Tamil Madhura சிறுகதைகள் அசோகர் கதைகள் 1- ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்

அசோகர் கதைகள் 1- ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்

 

அசோகர் கதைகள்
கதை ஒன்று – துன்பம் போக்கும் அன்பர்

 

    • மாமன்னர் அசோகர் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலம் அது. அசோகர் இனிமேல் போரே நடத்துவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டிருந்தார். போரினால் மக்கள் அடையும் துன்பங்களை நேரில் கண்டறிந்து மனம் மாறிய பின் அவர் இவ்வாறு உறுதி செய்துகொண்டார். இந்தச் செய்தி பரத கண்டம் முழுவதும் பரவியது.

 

    • ஒரு சிற்றுாரிலே இருந்த பெரியவர்கள் ஒருநாள் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

    • “துன்பம் அடைந்தவர்களைக் கண்டால் அரசர் அப்படியே கண்ணிர் விட்டு விடுகிறாராம்! யாராவது ஏதாவது கவலை என்று சொன்னல் அதை உடனே தீர்ப்பதற்கு வழி செய்கிறாராம்!அரசர் அடியோடு மாறிவிட்டார்” என்றார் ஒரு பெரியார்.

 

    • “உண்மைதான். மற்ற உயிர்களைத் தம் உயிர்போல் மதிக்கும் மனப்பான்மை ஒருவருக்கு வந்துவிட்டால், அவர் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கவே பாடுபடுவார். புத்த பெருமானின் வழியில் திரும்பிய அசோக மன்னர், இரக்கம் கொண்டவராக மாறியதில் வியப்பில்லை” என்றார் அவ்வூர்ப் பள்ளி ஆசிரியர்.

 

    • “கவிஞர் ஒருவர் சாப்பாட்டுக்கில்லாமல் பட்டினியாய்க் கிடக்கிறார் என்று யாரோ தெருவில் பேசிக்கொண்டார்களாம். மாறுவேடத்தில் சென்ற மாமன்னர் இதைக் கேள்விப்பட்டு, உடனே உண்மையை அறிந்து, கவிஞர் வீட்டுக்கு வண்டி வண்டியாய்த் தானியங்கள் அனுப்பி வைத்தாராம்!” என்று வெளியூரிலிருந்து வந்த ஒரு வணிகர் கூறினார்.

 

    • இப்படியே மாமன்னர் அசோகரைப் பற்றித் தாங்கள் கேள்விப்பட்டவற்றையும் அறிந்தவற்றையும் கூறிப் புகழ்ந்து பொழுது போக்கிக்கொண்டிருந்தார்கள் அந்த ஊர்ப் பெரியவர்கள். அவர்கள் பேசியவற்றையெல்லாம் ஓர் இளைஞன் கவனித்துக் கொண்டிருந்தான்.

 

    • அந்த இளைஞனுடைய தந்தை ஒரு போர் வீரன். அந்தப் போர் வீரன், இளைஞன் சிறு பிள்ளையாய் இருந்த போதே ஒரு போரில் நெஞ்சில் அம்பு பாய்ந்து இறந்து போனான். அந்த இளைஞனை அவனுடைய தாய் தான் வளர்த்துவந்தாள். அவள் எப்படியோ பாடுபட்டு அவனைக் கவலையில்லாமல் வளர்த்துவந்தாள். ஒரே பிள்ளையாகையால் அவள் அவனை அடக்கி வளர்க்கவில்லை.

 

    • அந்த இளைஞன் சிறு வயதில் ஒழுங்காகப் பள்ளிக்குப் போகவில்லை. வீட்டில் சாப்பிட்டுவிட்டு வெளியில் எங்காவது போய்ச் சுற்றிவிட்டு வருவான். அவன் வளர்ந்த பிறகு அவன் தாய் சிலசமயம் அவனைக் கடிந்துகொள்ளுவாள். படிக்கவில்லை என்றாலும் ஏதாவது வேலை பழகிக்கொள்ளக் கூடாதா என்று கேட்பாள். ஆனால் அவளுடைய பேச்சையெல்லாம் அவன் உதறித் தள்ளிவிடுவான். தான் உழைத்துப் பெறும் கூலியில் தாய் அரிசியும் காய்கறியும் வாங்கிவந்து அவனுக்கும் சோறு சமைத்துப் போடுவாள். ஒருநாளாவது அவன் வயதான தன் தாயின் உழைப்பில் தின்று தான் சோம்பேறியாய் இருந்துகொண்டிருப்பது தவறு என்று நினைத்துப் பார்த் ததே யில்லை.

