Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 15’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 15’

அத்தியாயம் – 15

யாருக்கு மாலை?

 

பரீட்சைகள் முடிந்த அன்றைக்கே கவின்யா வல்வெட்டித்துறையிலுள்ள தனது வீட்டுக்கு வந்து விட்டாள். வந்த நேரமிருந்து ஓய்வெடுக்காது வரவேற்பறையையே சுத்தப்படுத்தி அழகுபடுத்தி கொண்டிருந்த மகளைப் புரியாமல் பார்த்தார் தெய்வநாயகி. 

 

 

இவ்வளவு நாளும் ஓய்வில்லாம படிச்சது படுத்து ரெஸ்ட் எடுக்கிறதை விட்டிட்டு இப்ப எதுக்கு உந்த வேலையெல்லாம் செஞ்சிட்டிருக்கிறாய்..?”

 

 

சும்மா தாம்மா… நா ஒண்ணும் டயர்டா இல்ல… பொழுது போகட்டும் என்று தான்…”

 

 

என்று ஏதோ சொல்லி தாயாரை சமாளித்தாள். தன் கண்ணாளன் நாளை பெண் கேட்டு வரப் போகிறான் அதற்காகத்தான் இந்த ஆயத்தங்கள் என்று அவளால் உண்மையைக் கூறி விடவா முடியும்

 

 

மனங்கொள்ளா எதிர்பார்ப்போடு அடுத்த நாளும் விடிந்திருக்க கவியோ சொல்லொணா உணர்ச்சிகளோடு வலம் வந்து கொண்டிருந்தாள். பொழுதை நெட்டித் தள்வதற்காக தொலைக்காட்சியைப் போட்டு பார்வையை திரையிலும் மனசை ஸாமிடமும் தொலைத்து சிந்தனை வயப்பட்டு அமர்ந்திருந்தாள். 

 

 

திடீரென “ஹாய் கவி…” என்ற அனுஷியாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். அனுஷியாவும் அவள் பெற்றோர்களும் யாதவ்வின் பெற்றோர்களும் வருகை தந்திருந்தனர்.

 

 

ஓ மை ஹோட்… அனுவக்கா.. நீங்களா? இப்பவாச்சும் எங்கட வீட்டுக்கு வழி தெரிஞ்சுதே… வாங்கோ.. வாங்கோ… வாங்கோ அன்ரி… வாங்கோ அங்கிள்…” முகத்திலே மகிழ்ச்சி தாண்டவமாட அனைவரையும் வரவேற்று அமரச் சொல்லி விட்டு தாயாரை அழைத்தாள் கவி.

 

 

யாதவ்வின் விடயம் ஏதும் அறிந்திராத கவியும் அவர்கள் எதேச்சையாக வந்திருக்கிறார்கள் என்று எண்ணி விட்டாள். தெய்வநாயகி முதலே வசந்தாவோடு பேசிச் சில திட்டங்கள் வகுத்திருந்தார். அதற்கிணங்க அனுவிடம் கண்ணைக் காட்டினார். அவளும் புரிந்து கொண்டு,

 

 

கவி நாங்க அஞ்சலி வீட்ட போய்ட்டு அப்பிடியே சந்நிதிக்கு போய்ட்டு வருவமே… இவை இருந்து கதைக்கட்டும்…”

 

 

ஓகே அனுவக்கா! இருங்கோ. நான் டூ மினிட்ஸ்ல ரெடியாகி வந்திடுறன்.” 

 

 

கவின்யா தயாராகி வரவும் அவளின் ஸ்கூட்டிபெப்பில் இருவரும் அஞ்சலி வீடு நோக்கி சென்றனர். 

 

 

சந்திரஹாசன் மனைவியைப் பற்றி தவறாக எடைபோட்டு தன் பேச்சை மீறி எதுவும் செய்ய மாட்டார் என்று எண்ணி அருண்யாவை அழைத்து வர கொழும்பு சென்றிருந்தார். கணவர் இல்லாத நேரம் தான் இவர்களை வரச் சொல்லி இருந்தார் தெய்வநாயகி அனைத்து விடயங்களையும் பேசி முடிப்பதற்கு. 

