Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் தனி வழி 3 – ஆர். சண்முகசுந்தரம்

தனி வழி 3 – ஆர். சண்முகசுந்தரம்

3

அவன் மில்லில் வேலைக்குச் சேர்ந்து மாதம் ஒன்றுதான் ஆகிறது. விசைத்தறிகள் ‘டபடப’வென்று பலத்த சத்தத்துடன் ஓடுவதைக் கண்டதும், ‘அங்கிருந்து ஓடிவிடலாமா’ என்று நினைத்தான். ஆனால் மேஸ்திரி கருப்பண்ணன் தலைமாட்டில் தோள் மேலே கைபோட்டு நின்று கொண்டிருப்பது அவன் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தியது. நூல் தீர்ந்ததும் விழும் சிறு தார்க்குச்சிகளைக் கூடைகளில் போட்டு நிரப்பி இன்னொரு பகுதிக்கு அவன் எடுத்துச் செல்ல வேண்டும். ‘அரியா’ எடுக்கும் பையன், “நான் கூட ‘பாபின்’களைப் பொறுக்கிப் போடும் வேலையில் தான் முதலில் சேர்ந்தேன். ஆனால் அது பெரிய குச்சிகள்! அப்போதே நான் பெரிய ஆளப்பா!” என்றான் கருப்பண்ணன். பெரிய ஆளின் பேச்சு இந்தச் சிறிய ஆளின் காதில் விழவே இல்லை. தறிகள் தான் அடி முழக்கம் செய்து கொண்டிருக்கின்றனவே!

கருப்பண்ணனோடு முன்னர் இரண்டொரு கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறான். கரும்புக்கடை மைதானத்திலும், காவேரி மில்லுக்கு எதிரிலும், சந்தைப்பேட்டை மைதானத்திலும் நடைபெற்ற அந்தக் கூட்டங்களுக்கு ஒருவர் தான் தலைமை வகித்தார். அவர் ஆஜானுபாகு. கையில் கைத்தடி. ‘கல்யாணமே செய்துக்கலை அப்பா அவர்’ என்று பக்கத்தில் இருவர் பேசிக் கொண்டார்கள். ‘அவர் ஏன் செய்து கொள்ளவில்லை? யாரும் பெண் கொடுக்கவில்லையா?’ என்று தனக்குள் நினைத்தான் கிட்டப்பன். கருப்பண்ணனிடம் விசாரிக்க வேண்டும் என்ற விருப்பம்; ஆனால் என்னவாவது எண்ணிக் கொள்வாரோ என்று மௌனமாக இருந்து கொண்டான்.

“அவருதான் எங்க சங்கத் தலைவர்” என்று கருப்பண்ணன் சொன்னான். கிட்டப்பனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. வேறு இரண்டொறு இடங்களில், ‘தலைவர் பேசுகிறார்’ என்றார்கள். அந்தக் கூட்டங்களில் கழுத்தில் மாலை அணிந்து கொண்டு பேசியவர் ‘யாரோ?’ ‘தலைவர்’ என்றால் ஒரே தலைவர்தானே என்று நினைத்திருந்தான். கடவுளில் கூட பல கடவுள்கள் இருக்கிறார்கள்! தலைவர்களும் ‘பலப்பலர்’ என்பது அவனுக்குத் தெரியாது!

“நீ எந்தச் சங்கம்?” என்று கூட வேலை செய்கிற பையன் சென்ற வாரம் கேட்டான்.

“எந்தச் சங்கமா?” திரும்பிக் கேட்டான் கிட்டப்பன்.

முதலில் கேள்வி கேட்ட பையன் சற்று பெரியவன். அவன் சிரித்துக் கொண்டே இவன் முகத்தைப் பார்த்தான்.

“நான் ஒரு சங்கமும் இல்லை!” அந்தப் பெரிய பையன் ‘கடகட’வென்று சிரித்துவிட்டான்.

