Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Ongoing Stories,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 6

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 6

ரயு காலையில் அலைப்பேசியின் அலறலில்தான் எழுந்தாள். தலை வரை போர்த்தியிருந்த போர்வையிலிருந்து கையை மட்டும் நீட்டி பெட்சைடு டேபிளிலிருந்த மொபைலை தேடி எடுத்து, பின் போர்வைக்குள் இழுத்துக்கொண்டாள்.

‘இந்த ராம் காலைல எழுப்பி விட்டுடுரான்பா. போன ஜென்மத்துல கடிகாரமா பொறந்திருப்பான் போலிருக்கு’

மனதில் அலுத்துக் கொண்டே உயிர்பித்துக் காதில் தந்தாள்.

“கண்ணா… சேதுராமா… எந்திருச்சுட்டே… இருக்கேன். கண்டிப்பா பல்லு விளக்காம காபி குடிக்க மாட்டேன். காபி குடிச்சதும் கப்பைக் கழுவி வச்சுடுவேன். அழுக்குப் பண்டாரமா இல்லாம சுத்த பத்தமா குளிச்சுட்டு, சீரியல் சாப்பிட்டுட்டு, துவைச்ச சாக்ஸ போட்டுட்டு ஆபிஸுக்குக் கிளம்புறேன். அவ்வளவுதானே… இப்ப விட்டுடு… ஊருல இருக்குறப்பத்தான் தூங்க விடமாட்ட. இப்பவாவது தூங்குறேனே ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்…” தூக்கக் கலக்கத்தில் ஒப்பித்தவளின் குரலைக் கேட்டு மறுமுனை மௌனம் சாதித்தது.

“சாரி சரயு… தூங்கிட்டிருந்தியா? எழுப்பிட்டேனா?” தயங்கியபடியே வினவிய ஜிஷ்ணுவின் குரலைக் கேட்டுத் துள்ளி போர்வையை விளக்கி எழுந்தாள். ஒளிர்ந்த நம்பரைப் பார்த்தாள். புதிய எண். தலையில் கொட்டிக் கொண்டவள்,

“ஹாய் ஜிஷ்ணு, நீயா? நேத்து நான் உன்னை முதல் முதல்ல பார்த்ததைப் பத்தியே நெனசுட்டிருந்தேனா, தூங்க நேரமாயிடுச்சு”

அவன் நினைத்ததையே தான் அவளும் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறாள். “நானும் அதையேதான் நெனச்சிட்டிருந்தேன். நீ இன்னைக்கு ஆபிஸ் போகல?”

கண்ணை சுருக்கி மணி பார்த்தவள், “மணி எட்டாச்சா, கடவுளே பத்து மணிக்கு மீட்டிங். உனக்கு ஏதாவது முக்கியமா சொல்லணுமா ஜிஷ்ணு?”

“முக்கியமான விஷயம் ஒண்ணுமில்ல. நீ கிளம்பு”

“மீட்டிங் முடிஞ்சதும் உன்னைக் கூப்பிடுறேன். ஒரு பன்னெண்டு பன்னெண்டரை ஆகும். உனக்கு ஓகேயா?”

“ஓகே”

ராமா என்று அவள் பேசியதை நினைத்து சிரித்தபடி செல்லை அணைத்தவன், கையோடு முதல் நாள் சரயு சொல்லியிருந்த அலுவலகத்துக்கு அழைத்து சந்தனாவும் வரலக்ஷ்மியும் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்தான்.

“பின்னி இங்க சைட் சீயிங் டூர் ஏற்பாடு செஞ்சிருக்கேன். இங்கிலீஷ் கார்டனும், ஒலிம்பிக் ஸ்டேடியமும் சுத்தி பார்த்துட்டு வாங்க. இந்த டூர் இந்தியன் ஒருத்தர் நடத்துறது. நம்ம ஊர் சைவ சாப்பாடு கிடைக்கும். மத்தபடி பிஎம்டபிள்யூ, ஆட்டோமொபைல் மியூசியம் இது ரெண்டும் சரயு வந்தா கூட்டிட்டு போயிட்டு வரலாம். அவளுக்கு இதுலெல்லாம் ஆர்வம் அதிகம்”

“அவ வருவாளா?”

“இன்னைக்குக் கேட்டுப் பார்க்கிறேன்”

“நீயும் இன்னைக்கு எங்க கூட வரக் கூடாதா?”

