Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 15

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 15

பி.எம்.டபிள்யூவில் கொண்டாட்டம் முடிந்து திரும்பி வருகையில்,

“இப்படியே நீங்க கிளம்பிடுவிங்களா ஆன்ட்டி… ஒரே போர்” சலித்துக் கொண்ட சந்தனாவை வீட்டுக்கு அழைத்தாள் சரயு.

“ஏன் போர் அடிக்குது? என்கூட வீட்டுக்கு வா. ஆட்டோமொபைல் பேசிக் சம்பந்தமா புக்ஸ் தர்றேன். இன்னைக்கு நைட் எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு டின்னர் செஞ்சுத் தரேன். சாப்பிட்டுட்டு ரூமுக்குப் போகலாம்” என்று சரயு சொல்லவும் சந்தனா அனுமதிக்காக ஆவலாகத் தந்தையின் முகத்தைப் பார்த்தாள். ஜிஷ்ணுவின் முகத்தில் சந்தோஷத்தின் எதிரொலியே இல்லை.

மோப்பக் குழையும் அனிச்சமாய் சரயுவின் முகம் வாடியது. “சுமாராவே சமைப்பேன் ஜிஷ்ணு… என் வீடு உன் வீடளவுக்கு பெருசில்லதான். ஆனா உங்க மூணு பேருக்கும் சாப்பாடு போடுற அளவுக்கு அதில் இடமிருக்கு” என்றாள் சரயு தாழ்ந்த குரலில்.

“பிச்சி(பைத்தியம்) மாதிரி உளறாதே… எனக்கு வேற முக்கியமான வேலையிருக்கு. நீ சந்துவையும் பின்னியையும் கூட்டிட்டுப் போ. நான் அவங்களைக் கூப்பிட வர முடியாது அதனால நைட் நீதான் ரூம்ல கொண்டு வந்து விடணும்” என்றான்.

“தாங்க்ஸ் ஜிஷ்ணு” குரலில் குதூகலத்தைக் காட்டினாள்.

‘அப்ப… மூணு நாள் முன்ன அறிமுகமான அவங்க மட்டும் உன் வீட்டுக்கு வந்தா போதுமா… நான் வராதது உனக்கு வருத்தமில்லையா… நான் உனக்கு ஸ்பெஷல் கிடையாதா?’ அவளிடம் ஜிஷ்ணுவின் மனம் கோவமாய் சண்டை போட்டது.

ஜிஷ்ணுவின் மகளுக்கும் சித்திக்கும்தான் சரயுவின் வீட்டில் வரவேற்பு. நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாய்வதைப் போல, ஜிஷ்ணுவிடமான அவளது அன்புதான் சந்தனாவிடமும் அவன் சித்தியிடமும் பாய்கிறது என்பதை முட்டாள் ஆண்மகன் உணரவில்லை.

“கார் இல்லாம எப்படி சமாளிக்கிற? நீ ஊருக்குப் போற வரைக்கும் என் காரை உபயோகிச்சுக்கோயேன்” ஜிஷ்ணுவிடம் கவலையுடன் சொன்னாள் சரயு. அவர்கள் பேசுவதை சந்தனாவும் வரலக்ஷ்மியும் விநோதமாய் பார்க்க, ஜிஷ்ணு சீரியசாய் பதில் கேள்வி கேட்டான்.

“என்கிட்டே காரைத் தந்துட்டு, நீ எப்படி ஆபிஸ் போவ?”

“நான் டாக்ஸில போய்க்கிறேன்”

தீவிரமாய் யோசித்தபடி கேட்டான். “வீட்டுல ஒரு கார்தான் இருக்கா? ராம் கிட்ட காரில்ல? இல்ல பைக் வச்சிருக்காரா?”

“பைக்கா… பைக்கெல்லாம் ராமுக்கு ஓட்டத்தெரியாது. அவர் ஹாஸ்பிடல் வீட்லருந்து பக்கம்தான். அதனால நான் ஆபிஸ் போற வழியில டிராப் செய்துருவேன்”

“அப்ப அபி ஸ்கூல் பஸ்ல போவானா?”

“அபியையும் நாங்கதான் டிராப் செய்வோம். ராம் மத்தியானம் டாக்ஸில அபியை பிக் அப் செய்து வீட்ல விட்டுடுவாரு” என்று அவள் சொன்னதைக் கூர்மையாக ஜிஷ்ணு குறித்துக் கொண்டதை சரயு அறியவில்லை.

