Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 13

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 13

அத்தியாயம் – 13 

ரவிந்த் பொன்னியின் செல்வன் கால்வாசி புத்தகத்தை படித்து முடித்த போது கிட்டத்தட்ட நள்ளிரவாகி விட்டது. ஒரே இடத்தில் அசையாமல் இருந்தது அவன் காலை மரத்து போக வைத்திருந்தது. அவன் மேல் இருந்த பிஞ்சுக் காலை எடுத்து ஒரு தலையானையின் மேல் வைத்துவிட்டு, ஸ்ராவணியைத் தொந்தரவு படுத்தா வண்ணம் மெதுவாகக் கட்டிலைவிட்டு எழுந்தான். வனியும் அவனும் கட்டிலில் படுத்துறங்க சித்தாரா வழக்கம் போல தரையில் பாய் விரித்து படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

ஸ்ராவணி சுமித்ராவுடன் அவன் வீட்டில் தான் இருந்தாள். வனியைத் தூங்க வைத்து விட்டுத்தான் அவன் மாடிக்கு வருவான்.  திடீரென முந்தாநாள் இரவு அவள் அப்பா வேண்டும் என்று அழ சத்தம் கேட்டு சித்தாரா ஸ்ராவநியைத் தூக்கிக் கொண்டு வந்து அரவிந்தின் அருகில் படுக்க வைத்து விட்டாள். காலையில் விழித்தெழுந்த அரவிந்திற்க்கு ஸ்ராவநியைப் பார்த்து ஒரே ஆச்சிரியம். அரவிந்திற்க்கு காபியும், ஸ்ராவனிக்கு பூஸ்டும் எடுத்து வந்த சித்தாரா அவனை சமாதானப் படுத்தினாள்

“பாவம் வனி, தினமும் நீ தூங்க வைக்குற, நடுவுல எழுந்து நீ பக்கத்துல இல்லைனவுடனே அழ ஆரம்பிச்சுட்டா. இனிமே நம்ம கூடவே வனி தூங்கட்டும் அரவிந்த்”

மிகுந்த கவலையுடன் அரவிந்த் “இல்ல சித்தாரா இதுவரைக்கும் ஸ்ராவணி அழறப்ப நான் இந்த மாதிரி பொறுப்பில்லாம தூங்குனதில்ல. நேத்து ஏன் இப்படித்  தூங்கினேன்னு தெரியல”

அவனை ஒரு வினாடி பரிதாபமாகப் பார்த்த சித்தாரா, “ நீ ஏன் அரவிந்த் இப்ப ஒண்ணுமில்லாததுக்கு பீல் பண்ணுற? நீ கூட்டிட்டு வந்தா என்ன, இல்ல நான் கூட்டிட்டு வந்தா என்ன? ஸ்ராவணி இங்க வந்து நல்லா தூங்கினா. அதுதானே முக்கியம்” என்று சொல்லியவாறே ஸ்ரவநியைத் அழைத்துக் கொண்டு அவளுக்குப் பல் தேய்த்து விடக் கிளம்பினாள்.

அரவிந்த் அதனை நினைத்துக்  கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தான். மெட்ராஸ்ல காலைல வெயில் கொளுத்துனாலும் சாயந்திரமானா கடற்கரைக் காற்று சிலு சிலுன்னு அடிக்குதுப்பா என்று நினைத்துக் கொண்டே அந்த காற்றின் குளுமையை அனுபவித்தான். 

“டேய் அரவிந்த் இதெல்லாம் தெய்வத்துக்கே அடுக்காதுடா, ரெண்டு வாரம் முன்னாடி வரை கான்கிரிட் பாலைவனம், காற்றாட வனமில்லை, கால் நனைக்க நதியில்லைன்னு  சென்னையோட குறைகளை அடுக்கினவன் இப்ப மாமியார் ஊருனதும் சிம்லா ரேஞ்சுக்குத் தூக்கி வச்சு பேசுறியே” என்ற மனசாட்சியை

 ‘விடுறா மச்சான், கல்யாண வாழ்க்கைல இதெல்லாம் ஜகஜம்டா. நான் மட்டுமா செய்யுறேன். ஆம்பளைங்க யாரவது அவங்க மாமியார் ஊரைப் பத்தி குறை சொல்லிட முடியுமா? சொல்லிட்டு சந்தோஷமா வாழ்ந்திட முடியுமா?’ என்று சொல்லி அடக்கினான்.

