கு சென்று முடியுமோ? சாயாவை அருந்தி தொண்டையில் அடைத்த ரொட்டியை விழுங்கினாள். 

 

“ஒரு ஸ்லைஸ் பிரெட் போதும் சேச்சி. சாப்பிடவே முடியல” முதல் முறையாக பசி மறைந்து பரீட்சை தினத்தன்று ஏற்படும் டென்ஷன் ஏற்பட்டது. வயிற்றில் ரயில் ஓடியது. 

 

அவளது பதற்றத்தைப் புரிந்து கொண்டதைப் போல சிரித்த காளியம்மாள் “எதுக்கு பதட்டம் பாப்பா? நம்ம மேல எந்த தப்பும் இல்லாதப்ப நல்லா நிமுந்து நிக்கணும். கண்ணுக்கு நேரே பாத்து பேசணும். பயப்படக் கூடாது. நம்ம சனங்க இருக்காங்களே… நாய் கூட பயப்பட்டா கல்லைக் கொண்டு எறிவாங்க. தைரியமா குரைக்கிற நாயைக் கண்டு சைக்கிளை அழுத்திட்டு அவங்க  ஓடுவாங்க”

 

“தைரியத்தை வரவழைச்சுட்டுத்தான் இந்த வேலைக்கு வந்திருக்கேன்கா… ஆனாலும் இன்னும் பத்தலை”

 

“தைரியமா பயமோ எல்லாம் விதை மாதிரிதான். மனசில் எதை விதைக்கிறோமோ அதுதான் மரமா நிக்கும்” போற போக்கில் மிகப் பெரிய தத்துவத்தை சாதாரணமாக சொல்லிவிட்டுச் சென்றாள் காளியம்மா. 

 

“மோளே… காளியம்மா அய்யா ரூமுக்குத் தான் சாப்பாடு எடுத்துட்டுப் போகுது. நீ அங்க காத்திரு. அய்யா கூப்பிடுவாரு”

 

காளியம்மா தள்ளு வண்டி ஒன்றின் மேலே தண்ணி ஜக், ஜூஸ், காலை உணவு என்று எல்லாவற்றையும் அடுக்கினாள். இரண்டாவது அடுக்கில் துண்டுகள், துடைக்கும் துணிகள், பெட்ஷீட்டுகள் போன்ற ஒன்று என்று ஏதேதோ இருந்தது. சாப்பிட எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்?

 

“அதுவா… காலைல எந்திரிச்சதும் பாட்டிலை ஊத்தித் தான் வாயைக் கொப்பளிப்பார். இப்ப டாக்டர் சரக்கைத் தொடவே கூடாதுன்னு சொல்லிட்டாரு. காலைல காப்பி குடிக்க வேண்டிருக்கு. சாப்பாடு சாப்பிட வேண்டியிருக்கு. இதெல்லாம் பிடிக்காம சின்ன பிள்ளையாட்டம் அடம் பிடிக்க வேண்டியது”

 

“ஒன்னு ரெண்டு மாசத்தில் பழகி இருக்குமேக்கா. ஆரோக்கியத்துக்காகவாவது டாக்டர் சொன்னதைக் கேட்டுத்தானே ஆகணும்”

 

“மயக்கத்தில் வாழ்ந்தவனுக்கு மயக்கத்திலேயே இருக்கத்தானே பிடிக்கும். அவனை முழிச்சுக்க சொன்னா… கோவம் வருமா வராதா? அதுதான் இங்க நடக்குது”

 

இந்த வாழ்க்கை முறையே செம்பருத்திக்குப் புதிதாக இருந்தது. காலை சூரிய வெளித்திற்காக ஜன்னலில் திரைசீலைகளைப் பாதியாகத் திறந்து வைத்திருந்தனர். இவ்வளவு உயரமாக இருக்கும் திரைசீலையை எப்படி பாதியாகத் திறந்து வைத்திருப்பார்கள்? யோசித்துக் கொண்டே காளியம்மாவுடன் சென்றாள். 

 

சின்ன லிப்ட் ஒன்றில் ஏறி முதல் மாடிக்கு சென்றார்கள். அங்கிருந்த பிரமாண்டமான அறையிக்கு வெளியே ஒரு நடுத்தர வயது ஆள் நின்றுக் கொண்டிருந்தான்.

