“நம்ம போற வழியில் சிக்னல் கிடைக்குதோ என்னவோ தெரியல. அதனால இப்பவே வீட்டில் சொல்லிடலாம். இல்லாட்டி கவலைப்பட்டுட்டு இருப்பாங்க. முதலில் அம்மாவுக்கு போன் பண்ணிக்கிறேன்” என்று பாரியிடம் தகவல் தெரிவித்துவிட்டு லலிதா அன்னையை அழைத்தாள்.
“லல்லி பஸ் எல்லாம் பாதில நிறுத்திட்டாங்களாமே” என்று அழுகைக் குரலில் சொன்ன அன்னையிடம்.
“அம்மா, கவலைப்படாதிங்க… நானும் கூட அப்பாவோட ஸ்டுடென்ட்னு சொன்னேன்ல அவர்கூட வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன்”
தன்னைத் திகைப்போடு பார்த்த பாரியிடம் ‘சும்மா’ என்று உதட்டினை அசைத்து சொன்னாள். அவனும் ‘பொய்மையும் வாய்மையிடத்தில்’ என்றெண்ணிக் கொண்டு புன்னகையோடு வண்டியை தந்து ஓட்டுனர் வேலையைத் தொடர்ந்தான்.
“அப்பா உனக்காக பஸ் ஸ்டாண்டில் நின்னுட்டு இருக்காருடி”
“நான் வர நேரமாகும்மா… நீங்க வைங்க நான் அப்பாட்ட பேசிக்கிறேன்” என்று தந்தையை அழைத்து நிலமையை சுருக்கமாக சொன்னாள்.
“பாரியை உங்க ஸ்டுடென்ட்னு அம்மாட்ட சொல்லிருக்கேன். நீங்களும் அதையே சொல்லுங்கப்பா. இல்லைன்னா அம்மா வீணா கவலைப்படுவாங்க”
“என்னம்மா யாரோ ஒருத்தன் கூட வரேன்னு சொல்ற… பத்திரமா வந்துடுவேல்ல“ என்று தழுதழுத்தார் தந்தை.
“பத்திரமா வந்துடுவேன்னு என் மனசுக்குப்படுதுப்பா. தைரியமா இருங்க” என்று தேற்றினாள். முன் பின் தெரியாத நபருடன் தனியாக தன் பெண் வருகிறாள் என்று தெரிந்ததும் தகப்பனுக்கு ஏற்படும் வேதனையை உணர்ந்தான் பாரி. அது நியாயம்தானே.
“உங்கம்மா சொன்னா கேக்குறாளா. இன்னைக்குத்தான் புடவை ஆர்டர் தந்தாகணும்னு ஒரே அடம். உன்னைத் தனியா அனுப்பி… இன்னும் ரெண்டு வாரம் பொறுத்திருந்தா எல்லாரும் சேர்ந்து கிளம்பிருக்கலாம். இப்ப பாரு, நீ வர வரைக்கும் வயத்தில் நெருப்பைக் கட்டிட்டு இருக்க வேண்டிருக்கு. இன்னைக்கு இருக்கு உங்கம்மாவுக்கு…” தந்தைக்கு அரிதாகவே கோபம் வரும். அன்று வந்தது.
“அப்பா… அம்மாவுக்கு இப்படியெல்லாம் மழை வரும், வழில நான் வெள்ளத்தில் மாட்டிப்பேன்னு எப்படிப்பா தெரியும். இந்நேரம் நான் வர லேட்டாகுறதை நினைச்சு அழுதுட்டு இருப்பாங்க. இந்த சமயத்தில் நீங்க அவங்களுக்கு தைரியம் சொல்லணும். அதைவிட்டுட்டு இப்படி சண்டை பிடிக்கிறது அழகா சொல்லுங்க”
மற்றொரு பெண்ணாக இருந்தால் அந்நிய ஆணுடன் பேசவே தயக்கம், பயம், இந்த சூழ்நிலையில் என்ன முடிவெடுப்பது என்று தெரியாத குழப்பம் என்று திணறியிருப்பார்கள். எவ்வளவு அழகாக அவர்களுக்கும் தைரியம் சொல்லி சூழ்நிலையை புத்திசாலித்தனமாக சமாளிக்கிறாள் என்று லலிதாவின் செயல்களை ரசித்த வண்ணம் வண்டியோட்டினான் பாரி.