கீழே அவனது வீட்டிலிருந்து பேச்சு சத்தம் கேட்டது. மறுநாள் சத்யாவைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வர இருப்பதால் வீட்டில் மறுபடியும் உறவினர்கள் வருகை களை கட்ட ஆரம்பித்தது. அனைவரும் சாப்பிட்டு முடித்து பின்னால் இருக்கும் காலி இடத்தில் சேர் போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அமைதியான அந்த இரவில் அவர்கள் பேசியது அவன் காதில் தானாக வந்து விழுந்தது.

“என்ன சுதா, எங்க உன் வீட்டுக்காரர் கண்ணுலயே படுறதில்ல” என்றார் கதிர். 

கதிர் சுதாவை விட மூன்று மாதமே சிறியவர். இருவரும் பால்வாடியில் இருந்து ஒரே பள்ளியில் படித்தவர்கள்.ஆறாவது வந்தவுடன் கதிர் ஈ.ஆர் பள்ளியிலும், சுதா எஸ்.ஆர்.சிக்கும் இடம் பெயர்ந்தார்கள். சொந்தக்காரர்கள் என்பதைவிட இருவரும் நெருங்கிய நண்பர்கள். நாதனுக்கு இருக்கும் ஒரே நல்ல குணம் இருவர் நட்பையும் சந்தேகப்பட்டதில்லை அவர். மனைவி மேல் அவ்வளவு நம்பிக்கை.

“இப்பெல்லாம் யாரோ நாகராஜ்ன்னு ஒரு ஆள் கூட புது சிநேகிதம் பிடிச்சிட்டு சுத்துறார். அந்த நாகராஜ் சென்னைல எங்கேயோ தங்கி இருக்காராம். அவரப் பார்த்துட்டு கண்ட நேரத்துக்கு வீட்டுக்கு வர்றார்”

“இன்னைக்கு எத்தன மணிக்கு  வீட்டுக்கு வர்றார்?”

“வந்துகிட்டே இருக்கேன்னு இப்பத்தான் போன் பண்ணி சொன்னார்”

“சரி அத்தை ஏன் இவ்வளவு வருத்தமா இருக்காங்க?” அடுத்த கேள்வியை கேட்டார்.

“ முந்தாநாள் ஸ்ராவணி கிட்ட போய் சாந்தா படுத்துகிட்டா, நடுராத்திரி முழிச்சுப் பார்த்த வனி பயங்கரமா அழ ஆரம்பிச்சுட்டா, அப்பறம் சித்தாரா வந்து மாடிக்குத் தூக்கிட்டுப் போனா, அண்ணன் மட்டுமில்ல அந்தப் பச்சை பிள்ளை கூட என்னை வெறுத்துடுச்சுன்னு சாந்தாவும் ஒரே அழுகை, அம்மாவுக்கு அதுதான் வருத்தம் இல்லம்மா” என்று கேட்டாள் சத்யா 

மறுப்பாக தலையாட்டினார் சுமித்ரா, “ சாந்தா விஷயத்துல வருத்தப்பட்டு வருத்தப்பட்டு மனசே மரத்து போச்சு. நம்ம யாரையும் மதிக்காம அவளே தேர்ந்தெடுத்து கிட்ட வாழ்க்கை இது. என்னைக்கு நம்ம பார்த்து வைச்ச மாப்பிள்ளைக்குத் தலையாடிட்டு மறுநாளே அந்த ஆட்டோக்காரனோட ஓடிப் போனாளோ அன்னைல இருந்து  அதுல வர்ற இன்ப துன்பங்களை எல்லாம் அவதான் தாங்கிக்கணும். இப்ப என் வேண்டுதல் எல்லாம் அவ பூவோடையும் பொட்டோடையும் நீண்ட காலம் இருக்கணும்னு தான்.

 இந்த அரவிந்த் விஷயம் தான் இப்ப மனசை அரிக்குது. அவன்  நல்லா இருக்கட்டும்ன்னு நெனச்சு கல்யாணம் பண்ணி வச்சா அவனும் சந்தோஷமா இல்லை சங்கீதா. முந்தாநாள் ராத்திரி பன்னண்டு மணிக்கு சித்தாரா ஸ்ராவநிய மாடிக்குத் தூக்கிட்டு போனா. பார்த்தா இன்னமும் கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாளோ அப்படியேதான் இருக்கா. ஒரு புதுக் கல்யாணம் பண்ணிகிட்டவங்களோட அன்னியோன்யம் அவங்க கிட்ட இல்லையே” பெருமூச்சு விட்டபடி சொல்லி முடித்தார் சுமித்ரா. 

