Tamil Madhura ராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்',Uncategorized ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 7

ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 7

பிரேம்குமார் அன்று வந்துவிட்டுப் போனதுடன் மறந்துவிடவில்லை.

சுஜா இல்லாத இன்னொரு நாள் மாலையில், பேபியைப் பார்த்துவிட்டு, ஒரு பெரிய பொம்மை நாய்க்குட்டியைப் பரிசளித்துவிட்டுப் போகிறான்.

அக்கம் பக்கத்துக்கு மெல்ல அவலே கிடைத்து விடுகிறது.

“அபிராமி அம்மா? சீனிய ஆளயே காணம்?…”

“பம்பாய் பக்கம் மாத்திக்கிட்டான், வர்ர முடியுதா?”

“அடடா? அப்ப உங்க மருமக குழந்தையோட அங்க மாத்திக்கிட முடியாதே? இவ, ஆல் இந்தியா சர்வீஸ் இல்லையே?”

“…..”

“டாக்டர் அடிக்கடி வந்து குழந்தயப் பாக்குறாரு! என்ன விஷயம்மா?…”

“அவருக்கு இவ கைவிட்ட கேசாயிருந்தது. பிழைச்சதில ஒரு பிரியம், வந்து பாக்குறாரு.”

“ஏம்மா? இவுரு கலியாணமே கட்டலியாமே?”

“அதெல்லாம் பத்தி நமக்கெதுக்குங்க விசாரம்?…”

“இல்ல. சொல்லிட்டாங்க. கலியாணம் கட்டலண்ணும் சொல்றாங்க. கட்டி, அமெரிக்காவில் டைவர்ஸ் பண்ணிட்டுப் போயிட்டான்னும் சொல்லிட்டாங்க. சொந்தமா, குடும்பம் குழந்தைன்னு இருந்தா தொழில்ல ‘டெடிகேஷன்’ இருக்காதுங்க. இந்தக் குழந்தைய நினைப்பு வச்சிட்டு ஏன் பாக்க வராரு?…”

அபிராமிக்கு சங்கடமாக இருக்கிறது. எதையோ தூண்டில் போட்டு இழுப்பது போல் வார்த்தைகளைப் பார்த்து வீசுகிறார்கள்.

ஆனால், சுஜா பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. சீனி ஏன் வரவில்லை என்று கவலைப்படவும் இல்லை. தீபாவளிக்குக் குழந்தைக்கு ஒரு நல்ல ஃப்ராக், தனது தாய்க்கும் அபிராமிக்கும் இரு சேலைகள், தனக்கும் ஒரு பாலியஸ்டர் சேலை என்று துணி வாங்கி வருகிறாள்.

“எதுக்கம்மா, எனக்கு, இவ்வளவு விலையில் சேலை?”

“நீங்க எதுக்கு விலை பாக்குறீங்க? தீவாளி அட்வான்ஸ் வாங்கினேன். நாம எதுக்கு இப்ப சந்தோஷம் கொண்டாடாம முடங்கனும்? உஷா, எப்படி இருக்கம்மா, பாருங்க?… உங்க மகனைப் பத்தி நீங்க வருத்தப்படாதீங்க. அவுரு பங்களூர்ல ஜாலியா இருப்பதாகத் தெரியிது. அந்த சர்க்கிள்ளயும் பிஸினஸ் டூராம். சவுதி அது இதெல்லாம் சும்மா பணம் பறிக்க…”

ஆ…?

சுந்தராம்மாளிடம் நகையை வைத்துப் பணம் வாங்கிக் கொடுத்தாளே?

“…ஊரில, அக்கம் பக்கம், எங்கிட்ட கேள்வியாக் கேக்கறப்ப கஷ்டமா இருக்கம்மா…”

“அம்மா, இந்த அக்கம் பக்கங்களுக்கெல்லாம் இதுதான் வேலை. அவங்களுக்காக நாம வாழ முடியாது. ரொம்பக் கேட்டா, எம் மருமவ, அவனை ரத்துப் பண்ற யோசனையில இருக்கான்னு ஒரு போடு போடுங்க. அதுக்கு மேல பேச மாட்டாங்க! இந்தத் தணிகாசலம், ரேவதி இன்னும் யாரு…?”

அவள் உறுதியும் நிலையும் இவளை வியக்கச் செய்கிறது.