பேசியபடியே நடந்தார்கள். சந்தனாவும் வரலக்ஷ்மியும் வாஷ்ரூம் சென்றபோது மறுபடியும் ஆதங்கத்துடன் கேட்டான் ஜிஷ்ணு. “ஏன் சரயு இன்னொரு கார் இருந்தா உங்களுக்கு வசதியா இருக்காது?”

“இருக்கும்தான்… ரெண்டு செகண்ட் ஹான்ட் காரா வாங்கலாம்னுதான் நான் சொன்னேன். ராம் ஒத்துக்கவேயில்லை… அவன் சேவிங்க்ஸ் எல்லாத்தையும் வழிச்செடுத்து எனக்குப் பிடிக்கும்னு இந்த புது மாடல் வாங்கித் தந்துட்டான். இப்ப வீடு வேற வாங்கிருக்கோம். அதனால இன்னும் ஒரு வருஷத்துக்கு வேற செலவு பண்ண முடியாது” என்றாள்.

“அட வீடு வாங்கிட்டியா? குட்…”

“மூணு படுக்கையறையோட ஒரு வீடு. இதுக்கு டவுன் பேமென்ட் கட்ட ராம் ரெண்டு வருஷம் வீக் எண்டு முழுசும் வேலை பார்த்தான்” பெருமையாக சொன்னாள் சரயு.

ஜிஷ்ணு மனதில் ராமைத் திட்டினான். ‘அப்ப பணத்தைத் துரத்திட்டு, ரெண்டு வருஷமா வீக் எண்ட் முழுசும் உன்னைத் தனிமைல வாட விட்டானா உன் முட்டாள் புருஷன்.’

நொடியில் சுதாரித்தபடி அவள் கைகளை அவள் உணராதவாறு மென்மையாகப் பற்றியவன், “சரவெடி… எனக்குக் கவலையா இருக்கு… உன் உடைகள் அழகா இருந்தாலும் பகட்டா இல்லை… உன் மேல இருக்குற அன்பினால கேக்குறேன்… நீ சந்தோஷமா இருக்கியா? நீ பேசுறதைப் பார்த்தா வரவுக்கும் செலவுக்கும் சரியா இருக்கும் போலிருக்கே”

“அதனால என்ன… எங்க வீட்ல நடுத்தரக் குடும்ப வாழ்க்கைதான். அதை நான் ஒரு குறையா நினைக்கல. பணத்துக்கும் சந்தோஷத்துக்கும் சம்மந்தமேயில்லை” என்றாள் அசால்ட்டாக.

“உண்மைதான்” என்ற ஜிஷ்ணுவின் குரலில் வேதனை தெரிந்தது.

மூவரையும் காரில் ஏற்றிவிட்ட ஜிஷ்ணு, அவர்கள் அங்கிருந்து சென்றதை உறுதி செய்துவிட்டு செல்லில் யாரையோ அழைக்க, புத்தம் புது ஆஸ்டன் மார்டின் ஒன்று வந்து நின்றது. அவன் லண்டனில் இருக்கும்போது ஐரோப்பாவில் உபயோகிக்க வாங்கியது. அவனுக்காக முயூனிக் வந்து இறங்கியிருந்தது.

“யுவர் கீ சார்” என்றபடியே அதிலிருந்தவன் பயபக்தியோடு சாவியைத் தர, உட்கார்ந்து காரை உயிர்பித்தான் ஜிஷ்ணு. பலரின் பொறாமைப் பார்வையைக் கண்டு கொள்ளாமல் பயணமானான்.

அவன் எண்ணம் முழுவதும் சரயுவே வியாப்பித்திருந்தாள். அவன் காரில்லாமல் கஷ்டப்படுகிறான் என்று நினைத்து தனது காரை உபயோகிக்கக் கேட்டது நினைவுக்கு வர சிரித்துக் கொண்டான்.

மெதுவாய் முணுமுணுத்தான். “சரயு… என் சரவெடியே… என்னோட வசதியைப் பற்றித் தெரியாம என்னை எனக்காகவே ஏத்துக்கிட்ட என் இனிய தேவதையே… நான் உன்னை ரொம்ப மிஸ் செய்றேன். நீ என்னை மிஸ் பண்ணுறியா?”