கிட்டப்பன் பஞ்சாலைக்குள் இப்போதுதான் நுழைந்திருக்கிறான். பஞ்சாலைத் தொழிலாளர் சங்கங்களின் விவகாரங்கள் அவனுக்கு அதற்குள் தெரிந்துவிடுமா? தவிர வயதும் போதாது! அந்த வயதுக்கு மற்றப் பையன்களுக்கு இருக்கிற ‘சூட்டிப்பை’ விட அதிகச் சூட்டிப்புள்ளவன் தான். துடிப்பு நிறைந்தவன். சொல்லா விட்டாலும் சுயமாகவே கண்டறியும் சக்தி படைத்தவன். ஆனால் இதெல்லாம் எந்த மூலைக்கு? கொடிகளிலிருந்து கட்சிகளை அறிய வேண்டும். அவற்றில் அகில இந்திய ரீதியில் அமைந்த கட்சிகளும் இயங்குகின்றன. கருப்பண்ணன் எந்தச் சங்கத்தைச் சேர்ந்தவனோ? அவர்களுக்குள்ளே கடும் போட்டி. சம்பளத் தேதியில் நின்று கொண்டு சந்தா வசூலிப்பில் மும்முரமாக அவை ஈடுபட்டிருக்கும் போது, அந்தக் கடுமை உச்சக்கட்டத்தை அடையும். கிட்டப்பன் இதுவரை இரண்டு சம்பளங்கள் வாங்கியாகி விட்டது. வெளியே பணத்துடன் வரும் போது தான் மனது எப்படி அடித்துக் கொண்டது? சேர்ந்தாற் போல் நாற்பது ஐம்பது ரூபாய்களை அவன் பிறந்தது முதல் கண்டதே இல்லை! வாடகை வண்டி ஓட்டிக் கொண்டிருந்த தன் தகப்பனார் கூட இத்தனை பணத்தை ‘ஒருமிக்க’ கண்டிருக்க முடியாது என்பதை எண்ணுகையில் அவன் கருப்பண்ணனை மனமார வாழ்த்திக் கொண்டான். சம்பளம் வாங்கிய இரவு அப்பனுக்கும் மகனுக்கும் அதே பேச்சுதான். விடிய விடிய கருப்பண்ணன் தங்களுக்கு செய்த பேருபகாரத்தையே நினைத்தார்கள்…

“ஆதலால் தொழிலாளத் தோழர்களே!” என்ற இடி குரல் கிட்டப்பனை நிமிர்ந்து நிற்கச் செய்தது. கருப்பண்ணன் பக்கத்தில் இருக்கிறானா எனப் பார்த்துக் கொண்டான். கிட்டப்பன் கிட்டத்தில் தான் அவன் இருந்தான். பேச்சாளரின் பேச்சுக்களில் மூழ்கி நீந்திக் கொண்டிருக்கிறான் என்பது பாவம் அந்தச் சிறுவனுக்குத் தெரியாது.

சிம்ம கர்ஜனை மீண்டும் அனைவரையும் அதிரச் செய்தது. “நாம் என்.ஜி.ஆர். வழிச்சென்று ரத்தம் சிந்த வேண்டும்!” மறுகணம் விண்ணதிரக் கையொலி! ‘எதற்காகக் கைதட்டுகிறார்கள்? அவர் சொன்னாரே – ரத்தம் சிந்த வேண்டும் என்று. எதற்காக ரத்தம் சிந்த வேண்டும்? என்.ஜி.ஆர். சென்ற வழி எது?” பையனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இன்னொரு சொற்பெருக்காளர் ஆரம்பித்து மீண்டும் பலமான கைதட்டு எழுந்த போதுதான் அவன் நல்லுணர்வு பெற்றான். அவர் சொன்னார், “உயிரைக் கொடுத்தும் ‘பிரச்சனை’களை நிலைநாட்டுவோம் என்.ஜி.ஆர். போல!”

அதுவும் அவனுக்கு விளங்கவில்லை. நாட்டப்பட வேண்டிய ‘பிரச்சினை’கள் எதைப் பற்றியும் அவன் கேள்விப்படவில்லை. ஆனால் ‘பிரச்சினை’களை விண்டு காட்டிய அந்த ஊசி மீசைத் தலைவரை நேற்றுக்கூட அவன் சந்தித்திருந்தான். கருப்பண்ணன் தான் கூட்டிக் கொண்டு போயிருந்தான். எங்கே போனாலும் அவன் கிட்டப்பனையும் அழைத்துச் செல்வான்.