 

    • கடைசியில் ஒருநாள் காய்ச்சல் என்று சொல்லிக் கொண்டு அவனுடைய தாய் படுத்துவிட்டாள். அவள் நோயாகப் படுத்துவிட்டபின், வீட்டுச் செலவுக்குக் காசே கிடைக்கவில்லை. தான் போய் வேலை பார்க்க வேண்டும் என்று அந்த இளைஞன் நினைக்கவேயில்லை. எங்கோ சுற்றி விட்டு வந்து “அம்மா எனக்குச் சோறு போடு!” என்றான். அவளோ, படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாமல் கிடந்தாள்.

 

    • தன் தாய் முடியாமல் இருக்கிறாள் என்பதையே சிறிதும் கருதிப் பாராமல், “அம்மா, வயிறு பசிக்கிறது. எழுந்துவந்து சோறு போடு” என்று கேட்டான்.

 

    • அவள் அவனே அருகில் வரும்படி அழைத்தாள்.

 

    • “மகனே, எங்காவது போய் வேலை செய்து நாலு காசு கூலி வாங்கிக் கொண்டு வா. நான் அரிசி வாங்கிச் சோறு சமைத்துப் போடுகிறேன்” என்றாள்.

 

    • “நான் வேலை செய்வதா? எனக்கு ஒரு வேலையும் செய்யத் தெரியாதே!” என்று சொல்லிவிட்டு அந்த இளைஞன் பேசாமல் படுத்துவிட்டான்.

 

    • இரண்டு மூன்று நாட்களாக அவனும் பட்டினி; அவன் அம்மாவும் பட்டினி; மருந்து வாங்கிக் கொடுக்காத தால் அம்மாவின் நோய் முற்றியது. ஐந்தாவது நாளே அவள் இறந்து போய்விட்டாள்.

 

    • அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அக்த இளைஞனைத் திட்டினர்கள். அவன்தான் தன் தாயைக் கொன்று விட்டான் என்று குற்றம் சாட்டினார்கள். அதன் பிறகும் தான் உழைத்துப் பிழைக்க வேண்டும் என்று அந்த இளைஞன் நினைக்கவேயில்லே. உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வேளையாகச் சாப்பிட்டுவந்தான். சில நாட்கள்வரை, உறவினர்கள் இரக்கப்பட்டுச் சோறு போட்டர்கள். பிறகு, அவர்கள் அவனைத் தங்கள் வீட்டு வாசற்படியையே மிதிக்கக் கூடாதென்று கூறி விரட்டி யடித்து விட்டார்கள்.

 

    • அதன் பிறகும் அந்தப் பையன் உழைத்துப் பொருள் பெற வேண்டுமென்று நினைக்கவில்லை. வீடுவீடாகப் போய்ப் பிச்சை எடுத்தான்.

 

    • பிச்சைக்குச் செல்லும்போது சில சமயம் ஏதாவதொரு வீட்டில் அவனுக்குச் சாப்பாடே போடுவார்கள். சில சமயம் ஒவ்வொரு வீட்டில் ஒரு கைப்பிடி சோறுதான் போடுவார்கள். பத்துப் பதினேந்து வீட்டில் பிச்சை யெடுத்த பிறகுதான் வயிற்றுக்குச் சோறு கிடைக்கும். சில சமயம் வீட்டுக்காரர்கள் “வராதே போ!” என்று விரட்டி யடிப்பார்கள்.

 

    • ஊர்ப் பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தபோது அந்த இளைஞன் பிச்சைக்காரனாகத்தான் இருந்தான். அந்தப் பெரியவர்களிடம் ஏதாவது காசு பிச்சை கேட்கலாம் என்று சென்றவன்தான் அந்தப் பேச்சுக்களைக் கவனித்தான்.

