Tamil Madhura இனி எந்தன் உயிரும் உனதே,தமிழ் மதுரா இனி எந்தன் உயிரும் உனதே – 22

இனி எந்தன் உயிரும் உனதே – 22

அத்தியாயம் – 22

 

ப்ப என்ன செய்றது? “ வாய்விட்டே கேட்டுவிட்டார் கபிலர். பொங்கல் பானை உடைந்து தண்ணீர் அடுப்பில் ஓடி நெருப்பை அணைத்து புகையை எழுப்ப ஆரம்பித்திருந்தது.

 

“பெரிய தெய்வ குத்தம்னு பொலம்புவாங்களே பாரி” என்றார் சின்னம்மா கவலையாக.

 

“ஹக்… ஹக்… “ என்ற வண்ணம் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள் அமுதா.

 

“என்னாச்சு… ஏன் இங்க புகையா இருக்குன்னு பாத்துட்டு வர சொன்னாங்க” என்று வந்து நின்றான் உறவுக்காரன் ஒருவன்.

 

“ஏன் அமுதா அழுவுது… நீங்க யாராவது என்னமாவது சொன்னிங்களா” என்று அவர்களைக் கேள்வி கேட்டு தான் அமுதாவின் உறவினன் என்று நிரூபித்தான்.

அவன் அப்படிக் கேள்வி கேட்கவும் “இல்ல வெங்கடேசு… இவங்க போட்டோ பிடிக்க பானையைப் பிடிச்சுட்டு போஸ் கொடுத்தேனா… லலிதாவுக்கு போட்டோ எடுக்கத் தெரியாம நேரம் பண்ணுச்சா. அதில் என் கை சூடு பொறுக்காம சிவந்து போயி, பானை கீழே விழுந்து உடைஞ்சுடுச்சு. ரெண்டு பேரும் சேந்து பண்ண தப்புக்கு என்னை மட்டும் குறை சொல்றாங்க” என்று சொல்லி குண்டைத் தூக்கிப் போட்டாள்.

 

லலிதா அசந்து போய் நிற்க, பாரி கோபத்தில் பல்லைக் கடிக்க, கபிலர் இப்படி ஒரு பெண்ணா என்று திகைக்க, சின்னம்மாவோ “ஆமாண்டா… வெங்கடேசா… உங்க அமுதா பாவம். அவளுக்கு ஒண்ணுமே தெரியாது. நானும் லலிதாவும் தான் பொங்க வச்சோம் அப்பறம் பானையைப் போட்டு உடைச்சோம். அப்பறம் இந்த அப்புராணியை கைகாட்டிவிட்டுட்டு கமுக்கமா உக்காந்திருக்கோம்” என்றார் நக்கலாக.

 

“  எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருக்கிங்களா“ என்றான் பாரி. பின்னர் பெருமூச்சு விட்டபடி “நடக்குறது நடந்தேதான் தீரும். நான் போயி அம்மாட்ட சொல்லிட்டு மேற்கொண்டு என்ன செய்றதுன்னு கேட்டுட்டு வரேன்” என்ற வண்ணம் கிளம்பியவனைத் தடுத்தாள் லலிதா.

 

“பாரி ஏற்கனவே கல்யாணத்தில் தடைனு தானே பொங்கல் வைக்க ஏற்பாடு செஞ்சிருக்காங்க… இப்ப போயி இதை சொன்னால் பிரச்சனை பெருசாயிடாதா”

 

“வேறென்ன சொல்ற லல்லி”

 

“சாமி கும்மிட இன்னும் நேரமிருக்கே… சீக்கிரம் பொங்கல் வச்சுடுவோம்”

 

“முடியுமா… இங்க பாரு “ அவன் காட்டிய இடத்தில் அடுப்பு முழுவதும் பொங்கிய சாதம் கொட்டி அணைத்திருந்தது. விறகெல்லாம் ஈரம்.

 

வெண்பொங்கல் பானையைத் திறந்தவள் “இது தணல்லேயே இருக்கட்டும். அப்படியே வெந்துடும். அதனால சக்கரைப் பொங்கல் வச்சா போதும்”

 

“எப்படி வைப்ப… அடுப்பு இல்லை, பானை உடைஞ்சுடுச்சு” என்றாள் அமுதா.

 

“அமுதா கொஞ்சம் பேசாம இருக்கியா… நீ சொல்லு லல்லி” என்றார் சின்னம்மா

 

“மூணு கல்லு அங்க இருக்கில்ல அதை எடுத்து அடுப்பு கூட்டிடுவோம். அரிசி பாதிதான் போட்டோம். மீதி அரிசி, பருப்பு, வெல்லம், நெய், முந்திரி எல்லாம் இருக்கு”

 

“பானை இல்லையே லல்லி” என்றான் பாரி வருத்தத்துடன்.

