அத்தியாயம் – 20
“என்னடி ஓடுகாலி, அடிக்கடி வெளியூருக்குப் போயிட்டு வர்றியாம், விதவிதமா புடவை கட்டிக்கிறியாம். எவனேவனோ வீட்டுக்கு வேற வரானாம்? ஊருக்கு வெளிய வீட்டை வச்சுக்கிட்டு பிராத்தல் பண்ணிட்டு இருக்கியா?”
சட்டை பட்டன் பிய்ந்து சட்டை கழண்டிருப்பது கூடத் தெரியாமல் முழு போதையில் ஆடிக் கொண்டே வாசலில் நின்று கத்தினான் பாபு.
“அய்யோ கருப்பா! இதில் என் பொண்ணை வேற இழுத்துட்டு வந்திருக்காளே! என்ன நடக்கப் போகுதோ. என் பிள்ளைகளை என்கூட அனுப்புடி…” நிற்க முடியாது தள்ளாடிக் கொண்டே வீட்டு முன் கத்திக் கொண்டிருந்தவனை சட்டை செய்யாமல் தனது வேலையைத் தொடர்ந்தாள் வெண்ணிலா.
குழந்தைகள் இருவரும் மித்துவுடன் அதினனின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அமைதியான சமயத்தில் சத்தம் கேட்டு அதினன் வீட்டிலிருந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தவர்கள், பாபுவைக் கண்டு பயந்து சென்று மித்துவின் பின்னால் ஒளிந்துக் கொண்டனர்.
“மித்துக்கா எங்கயாவது நம்ம ஒளிஞ்சுக்கலாமா?”
“ஏண்டா… யாருடா அது?”
“எங்கப்பா தாங்கா… இப்படித்தான் குடிச்சுட்டு வந்து கத்துவாரு” என்றான்.
“நல்ல வேளை இந்த வீட்டுக்குள்ள வர்றதில்லை” என்றாள் ரதி நிம்மதியோடு.
“ஏன்”
“அதுதான் டைவெர்ஸ் ஆயிடுச்சுல்ல. அதுவுமில்லாம அன்னைக்கு அம்மா வீட்டுக்குள்ள வந்தப்ப விளக்குமாத்தால அடி பின்னிட்டாங்க” என்றான் வெற்றி பெரிய மனிதத் தோரணையோடு.
சத்தம் கேட்டு வரவேற்பறைக்கு வந்த அதினன் பிள்ளைகள் பேசியதைக் கண்டு விஷயத்தைப் புரிந்துக் கொண்டான்.
வெளியே காது கொடுத்து கேட்க முடியாத வசவுகள் வெண்ணிலாவை நோக்கி வீசினான் பாபு.
செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பிய அதினனைத் தடுத்தார் அன்னை.
“அடுத்தவங்க குடும்ப விஷயத்தில் நாம மூக்கை நுழைக்க முடியாது. கொஞ்ச நேரம் பொறு. பயங்கர போதைல இருக்கான். இன்னும் சில நிமிஷத்தில் மயக்கம் போட்டு விழுந்துடுவான்” என்றார்.
“என்னால எனக்கென்னனு விட முடியாது… பொண்டாட்டியா இருந்தாலும் கேடு கெட்ட வார்தைகளை உபயோகிக்கக் கூடாது“ என்றபடி கிளம்பினான் அதினன்.
“என்ன மிஸ்டர்… தனியா இருக்குற பொண்ணுகிட்ட என்ன கலாட்டா பண்ற”
“கொய்யாலே… தனியா இருக்குற பொண்ணா… நீ யாருடா பெருசா சீன் போடுற… ஏண்டி இங்க வர்ற டூரிஸ்ட் எல்லாம் உன்னைப் பாக்கத்தான் வர்ராங்களா? இங்க தொழில் பண்றவளுக்கு எதுக்குடி மதுரைல வீடு. ஒழுங்கா கேசை வாபஸ் வாங்குடி”
சொல்லிக் கொண்டிருந்த பொழுதே வெளியே சென்றிருந்த பாக்யநாதன் செஞ்சடைநாதருடன் வந்துவிட்டார். “டேய்… இங்கிருந்து போக மாட்ட… “
“யோவ்… மாமா… டேயா… ஒரு பொண்ணு இல்லை நீ பெத்த ரெண்டு பொண்ணுங்களையும் கல்யாணம் பண்ண ஒரே மாப்பிள்ளைய்யா நானு. மருமகன், சட்டப்படி உன்னோட வாரிசு நான்தான். கிவ் ரெஸ்பெக்ட்”
“ஆமா என் ரெண்டு பொண்ணுங்க குடியையும் அழிச்ச பாவியே நீதான். இங்கிருந்து போடா” என்றபடி அங்கிருந்த கட்டையை எடுத்து ரெண்டு போடு போட்டார்.
“டேய் என்னையா அடிக்கிற… போலீசை கூட்டிட்டு வர்றேன்டா” என்றபடி தள்ளாடித் தள்ளாடி நடந்து அங்கிருந்து சென்றான் பாபு.