 

    • அசோக மன்னர், பிறர் கவலையைப் போக்குபவர் என்று கேள்விப்பட்டவுடன் அவனுக்கு மனத்துக்குள் ஒரு திட்டம் உருவாயிற்று. அசோக மன்னரைப் பார்த்துத் தன் துன்பத்தை எடுத்துக் கூறினால், தனக்கு நிறையப் பணம் கொடுக்கமாட்டாரா என்று எண்ணினான். நேரம் ஆக ஆக, அந்தப் பெரியவர்கள் அரசரைப் புகழ்ந்து பேசப் பேச, அவன் எண்ணம் வலுப்பட்டது. ஆகவே எப்படியும் அசோகரை நேரில் பார்த்து விடுவதென்று அவன் உடனே அங்கிருந்து புறப்பட்டான்.

 

    • தலைநகரம் மிகத் தொலைவில் இருந்தது. அவ்வளவு தொலையும் அவன் நடந்துதான் போக வேண்டியிருந்தது. ஒருநாள் முழுவதும் நடந்த பிறகும் தலைநகரம் வெகு தொலைவில் இருப்பதாகவே தோன்றியது. மேலும் ஐந்தாறு நாட்கள் நடந்து சென்றால்தான் அங்கு போய்ச் சேரமுடியு மென்று வழிப்போக்கர்கள் சொன்னார்கள்.

 

    • பேசாமல் திரும்பிவிடலாமா என்று நினைத்தான். ஆனால், கவலையைத் தீர்ப்பதற்கு என்று ஒருவர் இருக்கும் போது அவரைப் பார்க்காமல் இருப்பது சரியல்ல என்று தோன்றியது. எப்படியும் அசோக மன்னரைப் போய்ப் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

 

    • ஒரு முறை உறுதியான முடிவு ஏற்பட்ட பிறகு அவன் பின்வாங்கவில்லை. என்ன தான் கடுமையாக இருந்த போதிலும், பசியையும், களைப்பையும் பொறுத்துக் கொண்டு அவன் வழி நடந்தான்.

 

    • வழிப்போக்கர்களில் ஒரிருவர் அவன்மீது இரக்கப்பட்டு ஓரிரு முறை தங்கள் கட்டுச் சோற்றில் சிறிது கொடுத்தார்கள். சில வேளை அவன் அரைப் பட்டினி யாகவும், சில வேளைகளில் முழுப்பட்டினியாகவும் இருக்க நேரிட்டது. வயிற்றைக் கிள்ளும் பசியைப் பொறுத்துக் கொண்டு, கால்வலியைப் பொருட்படுத்தாது அவன் நடந்து கொண்டேயிருந்தான். காட்டுச் சாலைகளிலும், ஊர்த் தெருக்களிலும் நடந்து, பல ஊர்களையும், வயல் வெளிகளையும் கடந்து ஒரே நோக்கத்தோடு சென்றுகொண்டிருந்தான்.

 

    • அவன் புறப்பட்ட ஐந்தாவது நாள் சாலையின் வழியில் ஒரு துறவியைக் கண்டான். காவியுடை உடுத்தியிருந்த அந்தத் துறவியின் தோற்றம் எடுப்பாக இருந்தது. சிங்கம் போல் நிமிர்ந்த பார்வையும், ஒளிநிறைந்த, கண்களும், புன் சிரிப்பு நெளியும் உதடுகளையுடைய வாயும், அந்த இளைஞனை எப்படியோ கவர்ந்து விட்டன.

 

    • “தலைநகரம் இன்னும் எவ்வளவு தொலையிருக்கிறது?’’ என்று இளைஞன் அந்தத் துறவியைக் கேட்டான்.

 

    • அன்புகனிந்த கம்பீரமான குரலில் அவர் அந்த இளைஞனைப் பார்த்து, “தம்பீ, தலைநகரத்துக்கு நீ எதற்காகப் போகிறாய்?” என்று கேட்டார்.

 

    • “அசோக மன்னரைப் பார்க்க” என்று சிறிதும் தயங்காமல் பதிலளித்தான் இளைஞன்.

 

    • “தம்பீ, பிச்சைக்காரனைப் போல் இருக்கும் உன்னை அரண்மனைச் சுற்றுப் புறத்திலேயே நெருங்க விட மாட்டார்களே! நீ எப்படி மன்னரைப் பார்க்கப் போகிறாய்?” என்று கேட்டார் துறவி.