 

“உங்கம்மா பரிமாற ஒரு புதுப் பானை வாங்கி வச்சிருந்தாங்களே அதில் வச்சுடுவோம்”

 

“அது மண்பானை இல்லையே…”

 

“அதனால் என்ன… புதுப் பானைதானே… எவ்வளவு கஷ்டப்பட்டு செய்றோம்னு பாத்துகிட்டே இருக்குற சாமி கோச்சுக்காது… ஆசாமிதான் குறை சொல்வான். அதனால கவலைப்படாம எடுத்துட்டு வாங்க” என்ற அவளது வார்த்தை தந்த உற்சாகத்தால் கபிலர் சென்று பானையை எடுத்து வர, பாரியும் லலிதாவும் அருகில் கிடைத்த சுள்ளிகளைக் கொண்டு அடுப்பு கூட்டி பொங்கலை செய்யும் வேலையில் இறங்கினர்.

 

“நான் எதுவும் செய்ய மாட்டேன்” என்று அமுதா கறாராக சொல்லிவிட

 

“நீ பானையை உடைச்ச களைப்பில் இருப்ப, ரெஸ்ட் எடுத்துக்கோ” என்றார் சின்னம்மா.

 

“டேய் வெங்கடேசு… நீ இங்கேயே இரு” என்று பாதுகாப்புக்காக அவளது உறவினனை அமர்த்திக் கொண்டு லலிதா வைக்கும் பொங்கலை வேடிக்கை பார்த்தாள் அமுதா.

 

“லலிதா வீட்டு வேலையெல்லாம் நீதான் போல… அதுதான் பழக்கமா வருது. எனக்கெல்லாம் அடுப்புகிட்டேயே நிக்க முடியாதுப்பா… எங்க வீட்டில் நான் ரொம்ப செல்லமா, அதுனால ஒரு வேலையும் செய்ய விடமாட்டாங்க” என்றாள் பெருமையாக.

 

புன்னகைத்துக் கொண்டாள் லலிதா.

 

வேகமாக செய்ய சுள்ளிகளை அடுக்கி, இறைவனை வணங்கி சூடம் ஒன்றை ஏற்றி அடுப்பினைப் பற்ற வைக்க காய்ந்த சுள்ளிகள் பற்றிக் கொண்டு ஏறிய தணல் சூட்டினைக் கிளப்பியது. அத்துடன் மிக சிரத்தையோடு லலிதா பொங்கல் பானையில் மஞ்சள் குங்குமமிட்டு அடுப்பில் வைத்தாள். மண்பானை என்றால் சூடேற நேரம் பிடிக்கும் உலோகம் என்பதலால் விரைவில் சட்டி சுட்டு தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. அரிசியைக் கொட்டி விட்டு, வெல்லத்தை பாரி உடைத்துக் கொடுக்க அதற்குள் சிறு கரண்டி ஒன்றில் நெய்யை ஊற்றி முந்திரியைத் தாளித்து எடுத்தாள். பின்னர் வேறு ஒரு கரண்டியில் வெண்பொங்கலுக்கு தாளித்து வெண்பொங்கல் பானையில் கொட்டினாள்.

அடுத்த முக்கால்  மணி நேரத்தில் சர்க்கரைப் பொங்கலும் வெண்பொங்கலும் தயாராதைப் பார்த்ததும்தான் பாரிக்கும் கபிலருக்கும்  மூச்சே வந்தது. ஏனென்றால் அதுவரை ஏதேதோ வேலைகளை சொல்லி சொல்லி மனைவியை அடுப்பு பக்கமே வரவிடாது தடுத்து வைத்திருந்தார் கபிலர்.

 

“லலிதா… எனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலம்மா… எங்கம்மாவே நேரில் வந்து தைரியம் சொல்லி கூடவே நின்ன மாதிரி இருக்கு. என்ன ஒரு சமயோசிதம், சாமர்த்தியம்…. நீ போற வீடு குடுத்து வச்சிருக்கணும். நீ நல்லா இருக்கனும்மா” என்று மனசார வாழ்த்தினார் கபிலர்.

 

 

“பொங்கலை எடுத்துட்டு வந்து படையல் போடுங்க” பூசாரி குரல் கொடுக்க, பானைகளை எடுக்க வந்த பார்வதி வெண்பொங்கல் பொங்கிய மண்பானையும், சர்க்கரை பொங்கல் நிறைந்த புதிய வெண்கலப் பானையும் கண்டு நடந்ததை உணர்ந்து கொண்டார்.