“எனக்கு வேலையிருக்கு பின்னி. ஆட் ஒண்ணு ஏற்பாடு செய்திருக்கேன். லோக்கல் இந்தியன் சேனல்ல இந்நேரம் வர ஆரம்பிச்சிருக்கும். அதே சமயத்தில இங்க இருக்குற நம்ம ஊர் கடைகள்ல ஜெயெஸ் ஊறுகாய் பாட்டில் ஒன்னு வாங்கினா இன்னொன்னு இலவசம்னு சொல்லி மக்களைக் கவரணும். நம்ம ஆவக்காய், எலுமிச்சை ஊறுகாய்க்கு நல்ல மார்கெட் இருக்கு. அதை வாங்குறவங்கல புதுசா எறால், மீன் வகைகளை வாங்க வைக்கணும். இங்க இருக்குற ஸ்ரீலங்கன் மக்களுக்கு ரீச் ஆகணும்னு பாக்குறேன்”

“சரிப்பா”

“ரமணாவோட பாமிலி கூட டூர் ஒண்ணும் ஏற்பாடு செய்திருக்கேன். அதுக்கு நீங்க போயிட்டு வந்தவுடனே இந்தியா கிளம்ப சரியா இருக்கும்”

ரமணா அவனுடைய தொழில் பங்குதாரர், தோழன். பெர்லினில் இருக்கிறான். இந்த ஊரில் வியாபாரத்தை கவனித்துக் கொள்கிறான். ஜிஷ்ணு ஷூ லேஸை கட்டிவிட்டுக் கிளம்பினான்.

ஜிஷ்ணுவுக்கு பல நாடுகளிலும் தோழர்கள் இருக்கிறார்கள். இருந்தும் இந்த சரயுவின் நட்பைப் பெற அவன் பட்ட பாடு அய்யய்யோ… உங்களுக்கு சொன்னால்தான் புரியும்.

ரு விடுமுறை தினம். ஸ்ரீ வைகுண்டத்திற்கு ஜிஷ்ணு வந்த சமயம். வெங்கடேஷுடன் வெளியே சென்றாலும் அவ்வப்போது நேரம் கிடைக்கும்பொழுது சரயு அண்ட் கேங்கை கவனிப்பது ஜிஷ்ணுவின் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. அன்று வெங்கடேஷ், நெருங்கிய உறவினரின் துஷ்டிக்கு சென்றதால் தனியாக பொழுது போகாமல் சுற்றிக் கொண்டிருந்தான் ஜிஷ்ணு.

நண்பனின் எச்சரிக்கையையும் மீறி மரத்தடியில் பாடம் எழுதிக் கொண்டிருந்த தோழர்களிடம் சென்றான்.

அவன் வீட்டில் அவனுக்குப் படிக்கத் தனி அறை மேஜை நாற்காலி, விளக்கு எல்லாம் உண்டு. படிக்கும் போது சாப்பிட நொறுக்குத் தீனி, குடிக்க பழரசம் அனைத்தையும் அவனது அம்மாவின் ஆணைப்படி வேலைக்காரன் வைத்திருப்பான். பென்சில் நான்கு எழுதுவதற்கு வாகாக சீவப்பட்டுத் தயாராக இருக்கும்.

இங்கு மரத்தடியில் பத்மாசனமிட்டு எதிரே புத்தகக் கூடையை மேசையாக பாவித்து, அதன் மேல் நோட்டை வைத்து, பதினைந்து சென்டிமீட்டர் அளவே உள்ள பென்சிலை வைத்து எழுதுவது எவ்வளவு கஷ்டம்? அந்தப் பென்சிலைக் கூட சரயு கடித்தே தின்றிருப்பாள் போல. பென்சிலின் பின்புறம் பல்லால் குதறியிருந்தாள். இருந்தாலும் சரயுவைப் பார்த்தால் கஷ்டப்படுபவள் போலத் தெரியவில்லையே. அந்தத் துள்ளியோண்டு பென்சிலிலும் சந்தோஷமாய் சிரித்துப் பேசியபடியே எழுதுகிறாளே! சந்தோஷம் பணத்தில் இல்லை போலும் மனதில்தான் இருக்கிறது. எப்படியாவது அவர்களுடன் இணைந்து வாழ்க்கையின் வெறுமையை விரட்ட நினைத்தான்.

