Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் தனி வழி 6 – ஆர். சண்முகசுந்தரம்

தனி வழி 6 – ஆர். சண்முகசுந்தரம்

6

கருப்பண்ணனும் கிட்டப்பனும் கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் தாக சாந்தி செய்து கொண்டிருந்தார்கள். இருவர் கைகளிலும் பலப்பல பொருட்கள்! துணிமணிகள்! உண்மையில் ‘மணி’ இல்லை! தங்க மோதிரங்கள் தான் மணி போன்றது – நாலைந்து – அழகிய நகைக்கடை பெட்டியும் மடிக்குள் கிடந்தது.

தீபாவளி போனஸ் வாங்கி இருந்தார்கள். கோவை ஜவுளிக் கடைகளும், பாத்திரக் கடைகளும் ‘காலி’ ஆகிக் கொண்டிருந்தன! ஆயிரக்கணக்கான தொழிலாளிகள், ஆண்கள் பெண்கள் படை எடுத்தால் ‘ஸ்டாக்கு’கள் தீராமல் என்ன செய்யும்? ஒருவர் வாங்கியதை இன்னொருவர் பார்க்கக் கூட நேரமில்லை. கூட்டம், நெரிசல் – அத்துடன் – ‘சுடச்சுட’ப் பிரியாணி ‘குளோஸ்’ ஆகிவிடுவே என்று ஓட்டல்களை நோக்கி முற்றுகை இடுவதில் அவர்கள் முனைந்திருந்தார்கள். அவர்களோடு எப்போதும் போல பொதுமக்கள் கூட்டம் – அதுவும் தீபாவளிக் கும்பலும் சேர்ந்து கொண்டால் தெருக்களுக்கே புத்தழகு உண்டாகி விடுகிறது போலும்!

“என்னமோ சொன்னாயே அண்ணா?” என்றான் கருப்பண்ணன் வீட்டிற்கு வந்த பிறகு – சாவகாசமாக குதிரை வண்டியிலிருந்து சாமான்களை இறக்கி வைத்துக் கொண்டே.

நாச்சப்பனுக்கு ஞாபகம் இருக்கிறதா? சொன்னதை மறந்து விட்டான். வண்டிக்காளைக்கு ‘தீவனம்’ வைத்து எவ்வளவு நேரமாச்சு என்று தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூடச் சட்டென்று பதில் சொல்லி விடுவான். இப்போது அந்தக் காளை கூட மெள்ள மெள்ள நினைவுத் திரையிலிருந்து மங்கிக் கொண்டு வருகிறது. காளையில்லாத வண்டியில்லாத ஏன் பாதையும் இல்லாத அந்த ஒரு வழியிலே அவன் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். ‘தலைக்கயிறு’ கையில் இருக்கிறதா? இல்லை. அதுவும் நழுவிவிட்டதா? என்னவோ தட்டுப் படுகிறதே! உள்ளங்கையைப் பார்க்கிறான். வறப்புகையிலை! ‘எதுவாக’ மடக்கி வாயில் திணித்துக் கொண்டே ஒரு ‘உம்’ கொட்டி “என்னப்பா சொன்னே?” என்றான். கருப்பண்ணனும் மாரக்காளும் அண்டாவையும் நாற்காலியையும் இடம்மாற்றிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். இரண்டும் புதிது! அண்டா வேண்டியதுதான். ‘இந்த மேசை எதுக்கு?’ என்று நாச்சப்பன் யோசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எல்லாமே ‘மேசை’தான்! வித்தியாசம் தெரிந்தாலும் இந்தப் பேர்கள் மறந்து மறந்து போய்விடுகிறது!