கதிரை அவர் வேற்று ஆளாக நினைப்பதில்லை என்பது அவரது பேச்சிலே தெரிந்தது. கதிரும் அவருக்கு ஆறுதல் சொன்னார் “ என்னத்த இன்னமும் பழைய காலத்துலையே இருக்கிங்க. இந்தக் கல்யாணம் பொண்ணு மாப்பிள்ளை ரெண்டு பேருக்கும் யோசிக்கக் கூட அவகாசம் இல்லாம முடிவானது. அவங்களுக்கு இந்தக் கல்யாண அதிர்ச்சி மறையட்டும். ஒருதர ஒருத்தர் புரிஞ்சுகட்டும். அரவிந்தோட முதல் கல்யாண வாழ்க்கை தான் மின்னல் மாதிரி மின்னிட்டு போச்சு. இந்தக் கல்யானமாவது ஆல் போல் தழைச்சு இருக்கட்டும்” நீளமாகப் பேசி முடித்தார். 

“இன்னொன்னு பார்த்திங்களா, வனி விஷயத்துல நம்பளைக் கூட நம்பி விட்டுட்டு போகாத அரவிந்த் சித்து கிட்ட நம்பிக்கையா  வனிய விட்டுட்டு போறான். அப்ப அவன் அவளை ஏத்துக்கிட்டதா தானே அர்த்தம். அவளும் வனிய நல்லா கவனிச்சுக்குறா. பாத்ரூம் கூட்டிட்டு போறது, உடம்புக்கு ஊத்துறது, வனி துணியையும் சேர்த்து துவைக்குறது உட்பட.

 வனி கூட சித்துகிட்ட சாப்பாடு குடு, பவுடர் போட்டு விடுன்னு உரிமையா கேட்குறா. எனக்கு இதுவே மனசு நிம்மதியா இருக்கு. இன்னைக்கு வணிய பார்த்துக்குறவ நாளைக்கு நம்ம அரவிந்தையும் பாத்துக்க மாட்டாளான்னு ஒரு நம்பிக்கை தான் ” என்று சங்கீதா சொல்ல அனைவரும் ஆமோதித்தனர். 

அரவிந்திற்கு ஒரே ஆச்சிரியம். தன்னை அறியாமலேயே தன் மனது சிதாராவை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டதா என்று. அவனது சிந்தனையில் குறுக்கிட்டது கதிரின் குரல் 

“சுதா இதை உன் கண் கண்ட தெய்வத்துகிட்ட சொல்லிடாதே. அந்தத் தெய்வம் செஞ்ச காரியம் தெரிஞ்சா அரவிந்த் என்ன சொல்லப் போறானோன்னு தெரியல. என்ன இருந்தாலும் அத்தை நீங்க நாதன் குணத்தைப் பத்தி நல்லா தெரிஞ்சும் அவன சித்தாரா வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்கக் கூடாது?”

“ஆமா நான் பெரிய தப்பு செஞ்சுட்டேன். கல்யாணம் முடிவானதும் அரவிந்த் கிட்ட சொல்லுரதுக்கும் மத்த விஷயங்களைப் பேசவும் தான் உங்களையும் பெரிய மாபிள்ளையையும் போன் பண்ணி வர சொன்னேன். அவர் மறுநாளே வந்துட்டார். அவசர அவசரமா அவங்க கிட்ட போய் பேசியும் முடிச்சுட்டார். எனக்கே முழு விவரமும் தெரியாது. நீங்க இருந்திருந்தா இந்த மாதிரி நடக்காம தடுத்துருப்பிங்க. ஆனா பாவம் உங்களால் அன்னைக்கு வர முடியாத சூழ்நிலை”

“ஆமாம் அத்தை அம்மாவை ஹாஸ்பிடல்ல சேர்த்து இருந்ததால அன்னைக்கு என்னால வர முடியல. சரி எல்லாமே நல்லா படியா நடக்கும்னு நம்புவோம்” 

என்ன விஷயமா இருக்கும்? நாதன் மாமா என்ன குழப்பம் செஞ்சிருப்பார்? என்று நெற்றியில் புருவங்கள் முடிச்சிட யோசித்தான் அரவிந்த். கீழே இன்னமும் பேச்சு தொடர்ந்தது. 