அவளருகில் அணுகுண்டின் புத்தகப்பை. நிறம் என்ன என்றே இனம் காண முடியாத அந்த அழுக்குப் பையில் ஏகப்பட்ட பொத்தல்கள். அதன் ஓட்டை வழியே அவன் சத்துணவு வாங்கி சாப்பிடும் நசுங்கிய அலுமனியத் தட்டு எட்டிப் பார்த்தது. பொன்வண்டு சோப்பைக் கண்டு நாளாயிருந்த மேல் சட்டை. அருணாகயிறால் கீழே விழுந்து விடாமல் இழுத்துக் கட்டப்பட்ட டிராயர். வழிய வழிய எண்ணை வைக்கப்பட்டு படிய வாரிய தலை. வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி அவன் இயற்கை நிறமே மறைந்து, காய்ந்து கருவாடாகியிருந்தான். எண்ணை வழிந்த முகம் காட்டிய மினு மினு கறுப்பிலும் நெற்றியில் பூசியிருந்த திருநீறு பளிச்சென தெரிந்தது. இவனோடு சேர்ந்துதானே சரயுவும் விளையாடுவாள். இந்த வெயிலில் சுற்றியும் அவள் சற்று மங்கிய மஞ்சள் நிறத்தில்தானிருந்தாள். ‘நிஜத்துல இவ பயங்கர கலராயிருக்கணும்’ என்று நினைத்துக் கொண்டான் ஜிஷ்ணு.

அணுகுண்டும் எழுதிக் கொண்டிருந்தான். எழுதும்போது அவன் வலது கை வித்தியாசமாய் சற்று வளைந்தாற்போல் தெரிந்தது. ‘ஓ இதனால்தான் மேடம் இவனுடன் கூடுதலாக க்ளோஸ் போலிருக்கு’ புரிந்து கொண்டான்.

“நூறு தடவயெல்லாம் எழுத முடியாதுலே. நடுவுல பத்து பத்து நம்பரா விட்டாலும் மாட்டிப்போம். எண்பத்திமூணுக்கப்பறம், டக்குன்னு எண்பத்திஎட்டு வந்திரணும். பொடி டப்பியால நம்பர் விட்டுப்போனதைக் கண்டே பிடிக்க முடியக்கூடாது”

மூக்குப் பொடி போடும் வாத்தியாரை ஏமாற்றும் சதியாலோசனையில் ஈடுபட்டிருந்தார்கள் இருவரும்.

நண்பர்கள் பேச்சில் குறுக்கிட்டு,

“சரயு” என்றழைத்தவனை நிமிர்ந்து திமிர் பார்வை பார்த்து விட்டு எழுதுவதைத் தொடர்ந்தாள்.

இவள் நட்பு வேண்டுமென்றால், அசிங்கம் பார்த்தால் முடியுமா? பேச்சை ஆரம்பித்தான். “ஹோம் வொர்க் பண்ணுறியா?”

“இல்லை… மாடு மேய்க்கிறேன்” சிரிக்காமல் சொன்னாள்.

கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியவன், “அணுகுண்டையா மாடுன்னு சொல்லுற? எனக்கு அப்படித் தெரியலையே”

நிமிர்ந்து முறைத்தவள், “என்ன விஷ்ணு… என் பிரெண்ட் கூட சண்டை மூட்டி விடப்பாக்குறியா?”

உடனே அணுகுண்டு, “ஆமாம் நாங்க சண்டையே போட மாட்டோம் தெரியும்ல. இப்பகூட சரவெடி எனக்குத் தந்த இம்போசிஷனைத்தான் எழுதிட்டு இருக்கா”

“அட… அட… இதுவல்லவோ தோழமை. கர்ணன் துரியோதனன் நட்பு மாதிரியா உங்க நட்பு?”

“அது யாரு?” விளங்காமல் கேட்டான் அணுகுண்டு.

“உன் தலை… அவனுங்க மகாபாரதத்துல கிருஷ்ணனுக்குப் பகையாளிங்கலே. அதுமாதிரி நாம ரெண்டு பேரும் வில்லனுங்களாம்… என்ன விஷ்ணு… உடம்பு எப்படி இருக்கு?” நக்கலாய் கேட்டாள்.

“ச்சே உங்கள வில்லன்னு சொல்வேனா? சொல்லிட்டு இந்த ஊரை விட்டு உருப்படியா கை காலோட போயிட முடியுமா?”

