Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 7

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 7

அத்தியாயம் – 7 

 

எர்ணாகுளம் செல்ல முதல் வகுப்பில் ட்ரெயின் டிக்கெட் எடுத்து தந்திருந்தார்கள். பயணத்திட்டம் ஒன்றும் அப்படி சோர்வு தரும் விஷயமாகத் தோன்றவில்லை செம்பருத்திக்கு. 

 

திருநெல்வேலியிலிருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு செல்லும் தொடர்வண்டியில் காலை 8 மணிக்குக் கிளம்பினால் மதியம் மூன்று மணிக்குள் எர்ணாகுளம் சென்றுவிடலாம். அங்கிருந்து அவளைக் கூட்டிச் செல்லக் கார் வருமாம். அதைத்தவிர செலவுக்குப் பணம் வேறு தந்திருந்தனர். ஒரு வருடமாவது அங்கு கண்டிப்பாகப் பணி புரிய வேண்டும் என்று ஒப்பந்தம் வேறு. 

 

“சார் அதுக்கு மேல இருக்க முடியாதா?” நைசாக வக்கீலிடம் கேட்டாள். 

 

“ஏம்மா அப்படிக் கேக்குற?”

 

“இல்லை சார். வீட்டை வாடகைக்கு விட்டுட்டேன். மேலே ஏதாவது யூனிவர்சிட்டில ஆன்லைன்ல எம். காம் படிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். அது முடிக்க ரெண்டு வருஷமாவது ஆகும். அதான்”

 

பெருமூச்சு விட்டார். “இங்க பாரும்மா… அந்த வீட்டில் வேலை செய்றவங்க மாசக்கணக்கில் தான் வேலை செய்வாங்க. ஆறு மாசம்தான் இது வரைக்கும் நடந்த மிகப் பெரிய சாதனை. நீ ஒரு வருஷம் தாண்டிட்டாலே பெரிய விஷயம்”

 

“எல்லாரும் இப்படித்தான் விடுகதை மாதிரி சொல்றிங்க. ஆனால் என்ன பிரச்சனைன்னு சொல்ல மாட்டிக்கிறிங்களே” அலுத்துக் கொண்டாள் செம்பருத்தி.

 

“நீ போற வீட்டில் இருக்கும் ஆண்மகன் அப்படி. கடிச்சுக் குதறி எடுப்பான். பயங்கர கோவக்காரன்”

 

“எதையும் வச்சு கூல் பண்ண முடியாதா?”

 

“பண்ணலாம். ஆனால் கூல் பண்ண அவன் கேக்குற விஷயங்கள் அவன் குடும்பத்தைக் கொதிக்க வைக்கும். அதனால விஷயம் என்னன்னா, உன்னை வேலைக்கு சேர்த்தவங்க சொல்றபடி கேட்டா அவனுக்குப் பிடிக்காது. அவன் உன்னை வேலையை விட்டுத் தூக்குற அளவுக்கு டார்ச்சர் பண்ணுவான். அவனுக்குப் பிடிச்சதை நீ செய்ய ஆரம்பிச்சா, அடுத்த நிமிஷமே வீட்டில் இருக்குறவங்க வெளிய அனுப்பிடுவாங்க”

 

“அப்ப கன்பார்ம்டா என்னை எப்படியாவது வெளிய அனுப்பிடுவாங்கன்னு சொல்றிங்க ”

 

“அப்படி நடக்காம பாத்துக்க வேண்டியது உன் சாமர்த்தியம்” என்று சுலபமாக சொல்லிவிட்டார். 

 

அவர் அவளது நலனில் அக்கறை உள்ளவர். தன்னை மோசமான இடத்திற்கு அனுப்பமாட்டார் என்ற நம்பிக்கை அவளுள் ஆழமாக இருக்கிறது.வக்கில் போலவும் மங்கிலால் போலவும், எப்போதோ பார்த்த அவினாஷ் போலவும்  சில ஆண்கள் இருப்பதால்தான் அவளுக்கு ஆண்கள் மேல் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. 

 

“நீயும் வயசுப்பொண்ணு, முதல் தடவை வெளியூருக்குப் போற. யாரையும் நம்பிடாதே. பாத்து பாதுகாப்பா இருந்துக்கோம்மா” என்று சொல்லியே அவளை ரயிலில் ஏற்றிவிட்டார். அவளுக்காக, அவள் உபயோகத்திற்கென்று புத்தம் புதிய சாம்சங் செல்போன். 

