Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 8

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 8

அத்தியாயம் – 8 

 

ஜாம்நகர் ட்ரெயின் சற்று பழசாகத்தான் இருந்தது. ஜன்னல் கம்பிகள் எல்லாம் துருப்பிடித்து, கழிவறைக் கதவுகள் கூட அப்படித்தான். முதல் வகுப்பு என்பதால் சற்று சுத்தமாக இருந்தது. இதுவே மற்ற வகுப்புக்களுக்கும் இருக்குமா என்பது சந்தேகம்தான். 

 

அதற்குள் ஜன்னல் இடைவேளையில் ஓடி மறைந்த ஒரு கரப்பான் பூச்சி எத்தனை சுத்தம் செய்தாலும் என்னை எல்லாம் அழிக்கவே முடியாதாக்கும் என்று மீசை முறுக்கியது. நம்ம ஊரில் தான் இதுகளின் கதகளி ஆட்டமா? ஒரு வேளை எல்லா இடங்களிலும் இப்படித்தானோ? 

 

செம்பருத்தி நீண்ட தூரம் பயணம் செய்ததில்லை. ஒன்றிரண்டு முறை சென்னை, மதுரை சென்று வந்திருக்கிறாள். அவளது தேவைகளை திருநெல்வேலி டவுனே கவனித்துக் கொண்டதால் வேறு ஊருக்குச் செல்லும் தேவையே ஏற்படவில்லை எனலாம். 

 

எனவே இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டாள். வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக மாறுகிறது அவளுக்கு.

 

 உடலளவிலும் மனதளவிலும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இருந்த செம்பருத்தி வேறு. இரு வருடங்களுக்கு முன்பு வரை கூட மாங்கு மாங்கென்று தீபாவளிப் பலகாரங்களைச் செய்து சொந்தக்காரர்கள் அனைவரின் வீட்டிற்கும் கொடுத்து வந்த செம்பருத்தி வேறு. 

 

இப்போது காலத்தால் அடித்து துவைக்கப்பட்டு, மனதளவில் தானே தைரியத்தை நிரப்பிக் கொண்டு, ஒரு கை பார்த்துவிடுவது என்று துணிந்து வாழ்க்கை சமுத்திரத்தில் இறங்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் தற்போதைய புத்தம் புது  செம்பருத்தி வேறு. 

 

வண்டி நாகர்கோவில், திருவனந்தபுரம் ஸ்டேஷன்களைத் தாண்டிப் பயணித்தது. 

வழக்கமாக தெக்கத்திப் பக்கம், காதுவளத்த கிழவிகள் சொல்வது, ஒரு ஊருன்னா மூணு குளம் இருக்கணும். ஒண்ணு மனுசப்பய குளிக்க, ரெண்டாவது குடிதண்ணி எடுக்க, மூணாவது ஆடு மாடுங்களுக்குத் தண்ணி காட்ட. 

 

குளத்தை சுத்திலும்  நல்ல உயரமா பனை மரத்தை நட்டு வைக்கிறதோட மட்டுமில்லாம நல்ல உயரமான பச்சை பசேல்னு இலை  இருக்குற மரங்களையும் நட்டு வைப்பாங்க. 

 

அந்த மரங்களை எல்லாம் தூரத்தில இருந்து பாக்கும்போதே வழிப்போக்கங்க கண்ணில் படும். அதை வச்சு அங்க குளம் இருக்கு, படுத்து இளைப்பாற நிழல் இருக்குன்னு புரிஞ்சுகிட்டு சிரமப் பரிகாரம் செய்ய  வந்துருவாங்களாம். 

 

இதெல்லாம் இந்த ஊர் கிழவிங்க சொல்லல போல, எங்க பாத்தாலும் குளம். இதில் எது மனுஷங்க குளம்? எது ஆட்டுக்குளம்? எல்லா குளத்துலயும் மீன் நிறைய இருக்கும் போலிருக்கே! அதுதான் மீன் நிறையா சாப்பிடுறாங்களோ?