மலைக்காட்டில் பாறைக்குப் பாறை குதித்து விழும் சிற்றாற்றுப் பெருக்கைப் போல் குஞ்சாள் சிரிப்பும் குதிப்புமாய்ப் பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கு மெதுவாக எந்தக் காரியத்தைச் செய்தும் பழக்கமில்லை. அவசரத்தில ‘தட்டுக்கெட்டும்’ எதையும் செய்து விட மாட்டாள். “புள்ளைனா இப்படித்தா இருக்கோணும்” என்பது நாச்சப்பனின் நினைப்புக் கூட.

கிட்டப்பன் புதுக்கடிகாரத்தைக் கட்டுவதும் அவிழ்ப்பதும் – திரும்ப எடுத்துப் பார்ப்பதும் ‘ஸ்ட்ரேப்’ நல்லா இருக்குமா? ‘செயின்’ நல்லா இருக்குமா? என்ற ஆராய்ச்சிக்குள்ளே மூழ்கி இருந்தான்.

மாரக்காளுக்கும் ‘போதும் போதும்’ என்று ஆகிவிட்டது சாமான்களை ஒழுங்குபடுத்துவதிலேயே! “மிச்சத்தை வாசல்லே வெச்சற வேண்டியதுதான்” என்றாள். அவளுடன் ‘கூடமாட’ எடுத்துப் போட்டுக் கொண்டிருந்த கருப்பண்ணன், ஒரு வெற்றிலை பாக்குத் தட்டத்தை ஸ்டோரில் வேலை பார்க்கும் மாணிக்கத்திடம் காட்டிக் கொண்டிருந்தான். மாணிக்கம் தன் பெயரை தட்ட வட்டத்தில் பதித்திருந்தான். கருப்பண்ணனும் தன் பெயரையும் பொறித்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினான். ‘சரி, யார் பெரைப் போடச் சொல்வது?’ இந்தக் கேள்வி அவனுள் ஒரு கணம் தான் மின்னிற்று. “ஏன் அண்ணன் பேரை எழுதச் சொன்னாப் போச்சு! நாச்சப்பன் தானே நம்ம குடும்பத்துக்கு இப்போ தலைவன்.”

ஐந்து பேரைக் கொண்ட அந்த மூன்று குடும்பத்திற்கும் ஏகத்தலைவன் நாச்சப்பன் தான்! சந்தேகமில்லை. மழைக்கு ஒண்டிய ஐவரைப் போலத்தான் அந்தச் சேர்க்கையை நாச்சப்பன் கருதினான். ஏன்? அவனுக்குத் தெரிந்தும் தெரியாமலுமிருந்த விசித்திரமான அவ்வுண்மைக்குள் திடமனதுடன் புக அவன் துணியவில்லை. காரணம் மகன் கிட்டப்பன் தான். மகனுக்கு சிங்கநல்லூர் வாழ்க்கை பிடித்திருக்கிறது! அதிலே இரண்டறக் கலந்துவிட்டான். நேரா ராஜபாட்டையிலே புதல்வன் சென்று கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது! எத்தனை வருஷங்கள் வாடகை வண்டி ஓட்டி அத்தனை பணத்தைச் சம்பாதிப்பது? நூறு நூறுகளாக இந்த ஜென்மத்தில் கண்ணால் காண்போம் என்று அவன் எண்ணி இருப்பானா? பின்னே என்ன சஞ்சலம்? உள்ளம் தத்தளித்து தவிக்கக் காரணம் என்ன?

தனக்கு முன்னால் பரப்பப்பட்டிருந்த சாமான்களை ஒரு தடவை பார்க்கிறான். அடேயப்பா!