 

“எத்தனை தடை வந்தாலும் கடவுள் பிரசாதம் லலிதாவோட உதவியால நல்லபடியா தயாராயிடுச்சு பார்வதி” என்றார் கபிலர். பார்வதியின் கண்கள் நன்றியோடு லலிதாவை நோக்கின. லலிதாவின் முகத்தில் சோர்வும், வியர்வையும் போட்டி போட்டுத் தெரிந்தன. தனது கர்ச்சிப்பால் லலிதாவின் முகத்தைத் துடைத்துவிட்டவர்

 

“பாரி அடுப்பில் நின்னு பிள்ள களைச்சு போயிருக்கு. கலர் ஒண்ணு வாங்கி தாப்பா. அப்படியே கூட்டிட்டு போயி பேனுக்குக் கீழ உக்கார வை” என்றார்.

 

“இல்ல கொஞ்சம் தண்ணி இருந்தா தாங்க… “ என்று சொல்லிவிட்டு தனது தாயைத் தேடிச் சென்றாள் லலிதா.

 

“லலிதா… உனக்கு ஒன்னுமில்லையே… ஏன் இவ்வளவு வேர்க்குது” என்றான் பாரி. என்னவோ அவனது இதயத்தை ஏதோ ஒன்று பிசைந்தது.

 

“ஒண்ணுமில்ல பாரி … நீங்க சாமி கும்மிடப் போங்க. நான் பின்னாடியே வரேன்” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்த லலிதா சோர்வுடன் சென்று மண்டபத்தில் காற்று வரும் இடத்தில் அமர்ந்துவிட்டாள். என்னவோ காலையிலிருந்து சற்று வயிறு வலிப்பது போலவே இருந்தது. வீட்டிற்கு சென்றவுடன் மருத்துவரிடம் செல்ல எண்ணியிருந்தாள். ஆனால் இன்றைய பொழுதை இங்கேயே கழிக்கும்படி நேர்ந்துவிட்டது. இருந்தாலும் பாரியின் அருகில் இருக்கும் வரை இந்த வலியை அவளால் தாங்கிக் கொள்ள இயலும்.

 

சிறிது நேரத்தில் வராஹியின் முன்னே வாழை இலை ஒன்று விரித்து படையலை பெண்கள் படைக்க ஆயத்தமாயினர்.

 

“லலிதா நீயும் வாம்மா… “ என்று அழைத்த பார்வதி அவளையும் இணைந்து கொள்ள சொல்ல வேறு வழியின்றி வலியினை மறைத்துக் கொண்டு அங்கே சென்று அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். மனம் கவர்ந்தவனின் மணவாழ்க்கை அமுதாவுடன் நன்றாக அமைய தான் பிரார்த்தனை செய்கிறோம் என்ற நினைப்பே இதயத்தில் சுருக்கென்று குத்தியது.

 

“குலதெய்வத்து முன்னாடியும் ஒரு இலை எடுத்து வை. இங்க படையல் போட்டு உத்தரவு வாங்கிட்டு வந்துதான் அங்க போட முடியும்” என்று பார்வதி சொல்ல திரு திருவென விழித்தாள் லலிதா.

 

“வராஹ சித்தேஸ்வரி தானே உங்க குலதெய்வம்”

 

“இல்லம்மா கோவில் வெளிய மரத்தடியில் அருவா ஒண்ணு நட்டு வச்சிருக்கோமே அதுதான் எங்க குலதெய்வம். நூத்தம்பது வருஷத்துக்கு மேல இருக்கும். எங்க பாட்டன் முப்பாட்டன்  தெக்குலேருந்து பஞ்சம் பிழைக்க எங்க குலதெய்வத்தோட கோவில் மண்ணையும் அரிவாளையும் எடுத்துட்டு கிராமத்தோட வந்தோமாம். அப்ப இந்தப் பக்கம் வந்தபோது இந்த அம்மன் அருள் வந்து இந்த ஊர்ல ஒரு பொண்ணு மேல இறங்கி எங்களுக்கு பிழைக்க இந்த ஊரில் இடமும், எங்க குல தெய்வத்துக்கு தன்னோட எல்லைல ஒரு சந்நிதியும் தர சொல்லுச்சாம்.