முதலில் கோவைக்குப் போனார்கள். ஒரு பெரிய பிரியாணி ஓட்டலுக்குள் பையனை இட்டுச் சென்ற போது – அப்பேர்ப்பட்ட ஓட்டலை அதற்கு முன் அவன் கண்டதே இல்லை. தாராபுரம், காங்கயத்தில் சின்னச் சின்ன பிரியாணிக் கடைகள் இருக்கின்றன. பூ? இதைப் பார்த்துவிட்டு அவற்றை நோக்கினால் – யானைக்கும் பூனைக்குமுள்ள வித்தியாசமாகப் பட்டது கிட்டப்பனுக்கு.

“என்ன தின்கிறாய்?” என்று கேட்டுக் கொண்டே இருவருக்கும் ‘ஏதேதோ’ கொண்டு வரச் சொல்லி, மேலும் மேலும், மீனும், ஆம்லெட்டும், கொத்துக்கறியும் கொண்டு வருமாறு சப்ளையரிடம் கட்டளையிட்டுக் கொண்டிருந்தான் கருப்பண்ணன். வயிறு நிறைந்து விட்டது. தண்ணீர் – தண்ணீர் அல்ல! ‘ஜிலு ஜிலு’ ‘ஐஸ் வாட்டர்’. சவாரிக்காளை வீடடைந்ததும் ஒரு ‘தாளி’ தண்ணீர் குடிப்பதைப் போல் குடித்துத் தள்ளினான். இனி நடப்பதே சிரமம்! அந்த ‘குஷன் சேர்’ ஒன்றில் படுத்துக் கொண்டால் நன்றாகத் தூங்கலாம் போல் இருந்தது அவனுக்கு!

“பார்சல்” என்றான் சப்ளையரிடம் கருப்பண்ணன்.

பார்சலா? கிட்டப்பன் கேட்டிராத வார்த்தை இது.

ஒரு பெரிய பை நிறைய பிரியாணி, கறி வகையறாக்கள் வாங்கிக் கொண்டான். “ஒரு பிளேட் தனியாகக் கட்டு!” என்றான் கருப்பண்ணன்.

சிரித்துக் கொண்டே கிட்டப்பன் புறம் திரும்பி, “இது யாருக்குச் சொல்லு பார்க்கலாம்” என்றான்.

சாப்பிடும் போது தன்னுடைய அப்பனைப் பற்றி நினைத்தான். பிறகு மறுநாள் தானே தனியாக வந்து வாங்கிக் கொண்டு போய்க் கொடுக்கலாம் என்று எண்ணிக் கொண்டான். அவன் அப்பன் தான் ஆயுசில் இத்தனை ருசியாக எங்கே தின்றிருக்கப் போகிறான்?

‘பார்சலை’ கையில் எடுத்துக் கொண்ட கிட்டப்பன் நேராக சிங்கநல்லூர் பஞ்சாலைச் சங்கத்திற்கே வந்து சேருவோம் என்று நினைக்கவில்லை. ‘ஒரு பிளேட் தன் தகப்பனுக்கு. மற்றதெல்லாம் கருப்பண்ணனுக்கு வேண்டிய யாருக்காகவாவது இருக்கலாம்’ என்பது அவன் ஊகம்!

“இதுதானப்பா எங்க சங்கம்!”

“அண்ணைக்குக் கூட காட்டீனீங்களே” என்றான் கிட்டப்பன்.

“அண்ணைக்கு வெளியே இருந்து சும்மா சுட்டிக் காட்டினேன். இப்பப் பாரு மேலே மாடிக்கே போகலாம். அங்கேதான எங்க தலைவர், காரியதரிசி இருக்காங்க!”

மாடியில் பாய் விரித்து கடிதங்களும் ‘பைல்’களும் சூழ அவர்கள் இருவரும் வீற்றிருந்தார்கள். பகல் ஒரு மணிக்கு மேலிருக்கும்.

“என்னப்பா இத்தனை நேரம் பண்ணீட்டே” என்றார் காரியதரிசி.

கருப்பண்ணன் அடக்கமாகப் பதில் சொன்னான். “சரி, சரி, பிரித்து வை. தயிர் எங்கே? ஓகோ! இங்கே தயிரக் கொண்டு வந்து வச்சிருப்பாங்களா? கூசாவில் தண்ணி இருக்குதில்லையா? டம்ளர்களை எடு. யார் இந்தப் பையன்! அட, ராத்திரி சொன்னாயே, சொந்தக்காரப் பையனா?” என்று மூச்சுவிடாமல் பேசிக் கொண்டு, பிரியாணியை, ‘ஒரு கை’ பார்க்க ஆரம்பித்தார் அவர். தலைவரும் சளைக்கவில்லை!