 

 

இங்க பாருங்கோ அண்ணை… நான் எல்லா உண்மையையும் சொல்லிட்டன். காதல் என்று ஒரு நாளும் சுத்தி திரிஞ்சதில்லை. ஆனால் விட்டால் என்ர மனுசனே இந்த வேத்து சாதிப் பொடியனுக்கு கட்டிக் குடுத்திடுவார் போல கிடக்கு.”

 

 

அப்ப உங்கட வீட்டுக்காரரை எப்படி சமாளிக்க போறீங்க…?”

 

 

அது நான் ஏதாவது செய்து சமாளிக்கிறேன். நீங்கள் கல்யாண வேலைகளைப் பாருங்கோ.” 

 

 

இருந்தாலும் எனக்கு ஏதோ பயமாக் கிடக்கு. நாளைக்கு எல்லா ஏற்பாடும் செய்து முடிய கவி மாட்டன் என்றால் என்ன செய்ற…?”

 

 

அவள் என்ர வளப்பு. என்ர சொல்லுத் தட்ட மாட்டாள். நீங்கள் அதைப் பற்றி யோசிக்காதீங்கோ…”

 

 

அதுதான் தெய்வமக்கா இவ்வளவு தூரம் சொல்லூறா எல்லே… பிறகேன் இழுத்து கொண்டு இருக்கிறியள்… கவி இல்ல என்றால் யாதவ் தாங்க மாட்டான் தெரியும் தானே. பிறகேன் யோசிக்கிறியளப்பா…?”

 

 

சரி… சரி… இன்னும் ரெண்டு கிழமையில ஒரு முகூர்த்தம் வருது. அண்டைக்கே எங்கட மண்டபத்தில கல்யாணத்தை வைக்கலாம்…”

 

 

தயவுசெய்து அந்த வேலை எல்லாம் நீங்கள் பார்த்து கொள்ளுங்கோ அண்ணே… எனக்கு இவரை சமாளிக்கவே நேரம் காணாது. அதுசரி மாப்பிள்ளை தம்பிக்கு காயம் எல்லாம் சுகமாகிட்டு தானே…”

 

 

ஓமோம்… எல்லா கட்டும் நேற்றோட பிரிச்சாச்சு…”

 

 

அப்ப ரொம்ப சந்தோசம்… உடுப்பு எல்லாம் உங்கட கடையிலேயே எடுப்பம். ரெண்டு கிழமையில எல்லா சொந்தங்களுக்கும் சொல்லுறதான் பிரச்சினை…” 

 

 

எத்தனை வெடிங்கார்ட் வேணும் என்று சொல்லுங்கோ. நாளைக்கே அடிச்சுக் குடுத்து விடுறன்…”

 

 

சரியண்ணே… ரொம்ப நன்றி… என்ர நிலைமையை புரிஞ்சு கொண்டு நீங்களே எல்லா வேலையளும் செய்யுறியள்…”

 

 

இதெல்லாம் எனக்கொரு விசயமில்லை. நீங்கள் கவியை சந்தோசமா அனுப்பி வைச்சா அதுவே போதும்… அதுசரி… ஸேர் எப்ப வாறார்?”

 

 

அவர் நாளைக்கு விடிய அருணியைக் கூட்டிக் கொண்டு வருவார். அவரை நான் பாத்து கொள்ளுறன். யோசிக்காதையுங்கோ. இவ்வளவு நேரம் கதைச்சதில குடிக்க ஒண்ணும் தரேல்ல. சமைக்கிறன். நல்ல விசயம் பேசி முடித்தது. சாப்பிட்டிட்டுதான் போக வேணும்…”

 

 

அதுக்கென்ன… தாராளமாக… நான் இப்பவே யாதவ்க்குப் போன் பண்ணி சொல்லிடுறன்… பாவம் பிள்ளை… ஒரே டென்சன்…”

 

 

யாதவ்விடம் கவின்யா சம்மதித்து விட்டதாக சொன்னார்கள். அவன் கால்கள் நிலத்தில் பரவாமல் வானுக்கும் பூமிக்குமாய் குதித்தான் மகிழ்ச்சியில். 

 

 

கவியும் அனுவும் திரும்பி வந்ததும் அனைவரும் சாப்பிட்டு விட்டு பிறகு சந்திப்போம் என்று கூறி விடைபெற்றார்கள்.

 

 

அவர்கள் சென்றதும் தெய்வநாயகி மெதுவாக கவின்யாவிடம் பேச்சுக் கொடுத்தார்.