இருவரும் பெருமிதமாக சிரித்துக் கொண்டார்கள்.

“சாரி… உங்க இணைபிரியா நட்பைப் பத்தி நான் தப்பா புரிஞ்சுட்டேன். என்னையும் உன் பிரெண்டா ஏத்துக்கிறியா?”

அவனது நேர்முகத் தேர்வு உடனடியாக ஆரம்பித்தது.

“நீ எத்தனாவது படிக்குற?” அணுகுண்டு.

“ஸ்கூல் முடிச்சுட்டேன். இப்ப உன் வெங்கடேஷ் அண்ணன் காலேஜ்லதான் படிக்கிறேன்”

“கட்டடம் கட்டுவாங்களே அதுமாதிரி சிவில் என்ஜினியரா?” இது சரயு.

“இல்லை”

“மெக்கானிக்கல் எஞ்சினியரா… கார் எல்லாம் செய்வியா?” தனக்கு உலக விவரம் உண்டு என்று பறைசாற்றினாள்.

“அதுவுமில்லை… கம்ப்யூட்டர் சயின்ஸ்”

“சரி… அப்ப எத்தனை கம்ப்யூட்டர் செஞ்சிருக்க?” அணுகுண்டு பங்குக்கு தனது அறிவையும் காண்பித்தான்.

திகைத்தான் ஜிஷ்ணு. இப்படி ஒரு கேள்வியா? “வந்து… நான் கம்ப்யூட்டர் செஞ்சதில்ல… அதுல ப்ரோக்ராம் எழுதுவேன்”

ப்ரோக்ராமுக்கு அர்த்தம் புரியாமல் விழித்தனர் சிறுவர்கள்.

விளக்கினான். “கணக்கு போடுவேன், டைப் பண்ணுவேன்”

“கம்ப்யூட்டர்ல டக்கு டக்குன்னு டைப் பண்ணுறதுக்கு ஒரு படிப்பா” கேவலமாக அணுகுண்டு சொல்ல, நெருப்புக்கோழி மாதிரி தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொள்ளலாம் போல் அவமானமாக இருந்தது ஜிஷ்ணுவுக்கு. இவனுக்குப் புரிறாப்புல சொல்லல நாம தொலைஞ்சோம் என்று அவன் மூளை அபாய சங்கொலி எழுப்பியது.

“நீ சினிமா பார்த்திருக்கல்ல, அதுல கார்ட்டூன், டைனாசர் எல்லாம் காமிப்பாங்களே அதை எல்லாம் கொண்டு வருவேன்” சமாளித்தான் ஜிஷ்ணு.

அணுகுண்டுவிடம் ஜிஷ்ணு விளக்கம் சொல்லுகையில் பராக்கு பார்த்த சரயுவின் கண்களில் ஜிஷ்ணுவின் கார் பட்டது.

“மாருதி ஸ்விப்ட்தானே இது… எங்கப்பா கிட்ட சர்விஸ் வர காரெல்லாம் இதுதான். இந்த கார் எவ்வளோ?”

விலையை சொன்னான்.

“வாயேன் உங்க ரெண்டு பேரையும் ஒரு ரவுண்ட் கூட்டிட்டு போறேன்” ஐஸ் பிடிக்க ஒரு வழியைக் கண்டறிந்தான் ஜிஷ்ணு. இருவரும் காரில் முன் சீட்டில் ஜிஷ்ணுவுக்கு அருகே நெருக்கியடித்து உட்கார்ந்து கொண்டார்கள். நண்பனுக்கு ஜன்னல் சீட்டை விட்டுக் கொடுத்துவிட்டு, ஜிஷ்ணு டிரைவ் செய்வதை ஆர்வமாகப் பார்த்தபடியே வந்தாள்.

“சோப்பு டப்பா மாதிரி இருக்கு இதுக்கே அவ்வளவு துட்டா. நான் பெருசானதும், காலேஜ் போவேன். மெக்கானிக்கல் எஞ்சினியர் ஆவேன். நிறையா துட்டு சம்பாரிப்பேன். அப்பறம் இது மாதிரி… இதை விட அழகா, அன்னைக்கு தூத்துக்குடிக்கு மந்திரி வந்திருந்தாரே அவருது மாதிரி தங்கக் கலர்ல ஒரு பென்ஸ் கார் வாங்கி எங்கம்மா அப்பாவை வச்சு நானே ஓட்டிட்டு போவேன்.