இந்த ஊர்க்காரங்களும் எங்களை முழு மனசோட ஏத்துகிட்டாங்க. அதுக்கு நன்றி செலுத்துற விதமா நாங்க பொங்கல் வைக்கிறதுக்கு முன்னாடி இந்த அம்மனுக்கு முதல் மரியாதை தருவோம். இங்க உத்தரவு வாங்கிட்டுத்தான் எங்க குலதெய்வத்துக்குப் பொங்கலைப் படைப்போம்” என்று சொன்னார் பார்வதி.

“எங்க தாத்தாவோட அம்மாவீட்டுக்கு இந்த அம்மன்தான் குலதெய்வம்” என்றாள் லலிதா.

 

‘இந்தத் தெய்வம் தன் நிலத்தில் என் முன்னோருக்கு ஓரிடம் தந்தது ஆனால் என்னால் லலிதாவிற்கு வாழ்க்கையில் இடம் தர முடியவில்லையே… லலிதாவை அழைத்து சென்றால் அவள் அவள் பெயர் கெட்டுவிடும். அவள் தாய் தந்தையர் மனம் என்ன பாடுபடும். அவள் தங்கையின் எதிர்காலம் என்னவாகும். எங்களது  சந்திப்பு ஒரு வருடத்திற்கு முன்னால் நடந்திருந்தால் நிலமை வேறு மாதிரி இருந்திருக்குமோ’ என்றெல்லாம் பாரியின் மனதில் போராட்டம்.

 

இவர்கள் மனப்போராட்டம் அவர்களுக்குளேயே நடக்க, அந்தக் கோவிலைச் சேர்ந்த பெரிய பூசாரி ஒருவர் தீபாராதனை காண்பித்து உத்தரவு வாங்கினார்.

 

‘அம்மா… இன்னமும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்க தாத்தா ஒரு நாளைக்கு பத்து நிமிஷம் நினைச்சாலே எண்ண அலைகள் நம்ம நினைச்சதை அடைய வைக்கும்னு சொல்லிருந்தார். ஆனால் ஒரு நாளைக்கு இருபத்தி நாலு மணி நேரமும் பாரி கூட என் வாழ்க்கை அமையணும்னுதான் நினைச்சுட்டு இருக்கேன். இதுக்குப் பலன் இல்லையா… அமுதா பாரிக்கு ஏத்த குணவதியா இருந்தாலும் பரவால்ல… இப்படி பொருந்திய மனசை பிரிச்சுட்டு பொருந்தாத் திருமண உறவில் திணிப்பது இயற்கைக்கு முரண் இல்லையா. நீ வேற, இயற்கை வேறன்னு நான் நினைக்கல. இதுக்கு ஒரு முடிவு கட்டுவன்னு உறுதியா நம்புறேன்’ என்று தெய்வத்திடம் லலிதா வேண்ட

 

பாரியும் கண்மூடி மனமுருகி எல்லாம் வல்ல சக்தியிடம் தனது மனதைத் திறந்து தனது எண்ணங்களைக் கூறிக் கொண்டிருந்தான்.

 

அவனது பிரார்த்தனையைக் கலைக்கும்விதம் குரலொன்று “களையைக் காசாக்கிட்டிருக்கேன்” என்றது.

 

தான் லலிதாவிடம் முன்னொரு தரம் அவளது காதல் வயலில் முளைத்த களை போன்றது என்று சொன்னது நினைவுக்கு வர துணுக்குற்று நிமிர்ந்தான். லலிதாவின் தந்தை குணசீலனிடம் பூசாரி சொல்லிக் கொண்டிருந்தார்.

 

“வயலுக்கு நடுவில் வளரும் செடி எல்லாம் களைன்னு நினைச்சு பிடிங்கிப் போட்டுடுறாங்க. கத்தாழை, குப்பைமேனி, நாயுருவி இந்த மாதிரி மூலிகைகளும் கூட அதில் இருக்கும்.  சீக்கிரம் வளரும் எல்லாம் களை இல்லை. நெல்லை விட நல்லதும், தெய்வீக மூலிகைகளும் சில களை போல வேகமா வளரும்னு அறியாம மக்கள் எல்லாத்தையும் புடுங்கிப் போட்டுடுறாங்க. நாங்க அதைக் கண்டுபிடிச்சு எடுத்து காசாக்குறோம். மக்களுக்கும் அடையாளம் காட்டுறோம். அவ்வளவுதான்” என்றார்.

 

“போயி குலதெய்வத்துக்குப் பொங்கலப் படைக்கலாம்” என்று கபிலர்  சொன்னவுடன் அனைவரும் கிளம்பிச் சென்றனர்.