 

இப்படி வேறு பலதையும் யோசித்துக் கொண்டு பயணம் செய்வது சுகமாகவே இருந்தது. வீடு, அத்தை வீடு, அத்தை மகன் ரமேஷின் கல்யாணம், ஏமாந்து போன முப்பது லட்சம், திக்கற்று நின்றது எல்லாம் மறந்தே போனது. இதனாலதான் மாரியம்மாக்கா வெளிய போக சொன்னாங்ளோ. 

 

காலையிலிருந்து ஜலப்பிரியா வற்புறுத்தியும் வீட்டை விட்டுப் பிரியப் போகும் சோகத்தில் தொண்டை அடைக்க, ஒன்றும் சாப்பிடாமல் கிளம்பியவள், காவ்யாவின் பேச்சைக் கேட்டதும் வெறுப்பில் சமோசாவும் டீயும் உள்ளே தள்ளினாள். அதன் பின்னர் தண்ணீரைத் தவிர வேறெதையும் தொடவில்லை. கடையில் இருந்தால் இந்நேரம் எதையாவது வயிற்றுக்குப் போட்டிருப்பாள். இப்போது பயணமும் இயற்கையும் பசிக்கவே விடவில்லை. 

 

அதே பெட்டியில் இன்னொரு குடும்பமும் ஏறியது. வடநாட்டு தாய் தந்தை மகன்கள். ஜாம்நகர் சொல்கிறார்களாம். இந்தக்கா மைதாமாவால் செய்தது போல எவ்வளவு அழகு? 

 

காவ்யா கூட அழகுதான். குடும்பக் குத்துவிளக்காய்  பார்க்கும்போதெல்லாம் புடவைதான் கட்டிக்கொள்கிறாள். ஆனால் அவள் முகத்தை நினைத்தாலே பயந்தல்லவா வருகிறது. ஆனால் இந்தக்காவைப் பார்த்தால் அப்படியே மனசுக்குக் குளுமையாக சந்தோஷமாக வருகிறதே. ஏன் அப்படி?

 

ஹான்… கண்டுபிடிச்சுட்டேன். புன்னகை, இந்தக்காவுக்கு மனதில் இருந்து வரும் புன்னகைதான் அழகு. காவ்யாவின் புன்னகை தேவைக்காக மட்டும்,  உதட்டளவில் ஒட்டி இருப்பது. 

 

அந்த மாதிரி செயற்கை புன்னகை வேண்டாம் . நானும் இனிமேல் இந்தக்கா மாதிரி மனசில் இருந்து புன்னகை செய்யணும். கண்டுபிடித்து விட்ட மகிழ்ச்சியில் அந்தக் குட்டிக் குழந்தைகளைப் பார்த்துப் புன்னகைத்தாள். அந்தக் குழந்தைகள் முதலில் சற்று நேரம் தயங்கின பின்னர் அவளுடன் விளையாட ஆரம்பித்தன. 

 

அந்தக்கா குழந்தைகளுக்குத் தின்னக் கொடுத்த பண்டங்கள் மங்கிலால் நிறுவனத்தின் தயாரிப்பு. தானும் அந்த நிறுவனத்தில் பணி புரிந்ததாக தன் சாப்பாட்டு மூட்டையில் ஜலப்பிரியா திணித்திருந்த தட்டை பாக்கெட்டைக் காட்டிச் சொன்னாள். குழந்தைகள் அவளது தட்டை பாக்கெட்டை வாங்கி மட மடவென பிரித்து சாப்பிட, 

 

“டேய், அது அந்தக்காவோடது டா… திருப்பித் தாங்க” என்று அந்தப் பெண்மணி சத்தம் போட 

 

“விடுங்க அக்கா… “ என்று செம்பருத்தி தடுத்து நிறுத்தினாள்.

 

“எங்க போற?” என்று கேட்குமளவுக்கு சில அடுத்த ஒரு மணி நேரத்தில் நெருங்கிவிட்டனர் சூர்யாவும் செம்பருத்தியும். கம்யூனிக்கேஷன் ஸ்கில் எப்படிப் பேசணும், என்ன பேசணும், எதைப் பேசணும், எங்க பேசணும் இதெல்லாம் இவங்களுக்குத் தன்னால வந்துடுமோ? 