 

“அய்யா… எந்திருச்சாச்சா?”

 

“ம்ம்… இப்பத்தான் சிகிரெட் கேட்டார். இன்னும் கொஞ்ச நேரத்தில்  காலை சாப்பாடு முடிஞ்சுரும்”

 

 “செம்பருத்தி இதுதான் பாலா… நம்ம அய்யாவோட உதவியாளர். காலை எந்திருச்சத்தில் இருந்து ராத்திரி தூங்குற வரை அவரோட வேலைகள் எல்லாம் செய்றவர் இவர்தான். நீ பெருசா உடல் பலத்தைப் பயன்படுத்தி செய்ற வேலை எதுவும் இருக்காது.  பாலா, இவங்க செம்பருத்தி, நிகிலாவுக்கு பதிலா வந்திருக்காங்க” என்று ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தியபடியே பாலாவுக்கு டீயை ஊற்றிக் கொடுத்தாள் காளியம்மா. 

 

“அந்தம்மாவுக்கு பதிலாவா?” என்று கேட்ட பாலாவின் கண்களில் தெரிந்தது என்ன?

 

“அந்தம்மாவுக்கு பெரிய வீட்டில் கொடுத்த வேலையைச் செய்ய மட்டும்தான் செம்பருத்தி வந்திருக்காங்க. அந்தம்மா செஞ்ச எல்லா வேலையும் இல்லை” என்றாள் காளியம்மா அழுத்தமாக. 

 

ஆக இந்த நிகிலாதான் இவளுக்கு முன்னர் இந்த வேலையில் இருந்தது. அவள் பெரிய வீட்டில் சொன்ன வேலையைத் தவிர சொல்லாத வேலைகளையும் சேர்த்து செய்ததால் அதிகப் பிரசங்கி என்று பட்டம் கட்டப்பட்டு வெளியே அனுப்பப் பட்டிருக்கலாம். பெரிய வீட்டில் தூரத்தில் இருந்தே இந்தப் பிடிவாதக்காரனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இங்கே யாருமே அந்த வீட்டினர் தென்படவில்லை என்றாலும் இந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பெரிய வீட்டினரின் கைப்பாவைகளே. 

 

கவனமாக அவர்கள் பேசியத்தைக் கேட்டதின் பலனாக எவ்வளவு விஷயங்கள் தெரிய வருகின்றன?

 

காலை சாப்பாடாக பிரட் டோஸ்ட், அதுவும் அதனை அடுக்கி வைக்கவே  ஒரு அழகான ரேக். ஒவ்வொரு ஸ்லைசும் ஒவ்வொரு அடுக்கில் படுக்கை வாக்கில் வைக்கப் பட்டிருந்தது. சாப்பிட பரிமாறும்போது நான்கு ஸ்லைஸ் இருக்கும் ரேக்கில் வைப்பார்களாம். வெண்ணை, கலர் கலராக ஜாம்கள் குட்டி குட்டி அழகு பாட்டில்களில். இரண்டையும் எடுக்க வைத்திருந்த கரண்டியில் தான் எத்தனை வேலைப்பாடு? முட்டைகளை மஞ்சளும் மிளகு உப்பு போட்டு வறுத்து வைத்திருந்தனர். அதுதான் ஸ்க்ராம்பிள்டு எக் என்று சொன்னார் சேச்சி. 

 

அவ்வளவு பெரிய சாப்பாட்டு அறை இருக்கிறதே? ஏன் அங்கு அமர்ந்து சாப்பிடாமல் தங்களது அறையிலேயே அமர்ந்து சாப்பிடுகின்றனர்? யோசித்தபோதே… வேலையாட்களின் தங்கும் அறையிலேயே ஒரு மேஜை போட்டு வைத்திருப்பவர்கள் அவர்கள் அறையை எப்படி வைத்திருப்பார்கள்? யார் கண்டது சின்ன சாப்பாட்டு மேஜை கூட அந்த அறையில் இருக்கலாம். 