 

    • “ஐயா, நீங்கள் தெரியாமல் சொல்லுகிறீர்கள். அசோக மன்னர் கருணையே உருவானவர். அவர் துன்பப்படுபவர்களின் துயர் தீர்க்கப் பிறந்தவர் என் கவலைகளைப் போக்கிக் கொள்ளவே நான் அவரைப் பார்க்கப் போகிறேன். எப்படியும் அவரைப் பார்ப்பேன். பலனும் பெறுவேன்!” என்றான் இளைஞன்.

 

    • அந்தத் துறவி அவனுடன் பேச்சுக் கொடுத்து அவனைப் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்துகொண்டார். அவனுக்கிருந்த கவலையெல்லாம் சோற்றுக் கவலை தான் என்பதையும் தெரிந்துகொண்டார்.

 

    • திரும்பவும் அவர் சொன்னார்: “தம்பீ, நீ அசோக மன்னரைப் பார்த்துவிட்டால் எப்படியும் அவர் உன் கவலைகளைத் தீர்த்துவிடுவார் என்பது உண்மைதான். ஆனால், அரண்மனைக் காவலர்கள், அசோக மன்னரைப்போல் இருப்பார்களா? அவர்கள், பிச்சைக்காரனைப் போன்ற உன்னே உள்ளே விடுவார்களா?” என்று கேட்டார்.

 

    • “அதையும் தான் பார்த்து விடுவோமே!” என்று பதிலளித்து விட்டு இளைஞன் மேலே நடந்தான்.

 

    • “தம்பி, மன்னரைப் பார்க்க முடிந்தால் பார். இல்லாவிட்டால் என் மடத்துக்கு வா!” என்று சொல்லி அந்தத் துறவி, தான் இருக்கும் புத்த மடாலயம் ஒன்றை அவனுக்குக் காண்பித்தார்.

 

    • ‘சரி’ யென்று சொல்லிவிட்டு அந்த இளைஞன் சென்றான்.

 

    • துறவி சொன்னபடிதான் நடந்தது. தலைநகருக்குள் நுழைந்த இளைஞன் அரச வீதிக்குள் செல்லவே முடியவில்லை. நகர்க் காவலாளிகள் அவனை அந்த வீதியை விட்டுத் துரத்தினார்கள்.

 

    • “நான் மன்னர் பெருமானைப் பார்க்க வந்திருக்கிறேன்: என்னைப் போகவிடுங்கள்!” என்று அவன் காவலரிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான்.

 

    • “பெரிய அரண்மனை அதிகாரி! அரசரைப் பேட்டி காண வந்து விட்டார்! போடா! இல்லாவிட்டால் உதை விழும்” என்று அந்த தகர்க் காவலர்கள் எரிந்து விழுந்தார்கள்.

 

    • இளைஞன் துயரம் தோய்ந்த முகத்தோடு தலைநகரிலிருந்து திரும்பினான்.

 

    • வழியில் துறவி காட்டிய மடம் இருந்தது. அவரைப் பார்த்தாவது ஆறுதல் அடையலாம். முடிந்தால் மடத்துச் சோறு சிறிது கிடைக்குமா என்று பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் அவன் அந்த மடத்துக்குள் நுழைந்தான்.

 

    • அன்பு கனிந்த அதே வசீகரப் பார்வையோடு அத் துறவி அவனே வரவேற்றார். “தம்பி, அரசர் பெருமானைப் பார்த்தாயா? ஏன் இப்படிச் சோர்ந்து போயிருக்கிறாய்?” என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டார்.

 

    • அந்தக் குறுஞ்சிரிப்புக்குள்ளே குறும்பும் இருந்தது. அதை இளைஞன் கவனிக்கவில்லை.

 

    • “ஐயா, நீங்கள் சொன்னபடியேதான் ஆயிற்று. என்னை அரச வீதியில் செல்லக்கூட காவலர்கள் விடமாட்டேன் என்று தடுத்து விட்டார்கள். என்னைப் போன்ற ஏழை எளியவர்களுக்கு எட்டாத இடத்தில் கருணையுள்ள மன்னர்கள் இருந்து என்ன பயன்?” என்று உள்ளங் குமுறிப் பேசினான் இளைஞன்.

