Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 36 (நிறைவுப் பகுதி)

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 36 (நிறைவுப் பகுதி)

அத்தியாயம் –  36

 

சித்தாரா குழுவினர் வண்டியை நிறுத்தி வழியில் ஏறிக்கொண்ட நபரைப் பற்றி சித்தாரா ஊகித்தது சரிதானா என்று விவேகானந்தரைக் கேட்டுக் கொண்டாள். அவளுக்கு ஒரே வியப்பு. நடக்கப்போவது நல்லபடியாக முடிய வேண்டுமே என்று கவலை.

 

அதே நேரம் சைலஜா அரவிந்தின் முன்னே அவன் முகத்தைப் பருகியபடி  நின்றிருந்தாள். சவரம் செய்யாத கவலை பீடித்த முகத்தில் இவ்வளவு காந்தமா? இரும்பாய் அவனுடன் ஒட்டிக் கொள்ளும் ஆவல் வந்தது சைலஜாவுக்கு. வயதான படேல் அவளுக்கு எரிச்சலைத் தந்தார். இளமைக்கு இவ்வளவு சக்தியா என்றெண்ணி பார்வையாலே அரவிந்தை விழுங்கினாள். அவளின் பார்வைக்கு அர்த்தம் புரிந்த அரவிந்த் கோவத்தால் முகம் சுளித்தான்.

 

உடம்பை ஒட்டிய அவளது உடலும், வளைந்து நெளிந்துக் கொண்டு அவள் நின்ற ஸ்டைலும் பாம்பினை நினைவு படுத்தியது அவனுக்கு. அவளது பார்வையில் இருந்த காதல் அவனைக் குமட்டச் செய்தது. இப்படிப் பட்ட ஒருத்திக்கா ஸ்ராவணி பிறக்க வேண்டும் என்று ஓராயிரமாவது முறையாய் எண்ணிக் கொண்டான்.

 

கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு முகம் சூடேறக் கேட்டான்

“எதுக்கு இங்க வந்த…”

இந்த அளவு அவனிடம் கோவத்தை முதன் முறையாகக் கண்ட சைலஜாவுக்கு ஒரே ஆச்சிரியம். படேலுடன் அவளைப் பார்த்தபோது கூட அவன் முகத்தில் இவ்வளவு கோவம் இல்லை. அதற்குக் காரணம் யார் என்று புரிந்தது அவளுக்கு.

பல்லைக் கடித்தாள்  ‘சித்தாரா’. அரவிந்திற்கு என் மேல் இருந்த மயக்கத்தைத் தனதாகிக் கொண்டாள் என்று எண்ணிக் காந்தினாள். அவனது குழந்தையைப் பெற்றவளைக் கண்டால் எரிகிறது, சித்தாரா மாதிரி புதுப் பூவைக்  கண்டால் சந்தோஷமா… இருக்கட்டும் பிறகு பார்க்கிறேன். வலிய சிரிப்பை வருவித்துக் கொண்டாள்

 

“ நீ தாலி கட்டின மனைவி கிட்ட கேட்குற கேள்வியா இது. உனக்கே இது நியாயமா இருக்கா அரவிந்த் “

 

ஏளனமாய் சிரித்தவன் “ ஆமாம் போலிசை வச்சு மிரட்டி,  வலுக்கட்டாயமா என் கையில் தாலி வாங்கி கிட்ட ஒருத்தி கிட்டத்தான் பேசுறேன்னு எனக்கு நல்லாவே நினைவிருக்கு. விவாகரத்து வாங்கிட்டு பச்சைக் குழந்தையைத் தவிக்க விட்டுட்டுப் போனவ கிட்ட என்ன நியாயத்தைப் பத்திப் பேசச் சொல்லுற”

 

“ அரவிந்த் கணவன் மனைவிக்குள்ள சண்டை சச்சரவுகள் வர்றது இயற்கை. நான் என் சூழ்நிலை காரணமாத்தான் உன்னை விட்டுப் பிரிஞ்சேன். என் சூழ்நிலையைப் பத்தி எப்படி சொல்லி உனக்கு விளங்க வைக்கிறது….

 

படேல் பணம் என் அம்மாவோட வைத்தியத்துக்குத் தேவையா இருந்தது. ஏற்கனவே குடும்ப பாரம் சுமக்குற உன்னை என்னோட தேவைக்காகவும் சிரமப் படுத்துறது எவ்வளவு கஷ்டம். அதுனால மனசைக் கல்லாக்கிட்டு உன்னையும் நம்ம பெண்ணையும்  விட்டுட்டு இருந்தேன். யார் மேல சத்தியம் பண்ணா நம்புவ… ஸ்ராவணி  மேல பண்ணவா…”

 

கோவமாக அவளை நெருங்கியவன் “ சீ வாயை மூடு. உன்  பொய் புரட்டை நம்ப நான் இன்னமும் முட்டாளில்லை. என் மகளைப் பத்தி ஏதாவது பேசின உன்னைக் கொலை பண்ணிடுவேன். என் குடும்பத்துக்கும் உனக்கும் துளி கூட சம்மந்தமில்லை. நீ வந்து இவ்வளவு நேரமாச்சே, ஸ்ராவணி எங்க இருக்கான்னு கேட்கக் கூட உனக்கு எண்ணம்  இல்லை. உன்னை எல்லாம் அவளுக்கு அம்மான்னு சொல்லவே கேவலமா இருக்கு”

 

சைலஜாவுக்கு தான் கட்டிக் காத்த பொறுமை அனைத்தும் காற்றில் பறந்துவிடும் போல் இருந்தது.

 

“ சரி நீ சொலுற மாதிரியே வச்சுக்குவோம். நான் தப்பு பண்ணிட்டேன். உலகத்துல ஆம்பளைங்க எல்லாம் தப்பு பண்ணுறதே இல்லையா… மனைவிங்க  தப்பு செய்யுற தன்னோட கணவன்  மனம் திருந்தி வந்த ஏத்துக்கத் தானே செய்யுறாங்க. அந்த மாதிரி நீ என்னை ஏத்துக்கக் கூடாதா…

 

நான் ஒண்ணும் நல்லா வாழுற குடும்பத்தைத் தொந்தரவு செய்யலப்பா, அதுதான் உன் துணைவி உன் உறவை முறிச்சுட்டுப் போயிட்டாளே. இன்னமும் பிச்சைக்காரன் மாதிரி அவளைக் கெஞ்சிட்டு இருக்காம, உன் காலுக்கு கீழே கிடக்குற சைலஜா என்கிற சொர்க்கத்தைப் பார்.

 

நான் செஞ்ச தப்புக்குப் பிராயச்சித்தமா வேணும்னா உன் கடனை எல்லாம் நான் அடைக்குறேன். உன் தங்கச்சிங்க கல்யாணம், கருமாதி அப்படின்னு பொலம்பித் தள்ளுவையே அத்தனைக் கன்றாவிக்கும் நானே பணம் தரேன். எல்லாம் யாருக்காக… உனக்காக… நம்ம குடும்ப வாழ்க்கைக்காக… அழகும் அறிவும் சேர்ந்த கோடீஸ்வர மனைவி. இதுக்கு மேல ஒரு ஆம்பளைக்கு வேற என்ன வேணும் ”

 

இவளால் இப்படியெல்லாம் எப்படித்தான் இதயமில்லாம பேச முடியுதோ என்ற ஆதங்கத்துடன்

 

“ முதல்ல சித்து விட்டுட்டு ஓடிப் போயிட்டான்னு சொல்லுறத நிறுத்து. நீ தப்பா புரிஞ்சுகிட்ட சைலஜா. என் மனைவி சித்தாரா நான் உன்னை ‘டிவேர்ஸ்’ பண்ணதை அவ கிட்ட மறைச்ச வருத்தத்துல இருக்காளே தவிர, என்னை வெறுத்து என்னை விட்டுப பிரியல… வருத்தத்துக்கும் வெறுப்புக்கும் நிறைய வித்யாசம் இருக்கு.

