Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),Tamil Madhura தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 16’

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 16’

அத்தியாயம் – 16

காலை நேரம் பரபரப்பாய் கிளம்பிக் கொண்டிருந்தான் ப்ரித்வி. சனிக்கிழமை என்பதால் நந்தனாவுக்கு விடுமுறை. நீளமுடியைக் கொண்டையாக முடித்துக் கிளிப் போட்டு, வீட்டில் போடும் பைஜாமாவுடன் சமையலறையில் சப்பாத்தியைத் தேய்த்துக்  கொண்டிருந்தாள்.

“டிபன் சாப்பிட்டுட்டு போங்க” உள்ளிருந்து கத்தினாள்.

“வேண்டாம் லேட்டாச்சு”

“ரொட்டியை ரோல் செய்துத் தரேன். ஒரு நிமிஷத்தில சாப்பிடலாம்.”

“அதுக்கெல்லாம் நேரமில்ல”

“சாப்பிடாம வீட்டை விட்டு நகர முடியாது” என்ற நந்தனாவின் அதட்டல் குரலால் சோபாவில் அமர்ந்தான். ரிமோட்டை எடுத்து தலேர் மெகந்தியின் பாட்டைப் போட்டவாறே ‘துனுக் துனுக் துன்’ எனக் கூட சேர்ந்துப்  பாடினான்.

எப்பொழுதும் பூட்டப்படாமலிருக்கும் அவனது வீட்டு வாயிலைத் திறந்து உள்ளே வந்தாள் கர்ஜீவனின் முதல் பெண் ரிங்கி .

“ப்ரித்வி ஒரு சின்னத் தப்பு நடந்துடுச்சு” அவனருகே நெருக்கமாக சோபாவில் அமர்ந்தவாறு சொன்னாள்.

என்ன என்பது போலப் பார்த்தான்.

“அப்பா எக்ஸாம் பீஸ் கட்டப் பணம் தந்தா….ரா….. அதை டெல்லி டூர் போகக் கட்டிட்டேன். இப்ப எங்கப்பா டூருக்கு நோ சொல்லிட்டார்”

“அதுக்கு…. நானென்ன செய்யமுடியும்”

“சம்பாதிக்கிறதை செலவே பண்ணாம பீரோல ஒளிச்சு வச்சிருக்கிறியே, அதுல கொஞ்சம்  எனக்குத் தர முடியும்”

“உங்கப்பாவ ஏமாத்தி நீ பண்ணுற திருட்டுத்தனத்துக்கெல்லாம் என்னால சப்போர்ட் பண்ண முடியாது”

முறைத்தாள் “சப்போர்ட் பண்ண மாட்டியா ப்ரித்வி……  ஓகே… சரி… குட்…. அப்ப நானும் என் சப்போர்ட்டை வாபஸ் வாங்கிக்கிறேன். யாரையோ ஆச ஆசையா ஜானு ஜானுன்னு கூப்பிட்டு வழியிறன்னு கேள்விப்பட்டேன். அந்த அப்பாவிக்கு ஜானுன்னா என்னன்னு கூடத் தெரியல. ஏதோ ஒரு பேருன்னு நினைச்சுக்கிட்டிருக்கு. அதுகிட்ட நானே போய் அர்த்தத்தை சொல்லிடுறேன்….”

 

“ரிங்கி இதை வைச்சு ப்ளாக்மெயில் பண்ணியே என்கிட்டே பத்து சினிமா டிக்கெட் கறந்திருக்க. இனிமேலும்  மிரட்ட முடியாது. ஜானுன்னா என்னான்னு அவளுக்கு ஒரு மாதிரி விளக்கம் சொல்லிட்டேன். அதை அவளும் நம்பிட்டா. அதைவிட நீ ஒரு பொய்க் கோழின்னு அவளுக்கு அழுத்தம் திருத்தமா சொல்லிருக்கேன். உன் வாய்லருந்து வர்ற ஒரு வார்த்தையைக் கூட இனிமே நம்ப மாட்டா”

குறுக்கும் நெடுக்குமாய் கையைக் கட்டியவாறே யோசனையோடு  நடை போட்டவளை நக்கலாகச் சிரித்தவாறு பார்த்திருந்தான் ப்ரித்வி

 

“யாரை ஏமாத்தலாம்னு ப்ளான் பண்ணாம, டெல்லி டூரை கான்சல் செஞ்சுட்டு, அந்தப்  பணத்தை வாங்கி எக்ஸாம் எழுதக் கட்டு” அறிவுரை கூறினான்.