 

மாரியம்மா அக்கா ஆறு மாதங்களுக்கு வேண்டிய சத்து மாத்திரைகளைத் தந்திருந்தார். அது தவிர உணவுப் பழக்கங்களை மாற்றச் சொல்லி ஒரு பெரிய பேப்பரில் அவள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளை லிஸ்ட் போட்டுத் தந்தார். 

 

“அக்கா என்னைப் போயி சாப்பாட்டைக் குறைன்னு சொல்றிங்களே. இதெல்லாம் என்னால முடியுமாக்கா?”

 

“நல்லா பாரு, சாப்பாட்டைக் குறைன்னு சொல்லல, அரிசி கோதுமை மாதிரி மாவு பொருட்களைக் குறைன்னு சொல்லிருக்கேன். காய்கறி சாலட் சாப்பிடு, கொண்டைக் கடலை மாதிரி பயிறு வகைகளை எடுத்துக்கோ. வறுத்து பொரிச்சு சாப்பிடாம காய்கறிகளையும் கீரையையும் நீராவியில் அவிச்சோ நல்லா கடைஞ்சோ பருப்போட கூட்டியோ சாப்பிடு”

 

சரி என்று தலையாட்டினாள். அங்கு போனவுடன் என்ன நடக்கப் போகிறதோ தெரியலையே. தனியாக ஒரு ஜாகை தந்து இவளையே சமைத்து சாப்பிடச் சொல்வார்களோ இல்லை நாங்க சமைக்கிறதில் இருந்து ஒரு கவளம் போடுறோம் கேட்ச் பண்ணிட்டு போ என்று சொல்கிறார்களோ யாருக்குத் தெரியும்?

 

“மண்டைய மண்டைய ஆட்டாம, நாக்கை உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வா. தினமும் ஒரு இருபது நிமிஷம் நட. இதெல்லாம் செஞ்சுட்டு மாசத்துக்கு ஒருக்க உன் எடையை எனக்கு மெஸேஜ் பண்ணு”

 

இவர்கள் காட்டும் அன்பில் ஒரு துளி கூட அந்தத் தெருவில் அவளது உறவினர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் காட்டவில்லை. ஜலப்பிரியா வீட்டில் அங்கு குடி வந்ததும் 

 

“நீங்க யாரு? எதுக்கு இங்க வந்திங்க” என்று விசாரணையை மட்டும் அவள் மாரியம்மா அக்காவைப் பார்க்கச் சென்ற பொழுது செய்திருக்கின்றனர். 

 

மாரியம்மா கூட “பேசாம படிக்கப் போறேன்னு எல்லாருகிட்டயும் சொல்லிடு. வேலைக்கு சொன்னா இன்னம் ஏதாவது குட்டையைக் குழப்புவாங்க” என்று சொல்லி இருந்ததால் அதையே தன்னைப் பற்றி விசாரித்த தெரு மக்களிடம் ஜலப்பிரியாவும் சொன்னாள். 

 

“படிக்கப் போறேன்னு சொன்னால் ஏண்டி குட்டையைக் குழப்புறாங்க?”

 

“வீட்டை வாடகைக்கு விட்டுட்டு அந்த காசில்தான் படிக்கப் போறான்னு ஏதோ ஒரு ஊகத்துக்கு வந்திருப்பாங்க. இப்ப வாடகைக்கு விடாதேன்னு உன்கிட்ட தகராறு பண்ணி பீஸ் கட்ட காசு கேட்டு அவங்க கிட்ட நின்னுட்டேன்னா?”

 

தூரத்தில் தெரிந்த அவளது அத்தை வீட்டைப் பார்த்தபடி 

“ஆமா உன் அத்தை வீடு இங்கத்தானே இருக்கு. அப்பறம் ஏண்டி அவங்க மகன் ரமேஷ் உங்க வீட்டில் வந்து தங்கினான்?”