“அம்மா, கூட ஒரு பாக்கெட் பால் வாங்கி, ‘ஸ்ரீகண்ட்’ செய்யலாம். மஹாராஷ்டிரா ஸ்வீட். எனக்குப் பரிமளா எப்படிச் செய்யணும்னு சொன்னா. ரொம்ப ஈஸி. ராதா வீட்டில் சமையற்காரர் வந்து எல்லாம் செய்யிறாராம். நான் நமக்குப் பத்து ஜாங்கிரியும், மிக்ஸ்சரும் சொல்லியிருக்கிறேன். காலம அவங்க நம்ம வீட்டுக்கு வருவாங்க. பிறகு, அம்மா அப்பாவைப் பார்த்துவிட்டு, அங்கேயே சாப்பிட்டுட்டு வரோம்… அம்மா, போன்ல கேட்டா, குழந்தை எப்படி இருக்கா, பார்க்கவே இல்லையேன்னு. நான் தீவாளியன்னிக்கு வரேன்னு சொல்லி இருக்கிறேன்… எப்படிம்மா?”

புருஷன் என்பவன் பந்தமாக, பாரமாக, விலங்காகப் பிணிக்கும் நிலையில் அதை உதறிவிட்டு, தன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும், தன் காலால் ஊன்றி நிற்க முடியும், சமூகம் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று நிரூபிப்பதாக அபிராமிக்குத் தோன்றுகிறது.

தீபாவளிக்கு முதல் நாள் மாலையிலேயே முன்னதாக வீடு திரும்பி சுத்தம் செய்து, கோலமிடுவதில் மிக உற்சாகமாகச் செயல்படுகிறாள். மாலையே பால் காய்ச்சித் திரித்து, ஸ்ரீகண்ட் செய்து வைக்கிறாள்.

அதிகாலையில் வானொலி மங்கள இசையுடன் எழுந்து, நீராடி, குழந்தைக்குப் பால் கொடுத்து, சுத்தம் செய்து, அலங்கரிக்கிறாள். புதிய ஃபிராக்கைப் போட்டதும், சுருட்டை முடியும், அகன்ற விழிகளுமாக பொம்மை போல், மிக அழகாக விளங்குகிறது.

“அம்மா! நீங்களும் புதிய சேலை உடுத்தணும் வாங்க?”

குழந்தை போல் மத்தாப்பு, வெடிகள் விடுகிறாள்.

“என்ன அபிராமி அம்மா? தீவாளிக்குக் கூட மகனுக்கு லீவு கிடைக்கலியா என்ன?”

“ஏன் மாமா? அதில உங்களுக்குத்தான் அதிக வருத்தம் போல இருக்கு? கங்காஸ்நானம் ஆச்சான்னு விசாரிக்காம, இப்படி விசாரிக்கிறீங்க!” என்று அதிரடியாக சுஜி பதில் கொடுக்கிறாள்.

“அதென்னம்மா, அப்படிச் சொல்லிட்ட? ஒரு நல்ல நாள் திருநாள், புருஷன் கூட இல்லையேன்னு உனக்கு இல்லையா என்ன? காட்டிக்க மாட்டே!”

“எனக்கு இல்ல மாமா.”

“உனக்கு இல்லையா? ஆனா, உங்க மாமியார், பாவம், ராத்திரி எந்நேரம் ஆனாலும் கண் முழிச்சிக் கதவைத் திறப்பாங்க. சாப்பிடாம பட்டினி கிடப்பாங்க. எனக்கு இன்னி நேத்திப் பழக்கமா?”

“இருக்கலாம். அது அவங்க நேச்சர். நான் வர நேரமானாலும் பால் கூட காச்சாம வாசல்ல பாத்திட்டே நிப்பாங்க. இப்ப உங்க வீட்டுல ஆயிரம் விஷயம் இருக்கும், நாங்க கேக்கிறமா?… ஏன் தூண்டித் துளைக்கிறீங்க?”

தணிகாசலத்துக்கு முகம் சுண்டிப் போகிறது.

“நாடறிஞ்ச…” என்று ஒரு கீழ்த்தரச் சொல்லை முணமுணத்துக் கொண்டு போகிறார்.