 

அதை நீ என்ன சொல்வது என்பதைப் போல பார்த்தவாறு அவனருகே வந்தவள் “ப்ரித்வி….  ஒரு மனுஷிய  நல்லவளா தொடர  வைக்கிறதும், கெட்டவளா மாத்துறதும் சூழ்நிலைதான். இதை நீ புரிஞ்சுக்கோ”

“சம்மந்தமில்லாம இப்ப ஏன்  அதை என்கிட்டே சொல்லுற”

“உன்கிட்ட நான் நல்லவளா நடக்கணும்னு எவ்வளவோ ட்ரை பண்ணாலும், என்னைக் கெட்டவளா மாத்துறியே ப்ரித்வி” என்றவள்

“தலேர் மெகந்தி டான்சை விட சுவாரஸ்யமான ரொமான்ஸ் வீடியோஸ்  என்கிட்டே இருக்கு பாக்குறியா”

அவளது மொபைலில் இருந்த வீடியோவைக் காண்பித்தாள் .

 

நந்தனா பாதி சாப்பிடும்போது காலிங்பெல் சத்தம் கேட்டு எழ, அவளது உணவை அவளறியாமல் எச்சில் செய்து வைக்கும் ப்ரித்வி

அவள் கண்மூடி இறைவனை வணங்கும் நேரம் தைரியமாய் எதிரே நின்று சைட் அடிக்கும் ப்ரித்வி.

அவள் ஹாலில் டீவி  பார்க்கும்போது அவனது அறையின் கண்ணாடியில் தெரியும் நந்தாவுக்கு இச் இச்சென முத்தம் தந்து கண்ணாடியை நாஸ்தி பண்ணும்  ப்ரித்வி

பைக்கில் காதலோடு அவளது கைகளை எடுத்துத் தனது இடுப்பில் வளைத்துக் கொள்ளும் ப்ரித்வி

இப்படி ப்ரித்வியின் பல முகங்களைத் துகிலுரித்திருந்தாள். எல்லாவற்றிலும் ப்ரித்வி விட்ட ஜொள்ளு மழை கச்சிதமாய் படம் பிடிக்கப்பட்டிருந்தது.

“எப்ப நடந்தது இது….. எப்படி இது?”  வார்த்தைகள் வராமல் திணறினான்

“அதையெல்லாம் வெளிய சொன்னா நானும் ப்ரித்வி மாதிரி முட்டாளாயிடுவேன். இப்ப சொல்லு… நீயே தர்றியா இல்லை இந்த சிடுமூஞ்சி ப்ரித்வி,  சூப்பர் மூஞ்சி நந்தனா நடித்த   ‘மதுரை எக்ஸ்பிரஸ்’ சை  ரிலீஸ் பண்ணட்டுமா”

எழுவதைப் போல் பாவனை செய்தாள்.

 

அவசரமாய் கைகளைப் பிடித்து அமர வைத்தவன் “எவ்வளவு வேணும்”

“ஒன்லி டென் தௌசண்ட்”

“செமஸ்டர் எக்ஸாம் பீஸ் அவ்வளவா? நந்தாவுக்கு ரெண்டாயிரம்தானே ஆச்சு”

“இதையெல்லாம் வக்கணையாக் கேளு, ஆனா மாசக்கணக்கா காதலை சொல்லாம சைட் மட்டும் அடி”

“அதுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை. பீஸ் உனக்கு மட்டுமா இல்லை உன் கிளாசுக்கே கேக்குறியா?”

“உனக்கு எல்லாத்துக்கும் கணக்கு சொல்லணும். நான் முதல் செமஸ்டர் வாஷ் அவுட். அந்த பீசை யார் கட்டுவா? லேபுக்கு ஹெல்ப் பண்ண லாப் அட்டண்டர உஷார் பண்ணனும். அதுக்கு உன் தாத்தாவா பணம் தருவார்”

தனது ரூமிலிருந்த பீரோவில் சட்டைகளுக்கு நடுவேயிருந்த  பணத்தை எடுத்துத் தந்தவன் “தொலை… இந்த செம்லயாவது எல்லாப் பேப்பரும் ஒழுங்கா பாஸ் பண்ணு” என ஆசீர்வாதித்தான்.