 

“நாங்க தோட்டத்து வீட்டில் இருக்கும்போது அத்தை பக்கத்து ஊரில் தான் இருந்தாங்க. ரமேஷ் அத்தான் பாதி நேரம் எங்க வீட்டில் தான் இருப்பாரு, சே! அந்த நாய்க்கு என்ன மரியாதை இருப்பான். அத்தை வீட்டில் பயங்கர பிரச்சனையாகி மாமா வாடகை கட்டாம காலி பண்ண சொல்லிட்டாங்க”

 

“கிட்டத்தட்ட எங்க வீடு மாதிரி திக்கில்லாம நின்னாங்க. மேல சொல்லு”

 

“இந்த வீடு அப்ப காலியா இருந்தது. அத்தை வந்து இந்த வீட்டில் உக்காந்துக்கிட்டாங்க. அப்பறம் நாங்க வீட்டை வித்ததும் இந்த வீட்டுக்குத் தான் வரப்போறோம்னு அப்பா சொல்லிட்டு பக்கத்தில் வேற வீட்டை வாடகைக்கு பிடிச்சுக்க சொல்லிட்டாரு. நாங்க இங்க வந்துட்டோம். அத்தை பக்கத்து தெருவில் வாடகைக்குப் போன வீடு ரொம்ப சிறுசு. அதில் அத்தானுக்கு தனி ரூமெல்லாம் இல்லை. அதனால எங்க வீட்டுல இருக்குற ரூமிலேயே தங்கிட்டான்”

 

“உங்க வீட்டை விக்க வச்சவங்க உங்க காசு மூலமா முன்னேறி இதே தெருவில் மச்சு வீடு வாங்கிட்டாங்க. நீங்க நிலம் காசு எல்லாம் இழந்துட்டு ஓட்டு வீட்டில் தனியா நிக்கிறிங்க”

 

“நீயும் இதையே சொல்லணுமாடி. அந்த சமயத்தில் எங்கப்பா கிட்டக்க நீதான் உங்க அக்கா குடும்பத்துக்கு ஆதரவு, நீதான் இவங்களுக்கு செய்யணும்னு பஞ்சாயத்து பேசின பஞ்சுமிட்டாய்ங்க எல்லாம் இப்ப எங்க போனானுங்கன்னே தெரியல”

 

“உங்க ஐத்தான் ஏமாத்துனதும் நீ அவனுங்க வீட்டுக்கு போயி அவனுங்க காலுல விழுந்து கதறுனியா? கண்ணகி மாதிரி நியாயம் கேட்டியா?”

 

“அந்தக் கண்ராவி எல்லாம்  கேக்கல. ஆனால் அந்த ஏமாத்துக்காரன் ரமேஷை கல்யாணம் பண்ணிக்கலைன்னா செத்துடுவேன்னு அந்த பொண்ணு அழுதுச்சாம். என்கிட்டே சொல்லிட்டு அப்படியே நழுவிட்டாங்க”

 

“இவனுங்க தீர்ப்பு சொல்ல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சைஸ்ல தராசை எடுத்துகிட்டு வருவானுங்க. இந்த பஞ்சுமிட்டாய்ங்க பஞ்சாயத்தை எல்லாம் மதிச்ச ஆளுங்களை என்ன சொல்ல… ஆமா உங்க அத்தனையும் நம்பி ஒருத்தி எப்படி கல்யாணம் பண்ணிக்கிறாளே. அவ பேரு  என்ன?”

 

“கவிதா… கூடப் படிச்ச பொண்ணாம். படிக்கும்போதே காதலாம்”

 

“கத்திரிக்கா… போடி போ… அவனுக்கு வீட்டையும் விடக் கூடாது. உன் மூலமா வர்ற சொத்தும் வேணும். அதே சமயத்தில் காலேஜூலையும் ஒரு பொண்ணை ரூட்டு விட்டிருக்கான். ஐயோ இந்தக் குடும்பத்தைப் பத்தி நினைச்சாலே எனக்கே கொலை வெறி ஏறுதுடி. நீயெல்லாம் எப்படித்தான் சகிச்சு கிட்டு இருந்தியோ?”

 

“எனக்கும் தெரியலடி. கொஞ்சம் கூட நம்மை சிந்திக்க விடாம கூடவே இருப்பாங்க. எங்களை விட்டு விலகினதும்தான் என்னால யோசிக்கவே முடிஞ்சது”

 

“அதுவும் உன் அத்தைக்காரி இருக்காளே வயித்துப்புள்ள வாய் வழியே வந்து விழுந்துடுற மாதிரி இனிக்க இனிக்க பேசுவாளே”

 

“ஏய் ஜலப்பிரியா எங்கிருந்தடி இப்படி எங்கூரு பாஷை எல்லாம் கத்துகிட்ட?”

