Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 23

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 23

டிக் டிக் டிக் என்ற கடிகார முள் நகரும் ஓசையைத் தவிர அந்த அறையில் வேறொன்றும் சத்தமில்லை. ஏஸியை நிறுத்தியிருந்தான் ராம். சற்று உற்று கவனித்தால் சிண்டு மூச்சு விடும் ஒலி கேட்டது. இவனாச்சும் நல்லாத் தூங்கட்டும் என்று ராம் நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவனது உடை மெதுவாய் ஈரமானது.

“ஆரம்பிச்சுட்டியா” அலுத்துக் கொண்டவாறே,

“சிண்டு எந்திரி, பாத்ரூம் போயிட்டு வரலாம்” என்று அதட்டியபடி பாத்ரூமுக்குத் தூக்கிக் கொண்டு ஓடினான். அங்கு வேலையை முடித்ததும்தான் குட்டிப் பையனுக்கு முழு விழிப்புத் தட்டியது.

“ஏண்டா… தூங்குறதுக்கு முன்னாடி பாத்ரூம் போகணும்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்” கடிந்துக் கொண்ட ராம், காய்ந்த துண்டில் நன்றாகத் துடைத்துவிட்டுப் பையிலிருந்து வேறு உடையை அபிக்கு மாற்றி விட்டான். ஈரமான அபியின் உடைகளையும், படுக்கை விரிப்பைத் துவைக்கப் போட்டு விட்டுப் புது படுக்கையை விரித்தான். தரையைக் கையோடு சுத்தம் செய்துவிட்டுத் தனக்கு மாற்றுடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குப் புகுந்தான்.

ராம் சுத்தம் செய்து, உடை மாற்றி வரும் வரையிலும் தூங்காமல் விழித்திருந்த அபியைக் கண்டதும் அவன் மனம் இளகியது.

“சாரிப்பா” குட்டிக் கையால் ராமின் காலைக் கட்டிக் கொண்டான் அபி.

“நோ வொர்ரிஸ் டியர்… நீ சின்னதா இருந்தப்ப உனக்கு டயாப்பர் கூடாதுன்னு உன் பாட்டி ஆர்டர் போட்டுடாங்க. சோ ப்ரீபேர்ட்டா இருந்த. இதுவரைக்கும் நீ என்மேல ஒரு ஆயிரம் தடவையாவது ஈரம் பண்ணிருப்ப. இன்னைக்கு நீ செஞ்சது அவ்வளவு பெரிய தப்பில்லை. கவலைப் படாம தூங்கு” என்றான்.

ராம் சொல்வது நன்றாகப் புரிந்தமாதிரி “ஸ்வீட்ப்பா” முத்தமிட்டு ராமைக் கட்டிக் கொண்டான் அபிமன்யு என்று நாமகரணம் சூட்டப்பட்ட சிண்டு. நிர்மலமாகத் தூங்கும் சிண்டுவைப் பார்த்த போது சரயுதான் கண்ணில் தோன்றினாள். அப்படியே குட்டி சரயுதான் இவன். ஆனால் அவளைப் போல் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு அலைவதில்லை. வெளியே அமைதியாயிருப்பான். ராமும் சிண்டுவும் அவர்களது குறும்புகளையும் ஆர்ப்பாட்டங்களையும் சரயுவிடமும் பொற்கொடியிடமும் மட்டுமே காண்பிப்பார்கள்.

“சிண்டு உங்களை மாதிரியே அமைதியா இருக்கான் தம்பி” காலையில் சரசு சொன்னபோது சிரித்துக் கொண்டான்.

ராமுக்குத்தான் தெரியும் சிண்டுவுக்கும் சரயுவுக்கும் அடிப்படை குணம் ஒன்றுதான். வெளிப்படுத்தும் முறைதான் வேறு. இருவரும் எந்த சூழ்நிலையிலும் சமாளித்துக் கொள்வார்கள். தங்களது துன்பத்தை வெளிக்காட்டும் பழக்கமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இருவருக்கும் ராமென்றால் உயிர். அவன் வார்த்தைகளைத் தட்ட மாட்டார்கள். அவன் அவர்கள் செய்யும் மடத்தனமான செயல்களுக்காகக் கடிந்தாலும் தண்டித்தாலும் அதை அப்படியே மறந்துவிடுவார்கள்.