கிட்டப்பனுக்கு அன்றைய தினம் ஏற்பட்ட சந்தேகம், பெரிய சந்தேகம். காலப்போக்கில் தான் விளங்கலாயிற்று. என்னதான் தொழிலாளர்களுக்காக ‘உயிரை’க் கொடுத்துப் பாடுபட்டாலும் ‘இப்படி வாயார’த் தின்பதைப் பார்த்தால் சகிக்காதாம்! வெளியே சொல்வார்களா? ‘நம்ம பணம் அல்லவா கோலா உருண்டையாகவும், ஈரல் வறுவலாகவும் வடிவெடுக்கிறது!’ என்ற கிலேசம் உண்டாகுமாம்! தலைவருக்கும் காரியதரிசிக்கும் அது சொந்த ஊர் அல்ல. வீடு அங்கில்லை. அப்படி வீடே இருந்தாலும் சாப்பாட்டுக்கெல்லாம் போய்க் கொண்டிருந்தால் ‘பிரச்சினை’கள் அவசரமாக உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய ‘பிரச்சினை’கள் என்ன ஆவது? காரியதரிசி ஒரு நாள் சொல்லிக் கொண்டிருந்தாராம். அவர் சென்னை சென்று விட்டு திரும்பி தம் சொந்த ஊர் அவினாசிக்கு வரும்போது திருப்பூரிலேயே இறங்கிக் கொள்வாராம். மனைவி மக்களுக்கு பழங்கள் அது இது என்று என்னத்தையாவது வாங்கி வர மாட்டாரா? கோவை, சிங்கநல்லூருக்கே வந்துவிட்டுப் பிறகு ஊர் செல்லலாம் என்றால் – கையிலிருக்கும் பண்டங்கள் தொழிலாளர் கண்களைக் குத்துமாம்! ‘இத்தனை சாமான் வாங்க அவருக்கு அத்தனை பண்ம ஏது?’

ஒருவிதத்தில் அப்படி ‘மனப்பான்மை’ வளர, வளர்க்க இந்தத் தலைவர்கள் தான் காரணம்.

இதோ…

“முதலாளி நம்முடைய முதல் எதிரி!” என்று முழங்கினார் மூன்றாவது பிரசங்கி.

கிட்டப்பன் வியப்பில் ஆழ்ந்தான்! அவன் வேலை செய்கின்ற மில் முதலாளி தினசரி காலை நேரத்தில் மில்லுக்கு வருவார். மாலையில் வருவதில்லை. ஆனாலும் வாரத்தில் நாலைந்து தடவையாவது காரிலிருந்து இறங்கி ‘ஏஜெண்டு’ ஆபீசிற்குள் செல்லும் அவரை அவன் கண்டு கொண்டுதான் இருந்தான். வெளி ‘கேட்’ திறக்கும் துரித ஓசையிலே, அந்தக் கணம் மின்னி மறையும் பரபரப்பில் – ‘முதலாளி வந்தாச்சு!’ என்று அவருடைய காரைப் பார்க்காமலே கூறும் அளவுக்கு அனுபவம் கைகூடி இருந்தது. ‘பளபள’ப்பான அந்த சொகுசுக் காரும், வெள்ளை வெளேரென்ற ஷர்ட்டும், கோட்டும், சூட்டும் அவர் ‘பெரிய மனிதர்’ என்கின்ற எண்ணத்தை அவனுள் ஏற்படுத்தி இருந்தது. அவர் திரும்பிப் பார்ப்பதில்லை. யாருடனும் பேசுவதில்லை. அறைக்குள் போய்ப் பேசுவார்! ‘பேசா மடந்தை’யா என்ன? ஆனால் அந்த மனிதரை – மில் முதலாளியை ‘எதிரி’ என்று சொல்கிறார்களே – அவருக்கும் நமக்கும் என்ன விரோதம்? அவர் முதலாளி! உலகத்து முதலாளிகள் அனைவருமே வேலை செய்கிறவர்களுக்கு எதிராளிகளா?

“ஆகவே என்.ஜி.ஆர். வகுத்த வழியில் முதலாளிகளை ஒழிப்போம்!”