 

 

இண்டைக்கு வந்த ராசி சில்க்ஸ் கடைக்காரர் அவைட மகனை உனக்கு தெரியுமா?”

 

 

ஓமணை… ஆஸ்பத்திரில கண்டனான்… நான் கடைசியாக நிண்ட வார்ட்ல தான் அக்ஸிடென்ற் ஆகி அட்மிட் ஆகி இருந்தவர். அனுவக்கா தன்ர அண்ணா என்று சொல்லி தெரியும்… யாரையோ லவ் பண்ணுறார் போல… காலில போட்டிருந்த பிஓபில கவிதை

எல்லாம் எழுதியிருந்தார்…”

 

 

தெய்வநாயகியின் சூழ்ச்சி ஏதும் அறிந்திராதவள் தனக்கு தெரிந்த விடயங்களை கூறினாள்.

 

 

அவன் காதலிக்கிறது உன்னைத் தான்…. அந்த கவிதை கூட உனக்காகத்தான் எழுதி இருந்தான்…”

 

 

மின்னாமல், முழங்காமல் அவள் தலையில் மிக இலகுவாக இடியொன்றை இறக்கினார் அந்த சாதி வெறி பிடித்த தாயார்.

 

 

என்னம்மா சொல்லுறிங்க…? அந்தாளை நான் முந்தி ஓரு நாளும் கண்டதில்லை. இப்ப ஆஸ்பத்திரில தான் முதல் முதலா கண்டனான்… பிறகு எப்பிடி காதல் கத்தரிக்காய் எல்லாம்? சும்மா விசர்க் கதை கதைக்காதையுங்கோ…”

 

 

மனதில் இனம் புரியாத ஒரு வலி தொடங்க கொஞ்சம் கோபமாகவே கூறினாள் கவி.

 

 

நான் ஒண்ணும் விசர்க்கதை கதைக்கேல… உன்னை முதல் முதலா ஆஸ்பத்திரில பார்த்த அண்டைக்கே நீதான் தன்ர பொண்டாட்டி என்று முடிவு பண்ணி அடுத்த நாளே சுந்தரலிங்கம் அண்ணையும் வைபும் வந்து எங்களோட கதைச்சவை. உனக்கு எக்ஸாம் முடியிற வரைக்கும் குழப்ப வேணாம் என்று எதுவும் சொல்லேல. மற்றபடி நாங்க எல்லாம் பேசி முற்றாக்கிட்டம்.  இண்டைக்கு வந்தது நாள் வைக்கத்தான்… இன்னும் ரெண்டு கிழமையில வர்ற பத்தாம் திகதி நல்லூர் அபிராமி ஹோல்ல கலியாணம்…”

 

 

காதில் விழுந்த செய்திகள் உண்மைதானா என்று ஒருகணம் கிரகிக்க முயன்றாள் கவின்யா. அவளால் எதையும் நம்ப முடியவில்லை. தன் மனம் கவர்ந்தவன் யாருக்காக இவ்வளவு வருடங்களாக காத்திருந்தாளோ அவன் வந்து பெண் கேட்கப் போகிறான் என்ற மகிழ்வில் இருக்க திடீரென தாக்கிய இந்த சுனாமியில் நிலைகுலைந்து போனாள். சிந்திக்கும் திறனற்று செய்வதறியாது திகைத்து நின்ற அந்த பேதைப் பெண்ணை பார்த்து தெய்வநாயகி தன் சுய உருவைக் காட்டத் தொடங்கினார். 

 

 

இங்க பாரு கவி… எனக்கு எல்லா விசயமும் தெரியும்… ஸாமோ ஸோமோ அந்த கிறிஸ்டியன் பொடியனைக் காதலிக்கிறது எனக்கு தெரியும். அவன் வேற சாதி என்றதும் எனக்கு தெரியும்… அதனால நீ ஆசைப்படுற எதுவும் நடக்கப் போறதில்லை…

 

 