இவர்கள் வீட்டில் மாத்திரமா வண்டி வண்டியாக பொருட்கள் குவிகின்றன? மற்ற தொழிலாளர்கள் வீடுகளும் தான் நிறைந்திருக்கின்றன! ஆனால் ஆட்டு மந்தைக் கூட்டம் போல் அவ்வளவு பேரும் அந்தச் சின்னஞ்சிறு வீடுகளில் எப்படி வசிக்கிறார்கள்! வீடா அவை/ சாக்கடை வாசலிலே வழிகிறது? கொசுக்கள் ‘கொத்துக் கொத்தாக’க் காய்த்து தொங்குகிறதோ? புகை நாற்றமும் மாராம்பாளையம் மாயக் குயவனால் சூளைக் குண்டத்திலிருந்து எழுவது மாதிரியேதான். அடுப்புப் புகையோடு பீடிப்புகை மண்டலங்கள். வெற்றிலை எச்சிலைச் சற்றுத் தள்ளித் துப்பினால் என்ன? வாசலிலிருந்து திண்ணை வரை ‘சாரை சாரை’யாகக் கோடுகிழித்துக் கோலம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறதே! சை! நெருக்கமிண்ணா நெருக்கமா! மாராத்தா எந்தச் சாமி கிருபையோ நம்ம ஊடு நல்ல இடத்திலே கெடைச்சுப் போச்சு! நாங்க இருந்த வேப்பமரத்தை உட்டிட்டு வாரனேன்னு கருக்கடைதான். ஆனா இங்கே காட்டுக்குள்ற இருந்தாலும் முன்னுக்க இந்தக் காலை ஒண்ணு வாச்சது என்னை உக்காந்திருக்கச் சொல்லுது” என்பான்.

“அண்ணா, உண்ணி இதெல்லாம் இடிச்சிட்டு சின்னச்சின்ன ‘லைன்’ ஊடாக் கட்டறாங்களாம்.”

“நாசமாப் போச்சு!”

“ஏன்ணா சாபம் குடுக்கறீங்க?”

“எங்காச்சும் போயிக் கட்டித் தொலைச்சா என்னாத்தா?”

“மில்லுக பக்கத்திலே இருக்கது பாரு அண்ணா! சனங்க அப்படி வந்து உளுகுது அண்ணா. எங்கிருந்தோ வாராங்க. தண்ணி இங்கே சிக்குதா? உப்புத் தண்ணிதான். நம்ம ஊட்டுக்கு கிட்டுச்சாமி சைக்கிளே கொடத்தைக் கட்டிட்டுப் போயி, எங்கிருந்து கொண்டாருது தெரியுமாண்ணா?”

“ஆமாமாம். சொன்னாஞ்சாமி”

நாச்சப்பனுக்கு பேச்சுத் துணைக்கு மாரக்காள் இருப்பதால் அவன் ‘விருமத்தி புடிச்சாப்பலே’ அடிக்கடி அவன் சொல்லும் வார்த்தை – உட்கார்ந்திருக்க வேண்டியதில்லை. இருப்பினும் அன்றைக்கு ஒரு கிழவி – அந்தப் பாட்டியும் பத்து வீடு தள்ளி குடியிருப்பவள் தான் – நாச்சப்பனிடம் கேட்ட கேள்வி அவனைத் தனியாக இருக்கும் போது சிரிக்கச் செய்தது.

“ஏனுங்க ஐயா எங்கியும் போகலீங்களா?” என்றாள் பாட்டி.

“கோயில் கொளம் போலாம்னா இண்ணைக்கு நாளைக்கிண்ணே பையன் சொல்லிக்கிட்டு இருக்கறான். கருப்பண்ணனுக்கும் நிக்க நேரமில்லே. மில்லு உட்டா சங்கம். சங்கம் உட்டா – தெக்கே வடக்கீன்னு போயர்ரானே! மாரக்கா பொளப்புதா உங்களுக்கே தெரியும். அவ மில் வேலைக்குப் போவாளா, சோறு தண்ணி ஆக்குவாளா? பொளுதோடே சித்தெ நேரம் ‘சிவனே’ன்னு உக்காரர்ராள்ளே – அப்பத்தான் மலைகிலைக்குப் போலாம்னு பேசுவோம். நாங்க போனா உங்களையும் கூட்டிக்கிட்டு போறோம் ஆத்தா” என்றான். யதார்த்தமாக பேசிக் கொண்டிருந்தான் நாச்சப்பன். அவனால் ‘ஆத்தா’ என்றும் ‘சாமி’ என்றும் செல்லச்சொல் போடாமல் பேசவே முடியாது. அது அவனுடைய வழக்கம்.