அதுவும் சரயுவை ஒரு தடவைக் கோவத்தில் அடித்துக் கூட இருக்கிறான். மாறி மாறி அறைந்ததில் அவள் கன்னத்தில் கைத்தடம் பட்டுக் கன்றிச் சிவந்திருந்தது. அறைக்கு வெளியே சத்தம் கேட்டுப் பொற்கொடி ஓடி வந்துத் தடுத்தார்.

“அறிவு கெட்டவனே… அவளை ஏண்டா இப்படிப் போட்டு அடிக்கிற? நீ மனுஷனா மிருகமா?” என்றபடி அவனைத் தள்ளிவிட்டார். அப்போதும் பிடிமானமின்றிக் கீழே விழ இருந்தவனை சரயுதான் ஓடி வந்துத் தாங்கிக் கொண்டாள்.

“ராமை ஏன்த்த தள்ளி விட்டிங்க… ” என்றவளைப் பார்த்து முறைத்தார்.

“ஏண்டி மாட்ட அடிக்குற மாதிரி அடிக்குறான்… வாயைத் திறந்துக் கத்த மாட்டியா? சுகம்மா கன்னத்தைக் காட்டிகிட்டு நிக்குற?” என்று அவளுக்கும் திட்டு விழுந்தது.

“நான் தப்பு பண்ணேன் அத்தை. அதுனால கோவத்துல அடிச்சான், நான் வாங்கிகிட்டேன். தப்புப் பண்ணவங்க தண்டனையை அனுபவிச்சுத்தானே ஆகணும்”

அவளது நியாயத்தைக் கேட்டுத் தலையில் கையை வைத்துக் கொண்டார்.

“நீ தண்டனையை அனுபவிச்ச வரைக்கும் போதும்டி, இட்டிலி எடுத்து வச்சிருக்கேன் போய் சாப்பிடு…” சரயுவிடம் சொன்னவர் ராமையும் ஒரு பிடி பிடித்தார்.

 “டேய் அவ தப்பு பண்ணா, உடனே கை நீட்டுவியா? அவளுக்குக் கேக்குறதுக்கு அம்மா அப்பா இல்லைன்னு நெனச்சியா? நானிருக்கேண்டா… அவ மேல இன்னும் ஒரு அடிபட்டது, உன்னை வீட்டை விட்டு வெளிய அனுப்பிடுவேன்”

ரயுவை வேதனைப் படுத்திய மற்றொரு தருணத்தையும் வலியோடு நினைவு கூர்ந்தான்.

“சரயு… நான் சொன்னா கேப்பல்ல”

“சொல்லு…”

“வந்து… வந்து… இந்த மாத்திரையை சாப்பிடுறியா?”

மறுபேச்சு பேசாமல் வாங்கி விழுங்கினாள்.

“எதுக்குன்னு கேக்க மாட்டியா?” உறுத்தலுடன் கேட்டான்.

“எதுக்கு…”

“சரயு… நான் என்ன செஞ்சாலும் உன் நல்லதை நெனச்சுத்தான்னு நம்புறியா?”

“ரொம்ப பில்ட் அப் பண்ணாம சொல்லு”

மனதை திடப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தான். “ஸ்காலர்ஷிப்லயும், வெளில சின்ன சின்ன வேலைகளை செஞ்சும்தான் மருத்துவம் படிச்சேன். எனக்கு இப்பத்தான் ஒரு கிராமத்துல வேலை கிடைச்சிருக்கு… உனக்கு வேலை கிடைச்சிருக்குறதோ மியூனிக்ல… உன்னால இப்ப வேலையை விட முடியாத சூழ்நிலை. அதனால நான் எப்படியாவது நீ இருக்குற இடத்துக்கு வேலை தேடிட்டு வந்துடுறேன். ஆனா அதுக்குள்ள அன்னைக்கு நடந்ததுல நீ கன்சீவ் ஆயிட்டேன்னா… அதனாலதான் கருத்தடை மாத்திரை தந்தேன்”

அமைதியாய் சுவரை வெறித்தவளிடம், “எனக்கு வேற வழி தெரியலடி… மன்னிச்சுடு” என்றான்.