‘இப்படியே சத்தம் போட்டுக் கொண்டிருந்தால் இந்தப் பிரசங்கியின் தொண்டை ஒழிந்து போகும்! கிழிந்து போகும்!’ என்று எண்ணினான் கிட்டப்பன். அவனையறியாமல் சிரித்து விட்டான்.

“என்னடா தம்பி சிரிக்கிறே?” என்றான் கருப்பண்ணன்.

கிட்டப்பனுக்குச் ‘சட்’டென்று என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நிமிர்ந்து பார்த்தான். கருப்பண்ணன் பிரசங்கியார் ‘வழி’யைப் பின் தொடர்ந்து தன்னை மறந்திருந்தான்!

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போலிருந்தது நாச்சப்பனுக்கு. அனேகமாகக் கட்டிப் போட்டிருப்பதாகவே அவன் கருதினான். அந்தத் தருமர் வைத்தியசாலையில் ‘கால்கட்டு’ எடுபடாதிருந்த நிலையில் எலும்பு முறிவு இனிக் கூடுமா கூடாதா என்ற வேதனை நினைவுகளில் கூட அவன் அவ்வளவு தூரம் ‘வெக்கி வெதும்ப’வில்லை. இப்போது சுகமாக – மற்றவர்கள் பார்வைக்கு அது சுகம் தான் – சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டே அந்தச் சின்னஞ்சிறு வீட்டில் காவேரி மில்லுக்கு எதிரில் வேளா வேளைக்கு உணவு உண்டுகொண்டு, முன்னைப் போல் ‘விடிந்து பொழுது சாயும்வரை’ ஒற்றை மாட்டு வண்டியை ஓட்டுகின்ற ‘சள்ளை’ இல்லாதிருந்தும் – ஏனோ அவனுக்குச் சிங்கநல்லூர் வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்படவில்லை. கீரனூர் எங்கே? சிங்கநல்லூர் எங்கே? ‘என்ன நாச்சப்பா இது சரிதானா? இவ்வளவு தூரம் உன்னால் எப்படி மாறமுடிந்தது?’ என்று ஒரு சிறுகுரல் ஒலிக்கும்.

இன்னொரு குரல் கூறும். ‘சரிதான் போ? கீரனூர் குட்டிச் சுவர்களைப் பார்ப்பதில் தான் உனக்கு இஷ்டம்! இங்கே உயரும் கட்டிடங்களைப் பாரப்பா!’

மற்றொரு குரல் சொல்லும் : ‘பகலுக்கும் இரவுக்கும் இங்கே வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறதா? கண்ணைக் கூசும் வெண்ணிற விளக்குகள், ஆலைகளுக்குள்ளும் வீதியிலும் எவ்வளவு ஒளியைத் தெளிக்கிறது பார்! நீயும் தான் இந்தப் பால் வெள்ளத்தில் குளித்து விளையாடுவது தானே?’

‘நானா? விளையாடுவதா? நல்ல கூத்து! ஆண்டவன் அதற்காகத்தான் முன் கூட்டியே என் காலை முறித்து விட்டான் போலும்!’ என்ற ஏக்கமும் தொடரத்தான் செய்தது. ஆனால் ஏக்கத்தைக் கருப்பண்ணனுடைய கருணை வென்றுவிடும்!

‘அவன் மாத்திரம் இல்லாமல் இருந்தால்?’ மேலே சிந்திக்கவே மனம் மறுத்தது.

கருப்பண்ணன் எல்லோருக்கும் நல்லவனாகத்தான் இருக்கிறான். சொந்த ஊராச்சே என்று பார்த்துக் கொண்டு அங்கேயே விழுந்து கிடந்தால் நாச்சப்பன் தான் இன்று எதற்காக அவனை நெஞ்சுக்குள்ளே வாழ்த்திக் கொண்டிருக்கிறான்?

எதிர் வீடும் சிறு வீடுதான். அங்கே ஒரு மலையாளத்து மங்கை வசிக்கிறாள். மங்கைப் பருவத்தை அவள் தாண்டி பல வருஷங்கள் ஆகியிருக்கும். இருப்பினும் சிறு பெண்ணைப் போல் சிங்காரித்துக் கொள்கிறாள். அவளும் மில்லில் தான் வேலை செய்கிறாள். எங்கோ உறவினர் வீட்டு விசேஷத்திற்கு கோவிலுக்குப் போவதைப் போல மகிழ்ச்சியோடு செல்கிறாள். திரும்பும் போதும் அப்படித்தான். மற்ற பெண்கள் தலைமுடியில் பஞ்சு, தூசு, துப்பை இருக்கலாம். மலையாளப் பெண்ணில் முடி அப்போதுதான் வாரிவிட்டது போல் சுத்தமாக இருக்கும். மில்லுக்குள்ளேயே கண்ணாடி வைத்திருக்கிறாளோ? அல்லது ‘டிரஸ்’ கலைந்ததை ஒழுங்கு படுத்திக்கொண்டு வந்துவிடுகிறாளோ?