இவர் அத்துடன் விடுவாரா? “இவ சங்கதி தெரியாதா? அந்த டாக்டர் கூடத் தொடிசு இருக்கு. அதான் அந்தப்பய, மானம் தாங்காம பிரிஞ்சு போயிட்டான்” என்று சொல்வது போல் அபிராமிக்குச் செவிகளில் ஒலிக்கின்றன.

அக்கம் பக்கம், ஒரு சுகத் துக்கங்களில் ஒதுங்கி விட முடியாத, ஒதுக்க முடியாத அக்கம் – பக்கம். மனிதர் தீவுகள் அல்லவே?

“ஏம்மா இப்படி வாயடி அடிச்சி அனுப்பிட்டியே? அக்கம் பக்கம் பகைச்சிட்டா எப்படி?”

சுஜா பொருட்படுத்தாமல் ஒரு சரம் பட்டாசைக் கொளுத்தித் தெருவில் போடுகிறாள்.

உஷா பயப்படவேயில்லை. கைகொட்டிச் சிரிக்கிறது.

“பயப்படவே இல்லை பாரம்மா இது?” என்று குழந்தையை முத்தமிட்டுக் கொள்கிறாள். அபிராமியின் முகம் மலரவில்லை.

“அம்மா, யாரோ ஏதோ கேட்கிறாங்கன்னு, நாம் நம்மையே வருத்திக்கறது முட்டாள்தனம்… நீங்க ஒரு பட்டாசு விடுங்க… பாருங்க, விடுவிடுங்கறா உஷா…”

“நீ இருந்தாலும் அப்படிச் சொல்லி அனுப்பிச்சியே, அவுரு வீணா இல்லாத கதை எல்லாம் கட்டினா…”

“கட்டட்டும். இந்தச் சமூகம் நன்மை செய்யப் போறதுன்னு நான் நம்பவில்லை. அதனால, அவங்களைத் திருப்திப்படுத்த, நம்மை நாம ஏமாற்றிக்க வேண்டாம். ப்ளீஸ், சந்தோஷமாக இருங்கம்மா?”

சொல்லி வைத்தாற் போல், டாக்டரின் வெள்ளை நிற வண்டி ஓசைப்படாமல் வந்து முன் வாசலில் நிற்கிறது. கையில் சில பரிசுப் பெட்டிகளுடன் இறங்கி வருகிறார். “ஹாய், பேபி…!” என்றவர் படியேறிக் குழந்தையைத் தூக்கிக் கொள்கிறார். மேலே பொம்மை ரயில் படம் போட்ட அட்டைப் பெட்டி. மற்றது, வழுக்கி விழும் அழகிய ஃப்ராக்.

“வாங்க… வாங்க, கங்கா ஸ்நானம் ஆச்சா?”

“கங்கா ஸ்நானம் ஆச்சாம்மா?…”

அவர் உள்ளே வருகிறார். அபிராமி ஃபிராக்கையும் பொம்மைப் பெட்டியையும் திறந்து பார்க்கையில், சுஜி விரைந்து உள்ளே செல்கிறாள். ஒரு தட்டில் ஜாங்கிரி, மிக்ஸ்சர், ஸ்ரீகண்ட் வைத்து எடுத்துக் கொண்டு வருகிறாள்.

“சுஜி, இவ்வளவும் காலையில் நான் சாப்பிடணுமா?…” என்று சிரித்தவாறு தட்டை வாங்குகிறார். பிறகு உடனே குரலை இறக்கித் தீவிரமானார்.

“…இங்கே இவ்வளவு காலையில் கங்காஸ்நானம் விசாரிக்க வரல சுஜி. உங்கப்பா… நிலைமை கிரிட்டிக்கலா இருக்கு. திடீர்னு விக்கல் கண்டு நேத்துலேந்து, சரியில்ல. உன் கஸின் எனக்கு ஃபோன் பண்ணினான். உன்னை காண்டாக்ட் பண்ண முடியலியாம். நான் போய்ப் பார்த்தேன். ஆஸ்பத்திரி, நர்ஸிங்ஹோமில அவரை அட்மிட் பண்ணலான்னா உங்கம்மா, வேணாங்கறா. அவங்களுக்கு என்ன பயம்? எதுக்கும் உன்னிடம் சொல்லிட்டுப் போகலாம், நீ தைரியம் சொல்லுவேன்னு வந்தேன். உங்கக்கா, அண்ணன் எல்லாருக்கும் தந்தி குடுத்திருக்காங்க…”

அபிராமிக்குக் கையில் பிடித்திருக்கும் சாமான் நழுவி விடுகிறது.