கண்களை மூடித் திறந்தாள். “நான் குளிச்சுட்டுக் கிளம்புறேன். நீ எனக்கு உல்லன்சாக்ஸ் வாங்கனும்னு சொன்னியே. போய் வாங்கிட்டு வந்துடு” என்று குளியலறைக்குள் புகுந்தாள்.

அப்பாடா ஒரு வழியாக சரயுவை சம்மதிக்க வைத்தாகிவிட்டது என்று வெளியே கிளம்பினான். இருவரும் பிளைட் ஏறி ஊருக்கு வந்து சேர்ந்தார்கள். அவரவர் ஊரில் வேலைக்கு சென்றனர். வாரம் ஒரு முறை பார்த்துக் கொண்டனர். அவள் ஷேர்ட் வீட்டில் இருந்ததால், பொது இடங்களில் மட்டுமே இருவரின் சந்திப்பும் நிகழ்ந்தது. அதன்பின் இரண்டு வாரங்கள் குளிர் காரணத்தாலும், மூன்று வாரங்கள் ராமிற்கு வேலைப் பளுவாலும் வர முடியாது போயிற்று. அதை அடுத்து வந்த வாரத்தில் சொன்னதைப் போலவே மியூனிக் மருத்தவமனையில் ஒரு காலியிடம் வர, எமெர்ஜென்சி பார்க்க வேண்டும், ராத்திரி ஷிப்ட்டில்தான் தற்போது வேலை இருக்கிறது போன்ற கடினமான விதிகளைத் தலையசைத்து ஏற்றுக் கொண்டான். எல்லாம் சரயுவின் அருகில் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக.

‘வேற ஊருல இருக்கிறத விட குறைந்தபட்சம் கூப்பிடு தொலைவிலேயே இருப்பது நல்லதுதானே. ஏற்கனவே ரொம்ப நாள் பிரிஞ்சிருந்தாச்சு. இந்த விஷயத்த சொல்லி அவ சிரிக்கிறதைப் பாக்கணும்’ மகிழ்ச்சியாக இனிப்பு வாங்கிக் கொண்டு சரயுவின் அலுவலகம் சென்றான்.

அலுவலகத்திலிருந்து வெளியே வந்த சரயு, மெதுவாக ஆடி அசைந்து பஸ் நிலையத்துக்குச் சென்றாள்.

‘வாரதப் பாரு… ஆடி அசைஞ்சு…’ கிண்டலாகப் பார்த்திருந்தவனுக்கு பொறி தட்டியது. அவனறிந்த சரயுவுக்குக் கால் தரையிலேயே நிற்காது. அவள் முகத்திலிருந்து பார்வையை வயிற்றுக்குக் கொண்டு போனான். மேடிட ஆரம்பித்திருந்தது. ‘சட்… ஏமாத்திட்டா’ கோவம் வந்தாலும் குழந்தையை நல்லவேளை அழிக்கவில்லை என்ற சந்தோஷமும் எட்டிப் பார்த்தது. அவனே வலியுடன்தான் அன்று மாத்திரையை வாங்கித் தந்திருந்தான். வருத்தம் மறைந்து சிரிப்பு ஒட்டிக் கொண்டது.

“வாடி பொய்க்கோழி…” எதிரே நின்று தனது இடுப்பில் கையை வைத்தபடியே வரவேற்றான்.

சிரிப்போடு, “நீ வந்துட்டியா…” என்றவளைத் தன்னருகே இழுத்து வாயில் இனிப்பைத் திணித்தான்.

“யார்கிட்டயும் சொல்லாம ரகசியமா வச்சுருந்தியாக்கும்… ரொம்ப தைரியம்தான் உனக்கு… இதெல்லாம் மறைக்கக் கூடிய விஷயமா? அதுவும் டாக்டர்கிட்ட… எங்கிருந்துடி உனக்கு இந்த ஏமாத்து புத்தி வந்தது… எல்லாம் சகவாச தோஷம்”

ராம் பேசியதை சரயு கவனித்தால் தானே…

“ஏன் ஒன்னற மாசமா என்னைப் பாக்க வரல… எனக்கு ஒரே வாந்தியா வருது… சாப்பாடே சாப்பிட முடியல…”

“அதுதான் இளைச்சுட்டியா? பாரு கண்ணு உள்ள போயி, கன்னத்துல கழுத்துல எல்லாம் எலும்பு துருத்திட்டு… நான் வந்துட்டேன்ல இனிமே சரி பண்ணிடலாம். ஆமாம் அன்னைக்கு மாத்திரையை என்னடி செஞ்ச…”

“பாத்ரூம்ல போய் வாந்தி எடுத்துட்டேன்” கண்ணடித்தாள் சரயு.