 

“அதென்னடி எங்கூரு பாஷை. பல நூறு வருஷத்துக்கு முன்னாடி நாங்களும் இதைத்தானே பேசிகிட்டு இருந்தோம். இப்பயும் மலையாளத்தில் புழங்கும் பாதி வார்த்தைகள் சுத்தத் தமிழ்தான்”

 

“அப்ப எனக்கு அவ்வளவா கஷ்டமா இருக்காதுன்னு நினைக்கிறேன்”

 

“நீ போற வீடு தமிழர்கள் ஒருத்தங்களோடதுதான்னு சொன்னியே”

 

“ஆமாம். ஆனால் வீட்டாளுங்களைவிட நம்மை மாதிரி தொழிலாளர்கள் கிட்டத்தானே என்னோட பேச்செல்லாம் இருக்கும். அதுக்கு அந்த ஊர் மொழி தெரிஞ்சுக்கிறது அவசியமாச்சே”

 

“அதெல்லாம் ஆறேழு மாசம் பேசினால் தன்னால வரப்போகுது. அதுவும் மலையாளம் சுலபமா கத்துக்கலாம்” என்று தைரியம் சொன்னாள்..

 

பத்திரமாக சென்று வரச் சொல்லி ரயில் நிலையம் வரை வந்து ஏற்றிவிட்ட மற்றொரு குடும்பம் ஜலப்பிரியாவினது. அவளது அம்மா வழியில் சாப்பிட பொதி சோறு, முறுக்கு, உன்னியப்பம் எல்லாம் டிபன் பாக்சில் கட்டித் தந்திருந்தார். உறவினர்கள் ஒருவர் கூட அவள் செத்தாளா பிழைத்தாளா என்று எட்டிப் பார்க்கவில்லை. ஆனால் நண்பர்களும் , சில நாட்களே அறிந்த நபர்களும் ரயில் நிலையம் வரை வந்திருந்தனர். 

 

ஜாதி ஜனம் என்பது எண்ணிக்கைக்கு மட்டும்தானா? ஊர் முழுவதும் அவளுக்கு உறவினர்கள் ஆனால் அவள் இருக்கிறாளா செத்தாளா என்று கூட அவர்களுக்கு அக்கறையில்லை. 

 

“யாருமே இல்லாம அனாதையா போறேன்னேனு அழுகையா வந்தது. நீயும் அம்மாவும் வந்தது எவ்வளவு தைரியமா இருக்கு தெரியுமா?” ஜலப்பிரியாவிடம் கலங்கினாள். 

 

“யாருடி அநாதை? நீயா? நாங்க எங்க ஊர்லேருந்து எப்படி வந்தோம் தெரியுமா? கடன்காரங்களுக்கு பயந்து ஆளுக்கு ஒரு பஸ் ஏறி, திருட்டுத்தனமா ராவோடு ராவா உங்க ஊருக்கு வந்தோம். எங்கப்பன் கடன் வாங்கிக் குடிச்சதுக்கு எங்க குடும்பமே ஒளிஞ்சு மறைஞ்சு வந்தோம். இங்க வந்து மங்கிலால் கடையால மாசம் முழுசும் சாப்பிடுறோம். இப்ப நீ தந்த வீட்டில் பயமில்லாம உக்காந்து உன் புண்ணியத்தால் ஒரு நாளைக்கு மூணு வேளையும் சாப்பிடுவோம். 

 

நல்ல மனுஷங்க எல்லா இடத்துலயும் இருக்காங்கடி. நமக்கான அந்த இடத்தை நாமதான் தேடிக் கண்டுபிடிக்கணும். சொந்தக்காரங்க எல்லாராலும் உதாசீனப்படுத்தப்பட்ட ஒரு பெண் சிங்கம்,  போகும்போது ஒரு வயசு பிள்ளைல இருந்து தொண்ணூறு வயசு கிழவி வரை அம்மா அம்மான்னு கண்ணீர் விட்டு அழ ஜாம் ஜாம்னு போயி சேர்ந்தாங்க. இதைவிடவா சொந்தங்க செய்யப் போகுது?

