கண்கள் கலங்க ஜிஷ்ணு சொன்னதை இதயம் கலங்கக் கேட்டிருந்தாள் சரயு.
“விஷ்ணு… குண்டூர்ல என்னைப் பாக்குறப்ப இதெல்லாம் ஏண்டா சொல்லல”
“நானே அவ்வளவு நாள் கல்யாணம் ஆனதை உன்கிட்ட மறைச்சு நடிச்சுட்டு இருந்தேன். எப்படி இதை சொல்லுவேன்? ஆனா அப்பல்லாம் என் மனசு முழுக்க பயங்கர போராட்டம். ஆனா நீ ஒரு நிமிஷத்துல எல்லாத்தையும் மறக்கடுச்சிட்ட…
கொஞ்ச நேரம் முன்னாடி சந்தோஷமா இருக்கியான்னு கேட்டியே…
நான் சந்தோஷமாவே இல்லடி… உன் நினைவாவே இருக்கேன். என்னால முடியல சரயு… என் கூட வந்துடுடி… எனக்குக் கல்யாணம் ஆனது தெரிஞ்சு என் வாழ்க்கைல இனிமே குறிக்கிடக் கூடாதுன்னு தானே அவசர அவசரமா உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சு கிட்ட…”
ஆமாமெனெ தலையாட்டினாள் சரயு.
“உன் கூட வாழணும்னு வந்தவனுக்கு புருஷன் பிள்ளை குட்டியோட நீ இருக்குறதப் பார்த்து சந்தோஷப்படுறதா இல்லை என்னோட துரதிர்ஷ்டத்தை நெனச்சு கவலைப்படுறதான்னு தெரியல. நான் இந்த ஊர்ல இனிமே இருந்தா உன்னைப் பாக்காம இருக்க முடியாது. என்னால உன் குடும்ப வாழ்க்கைல ப்ராப்ளம் வரக்கூடாது. நான் என்ன செய்ய? ஒரே குழப்பமா இருக்கு சரயு. என் பிரச்சனையை சால்வ் பண்ண உதவி பண்ணேன்.
உன்னை மறக்குறதையும், மறுகல்யாணத்தையும் தவிர வேற நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்”
கண் இமைக்காமல் அவனை நெடு நேரம் பார்த்திருந்தாள். கைகள் அவனது கண்களின் ஈரத்தை ஸ்கார்பில் துடைத்து விட்டன. கலைந்திருந்த தலையை விரல்கள் சீப்பாக மாறி சீவின. சுகமாய் அவளிடம் முகத்தைத் தந்திருந்தான் ஜிஷ்ணு. “பங்காரம் கடைசியா ஒண்ணு… மன்னிச்சுக்கோரா”
“எதுக்கு”
“நான் பண்ண துரோகத்துக்கு… என்னால, என் வீட்டால உன் மனசில ஏற்பட்ட காயத்துக்கு…”
அவனை விளங்காத பார்வை பார்த்தவள், “அடுத்தவங்க செய்ததுக்கு நீ மன்னிப்புக் கேட்கணும்னு அவசியமில்லை. என்னைப் பொறுத்தவரை, நீ என்ன தப்பு செஞ்சாலும் அது என் மனசுல நிக்காது. என் மனசு உன்னால காயப்படாது. அது என்னோட பதினேழாவது வயசுலையே உன்கிட்ட கொடுத்துட்டேன். இப்ப அது பாதுகாப்பா உன்கிட்டத்தான் இருக்கு”
அவளது கைகளைக் கண்களில் வைத்துக் கொண்டவன் அப்படியே தனது இதயத்தில் வைத்துக் கொண்டான். “அதை என் உயிரை விட பத்திரமா பொத்தி வச்சிருக்கேன். உன்கிட்ட தந்த என்னோட இதயம் என்னாச்சு பங்காரம்… இப்ப உன் காலடில இன்னொரு இதயம் வேற இருக்குதே…”
“ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி இந்தக் கேள்வியை என்கிட்டே கேட்டிருந்தேன்னா பொய்யா ஒரு பதில் சொல்லிருப்பேன். இப்ப உண்மையை சொல்லுறேன் விஷ்ணு.
உன் நினைப்பு என் சுவாசமா கலந்திருக்கு. ஆனா என் கடமைகள் என்னை இந்த இடத்துல பைண்ட் பண்ணி வச்சிருக்கு. எங்கம்மா செத்ததிலிருந்து எனக்கு சாமி மேல வெறுப்பு. சென்னைல என் பொறந்தநாளைக்கு கோவிலுக்கு வந்ததுகூட சேர்மக்கனியாலதான். ஆனா இப்பல்லாம் நாள் தவறாம சாமி கும்முடுறேன். எனக்காக இல்ல உனக்காக.
தினமும் சுவாமி கிட்ட என்ன வேண்டிப்பேன்னு தெரியுமா? கடவுளே… அபியை கவனிச்சுக்க ராம் இருக்கான். என் விஷ்ணுவை கவனிச்சுக்க யாருமே இல்லை. அவனை நீ தான் பாத்துக்கணும். உன்னால கவனிக்க முடியாதுன்னா என் உயிரை எடுத்துக்கோ. நான் பறந்து அவன்கிட்ட போயிடுவேன். காத்தா மாறி அவன் முடியைக் கலைப்பேன். மழையா மாறி அவன் உடம்பை நனைப்பேன். அவன் கண்ணுல இருந்து ஒரு துளி கண்ணீரைக் கூட சிந்த விடமாட்டேன். அவனைக் கஷ்டப்படுத்துறவங்களை பேயா மாறி தண்டிப்பேன். சுவாசமா மாறி அவன் இதயம் பங்காரம் பங்காரம்ன்னு துடிக்கிறதைக் கேட்டு சந்தோஷப் படுவேன்”
கண்களில் அருவி பெருக அவளது மார்பில் சாய்ந்து கொண்டான்.