“உனக்குக் குழந்தை மேல அவ்வளவு ஆசையா… உனக்கு வேணும்னு கொஞ்சம் ஸ்ட்ராங்கா சொல்லிருந்தா நான் மறுக்கவா போறேன்… சரி பெத்துப்போம்…” கனிவுடன் சொன்னவன் அடுத்த நிமிடம் அவளிடம் பாய்ந்தான்.

“வயத்துல பாப்பா இருக்குறதை ஏண்டி எருமை முன்னாடியே சொல்லல? நான் என்ன அப்படி ஒரு கொடுமைக்காரனா? குழந்தையை ஏதாவது செஞ்சுடுவேனா? அன்னைக்கு மாத்திரையைத் தந்துட்டு நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். வெளிய போய் அழுதேன் தெரியுமா” திட்டித் தீர்த்தான்.

“ சரி, உனக்கு வைட்டமின் மாத்திரை வாங்கணும். செக் அப் பண்ணனும். முதல்ல நம்ம ரெண்டு பேரும் தங்க ஒரு வீடு பார்க்கலாம்”

“ஹையா, நீ இங்கயே வரப்போறயா… அப்ப உன் வேலை?”

“நீ இப்படி இருக்குறப்ப உன்னை கவனிச்சுக்குறதை விட வேலையாவது, வெங்காயமாவது… போங்கடா நீங்களும் உங்க வேலையும்னு தூக்கி எறிஞ்சுட்டு வந்துடுறேன்” சிரித்தான் ராம்.

“ஒரே நாள்ல இப்படி ஒரு மேஜிக்கா… என்னால நம்பவே முடியலடி… நீயே ஒரு குழந்தை மாதிரி… இப்ப உன் வயத்துக்குள்ள ஒரு குழந்தையா?” மூக்கைப் பிடித்து ஆட்டினான்.

“சரயு… இனிமே முரட்டுத்தனமா நடக்கக்கூடாது. குழந்தையை என் கைல பெத்துக் கொடுத்துட்டு உன் குரங்கு சேட்டையை மறுபடியும் ஆரம்பி. அதுவரை மூச்…

நாலு மாசம் முடிஞ்சிருக்கும்ல… இனிமே ஸ்கான் எடுத்துப் பாக்கணும்… ஒரு கைனாகாலஜிஸ்ட்கிட்ட அப்பாய்ண்மென்ட் வாங்குறேன்…” பஸ்ஸில் அவள் கையைப் பற்றியபடி மெதுவாகப் பேசிக் கொண்டே வந்தான்.

அதன்பின் இரண்டு குழந்தைகளும் சேர்ந்து பிறக்கப் போகும் புது குழந்தைக்கு வேண்டியதைக் கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்தன. டெலிவரிக்கு தனது மருத்துவமனையிலேயே சரயுவை சேர்த்தவன்… அவளது ஒவ்வொரு வலிக்கும் மனதில் அழுதான்.

“என்னடி இப்படி கஷ்டப்படுற… பேசாம அன்னைக்கு மருந்தைத் தின்னுத் தொலைச்சிருக்கலாம்” என்று எரிச்சல் பட்டபோதுதான் அழகிய மின்னலாய் மண்ணுலகுக்கு வந்தான் அபிமன்யு. மண்ணில் விழும் முன் அவனைக் கையில் ஏந்திய ராம். திகைப்புடன் பார்த்தான்.

“ஹே உன்னை அப்படியே செராக்ஸ் போட்டாப்புல இருக்கான். நீ பொறந்தப்ப இப்படித்தான் இருந்தியா… இவ்வளவு அழகா, மூக்கும் முழியுமா…” என்ற ராமின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சரயு களைப்பினால் கண்மூட, அபி தனது கண்களைத் திறந்து ராமைப் பார்த்தான்.