பாட்டியின் முகத்தில் பிரகாசம்! அந்தப் பிரகாசத்தை வார்த்தையில் வடித்தால் – ‘யாரப்பா இது! காடு, குகை, வனவனாந்தரத்திலிருந்து தப்பி வந்த ஆள் போலிருக்கிறதே!’ என்று அர்த்தப்படும்.

“ஏனுங்கய்யா! நல்ல நல்ல படமா ஓடிக்கிட்டு இருக்குதே! ஏதாச்சும் சினிமாவுக்குப் போய்ட்டு வாங்களே” என்றாள் நிதானமாக.

“நானா? சினிமாவுக்கா?” என்றான் நாச்சப்பன். அவன் வாய் அடைத்து விட்டது! வேறு யாராவது அப்படி சொல்லியிருந்தால் ‘விக்’கிட்டிருக்க மாட்டான்! பூங்கிழவி அவள், பூப்போல அரிய யோசனை கூறுகிறாளே!

தன்னைச் சுற்றிலும் அடிபடும் பேச்சுக்களும், காட்சிகளும் அவன் நெஞ்சில் முட்டி மோதிக் கொண்டு தான் இருக்கின்றன. போட்டி போட்டுக் கொண்டு அவர்கள் படம் பார்க்கப் போகிறார்கள். கைக் குழந்தை ‘அழ, அழ’த் தாய்மார்கள் கடும் வெயிலிலும் கோவைக்கு கிளம்பி விடுகிறார்கள்! பெரியவர்கள் நோய்நொடியில் வீட்டில் விழுந்து கிடந்தாலும் அக்கறை இல்லை. ‘மருந்து குடுத்திருக்கறோம். நாங்க கிட்டயிருந்து மருத்துவம் புகுத்தாட்டி என்ன?’ என்று வெளிப்படையாகச் சொல்கிறார்கள். இதை விட வினோதமானது கரும்புக் கடைக்குப் பக்கத்துச் சந்தில் சென்ற வாரம் ஒரு வயோதிகன் இறந்து போனான். அவனுடைய பெண்கள், குழந்தை குட்டிகளுடன் தந்தையின் இழவுக்கு வந்திருந்தார்கள். அவர்களில் இரு பெண்கள், அடக்கம் செய்த அன்றே – அன்று இரவே படம் பார்க்கச் சென்றார்கள். கருப்பண்ணன் தான் பார்த்துவிட்டு வந்து சொன்னான். “அண்ணா, சினிமாவுண்ணா பச்சைமா மாதிரி அண்ணா! உனக்குதா அது கசக்குது!” என்று கூறிச் சிரித்தான்.

நாச்சப்பனுக்கு இன்னொரு காட்சி புரியவேயில்லை. திடீர் திடீரென்று நூற்றுக்கணக்கில் சைக்கிள் ஊர்வலம் புறப்பட்டு விடும். கிட்டானும் சைக்கிளில் கொடி கட்டிக் கொண்டு கிளம்புகிறான். அவர்கள் கோஷிக்கிறார்கள். என்ன கோஷமோ? அர்த்தமாவதே இல்லை. ‘அந்த மில்லில் ஸ்டிரைக், இந்த மில்லில் ஸ்டிரைக்’ என்கிறார்கள். ‘போராட்டம், எல்லாம் பெரிய போராட்டம்!’, ‘சங்கத் தலைவர்கள் பேசுகிறார்கள் இன்றைக்கு’ என்று குஞ்சாள் கூடச் சொல்கிறாள். சில சமயம், ‘அம்மாளும் கூட்டத்துக்கு போயிருக்குது!’ என்கிறாள். மாரக்காள் கூட்டத்திற்குப் போய் என்ன செய்வாள்? எத்தனையோ பெண் தொழிலாளிகளும் வருகிறார்களே! ‘இதென்னடா கூத்து!’ என்று நாச்சப்பன் தன்னையே கேட்டுக் கொள்வான். மற்றும் பல சந்தர்ப்பங்களில் அடிதடி கலகம்! கொலைகள் கூட! ‘ஐயோ ராமா!’ என்று அவன் மனம் துணுக்குறுகிறது.