நீ வேணும்னா  ஏமாளிக் கணவனுக்கு துரோகம் செஞ்சு தவறான கோடி கோடியா பணம் சம்பாரிச்சதை பெருமையா நினைக்கலாம். ஆனா நீ உயிரோட இருக்குறதை மறைச்சதால என் மேல கோவமா இருக்குற என் மனைவிக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன்.

 

நீ என் கிட்ட மணவிலக்கு கேட்டப்ப ,சத்தியமா சொல்லுறேன் சைலஜா, நான் கொஞ்சம் கூட வருத்தப் படல. புலம்பல. என் தலை மேல இருந்த பெரிய பாரம் ஒன்னை கீழ இறக்கி வச்ச நிம்மதி தான் இருந்தது. நமக்கு மணவிலக்கு கிடைச்ச அன்னைக்கு நிம்மதியா இனிமே உன்னை என் கண்ணுல கூட காட்ட வேண்டாம்னு முருகனை வேண்டிட்டு வந்தேன். இதுல இருந்தே புரிஞ்சுக்கோ உன் மேல எனகிருந்த வெறுப்பின் அளவை.

 

அதுனாலதான் ஸ்ராவணியை என்கிட்ட நீயும் உன் கணவர் படேலும் தந்துட்டுப் போனதும் ஒரு தடவை கூட உன்னை பார்க்கவோ உன் கிட்ட நான் பேசவோ முயற்சி பண்ணல.

 

அது நீ என்னை விட்டு பிரிஞ்சு போனதால வந்த ஆத்திரம் அதுன்னு தப்பா புரிஞ்சுக்காதே… எப்படி ஒரு அம்மாவால குறைப் பிரவசத்துல பிறந்து உயிருக்குப் போராட்டிட்டு இருக்குற ஒரு குழந்தையை அடுத்தவங்க கிட்ட தந்துட்டு, தன் வாழ்க்கை தன் சுகம்தான்  பெருசுன்னு இருக்க முடியுதுன்னு ஒரு வெறுப்பு…

 

எனக்கும் சித்தாராவுக்கும் இந்தக் கல்யாணம் நடக்காம இருந்திருந்தா கூட உன்னை மறுபடியும் ஏத்துகிட்டு இருக்க மாட்டேன். நானும் ஸ்ராவணியும் மட்டும்தான் இருந்திருப்போம்.

 

தவிர சித்தாராவும் நானும் இப்ப விலகித்தான் இருக்கோம் பிரியல. பிரியவும் மாட்டோம். முக்கியமா அவளை என் கிட்ட இருந்து பிரிய விடமாட்டேன். அந்த அளவு அவளை நான் விரும்புறேன். மரணம் கூட எனக்கு அவளுக்கு முன்னாடியும் வரக் கூடாது பின்னாடியும் வரக் கூடாது சேர்ந்தே வரணும். அதைத் தான் தினமும் கடவுள் கிட்ட வேண்டிட்டு இருக்கேன். அவ கூட மட்டும்தான் என்னால கை கோர்த்து நடக்க முடியும். அவ கூட மட்டும்தான் என்னோட வாழ்க்கையைப் பகிர முடியும்.

 

நீ வழக்கமா என்னைப் பத்தி கேவலமா சொல்லுவியே அது மாதிரி  நான் வசதி குறைவானவனா இருக்கலாம், கழுதை பொதி சுமக்குற மாதிரி குடும்ப பாரம் சுமக்குறவனா இருக்கலாம்… பெரிய படிப்பு படிக்காதவனா இருக்கலாம் இல்ல நிறையா சம்பாதிக்க சாமர்த்தியம் இல்லாதவனா இருக்கலாம்… பொண்ணுங்க எதிர் பாக்குற ஆதர்ச கதாநாயகனோட ஒரு குணம் கூட என்கிட்ட இல்லாம இருக்கலாம்… ஆனா  நான் எப்படி இருந்தாலும் என்னோட சித்துவுக்கு என்னைப் பிடிக்கும்… ஏன்னா என்னை கொண்டாட பிறந்தவ அவதான்…

 

அவளை விட்டு என்னால கனவுல கூட விலக முடியாது. அவளுக்கும் அப்படித்தான். நீ வெளிநாட்டுக்கு வந்தாகனும்னு வெறில எனக்கு எவ்வளவோ கெடுதல் பண்ணிருக்க. எனக்கு ஒரு நல்லதாவது பண்ணனும்னு நெனச்சா என் முகத்திலையும் ஸ்ராவணி முகத்திலையும் முழிக்காதே” தனது உறுதியான இறுதியான முடிவை சொல்லி முடித்தான்.

 

இனிமே சாத்வீகமான வழியை நம்பிப் பயனில்லை, தனது பயங்கரி  அவதாரத்தை  எடுத்தாள் சைலஜா

“ என்னைப்  பத்தின தப்பை அடுக்குற நீ மட்டும் என்ன ஒழுங்கா? உன் ரெண்டாவது பொண்டாட்டி கிட்ட நான் உயிரோட இருக்குற விஷயத்தை சொன்னதே இல்ல போலிருக்கே. அது என் மூலமா தெரிஞ்சதும் அவளுக்கு ஒரே அதிர்ச்சி, வெறுப்பு. விளைவு  உன்னை விட்டு ஓடிப் போயிட்டா.

 

அரவிந்த் பிரக்டிகலா பார்த்தா,  கல்யாணம் அப்படின்னு சொல்லுறது ஒருவிதமான ஒப்பந்தம்… உன்னோட முதல் இரண்டு ஒப்பந்தம் என்னவோ ரத்தயிடுச்சு… என்னோட இரண்டாவதையும் நான் ரத்து பண்ண ஏற்பாடு செய்து கிட்டு இருக்கேன்.

உன் கூட முதல் ஒப்பந்தம் போட்ட நான்,  அதைப் புதுப்பிச்சுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கேன். உனக்கு அதை மறுக்க அதிகாரம் இல்லை. மறுத்தா ஸ்ராவணியைக்  கோர்ட் உதவியோடு நான் தூக்கிட்டுப் போய்டுவேன். அவ உனக்கு வேணும்னா நீ அவளோட தாய்க்குப் புருஷனா இருக்குறதைத் தவிர வேற வழியில்ல”

 

“ அது அவ்வளவு சுலபமில்ல சைலஜா, உனக்கெல்லாம் சட்டம் கண்டிப்பா துணை வராது”

 

குரல் வந்த திசையில் நின்றிருந்தாள் சித்தாரா.