 

ஆலப்புழா வந்தபோது கட்டுசோத்தை பிரித்து பங்கு போட்டுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். 

 

“என் வீட்டு அட்ரஸ் தந்திருக்கேன். அந்தப் பக்கம் வந்தா வீட்டுக்கு வா… “

 

“சரிக்கா… “ என்ற செம்பருத்தியின் அலைப்பேசியில் அவர்கள் வீட்டு விலாசம் முதற்கொண்டு அனைத்து விவரங்களும். 

 

குழந்தைகளுடன் விளையாடியதில் பொழுது போனதே தெரியவில்லை. அடுத்த ஒரு மணி நேரத்தில் எர்ணாகுளம் வந்துவிட்டது. குழந்தைகள் தூங்க அவர்கள் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டுக் கிளம்பினாள் செம்பருத்தி. 

 

“மறக்காம பருமேல ஜாதிக்காய் அரைச்சு வை. அப்படியே காஞ்சுடும். தடம் கூட வராது” என்று சொல்லி அனுப்பினாள் சூர்யா. 

 

இதைக் கூட இந்த சூர்யா அக்கா எப்படி வலிக்காமல் சொல்கிறாள். இதையே சிலர் 

“அய்யே என்ன செம்பருத்தி இப்படி வாரிக் கொட்டிருக்கு?”

 

“இதென்னது மூஞ்சில எல்லாம்… அம்மி கொத்துறவன் அம்மிக்கு பதிலா உன் மூஞ்சீல கொத்திட்டானா என்ன?” என்று சொல்லி கொல்லென்று அனைவரும் அவளைக் கேலிப் பொருளாக்கி சிரித்ததும். 

 

இவளைக் கேலி செய்து சிரித்தவர்கள் யாரும் உலக அழகிகள் இல்லை. அதை விடுங்கப்பா உள்ளூர் அழகிகள் கூட இல்லை. 

 

குமுறிக் குமுறி அழுதவளை மாரியம்மா அக்காதான் மீட்டது. 

 

“செம்பருத்தி நான்தான் கிள்ளக் கூடாதுன்னு சொல்லிருக்கேனே. மறுபடியும் மறுபடியும் அதையே செஞ்சு தானா மறைஞ்சு போறதை ஆழமான புண்ணாக்கிட்டியே”

 

“அக்கா முடியலைக்கா… எல்லாரும் கிண்டல் பண்ணுறாங்க. நம்ம ஊரு பசங்க எல்லாம் நான் நடந்து வரும்போது ‘யானை வருது யான வருது வழிய விடுங்கடா’ ன்னு பாட்டுப் பாடுறாங்க. யானை பிளிறுற மாதிரி சத்தம் வேற கொடுக்குறாங்க அக்கா. அதைப் பாத்து தெரு பொம்பளைங்க எல்லாம் சிரிக்கிறாங்க அக்கா. என் உடம்பு இப்படி ஊதிப் போனா நான் என்னக்கா செய்வேன். எனக்கு உதவி செய்யலைன்னா கூட கேலி கிண்டல் செஞ்சு மனசைப் புண்படுத்தாம இருக்கலாம்ல. 

 

கடைக்கு வர கஸ்டமெர்ஸ் எல்லாம் எம் மூஞ்சியைப் பாத்து அருவருப்பு படுறமாதிரி இருக்குக்கா. இந்தப் பருவைக் குறைக்க அழகு நிலையத்துக்கு போயி சிகிச்சை எடுத்துக்கிட்டேன். இன்னும் கூடிப் போச்சு”

 

“பைத்தியம், இதுக்கெல்லாம் காரணம் தெரியாம எப்படி இதுதான் தீர்வுன்னு சொல்லுவ. சிகிச்சை எல்லாம் எடுத்துக்க வேண்டியது டாக்டர் கிட்ட. அழகு நிலையம் அழகு படுத்த கிளீன் அப் செய்ய, ஆனால் உன் உடம்புக்குள்ள என்ன இருக்கு? எதனால இப்படி வருதுன்னு தெரிஞ்சு காரணத்தை சரி பண்றதுதானே புத்திசாலித்தனம். 