 

ஒரு நல்ல வேலையோட எதிர்காலத்தைத் தேடிப் போற… உனக்கான இடமும் உன்னை நோக்கி சீக்கிரம் வந்து சேரும்னு நம்புறேன். அந்த சாஸ்தாவையும் வேண்டிக்கிறேன்”

 

அவள் மனதில் அந்த பூரிப்புடனும், புதிய இடத்திற்கு முதல் முதலில் சொல்வதைப் பற்றிய அச்சத்துடனும் பயணத்தை ஆரம்பித்தாள். 

 

காவ்யாவை மறுபடியும் பார்த்தாகிவிட்டது. ஆனால் அவள் வரமாட்டாள் போலிருக்கிறதே. அப்ப அவினாஷ்? அவனைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்குமா? பார்த்தாலும் அவனுக்கு என்னை நினைவு இருக்குமா? நினைவு இருக்கோ இல்லையோ அவன் வாங்கித் தந்த அந்த குர்த்தி அவளுடனே பயணிக்கிறது. 

 

அவளது யோசனையைக் கலைப்பது போல செல்போன் அலறியது. புதிய எண். ஒருவேளை அழைத்து செல்லவிருக்கும் டிரைவராக இருக்குமோ? அவசர அவசரமாக எடுத்தாள் 

 

“ஹலோ, ஹலோ”

 

“பரவால்லையே உனக்கும் சுறுசுறுப்புக்கும் சம்பந்தமே இல்லைன்னு நினைச்சேன். கொஞ்சம் வேகமாத்தான் இருக்க… இதையே தொடர்ந்தாள் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது” இத்தனை குத்தலாகப் பேசுபவர் காவ்யாவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? 

 

“அன்னைக்கு கவனக்குறைவா உங்களை இடிச்ச அந்த ஒரு சம்பவத்தை மட்டும் வச்சு அவங்க குணாதிசயமே இதுதான் அப்படின்னு முடிவு செய்றது தப்பு”

 

“என்கிட்டவே உன் வாயாடித்தனத்தைக் காமிக்காதே. நான் உன் முதலாளி நினைவில் இருக்கட்டும்”

 

“எனக்குத் நேர்முகத் தேர்வு வச்சுத் தேர்ந்து எடுத்தது நல்லாவே நினைவில் இருக்கு மேடம். உங்களுக்குத் தரும் மரியாதையில் ஒரு குறைவும் இருக்காது”

 

“ஓ தகுதியின் அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்பட்டவன்னு சொல்லிக் காமிக்கிறியா? பைத்தியக்காரி… உன் தகுதி என்னன்னு தெரியுமா?”

 

“என் படிப்பு, அனுபவம், பொறுமையான குணம் இதைத்தவிர வேறு என்னவா இருக்க முடியும்?”

 

“ஓ ….. ஹா… ஹா… ஹா… ஹய்யோ… சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாயிடும் போலிருக்கே… ஏன் செம்பருத்தி,  உன்னைத் தவிர திருநெல்வேலி ஜில்லாவிலேயே  படிச்சவங்க தகுதியானவங்கன்னு யாருமே இல்லைன்னு நினைக்கிறியா… “

 

அவளது குரலில் ஏகப்பட்ட நக்கல், எகத்தாளம். “இப்ப சொல்றேன் உன் தகுதி என்னன்னு. நீ போறியே அந்த வீட்டில் ஒருத்தன் இருக்கான். அவன் ஒரு பொண்ணைக் கூட விடமாட்டான். அதனாலதான் அசிங்கமா, குண்டா பாக்கவே அவலட்சணமா எந்த ஆணும் விரும்பாத ஒரு பொம்பளையா இருக்கணும்னு நிபந்தனை வச்சோம். அதுக்குத் தகுந்தாப்பில நீயும் மாட்டின. இப்ப தெரிஞ்சதா உன் தகுதி என்னன்னு. பாக்கலாம் நீ எத்தனை நாள் அந்த வீட்டில் தாங்குறேன்னு” 

 

மனதைக் குத்திக் கிழிக்கும் சிரிப்புடன் அழைப்பு துண்டிக்கப்பட மனவலியுடன் அந்த அலைப்பேசியை அப்படியே வெறித்தாள் செம்பருத்தி. 