 

“சித்து…. “ முகமெல்லாம் விகாசிக்க ஓடி வந்து கையைப் பற்றிக் கொண்ட அரவிந்தின் கைகளை ஆதரவாக கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டவள்

 

“நாங்க சில முறை உன் கிட்ட ஏமாந்திருக்கலாம். ஆனா நிரந்தர ஏமாளிப் பட்டம் கட்டினா எப்படி?”

 

“ஏய்… நீ ஊருக்குப் போகல? என்னையே ஏமாத்த உனக்கு என்ன தைரியம்?”

 

“அது என்னடி என்னையே, நீ பெரிய மகராணி பாரு. நீ நரிங்க கிட்ட என் மகளை விட்டுட்டு வந்தியே அதுக்கு உன்னைக் கொலையே பண்ணனும்னு ஒரு வெறியோட வந்திருக்கேன்”

 

தெரியாமல் விழித்த அரவிந்திடம் “அரவிந்த், இனிமே  இவளுக்கு பயப்படாதே. இவ கை குழந்தையா இருந்த ஸ்ராவணியை வீட்டுல வச்சுப் பூட்டிட்டு கூத்தடிக்கப் போயிருக்கா. அப்ப வீட்டுல நுழைஞ்ச நரிக் கூட்டத்துகிட்ட இருந்து வணியை போலிஸ் காப்பாத்தி இருக்கு. இவ குழந்தையை விட்டுட்டு கிளப் போயிருந்ததுக்கு சாட்சி கண்டுபிடிச்சு போலிஸ் கிட்ட சொல்லிட்டேன். இனிமே அவ நம்ம வனி கிட்ட நெருங்கக் கூட முடியாது”

 

நடந்தது அனைத்தையும் சித்தாரா ஆதாரத்துடன் கண்டு பிடித்தது ஆத்திரத்தை வரவழைத்தது சைலஜாவுக்கு. போயும் போயும் ஒரு மத்தியத்தரப் பெண்ணிடம் இந்த சைலஜா தோற்பதா…

“உன்னை சும்மா விட மாட்டேண்டி. ஸ்ராவணியை உங்க யாராலும் கண்டே பிடிக்க முடியாத இடத்துக்குத் தூக்கிட்டுப் போகல என் பெயர் சைலஜா இல்ல”

 

வாசல் பக்கமிருந்து கைதட்டல் சத்தம் கேட்டது

“வெல் செட் ஷைலு… ஹிந்தி, இங்கிலீஷ்ல நீ பேசி கேட்டிருக்கேன். இப்பத்தான் தமிழ்ல சவால் விட்டுக் கேக்குறேன்” கைத்தட்டல் கேட்ட திசையைத் திரும்பிப் பார்த்தவள் அதிர்ந்தாள். படேல் அங்கே நின்றுந்தார்.

 

இவன் எங்க இங்க வந்தான்? நொடியில்  சுதாரித்தாள். இனிமேல் அரவிந்த் ஒத்து வரமாட்டான். படேலை வைத்து அவனையும் இந்த சித்ராங்கியையும் ஒரு வழி பண்ண வேண்டியதுதான்.

 

படேல் முறை கேடான தொழில் செய்தாலும் சைலஜா மேல் ஆசை அதிகம். வேறு எந்த ஆணையும் சைலஜாவிடம் நெருங்க விட மாட்டார். அந்த அளவு அவள் மேல் பைத்தியம். அதுதான் சைலஜாவுக்கு சாதகமான விஷயம். அதையே இந்த முறையும் பயன் படுத்த முடிவு செய்தாள்.

 

“டார்லிங் எனக்கு தாய்ப்பாசத்தை  அடக்க முடியாம ஸ்ராவனியைப் பார்க்க இங்க வந்தேன். ஆனா இந்த அரவிந்த் என் கிட்ட தப்பா நடக்க முயற்சி செய்யுறான். இந்த சித்தாராவும் அதுக்கு உடந்தை”

 

“நிறுத்து சைலஜா ……  எனக்குத் தமிழ் தெரியாதுன்னு நெனச்சி கிட்டு இஷ்டப்படி பேச முயற்சி செய்யாதே. சின்ன வயசுல எங்க பக்கத்து வீட்டுல இருந்தவங்க தமிழ். எனக்குப் பேச வராதே தவிர அவங்க பேசுறது நல்லா புரியும். இப்ப நீ பேசினது எனக்கு ரொம்ப நல்லாவே புரிஞ்சது. போய் கார்ல ஏறு”

 

அரவிந்திடம் திரும்பியவர் “ சாரி யெங் மென்… உன் வாழ்க்கைல குழப்பம் செய்யணும்னு எனக்கு ஆசை இல்ல. சைலஜாவை உன் கிட்ட இருந்து பறிச்சு கிட்டதா நினைக்காதே. என்னை பார்க்கலைன்னாலும் வேற யாராவது பணக்காரன் கூட அவ போயிருப்பா. அது அவளுக்குத் தப்பாத் தெரியாது.

 

இவ்வளவு நல்லா அவளைப் பத்தி தெரிஞ்ச நான் எப்படி அவகூட இன்னமும் இருக்கேன்னு கேக்குறியா… நாங்க ரெண்டு பேரும் ஒரே வர்க்கம். அதாவது பணத்துக்காக எதுவும் செய்யலாம்னு நினைக்குற வர்க்கம். உன்னை ஏமாத்தின மாதிரி அவ என்னை விட்டு சுலபமா விலகிட முடியாது. என்னை ஏமாத்தினதா தெரிய வந்தது என் வீட்டை விட்டு சைலஜா பொணமாத்தான் போவா”

 

மெதுவாக நடந்து கொண்டிருந்த சைலஜாவுக்கு அட்சர சுத்தமாய் படேல் பேசியது கேட்டது.

 

வெளியே வந்த படேல் “ உன்  கார் சாவி எங்க சைலஜா? நான் வேற ஒருத்தர் கார்ல வந்தேன்” என்றபடி அவளிடமிருந்த சாவியை வாங்கி காரைக்  கிளப்பினான். அந்த ஒருத்தரைப் பார்த்ததும் அவள் மேலும் விக்கித்துப் போனாள்.

 

அப்போது நேரம் காலம் தெரியாமல் சைலஜாவுக்கு இந்தியாவில் இருந்து போன் வந்தது.

 

“ முக்கியமான விஷயமா இருக்கப் போகுது. போனை எடுத்துப் பேசு ஷைலு” என்ற படேலின் ஆணைக்குப் பயந்து அவசர அவசரமாய் செல்லை உயிர்பித்தாள்.

 

அவள் அம்மாதான் அது. “சைலஜா எத்தனை தடவைடி உன்னைக் கூப்பிடுறது? யாரோ நாலு பேர் வந்து என்னை அடி அடின்னு அடிச்சு நீ மல்லேஸ்வரத்துல வாங்கியிருந்த வீட்டை எழுதி வாங்கிட்டாங்க. ஜேபி நகர் ப்ளாட்ல இருந்து என்னை அடிச்சு தொரத்தி விட்டுட்டாங்க. எனக்கு மண்டைல பெரிய காயம். வைத்தியம் பாக்க  பாங்குல போய் பணம் எடுக்கப் பார்த்தா அஞ்சு பைசா கூட பணம் இல்ல. என்னதான்டி செஞ்சுக்கிட்டிருக்க. மறுபடியும் என்னைப் பிச்சைக்காரியா மாத்துறியா…”

விக்கித்துப் போய் படேலைப் பார்க்க. அவரோ புன்னகையுடன் காரை ஒட்டிக் கொண்டிருந்தார்.