 

    • “தம்பீ, நீ பேசுவது சரியல்ல. மன்னர்கள் உன்னைப் போன்ற பிச்சைக்காரர்களைப் பார்ப்பது என்று ஆரம்பித்தால், பார்க்க வரும் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமற் போய்விடும். சொல்லப்போனால், ஏதாவது உதவி பெறுவதற்காக எல்லோருமே பிச்சைக்காரர் களாக வேடம் போட்டுக் கொண்டு வந்து விடுவார்கள்!” என்று துறவி சொல்லிக் கொண்டு வரும்போதே இளைஞன் இடையிற் பேசினான்.

 

    • “அப்படியானால் நான் எப்படித்தான் அசோக மன்னரைப் பார்ப்பது?” என்று கேட்டான்.

 

    • “இந்த நிலையில் நீ அவரைப் பார்க்க நினைப்பதே தவறு. உன்னால் அவரைப் பார்க்கவே முடியாது!” என்றார் துறவி.

 

    • “அப்படியானால் எந்த நிலையில் நான் அவரைப் பார்க்க முடியும்?”

 

    • “நீ உன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும். சாதாரணப் பிச்சைக்காரனாக இல்லாமல் ஒரு வசதியுள்ள குடிமகனாக நீ மாற வேண்டும்” என்றார் துறவி.

 

    • “ஒன்றுமில்லாத நான் எப்படி வசதியுள்ளவனாக மாற முடியும்?”

 

    • “முடியும், கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டால்!”

 

    • “பணம் எப்படிச் சேர்ப்பது?”

 

    • “அதற்கு வேண்டுமானல் நான் வழி சொல்லித் தருகிறேன்” என்றார் துறவி.

 

    • “அது என்ன வழி?” என்று ஆவலோடு கேட்டான்.

 

    • “எனக்குத் தெரிந்த ஒரு தச்சன் இருக்கிறான். அவனுக்கு உதவியாக ஓர் ஆள் வேண்டுமென்று கேட்டான். நீ அவனுக்கு உதவியாகச் சில வேலைகள் செய்து கொடுத்தால், அவன் உனக்குப் பணம் தருவான். அந்தப் பணத்தைச் சேர்த்து வைத்து நீ வசதியுள்ள மனிதனாக மாறி விடலாம்” என்றார் துறவி.

 

    • “வேலையா? எனக்கு ஒரு வேலையும் செய்யத் தெரியாதே” என்றான் இளைஞன்.

 

    • “வேலையென்றால் ஒன்றும் கடினமானதில்லை. சரி, அதோ அந்தப் பீடத்தை இந்தப் பக்கத்திலே எடுத்துப் போடு!” என்றார் துறவி.

 

    • அந்த இளைஞன் அவர் குறிப்பிட்டபடி பீடத்தைத் தூக்கிக் கொண்டு போய் அவர் குறிப்பிட்ட இடத்தில் மாற்றி வைத்தான்.

 

    • “தம்பீ. இப்பொழுது நீ என்ன செய்தாய்?” என்று கேட்டார் துறவி.

 

    • “அந்தப் பீடத்தை இடம் மாற்றி வைத்தேன்” என்றான் இளைஞன்.

 

    • “இது உனக்குக் கடிதாக இருக்கிறதா?” என்று கேட்டார் துறவி.

 

    • “இல்லை” என்றான் இளைஞன்.

 

    • “இதுபோல நீ அந்தத் தச்சனுக்கு ஏதாவது வேலைகள் உதவியாகச் செய்தால் அவன் உனக்குக் கூலி தருவான். அதில் உன் சாப்பாட்டுச் செலவு போக மீதியைச் சேர்த்து வைத்து உன் நிலையை உயர்த்திக் கொள்ளலாம். உன்னை அந்தத் தச்சனிடம் வேலைக்குச் சேர்த்துவிடவா?” என்று கேட்டார் துறவி.

 

    • இளைஞனுக்கு வேலையில் நாட்டமில்லை என்றாலும், தன் நிலையை உயர்த்திக் கொண்டு அசோக மன்னரைப் பார்த்துத் தன் கவலையைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது.

 

    • துறவியிடம் சரி என்று சொல்லிவிட்டான். அவரும் அவனை ஒரு தச்சனிடம் வேலைக்குச் சேர்த்து விட்டார்.