“நீதானே என்னை வேண்டாம்னு சொன்ன” என்று அவன் தன்னைப் பார்த்துக் குற்றம் சாட்டுவதைப் போலவே தோன்றியது ராமுக்கு.

“குட்டிக்கண்ணா… சரயுன்னா யார் தெரியுமா… அயோத்தில ஓடின புண்ணிய நதி, ராமர் பொறந்தது இந்த நதிக்கரையோரத்துலதான், அதே மாதிரி சரயு நதில இறங்கித்தான் தன்னோட அவதார நோக்கத்தை முடிச்சுக்கிட்டார். ரகுநந்தனோட வாழ்க்கை முழுசும் சரயு இருந்தா. அதுமாதிரி என்னோட வாழ்க்கையும் என் சரயுவை சுத்தித்தான்…

குழந்தை உருவாயிட்டா பக்கத்துல நானில்லாம உங்கம்மா கஷ்டப்படுவாளேன்னுதான் என் எண்ணம் முழுசும் இருந்தது… அதுக்காக உன்னைப் போய் அழிக்க நினைச்சேனே… நான் பாவிடா… என்னை மன்னிச்சுடுடா ராசாப்பயலே” என்று அபியின் பிஞ்சுப் பாதத்துக்கு அடியில் தனது தலையை வைத்துக் கொண்டான்.

“பாவமன்னிப்பு கேக்குறியா?” என்றாள் சரயு சிரித்தபடி.

“ஆமாம். எனக்கும் அவனுக்கும் ஆயிரமிருக்கும். அதுல நீ தலையிடாத. இனிமே எனக்கு நீ வேணாம் போடி… சிண்டு மட்டும் போதும்”

அன்று அபிமன்யுவை கைகளில் தாங்கியவன் இன்றும் நெஞ்சத்தில் தாங்குகிறான்.

திங்க் ஆப் டெவில்… சரயுவிடமிருந்து அழைப்பு வந்தது.

“சொல்லு… உன்னைப் பத்தித்தான் நெனச்சுட்டிருந்தேன்… நீ என்னை ரொம்ப மிஸ் பண்ணுவ… என் அருமையை உணருவன்னு நெனச்சேன். பாத்தா ஊர் சுத்திகிட்டு இருக்க.. பிஎம்டபிள்யூ மியூசியத்துல நல்லா என்ஜாய் பண்ணியா? என் மேல இருக்குற கோவம் கொஞ்சமாச்சும் குறைஞ்சதா?” ராமிடமிருந்து அடுக்கடுக்காய் கேள்விகள் பிறந்தன.

“உன் அருமையை உணர்த்தத் தப்பான வழியைத் தேர்ந்தெடுத்திருக்க… உருகி உருகி சோககீதம் வாசிச்சாத்தான் நான் வருத்தப்படுறேன்னு அர்த்தமா?

“சரி இந்த நடுராத்திரில தூங்காம என்ன பண்ணுற?”

“சாரி ராம்… நீ எவ்வளவு சரியா எல்லாரையும் எடை போடுற? எனக்கு வாழ்க்கைல இவ்வளவு அடிபட்டும் புத்தி வரமாட்டேங்குது பாரேன்” சரயுவின் குரலில் வருத்தம் தெரிந்தது.

“என்னடி ஆச்சு…?” என்றவன் “விஷ்ணு…” என்றான் கேள்வியாய்.

 “ம்ம்…” என்று மறுமுனையில் பதில் வந்தது.

“என்ன நடந்தது?” ராமின் குரல் கடினமாகியது.

சரயுவிடமிருந்து வார்த்தைகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்தன. அவள் சொல்லி முடிக்கும்வரை பொறுமையாயிருந்தான்.

“தீயோட விளையாடாதன்னு ஆயிரம் தடவை சொன்னேன். கேட்டியா?” என்றான் ஒரே வரியில்.

“விஷ்ணு… விஷ்ணு…” சரயுவுக்குத் திக்கியது.