பின்னாலே நடந்தபடி ஒருவரை ஒருவர் கண்களால் சந்தித்தபோது பார்வையாலேயே பாரி மன்னிப்பை வேண்ட, அதே கண்களை அழுத்தி மூடித் திறந்து ‘நான் தவறாக எண்ணவில்லை’ என்று சமாதானம் சொன்னாள் லல்லி. இந்தப் பார்வை நாடகத்தை மற்றவர் கவனிக்கவில்லை என்று அவர்கள் நினைத்தாலும் எதிர் மரத்தினடியில் அமர்ந்து சின்னம்மாவிடம் பேசியவண்ணம் மகளைத் கவனித்து வந்த தெய்வானையின் பார்வைக்கு இது தப்பவில்லை. அவருடன் கொண்டிருந்த சின்னம்மாவும் இந்த கண்களின் பாஷையைத் திகைத்துப் போய் பார்த்தார்.

 

“தெய்வானை என்ன இது?” என்று மெல்லிய குரலில் கேட்க…

 

“தெரியலையேம்மா… இப்ப என்ன செய்றதுன்னு புரியலையே” என்று அழும் குரலில் பதிலளித்தார் அவர்.

 

“பொம்பள சென்மத்துக்கு ஆசையே இருக்கக் கூடாதே. ஒரு வருஷத்துக்கு முன்னாடி இந்த சந்திப்பு நடந்திருந்தாலும் முடிவு வேற மாதிரி இருந்திருக்கும். இப்ப காலம் கடந்து போச்சே… “ சின்னம்மா ஆதங்கப்பட

 

தெய்வானையின் கண்களில் நீர் துளிர்த்தது “என் மக கொடுத்து வச்சது அவ்வளவுதான்”

 

“பாரியும் என்ன பாவம் செஞ்சானோ தெரியலயே… அமுதா அவனுக்குப் பொருத்தமே இல்லை. ஆனால் பார்வதிக்கு புத்தி கெட்டு போச்சே” என்று முகம் வாடினார்.

 

பின்னர் தெய்வானையின் கைகளைப் பிடித்துக் கொண்டு

“சரி நடந்ததை தெரியாத மாதிரி இரு. பூஜை முடிஞ்சதும் உன் பொண்ணை கூட்டிட்டு போயிடு. சூட்டோட சூடா கல்யாணத்தை முடிச்சு ஊருக்கு அனுப்பிடு. நம்ம ரெண்டு பேரும் தெரிஞ்சுகிட்டது இந்த மரத்தடியில் அப்படியே புதைஞ்சு போகட்டும்” என்றார். நல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு தீர்வு கண்டுவிட்டதில் பெருமூச்சு விட்டனர் இரு பெண்களும்.

 

என்ன அதற்குள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுவிட்டீர்கள். அதிர்ச்சி  சம்பவங்கள் அதற்குள் முடிந்துவிடவில்லை இன்று இதைவிட அதிர்ச்சிகள் எல்லாம் இருக்கிறது என்பது போல புன்னகை புரிந்தார் வராஹ சித்தேஸ்வரி.

 

குலதெய்வத்தின் பூஜை சிறப்பாகவே நடக்க, உடல் வேதனையில் லலிதா நெளிய, அவளைப் பார்த்துக் கொண்டிருந்த பாரியின் மனவேதனை பன்மடங்காகியது. அதே சமயத்தில் வராஹ சித்தேஸ்வரி சன்னிதியின் முன் யாருமே சற்றும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி அரங்கேறியது.

5 thoughts on “இனி எந்தன் உயிரும் உனதே – 22”

  1. வராஹி அம்மா ஏததோ முடிவு பண்ணிட்டாங்க. தெய்வானைக்குகும் சின்னம்மாக்கும்தெரிஞ்சது எல்லோருக்கும் தெரி வச்சுருவாங்ன்னு நம்பறேன். லல்லி வச்ச பொங்கல்ல அம்மா உருகிப்போய் ஆசையை நிறைவேற்ற போறாங்க

  2. வராஹ சித்தேஸ்வரி அம்மா இரண்டு புள்ளைங்களையும் சேர்த்து வை தாயி…..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 33மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 33

33 விருந்தினர்கள் செல்லும் வரை தனது அழுகையை அடக்கிக் கொண்ட சுஜி, அவர்கள் காலை வீட்டை விட்டு வெளியே வைத்ததும் கத்த ஆரம்பித்தாள். “ஏன் சித்தி யாரைக் கேட்டு இப்படி அவசர அவசரமா கல்யாண ஏற்பாடு பண்ணுறிங்க?” “யாரடி கேட்கணும்? இது