 

    • தச்சன் முதலில் அந்த இளைஞனிடம் சிறுசிறு வேலைகள் வாங்கினான். மரக்கட்டைகளைத் தூக்கிக் கொண்டு வருவது, கருவிகளே எடுத்துக் கொடுப்பது, பலகைகளை அறுத்துக் கொடுப்பது போன்ற மிக எளிய வேலைகளை இளைஞன் முதலில் செய்தான். நாளாக ஆக அவன் பார்க்க வேண்டிய வேலைகள் விரிவு பெற்றன. உழைப்பும் அதிகமாயிற்று.

 

    • மூன்று மாதம் சென்றபின், இளைஞன் கையில் ஐம்பது ரூபாய் சேர்ந்திருந்தது. அதை எடுத்துக்கொண்டு மடத்துக்குச் சென்றன். ஆனால் துறவி அங்கில்லை. ஏதோ வெளியூர் ஒன்றுக்குச் சென்றிருப்பதாகவும், அங்கிருந்து பல ஊர்களுக்குச் சென்று திரும்பிவர நான்கைந்து மாதங்கள் செல்லும் என்றும் மடத்தில் இருந்த மற்ற துறவிகள் கூறினர்கள்.

 

    • இளைஞன் தச்சனிடம் திரும்பிச் சென்றான். வழக்கம் போல் அவனுக்கு வேலை பார்த்தான். நுண்ணிய தரமான வேலைகள் அவன் பார்க்கப் பார்க்கத் தச்சன் அவனுக்குக் கொடுக்கும் கூலியும் உயர்ந்தது. இளைஞன் தன் சாப்பாட்டுச் செலவுக்குப் போக மிகுந்த பணத்தையெல்லாம் சேர்த்து வைத்தான். இடையிடையே துறவியைத் தேடிச் சென்றான். அவர் அகப்படவேயில்லை. கடைசியாக ஓர் ஆண்டுக்குப் பிறகு அவன் கையில் ஐநூறு ரூபாய் சேர்ந்திருந்தது. அந்த ஐநூறு ருபாயுடன் துறவியைத் தேடி மடத்துக்குச் சென்றான். அந்த முறை துறவி மடத்தில்தான் இருந்தார். அவனை அன்போடு வரவேற்றார் அவர்.

 

    • துறவி அவனுடைய நலத்தைப் பற்றியும், வாழ்க்கை முறை பற்றியும், வேலை பற்றியும் ஆதரவான முறையில் விசாரித்தார். எல்லாவற்றுக்கும் பதில் சொன்ன அவன் “ஐயா! இப்பொழுது என்னிடம் ஐநூறு ரூபாய் இருக்கிறது. மன்னரைப் பார்க்கப் போகும் நிலை வந்துவிட்டதா. நான் அவரைப் பார்க்கப் போகலாமா?” என்று கேட்டான்.

 

    • “தாராளமாகப் போகலாம்?” என்றார் துறவி.

 

    • “எப்படிப் போக வேண்டும்?” என்று கேட்டான் அவன்.

 

    • “இப்போது உள்ள நிலையிலேயே போகலாம்” என்றார் துறவி.

 

    • “புதிய ஆடைகள் எதுவும் அணிந்து கொள்ள வேண்டாமா? இந்த நிலையில் இந்த ஆடைகளுடன் என்னேக் கண்டால் காவலர் உள்ளே விடுவார்களா?” என்று கேட்டான் இளைஞன்.

 

    • “ஆடைகள் எப்படி யிருந்தால் என்ன? நீ தான் நிலையில் உயர்ந்து விட்டாயே!” என்றார் துறவி.

 

    • “நான் உயர்ந்தது காவலர்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான் இளைஞன்.

 

    • “தெரியும். அசோகருடைய காவலாளிகளுக்கு பிச்சைக்காரன் யார், உழைப்பாளி யார் என்று நன்றாகத் தெரியும். அதற்கு ஆடை தேவையில்லே” என்றார் அந்தத் துறவி.

 

    • துறவியிடம் பழகப்பழக அவர்மேல் ஏதோ ஒரு விதமான நம்பிக்கையும் மதிப்பும் அந்த இளைஞனுக்கு ஏற்பட் டிருந்தது. ஆகவே, அவர் சொல்லை அவன் தலைமேற் கொண்டு, மறுநாள் அசோகரைப் பார்க்கக் கிளம்பினான்.