ஜிஷ்ணுவின் விடுதி அறையிலிருந்த டேபிளில் உணவைக் கடை விரித்திருந்தாள் சரயு. அந்த மாம்பழ மேனியில் கருப்பில் சிறிய சிவப்பு பூக்கள் பூத்த குர்தி, கருப்பு லெகிங்க்ஸ் அணிந்து, தலையில் போனிடைலைத் தூக்கிக் கட்டி, நெற்றியின் மத்தியில் சிறிய மரூன் பொட்டு வைத்து, சந்தனவாசம் கமழ நின்றவளை ஒரு நிமிடம் ரசித்துப் பார்த்தான்.

“நீதான் எங்க வீட்டுக்கு சாப்பிட வரமாட்டேன்னு சொல்லிட்ட… அதனாலதான் நான் எல்லாத்தையும் பாக் பண்ணி எடுத்துட்டு வந்துட்டேன்” என்றாள் குற்றம் சாட்டும் குரலில்.

பால் பாயசம், பீஸ் புலாவ், சப்பாத்தி, காலிபிளவர் மன்சூரியன், கடாய் பன்னீர், ரைத்தா இவற்றுடன் கொஞ்சம் பகளாபாத்தும் சமைத்துக் கொண்டுவந்திருந்தாள்.

முதலில் பால் பாயசத்தை ஸ்பூனில் எடுத்து ருசி பார்த்த ஜிஷ்ணு, “சரவெடி… அசத்துற போ… நீ இவ்வளவு அற்புதமா சமைப்பேன்னு தெரியாமப் போச்சே” என்று வருத்தப்பட்டான்.

பெருமையாக சிரித்தவளின் காதருகே ரகசியம் பேசுவதைப் போலக் குனிந்தவன், “உண்மையை சொல்லு… வர்ற வழில ஹோட்டல்ல தானே வாங்கின?” என்று கேட்டுத் தலையில் ரெண்டு கொட்டு வாங்கினான்.

தலையைத் தேய்த்துக் கொண்டே திருப்தியாய் சாப்பிட்டான்.

“உனக்கு தயிர் சாதம் சாப்பிட்டாத்தானே சாப்பிட்ட மாதிரி இருக்கும். அதனால கொஞ்சமா செஞ்சேன்” என்றாள்.

தொண்டையைக் கனைத்துக் கொண்டு ஜிஷ்ணுவின் தயாரிப்பான ஆவக்காய் ஊறுகாய் பாட்டிலை விளம்பர மாடலைப் போல் கையில் ஏந்தினாள்.

‘உணவை ருசியாக்க நாடுவீர் ஜெயெஸ் ஊறுகாய்’

‘உங்களின் பாட்டியின் கைமணத்தை அப்படியே பாட்டிலில் அடைத்துத் தருகிறோம்’

சன் டிவியில் வரும் விளம்பரத்தை சொல்லியபடி அனைவருக்கும் ஊறுகாயை வைத்தாள்.

“போக்கிரி” என்று சரயுவின் காதைப் பிடித்துத் திருகினார் வரலக்ஷ்மி.

னகனகா ஒக்க பூர்வம், நந்தனபுரமனே ஒக்க கிராமம்லோ, ரங்கடுவனே ஒக்க பாமருடுக்கி, சுனந்துடு அனே ஒக்க கொடுகு. சுனந்துடு மன்சி தைரியசாலி… ஒக்க ரோஜூ…” கதையைத் தொடர்ந்தான் ஜிஷ்ணு. அவனது குரலைக் கேட்டபடியே அமர்ந்திருந்தாள் சரயு.

அலைச்சலில் சந்தனாவுக்குத் தூக்கம் வரவும், அவள் ஜிஷ்ணுவைக் கதை சொல்ல சொல்லி நச்சரிக்க… அவனும் மகளை மடியில் படுக்க வைத்துத் தட்டிக் கொடுத்தபடி கதை சொல்லத் தொடங்கினான். மறுநாள் பெண்கள் இருவரும் ஜிஷ்ணுவின் நண்பனின் குடும்பத்துடன் ஸ்விஸ் செல்ல இருந்ததால் வரலக்ஷ்மியுடன் சேர்ந்து அவர்கள் துணிகளை அடுக்கி வைக்க உதவினாள். தந்தை மகள் இருவரின் கற்பனை உலகில் குறுக்கிட விரும்பாமல் அவர்களை ரசிக்கத் தொடங்கினாள்.