“ப்ரித்வி ,பணம் வைக்கிற இடத்தை மாத்திக்கிட்டே இருக்க. இது நல்லால்ல” என்றவாறு பின்னால் நின்று வாய்ஸ் தந்தாள் ரிங்கி.

“ரிங்கி பணம் வேணும்னா என்கிட்டே நேரடியாக் கேளு, என் வீட்டுல காமிரா வச்சுப் பீதியைக் கிளப்பாதே”

“யூ ஆர் சோ ஸ்வீட் ப்ரித்வி. இதுக்குத்தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்” என்றவாறு அவனை இறுக்கிக்  கன்னத்தில் முத்தமிட்டாள்.

“ப்ரித்வி நேரமாச்சுன்னு பறந்துட்டிருந்திங்க. சாப்பாடு வச்சு பத்து நிமிஷமாச்சு, ரூம்ல இன்னும்…. “ என்றபடி ப்ரித்வியின் அறைக்கு வந்த நந்தனாவின் கண்களில் ரிங்கி கடைசியாக சொன்ன வசனமும், முத்தமும் பட்டது. அதிர்ந்து போய் நின்றாள்.

அவளின் அதிர்ச்சி குறும்புப் பெண் ரிங்கிக்கு இன்னமும் குஷியைக் கிளப்ப, ப்ரித்விக்கு மறுகன்னத்திலும் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு, “ப்ரித்வி இனிமே உன்னை விட்டுப் பிரிஞ்சிருக்க முடியாது. அடுத்தமாசம் எனக்கு பதினெட்டு வயசானதும்  நம்ம திருட்டுக் கல்யாணத்தை வச்சுக்கலாம். உன் சார்ப்பா நந்தாவை சாட்சிக் கையெழுத்துப் போடக் கூட்டிட்டு வந்துடு”.

“பை மேரி ஜான், பை நந்தா” என்று சொல்லிவிட்டுக் வாயில் கதவை படாரென சாத்திவிட்டு ரிங்கி வெளியேறியதை உணர முடியாதவளாய் நின்றாள்.

சிலையாய் நின்ற நந்தனாவை அழைத்தும் பதிலில்லாமல் போகவும், தோள் தொட்டு உலுக்கியவன் “நந்தா அவ விளையாட்டுக்கு சொல்லிட்டுப் போறா… “ விளக்கம் சொல்ல முற்பட்டான்.

“அது உங்க பர்சனல் விஷயம் ப்ரித்வி. என்கிட்டே நீங்க விளக்கம் சொல்லணும்னு அவசியமில்லை” பல்லைக் கடித்தபடியே சொன்னாள்.

ப்ரித்விக்குக் கோவம் வந்தது “என் பெர்சனல் விஷயத்துக்கும் உனக்கும் சம்மந்தமில்லையா. அதுனாலதான் அவ எனக்கு முத்தம் தந்ததைப் பார்த்துட்டுப் பேயறஞ்சாப்பில நிக்கிறியா?” ஆத்திரத்தில் கத்தினான்.

“பேசாதிங்க, அவதான் தெரியாம செயுறான்னா உங்களுக்கு புத்தி புல் மேயப் போயிருந்ததா….. அவகிட்ட நீ சின்ன வயசில கட்டிப் பிடிச்சது முத்தம் தந்ததெல்லாம்  சரி… இப்ப உன் வயசுக்கு இதெல்லாம் தப்புன்னு சொல்லித் திருத்திருந்தா… என் ப்ரித்வி நல்லவர்ன்னு நானும் ஊர் பூராவும் டமாரமடிச்சிருப்பேன். நீங்க சுகம்மா கன்னத்தைக் கொடுத்துட்டுல்ல நிக்கிறிங்க…. ஒருவேளை  நான் நிக்கிறதைப் பார்த்ததும் நீங்க உங்க கொஞ்சலை நிறுத்திட்டிங்களா” பதிலுக்கு நந்தனாவும் கத்தினாள்.