 

    • காலையில் எழுந்து குளித்து, நன்கு துவைத்து உலர வைத்த எளிய ஆடைகளை அணிந்து கொண்டு அவன் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டான்.

 

    • அரச வீதியுள் நுழைந்தபோது, யாராவது காவலாளிகள் தன்னை விரட்டுவார்களா என்று எதிர் பார்த்தான். யாரும் அவனே எதுவும் சொல்லவில்லை. காவலர்கள் சிலர் அங்கங்கே நின்றார்கள். சிலர் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்கள். யாரும் அவனைக் கவனிக்க வில்லை. கண்டாலும் நெருங்கி வந்து எதுவும் கேட்க வில்லை.

 

    • அரண்மனையை நெருங்கினான். கடைவாயிலில் இருந்த காவலர்களில் ஒருவன், “என்ன வேண்டும்?” என்று கேட்டான்.

 

    • “மாமன்னரைப் பார்க்க வேண்டும்!” என்று இளைஞன் கூறியவுடன், “இவனோடு செல்லுங்கள்” என்று ஒரு வீரனைக் காட்டினான்.

 

    • அந்த வீரன் இளைஞன் ஒரு மண்டபத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்த அதிகாரியிடம் ஒப்படைத்தான். அந்த அதிகாரி, பணிவும் கனிவும் கலந்த குரலில், “சற்று இங்கே அமர்ந்திருங்கள். மாமன்னர் வரும் நேரமாகி விட்டது” என்று கூறினார்.

 

    • இளைஞன் ஒர் இருக்கையில் அமர்ந்தான். அவ்வளவு பெரிய மண்டபத்தை அவன் அதற்கு முன் பார்த்ததில்லை. அவ்வளவு அழகிய கட்டிடத்தை அவன் முன்பு எங்கும் கண்டதில்லை. வியப்புணர்ச்சியுடன் அந்த மண்டபத்தை முற்றும் ஆராய்ந்தான். கீழே முற்றிலும் சலவைக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே நின்ற பெரிய பெரிய பளிங்குத் தூண்கள் மேல் விதானத்தைத் தாங்கி நின்றன. மேல் விதானத்தில் அழகிய சித்திரங்கள் தீட்டப் பெற் றிருந்தன. எல்லாம் புதியவை; எல்லாம் அழகியவை; ஆங்காங்கே புத்தர் பெருமானின் திருவாசகங்களும் எழுதப் பெற்றிருந்தன. மண்டபத்தின் நடுவில் நவமணிகள் இழைத்த பொன் அரியணை ஒன்று இருந்தது.

 

    • கணீர் என்று மணியடிக்கும் ஒலியெழுந்தது. வீணைகளின் மெல்லிய இன்னிசை தொடர்ந்தது. அந்தப்புரத்திலிருந்து மெல்ல நடந்து வந்த மாமன்னர் அசோகர் கம்பீரமான தோற்றத்துடன் அந்தப் பொன் அரியணையில் வந்து அமர்ந்தார். சபையில் இருந்த அதிகாரிகளும் பிறரும் எழுந்து நின்று வணக்கம் செய்து வாழ்த்துக் கூறினார். இளைஞனும் அவர்களோடு சேர்ந்து எழுந்து நின்றான். அவர்களோடு சேர்ந்து அவனும் வாயசைத்து வாழ்த்திசைத்தான்.

 

    • எடுப்பும் ஏற்றமும் பொருந்திய மாமன்னரின் உருவத்தையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கண்கள்! அரசர்க்கரசரின் கண்கள்! அவற்றிலேயே அவன் பார்வை பதிந்தது. அந்தக் கண்களுக்கும் அவனுக்கும் முன்பே எங்கோ எப்போதோ பழக்கம் ஏற்பட்டிருந்தது போல் தோன்றியது.