“காணி நவ்வு மாத்திரமே பயங்கரங்கா உந்தி… ஹா… ஹா… ஹா…”

அவனது கதையில் ரங்கடு ஒரு சீசாவைக் கண்டெடுத்தான். அதிலிருந்து ஒற்றைக் கண் ராட்சஷன் வெளிவந்தான். விவசாயியின் பூசணிக்காயில் மாயமாய் நுழைந்து அவனது வீட்டுக்கு சென்றவன் இரவு அனைவரும் உறங்கும்போது ரங்குடுவின் கோழிகளைக் கபளீகரம் செய்தான், மறுநாள் பசுக்களைப் பசிக்கு விழுங்கினான். மூன்றாம் நாள் ஜமின்தாரின் குதிரை லாயத்தில் நுழைந்து குதிரைகளை சுவாஹா செய்தான். ஜமின்தார் ஆடு மாடுகள் காணாமல் போகும் ரகசியத்தைக் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டார். பல்வேறு சாகசங்களுக்கிடையே சுனந்துடு ராட்சசனின் ஒற்றைக் கண்ணைக் குத்தி அவனை உயிரழக்க செய்தான். அவனை ஊர் மக்கள் பாராட்டினர்.

ஜிஷ்ணு… குரலின் ஏற்ற இறக்கங்களிலேயே ரங்குடுவாய் மாறினான்… ராட்சசனாய் மாறி சிரித்தான்… சுனந்துடுவாய் மாறி சாகசம் செய்தான்.

கதையைக் கேட்டுக் கொண்டே தனது மடியில் தூங்கிவிட்ட சந்தனாவை அலுங்காமல் தூக்கிப் படுக்கையில் படுக்க வைத்தான். வரலக்ஷ்மியும் அன்று முழுவதும் நடந்த களைப்பில் தூங்கி விட்டிருந்தார்.

“என்ன பாக்கற சரயு. கதை சொல்லுறதுக்கு எனக்கு கத்துத் தந்த டீச்சர் நீதானே. எவ்வளவு அழகா உங்க ஊர் பாஷைல கதை சொல்லுவ”

சரயுவிடமிருந்து பதில் வரவில்லை. மெல்லிய வெளிச்சத்தில் சோபாவில் கண் மூடி ஓவியமாய் சாய்ந்திருக்கும் சரயுவை மெதுவாய் அழைத்தான். ஜிஷ்ணுவின் குரலால் திடுக்கிட்டு தன்னுணர்வு பெற்ற சரயு மணியைப் பார்த்தாள். நேரமாகி விட்டது அவள் வீட்டுக்குப் போக வேண்டும் கைப்பையை எடுத்துக் கொண்டு டாட்டா காண்பித்துவிட்டுக் கிளம்பினாள்.

பால் நிலா வெளிச்சத்தில் அறையின் வெளிப்புறமிருந்த தோட்டம் மனத்தைக் கொள்ளை கொண்டது. சிறிய செயற்கை ஓடையும் அதனருகேயிருந்த அமருமிடமும் அவளை இங்கு சற்று நேரம் அமர்ந்து செல்லேன் என்று கெஞ்சின.

வேகமாய் தனது இரவு உடைக்கு மேல் ஒரு ஜாக்கெட் அணிந்தபடியே பின்னால் வந்த ஜிஷ்ணு குரல் கொடுத்தான்.

“சரயு… சரயு…”

“ம்ம்…” என்று பதிலளித்த சரயுவின் குரல் கரகரப்பாயிருந்தது. துணுக்குற்றது ஜிஷ்ணுவின் நெஞ்சம்.

கைகளைப் பிடித்து, “ஏன்ட்டம்மா? எந்துக்கு ஈ கண்ட்லோ நீலு? ஏமைந்தி? ” பதறினான்.

பதில் இல்லை.

“ராம் நினைவு வந்துடுச்சா? சிண்டுவைப் பார்க்கணும் போல இருக்கா?” நீரோடையின் அருகிலிருந்த பெஞ்சில் அமர வைத்து, சிறு பிள்ளையிடம் கேட்பதைப் போலக் கேட்டான்.

“அப்பா நினைவு வந்துடுச்சு ஜிஷ்ணு… அப்பா இப்படித்தான் கதை சொல்வார்…”

அவளருகில் அமர்ந்தவன் ஆதரவாக தோள்களைத் தட்டினான்.