“சரவெடி நானு” அணுகுண்டு.

“நீயும்தாண்டா” உறுதியளித்தாள்.

“அப்ப நான் சரயு” ஆவலாய் கேட்டான் ஜிஷ்ணு. அவர்களோடு சேர்ந்து அவனும் சின்னஞ்சிறுவனாய் மாறியிருந்தான்.

“நீ கிடையாது விஷ்ணு”

காரை பிரேக் அடித்து நிறுத்தினான். “அப்செட் பண்ணிட்டியே சரவெடி… இதை ஒத்துக்கமாட்டேன். நானும் உன் வண்டில ட்ரன்க்லயாவது உட்கார்ந்து வருவேன்” அடம் பிடித்தான்.

“விஷ்ணு… நீ வண்டில சிகரெட் குடிக்குற… என் வண்டி பத்திகிச்சுன்னா” முன்னெச்சரிக்கையாய் சொன்னாள்.

ஆச்சரியமாய் கேட்டான். “நான் டிரைவ் பண்ணுறப்ப சிகரெட் குடிப்பேன்னு உனக்கு எப்படித் தெரியும்?”

“நாத்தம் அடிக்குதே. கார்ல சிகரெட் புகை படிஞ்சா கார் வாஷ் பண்ணாலும் போறது கஷ்டம்னு அப்பா சொல்வாரு. அப்பறம் இங்க பாரு”

சிதறிக் கிடந்த சிகரெட் துண்டங்களைக் காட்டினாள்.

“நீ வாயாடி மட்டுமில்ல பயங்கர அறிவாளி” அவள் கன்னத்தைக் கிள்ளி சிரித்தான் ஜிஷ்ணு.

அணுகுண்டு ஆமோதித்தான். “ஆமாம் விஷ்ணு… எங்க கூட்டாளிங்கல்லயே சரவெடிதான் ரொம்ப அறிவாளி…” பின் தயங்கித் தொடர்ந்தான். “நான் கூட பெரியவனானதும் கார்ல எல்லாம் சிகரெட் குடிக்க மாட்டேன். வீட்டுலதான் குடிப்பேன்”

“எலே அணுகுண்டு, இந்த கெட்டப் பழக்கமெல்லாம் பழகின, கையக் காலைக் கட்டித் தூத்துக்குடி கடல்ல சுறாமீனுங்கட்டத் தூக்கி போட்டுடுவேன்” எகிறினாள் சரயு.

“போடி… விஷ்ணு மட்டும் குடிக்கலாமா? அப்ப முதல்ல சுறாமீனுக்கு விஷ்ணுவைத் தூக்கிப் போடு” கோவித்தான் அணுகுண்டு.

அவனை மேலும் கீழும் பார்த்தவள், விஷ்ணு இருக்கும் உயரத்துக்கும் எடைக்கும் தன்னால் தூக்கிப் போட முடியாது என்று முடிவுக்கு வந்தாள். இருந்தாலும் வெளிப்படையாக சொல்லி தனது இமேஜ டேமேஜாக்க விரும்பாததால்,

“விஷ்ணு ஏற்கனவே கெட்ட பையன்டா. நம்ம நல்ல பசங்கடா” ஜிஷ்ணுவுக்கு சான்றிதழ் அளித்தாள்.

ஜிஷ்ணுவிடம் திரும்பி, “இதுனாலதான் விஷ்ணு உன்னை பிரெண்டா சேர்த்துக்க யோசிக்க வேண்டிருக்கு. உன்னால பாவம் அணுகுண்டும் கெட்டுப் போறான். இவனை பத்திரமா பாத்துக்குறேன்னு இவங்க அம்மாட்ட சொல்லிருக்கேன்” யோசனையுடன் சொன்னாள்.

“அச்சச்சோ… அணுகுண்டு கெட்டுப் போக நான் காரணமா இருக்க மாட்டேன். இனிமே நான் கார்ல சிகரெட் பிடிக்க மாட்டேன். என் பிரெண்ட் ரெக்வெஸ்ட்ட கொஞ்சம் கன்சிடர் பண்ணேன்” கெஞ்சினான்.