“ஆமாம் நான் உனக்கு முத்தம் தந்தப்ப திகைச்சுப் போய்  நீ நின்ன பாரு, அதுமாதிரிதான் நானும் நின்னேன்” வார்த்தை தடித்தது

நந்தனாவின் உதடுகள் துடிக்க கண்கள் கலங்க ஆரம்பித்தது. ஆத்திரத்தால் அவளைப் புண்படுத்தியதை உணர்ந்தவன், கோவமாய் அறையை விட்டு வெளியே செல்ல முயன்றவளின் கைகளைப் பிடித்து பலவந்தமாக அவனருகே இழுத்தான். முரண்டு பிடித்தவள் அவனது இறுக்கமான பிடியை விட்டு விலக முடியாமல் அமைதியானாள். சிறிது நேரத்தில் அவளைக் காற்றுக் கூட புகமுடியாமல் அணைத்த ப்ரித்வியின் கரங்களுக்குள் அடைக்கலமாகி அவனது மார்பிலே கண்ணீரை உகுத்தாள். கனத்த மௌனம் அங்கு ஆட்சி செய்ய நந்தனாவின் விசும்பலும், அவளை மார்போடனைதிருந்த ப்ரித்வியின் வருடலையும் தவிர வேறெந்த நிகழ்வுமில்லை.

கம்மிய குரலில் சொன்னான் ப்ரித்வி “ஜானு நீ என்னை சந்தேகப்படலாமா…… முதன் முதல்ல பெரியகுளத்தில உன் வீட்டு முன்னாடி கோலம் போட்டப்ப இந்த தேவதையைப் பார்த்தேன். அன்னைக்கே என் மனசுக்குள்ளயும் அழகான காதல் ரங்கோலி போட்டு குடியேறிட்ட. இத்தனை நாளா நீ என் மனசில இருக்க, என்னை உனக்குக் கொஞ்சம் கொஞ்சமா புரியவைக்கத்தான் முயற்சி செய்தேனே தவிர இப்படிக் கட்டிப்பிடிச்சேனா” இறுக்கி அணைத்தான்.

“இந்தப்  பேரழகியோட சாமந்திப்பூ நெத்தில இப்படி முத்தம் தந்தேனா?” மென்மையாக நெற்றியில் இதழ்பதித்தான்

“சாயந்தரம் என்னைப் பார்த்ததும் சூரியகாந்திபூ மாதிரி விரியிற உன் கண்ணுக்கு இப்படி கிஸ் பண்ணேனா” அவனது இதழ்கள் அவளது இமைகளில் பதிந்தது.

“ஆப்பிளா சிவந்திருக்கிற இந்தக் கன்னத்தைக் கடிச்சேனா” அவன் கடித்ததில் ஏற்பட்ட வலியைப் பொறுக்க முடியாமல் ‘ஸ்…” என்றாள்.

ப்ரித்வியின் பார்வை அவளது இதழ்களில் படிந்தது. “பொறுக்கியா இருந்தேன்னா ரோஜாப்பூவாய் சிவந்திருக்கிற உதட்டை இவ்வளவு நாள் விட்டு வச்சிருப்பேனா”. ரோஜாப்பூ அவனது இதழ்களால் சுவை பார்க்கப்பட்டது. இருவரின் கண்களும் கிறக்கத்தில் மூடின. நொடிகள் நிமிடங்களாய் மாறியது.

செவ்விதழ் சேரும்போது ஜீவன்கள்  சிலிர்த்தது

ஒவ்வொரு ஆசையாக உள்ளத்தில் துளிர்த்தது

மெல்லிய மேனியும் சில்லென ஆனது

வெட்கமும் சீக்கிரம் விடைபெற்றுப் போனது

தனது கைகளில் துவண்டவளை ஏந்தி படுக்கையில் படுக்க வைத்தவன் “ஜானு.. உன்கிட்ட தாஜ்மஹால் முன்னாடி காதலை சொல்லணும்னு நெனச்சேனே. அவசரக் குடுக்கை இப்படி ஆத்திரத்தில காதலைக் கொட்ட வச்சிட்டியே”

பொறுக்காமல் இடையிட்ட கைப்பேசியின் அழைப்புக்கு உடனே வருவதாக பதிலளித்தவன் “இன்னைக்கு வெளிய போக மனசேயில்ல. கடமை அழைக்கிறது. சீக்கிரம் வந்துடுறேன் ஜானு. பத்திரமா இருந்துக்கோ” மனதேயில்லாமல் இதழ்களில் அழுத்தமாய் முத்தமிட்டு நகர்ந்தான்.