ஆனால் சுஜா கலங்கவில்லை.

“நீங்க வந்தப்பவே நான் ஏதோ அவசரம்னு நினைச்சேன். என்னன்னுதான் புரியல… இருங்க, வந்துடறேன்…”

அவள் உள்ளே செல்கிறாள். அவர் இனிப்பை ருசித்து விட்டு, தண்டவாளத்தைப் பொருத்தி, குழந்தைக்கு பொம்மை ரயிலை ஓட்டிக் காட்டுகிறார்.

குழந்தைக்கு ஒரே சந்தோஷம் “…த்தா…க்கா…” என்று புரியாத ஒலிகளை எழுப்பி ஆர்ப்பரிக்கிறது.

“குட்மார்னிங் டாக்டர், கங்காஸ்நானம் ஆச்சா?”

சற்றுமுன் சுஜியினால் விரட்டியடிக்கப்பட்ட தணிகாசலம்தான், புது வேட்டி, சட்டை, உத்தரீயம் புரள வருகிறார். கையை நீட்டுகிறார்.

“…ஐம்… தணிகாசலம், ரிடயர்ட் பர்சனல் ஆபீசர்” என்று அறிமுகம் வேறு.

“ஹலோ…”

“டாட்கருங்க, உங்களைப் போல் ‘டிவோட்டடா’ இருக்கிறது ரொம்ப அபூர்வம். அந்தக் காலத்தில், டாக்டர் ரங்காச்சாரி, காரிலேயே தான் இருப்பாராம், எப்பவும் ரெடியா!…”

பிரேம் எதுவும் கூறுமுன் சுஜா, காபி கொண்டு வருகிறாள்.

“அப்ப… நீ இப்போதே போகிறாயா சுஜா?…”

“கிளம்பிட்டே இருக்கிறேன் டாக்டர்!”

“ஒரு பதினோரு மணி சுமாருக்கு எனக்கு ஃபோன் செய்தால் நல்லது… நான் மாலை வந்து பார்க்கிறேன்…”

அவர் வண்டியிலேரும் வரை அவள் குழந்தையுடன் வாசலில் நின்று வழியனுப்புகிறாள். “டாடா சொல்லும்மா உஷா…”

குழந்தை இளங்கையை அசைக்கிறது…

தணிகாசலம் இன்னமும் உட்கார்ந்திருக்கிறார்.

சுஜாவின் முகத்தில் கேலி நகை மலருகிறது.

“என்ன மாமா? கட்டின புருஷனைக் காணல, யாரோ வந்து, தீபாவளி விசாரிச்சிட்டுக் குழந்தைக்குப் பிரசன்ட் குடுத்து விட்டுப் போறானேன்னு பார்க்கிறீங்களா? கட்டின புருஷன், ஆயிரங்காலப் பயிர்ங்கறது சித்தாந்தம் தான். ஆனால், என்னைப் பொறுத்து ரொம்பக் கொஞ்ச காலப் பழக்கம். இப்ப கனவாக் கூடப் போயிட்டுது. ஆனா, இவர் நினைவு தெரிஞ்ச நாளா, எங்க குடும்பத்தோடு ஒருத்தரா பழகிய சிநேகம். எங்கப்பாவிடம் படிக்க வந்தவர்ங்கறதுக்கு மேல, என் தாயாரைத் தாயாக நினைச்சவர். இப்ப எங்கப்பா, உயிருக்குப் போராடும் நிலையில் இருப்பதைச் சொல்லிவிட்டுப் போக வந்தார். போதுமா?”

“அடாடா… என்னம்மா, நீ? இவ்வளவு பெரிய சமாசாரத்தை சாவகாசமாப் பேசுறே?… கிளம்பிப்போம்மா! அடாடா…?”

“அம்மா, நான் மட்டும் போறேன். அம்மாவை எப்படியானும் சொல்லி, அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க ஏற்பாடு பண்ணிடறேன். குழந்தை இருக்கட்டும்…”

“ஏம்மா, அம்மாளையும் கூட்டிட்டுப் போ. வீட்டில என்ன யாரானும் வந்தா நா விவரம் சொல்லிடறேன்?”