“நான் நாலாவது பொண்ணுன்னு எங்க வீட்டுல கொஞ்சம் கூட வருத்தப்பட்டதில்ல. நீ சந்தனாவை மடில உட்கார வச்சிருந்தியே… அப்படித்தான் அப்பா என்னை மடில உட்கார வச்சுப்பார். திருநெல்வேலிக்குத் தேர் பார்க்கப் போறப்பயும், திருச்செந்தூருக்கு சூரசம்ஹாரம் பாக்கப் போறப்பையும் தோள்ல உட்கார வச்சு சாமியைக் காமிப்பார். நான் ராத்திரி சாப்பிடாம தூங்கினா மடில உட்கார வச்சு தூக்கத்துலயே ஊட்டி விட்டுத் தூங்க வைப்பார். மூணு நாள் முன்ன உன்னைப் பார்த்தேனே… அன்னைக்குத்தான் அவர் நினைவுநாள்” கண்கள் கலங்கின சரயுவுக்கு.

இருந்தும் அழுத்தக்காரி ஒரு கண்ணீர்த்துளியைக் கூட கீழே சிந்த விடவில்லை. ஒரு பெருமூச்சிழுத்து அடக்கிக் கொண்டாள். அழுகையை அடக்க அவளது பிரயத்தனங்களைப் பார்த்தவன்,

“சரவெடி… என்னோட தோள்ல சந்துவுக்கு மட்டுமில்ல… சரயு சாயவும் ஏராளமா இடமிருக்கு… ப்ளீஸ்… மனசுக்குள்ளயே உணர்ச்சிகளை அடக்கி வச்சுட்டு என்னைக் கஷ்டப்படுத்தாதே. கொஞ்ச நேரம் என்னை ஒரு தலையணையா நெனச்சுக்கோ…”

கைகளை அவளருகே நீட்டினான். முத்துப் பல் தெரிய சிரித்தவாறு அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

“தலையணைன்னா ரெண்டு உத உதைப்பேனே பரவால்லையா?”

“நீ ஜாக்கிஜானோட தங்கச்சின்னு தெரியாம போச்சே…”

வாயடித்தாலும் அவனது தோள் தந்த கதகதப்பில் சரயுவின் கண்கள் தாமாய் மூடிக் கொண்டன. ஜிஷ்ணுவின் வலக்கை அவளது கையைப் பற்றிக் கொண்டது இடக்கை சற்று தயங்கியபடியே அவளது இடையை வளைத்தது.

ஜமுனாவுடன் அவன் இப்படி அமர்ந்ததில்லை. சரயுவினிடத்தில் ஜமுனா இருந்திருந்தால் இந்நேரம் இந்த நெருக்கம் படுக்கையில் முடிந்திருக்கும். அத்துடன் இருவரும் இயந்திர கதியில் அவரவர் அலுவலை கவனிக்க சென்றிருப்பார்கள். இப்போதைய வினாடிகள் ஒவ்வொன்றையும் ரசித்தான். அவனது முகத்தில் எல்லையில்லா அமைதி தோன்றியது.

எந்தப் பெண்ணோடும் எழுவது காமமே

அட உன்னோடு தோணலையே

சிறு முந்தானை மூடிடும் தெய்வமே

உன்ன முத்தாடத் தோணலையே

கனத்த அமைதி நிலவியது. சற்றுநேரத்தில் சுதாரித்த சரயு அவனது தோளிலிருந்து தலையை எடுத்தாள். அவள் எழுவதை விரும்பாத ஜிஷ்ணுவின் கைகள் அவளை சற்று இறுக்கிப் பிடித்தது. அவள் பழையபடி அவனது தோளில் சாய்ந்ததும் இறுக்கத்தைத் தளர்த்தின கைகள். ‘பிடிவாதக்காரன்’ சரயுவின் இதழ்கள் புன்னகையில் விரிந்தன.

“அபி பத்தி சொல்லு சரயு… தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு” அவளைப் பேசத் தூண்டினான்.

அவள் சற்று தயங்கினாள். “அபி மாதிரி ஒரு நல்ல குழந்தை கிடைக்க நான் ரொம்பப் புண்ணியம் பண்ணிருக்கணும். தொல்லையே பண்ண மாட்டான். அவன் மேல எனக்குக் கொள்ளை பிரியம். ஆனா அவன்ட்ட வெளிப்படையா காமிக்க பயம்மா இருக்கு விஷ்ணு. அதனால அவனைக் கண்ணால பாத்து, மனசால ரசிக்கிறதோட சரி. கட்டாயப்படுத்திட்டு அவனை விட்டு விலகி நிக்கிறேன்”

“ஏன்ட்ரா…” ஆதரவாய் கேட்டான்.