“எங்கடா தம்பி இத்தனை நேரமாகப் போயிருந்தே?” என்று மகனிடம் கேட்கிறான்.

“எங்க சங்கத்திலே ராத்திரி பூரா கூட்டம்! வேலைநிறுத்தம் பண்ணலாமான்னு ஆலோசிக்கறாங்க!” என்று சொல்லிக் கொண்டே வேகமாக அவன் புறப்பட்டான்.

“அப்படீண்ணா கருப்பண்ணனும் அங்கேதா போயிருக்குதா? ஆளையே காணோமேடா தம்பி.”

“இல்லை அப்பா! அவுங்க சங்கத்திலே வேலை நிறுத்தத்த எப்படி ஒடைக்கறதின்னு ஆலோசனை நடத்தராங்களாம்.”

நாச்சப்பனுக்கு விளங்குவதில்லை. “ஏண்டா நீங்க ரண்டு பேரும் ஒரே சங்கத்துக்காரருக இல்லையா?”

“யாரப்பா சொன்னது? நா வேறே! அவரு வேறே சங்கம்.”

நாச்சப்பனுக்கு அது அவ்வளவு நல்லதாகப் படவில்லை.

‘எல்லாரும் ஒரே வீட்டிலே ஒண்ணாத்தாண்டா இருக்கறோம்’ என்று ஏதோ கூற முயல்கிறான். ஆனால் பையன் அதற்குள் வெகுதூரம் சென்று விடுகிறான்.

*****

 

பத்து நாட்களாகக் கருப்பண்ணன் வீட்டுப் பக்கமே வரவில்லை. சிங்கநல்லூரில்தான் இருக்கிறானா? அல்லது வெளியூர் சென்று விட்டானா? வெளியூர் போவதாக இருந்தால் சொல்லியிருப்பானே? ஒரு நேரம் சாப்பிட வராவிட்டால் கூட யாரிடமாவது தகவல் சொல்லி விடக் கூடியவன் பத்து நாளாக கண்ணிலேயே தென்படவில்லை யென்றால் என்னவென்று நினைப்பது?

“எனக்கு ஒண்ணுமே புடிபட மாட்டீங்கிது மாரக்கா” என்றான் நாச்சப்பன்.

மாரக்காளுக்கும் சரியான எந்தப் பதிலைச் சொல்வதென்று ஒன்றும் தோன்றவில்லை. கருப்பண்ணன் போகுமிடங்கள் சங்கம், முத்துசாமி டீக்கடை, தென்னமரத் தோட்டம், வீரப்பன் பாய்க்கடை – எல்லா இடமுந்தான் பார்த்தாயிற்று, தேடியாச்சு, ஒன்றும் பயனில்லை. யாரைக் கேட்டாலும், ‘நா பாக்கவே இல்லை’ என்கிறார்கள். குஞ்சாளும் விசாரித்துச் சலித்து விட்டாள். கிட்டப்பனைக் கேட்டால், “சங்கத்துக் காரரோடு எங்காச்சும் போயிருப்பாரு” என்கிறான்.

“நீ என்னடா சுத்த வெளையாட்டுப் பையனா இருக்கறயே!” என்று தன் மகனை நாச்சப்பன் கடிந்து கொண்டான்.

“என்னை என்னப்பா பண்ணச் சொல்றே?”