“நீங்க சாப்பாடு சாப்பிடலையே” அவன் சட்டையைப் பிடித்து இழுத்தபடி காலரைப் பார்த்துக் கேட்டாள். அவனது கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் வெட்கம் பிடிங்கித் தின்றது.

“பசிக்குதுதான். ஆனாலும் கல்யாணம் பண்ணிக்க வேண்டாமா. நாளைக்கே தாலப் மந்திர்ல கல்யாணம் செய்துக்கலாமா” என்று எதிர் கேள்வி கேட்டவனுக்கு பதிலாக போர்வையால் முகத்தை மூடிக் கொண்டாள். சிரித்தவாறு கிளம்பினான் ப்ரித்வி.

தியமே இரவு சமையலை ஆரம்பித்து விட்டாள் நந்தனா. ப்ரித்விக்குப் பிடித்த நெய் சொட்டும் சர்க்கரைப் பொங்கல், நல்லெண்ணெய் மணத்துடன் புளியோதரை, வெண்ணையாய்க் கரையும் தயிர் சாதம், சிவக்க வறுத்த உருளைக்கிழங்கு ரோஸ்ட், தேங்காய் துவையல் எனப்  பிரமாதமாய் சமைத்தாள். கர்ஜீவனின் வீட்டுக்கும் சேர்த்து சமைத்திருந்ததை பெரிய ஹாட் பாகில் எடுத்து வைத்தாள். வீட்டை சுத்தப்படுத்தி, மெதுவாய்க்  குளித்து, ப்ரித்வியின் ஸ்பெஷல் தேர்வான குங்கும நிறத்தில் தங்க சரிகை வேலைப்பாடுகள் கொண்ட சல்வாரை அணிந்து கொண்டாள். நீள முடியைத் தளர்வாகப் பின்னியவள், ரோஜா நிற லிப்கிளாசை மெலிதாகத் தீட்டிக் கொண்டாள். நெற்றியின் நடுவே மரூன் நிறப் பொட்டை ஒட்டினாள். பின்னர் விளக்கேற்றி இறைவனை வணங்கினாள். “கடவுளே எல்லாமே நல்லபடியா முடிய அருள் புரி”. வாயில் மணியோசை கேட்டுத்  துள்ளிக் குதித்துக் கதவைத் திறந்தாள். வெளியிலிருந்த உருவம் ஒரு வினாடி திகைத்தது

“நந்து… நீயா… நான் எதோ வீடு தெரியாம கதவைத் தட்டிடேனோன்னு பயந்துட்டேன். அப்படியே பஞ்சாபி பொண்ணா மாறிட்ட போ” என்றவாறே உள்ளே நுழைந்தான் ராஜேந்திரன், பரமசிவம், அவர்களுடன்  இறுக்கமான முகத்துடன் ப்ரித்வியும் நுழைந்தான்.

“நல்லாயிருக்கியா தாயி” என்றவாறு வந்தவர்களில் பெரியகுளத்தில் டீக்கடை வைத்திருந்த திருமலையும் இன்னும் இரு பெரிய தலைகளும்  அடக்கம். திகைப்போடு அனைவரையும் பார்த்திருந்தவளுக்கு இன்னமும் விருந்தாளிகள் முடியவில்லை என்பதை உணர்த்தும் வண்ணம் “உள்ள வாங்க” என்றான் ப்ரித்வி.

தயக்கமாய் உள்ளே நுழைந்தார் அகிலாண்டேஸ்வரி. அவரைப் பின் தொடர்ந்து ஏதோ தெய்வத்தைப் பார்ப்பது போன்ற உணர்வுடன் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தான் ரஞ்சன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 3’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 3’

அத்தியாயம் – 3 கைபேசி சரி செய்ய முடியாத அளவுக்கு பழுதாகிவிட்டதே… சரி செய்ய வேண்டுமென்றால் வெளியே செல்ல வேண்டும். இறுதித் தேர்வு முடிந்துவிட்டதால் வெளியே செல்ல பெரியம்மாவின்  ஆயிரம் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.   அப்படியே வெளியே சென்றாலும் இப்போதெல்லாம்