இதையே நீ எங்கட சாதிக்க இந்த யாதவ் மாதிரி யாரையும் விரும்பியிருந்தால் நானே முன்னுக்கு நின்று கலியாணத்தை முடிச்சிருப்பேன்… உங்கட அப்பாவுக்கு ஒண்டும் விளங்காது.. பிள்ளையளிட விருப்பம் தான் முக்கியம் என்று எந்த கழுதையை வேணும் என்றாலும் கட்டி வைப்பார்… ஆனால் என்னால முடியாது.. எனக்கு எங்கட குடும்ப கௌரவம் முக்கியம்… நாளைக்கு வேற சாதி, மதத்தில அக்காகாரி கட்டியிருக்கிறாள் என்று அருணிட கலியாணமும் நிக்கும்… அப்ப அது உனக்கு சம்மதமா? நாங்கள் ஊருக்க நல்லது, கெட்டது போக முடியாது… அப்பாட மானம் என்னாகிறது

 

 

நீ படிச்ச பிள்ளை… உனக்கு நான் சொல்லி தரத் தேவையில்லை. நிதானமாக நான் சொல்லுறது எல்லாத்தையும் யோசிச்சுப் பார்… அருண்யாட வாழ்க்கை அழிய நீயே காரணமாக இருக்கப் போறியா

 

 

நான் ஒண்ணு மட்டும் சொல்லுறன்… யாதவ்வோட நான் எல்லாம் பேசி முற்றாக்கிட்டன். என்ர மானம் போகாமல் காப்பாத்த வேண்டியது இனி உன்ர கடமை… நீ சரியென்று சொன்னால் அப்பா கேட்பார்… 

 

 

ஆனால் இந்த கலியாணம் மட்டும் ஏதாவது காரணம் சொல்லி நடக்கேல என்றால் அதுக்குப் பிறகு என்னை உயிரோட பாக்க முடியாது. சும்மா மிரட்டுற என்று நினைக்காதை… எனக்கு எல்லாத்தையும் விட எங்கட குடும்ப கௌரவம் தான் முக்கியம்… உன்னை பெத்து வளத்து ஆளாக்கி விட்டதுக்கு நன்றிக்கடன் செலுத்தணும் என்றால் யாதவ்வை கல்யாணம் பண்ணிக்கொள்ளு… நான் முடிவா சொல்லிட்டன்… இல்லை காலம் பூராக பெத்த தாயிட சாவுக்கு காரணமானமே என்று நிம்மதி இல்லாமல் வாழ்வாய்… எந்த முடிவு என்று நீயே யோசித்து எடுத்து கொள்ளு கவி…”

 

 

யாரிடம் எதைச் சொன்னால் வேலைக்காகும் என்று சரியாக புரிந்து வைத்திருந்தார் தெய்வநாயகி. ஸாமைக் கல்யாணம் பண்ணினால் தான் தற்கொலை செய்து கொள்வேன் எனும் இதே மிரட்டலை சந்திரஹாசன் முன் செய்திருந்தால் எதுவும் நடந்திருக்காது. அவரின் வெத்து மிரட்டலை சட்டை செய்திருக்கவே மாட்டார் அவர். அதனால் தான் சாதுரியமாக சந்திரஹாசன் இல்லாத நேரமாக தான் விரும்பியதை நடாத்த காய் நகர்த்திக் கொண்டிருந்தார். அருண்யாவின் வாழ்க்கை பாழாகி விடும் என்றால் தங்கையின் மேல் உயிரையே வைத்திருக்கும் கவி தன் சொல்லை மீற மாட்டாள் என்ற திண்ணக்கம் அவருக்கு. 

 

 

அவர் அறியாத ஒன்றெல்லாம் அவரது வரட்டுக் கௌரவத்திற்கும் வெற்றுப் பகட்டுக்கும் பலியாகிக் கொண்டிருப்பது மூன்று சிறு உள்ளங்கள் என்பது தான். 

 

 

காலன் நாயின் வடிவில் மீளவும் கவியின் வாழ்வில் விளையாடினான். கவின்யாவின் வீட்டிற்கு புறப்பட்டு வரும் வழியில் ஒரு குட்டி நாயை நாலைந்து பெரிய நாய்கள் கடித்துக் குதற ஆயத்தமாக இதனைக் கண்ட அந்தோனி ஸாமிடம் மோட்டார் சைக்கிளை நிறுத்தச் சொல்லி பெரிய நாய்களைத் துரத்தி அந்த குட்டி நாயைப் பத்திரமாக அருகிலிருந்த காணிக்குள் விட்டு விட்டார். கலைந்து சென்ற நாய்களில் ஒன்று தங்கள் எண்ணம் ஈடேறாத கோபத்தை அந்தோனியில் காட்டி விட்டது. மோட்டார் சைக்கிளில் ஏறச் சென்ற வேளை எட்டி அவர் காலில் தன்  பற்களைப் பதித்து விட்டு ஓடி விட்டது.