“ஏன்னா என் ராசி அப்பிடி… அம்மா மேல பிரியம் வச்சேன். அவங்க போய்ட்டாங்க. அப்பா மேல அன்பு வச்சேன் அவரும் தனியா தவிக்க விட்டுட்டு போய் சேர்ந்தாரு. அக்காங்க மேல வச்ச பிரியம் வேலைக்காகல…”

“இதையும் சொல்லு… க்ளோஸா இருந்த அணுகுண்டு ஸ்கூல் முடிக்கும் முன்னாடி போய்ட்டான். நானும் இருந்தும் இல்லாதவனாயிட்டேன்…”

அமைதியாயிருந்தாள் சரயு.

“நீ இருக்குற இடம்தான் எனக்குத் தெரியாது. ஆனா என்னை உனக்குத் தெரியுமே… நான் அதே அட்ரஸ்லதான் இருக்கேன்… அதே மொபைல் போன்தான் யூஸ் பண்ணறேன்… உலகத்தோட எந்த மூலைக்குப் போனாலும் அந்த போன் என்னோடையே பயணம் செய்யும்… உன் குரலைக் கேட்க வருஷக்கணக்கா அந்த போனும், என் மனசும் காத்துட்டு இருந்தது… கல்யாணத்தைப் பத்தியும், குழந்தை பிறந்ததைப் பத்தியும் ஒரு வார்த்தை கூட என்கிட்டே சொல்லணும்னு தோணலையா? அந்த அளவுக்கு நான் உன் மனசுக்கு அந்நியமாய் போயிட்டேனா சரவெடி” அவனது குரலில் இருந்த வேதனை தாக்கியது.

“சிண்டுவ விட்டுத் தள்ளி நிக்க நான் சொன்ன அதே பதில் தான் உனக்கும் விஷ்ணு”

ஜிஷ்ணுவின் உடல் ஒருமுறை அதிர்ந்து அவளை வியப்புடன் பார்த்தது. பின் கண்கள் கனிவாக மாறியது.

“இனிமே அந்தக் கேள்விய கேட்க மாட்டேன். நீ தூங்கு”

“வீட்டுக்குப் போகணுமே”

“பச்… ப்ளீஸ் கொஞ்ச நேரம் இப்படியே இரேன். அரைமணில நானே உன்னை எழுப்பி விடுறேன்”

மனதுள் பாடினான் ஜிஷ்ணு.

‘காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு

இக்கணத்தைப் போலே இன்பம் ஏது சொல்லு’

அவனது மனக்கண்ணில் சரயு சின்னஞ் சிறுமியாய் சீருடை அணிந்து காத்தாடியைப் பறக்கவிட்டுத் தலை தெறிக்க ஓடினாள், டீன் ஏஜ் சரயு பாஸ்கெட் பாலைப் பிடுங்கி வெறியோடு விளையாடினாள், கல்லூரி செல்லும் முன் சல்வார் குர்த்தா அணிந்துக் கன்னம் குழி விழச் சிரித்தாள், முதன் முதலில் சேலை அணிந்து கால்கள் தட்ட நடந்தாள், அவனது ஆர்வமான பார்வை தாங்காது முகம் சிவக்க அவன் கண்களைப் பொத்தினாள்.

நீ பார்த்த விழிகள்

நீ பார்த்த நொடிகள்

கேட்டாலும் வருமா

கேட்காத வரமா

நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா?