தான் அவளைப் போன்ற சமயோசிதமான புத்தி கொண்ட பெண்ணை இதுவரைக் கண்டதில்லை என்று சொல்லிக் கொண்டான். இவளைப் போன்ற பெண் மனைவியாக அமைந்தால் அவன் வாழ்க்கை சுவர்க்கம்தான்…
லலிதா இன்னமும் தந்தையிடம் பேசி முடிக்கவில்லை.
“சரி, நீ அந்தத் தம்பிகிட்ட போனைக் கொடு நான் ரெண்டு வார்த்தை பேசுறேன்”
வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு லலிதாவின் தந்தைக்கு நம்பிக்கை ஏற்படும் வண்ணம் பேசினான் பாரி.
“வணக்கம் சார். என் பெயர் பாரி. சிதம்பரம் சொந்த ஊர். அக்ரி ஆபிசரா இருக்கேன். நாங்க ரெண்டு பேரும் ஒரே இடத்தில்தான் ஜவுளி வாங்கப்போனோம். அப்படியே எதிர்பாராதவிதமா மழையில் மாட்டிக்கிட்டோம்.
நீங்க கவலைப்படாதிங்க சார்… உங்க பொண்ணை பத்திரமா வீட்டில் கொண்டு வந்து சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. நீங்க பஸ் ஸ்டாண்டில் காத்திருக்காம வீட்டுக்குப் போங்க.நான் வீட்லயே கொண்டு வந்து விட்டுடுறேன் ” என்ற அவனது குரல் அவருகென்னமோ ஒரு நம்பிக்கையைத் தந்தது
“என் விலாசத்தையும் நாங்க வர்ற வண்டி எண்ணையும் உங்களுக்கு டெக்ஸ்ட் பண்ணுறேன்”
“ஐயோ அதெல்லாம் வேண்டாம் தம்பி” என்று வாயில் சொன்னாலும் அவர் மனதில், அலைப்பேசியை வைத்தவுடன் எஸ்எம்எஸ் ஒன்றினை அனுப்பி லலிதாவிடம் அந்தத் தகவல்களைக் கேட்க எண்ணியிருந்தார்.
“ஒரு சிறு பொருளை வாங்கினாக் கூட ஒரு தரத்துக்கு நாலு தரம் விசாரிச்சுட்டு வாங்குறோம். உங்க பொண்ணை கூட்டிட்டு வரேன். உங்களுக்கும் பயம்மா இருக்குமில்லையா. நான் தப்பா நினைக்க மாட்டேன் சார். உங்களுக்கு இன்னும் நம்பிக்கை வரலைன்னா எங்கம்மா அப்பாகிட்ட போன் பண்ணி என்னைப் பத்தி விசாரிச்சுக்கோங்க” என்றவன் லலிதாவின் தந்தையிடம் பேசி முடித்த கையோடு தன் பெற்றோரை அழைத்து சூழ்நிலையை சொன்னான்.
“பொம்பளப் பிள்ளை பாரி. பத்திரமா வீட்டில் கொண்டு போயி விட்டுட்டு வாப்பா” என்ற அவனது பெற்றோரை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை லலிதாவால்.
“ஏம்மா நீ தனியாவா வந்த” என்று தன்னிடம் விசாரித்த பாரியின் தாயிடம், தோழியுடன் துணி ஆர்டர் கொடுக்க வந்ததையும் அவள் முன்னரே கிளம்பிவிட்டதையும் தெளிவு படுத்தினாள்.