 

“பாலா… ஓவியாவுக்கு மதியசாப்பாடு டிபன் பாக்சில் போட்டு ஸ்கூலுக்கு அனுப்பிட்டு வந்துடுறேன்.  பெட்ஷீட் எல்லாம் மடிச்சு வச்சுட்டேன். அய்யா குளிக்கப் போகும்போது குரல் கொடுத்தேன்னா ஒரே ஓட்டமா ஓடி வந்து சுத்தம் செஞ்சுட்டு, மாத்திட்டுப் போயிடுவேன்” சொன்ன மாதிரியே ஓட்டமாய் ஓடினார் காளியம்மா. 

 

அவ்வளவு பெரிய அந்த வீட்டில் காளியம்மாவின் காலடி ஓசை மட்டும் அவ்வளவு தெளிவாய் கேட்டது. அப்படி ஒரு அமைதி. ஒரு பஸ் ஹாரன், பைக் சத்தம்  இல்லை, ஒரு கீரைக்காரியோ, விளக்குமாறு விற்பவனோ தெருவில் குரல் கொடுக்கவில்லை. டிவி சத்தம், திருவிழா மைக் செட்டு சத்தம் எதுவும் இங்கு இல்லை. அதற்கு பதில் பறவைகளின் சத்தம், காற்று ஒவ்வொரு மரமாக ஊஞ்சலாடி இலைகளை கிச்சு கிச்சு மூட்டும் சத்தம் இதெல்லாம் தெளிவாகக் கேட்டது. 

 

“போயிட்டு வரேன் அம்மா” என்று சொல்லிவிட்டு ஓவியா சைக்கிளில் ஏறிப் பள்ளிக்குச் சென்றாள். மாடியில் ஜன்னலின் அருகே நின்று அவளிடம் டாட்டா காட்டினாள் செம்பருத்தி. பதிலுக்கு அவளும் டாடா காட்டிவிட்டு சைக்கிள் மணியை அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு சென்றாள். தான் இப்படித்தானே பட்டாம்பூச்சி போல சிறகடித்துப் பள்ளிக்குச் சென்றோம். இந்தக் குழந்தையாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மனதார வேண்டினாள் செம்பருத்தி. 

 

அந்த சூழ்நிலையின் அமைதியைக் கிழித்துக் கொண்டு 

 

“ஓ மை காட்….  பாலா… எங்கடா போன… “ என்ற உரத்தக் கூச்சல் ஒன்று ஒலித்தது. 

 

“இதோ வந்துட்டேன்யா” என்ற பாலாவின் பதில் குரலும் கேட்டு பரபரப்புடன் சென்று அறையின் அருகில் நின்று கொண்டாள். 

 

“ஒன்னும் இல்லங்கய்யா சரியாயிடும். இதை மட்டும் சாப்பிடுங்க. உடனே சரி பண்ணி கொண்டு வந்துடுறேன்” என்று பாலா சொல்லிக் கொண்டிருந்தான். சற்று நேரம் கழித்து கையில் ஒரு சிறு முக்காலியுடன் வெளியே வந்தவன் இண்டர்காம் வழியாக ஒருவனை அழைத்து “இங்க உடைஞ்சிருக்கு பாரு சரி பண்ணி எடுத்துட்டு வா… “ என்று வேலை சொன்னான். 

“அஞ்சு நிமிஷத்தில் முடிஞ்சுடும்” என்று அவன் சொல்ல, 

 

“லேட் பண்ணிடாதடா… இதுக்கு மேலதான் அய்யா அவங்கம்மாவோட படத்தை வைப்பார். ஏதாவது சேதாரம் பண்ணி வச்ச பாத்துக்கோ… “

 

சற்று யோசித்தவன் “அம்மா.. நான் இதை கையோட சரி பண்ணி வாங்கிட்டு வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். 

 

பாலா சென்று ஐந்தாறு நிமிடங்கள் இருக்கும் உள்ளிருந்து பயங்கர இருமல் சத்தம் “பாலா… வாட்டர், வாட்டர்” என்று இருமலின் ஊடே குரல் கேட்க, பக்கத்தில் யாரும் இல்லாததால் வேறு வழியின்றி தண்ணீர் ஜக்கை எடுத்துக் கொண்டு அந்த பிரமாண்டமான அறையினுள் நுழைந்தாள். 