அவளுடன் இப்படி வாயாடுவது சந்தோஷமாக இருந்தது. அன்பின்றி வறண்ட பாலைவனமாய் இருந்த அவனது வாழ்க்கைக்கு இவர்களின் மாசற்ற அன்பு நீரைக் கடன் வாங்கிப் பாய்ச்சிக்கொண்டிருந்தான்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்த அணுகுண்டு, சரயுவின் கையைப் பிராண்டி எதிரே வந்த காரைக் காண்பித்தான், “இந்த கலர் காரா வாங்கப்போற?” என்றான்.

“ஆமாண்டா. ஆனா மெயின் ரோடு பங்குல மட்டும் பெட்ரோல் போட மாட்டேன். அவனுங்க கலப்படம் செயுறானுங்களாம். மைலேஜ் தர மாட்டேங்குதுன்னு அப்பா சொன்னாரு. நீயும் அங்க போடாத விஷ்ணு. நீ இந்த ரகசியத்தை வெங்கடேஷ் அண்ணன் கிட்ட கூட சொல்லக் கூடாது.” கம்பன் வீட்டுக் கட்டுத்தறியாய் உரையாற்றினாள் மெக்கானிக்கின் பெண்.

“ஏன் வெங்கடேஷ்ட்ட சொல்லக் கூடாது? அவன் தங்கச்சி உன் பிரெண்ட் இல்லையா? அவனும் பாவமில்ல?”

“அவங்கப்பா வட்டிக்கு விட்டு ஏகப்பட்ட பணத்தை கொள்ளையடிச்சுருக்காராம். அதுல கொஞ்சம் செலவழிஞ்சா தப்பில்ல. அதனால அவங்க வீட்டுல சொல்ல வேண்டாம். அப்பறம் நீ ஊர் பூரா போய் எங்க தொழில் ரகசியத்தை சொன்னா, எங்கப்பாக்கு ரிப்பேர் செய்ய எப்படி வண்டி வரும்?” தனது தந்தைக்குத் தந்திரமாய் பிசினஸ் பிடித்தாள்.

“என் கிட்ட மட்டும் எப்படி சொன்ன?”

“நீ இப்ப என் பிரெண்ட் ஆயிடேல்ல அதனால அந்த ரகசியத்தை சொல்லுறேன். யார்கிட்டயும் சொல்லமாட்டேன்னு அம்மா சத்தியம் பண்ணு” அவளையறியாமல் அவனை பிரெண்ட்டாகியிருந்தாள்.

ஜிஷ்ணுவிடம் சத்தியம் வாங்கி காற்றில் வானத்துக்கு ஊதி விட்டாள்.

“இங்கபாரு விஷ்ணு ரெண்டு சத்தியம் செஞ்சிருக்க. காருல இனிமே சிகரெட் குடிக்க கூடாது, வெங்கடேஷ் அண்ணனுக்கு நான் சொன்ன ரகசியத்தை சொல்ல கூடாது. உன் சத்தியத்தை வானத்துல சாமிகிட்ட ஊதி விட்டேன். இனிமே மீறுன அய்யனார் சாமி கருப்பை விட்டுக் கண்ணைக் குத்திடும்” பயமுறுத்தினாள்.

அவளுக்கு செய்த சத்தியத்தை இன்றளவும் காப்பாற்றி வருகிறான் ஜிஷ்ணு. அவனுக்கும் அவளுக்குமான கவிதையான உறவு, அன்பு அவன் உயிர் உள்ள வரை சுவாசமாய் கலந்திருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 62தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 62

காலையிலிருந்து பொற்கொடி அபியை ஜிஷ்ணுவைப் பார்த்து அப்பா என்று சொல்ல ட்ரைனிங் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவனோ ராமைத் தான் அப்பா என்றழைப்பேன் என்று அழிச்சாட்டியமாய் நிற்கிறான். “அம்மா அவனை கம்பெல் பண்ணாதிங்க” என்று விஷ்ணு அழுத்தி சொன்னான். “அவன் அணுகுண்டை அப்பாவாவே

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 14தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 14

இன்று மியூனிக் அலுவலகத்திலிருக்கும் போது ராமை அழைத்தாள் சரயு. குசலம் விசாரித்தபின் ஜிஷ்ணு வந்திருப்பதைச் சொன்னாள். எதிர்பாராதவிதமாக அவனை சந்தித்ததையும் மறைக்கவில்லை. ராமுக்குத் தெரியாத ரகசியம் அவளிடம் ஏதுமில்லை. “எந்த ஜிஷ்ணு… ஓ… உன் அடலசன்ட் க்ரஷா? அவன் எங்க இந்தப்