“என்னமோ நேரம் போ. ரெண்டு பேரும் இப்படித் தனியா மாட்டிக்கணும்னு போட்டிருக்கு” அங்கலாய்த்தவர் “போயும் போயும் இன்னைக்கு ஏன் புடவை எடுக்கப் போன”
“வந்து.. என் கல்யாணத்துக்கு முதல் புடவை இன்னைக்கு எடுத்துடலாம்னு” என்று அவள் சொல்லிக் கொண்டிருந்த பொழுது ஓடிக்கொண்டிருந்த வண்டி சற்று நிலை தடுமாறி நடுரோட்டில் நின்றது.
என்ன என்று அவனிடம் பார்வையால் வினவியவனிடம்.
“திடீருன்னு பாதை தெரியல” என்றான் பாரி.
சூழ்நிலை புரியாத பாரியின் தாய் “உனக்குக் கல்யாணமா…ரெண்டு பேருக்கும் என்ன ஒரு பொருத்தம் பாரு. எங்க பாரி கூட அவனோட நிச்சியதுக்குப் புடவை எடுக்கத்தான் வந்தான்.
அவனுக்குப் பாத்திருக்க பொண்ணு கூட என் அண்ணன் பொண்ணுதான். உனக்கும் மாப்பிள்ளை வீடு சொந்தமாம்மா”
“இல்லைங்க. தெரிஞ்சவங்க மூலமா கேட்டு வந்தாங்க” என்று அவளது வாய் சொன்னாலும் மனதில் ஏனோ ஒரு இனம் புரியாத பாரம்.
அலைப்பேசியை வைத்த பின்பும் வண்டி நகராமல் அங்கேயே நிற்பதை உணர்ந்தவள்.
“என்னாச்சு பாரி”
“பாதையே தெரியல. கண்ணாடி கொஞ்சம் கிளியர் ஆக வெய்ட் பண்றேன்” என்றான்.
“அந்த மஞ்சள் புடவை உங்களுக்கு நிச்சயம் பண்ண பொண்ணுக்க்கு வாங்கிட்டுப் போறிங்களா” தயங்கித் தயங்கிக் கேட்டு முடிப்பதற்குள் அவளுக்கு தொண்டையில் ஒரு இரும்பு குண்டு உருள்வதைப் போன்ற உணர்வு.
“ம்ம்…” அவனது குரலில் சத்தமே எழும்பவில்லை
வெளியே தெரிந்த இருளை வெறித்தவாறு கேட்டாள் “பொண்ணு பேரென்ன… என்ன பண்றாங்க…”
“பேரு அமுதா… ப்ளஸ் டூ முடிச்சுட்டு வீட்டில்தான் இருக்கா” என்றான் இத்தனை நேரம் மறந்திருந்த நிஜம் அப்போதுதான் அழுத்தமாக அவன் மனதில் பூதாகரமாக நின்றது.
“வழி இப்ப கிளியரா தெரியுது. நம்ம கிளம்பலாம் பாரி” என்ற லலிதாவின் குரலில் ஏனோ கீதம் பாடும் ஒரு குயிலின் சோகம் ஒளிந்திருந்தது
என்னக்கா இது? கல்யாணம் நிச்சயமாகி இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு சலனம். இப்ப எப்படி சேருவாங்க
Eppady ivanga rendu perum onnu seruvaangannu theriyalaye
Hyoo….Nice epi…
Good people think alike. Ipo than manasukula chinna ematram salanam nu vanthiruku. Thanakana inaya samy kamichu kudukum pothu than athu varum.parkalam rendu perume ini enna panna poranganu
நன்றி செல்வா
Aha. இனம் புரியாத ஒரு அலைவரிசையில் இருவரது மனதும் இணைந்து விட்டதோ. கார் ஓடமாட்டேன் என்ககிறது. குரல் அடைத்துக்கொள்கிறது.லலிதா அப்பா அம்மாவை ஹான்டில் பண்றது.பாரியும்தான்.
நன்றி ஷாரதா