 

‘அசிங்கமா, குண்டா, பாக்கவே அவலட்சணமான பெண்’ யார் நானா? சரி அப்படியே இருந்துட்டு போறேன். நீ அழகு சுந்தரியாவே இருந்துக்கோ. ஆனால் என்னைப் பாத்து இந்த மாதிரி வார்த்தைகளை சொல்ல யார் உனக்கு அதிகாரம் கொடுத்தது. நீ சம்பளம் கொடுக்கப்போறது நான் செய்யப் போற வேலைக்கு மட்டும்தானே. என் சுய மரியாதைக்கும் தன்மானத்துக்கும் இல்லையே?

 

இப்ப என்ன செய்றது? என் தன்மானம் பெருசுன்னு சொல்லிட்டு அடுத்த ஸ்டேஷனில் இறங்கி வீட்டுக்குப் போய் விடலாமா? வீட்டை வேற வாடகைக்கு விட்டுட்டேன். என்னை ஸ்டேஷனில் ஏத்திவிட்டுட்டு இப்பத்தான் ப்ரியா வீட்டுக்குப் போயிருப்பா. பின்னாடியே போய் நானும் நின்னா? இது தோல்விதானே. 

 

கடவுளே எனக்கு மட்டும் ஏன் அடுக்கடுக்கான பிரச்சனைகள்?

 

முதல் வகுப்புப் பெட்டியில் அவள் மட்டுமே இருந்ததால் அப்படியே வெளியில் வெறித்தாள். திருவனந்தபுரம் தாண்டி வண்டி சென்று கொண்டிருந்தது. பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சை பசேல் என்று தெரிந்த இயற்கை காட்சிகளும், அல்லிக் குளங்களும் அவளது மனதை மெது மெதுவாகவே குளிர்வித்தது. 

 

கதவைத் தட்டிய ஒரு சிறுவன் கேட்டான் “காப்பி, டீ, மெதுவடை,மசால்வடை,  சமோசா இருக்கு. எதுவும் சாப்பிடுறிங்களா அக்கா?” 

 

அந்த சாப்பாட்டுப் பட்டியலே எல்லா கவலையையும் மூட்டை கட்டி வைத்து விட்டு வாம்மா மின்னல் பழகலாம் என்று சொல்வது போல இருந்தது. 

 

“சூடா இருக்கா?”

 

“டீ பயங்கர சூடா இருக்கும்கா”

 

“சூடா ஒரு டீ. ரெண்டு சமோசா கொடு”

 

சூடான சர்க்கரை தூக்கலான டீ அப்படி ஒரு இனிமையாக தொண்டையில் இறங்கியது. உணவு ஆசை தப்பில்லை. நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது உயிர் வாழவே ஆசை இல்லாமல் போய்விடும். அந்த எண்ணம் தொடர்வது விபரீதத்திற்கு வழி வகுக்கும். அதைத் தொடரவிடாது சின்ன குழந்தைக்கு விளையாட்டு காட்டுவது போல மனம் செய்யும் மாயம்தான் உணவு ஆசை. 

 

இப்போது எனக்குத் தேவை நல்ல உணவு.அது உயிர் வாழ ஆசை ஏற்படுத்தும். அதன்பின் என்ன செய்வது என்று யோசிக்கலாம்.

“தம்பி, மறுபடியும் இந்தப் பக்கம் எப்ப வருவ?”

 

“இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சு சாப்பாடு ஆர்டர் எடுக்க வருவேன்கா”

 

“அப்ப டீ எடுத்துட்டு வருவியா?”

 

“உங்களுக்கு வேணும்னா சொல்லுங்கக்கா எடுத்துட்டு வர்றேன்”

 

இப்போதுதான் பார்த்த இந்த சிறுவனையே அன்போடு பேசி ஒட்டிக் கொள்ள முடிகிறது என்றால், போகுமிடத்தில் அவளால் ஏன் அவர்களைக் கவர முடியாது? சிரித்தாள்.

 

இப்போது எதற்கு இந்தக் காவ்யா எனது புதிய அலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அழைத்து இந்தத் தகவலைச் சொல்ல வேண்டும்? அவள் என்ன என் நலம் விரும்பியா? அவளுக்கு நான் வேலை செய்ய வேண்டும் ஆனால் மனம் புழுங்கிக் கொண்டே இந்த ஒரு வருடம் வாழ வேண்டும். என்னே ஒரு நல்லெண்ணம்?