 

 

அந்தோனி கவியின் வீட்டுக்கு சென்று விட்டு வைத்தியசாலை செல்வோம் என்று தான் கூறினார். ஆனால் ஸாம் தான் அது விசர் நாயாக இருந்தாலும் என்ற பயத்தில் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றான். நாளை கவி வீடு செல்லலாம், ஒரு நாளில் என்ன ஆகி விடப் போகிறது என்ற எண்ணம் அவனுக்கு. பாவம். அவனுக்கு எப்படி தெரியும் அந்த ஒருநாள் தாமதம் தான் அவன் வாழ்க்கையையே மாற்றிப் போடப் போகிறது என்று.

 

 

அன்றிரவு அருண்யாவுக்கு தொலைபேசியில் நாய் கடித்து அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் போனதைத் தெரிவித்து அடுத்த நாள் கண்டிப்பாக வருவதாக உறுதி கூறியிருந்தான். அருண்யாவுக்கும் தாங்கள் எல்லோரும் வீட்டில் இருக்கும் நேரத்தில் அவன் வருவது மகிழ்ச்சி அளிக்க சந்தோசமா ஒத்துக் கொண்டு தந்தையிடமும் விடயத்தை சொல்லி வைத்தாள்.

 

 

தெய்வநாயகி தன் எண்ணத்தை வெளிப்படுத்தியதிலிருந்து கவின்யா தவியாய் தவித்தாள். துடியாய் துடித்தாள். தன் மனசுக்குள் பொத்திப் பாதுகாத்த தன் காதலை எண்ணிக் கலங்கினாள். அவள் என்றைக்குமே சுயநலமாக யோசித்தது கிடையாது. அவ்வாறிருக்க காதலா? தன் தாயின் உயிரா? என்று வரும் போது அவளால் என்ன முடிவு தான் எடுக்க முடியும்.

 

 

ஸாம் வந்து கதைப்பான். தெய்வநாயகியின் மனசை அவன் மாற்றி விட மாட்டானா? என்ற நப்பாசையில் அன்று முழுவதும் காத்திருந்தாள். அந்தோ பரிதாபம் அவன்தான் வரவில்லையே. அன்று முழுவதும் உண்ணாமல் உறங்காமல் தனது அறையிலேயே கண்ணீர் சிந்தியபடி இருந்த கவின்யா இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து தன் மனதை சமனிலைப் படுத்திக் கொண்டாள். ஏனெனில் அடுத்த நாள் காலையில் வரும் தங்கையையும் தகப்பனையும் எதிர் கொள்ள அவள் தயாராய் இருப்பது அவசியமல்லவா?

 

 

தங்கையிடம் தொலைபேசியில் எப்போது வீடு வருகிறார்கள் என்று விசாரித்தவள் தந்தையிடம்,

 

 

அப்பா… நாளைக்கு நான் உங்களிட்ட ஒரு முக்கியமான விசயம் கதைக்க வேணும்… நீங்கள் என்ர விருப்பத்துக்கு ஒருநாளும் மாட்டேன் என்று சொல்ல மாட்டிங்க என்ற துணிவில உங்களைக் கேட்காமலே இந்த முடிவை எடுத்திட்டன்… என்னைக் கோபிக்க மாட்டிங்க தானேப்பா…”

 

 

இல்ல கவிம்மா… அப்பாக்கு உங்கள் ரெண்டு பேரிட சந்தோஷமும் தான் முக்கியம். நீங்கள் பிழையான முடிவு எதுவும் எடுக்க மாட்டியள் என்று அப்பாவுக்கு தெரியும். அப்பா உங்களை இவ்வளவு படிப்பிச்சு விட்டதே நீங்கள் உங்கட ஆசைப்படி சுதந்திரமாக உங்கட காலில நிக்க வேணும் என்று தானே… பிறகென்னம்மா…? நீங்கள் என்ன செய்ற என்றாலும் அப்பா பிள்ளைக்கு துணையா இருப்பன். கவலைப் படாமல் படுங்கோ… அப்பா காலைமை வந்திடுவன்தானே… நாங்க வடிவா கதைப்பம்… ஓகே… குட்நைட் கவிம்மா…”

 

 

தாங்ஸ்பா… குட் நைட்…”

 

 

தந்தையிடம் பேசி விட்டு கைப்பேசியை அணைத்தவளுக்கு ஒரு குறுந்தகவல் வந்திருந்தது. 