“செர்த்தான் போ. ஆளுத்தான் குருதாட்ட வளர்ந்திட்டே! போய்ப் பார்ரா எங்காச்சும்?”

நாச்சப்பனுக்கு அசாத்தியக் கோபம்.

“அவரு என்ன கோழிக்குஞ்சா பருந்து தூக்கிட்டுப் போறதுக்கு? இல்லே, புள்ளைபுடிக்கிறவன் எவனாச்சும் புடிச்சுட்டிப் போயிருப்பானா?” என்று அவன் ‘விடுவிடு’வென்று நடக்கிறான். அக்கரை இல்லாதவனைப் போல!

“வெகுநேர்த்தி!” அதற்குமேல் நாச்சப்பனுக்கு பேசத் தோன்றவில்லை. மாரக்காள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பல விஷயங்கள் தெரியும். எதை எந்த அளவுக்குச் சொல்லலாம் என்பதில்தான் அவளுக்குக் குழப்பம்!

கருப்பண்ணன் ‘காணாமல் போய்’விடுகிற ஆசாமி அல்ல. ‘கண்ணாமூச்சி’ விளையாட்டுக் காட்டுகிறவனும் இல்லை! நெஞ்சுரம் கொண்டவன். தப்பித்துக் கொண்டு ஓடும் பேர்வழிகளுக்கும் அவனுக்கும் தொலைதூரம்!

கருப்பண்ண மேஸ்திரி பெயருக்குச் சங்கத்திலே, தலைவரிடத்திலே, காரியதரிசியிடமும் கூடத்தான் தனிமதிப்பு! “கருப்பண்ணனே ஒரு பிரச்சினை! அவரை எந்தப் பிரச்சினை என்ன செய்துவிடும்?” என்று எவரையும் நம்பாத காரியதரிசியே மனமாரப் பாராட்டுவார்.

பைபிளிலே ஒரு பாதிரியாரைப் பற்றி அழகான கதை. கடவுளே நேரில் வந்து குறுக்கிட்டாலும் தம்முடைய கடமையிலிருந்து அவர் தவற மாட்டார். ஏழை எளியவர்களுக்கு பகல் பனிரண்டு மணிக்கு உணவளிக்கச் செல்வது அவர் வழக்கம். ஆண்டவன் சோதிக்க எண்ணினான். ஒருநாள் பாதிரியாருடைய அறைக்கு விஜயம் செய்தார். அப்போது மணி பதினொன்று. கடவுளிடம் பேசிக் கொண்டிருந்தார். பேச்சுக் கொடுத்துக் கொண்டே நேரத்தை ஓட்டினார். ஆச்சு, மணி பனிரண்டு அடித்தது. பாதிரியார் எழுந்து விட்டார். தம் கடமையை நிறைவேற்ற அவர் சென்றுவிட்டார். ஈசனாரின் குறுக்கீடு அவரை ஏதும் செய்யவில்லை. உணவளித்துக் கொண்டிருக்கும் போது அவர் கிலேசமுற்றார். “அடடா ஆண்டவர் என்ன நினைத்துக் கொள்வாரோ? பாதிப் பேச்சிலேயே எழுந்து வந்துவிட்டேனே!” என்று மிக வருந்தினார்! ஆனால் ஆச்சர்யம்! திரும்பிப் போன போது எம்பெருமான் புன்னகை பூக்க அறையிலேயே பாதிரியாரை வரவேற்கக் காத்திருந்தார்!