“நா ப்ரியத்தமா…” என்றவாறு தலையைக் கோதிய ஜிஷ்ணு உருகிய குரலில் சொன்னான்,

“சாகுறதுக்குள்ள உன்னைப் பார்க்கணும்னு நெனச்சேன்ரா… பார்க்கும்போது உன் ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு தெரியல… இப்ப இந்த நிமிஷம் அப்படியே செத்துடலாம் போலிருக்கு…”

நிழல் தரும் 

இவள் பார்வை 

வழி எங்கும் இனி தேவை 

உயிரே உயிரே 

உயிர் நீ தான் என்றால் 

உடனே வருவாய் உடல் சாகும் உன்னால் 

உணர்ச்சிவயப்பட்ட இருவரும் அந்த உலகிலேயே இல்லை. ஜிஷ்ணு சரயுவின் நெற்றியில் தனது இதழ்களைப் பதித்தான். மெதுவாய் கீழிறங்கி அவளது வலது கன்னத்தில், நொடியில் அவளை வளைத்தன ஜிஷ்ணுவின் கரங்கள், ஜிஷ்ணுவின் மூச்சுக் காற்றின் உஷ்ணத்தையும், ரயில் பெட்டியாய் தடதடக்கும் இதயத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் சரயு உணரத் தொடங்கிய தருணம் அவள் முகம் முழுவதும் நட்சத்திரப் பொட்டாய் தனது முத்தங்களால் நிரப்பியிருந்த ஜிஷ்ணு ஆவலாய் இதழ்களை நெருங்கியிருந்தான். ஆவேசமாய் அள்ளிப் பருகும் ஆவலில் வந்தவனைக் கண்டு திடுக்கிட்டவள் நொடியில் அவனைத் தள்ளிப் பதறி விலகினாள்.

“விஷ்ணு… என்ன பண்ணுற…?” முகம் சிவக்கக் கேட்டாள்.

மந்தகாசமாய் சிரித்தபடி அவள் அருகில் அடியெடுத்து வைத்தான். “உனக்குத் தெரியலையா டார்லிங்… உனக்கு முதன் முதல்ல முத்தம்னா என்னன்னு தெரிய வச்சவன். அப்ப நான் கிஸ் பண்ண உடனே என்ன நடக்குதுன்னு கூடத் தெரியாம திகைச்சு போய் நின்ன… அந்த நாளுக்கு மறுபடியும் போகணும்னு ஆசையா இருக்குரா செல்லி”

தனது கணிப்புப் பொய்யாகிப் போன கோவத்தில் கத்தினாள். “சீ பொறுக்கி… உன்னை நம்புனேன் பாரு… என்கிட்டயே உன் புத்தியைக் காண்பிக்குற”

தனது அன்பைக் கொச்சைப் படுத்தியதைத் தாங்காமல் சீறினான் ஜிஷ்ணு. “யாரைப் பாத்துடி பொறுக்கின்னு சொன்ன? நான் எத்தனை பேரைப் பொறுக்கி நீ பார்த்திருக்க?”

“அதை வேற நான் பார்க்கணுமாக்கும்… இப்ப நீ செஞ்ச வேலைக்குப் பேரென்ன?” பல்லைக் கடித்தபடி சொன்னாள்.

குரலைத் தணித்தான் ஜிஷ்ணு. “கோவத்தைக் கிளப்பாதே சரயு. அப்படி என்னடி பெரிய தப்பு செஞ்சுட்டேன்… ஆப்பிள் பழம் மாதிரி நீ என் முன்னாடி நின்னப்ப ஏதாவது செஞ்சேனா? மனசு கஷ்டப்படும்போது சமாதனப்படுத்த சின்னதா கிஸ் கொடுத்தேன்… அது தப்பா…”

“உனக்கு எதுதான் தப்பில்ல… பெரிய உத்தமன் மாதிரி சீன் போட்ட… என்கிட்டே வாங்கினதெல்லாம் மறந்துடுச்சா? அதையும் மீறி இப்படி நடக்க உனக்கு எவ்வளவு தைரியமிருக்கணும்” வேகமாய் காரினை நெருங்கியிருந்தாள். அவள் பின்னாலே ஓடி வந்தான் ஜிஷ்ணு.

ரிசெப்ஷனில் இருந்த இரவுப் பணியாளன், “வெளிய போகணுமா சார்… கார் கொண்டு வர சொல்லட்டுமா?” என்று பணிவுடன் கேட்டான்.

“வேண்டாம்” என்று மறுத்தான் ஜிஷ்ணு.

“உங்க ஆபிஸ் ரூம்ல வேலை முடிஞ்சுடுச்சு.. வேணும்னா திறந்து வைக்க சொல்லட்டுமா? அங்க போய் பேசுறிங்களா…” என்று கேட்ட பொழுதுதான் சரயுவுக்கு அந்த விடுதியை ஜிஷ்ணு உடமையாக்கி விட்டான் என்று புரிந்தது.

“இந்த ஹோட்டல வாங்கிட்டியா…?”