 

அப்பாடா… எவ்வளவு பெரிய அறை. அதன் மூலையில் ஒரு நான்கு பேர் தாராளமாக அமர்ந்து கொள்ளும் அளவுக்கு பெரிய சோபா… சுவற்றில் பிரமாண்டமான டிவி, மிக மிக அழகான தேக்கு மரக்கட்டில், அதன் மேலே மெத்து மெத்தென்று அப்படியே புதைந்து விடும்படி பஞ்சுப் பொதியாய் மெத்தைகள் மற்றும் தலையணைகள். பளிச்சென்று வெல்வெட்டாய் மின்னிய போர்வை. அந்த கிங் சைஸ் கட்டிலின் நடுவில் ஒருவன். பாதி உடலைப் போர்வை மூடியிருந்தது. சாய்ந்து உட்கார்ந்திருந்த அவனது படுக்கையில் இரு சிறு மேஜை. அந்த மேஜையில் காலை உணவு. ஓ! இந்த அலங்கார மேஜை காலை உணவு உண்ணவா? படுக்கையிலேயேவா?

 

யோசித்தவாறே பக்கத்தில் இருந்த கண்ணாடி டம்பளரில் தண்ணீரை நிரப்பிக் கொடுத்தாள். கண்களில் நீர் வர இருமிக் கொண்டிருந்தவன் அந்த நீரை வாங்கிப் பருகினான். அப்போதுதான் அவனைப் பார்த்தாள்.

 

 ஏ யப்பா இப்படி ஒரு அழகா? அவனை அரவிந்த் சாமி போல நல்ல நிறம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் வெளுப்புத்தான். நம்மூர் பக்கம் இந்த நிறத்தில் ஆண் இருந்தால் பய்யன் நல்ல சிவப்பு என்று சொல்லி விடுவார்கள். அளவான கண்கள், மூக்கு, தாடை, மீசை, காதுகள், உதடுகள்  மொத்தத்தில் நல்ல செதுக்கி வைத்தாற்போல முகம். சற்றே சுருட்டையான முடி. ஒரு மாதிரியான தேன் கலந்த நிறம் அவனை முழுவதும் போர்த்தி இருந்தது. 

 

அவன் படுக்கையில் அமர்ந்து இருந்ததால் உயரம் தெரியவில்லை. தண்ணீர் குடித்துவிட்டு அவளிடம் வெறும் டம்பளரைத் தந்தான். இன்னும் அவளை அவன் பார்க்கக் கூட இல்லை. 

 

“தேங்க்ஸ்”

 

“பரவால்ல” என்று பதில் சொன்னதும் திகைத்து, திரும்பிப் பார்த்தான். அவன் பார்வையில் கேள்வி. புருவம் நெரிந்தது. 

 

“யார் நீ?”

 

“செம்பருத்தி”

 

“ஓஹோ… எந்த சமஸ்தானத்து மஹராணி?”

 

பதில் சொல்ல முடியாமல் திகைத்தாள். 

 

“எந்த சமஸ்தானமா இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. கெட் அவுட்”

 

அப்படியே செய்வதறியாமல் நிற்க 

 

“காதில் விழல. கெட் அவுட் மேடம்” என்றான் விரல்கள் அறை வாயிலைக் காட்ட, கண்களில் தீக்கங்குகள் பறக்க அவன் சொன்னதைக் கேட்டு மெளனமாக வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று. 

 

வெளியே வந்தவளை தூரத்தில் பார்த்த பாலா ஓடி வந்தான் “சாரிம்மா… ரிப்பேர் செஞ்சுட்டு வர நேரமாயிருச்சு. ஐயா கூப்பிட்டாரா?”

 

ஆமாம் என்று தலையசைத்தவள் “கோவமா இருக்கார்” என்று சொல்லி முடிப்பதற்குள் 

 

“பாலா, எங்க போன? யார் யாரோ என் அனுமதி இல்லாம ரூமுக்கு வர்றாங்க. என்னடா நடக்குது. அந்தக் குடும்பமே சேர்ந்து இன்னைக்கு என்னைத் தீர்த்து கட்டப் போகுதா?” என்று கத்தும் சத்தம் கேட்க, அதன் பின்னே பீங்கான் பாத்திரம் ஏதோ உடையும் ஓசை கேட்டது. 