 

“என்ன பேபி ஏதாவது குட் நியூஸா?”

 

“எங்க அம்மாவை அடிச்சு போட்டுட்டு பாங்க்ல இருக்குற என் பணத்தை எடுத்திருக்காங்க. கண்டிப்பா அது நீங்கதான். ஏன் அப்படி செஞ்சிங்க”

 

“பெரிய வார்த்தை சொல்லாதே பேபி எதை நீ என்னிடம் இருந்து திருட்டுத்தனமாய் எடுத்தாயோ அதை நானே திரும்ப எடுத்துக் கொண்டேன்”

 

கொடூரமாக மாறிய படேலின் முகம் “ திருட்டுப் பணத்தை எடுத்ததுக்கே உனக்கு இவ்வளவு கோவம் வருதே. எனக்கு எவ்வளவு கோவம் இருக்கும். புத்தி சரியில்லாத என் மகன் கிட்ட நீ எவ்வளவு மோசமா நடந்திருக்கன்னு பார்த்தேன். கேமரா செட் பண்ணி நீ அடிக்குறதையும் கிள்ளுறதையும் பார்த்தேன். அவனால வாய்விட்டு சொல்ல முடியாதுன்னு தைரியமாடி உனக்கு. என் முதல் பொண்டாட்டி எப்படி செத்தான்னு தெரியுமா?”

 

தலையாட்டியவள் மெதுவாக சொன்னாள் “மஞ்சள் காமாலை”

 

“ நோ டியர்… அவ எனக்கு துரோகம் செய்ய நெனச்சா, தண்டனை தர வேண்டாம்? இந்த படேல் என்ன அவ்வளவு இளிச்சவாயனா… ஊருக்குக் கூட்டிட்டுப் போனேன். ஸ்லோ பாய்சன் தந்தேன். மூணே மாசம், துடி துடிச்சு செத்தா”

 

படேலின் கோபவெறி கொண்ட கண்களைப் பார்த்ததும் புலிவாலைப் பிடித்த தனது நிலைமையை உணர்ந்தாள். இனிமேல் சைலஜாவை அடக்கும் வேலையை படேலிடம் விட்டு விடலாம்.

 

விரைவில் அவர்கள் கைதாகப் போவது நிச்சயம். வழக்கு முடிந்தவுடன் இருவரின் குற்ற செயல்கள் பற்றிய பட்டியலும் நீதிமன்றம் அவர்களுக்களித்த தண்டனையையும் பிபிசியில் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம்.

 

சித்தாராவின் முகம் முழுவதும் தனது முத்திரையைப் பதித்துக் கொண்டிருந்தான் அரவிந்த்.

 

“சித்து… சித்து…. நீ இங்கதான் இருந்தியா? என்னை விட்டுட்டுப் போக எப்படி மனசு வந்தது”

 

நடந்ததை சுருக்கமாக சொன்னாள். கையைக் கோவமாகக் குத்திக் கொண்டவன், “ இது மட்டும் முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவளைக் கொலையே பண்ணி இருப்பேன்”

 

சற்று யோசித்தவன்  கோவமாக அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டான்  “ என்ன குருட்டு தைரியம் உனக்கு. பெரிய ஜான்சி ராணின்னு நினைப்பா. நான் அமைதியா இருந்தா கையாலாகதவன்னு என்கிட்ட எதுவும் சொல்லாம மறைச்சுட்டியா. எவ்வளவு ரிஸ்கான வேலை? இந்த மாதிரி ஒரு கும்பலைக் கண்டுபிடிக்கத் தனியா கிளம்பி இருக்கியே? உனக்குக் ஏதாவது ஆயிருந்தா எங்களை உயிரோட பார்த்திருக்க முடியுமா?”

 

அவன் அறைந்தது அவளுக்கு வலிக்கவில்லை. அவள் மேல் இருக்கும் அக்கறையினால் செய்ததல்லவா.

 

“ என்னை இந்த மாதிரி சமயத்துல அடிக்கக் கூடாது வெள்ளை காக்கா… உனக்காகத்தான் செஞ்சேன். நம்ம வாழ்க்கையை விட்டு அவளை விலக்க ஒரு வழி தேடி போனேன். அப்பறம் நீ சொன்னியே உனக்கு நம்ம குழந்தை உருவானதில இருந்து அது கூடவே சந்தோஷமா இருக்கணும்னு. நடுவுல இப்படி ஒருத்தி தொல்லை கொடுத்து கிட்டே இருந்தா நாம எப்படி நிம்மதியா இருக்க முடியும்…”

 

 

“என்ன சொல்லுற சித்து…” திகைத்துப் போய் கேட்டான்.

“மக்கு பிளாஸ்திரி, நம்ம பிளான் போட்ட மாதிரியே இந்த கிறிஸ்துமஸ்க்கு ஸ்ராவணிக்குத் தம்பி பாப்பா தந்துடலாம்”

 

“நிஜமாவா” சித்துவைத் தூக்கி சுற்றினான்.

 

சமாதானமாய் புன்னகைத்தவர்கள் அப்போதுதான் நினைவு வந்ததை போல தேடினார்கள்.

 

“ஆமா வனி எங்க” அருகில் காணாமல் விழித்தவர்கள் மனதில் ஒரு பயப் பந்து உருண்டது.

 

” சொன்ன மாதிரியே சைலஜா தூக்கிட்டு போய்டாளா அரவிந்த்”

 

“யாரும் தூக்கிட்டு போகல. நான் தான் இந்த அடிதடி, காதல் காட்சிகளை சின்ன பிள்ளையை பார்க்க விடாம எங்க அப்பாகிட்ட கொடுத்து அனுப்பி இருக்கேன்” வாசலில் தயங்கியபடியே நின்றிருந்த பாபு அழுது சிவந்த கண்களை துடைத்துக் கொண்டு சிரித்தான்.

 

” நான் உள்ள வரலாமா அரவிந்த்… உன் மனசுல இன்னமும் எனக்கு இடம் இருக்கா?” உடைந்த குரலுடன் கேட்டான்

 

அரவிந்தின் முகத்தில் மாறி மாறி உணர்ச்சிகள் சடு குடு விளையாடின. “என்னடா பாபு இப்படி கேட்டுட்ட? என்  குடும்பம் இப்ப நல்லா இருக்குறதுக்குக் காரணம் நீதாண்டா

 

“நல்லதை மட்டுமே சொல்லுறியேடா. நான் செஞ்ச தப்பால நீ எவ்வளவு கஷ்டப்படிருக்கன்னு தாமதாமாத்தான் உணர்ந்தேன்டா…”

 

“நீ என்னடா செய்வ என் தலையெழுத்து”

“இல்லடா அரவிந்த். நான் உன்கிட்ட சைலஜாவைப் பத்தி முதலிலையே சொல்லி இருக்கணும். என்னைப் பத்தி தப்பா நினைச்சுக்குவியோன்னு பயந்துட்டேன். நான் வாரா வாரம் பெங்களூர்ல  கிளாஸ் அட்டென்ட் பன்னுவேன்ல அப்ப சைலஜா கூட தாண்டா தங்கிட்டு வருவேன்” தனது நண்பனுக்கு தாங்க முடியாத வேதனை தரும் விஷயத்தை இனிமேலும் மறைக்க விரும்பவில்லை பாபு.