வீட்டில் ஓதம் கட்டினால் பெயிண்ட் அடிக்கிறது சரியா இல்லை சேதமடைஞ்ச காரணத்தைக் கண்டுபிடிச்சு சரி செய்யணுமா?”

 

“அப்ப என்ன காரணம்னு கண்டுபிடிங்க… “

 

அப்போது கண்டுபிடித்ததுதான் பிகாஸ்(PCOS),ஆண்தன்மை சுரப்பியான ஆண்ட்ரொஜென் இவர்களுக்கு அதிகமாக சுரக்கும். அதன் விளைவால்  ஒழுங்கற்ற மாதவிடாய், உடல் எடை, முகப்பரு, தோலில் கருமை படர்தல் என்று எக்கச்சக்கமான பிரச்சனைகள் வரிசைகட்டிக் கொண்டு வரும்.

 

மாரியம்மா அவளை பரிசோதித்துப் பார்த்து சொன்னது மன அழுத்தம். அதுனாலதான் உனக்கு ஏதாவது வாயில் போட்டுட்டே இருக்கணும்னு தோணுது. நீ காய்கறி கடைல வேலை பார்த்திருந்தால் அங்கே இருக்குற தக்காளி, வெள்ளரி எல்லாத்தையும் எடுத்துத் தின்னிருப்ப. சுவீட் கடைல வேலை பாக்குறது உன் உடல் நலத்துக்கு எதிரா வேலை செய்யுது. 

 

அப்பறம் சுத்தமா உடல் உழைப்பே இல்லை. உன்னை பொத்தி பொத்தி பாதுகாத்து வேனில் ஏறி வேலைக்கு போறதும், அதே வேனில் ராத்திரி வீட்டு வாசலில் இறங்குறதும், வந்ததும் சாப்பாட்டை புல் கட்டு கட்டிட்டுத் தூங்குறதும். இதெல்லாம் பிற காரணிகள். உன் வாழ்க்கை முறையில் கண்டிப்பா மாற்றம் தேவை செம்பருத்தி”

 

“பட்டினி கெடந்தா எல்லாம் சரியாயிடுமா அக்கா”

 

“பட்டினி கிடக்கிறது இருக்கட்டும். உன்னோட ஸ்ட்ரெஸ் எல்லாத்தையும் குறை. மனசை லேசாக்கு”

 

“எனக்கு இருக்குற பிரச்சனை மத்தவங்களுக்கு இருந்தா அப்ப தெரியும் எத்தனை வேதனை என் வாழ்க்கைல இருக்குன்னு “

 

“மத்தவங்களுக்கு பிரச்சனை இல்லாம இல்லை செம்பருத்தி. என்னையே எடுத்துக்கோ. நான் பிரச்சனையை சந்திக்கலன்னு நினைக்கிறியா?”

 

“உங்களுக்கு அப்படி என்னக்கா பிரச்சனை? என்னை மாதிரி குண்டா இல்லையே. ஒல்லியா இருக்கிங்க. எனக்கு இருக்குற மாதிரி பரு இல்லை. கிளியர் ஸ்கின். என்னை மாதிரி பன்னெண்டாவதில் படிப்பை நிறுத்தல. டாக்டருக்கு படிச்சிருக்கிங்க” அடுக்கிக் கொண்டே போனாள். 

 

“ஒரு நாளைக்கு ஏழு வேளை சாப்பிட்டாலும் எனக்கு சதையே போடாது. ஏன்னா என் உடல்வாகு அப்படி. அதனால என்னை கிள்ளிப் பிடிக்க சதை இல்லை. உனக்கு அதிகமா உடம்பு போட்டதால யானைன்னு சொன்னவங்க என்னை உடல் சரியான வளர்ச்சி இல்லாம இருந்ததால ஆம்பிள்ளைன்னு சொன்னாங்க. வெளிய சொன்னா வெட்கம் வாழைக்காய் பஜ்ஜின்னு தான் அந்த டீக்கடை பெஞ்சு நாதாரிங்க கூப்பிடும்”

 

“எவ்வளவு தைரியம்? யாரும் கேள்வி கேட்கலையாக்கா?”