“நான் ஒரு டாக்டர்… மனிதர்களோட உடம்பை மட்டுமில்லாமல் மனசையும் சேர்த்துப் படிக்குறப் பக்குவம் எனக்கிருக்கு. உன் மனசு எனக்குப் புரியுது… ரொம்பக் கஷ்டம்தான்… அந்த ரெண்டும் கெட்டான் வயசில விஷ்ணு காமிச்ச அன்பும், அக்கறையும் உன் மனசைக் கவர்ந்திருக்கலாம்… இன்னமும் அவன் மேல உனக்கு ஒரு சாப்ட் கார்னர் இருக்கலாம். நீ இந்த அளவுக்கு அவனை அனுமதிச்சதுக்கு அதுவும் ஒரு காரணமா இருக்கலாம். இது எதுவுமே தப்பில்லை. ஆனால் இப்ப நீங்க ரெண்டு பேரும் தனி மனிதர்களில்லை. அதுவும் இன்னொருத்தனோட மனைவின்னும், மூணு வயசுக் குழந்தைக்கு அம்மான்னும் நீ தெளிவா சொல்லியும் அது அவன் மனசில் பதியல. பத்து வயசில பொண்ணு இருக்குற அவனுக்கு நிஜத்தோட நிதர்சனம் புரியணும். நீ புரிய வைக்கணும்”

“அதெல்லாம் அவனுக்குப் புரியும்னு நினைக்கிறேன். சந்தனாவை எப்படிப் பாத்துக்குறான் தெரியுமா? கதை சொல்லுறதும், ஊட்டி விடுறதும்… அவ்வளவு அன்பா இருக்கான். விஷ்ணு ரொம்ப நல்லவன் ராம்… ஆனால் ஏன் இப்படி நடந்துகிட்டான்னு எனக்குத் தெரியல” வருந்தினாள்.

“அவன் மேல உனக்குக் கோவம் வரலையா சரயு… அந்த சின்ன வயசுல உன் மனசுல ஆசையை வளர்த்துட்டு, வேற ஒருத்தியக் கல்யாணம் பண்ணிட்டு… பச்… என்ன ஒரு நம்பிக்கை துரோகம்? எனக்கே கோவம் வருதுடி”

“ராம் இது வரை உன்கிட்ட நான் பொய் சொன்னதில்லை. எதையும் மறைச்சதில்லை. இப்பயும் உண்மையை சொல்லுறேன். அவனைப் பாக்குறப்ப எனக்கு அவன் வரேன்னு சொன்னது, மாயமா மறைஞ்சது, வேற கல்யாணம் பண்ணிகிட்டது இது எதுவுமே நினைவுக்கு வரமாட்டேங்குது… விஷ்ணு என் மேல காமிச்ச அன்பு, பாஸ்கட்பால் டோர்னமென்ட் போது தட்டுல சாப்பாடு வாங்கிட்டு நின்னது, எனக்குப் பசிக்குதுன்னு தெரிஞ்சதும் ஊட்டி விட்டது, என்னைக் கஷ்டப்படுத்தினவங்களைத் துவம்சம் செஞ்சது, என் குரல் கேட்டதும் ஓடி வந்து காலேஜ்ல சேர்த்தது… இதெல்லாம்தாண்டா நினைவுக்கு வருது”

“அவனுக்கு கேர்ள் பிரெண்ட்ஸ் உண்டு. அவனை நானே பொண்ணுங்களோட பார்த்திருக்கேன். இந்த ட்ரிப்ல சந்தனாவும் வந்திருக்குறதால அவனால ஊர் சுத்த முடியல. அதனாலத்தான் என்னைப் பார்த்தவுடனே கொஞ்சம் தடுமாறிட்டான் போலிருக்கு. நானே கொஞ்சம் நடுத்தர வயசில, ஒரு பீப்பாய் மாதிரி, அடையாளம் கண்டுபிடிக்கவே முடியாதமாதிரி இருந்திருந்தா கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணிருப்பான்னு நினைக்கிறேன்” பொய் சொல்கிறோம் என்று தெரிந்துதானிருந்தது. இருந்தும் கிண்டலாய் சொன்னாள்.