“சுதா எப்படித்தான் இந்த நாதன் கூட இவ்வளவு நாள் குப்பை கொட்டுறேன்னு எனக்கு புரியவே இல்லை”

சுதாவும் சளைக்காமல் பதிலளித்தார் “ ரொம்பக் கஷ்டப் பட்டு அந்த பார்முலாவை  கண்டு பிடிச்சேன். கொஞ்சம் அம்மாவுக்கும் ஹிண்ட்ஸ் தந்து இருக்கேன். பாரு நம்பாம சிரிக்குற. சரி சிதாராவப் பத்தி என் ஹஸ்பன்ட் எண்ணம் என்னவா இருக்கும்னு நெனைகுற”

“சித்தாரா மேல நாதனுக்கு செம கோவம். அவளோட அண்ணன் முறையா நிக்க வேண்டாம்னு சொல்லிட்டான்னு அவளை ஏதாவது குத்தம் சொல்லிகிட்டே இருப்பான். வருத்தமான விஷயம் என்னனா ஸ்ராவணி மனசிலயும் சித்தாரா கொடுமைக்கார சித்தின்னு சொல்லி வச்சுருக்காங்க உன்னோட அருமை புருஷனும், பிள்ளையும்” என்று சொல்லி திருமணத்திற்கு முதல் நாள் தங்களிடம் ஸ்ராவணி சொல்லியதை சொன்னார். அனைவருக்கும் ஆத்திரம்.

“ஸ்ராவணி சிதாரா  கூட நல்லா பழகி அவ நல்லவன்னு புரிஞ்சுகிரதுதான் நமக்கு முதல் கவலை. சித்தாரா அரவிந்த் அன்னியோன்யம் கூட ரெண்டாவது கவலைதான். மஞ்சள் கயிறு மேஜிக் போட்டுடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றார் சங்கீதா.

“ கவலைப் படாதே கதிர் இப்பத்தான் எனக்கு இந்த விஷயம் தெரியும். நான் ஆதியை கண்டிச்சு வைக்கிறேன். என் வீட்டுக்காரரை கண்டிக்குறது என்னால முடியாத விஷயம் மன்னிச்சிடு. ஆனா இன்னைக்கு அவர் வந்தவுடனே அவர் வாயாலையே சித்தாராவை நல்ல பொண்ணுன்னு சொல்ல வைக்கிறேன் பாரேன். ஆனா நான் என்ன சொன்னாலும் நீங்க எல்லாரும் ஆமாம் சாமி போடணும் சரியா” என்று சுதா சொல்லி முடிப்பதற்கும்

 “சுதா. புருஷன் களைச்சு போய் வந்தது கூட தெரியாம என்னடி இங்க மாநாடு ” என்று அழைத்துக் கொண்டே நாதன் வருவதற்கும் சரியாக இருந்தது. 

நாதன் பேசியதைக் கவனிக்காதது மாதிரி சுதா தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார் “ஆமா கதிர் சொந்தக் காரங்க எல்லாரும் வாய் வலிக்க சொல்லிட்டாங்க. சித்தாரா என் தம்பி கூட பார்க்கும் போது கலர் கம்மிதான். எங்க  குடும்பத்தோட பார்குறப்ப தனியா தெரியுராளாம். உயரம்  கூட இன்னும் ஒரு பிடி இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். என்ன செய்யுறது அரவிந்த் குடுத்து வச்சது அவ்வளவுதான் ” என்று அலுத்துக் கொண்டாள். 

நாதன் கொதித்து விட்டார் “என்னடி எங்க குடும்பம். இது பெரிய சூப்பர் குடும்பம். அந்தப் பொண்ணு அப்படியே தேச்சு வச்ச வெங்கலக் குத்து விளக்காட்டம் மின்னுறா. முகம் எவ்வளவு லட்சணமா லக்ஷிமி கடாட்சமா இருக்கு. உங்க வீட்டுல உன்னையும் சேர்த்து யாருக்காவது அந்த லட்சணம் இருக்காடி?  மெட்ராஸ்ல, சொந்த வீட்டோட, உன் தம்பிக்கு… அதுவும் ரெண்டாந்தாரமா வாழ்க்கை பட்டிருக்கு. அவனவன் இதை நெனச்சே வயத்து வலில துடிக்குறான். இவ என்னமோ பெருசா பேசுறா. 