 

ஏன் இவ்வளவு கோவம் அவனுக்கு? யோசித்தபோது அவன் மேலாடை கூட அணியாமல் ஒரு இரவு நேர ப்ளூ நிறத்தில்  பளபள கோட் ஒன்றினை மட்டும் அணிந்து கழுத்தில் போட்ட தங்க செயின் மார்பில் படர அமர்ந்து, ஒரு கண் பக்கத்தில் இருக்கும் ஆங்கில செய்தித்தாளிலும் மற்றொரு கண் ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியிலும் இருக்க ஏதோ நினைவுடன்  உணவருத்திக் கொண்டிருந்த காட்சி நினைவுக்கு வந்தது. 

 

வெகு நாட்களாகப் பழகிய பாலாதான் உள்ளே வருகிறான் என்ற நினைவில் காலை எழுந்து தனது அறையில் சுதந்திரமாய் அமர்ந்திருந்தவனின் முன் அறிமுகமில்லாத பெண் ஒருத்தி நின்றால்  கோவம்தான் வரும். பெண்கள் அறைக்கு மட்டும் இல்லை, அனுமதி பெறாமல் ஆண்கள் அறைக்குள் நுழைவதும் தவறுதானே? 

ஆனால், நான் வேண்டுமென்றவா நுழைந்தேன். அவன்தானே இருமிக் கொண்டிருந்தான். தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்தது தவறா?

 

இருவர் மேலும் தவறில்லை. இப்படி ஒரு முதல் சந்திப்பை ஏற்படுத்தித் தந்த விதியின் மேல் தான் முழு தவறும். 

 

‘சே! முதல் சந்தர்ப்பத்திலேயே சொதப்பிட்டியே. நீ நல்லவளாத்தான் இருக்கணும்னு நினைக்குற. ஆனால் உன் மண்டைல இருக்குற சுழி உன்னை கெட்டவளாக்கிடுதே!’ தன்னைத் தானே திட்டிக் கொண்டாள் செம்பருத்தி.

10 thoughts on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 10”

  1. இம்பூட்டு கோவமும் அலட்டலும் இன்னாத்துக்கு?

    Hibiscus பாவம் கலங்குறாளே….

    1. ஒரு ஆன்ட்டி ஹீரோ எழுத விட மாட்டிங்கிருங்களே விபிஆர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 27தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 27

அத்தியாயம் – 27 அதிர்ச்சியில் உறைந்து அப்படியே அபிராம் சிலையாய் உட்கார்ந்திருந்தான். இதுவரை யாரும் அபியின் சுண்டுவிரலைக் கூடத் தீண்டியதில்லை. இன்று லீலாம்மாவா அடித்தது. அதுவும்  பல சமயங்களில் அந்த பிஞ்சு பருவத்தில் அவனின் பயம், அச்சம் எல்லாம் ஓட ஓட

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 24தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 24

அத்தியாயம் – 24   சூரிய விளக்கில் சுடர்விட்ட கிழக்கு அன்றைக்கு என்னவோ வித்தியாசமாகத் தெரிந்தது ராதிகாவிற்கு.   செம்பருத்தி தன்னை  ஒர விழிப் பார்வையில் சிறை பிடித்தவாறே விட்டு விலகி ஜாகிங் சென்ற அவினாஷைப் பார்த்தாள். சாம்பிள் கொடுத்திருந்த பொருட்களின்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 14தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 14

அத்தியாயம் – 14   அடுத்த சில வாரங்கள்  எப்படி ஓடியது என்றே செம்பருத்திக்குத் தெரியவில்லை. காலை எழுந்து ரெடியாகி காளியம்மாவின் பழைய சோறு நீராகாரத்திற்குப் போட்டியாக அவளும் சென்று நிற்பாள். அபிராமின் கடிதங்களைப் பிரித்துப் படித்து அவன் சொல்லும் பதிலைக்