 

    • மாமன்னர் அசோகர் வந்து உட்கார்ந்ததும் பார்வையாளர்களின் பெயரை ஓர் அதிகாரி ஒவ்வொன்றாகக் கூற அந்தந்த மனிதர்கள் எழுந்து தாங்கள் வந்த நோக்கங்களை எடுத்துக் கூறினர். மாமன்னர் அவற்றிற்குப் பதில் அளித்தார். எல்லா நடவடிக்கைகளையும் இளைஞன் கவனித்துக் கொண்டிருந்தான். திடீரென்று அதிகாரி இளைஞன் பெயரைக் கூறிஞர். அவன் எழுந்து நின்றான். ஆனால் பேச வாய் வரவில்லை. அவன் சோற்றுக் கவலையால் வாடியபோது, அசோகரைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவரைச் சந்தித்துத் தன் குறையைக் கூறினால் அதைத் தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்த்தான். ஆனால், இப்போது அவனுக்குச் சோற்றுக் கவலை கிடையாது. வேறு கவலை எதுவும் கிடையாது. எதைக் கூறுவான் அசோகரிடம்? விழித்துக் கொண்டு நின்றான்.

 

    • மன்னர் பேசினர்:

 

    • “தம்பீ! என்ன கவலை உனக்கு? ஏன் கூறத் தயங்குகிறாய்? கூசாமல் பேசு!” என்றார்.

 

    • அந்தக் குரல்கூட அவனுக்குப் பழக்கமான குரல் போலிருந்தது. ஆனால் மன்னர் பெருமானுக்கும் தனக்கும் என்ன பழக்கம்! ஏதோ மனத் தோற்றம் என்றெண்ணிக் கொண்டான்.

 

    • “மன்னர் பிரானே! வணக்கம்! எனக்கு எந்தக் கவலையும் கிடையாது. தங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசைதான் இருந்தது. பார்த்து விட்டேன். இனி எனக்கு எந்தக் குறையும் இல்லை!” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் போகப் புறப்பட்டான்.

 

    • “தம்பீ!” என்று ஒரு குரல் அழைத்தது. தனக்குப் பிழைக்கும் வழி சொல்லித்தந்த அந்தத் துறவியின் குரல் போன்றிருந்தது. குரல்வந்த திசை நோக்கித் திரும்பினான். அரியணையில் இருந்த அசோக மாமன்னர்தாம் “தம்பீ!” என்று அன்புடன் அழைத்தார்.

 

    மாமன்னரே துறவியாக வந்து தன் கவலையைப் போக்க வழிகாட்டியவர் என்று அறிந்தபோது, அவனுக்குப் பெருமை கொள்ளவில்லை. ஒடிச் சென்று மன்னரின் காலடியில் வீழ்ந்து அவற்றைப் பற்றிக் கொண்டு கண்ணீர் சொரிந்தான்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிலிகான் மனது – Audio novelசிலிகான் மனது – Audio novel

Follow my anchor channel: https://anchor.fm/tamilmadhura/episodes/Silicon-Manathu—Tamil-short-story-eb9d8r Thanks to Writer Hasha Sri for the beautiful narration தூரத்தில் பச்சைக் கம்பளிப் போர்வையை உதறி விரித்ததைப் போல அழகான மலை. அதிலிருந்து பால் போலப் பொங்கி வரும் அருவி .

இது காதலா?இது காதலா?

வணக்கம் பிரெண்ட்ஸ், தனது  ‘இது காதலா’ சிறுகதை மூலம் நம் மனதைக் கொள்ளை கொள்ள வந்திருக்கும் எழுத்தாளர் உதயசகி அவர்களை வரவேற்கிறோம். காதலில்லாமல் மணந்த திவ்யா ப்ரணவ் இருவரும் தங்கள் வழி செல்லத் தீர்மானிக்கின்றனர். அவர்கள் நினைத்தபடி பிரிய முடிந்ததா ? இல்லை மஞ்சள்

குளிர்ச்சி – கி.வா. ஜகன்னாதன் – Audioகுளிர்ச்சி – கி.வா. ஜகன்னாதன் – Audio

  1 “ஏ அழகு, இத்தனை நேரம் என்ன செய்தாய்? இராத்திரிச் சோறு சமைக்க நேரம் ஆகவில்லையா?” என்றான் மாணிக்கம்.   அழகு சிரித்தபடியே உள்ளே விரைந்தாள்.   “என்ன சிரிக்கிறாய்? ஏழாய் விட்டது. இதுவரையிலுமா வேலை இருந்தது.”   “இல்லை,