தணிகாசலத்தின் சொற்களைப் புன்னகையுடன் வரவேற்கிறாள். “இதான் மாமா ரியல் ஸ்பிரிட். ஆனா, அம்மா இங்க இருக்கட்டும். பாப்பாவும் இருக்கட்டும். ஆஸ்பத்திரிக்கு அவர் போயிட்டா, நாங்க அந்த வீட்டைக் காக்க எதுக்குப் போகணும்?… அம்மா கொஞ்சம் போனா பிரமி, சுபத்ரா எல்லாம் வருவாங்க… நான் போய்ப் பார்த்து விவரம் சொல்றேன்…” அவசரமாகத் தன் மாற்றுச் சேலையை ஒரு பைக்குள் திணித்துக் கொண்டு, சுஜா கிளம்பிச் செல்கிறாள். உஷா கண்டால் தானும் வரத் தாவுமே என்று பக்கத்து வாயில் வழியே நழுவுகிறாள். அபிராமி திகைத்து நிற்கிறாள்.

பீன்ஸும் பட்டாணியும் வாங்கி வைத்திருக்கிறாள். விருந்து தாய் வீட்டில் என்று திட்டமிட்டதாகச் சொன்னாள். கடைசியில்…

தணிகாசலம் விடைபெற்றுப் போகிறார்.

தோழிகள் புத்தாடை தரித்து, அவரவர் வீட்டுப் பண்டங்களுடன் சுஜாவைப் பார்க்க மகிழ்ச்சியுடன் வருகின்றனர்.

அபிராமி அவர்களைக் குழந்தையுடன் விளையாட விட்டு விட்டு, காபி கொடுத்து உபசரிக்கிறாள்.

குழந்தைக்குப் பருப்பும் சோறும் கொடுக்க வேண்டுமென்று, சோறும் பருப்பும் வைத்து, பட்டாணியும் பீன்ஸும் சமைத்து வைக்கிறாள்.

பட்டாசு வெடிகள் ஓய்ந்து எல்லாரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றிப் போய் விட்டனர். தெரு அமைதியாக இருக்கிறது.

குழந்தையும் சற்றே அயர்ந்து தூங்குகிறது. அபிராமி தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்து, சினிமா நட்சத்திரங்களின் கதம்ப நிகழ்ச்சியைப் பார்க்கிறாள்.

வாயிற் கதவு தாழ் திறக்கப்படுகிறது.

கையில் சிறு பெட்டியுடன், கலைந்த கேசமும் சோர்வுமாக…

சீனி… சீனிதான்.

உள்ளே வந்து ஷூவைக் கழற்றி எறிகிறான். பெட்டியை வீசுகிறான்.

“அம்மா, ஸ்ட்ராங்கா ஒரு கப் காப்பி… தலையை வலிக்கிறது” என்று சோபாவில் வீழ்கிறான். அபிராமிக்கு எரிச்சல் வருகிறது.

“ஏண்டா, இது என்ன சத்திரமா? மூதேவி. வீட்டுப்படி ஏற வெக்கமாயில்ல?”

“அட என்னம்மா இது? என் வீட்டில எனக்கு ஏற இடமில்லயா…?”

“உன் வீடு… உன் வீடில்ல. அப்படிச் சொல்லிக்க என்ன யோக்கியதை இருக்கு! எங்கிட்ட… எத்தனை பணமடா பறிச்சிருக்கே?”

“அம்மா… நான் உடம்பு சரியில்லாம வந்திருக்கேன். கெஞ்சிக் கேக்கறேன்… உன் பணத்தைப் பறிச்சிட்டு எங்கும் ஓடல. பாஸ்போர்ட், விசா கிடைக்காம எப்படியம்மா போக? அதுக்குத்தான் அரேன்ஜ் பண்ணிருக்கேன் அம்மா, ப்ளீஸ்… ரொம்பத் தலைவலிம்மா உன்னைக் கெஞ்சிக் கேக்கறேன்…”

அபிராமிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உண்மையிலேயே அவன் முகமும், குரலும் நன்றாக இல்லை.