 

” சைலஜா கல்யாணம் செய்துக்க ரொம்ப கம்பெல் பண்ணா. நானும் அவளைக்  கல்யாணம் பண்ணிக்கலாம்னு தான் அப்பாகிட்ட வந்து சொன்னேன். ஆனா அப்பா மறுத்துட்டார். அப்பத்தான் சைலஜா பத்தி எனக்குத்  தெரிய வந்தது. அவ வெளிநாட்டு மோகத்துல நம்மள மாதிரி நிறைய பேர் கூட பழகுனதை கேள்வி பட்டதும் எனக்கு அதிர்ச்சி.

 

இதுக்கு நடுவுல சைலஜா கர்பமாயிட்டாதா சொல்லி என்னை கல்யாணத்துக்கு மிரட்ட ஆரம்பிச்சா. கடைசி ஆயுதமா அவ எடுத்ததுதான் தற்கொலை முயற்சின்னு உன் கிட்ட சொன்னது. ஆனா நிஜமாகவே அன்னைக்கு அவ கருக்கலைப்புக்குத் தான் அட்மிட் ஆயிருந்தா. எனக்கு விரிச்ச வலைல நீ போய் மாட்டிகிட்ட. இது தெரியாத நானும் மேற்படிப்புக்கு இடம் கிடைக்கவும் உன்கிட்ட கூட சொல்லாம தலைமறைவாயிட்டேன்.

 

ஆறு மாசம் கழிச்சு என்னோட பிரெண்ட் கிட்ட நடந்தது எல்லாம் விசாரிச்சு தெரிஞ்சு கிட்டேன். யுஎஸ்ல இருந்த நான் லண்டன்ல கிடைச்ச வேலையை எடுத்துக்கிட்டதுக்கே நீதாண்டா காரணம். உன்னைத் தேடிகிட்டே இருந்தேன். ஆனா கண்டு பிடிக்க முடியல. ஊருலயும் நீங்க மெட்ராஸ் வந்தது சொன்னாங்க ஆனா சரியான விலாசம் தெரியல.

 

இங்க வந்ததும் கணவனை இழந்து இரண்டு குழந்தைங்களோட தனியா தவிச்சுகிட்டு இருந்த ஒரு பெண்ணை விரும்பினேன். சைலஜாவை கல்யாணம்  செய்துக்கக் கூடாதுன்னு தடுத்த என் அப்பா, அவளை மனப்பூர்வமா கல்யாணம் செய்து வச்சாரு. எங்கப்பாவுக்கு மின்மினிப பூச்சிக்கும் முழு நிலவுக்கும் நல்லா வித்தியாசம் தெரியும்”.

 

” எவ்வளவு பெரிய காரியம் செய்திருக்க. உங்க அப்பா எவ்வளவு நல்லவருடா. அவரைப் பார்க்கணும் போல இருக்கு”

 

“வந்துட்டேன் அரவிந்த். பார் நன்றாகப் பார், இரு கண்களையும் திறந்து பார்” என்று சொல்லி அவன் கண் முன்னே வந்து நின்றவர் நமது விவேகானந்தன் தான்.

 

” பாபு… கல்யாண்…”

 

திகைத்த அரவிந்திடம் ” என் முழு பேர் கல்யாண்பாபு. நம்ம ‘மேன்ஷன்’ல ஏற்கனவே ஒரு கல்யாண்குமார் இருந்ததால நான் பாபுவாயிட்டேன். இவ்வளவு நாளாகியும் நீ என் முழு பேர் கூட கேட்டுகிட்டது இல்ல. நான் உன் வீட்டு விஷயம் எல்லாத்தையும் ஒன்னு விடாம  விசாரிப்பேன். உன்னைப் பார்த்துத்தான் குடும்பத்து மேல ஒரு பற்றுதலே எனக்கு வந்தது. நீ என்னைப் பத்தி ஒரு வார்த்தையாவது விசாரிக்க மாட்டியான்னு நெனப்பேன். நீ அந்த ஒரு வருஷமும் என்னை ஏமாத்திட்ட…”

 

விவேகானந்தரின் மூலம் விஷயம் அறிந்து ஓடி வந்திருந்தனர் சோப்பு மன்னிக்கவும் சந்திரிகா குடும்பத்தினர். தனது சந்தேகத்தை கேட்டு தெளிவு படுத்திக் கொண்டாள் சந்திரிகா

 

“ ஹே சித்து இந்த கல்யாண்பாபு கதை உனக்கு முன்னாடியே தெரியுமா?”

 

“ நான் கல்யாணுக்கு அரவிந்தை முன்னாடியே தெரியும்னு ஊகிச்சேன். நான்சியோட டெலிவரிக்கு போய் அவங்க வீட்டுல தங்கி இருந்தப்ப பசங்களோட கம்ப்யூட்டர் கேம் விளையாண்டேன். அதுல நம்ம கல்யான் பாபுவும் அரவிந்தும் எடுத்த பழைய போட்டோ ஒண்ணு  இருந்தது. முதலில்

 

அரவிந்த் மாதிரியே ஜாடையில் வேறு யாராவது இருக்கும்னு நெனச்சேன். ஆனா அந்தக் குடும்பம் அளவுக்கு மீறி காட்டின பாசமும், ஒவ்வொரு தடவையும் கல்யாண் அரவிந்தைப் பார்க்குறதைத் தவிர்த்ததும், அது தவிர அரவிந்துக்குப் பிடிச்ச பலகாரத்தை ஒவ்வொரு தடவையும் அக்கறையோட சமைச்சு தந்த விதமும் என்னமோ இருக்குன்னு நெனைக்க வைச்சது”

 

அரவிந்த் பாபுவிடம் கேட்டான்

“ ஏண்டா அப்ப உங்க அப்பாவுக்கு முன்னாடியே என்னைத் தெரியுமா? நான் வேற ஆடிட்டருக்கும், கிளர்க்குக்கும் வித்யாசம் தெரியாதவர்னு இல்ல நெனச்சேன். மன்னிச்சுக்கோடா” என்றான் அரவிந்த்.

 

“அது எதேர்ச்சியா நடந்ததுடா. நான் உன்னைத் தேடிகிட்டு இருந்தேன். ஆனா எங்கப்பா ஊருக்குப் போனப்ப பிளைட்ல  உன்னை சந்திச்சிட்டார். அன்னைக்கு நான் ஊருல இல்லாததால அவரை ப்ளைட் ஏத்திவிட நான்சி தான் வந்திருந்தா. அவர் யார் கூட வந்தாலும் ஒரு அவங்க கிட்ட கேள்வி மேல கேள்வி கேட்டு ஒரு வழி பண்ணிடுவார்.

 

அவரோட கேமரால உன் கூடவும் ஸ்ராவணி கூடவும் எடுத்திருந்த போட்டோவை வச்சுத் தான் உன்னைக் கண்டு பிடிச்சேன். ரெண்டாவது தடவை அப்பா ஊருக்கு வந்தப்ப உண்மையை சொன்னேன். அப்பா உடனே நான்சி பிரசவத்தை சாக்கு வச்சு சித்தாராவை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தார். சித்தாரா மூலமா உன் மன்னிப்பை வேண்டுறதுதான் என்னோட பிளான். அதுக்குள்ளே இந்த சைலஜா மறுபடியும் வந்துட்டா.”