நாச்சப்பனோடு பேச்சுக் கொடுப்பாள். சமையலுக்கு ஒரு சிறுமி இருந்தாள் – நாச்சப்பன் வீட்டில் தான். கருப்பண்ணன் ஏற்பாடுதான் அது. பையனும் மில்லுக்குப் போய்விடுகிறான். இந்த வயசில், அதுவும் காலில் அடிபட்ட பிறகு தாராளமாக நாச்சப்பனால் இயங்க முடியுமா? அந்த வேலைக்காரப் பெண்ணுக்கு அவ்வப்போது சமையல் கலையின் சூட்சமத்தைக் கற்றுக் கொடுப்பான்.

அந்த மலையாள மங்கையோடு நான்கு பேர் அந்த வீட்டில் குடியிருந்தார்கள். வீட்டுக்காரி அப்பெண்மணி தான். ஆனால், அவளுடைய வீட்டுக்காரரை நாச்சப்பனால் கண்டுகொள்ளவே முடியவில்லை. ஒருவனை ‘மச்சான்’ என்கிறாள். இன்னொருவனை ‘அத்தான்’ என்கிறாள். ‘மாமா’ என்று வரிசை வைக்காமல் அவள் அழைப்பதே இல்லை. கதவு சாத்தி இருக்கிறது, திறந்திருக்கிறது, ஒருக்கழித்துக் கிடக்கிறது. சிலவேளை அவளும் தூங்கி எழுந்து வரும் போது கூடவே இருவர் வருகிறார்கள். உட்காருகிறார்கள். சிரிக்கிறார்கள். அவர்களும் அங்குள்ள பஞ்சாலைகளில் வேலை பார்க்கிறவர்கள் தான். ‘என்னடா கூத்து!’ என்று அதிசயிப்பான் நாச்சப்பன்.

‘நாலு பேரும் புருசன் மாதிரியே ஒவ்வொருத்தரோடும் விளையாடராளே!’ என்று அவனுக்கு விசித்திரமா இருக்கும். நாலென்ன? இன்னொருவரையும் தான் சேர்த்துக் கொள்ளட்டுமே! பாஞ்சாலிக்கு கணவர் ஐவர் இல்லையா!

பக்கத்து வீட்டில் ஒரு கவுண்டச்சி! எங்கிருந்தாலும் ‘கவுண்டச்சி’யை இனம் கண்டு கொள்ளலாம். தானுண்டு தன் பாடு பரப்புண்டு. பிள்ளை குட்டிகள், கணவன் – சிலவேளை சில்லரைச் சண்டைகளும் போடுவதும் உண்டுதான். ஆனால், அதெல்லாம் கிராமத்தில் இருக்கும் போது, பஞ்சாலையில் சேர வந்துவிட்டால் சச்சரவெல்லாம் பிறகு முதலாளியோடுதான்.

சுற்றிலும் உள்ள குடும்பங்கள், அவர்கள் எங்கிருந்தெல்லாம் சேர்ந்திருக்கிறார்கள் என்று கணக்கு எடுப்பதுதான் ஒழிந்த வேளைகளில் நாச்சப்பனுக்குத் தொழில்! அவனுக்கு எல்லா வேளைகளும் ஒழிந்த வேலைதான்! வெற்றிலைப்பாக்குக் கடையில், டீக்கடையில் உட்கார்ந்து கொண்டால் – அவன் கேட்காவிட்டாலும் ‘ஒழிந்த வேளை’களில் அவர்கள் பிறருடைய சுயசரிதங்களைக் கூறி விடுகிறார்கள்!

‘இங்க முக்காவாசிப் பேருக நாய்க்கமார்களாக இருக்காங்களே’ என்று கருப்பண்ணனிடம் ஒரு நாள் விசாரித்தான் நாச்சப்பன்.