தலையசைத்தான் ஜிஷ்ணு.

“அப்பறம் கார் கூட இல்லாதமாதிரி வேஷம் போட்ட” ஏமாறிய வருத்தமிருந்தது.

“லண்டன்லேருந்து நேத்து கார் வந்துடுச்சு” தலை குனிந்தான்.

“அப்பறம் ஏன் காலைல என்னைப் பிக் அப் பண்ண சொன்ன” குறுக்கு விசாரணை செய்தாள்.

“உன் கார்ல, உன் கூட பேசிகிட்டே வர்ற சந்தர்ப்பத்தை தவற விட விரும்பல. அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனால ஒரு சின்ன பொய் சொன்னேன்” சிறு குழந்தைகள் காரணம் சொல்வதைப் போல சொன்னான்.

“ராம் அப்பவே உன் கிட்ட எச்சரிக்கையா இருக்க சொன்னான். நீ நல்லவன் ஏதோ உணர்ச்சி வேகத்துல செஞ்சுட்டன்னு உனக்காகப் பரிஞ்சு நான் அவன்கிட்ட சண்டை போட்டேன். கடைசில… எவ்வளவு தைரியம்டா உனக்கு” சட்டையைப் பிடித்து உலுக்கிவிட்டு காரில் அமரச் சென்றாள் சரயு.

அவளது கைகளைப் பிடித்து நிறுத்தியவன்,

“தைரியமா… எனக்கா… துளி கூட கிடையாது. அது இருந்திருந்தா எப்பவோ உன்னைத் தூக்கிட்டுக் கண்காணாத இடத்துக்குப் போயிருப்பேனே… அது நடந்திருந்தா… நடந்திருந்தா… இந்நேரம் சந்தனா உன்னைத்தான் அம்மான்னு கூப்பிட்டிருப்பா…”

பேச வாயெழாமல் அதிர்ந்து சரயு நிற்க…

ஜிஷ்ணுவின் கண்கள் கலங்கின, குரல் உடைந்தது. “அபி என்னைத்தான் அப்பான்னு கூப்பிட்டிருப்பான்”

அவன் விழிகள் அவளைப் பார்ப்பதற்கென்றே வாங்கியதைப் போல் சரயுவின் வதனத்தில் நிலைத்தது.

அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்

அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்

கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்

என் வாழ்வில் வந்தே போனாய் ஏமாற்றம் தாங்கலையே

பெண்ணே நீ இல்லாமல்…

பூலோகம் இருட்டிடுதே…

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்

போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

காரினைக் கிளப்பிச் சென்றாள் சரயு. பத்திரமாய் செல்கிறாளா என்று பார்க்க அவனது காரில் ஏறி பின்னால் பாதுகாப்பாய் அவளது வீடு வரைப் பின்தொடர்ந்தான் ஜிஷ்ணு. வீட்டின் முன் காரைப் பார்க் செய்தவள், பார்வையால் ஜிஷ்ணுவிடம் வெறுப்பை உமிழ்ந்துவிட்டு வீட்டினுள் சென்று படாரென சத்தமெழ வேகமாய்க் கதவை சாத்தினாள். மதியம் வீட்டுக்கு வரச் சொல்லி அன்போடு அழைத்தவளை இரவே வெறுக்க வைத்த பெருமையுடன் ஜிஷ்ணு திரும்பினான்.

“போய்ட்டா… மறுபடியும் இந்த ராட்சஸி என்னை விட்டுட்டுப் போய்ட்டா… மறுபடியும் நான் மனசால செத்துப் போய்ட்டேன்” காரை ஒதுக்குப்புறமாக யாரும் பார்க்காத இடத்தில் நிறுத்தி விட்டுக் கதறி அழுதான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 35என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 35

அத்தியாயம் – 35   ஒரு வினாடி சாரிகா பேசும்போது  குறுக்கிட்ட  சித்தாரா  “இது  நடந்ததெல்லாம் எங்க வீட்டுக்கு நீங்க   குடிவரதுக்கு முன்ன  தண்டையார்பேட்டைல குடி இருந்திங்களே அப்பத்தானே” என்று கேட்டு  உறுதிப்  படுத்திக்  கொண்டாள். ஆமோதித்த சாரிகா தொடர்ந்தாள்.   முதுகு வலியால்  கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சுதாவைப் பார்க்க சுமித்ரா மதுரை சென்று விட,