உன் தம்பிக்கு என்ன தகுதிடி இருக்கு, ஏதோ தட்டு தடுமாறி வெளிநாடு போய்ட்டான். கொஞ்சம் வெள்ளை தோலு. அவ்வளவு தான். மத்தபடி ஊர சுத்திக்  கடன், அக்கா தங்கைன்னு ஏகப்பட்ட புடுங்கல். குடியிருக்க சொந்த வீடு கூட இல்ல. பிரிட்ஜ் வாங்கினா ஸ்டபிலைசர் ப்ரீ அப்படின்னுற மாதிரி உன் தம்பியைக் கல்யாணம் பண்ணி கிட்டா அவன் பொண்ணு ஸ்ராவணி ப்ரீயா கூட வந்துடுவா. இதெல்லாம் வேண்டாம்னு தான் என் தங்கச்சி செல்வியக்  கூட இவனக்  கல்யாணம் பண்ணிக்க ரொம்ப கம்பெல் பண்ணல. அரவிந்தை செல்விக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்க என்னால முடியாதா? இந்தப் பொண்ணு பாவம் கல்யாணம் நின்னத சாக்கா வச்சு உங்க குடும்பத்துல வில்லத்தனம் பண்ணி வளைச்சு போட்டுடிங்க. இல்லைனா அரவிந்துக்கு  இந்த மாதிரி பொண்ணு கிடைக்குமா?” என்று கடுகாய் பொரிந்து முடித்தார்.

கதிர் சுதாவைப்   பார்த்தார் ‘ஒ இப்படித்தான் சமாளிக்கிறியா நீ?’ என்ற அர்த்தம் தெரிந்தது அந்தப் பார்வையில். 

சபை அத்துடன் கலைய அரவிந்தும் வீட்டில் நுழைந்தான். தரையில் பாய் விரித்துப் படுத்திருந்தாள் சித்தாரா. அவனுக்கு சுதா அவளைப் பற்றி சொன்னது நினைவு வர ஓரக் கண்ணால் அவளைப் பார்த்தான். வலது கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் சித்தாரா. காலையில் இருந்து அவள் ஓரிடத்தில் நிற்காமல் வேலை எதையாவது செய்து கொண்டிருப்பதை கவனித்திருக்கிறான் அரவிந்த். 

‘ரொம்ப களைப்பா இருக்கா பாவம்’ என்று நினைத்துக் கொண்டான். இவளும் நானும் பொருத்தமாக இருக்கிறோமா? என்று ஒரு சந்தேகம் அவனது மனதில் புதிதாய் முளைக்க,

 ‘ச்சே ஒரு கல்யாண போட்டோ கூட இங்க இல்ல. காலைல எதையோ செக் பண்ணுற மாதிரி போய் பீரோவை குடையனும். அது வரைக்கும் இந்த கேள்வி நம்மள தூங்கக் கூட விடாம பாடு படுத்தி எடுத்திடுமே’ என்று யோசித்தவனுக்கு, அங்கே மாட்டி இருந்த சிறிய கண்ணாடி கண்ணில் பட்டது. 

அதனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு சித்தாராவின் முகம் நன்றாக தெரியும் இடத்தில் நின்றவன் நன்றாக  அவளது முகத்தைப் பார்த்தான். பின் தூரத்தில் தெரிந்த அவள் முகம் அருகே தனது முகத்தை வைத்துக் கண்ணாடியில் பார்த்தான். ‘ரெண்டு பேரும் பொருத்தமாகத் தான் இருக்கோம்’. என்று சந்தோஷப் பட்டுக் கொண்டான்.  

‘சுதா அக்கா சொல்லுறதப் போல ஒண்ணும் நிறம் கம்மி இல்ல. மெட்ராஸ் வெயிலுக்கு வெளில அலையுறப்ப கலர் கம்மியாகும். லண்டன்ல இவ்வளவு வெயில் கிடையாது. இவ்வளவு நாள் ஆணுக்கு ஆணா கஷ்டப்பட்டிருக்கா. இனிமே நானே அவளுக்குத் தேவையானதை பார்த்து பார்த்து செய்யணும்’.

கண்ணாடியில் தெரிந்த சித்தாராவிடம் கேள்வி கேட்டான் “நான் உனக்காக ஏதாவது செஞ்சா உனக்கு பிடிக்குமா சித்தாரா? நீ என்னை கேட்டுட்டா வனிக்கு வேணுங்குறத செய்யுற, அது மாதிரி நானும் உனக்கு வேண்டியதைப் பார்த்து பார்த்து செய்வேன்”, என்றவன் கொஞ்சம் தைரியம் அடைந்து தனது மனைவியை வெளியில் இருந்து ஜன்னலின் வழியே வந்த  மின் விளக்கு வெளிச்சத்தின் துணையுடன் ஆராயத் தொடங்கினான் 

‘அழகான புருவம், செதுக்கிய நாசி, சதைப் பற்றான கன்னங்கள், ஆரஞ்சு சுளைகளாய் உதடுகள், கண்டிப்பைக் காட்டும் கண்கள். இந்தக் கண்கள் காதலுடன் என்னைப் பார்த்தால் எப்படி இருக்கும், இந்த இதழ்கள்…’ என்று எண்ணியவன் பின்னர் தலையைக் குலுக்கிக் கொண்டான். 