“குடிச்சுக் குடிச்சுச் சீரழிஞ்சிட்டு இங்க வரே. உன்னை ஒதுக்கித் தள்ளனும்னாலும் முடியாம வந்து வந்து தொல்லை குடுக்கற. இங்க நீ வராம இருக்கும் நாள்ள சந்தோஷமா இருக்கிறேன்…”

“அம்மா… அம்மா நீயா இப்படிச் சொல்ற? அம்மா… இனிமே… சத்தியமா பாரு, நீ மனசு கஷ்டப்படும்படி நான் நடக்க மாட்டேன். ப்ளீஸ், ஒரு கப் காபிம்மா!”

‘சனியன் சனியன்’ என்று நெஞ்சில் கடித்துத் துப்பிக் கொண்டு அவள் உள்ளே செல்கிறாள்.

வாசலில் யார் யாரோ வரும் அரவம் கேட்கிறது.

“கங்காஸ்நானம் ஆச்சா டீச்சர்…?…”

சமையலறை வாசலுக்கே வந்து விடுகிறாள், அதே காலனியில் வீடு கட்டியிருக்கும் மங்களத்தின் மகள் ஸ்ரீதேவி…

“அடாடா, வாம்மா!… எப்ப வந்தே? பம்பாய்க்கு மாத்திட்டதாச் சொன்னங்க?”

“நான் போகவேயில்ல டீச்சர். அவங்க தாம் போயிட்டு தீபாவளிக்கு வந்திருக்காங்க. இப்பதா வீடு பாத்து வச்சிருக்காங்க. குழந்தைகளை நடு வருஷத்தில் படிப்பை விட்டுக் கூட்டிட்டுப் போக முடியாது. அம்மாட்டதா இருக்கும். நா மட்டும் போறேன்… எங்க டீச்சர்? சுஜாவைக் காணல?…”

அபிராமி விவரம் கூறிக் கொண்டே இனிப்பு கார வகைகளும் காபியும் கொண்டு முன்னறைக்கு வருகிறாள்.

சீனி மிகவும் மதிப்புடனும் கவுரவத்துடனும், பெரிய பதவியில் இருக்கும் மங்களத்தின் மருமகனுடன் பேசுகிறான்.

“வீடுதான் குதிரை கொம்பாக இருக்கு. எல்லாம் ஒரு ரூம் ஃப்ளாட்டுக்கு, பத்தாயிரம் கேட்கிறான். நான் அந்தப் பக்கம் வேணான்னு இங்கேயே அதனால் தான் சுத்திட்டிருக்கேன். அவளுக்கும் ஸ்டேட் ஸர்வீஸ்தான். அம்மா பழகின இடம். வசதியா வீடு… அங்க போனா ஃபிளாட்டும் மூவாயிரம் சம்பளமும் தரேன்னு சொல்றாங்க. எனக்கு அது சரி வராதுன்னு தோணுது…”

என்ன பொய், என்ன பொய்!

பற்களைக் கடித்துக் கொள்கிறாள்.

அவர்கள் சென்ற பிறகு தணிகாசலம், அவன் இவன் என்று விசாரிக்க வருபவர்களிடம் பொய்யை அளக்கிறான். பிறகு அழுக்குத் துணிகளை உரிந்து எறிந்து விட்டுக் குளிக்கிறான். அபிராமி சாப்பாடு போடாமல் இருக்க முடியுமா?

இடையில் குழந்தை அழுகிறது.

அவன் சென்று தூக்குகிறான்.

“…ஹே… உஷா? இதபாரு…”

அது மருண்டு புதிய முகத்துக்கு வீறிட்டு அழுகிறது.

“ஏண்டி அழற? உங்கப்பன் இல்லையா நான்? யாரு உங்கப்பன்?…” அபிராமி விரைந்து வந்து குழந்தையை வாங்குகிறாள்.

“குழந்தையிடம் உன் அசிங்கப் பேச்செல்லாம் பேசாத! போ!”

“ஏன், இதுக்கு அப்பன் நானில்லைங்கறியா நீயும்? பின்ன இதை வச்சிட்டுக் கொஞ்ச உனக்கே வெட்கமாயில்ல”

“டேய், நான் போனாப் போவுதுன்னு பொறுக்கிறேன். பசின்னு வந்த ஒரு நாய்க்கும் கூடச் சோறு போடும் இரக்கம். சோறு போட்டேன். நட நட வெளியே!”