 

 

இன்று வராததற்கு மன்னித்துக் கொள் கண்மணி… நாளை நிச்சயம் உன்னைப் பார்க்க வருவேன்… உனைக் காணாத நாள் ஒவ்வொன்றும் ரணமாய் எனக்கு… உன் கைப்பிடித்து மடிசாயும் நாளுக்காய் காத்திருக்கும் உன் மன்னவன் கவிதாஸன்…”

 

 

புதிய இலக்கத்திலிருந்து வந்திருந்த அந்த செய்தியைப் பார்த்து மனதில் ஏதோ பிசைய தன் மனம் கவர்ந்த கள்வனை மனசிற்குள்ளே குற்றம் சாட்டத் தொடங்கினாள்.

 

 

ஏன் அபிஷேக் நீங்க வரேல்ல…? நான் எவ்வளவு ஆசையாக காத்திருந்தேன் தெரியுமா? கடைசியில் அம்மா இன்னொருத்தனை கல்யாணம் பண்ணட்டுமாம்… இதற்காகத்தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தோமா..? எதற்காக ஸாம் இந்த காத்திருப்பு? ஏன் உங்களோடு கதைத்தால் என் படிப்பு குழம்பி விடுமா? அப்ப இப்ப மட்டும் என்ன உங்களை நினைக்காமலா படிச்சு முடிச்சன்? எனக்கு தெரியும் ஸாம்… உங்கள் காத்திருப்பு எல்லாம் என் படிப்பிற்காக இல்லை. உங்கள் பயத்தினால்… இந்த சாதி, மத பிரச்சினையைப் பார்த்து வந்த பயத்தில் தான் இவ்வளவு நாளும் நீங்கள் காத்திருந்தது… ஆனால் உங்கள் காத்திருப்பால் என்னை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளி விட்டிங்களே… இது உங்களுக்கே நியாயமா…?”

 

 

மனசிற்குள் அவள் மௌனமாய் காதல் செய்தவனோடு பேசிக் கொண்டே அன்றைய நாளின் அதீத மனக் களைப்பால் ஏற்பட்ட அசதியில் தூங்கிப் போனாள் கவின்யா.

 

 

அடுத்த நாள் கவின்யா சந்திரஹாசனிடம் சொல்லப் போகும் சேதி என்ன? ஸாம் அடுத்த நாளாவது சொன்னபடி வருவானா? அந்த குறுஞ்செய்தியை அனுப்பிய கவிதாஸன் யார்? தெய்வநாயகியின் தற்கொலை மிரட்டல் வெற்றி பெறுமா

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 26’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 26’

அத்தியாயம் – 26 நல்ல முடிவாய் எடுப்பானா ஸாம்?     அடர்ந்து பரந்து நிழல் பரப்பியிருந்த பெரிய சவுக்கு மரத்தின் கீழே ஜமுக்காளம் பரப்பி உணவுப் பொருட்களைக் கடை பரப்பி சுதனின் கர்ப்பிணி மனைவி காவல் இருக்க மீதி அனைவரும்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 30’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 30’

அத்தியாயம் – 30 மனம் மாறுவாளா அருண்யா?     அடுத்த நாள் காலை. அதிகாலையிலேயே விழிப்பு தட்டி விட கண் விழித்தவன் கட்டிலை விட்டு எழ எத்தனிக்க அவனை அணைத்தவாறு தன்னை மறந்து துயின்று கொண்டிருந்தாள் அருண்யா.     

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 19’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 19’

அத்தியாயம் – 19 யாதவ்வின் காதல் ஈடேறுமா?     கவின்யாவின் அறையில் உடை மாற்றி அங்கிருந்த ஒற்றை ஸோபாவில் அமர்ந்திருந்தான் யாதவ். கவியோ அணிந்திருந்த நகைகளைக் கழற்றி அந்த ஒப்பனையைக் கலைப்பதில் ஈடுபட்டிருந்தாள். நெற்றிச்சுட்டியை எடுத்து விட்டு அவள் நீண்ட