‘இப்படி நான் நெனச்சது தெரிஞ்சா அவ்வளவுதான்’ என்று ஒரு மனம் சொல்ல ‘எனகென்ன உரிமையா இல்ல. இவ என்னோட மனைவிதானே’ என்று மற்றொரு மனம் சமாதானம் செய்தது. இதுக்கு மேல வேண்டாம் என்று கண்ணாடியை சுவற்றில் மறுபடியும் மாட்டினான்.

அவள் அவனிடம் முதல் நாள் பேசியது நினைவில் வர, மனதினுள் சிதாராவை நிறுத்தி “என்ன சித்து நம்ம ரெண்டு பேருல யார் வனியக் கூட்டிட்டு வந்த என்னவா? அப்ப நம்ம ரெண்டு பேரும் அவ்வளவு க்ளோஸா” என்று கேட்டான். 

அவன் நேரம், சித்துவுக்குக் கற்பனையில் கூட சுட்டுப் போட்டாலும் வெட்கம் வரவில்லை. இவள் வெட்கத்தைக் கேட்டாள் என்ன தருவாள்? என்று கேட்டான் உடனே டூப் போல் ஓடி வந்த அவனது மனசாட்சி

 “ வெட்கத்தை கேட்டா முன்னாடி இருக்கும் பல்லை உடைச்சு உன் கைல தருவா. புதுப்  பல்லு அவளோட ஆஸ்தான பல் டாக்டர் கிட்ட போய் கட்டிக்கலாம். ஒகேயா அரவிந்த்” என்று கிண்டலாகக் கேட்டது.

‘இவன் வேற என்னோட பொண்டாட்டியக்  கற்பனைல கூட நெருங்க விடமாட்டான்’ என்று மனசாட்சியைத் திட்டிக் கொண்டே படுக்கச்  சென்றான்.

டேபிளில் அவன் குடிக்க வைத்திருந்த  பால் கெட்டுப் போயிருக்க, ‘இவ வேஸ்ட் பண்ணா பிடிக்காதுன்னு நியாயம் வேற பேசுவாளே, சரி நம்மலே கீழ கொட்டிட்டு கழுவி  வச்சுடலாம்’ என்று எண்ணியவாறே சமையலறை நோக்கி சென்றான் அங்கு  தனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருப்பதை அறியாமல்.

எங்கோ ஓரிடத்தில் இருந்து சந்தரபாபுவின் பாடல் எப்எம்மில் ஒலித்தது 

மங்காத இன்பமே மனைவியினாலே 

மாமியார் வீடு சொர்க்கத்தைப் போலே 

ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும்

வேணும் கட்டாயம் வாழ்விலே.

………………..  

உல்லாசமாகவே உலகத்தில் வாழவே

மாப்பிள்ளையாகி ஆனந்தமாக  மணமாலை சூடிடும்

கல்யாணம் கல்யாணம் கல்யாணம்  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 45தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 45

கண்கள் கலங்க ஜிஷ்ணு சொன்னதை இதயம் கலங்கக் கேட்டிருந்தாள் சரயு. “விஷ்ணு… குண்டூர்ல என்னைப் பாக்குறப்ப இதெல்லாம் ஏண்டா சொல்லல” “நானே அவ்வளவு நாள் கல்யாணம் ஆனதை உன்கிட்ட மறைச்சு நடிச்சுட்டு இருந்தேன். எப்படி இதை சொல்லுவேன்? ஆனா அப்பல்லாம் என்

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 9என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 9

அத்தியாயம் – 9  கடற்கரையில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய அரவிந்தின் மனதில் இன்னமும் அதிகக் குழப்பமே நீடித்தது. யாரும் இல்லாத தீவிற்கு ஸ்ராவநியுடன் சென்று விடலாமா என்ற விரக்தி தோன்றியது. யோசனையுடன் ஆட்டோவில் அமர்ந்திருந்த அரவிந்தை தொந்தரவு செய்யாமல் வந்தார் கதிர்.