“நம்ம ரெண்டு பேரும் எவ்வளவு லவ் பண்ணுறோம். அப்பறம் ஏன்ரா ஒண்ணு சேரல. நம்ம லைப்ல மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது… என்னால தாங்க முடியலடி”
அவனது முதுகை வருடியவள்,
“உணர்ச்சி வசப்படாதேடா… நேத்து தூங்குனியா விஷ்ணு?”
“இல்லை… நீ மறுபடியும் கோச்சுகிட்டு போயிட்டதை நெனச்சு கண்ணே மூடல”
“இப்ப தூங்கு வா…” புல்வெளியில் அமர்ந்து அருகிலிருந்து மரத்தில் சாய்ந்து கொண்டு தனது மடியினைக் காட்டினாள்.
“நிஜம்மா உன் மடில படுத்துக்கட்டுமா…?” தயங்கியபடியே கேட்டான்.
“கேள்வி கேக்காம படுத்துத் தூங்குடா” – காளியம்மனைப் போல் கண்களை உருட்டி மிரட்டினாள் சரயு.
“நான் தூங்கினவுடனே என்னை விட்டுட்டு போயிடக்கூடாது” என்றவனின் கேள்வியில் கலங்கிய மனதை வெளிக்காட்டாது,
“சத்தியமா போகமாட்டேன் தூங்கு” என்றாள்.
மடியில் படுத்தவுடன் உலகத்தில் உள்ள நிம்மதியெல்லாம் குத்தகை எடுத்துக் கொண்டதைப் போல உணர்ந்தான். அவள் முகத்தை பார்த்துக் கொண்டு அவளுக்கே உரித்தான வாசனையை அனுபவித்து மகிழ்ந்தவனின் தலையை மென்மையாகக் கோதியது சரயுவின் தளிர் விரல்கள். சில நிமிடங்களில் தனது நெற்றியில் பட்டுப் போன்ற இதழ்களின் மென்மையை உணர்ந்து திடுக்கிட்டு விழித்தவன்,
“ஏன்டி நா பங்காரம் நாக்கு முத்திச்சிந்தா?” (என்னது என் பங்காரம் எனக்கு முத்தம் தந்தாளா?) ஆச்சரியம் தாங்க முடியாமல் கிசுகிசுப்பாய் கேட்டான்.
பதிலாக மேலும் ஒன்று இன்னும் அழுத்தமாய், சூடாய் கிடைத்தது.
“வேண்டாம்… உனக்குக் கல்யாணமாயிடுச்சு… ஒரு பாப்பா வேற இருக்கு. உன் மனசை நான் கலைக்கக் கூடாது. அது பாவம்” தீனமாய் ஒலித்தது ஜிஷ்ணுவின் குரல்.
“ஐ க்னோ மை லிமிட்ஸ்… இப்ப தூங்கப்போறியா இல்லையா?” சரயுவின் அதட்டல் குரலில் கண்ணை மூடியவன் இரவு முழுவதும் பாடாய் படுத்திய மன அழுத்தம் குறைந்து நிமிடத்தில் உறங்கிப் போனான்.
“விஷ்ணு நீ மனசால எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க… உலகம் பூரா என்னைத் தேடி அலைஞ்சியா… அந்த அளவுக்கு நான் உனக்கு என்னடா செஞ்சேன்… ஏண்டா என்மேல உனக்கு இப்படி ஒரு கிறுக்கு…?” அவனது கைகளோடு தனது கையைக் கோர்த்துக் கொண்டவள் இமைக்க மறந்து அவனது முகத்தையே பார்த்தாள்.
நிமிடங்கள் கரைந்து மணிகளானது இருந்தும் ஜிஷ்ணுவின் தூக்கம் கலையவில்லை. அவனது ஆழ்ந்த தூக்கத்தைக் கலைக்க மனமில்லாமல் ஐந்து மணிவாக்கில் அலாரத்தை அணைத்துவிட்டு, குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்பினாள் சரயு.
“மன்னிச்சுக்கோ ராம்… ஏர்போர்ட்டுக்கு உங்களைக் கூப்பிட வர முடியல. மனசில இருக்குறதை எல்லாம் கொட்டிட்டு விஷ்ணு பார்க்ல என் மடில படுத்துத் தூங்கிட்டு இருக்கான்”
அரைமணியில் பதில் வந்தது. “நாங்க பத்திரமா வந்துட்டோம். நான் டாக்ஸில வீட்டுக்குப் போயிடுறேன். நீ விஷ்ணு எந்திரிச்சவுடனே அவனைக் கூட்டிட்டு ராத்திரி சாப்பாட்டுக்கு வந்து சேரு” என்றது.
இவன் என்ன வீட்டுக்கு வர சொல்லுறான் என்று சரயு திகைத்து யோசிக்க, சில நிமிடங்களில் மற்றொரு செய்தி ராமிடமிருந்து வந்தது. ‘அமெரிக்காவில் வேலை பார்க்கும் என் நண்பனின் உதவியால் டாக்டர் ஜமுனா ஜேசனுடன் காலையில் ஊருக்குக் கிளம்பும் முன் பேசினேன்’ என்றது.