 

சந்திரிகா குடும்பமும் பாபுவும் உதவ மின்னல் வேகத்தில் பாக்கிங் வேலை எல்லாம் முடிந்தது. சோப்பு வீட்டில் அனைவருக்கும் அருமையாக சமைத்து வைத்திருந்தனர் விவேகானந்தரும் நான்சியும்.

 

“ரொம்ப நன்றிடா பச்சை உடம்போட உன் மனைவி வேற சித்து கூட சுத்தி இருக்காங்க. ரொம்ப நன்றிங்க” மனம் நிறைந்து சொன்னான் அரவிந்த்

 

“அது எங்க கடமைடா. என்னால ஏற்பட்ட சிக்கலை விடுவிக்க முடிஞ்சது ரொம்ப சந்தோசம்”

“சரி சரி நடந்தது எல்லாத்துக்கும் இந்த தேம்ஸ் நதியிலையே முழுக்குப் போட்டுட்டு கிளம்புங்க. ஸ்ராவணிக்கு இந்த சைலஜா பத்தி மறந்தும் கூட சொல்லிடாதே” எச்சரித்தாள் சோப்பு

 

“ கண்டிப்பா சொல்லுவேன்” உறுதியாக சொன்னாள் சித்து.

 

புள்ளதாச்சிப் பொண்ணு என்று அவளுக்கு செய்திருந்த புளிக்காய்ச்சலை வக்கணையாக சாப்பிட்டுக் கொண்டே சொன்னவளிடம் . அனைவரும் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் விழித்தார்கள்.

 

“ இந்த அரவிந்த் உண்மையை சொல்லாம சைலஜா மூலமா உண்மை தெரிய வந்ததுனால எனக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருந்தது. அது மாதிரி அதிர்ச்சி என் பொண்ணுக்கு வரக் கூடாது. ஸ்ராவணிக்கு உரிய வயசு வந்ததும் இங்க நான் திரட்டின ஆதாரங்களோட அவ கிட்ட சைலஜாவைப் பத்திக் கண்டிப்பா சொல்லுவேன்”

 

“ என்னம்மா சொல்லுற… தன்னோட அம்மா மோசமானவன்னு தெரிஞ்சா அந்தக் குழந்தை மனசு எப்படிப் பாடு படும்” ஆதங்கத்துடன் கேட்டார் விவேகானந்தன்.

 

“நீங்க சொல்லுறது சரி அங்கிள். ஆனா சைலஜா எவ்வளவு நாள் படேலோட கட்டுப் பாட்டுல இருப்பான்னு தெரியாது. வெளிய வந்தா அவ பழி வாங்கத் துடிக்குற ஆள் நானாத்தான் இருப்பேன். அப்ப எங்களுக்கு ஒரு பாதுகாப்பான கூடு தேவை. அதைத் தர பன்னீர் அண்ணனால மட்டும்தான் முடியும். அதுனாலத்தான் நாங்க சென்னைல இருக்குறது நல்லதுன்னு நான் நினைக்கிறேன்…

நாங்க வணிகிட்ட எதையும் சொல்லாம இருந்தா, ஒரு பத்தோ பதினைஞ்சு வருஷமோ கழிச்சு சைலஜா அதைப் பயன் படுத்தி ஸ்ராவணி மனசைக் குழப்பி எங்க கிட்ட இருந்து பிரிக்க சந்தர்ப்பம் இருக்கு. அவ நல்ல தாயாய் இருந்தா நானே வணியை அவ கூட அனுப்பி வைப்பேன். ஆனா காசுக்காக … “

 

 

நினைத்துப் பார்க்கவே பயந்தவராய் சொன்னார் விவேகானந்தன் “ நீ சொல்லுறது நூத்திக்கு நூறு சத்தியம். கண்டிப்பா ஸ்ராவனிக்கு மட்டும் உரிய வயசு வந்ததும் அவளோட அம்மாவைப் பத்தி சொல்லிடும்மா”

 

எல்லாம் நல்லபடியாய் முடிய அரவிந்தின் குடும்பம் அனைவரிடமும் பிரியா விடை பெற்று சென்னை மாநகருக்கு  வந்து சேர்ந்தனர்.

 

அரவிந்திற்கு கூடிய விரைவில் வேலை கிடைக்க, பன்னீர் குடும்பம், நபீஸ் குடும்பம், சாரிகா குடும்பம், ஊரில் இருக்கும் கதிர் குடும்பம் என்று சந்தோஷமாக அனைவரையும் அரவணைத்து ஏன் நாதன் குடும்பத்தைக் கூட அரை மனதோடு ஏற்றுக் கொண்ட சித்தாரா, சாந்தாவையும் அவள் கணவனையும் துளி கூட ஏற்றுக் கொள்ளவில்லை.

 

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று சமாதானப் படுத்திய பாட்டியிடம்

 

“பாட்டி குற்றம் பார்க்காமத் தான் நாதனைக் கூட என்னால சுதாண்ணிக்காக சகிச்சுக்க  முடிஞ்சது. ஆனா  என் குழந்தையை பிச்சை எடுக்க வைக்க உடந்தையா இருந்த சாந்தாவோட கணவனுக்கும் அவளுக்கும் என் மனசிலையும் வீட்டுலையும் இடமில்லை. அரவிந்த் வேணும்னா அவங்களைப்  பார்த்துட்டு வரட்டும். ஆனா அவங்க கூட நானும் என் மகளும் உறவு பாராட்டத் தயாரில்லை” என்று உறுதியாக சொல்லில் விட்டாள்.

 

சுமித்ராவுக்கு இதில் வருத்தம் தான் இருந்தாலும் தன மகள் செய்த தப்பின் அளவை உணர்ந்த தாய் என்பதால் வாயை மூடிக் கொண்டார்.

 

தனி மரமாய் நின்ற மகனுக்கு அருமையான வாழ்க்கை வரம் தந்த தேவதையை அவரால் கடிந்துக் கொள்ளவே முடியாது.

 

சித்தாராவின் ஆறு மாத வயிறு அழகாய் மேடிட்டு இருக்க, தனது புடவையை இழுத்து வயிறை மறைத்தபடி உறவினர்களிடம் வளவளத்துக் கொண்டிருந்தாள். உறவினர் குடும்பக் கல்யாணத்தில் அரவிந்தின்  சொந்த பந்தங்கள் அனைவரும் திரண்டிருந்தனர்.

 

“இந்த அரவிந்த் பயலை லண்டன்ல இருந்து விரட்டி விட்டுட்டாங்க. அதுதான் வந்துட்டான். செல்வியும் அவ வீட்டுக்காரரும் மாதிரி நல்ல வேலைல இருந்திருந்தா பரவாயில்ல” ஒவ்வொருவரிடமும் கீறல் விழுந்த ரெகார்ட் மாதிரி புலம்பிக் கொண்டிருந்தார் நாதன்.