“ஆமாண்ணா.”

“அதேனப்பா அப்படி?”

“அண்ணா! மொதல்லே நாயுடுகதான் மில்லுகளைக் கட்டினாங்க. வேலைக்கு வேறே யாரையும் வெச்சுக்க மாட்டாங்கன்னு கெடையாது; தாயி புள்ளைகளை சொந்தக்காரர்களை ஆதரிக்காமயா இன்னொருத்தரை ஆதரிப்பாங்க?”

“அத்தனை மில்லும் நாயக்கமார் மில்லுகதானப்பா.”

“எண்ணா உங்கிட்டே பொழுதோடே வளப் பொகையிலே நித்தம் வாங்கிபோடற செட்டியாரு அவுங்க சாதிக்காரரு கட்டி வெச்சிருக்கிற செட்டியார் மில்லுக்குத்தான் போனார். மொதலிமார் மில்லு ஒண்ணு இருக்குது. கவுண்டர் மில் கூட இருக்குதண்ணே! ஆனா நீ சொல்லுவயே பேச்சுக்கு ஒருக்கா – முக்கலே மூனுவிசம் மில்லுக நாயக்கமாருக கைக்குள்ளேதான் இருக்குது!” என்று கருப்பண்ணன் கூறிவிட்டு இன்னும் ‘விவரம்’ தேவையோ என நாச்சப்பனுடைய முகத்தைப் பார்த்தான்.

வேப்பங் காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது.

கிட்டப்பன் இன்னும் வரவில்லை. “ஆச்சு, மூணே முக்கால் சங்கு ஊதிருவாங்க” என்றான் கருப்பண்ணன். அவன் சொல்லச் சொல்ல சங்கின் ஒலி கேட்டஹ்டு. அந்தப் பயங்கர ஒலி – அதில் என்ன பயங்கரம் இருக்கிறது? – அருகே இருந்தால் காதைத் துளைக்கிற மாதிரி சப்திக்கும்.

“இது ஒரு நாராசமப்பா?” என்றான் நாச்சப்பன். பக்கத்து மில்லிலிருந்து இன்னொரு சங்கின் அலறல்!

கருப்பண்ணனுக்குச் சிரிப்பு வந்தது. “கேட்டுக் கேட்டுப் பழகிட்டா அப்புறம் ஒண்ணும் சொல்ல மாட்டே! எண்ணா, அப்படித்தானே?” என்றான். அவனுக்குப் பகல் லீவு! ‘நைட் ஷிப்ட்’ அல்லவா? ஆயிரம் பேருக்கும் அதிகமாக வேலை செய்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 06கல்கியின் பார்த்திபன் கனவு – 06

அத்தியாயம் ஆறு போர் முரசு வீட்டு வாசலிலிருந்து குதிரை கிளம்பிப் போன சத்தம் கேட்டதும், வள்ளி முற்றத்துக்கு வந்தாள். மாரப்ப பூபதி உதைத்துத் தள்ளிய கத்திகளில் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு “தாத்தா! இந்தக் கத்தி கேடயம் எல்லாம் நீ செய்து

சாவியின் ‘ஊரார்’ – 04சாவியின் ‘ஊரார்’ – 04

4 உட்கார்ந்து, உட்கார்ந்து கட்டில் கயிற்றில் தொய்வு ஏற்பட்டிருந்தது. சாமியார் அதை இழுத்துப் பின்னி முறுக்கேற்றினார். தனக்குத்தானே சிரித்துக் கொண்டார். “என்ன சிரிக்கிறீங்க சாமி?” என்று கேட்டான் அவுட் போஸ்ட் பழனி. பானரை எடுத்து உதறிவிட்டு, அதிலிருந்த ஆட்டுக்கார அலமேலு மீதிருந்த

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 6கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 6

அத்தியாயம் 6 – இடிந்த கோட்டை      கொள்ளிடத்து ‘லயன் கரைச் சாலை’ இருபுறத்திலும் செழிப்பான புளிய மரங்கள் வானை அளாவி வளர்த்து, கிளைகள் ஒன்றோடொன்று அடர்த்தியாய்ப் பின்னி, கொட்டாரப் பந்தல் போட்டதுபோல் நிழல் தந்து கொண்டிருந்தன. சாலையின் ஒரு புறத்தில் கண்ணுக்கெட்டிய