“நீ பாக்கவே சகிக்காத அவலட்சணமா இருந்தாலும், எண்பது வயசு கிழவியாயிருந்தாலும், மரணப் படுக்கையில் படுத்திருந்தாலும் அவன் உன்னை அடையாளம். கண்டுபிடிச்சிருப்பான்… அப்பயும் இதே மாதிரிதான் உன்கிட்ட நடந்திருப்பான்.

என் கணிப்பு சரின்னா… இவ்வளவு நாளா அவன் உன்னை சல்லடை போட்டுத் தேடியிருக்கான். உலகம் முழுசும் தேடி உன்னைக் கண்டுபிடிச்சிருக்கான்… இல்லேன்னா ஏன் மியூனிக்ல ஹோட்டல் பிஸினெஸ் ஆரம்பிக்கணும்? ஊருலகத்துல வேற இடமா இல்ல… இனிமேல்தான் நாம கவனமா இருக்கணும் டியர்”

“என்ன சொல்லுற…” நடுங்கியது சரயுவின் குரல்.

“ம்ம்… அவன் உன்னைப் பார்த்தது தற்செயல் இல்லை. உன்னைத் தேடியே வந்திருக்கான். ஆனால் அவன் பொண்ணோட உன்னைப் பார்த்தது வேணும்னா ஒரு இனிய விபத்தா அவனுக்கிருக்கும். உன்னைப் பார்த்தது கிடையாது.

நான் நினைக்கிறேன்… அவன் உன்கிட்ட என்னமோ எதிர்பார்க்குறான். ஜமுனாவைக் கல்யாணம் செய்துகிட்டாலும் அவன் மனசை நீ ரொம்ப பாதிச்சிருக்க… நீ என்கிட்டே சொன்ன விஷயங்களை வச்சுப் பார்க்கும்போது அவன் மனசு உன் மேல இருந்த அன்பைப் புதைச்சுட்டு என்ன காரணத்தாலயோ வெளிவேஷம் போட்டிருந்திருக்கு. உன் கூட இருந்தப்ப அழுத்தம் அதிகமாகி மூச்சு முட்டி வெளியே வெடிச்சுடுச்சு. ஜிஷ்ணுவோட மனசுல புதைஞ்சிருந்த விஷ்ணு அசுர வேகத்துல வெளிய வந்துட்டான்”

“அதனால” சரயுவின் குரல் பயத்துடன் வந்தது.

“ஜிஷ்ணு இதுவரை உனக்கும் அவனுக்கும் இடையேயிருந்த கண்ணுக்குத் தெரியாத லக்ஷ்மணக் கோட்டை மதிச்சு நடந்தான். அவனை மிதிச்சுத் தள்ளிட்டு வெளிய வந்திருக்குற விஷ்ணுவுக்கும் அதே மனநிலைமை இருக்குமான்னு நமக்குத் தெரியாது. சோ அவன் நினைச்சதை அடையுற வரைக்கும் உன்னை அவன் விட மாட்டான்”

“அவனால என்னை என்ன செய்ய முடியும்னு நினைக்கிற?” சுதாரித்துக் கேட்டாள் சரயு.

“எனக்கு அந்த பயமெல்லாம் இல்லடி… அவன் உனக்கு மனசாலக் கூடக் கெடுதல் பண்ண மாட்டான். உன் மேல அந்த அளவுக்கு அன்பு வச்சிருக்கான். என் பயமெல்லாம் இந்தப் போராட்டத்தில் நீ அவனைக் காயப் படுத்திடக்கூடாதே… அந்த பயம்தான்… அழகான சித்ராங்கதையே… தயவுசெய்து உன் அடாவடித்தனத்தை மூட்டை கட்டி வச்சுட்டு… விஷ்ணு விஷயத்தை மென்மையா அணுகு. அவன் மறுபடியும் உன்கிட்ட பேச முயற்சி செய்வான். அப்ப காது கொடுத்து அவன் பேசுறதைக் கேளு. நான் ரெக்கையைக் கடன் வாங்கிட்டுப் பறந்தாவது உன்னைப் பாக்க வரேன். அதுவரை நூல்கண்டை மேலயும் சிக்கலாகிடாம பாத்துக்கோ”

அலைப்பேசியை அணைத்த சரயுவின் காதில் அன்றொரு நாள் ஜிஷ்ணு சொன்னது காதில் எதிரொலித்தது.