 

விரக்திப் பெருமூச்சுடன் தொடர்ந்தாள் மாரியம்மா “எங்கம்மா நம்ம ஊர் டாக்டர் விநாயகம் நர்சிங்ஹோம்ல ஆயாவா வேலை பாத்தாங்க. அப்பா, நான்  பொம்பளைப் பிள்ளையாப்  பிறந்ததும் ஓடிப் போனவர்தான் இன்னமும் எங்க இருக்கார்னு ஒரு தகவல் கூட இல்லை. இந்த மாதிரி ஒரு பின் புலத்தோட இருக்குறவங்களை யாரு வேணும்னாலும் கிண்டல் பண்ணலாம்”

 

“நிஜம்தான்கா. அனால் அது அரக்கத்தனம். இப்படி மெலியார் மேல் சொல்லாலும் செயலாலும் தாக்குற எல்லாமே அசுரத்தனம்தான்” என்றாள் உண்மையான வருத்தத்தோடு. 

 

“மூணு வேளை சாப்பாடு கிடைக்கிறதே கஷ்டம். அரசாங்கத்தை நம்பிப் படிச்சேன். அரசாங்கம் இந்த மார்க்கை வாங்கினது யானையா இல்லை வாழைக்காய் பஜ்ஜியான்னு பாக்குறதில்லை. நல்ல மார்க்கு வாங்கினதும் சீட்டு தந்தது. 

 

டாக்டருக்குப் படிக்கும்போது உடற்கூறு பாடம் எடுத்தாங்க. அப்பத்தான் உலக அழகியா இருந்தாலும் சரி உள்ளூர் கிழவியா இருந்தாலும் சரி, செத்தா இப்படித்தான் சதை அழுகும், நாத்தம் அடிக்கும் னு புரிதல் வந்தது. 

 

படிப்பை முடிச்சுட்டு நம்ம ஊருக்குத் திரும்பி வந்து, எங்கம்மா குனிஞ்சு நிமிந்து கூட்டி குப்பை வாரின அதே தெருவில் தலை நிமிர்ந்து நடந்தேன். இதே டீக்கடை பெஞ்சு ‘டாக்டரம்மாக்கு டீ போடுடே’ன்னு சலாம் போட்டது. 

 

இங்க பாரு செம்பருத்தி, இந்த டீக்கடை பெஞ்சோ இல்லை  பொழுது போகாத பொம்பளைங்களோ, அவங்க  யாரு நீ யானையா பூனையான்னு டிசைட் பண்ண? உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு. அதை அடையுற வரைக்கும் இந்த கேலிப் பேச்சைக் கேட்காத செவிடா மாறிடு”

 

ஆமாம் எத்தனையோ நாட்களாக அவள் செவிடாகத்தான் இருக்கிறாள். நினைத்துக் கொண்டே பிளாட்பாரமைக் கடந்து படியில் ஏறி வேடிக்கை பார்த்தபடி நடந்தாள். கடைகளும் அதில் கேரளத்திற்கே உரித்தான தேங்காய் எண்ணெய் மணத்தோடு எழுந்த பலகாரத்தின் மனமும், வெகு சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருந்த சுற்றுப்புறமும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. 

 

மேலிருந்து பார்த்தபோது நாலைந்து ட்ரெயின் டிராக்குகள் தெரிந்தது. ரயில் பாட்டுக்கு ஒரு டிராக்கில் பயணிக்க, பக்கத்தில் இருந்த டிராக்குகளில் ரோட்டில் நடப்பது போல் சாவகாசமாய் நடந்த சிகப்பு சொக்காய் வேஷ்டி கட்டிய சேட்டன்களும், குளித்து ஈரம் போவதற்குள் கிளிப் ஒன்றைத் தலையில் போட்டுக் கொண்டு வேகு வேகென்று நடந்த சேச்சிகளும் அவளை ஆச்சிரியப்படுத்தினார்கள். 

 

கிராஸ் பண்ணுறதுக்குள்ள ட்ரெயின் மேல ஏறிட்டா? இவர்களுக்கெல்லாம் பயமா இருக்காது? யோசித்துக் கொண்டே புக்கிங் ஆபிசுக்கு முன் வந்து நின்றாள். 