 

சிறு வயது பையன் ஒருவனைப் பார்த்தவர் “ டேய் பொன்னம்பலம், நீ  ஆட்டோ ஓட்டிட்டு இருக்கல்ல…. என்கிட்ட  உனக்கு பொண்ணு பாக்கணும்னு உங்கம்மா ஒரு பாடு அழுது தீர்த்துடுச்சு…

என்கிட்ட  ரெண்டு  வருஷத்துக்கு முன்னாடி சொல்லி இருந்தா என் கடைசி மச்சினச்சியப் பார்த்திருக்கலாம். என்ன பெரிய இடம்னு பாக்குறியா…

அதெல்லாம் அந்தக் காலம். இப்ப ஒண்ணும் இல்ல. அதுவுமில்லாம என் மாமியார் வீட்டுல மாப்பிள்ளை ஆட்டோ டிரைவர்ன்னா மறு கேள்வியே கிடையாது. கண்ணை மூடிட்டு பொண்ணு தந்துடுவாங்க… என்னோட சகலைங்கள்ள ரெண்டு பேர் ஆட்டோ ஓட்டுறவங்கதான்” அரவிந்தின் குடும்பத்தை ஓரக் கண்ணால் பார்த்தபடி சொன்னார்.

 

அங்கு நடந்து கொண்டிருந்தவனைக் கூப்பிட்டு “ டேய் பாலாஜி, வேலை வெட்டி இல்லாம சுத்திகிட்டு இருந்தியே இப்ப எப்படி இருக்க” என்று கேட்டு அவனைக் கடுப்படித்தார்.

 

“ யார் எனக்கு  வேலை வெட்டி இல்லைன்னு உங்க கிட்ட சொன்னா. நான்தான் வெளிநாடு போயிட்டு இருக்கேனே”

 

“வெளிநாடா… நீயா… பத்தாவது படிச்சிட்டு டாக்டர் வேலையா பாக்கப் போற… எங்கடா போயிட்டு இருக்க…”

 

“டுப்பாய்”

“என்னது?”

 

“டுப்பாய்”

 

“அது துபாய்டா”

 

“duplicate டுப்ளிகேட்ன்னா dubai  டுப்பாய் தானே”

 

“அப்படி சொல்லுடா என் சிங்கக் குட்டி. இந்த மாதிரி எல்லாம் யோசிக்க அறிவு இருந்திருந்தா நாதன் ஏண்டா சோறு போட்டுட்டு இருந்த கடையை வித்து ஒரு நாதாரி கிட்ட காசைத் தந்து ஏமாந்திருக்கப் போறான்” சிங்கமுத்துவின் ஜாடையில் ஒரு பெருசு வந்து கடிந்து கொண்டு தனது மகனைக் கூட்டிச் சென்றது.

 

நேரத்தைப் பாரு, துபாய்ன்னு ஒழுங்கா சொல்லத் தெரியாதவனெல்லாம் துபாய் போறான் கடுப்பாகத் திரும்பியவர் கண்களில் அரவிந்தின் தாய் சுமித்ரா பட்டார். எதிர்த்துக் கேட்கத் தெரியாத அப்பாவி. இப்போது இருக்கும் கோவத்தைக் காட்ட சரியான ஆள்.

 

“ அத்தை நல்லா இருக்கிங்களா… பாவம் ரொம்ப இளைச்சுப் போய்ட்டிங்க. சித்தாரா சரியா சாப்பாடு போடுறதில்ல போலிருக்கு”

 

“அதெல்லாம் இல்ல மாப்பிள்ளை. அவ நல்ல பொண்ணு, என்ன  ஒண்ணுமே சொல்லுறதில்ல. சமையல் அறை என்னோட கைலதான். என் இஷ்டத்துக்கு சாப்பிட்டுக்குவேன்”

 

அந்தப் பக்கம் சித்தாரா வர அவள் காதில் விழுமாறு சொன்னார்

 

“ சமையல் ரூம் உங்க வசமா… ச்சோ… ச்சோ… ஏற்கனவே சிலர் இதைப் பத்தி என்கிட்ட சொன்னாங்க. ஆனா  மகன் வீட்டுல சம்பளம் இல்லாத சமையல்காரியா, வேலைக்காரியா இருக்கேன்னு இதை விட தெளிவா யாரும் சொல்லு முடியாதுத்த… உங்களுக்காக நான் பரிதாபப்படுறேன்”

 

‘ஒழுங்கா போயிட்டு இருக்குற வாழ்க்கைக்கு குண்டு வச்சுடுவார் போலிருக்கே’, “ நான் அப்படி சொல்லவே இல்லையே மாப்பிள்ளை” என்று பதறிப் போய் சொன்னார் சுமித்ரா.

 

“ நீங்க சொல்லன்னாலும் உங்க மகன்  அவளுக்கு கூஜா தூக்கிட்டுப் போறதை  ஊரே பாக்குதே அத்தை… உங்களை வீட்டை விட்டு விரட்டி வேற விட்டுட்டாளாம். சத்யா வீட்டுலதான் போய் இருந்திங்களாம்.  கேள்விப் பட்டதும் மனசே வருத்தமா இருந்தது.

இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா செல்வி வாழ்க்கையை பலிகடாவாக்கியாவது அவளை உங்களோட மருமகளாக்கி இருப்பேன்.” இல்லாத கண்ணீரை துடைக்க.

 

“அதெல்லாம் நீங்க சொல்லுற மாதிரி ஒண்ணும் நடக்கல  மாப்பிள்ள. சத்யா முழுகாம இருக்கான்னு நான்தான் அவளுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போட்டுட்டு வந்தேன்”

 

ஏதோ பதில் பேச ஆரம்பித்தவரை இடைமறித்தான் ஆதி

 

“அப்பா இந்த கவரை சித்தாராத்த உங்க கிட்ட தர சொன்னாங்க” என்று சொல்லி தந்து விட்டுப் போனான்.

 

அசிரத்தையைப் பிரித்தவர் பேயறைந்தவர் போலானார். அதில் செல்வியும் அவளது கணவனும் அவர்கள் வேலை செய்யும் கடையின் பெயர் பொறித்த சீருடையைப்  போட்டுக் கொண்டு வெங்காய மூட்டையை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர். கீழே ஒரு குறள்

 

‘யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் ….. ‘

 

அவ்வளவுதான் அந்தர் பல்டி அடித்தார் நாதன்

“ஊருல வேலை வெட்டி இல்லாதவனுங்க ஆயிரம் பேசுவாங்க. ஆனா எங்க எல்லாருக்கும் தெரியும் அரவிந்த் பத்தரை மாத்துத் தங்கம், அதில் பதித்த நல் வைரமா சித்தாரா… சும்மா, சும்மா புலம்பாம இருக்குறதை அனுபவிங்க அத்தை. அவங்களைப் பத்தி இனிமே மூச் ஒரு குறையும் என் காதுல விழக்கூடாது சொல்லிட்டேன்”  என்று சொல்லி நடையைக் கட்டினார்.

 

“ஏண்டி சுதா, நான் ஒண்ணுமே சொல்லலையே. நான் புலம்பக் கூடாதுன்னு சொல்லிட்டு போறார். உன் வீட்டுக்காரருக்கு என்னடி ஆச்சு?” புரியாமல் கேட்டார் சுமித்ரா.

 

வீட்டுக்கு வந்தும் நாதனின் ரியாக்ஷனை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான் அரவிந்த். ஸ்ராவனிக்கு உடை மாற்றி விட்டுக் கட்டிலில் தூங்க வைத்த சித்தாரா வினவினாள்.

 

“ என்ன கெக்க பிக்கன்னு சிரிப்பு?”