ஆம், அப்படித்தான்! கருப்பண்ணனுக்குக் கடமைதான் பெரிது! எத்தனை எத்தனையோ போராட்டங்கள், ‘தலைவர் உயிருக்கு ஆபத்து! காரியதரிசியை தீர்த்துக் கட்டிவிடுவார்கள்!’ என்று பல சந்தர்ப்பங்களில் பேச்சு அடிபடும்! தொழிலாளர்களுக்குப் பாடுபடுகிறவர்கள் தங்கள் உயிரை அற்பமாக மதிக்க வேண்டியவர்கள் தான். ‘முதலில் என் தலை பிறகுதான் ‘கை’ அவர்கள் மேல் படவேண்டும்’ என்று காரியத்திலேயே காட்டி இருக்கிறான். இந்தப் பத்து வருஷங்களில் அவன் தேகத்தில் எத்தனையோ தழும்புகள். ஆனால் உள்ளத்திலே ஒரு வடு கூட உண்டானதில்லை!

“மாப்பிள்ளையை ஊட்டிலியே வெச்சுக்கிட்டுச் சோறு போடறா!” என்று எவளோ ஒருத்தி சொன்னாளாம்.

“எந்த மாப்பிளே! சின்ன மாப்பிளையா? பெரிய மாப்பிளையா?” என்று இன்னொருத்தி கேலி செய்தாளாம். இந்த கேலியும் கிண்டலும் காதில் விழுந்தாலும் கருப்பண்ணனோ மாரக்காளோ பொருட்படுத்துகிறவர்கள் அல்ல. அப்பேர்ப்பட்ட உறுதி படைத்தவன் எங்கே போய் விட்டான்?

சென்ற வாரமே சேர்ந்தாற்போல் இரண்டு நாள் அவன் வராமல் போகவே மாரக்காளுக்குக் ‘குடைச்சல்’ கண்டது. முதலில் திடுக்கிட்டுப் போனவள் அவள் தான். அந்த ‘அரிப்பை’த் தாங்க மாட்டாது மாஸ்டர் சிங்காரம் பிள்ளையிடமே சென்று கேட்டு விட்டாள். சிங்காரம் பிள்ளையிடம் நேருக்கு நேராக நின்று பேசுவது சாமான்ய காரியமா? பெரிய மேஸ்திரியும், பெரிய மேஸ்திரி அம்மாளும் கூடச் சற்று எட்டிக் குழைந்து ரொம்ப மரியாதையுடனே எதையும் கேட்பார்கள். ஆனால் மாரக்காள் அவருடைய முதல் மனைவியின் அன்பைப் பெற்றதிலிருந்து அவரிடம் இவள் செல்லக்குழந்தை ஆகிவிட்டாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 23கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 23

அத்தியாயம் 23 – பண்ணையாரின் தவறு      கல்யாணியின் கல்யாணத்தன்று திருமாங்கல்யதாரணம் ஆனதும், அவள் மூர்ச்சையாகி விழுந்தாளென்று சொல்லி விட்டு, பிறகு அவளை நாம் கவனியாமலே இருந்து விட்டோ ம். அதன் பின்னர் இன்று வரையில் அவளுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தெரிந்து

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 22கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 22

அத்தியாயம் 22 – நிலவும் இருளும்      முத்தையன் பண நோட்டுக்களைக் கையில் அலட்சியமாய்ச் சுருட்டி எடுத்துக்கொண்டு, லயன் கரையிலிருந்து படுகையில் இறங்கித் தண்ணீர் துறையை நோக்கி நடந்தான். தண்ணீர்த் துறையை அடைந்ததும், நீர்க்கரையோடு கிழக்கு நோக்கி நடக்கலானான். அன்று பௌர்ணமி. கிழக்கே

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 7கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 7

அத்தியாயம் 7 – செல்வப் பெண் கல்யாணி      பூங்குளத்தை யடுத்த கொள்ளிடக் கரைக் காட்டில் ஒரு வனதேவதை இருக்கிறதென்று அந்தப் பிரதேசத்திலெல்லாம் ஒரு வதந்தி பரவியிருந்தது. நதியில் வெள்ளம் சுமாராய்ப் போகும் காலத்தில் ஜில்லா கலெக்டர், எக்ஸிகியூடிவ் என்ஜினியர் முதலிய உத்தியோகஸ்தர்கள்