 

“அம்மா, நீங்கதான் ஷெம்பருத்தியா” என்று பக்கத்தில் மலையாளம் கலந்த தமிழ் அழகான ஜேசுதாஸ் பாடல் போல ஒலித்தது. 

 

“ஆமாம்… நீங்க?”

 

வெள்ளை நிற ஓட்டுநர் உடையில் இருந்தவன் “நான் கோபன். பெரியய்யாவோட ட்ரைவர்” தனது ஐடியை காண்பித்து லெட்டர் ஒன்றையும் அவளிடம் கொடுத்தான். 

 

செம்பருத்தி வக்கிலை அழைத்து அவன் சரியான ஆள்தான் என்று உறுதி செய்துக் கொண்டு கிளம்பினாள். 

 

கோபனுக்கு இருபத்தி ஐந்து வயதிற்குள்தான் இருக்கும். நல்ல உயரமாக வெளுப்பாக இருந்தான். மிகுந்த மரியாதையோடு அவளிடம் பேசினான். தனது தோற்றத்தை வைத்து பெரியவள் என்று நினைத்து மரியாதை கொடுக்கிறான். 

 

‘மரியாதை எல்லாம் தானாகக் கிடைக்கும்போது வேண்டாம் என்று சொல்லக் கூடாது. வாங்கிக் கொள் செம்பருத்தி’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

 

“வீட்டுக்கு போக ராத்திரி ஆயிடும். இங்க நல்ல டிபன் கிடைக்கும். சாப்பிடுறிங்களா அம்மா”

 

“இல்லை கோபன். நான் மத்தியானம் நல்லா சாப்பிட்டுட்டேன். வீட்டுக்கே போயிடலாம்” முதல் முறையாக உணவை வேண்டவே வேண்டாம் என்று சொல்கிறாள். இதுவே நல்ல மாற்றமாக அவளுக்குத் தோன்றியது. 

 

அவளது பெட்டிகளை எடுத்துக் கொண்டான் கோபன். வண்டி கிளம்பியது.

4 thoughts on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 8”

  1. அருமை மதுரா.
    பிரதிலிபி member நான். அங்க பதிவிடும் முன் இங்க படிக்கிறேன். உங்க எழுத்து நடை எப்பவும் போல இப்பவும் அபாரம்

    1. உங்களது கமெண்ட்சை பிரதிலிபியில் படித்து இருக்கிறேன். தங்கள் வருகைக்கு நன்றி ஹேமா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 21தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 21

அத்தியாயம் – 21  அன்றைய பொழுதினை அப்படியே முடிவில்லாமல் நீட்டித்துக் கொண்டே  போக மாட்டோமா என்றிருந்தது அங்கிருந்த ஒரு ஜோடிக்கு. யார் கண் பட்டதோ அந்த சூழ்நிலை ஒன்றிரண்டு மணி நேரத்தில் அப்படியே உல்ட்டாவானது. அதன் தொடக்கமான முதல் நிகழ்ச்சியும் அப்போதே

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 11தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 11

அத்தியாயம் – 11   இப்போது என்ன செய்வதென்றே செம்பருத்திக்கு ஒன்றும் புரியவில்லை. கெட் அவுட் என்றால் இப்போதைக்கு அறையை விட்டு கெட் அவுட்டா? இல்லை நிரந்தரமாக வீட்டை விட்டே கெட் அவுட்டா?    யாரிடம் கேட்கலாம்? இவளை இந்த வேலைக்குச்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 39தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 39

அத்தியாயம் – 39   அவினாஷ் பிறந்ததை சில வருடங்களுக்கு மட்டுமே நாகேந்திரனால் மந்தாகினியிடமிருந்து மறைக்க முடிந்தது. அதுவும் முதல் ஒன்றிரண்டு வருடங்கள் லண்டனிலேயே வளர்ந்தான். அதன்பின் மங்கை பாம்பாயில் தனது வேலையைத் தொடர விரும்பினார். அதுவரை அவர்களுடன் தங்கி லண்டனில்