 

“ நீ அனுப்பிச்ச போட்டோவைப் பார்த்ததும் நாதன் மாமா எப்படி அந்தர் பல்டி அடிச்சார் பார்த்தியா? ஆமா எப்ப அதை எடுத்த”

 

“ நான் எங்க எடுத்தேன்? என்னைப் பார்த்ததும்தான்  அந்த செல்வி எங்கேயாவது ஒளிஞ்சுக்குவாளே. சோப்பை விட்டு எடுக்க சொன்னேன். கரெக்டா எடுத்திருக்கா பாரேன்”

 

“சோப்பு பாவம் நல்ல பொண்ண இப்படி கிரிமினல் வேலைல ஈடுபடுத்தி கெடுத்து வச்சிட்டியே”

 

“மத்தவங்களைப்  பத்தியே பேசுறியே, நான் எப்படி இருக்கேன்னு சொல்லவே இல்லையே” சிணுங்கினாள் அவன் மனைவி.

 

மூன்றாம் பிறை நெற்றியில் அழகான குங்குமப் பொட்டு, கெண்டை மீன்கள் துள்ளும் கண்கள், திருமண வீட்டில் போட்ட வெற்றிலையில் சிவந்த அதரங்கள். வீட்டில் பாட்டியின் கவனிப்பிலும் சொந்த பந்தங்கள் அருகாமையிலும் சதை போட்டு தாய்மையின் பூரிப்பில் மின்னிய கன்னம், பர்பில் நிறத்தில் தங்க நூல் வேலைப்பாடு செய்த சேலையில் தேவதையைத் தெரிந்தாள் சித்தாரா.

 

“ஹே ஏஞ்செல் இதே நிறத்துல தான் உனக்கு ஒரு சேலை தரணும்னு வாங்கினேன். ஆனா லண்டன் போறப்ப மறந்து இங்கயே வச்சுட்டு வந்துட்டேன். என்ன சிரிக்கிற… அடிப்பாவி அந்த சாரிதானா இது”

 

“ஆமாம் பொண்டாட்டிக்கு பரிசா தர வாங்கிட்டு இப்படியா மறக்குறது… உனக்கு  எப்ப நினைவு வந்து, என் கையில் தந்து, நான் எப்பக் கட்டி.. அதுனாலதான் நானே எடுத்துக் கட்டிக் கிட்டேன்”

 

“இல்ல சித்து அப்ப ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணித் தந்துட்டாங்கன்னு என் மேல நீ கோவமா இருந்த. அதுனாலதான் உன் மனசு என் பக்கம் முழுசா வந்ததும் தரலாம்னு இருந்தேன்”

 

“நான் ரெண்டாந்தாரம்னு எந்த மடையன் சொன்னான். முதல் மனைவிக்கு உன் மனசை கொடுத்திருப்பன்னு ஒரு கவலை இருந்தது. இப்ப இல்ல. ஏன்னா உன் மனசுல எனக்குத்தான் முதலிடம். அதுவும் ஒரே இடம். இது  போதும் எனக்கு இது போதுமே”

 

“ அப்படி நெனச்சு மனசை சமாதனப்படுத்திக்கிட்டியா சித்து?” வேதனை கலந்த சிரிப்பு அரவிந்தின் நம்பிக்கையின்மையைக் காட்டியது.

 

“ மரமண்டை. என் மனசு உன் பக்கம் இருந்ததால்தான் தலை குனிஞ்சு உன் தாலியை வாங்கிட்டேன்”

 

அவளாக நெருங்கியவன் “ நிஜமாவா சித்து. கல்யாணத்துக்கு முன்னாடியே என்னை உனக்குப் பிடிக்குமா? மனப்பூர்வமாத்தான் சம்மதிச்சியா?”

 

வெட்கத்தோடு சிரித்தவள் “ அப்ப எனக்குத் தெரியல் அரவிந்த். ஆனா இப்பதான் புரிஞ்சது. உன் அம்மா உன்னைப் பத்தி சொல்லுற ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு என் மனசுல உன் மேல ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்தது.

அதைக் காதல்னு சொல்ல முடியாது. ஆனா நம்ம கல்யாணம் முடிவானதும்  ரெண்டாந்தாரம்ன்னு ஒரு தயக்கம் இருந்தது என்னவோ உண்மை. இப்ப என்னைப் பத்தி உனக்கு நல்லா தெரிஞ்சிருக்கும். ஸ்ரவணியையும் உன்னையும்  காப்பாத்த தெரியாத நாட்டுல தைரியமா கிளம்புன என்னால என் கல்யாணத்தை நிறுத்தியிருக்க  முடியாதுன்னு நினைக்கிறியா… இல்ல உன்னை மிரட்டிக் கல்யாணத்தை நிறுத்த வச்சிருக்க முடியாதா… நீ என்ன ஏழு கடல் ஏழு மலை தாண்டியா இருந்த”

 

இல்லை என்று உதட்டைப் பிதுக்கினான்.

 

“ வெள்ளை காக்கா, முதல்ல நான் உன்னைப் பார்த்த அன்னைக்கு நான் விசிலடிச்சதும் புள்ளிமான் மாதிரி மிரண்டு  ஒரு பார்வை பார்த்தியே இன்னொரு தடவ அதே மாதிரி பாரேன்”

 

மனதில் ‘வாரே வா இன்னைக்கு நான் புள்ளிமானா இல்லை பாயும் புலியான்னு காமிக்குறேன்’ என்றவன் அவளிடம்

 

“இன்னொரு தடவை அதே மாதிரி விசிலடி சித்து” என

 

அவள் “வாங்க மச்சான் வாங்க” என்று ஆரம்பிக்க முடிக்க விடாமல் பாதியிலே தனது இதழ்களால் தடுத்து நிறுத்தினான் அரவிந்த்.

 

அரவிந்தின் வாழ்க்கை அவனைக் கொண்டாடப் பிறந்த சித்தாராவுடன் செவ்வன நடக்கும் என்ற நம்பிக்கையோடு நாம் அவர்களின் தனிமையில் குறுக்கிடாமல்  விடை பெற்றுக் கொள்வோம்.

 

 

 

சுபம்

3 thoughts on “என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 36 (நிறைவுப் பகுதி)”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 31தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 31

செல்வம் கிளம்பிப் போன அரைமணியில துவைக்க துணிகளை வேலைக்காரியிடம் எடுத்துப் போட்டாள் சரஸ்வதி. வழக்கமாய் செல்வம் தனது ஆடைகளைத் தானே துவைத்துக் கொள்வான். சட்டையை சலவைக்கு போடுவான். இந்த முறை அவசர சோலியால் துணியை அறையின் மூலையில் போட்டுச் சென்றுவிட்டான். ‘எந்துணியை

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 31என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 31

அத்தியாயம் – 31   “ஸ்ராவணியை படாதபாடு பட்டுக் காப்பாத்தினேன். வனி பொழைச்சுட்டா. இந்தத் தகப்பனோட வேதனை பொறுக்காம கடவுள் அவளுக்கு ஆயுளைக் கொடுத்துட்டார். அப்பறம் குழந்தையைத் தூக்கிட்டு அம்மாவைப் பார்க்கக் கிளம்பினேன். என்னோட நல்ல நேரம் வீட்டுக்குப் போனப்ப அம்மா