 

‘பைத்தியக்காரி நானில்லை காவ்யா நீதான். நான் வேலை தேடிப் போறேன். அதுக்கு வேலை தெரிஞ்சா போதாது. எதுக்காக ஸ்லிம் அண்ட் ஸ்லீக்கா அழகா இருக்கணும்? 

 

அன்னநடை, மின்னல் இடை, தாமரைப் பாதம், பொன்னிறம் எல்லாம் இருக்க அவள் என்ன அழகிப் போட்டிக்கா போகிறாள்.

 

ராவணனோட அரண்மனைல வேலை செய்யப் போகிறாள். காண்ட்ராக்டில் இவள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றித் தெளிவாக அட்டவணை போட்டுத் தந்திருக்கிறார்கள். இதில் அழகு அவலட்சணம் பற்றி சிறு குறிப்பு கூட இல்லை.  இந்த காவ்யா சொல்வதை எண்ணி மனம் குழம்புவதைவிட தெளிவாக இருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்வது உத்தமாம். 

 

போகும் இடத்தில் இருப்பவன் ராமனாக இருந்தால் என்ன ராவணனாக இருந்தால் என்ன? பாதுகாப்புக்குக் குறைவு இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக சொல்லி அனுப்பி இருக்கின்றனர் இவளை இந்த பணிக்குத் தேர்ந்தெடுத்தவர்கள். அங்கே இன்னும் சில பெண்கள் கூட வேலை செய்கிறார்களாம். 

 

 அந்த ராவணனின் லங்கையில் இருந்து சீதாதேவி பத்தினித் தெய்வமாகத்தான் திரும்பி வந்தாள். இவள் வேறு காவ்யாவின் கூற்றுப்படி சூர்ப்பனகை வகையறா. என்ன நடக்கிறது என்று ஒரு கை பார்த்துவிடுவோம். 

 

கடுமையான வார்த்தைகளுக்கு பயப்படுபவள் இல்லை இந்த செம்பருத்தி. 

 

கடலில் இருக்கும் உப்புத் தண்ணியை குடிக்கும் மேகம் மழையை உப்பு கரிக்கவா பெய்கிறது? காவியாவின் இந்த கரிக்கும் வார்த்தைகளை ஜீரணித்து இனிக்க இனிக்கவே வேலை செய்வேன் என்று செம்பருத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டாள்.

4 thoughts on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 7”

  1. Really this epi is a encouragement to all the women i think as usual iam also a fatty bubly women… You are always my fav writer… Sembaruthi is a girl i want to be… As usual I am so much eagerly awaiting for the next episode ….. Love you akkka… Chitrangatha ku aparama Sembaruthi ellarudaya manathilum nirka pokiral…. Plz vekama next episode podunga ka

Leave a Reply to KPN Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 29தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 29

அத்தியாயம் – 29   “அபி… “ ராதிகாவின் குரல் அபிராமை இந்த உலகிற்கு இழுத்து வந்தது.    ராதிகாவை நிமிர்ந்து பார்த்தான்.   “மௌனம் போதும் அபி.இதுவரை நடந்தது தப்போ சரியோ எனக்கு தெரியாது. ஆனா நீங்க மங்கை ஆன்ட்டியைப்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 40தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 40

அத்தியாயம் – 40 மடத்தில் அமர்ந்து கிறுக்குசாமி பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர் நாகேந்திரனும் மங்கையும்.  “குழந்தை உன் பேரு என்னடாப்பா?” “அவினாஷ்” “எங்கப்பன் மலையாண்டியோட அப்பன் சடையாண்டி பேரை வச்சிருக்கியா நீ?” என்று சிரித்தார்.  மனம் அமைதியைத் தேடும்போதெல்லாம் ஆண்டியப்பனின் கோபம்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 8தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 8

அத்தியாயம் – 8    ஜாம்நகர் ட்ரெயின் சற்று பழசாகத்தான் இருந்தது. ஜன்னல் கம்பிகள் எல்லாம் துருப்பிடித்து, கழிவறைக் கதவுகள் கூட அப்படித்தான். முதல் வகுப்பு என்பதால் சற்று சுத்தமாக இருந்தது. இதுவே மற்ற வகுப்புக்களுக்கும் இருக்குமா என்பது சந்தேகம்தான்.