அவனுக்கு இதற்கெல்லாம் ரோசம் வந்துவிடாது என்பதை அவள் அறிந்திருக்கிறாள்.

அவன் சிரிக்கிறான். “அம்மா, நீ நல்லா சினிமா வசனம் பேசற!”

அவள் பேசவில்லை. குழந்தையை எடுத்துக் கொண்டு போய் முகம் துடைத்துச் சாதம் கொடுக்கிறாள்.

அவன் படுக்கையைத் தட்டிப் போட்டுக் கொண்டு, அறையில் கட்டிலில் சம்பிரமமாக விசிறியைப் போட்டுக் கொண்டு படுக்கிறான்.

மூன்று மணி இருக்கும். சுஜா, பதற்றமாக வந்து அறைப்பக்கம் நுழையுமுன், கட்டிலில் அவன் சாய்ந்த வண்ணம் சாவகாசமாகப் புகை ஊதிக் கொண்டு, கையில் ஏதோ ஒரு மட்டரக நாவலுடன் காட்சி தருவதைப் பார்த்து விடுகிறாள்.

“அம்மா…!”

அந்த ஒலியில் பின்பக்கம் இருந்த அபிராமி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து வருகிறாள். பெரிய நாய்ப் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடுக்கிட்டு அழுகிறது.

“இவனை யார் உள்ள விட்டது?…”

அபிராமி சுதாரித்துக் கொள்கிறாள். “அப்பா எப்படி இருக்காரம்மா?”

“அப்பா நான் போறப்பவே போயிட்டார். எல்லாரும் வந்து நாளைக்குத்தான் எடுக்கணும். அம்மா, இவனை ஏன் உள்ள விட்டீங்க?”

“நான் என்னம்மா செய்ய? நான் சென்னேன்; கேட்காமல் உள்ள போயிப் படுத்திருக்கிறான்…”

“சே!… நான் குளிச்சிட்டு வரேம்மா. பசிக்கிறது சாப்பாடு இருக்கா?”

“வச்சிருக்கிறேன் வா!”

“அம்மா, கல்யாணம்ங்கறது ஒரு பெண்ணைச் சகல வகையிலும் உறிஞ்சுவதற்கு ஓராணுக்கு உரிமை கொடுக்கறதுன்னு அர்த்தமில்ல. குடும்பமென்பது இவர்கள் கொடுங்கோலாட்சி பண்ணும் சாம்ராச்சியமில்லை. நான் ஒதுங்கிப் போகறதுன்னா இவனை இஷ்டப்படி விளையாட விடுவதுன்னாகிறது. இப்ப கட்டில்ல உக்காந்து புகைய விடுறான். கொஞ்சம் போனா குடிச்சிட்டு வந்து உருளுவான். எனக்கு என்ன பாங்க் பாலன்ஸ், நகை நட்டுங்கறதுதான் இப்ப இவனுக்குக் கண்… புரியிதாம்மா…?”

அபிராமி குன்றிப் போகிறாள்.

அவள் என்ன திட்டத்துடன் இங்கு வந்தாளோ? குடலை நனைத்ததாகப் பெயர் பண்ணிவிட்டு, தன் சாமான்கள் சிலவற்றைப் பெட்டியில் எடுத்துக் கொண்டு, குழந்தையுடன் ஆட்டோ பிடித்துக் கிளம்பிச் செல்கிறாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 23மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 23

23 ஒரு மழை நாளில், சுஜி உனக்கு யாரோ விசிட்டர் என்று ரோசி சொன்னதும், சோம்பலாக படுத்து டிவி பார்த்துக் கொண்டிருந்த சுஜி எழுந்து குதித்தோடி வெளியே சென்றாள். போன வாரமே விக்கி வருகிறேன் என்று சொல்லி இருந்தான். பரபரவென ஒரு

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 25மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 25

25 அன்றில் இருந்து தினமும் மாதவனும் சுஜியும் சந்திப்பது வாடிக்கை ஆயிற்று. வகுப்பினர் அனைவருக்கும் அவன் பிரியமானவனாகிப் போனான். சைதன்யா, அர்ச்சனா மட்டுமின்றி மற்ற வகுப்பு பெண்களும் தேடி வந்து அவனிடம் ஜொள் விட்டு சென்றனர். மாதவனும் சுஜியின் முன்னிலையில் அந்த