“அட்யு ஜிஷ்ணு”.

“நா பங்காரம்… நோ ‘அட்யு’ ஜஸ்ட் ‘ஆ ரெய்வோர்’ நீ உலகத்தோட எந்த மூலைக்குப் போனாலும் உன்னை விடமாட்டேன். தேடி வருவேன்”

‘திருடன்… ஏதோ உணர்ச்சி வேகத்துல சொன்னான்னு நெனச்சேன். இவ்வளவு சீரியஸா இருந்திருப்பான்னு கற்பனை கூட பண்ணலையே’

வரவேற்பரையில் மாட்டியிருந்த சித்ராங்கதா ஓவியத்தின் மேல் சாய்ந்து நின்றவள் முகம் வேதனையால் தவித்தது.

காத்திருந்தேனே விஷ்ணு… நீ வந்துடுவேன்னு பைத்தியம் மாதிரி காத்திருந்தேனே… அப்பல்லாம் வராம… உன்னைப் பாக்கவே கூடாதுன்னு சங்கல்பம் எடுத்துட்டு வாழுறப்ப வந்துத் தொல்லை பண்ணுறியே…”

ஐந்து நிமிடத்தில் மனதினை சரிபடுத்திக் கொண்டு நிமிர்ந்து நின்றாள்.

“இந்த மாதிரி உணர்ச்சிகளுக்கு நான் அடிமையாக மாட்டேன். ராம் சொன்ன மாதிரி நான் சித்ராங்கதா… போராட்டமே வாழ்க்கையா இருக்குறவ… இப்ப அந்தப் போராட்டம் விஷ்ணுவோட வடிவத்துல வந்திருக்கு. இதுல வருத்தப்பட வைக்குற விஷயம்… என் மனசும் விஷ்ணு பக்கம்தானிருக்கு. அவன் கஷ்டப்பட்டா அதைத் தாங்குற சக்தி அதுக்குக் கிடையாது. அவன்தான் ஜெயிக்கணும்னு நினைக்குது…

நானே எனக்கு எதிரியாய்ப் போன இந்தப் யுத்தத்துல, என் மனசை ஜெயிப்பேன். விஷ்ணுவையும் ஜெயிப்பேன். நிதர்சனத்தை அவனுக்கு உணர்த்துவேன். என் விஷ்ணுவுக்கு அவனுக்கான இடத்தை உணர்த்தி அவன் குடும்பத்தோட சந்தோஷமா வாழ வைப்பேன். இது சத்தியம்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 7தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 7

மறக்காமல் பன்னிரண்டு மணிக்கு ஜிஷ்ணுவை அழைத்தாள் சரயு. “சொல்லு ஜிஷ்ணு” “இன்னைக்கு நீ சொன்ன இடத்துல சைட் சீயிங் டூர் ஒண்ணு ஏற்பாடு செஞ்சுருக்கேன். மத்தபடி ஆட்டோமொபைல் சம்மந்தமான இடத்தைப் பாக்க நீயும் வந்தா நல்லாயிருக்கும் சரயு. உன்னால முடியும்னா வரப்பாரேன்”

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 33தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 33

தாய் சிவகாமியின் படத்துக்கருகே புதிதாக இடம் பிடித்திருந்த தந்தை நெல்லையப்பனின் படத்தை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் சரயு. ‘தெனம் காலேல எந்திரிச்சதும்… அப்பாவுக்கு கஞ்சி தரணும், உடம்பு துடைக்கணும், துணி துவைக்கணும், மருந்து வாங்கணும்னு உன்னைப் பத்தியே நெனச்சுட்டு

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 3தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 3

அத்தியாயம் – 3 “அப்பா, சரயு ஆன்ட்டிய முன்னாடியே உங்களுக்குத் தெரியுமா?” சந்தனா சந்தோஷத்தில் கூவினாள். “சரயு, சிறு வயதிலிருந்தே என் மனதிற்கு நெருக்கமான தோழி. அப்படித்தானே சரயு” என்றான். ஆமாம் என ஆமோதித்தாள் சரயு. “நேரமாகிவிட்டதே. வீட்டில கணவர்…?” என