நிலவு 64
அவர் கூறி முடியும் போது ஆரவின் வளர்ப்புத் தாயின் கன்னத்தை பதம் பார்த்தது ஒரு கை. அனைவரும் திரும்பிப் பார்க்க மீரா அவர்கள் முன் காளியாய் நின்று இருந்தாள். மீராவின் கோபத்தை எவருமே பார்த்தது இல்லை. முதன் முறையாக அனைவரும் பார்த்தனர்.
“நீ எல்லாம் என்ன ஜென்மம்? ஒரு பெத்த அம்மாவிடம் இருந்து பிள்ளையை பிரிச்சு வைச்சிருக்கிங்க? அதுவும் பணத்திற்காக, சே நினைத்தாலே அறுவெருப்பா இருக்கு. சரி என் அண்ணனை தூக்கிட்டு போனிங்க ஒரு அம்மா அப்பா கொடுக்க வேண்டிய பாசத்தை கொடுத்திங்களா? இல்லையே அவனை அவமானபடுத்தி, நிறைய கஷ்டங்களை கொடுத்து, என் அண்ணனையே துரத்தி விட்டு இருக்கிங்க, எனக்கு வருகிற கோபத்துக்கு உங்களை என் கையால் கொன்னு போட்டாலும் என் ஆத்திரம் தீராது” என்றாள் கோபமாக கணீர் குரலில்.
அனைவரும் ஆரவின் முகம் பார்க்க உணர்ச்சிகள் துடைக்கப்பட்டு இறுகிய முகத்துடன் நின்று இருந்தான். கிறு அவன் அருகில் சென்று அவன் கைகளை பற்றிக் கொண்டாள்.
“எல்லோருமே சேர்ந்து என் வாழ்க்கையில் விளையாடிட்டிங்களே” என்றான் உடைந்த குரலில் ஆரவ்.
“நாங்க…” என்று அருண் ஆரம்பிக்க முன்பு
“நிறுத்துங்க பா, அண்ணாவோட இந்த நிலைக்கும், கிறுவிற்கும் அண்ணாவிற்கும் இடையில் இப்போ உருவாகி இருக்கிற பிரச்சனை, இப்போ இங்க இருக்கிற பிரச்சனை எல்லாவற்றிற்கு நீங்க இரண்டு பேரும் தான் காரணம்” என்று கத்தினான் வினோ.
தன் தாயிடம் திரும்பியவன் “ஒன்பது மாசமாவா உங்களுக்கு உங்க கர்பத்தை பற்றி வீட்டிற்கு சொல்ல முடியல்லை? சரி இங்கே வந்ததுக்கு அப்பொறம் தாத்தா கிட்ட சொல்லி இருந்தால் கூட அண்ணாவை கண்டிபிடிச்சி இருக்கலாமே? உனக்கு வந்ததுக்கு அப்பொறம் அண்ணாவை மறந்து எப்படி மா சகஜமா இருந்த?” என்று கேட்க,
“டேய் நான் அவனை ஒன்பது மாசம் சுமந்து பெத்து எடுத்தேன் டா, அவன் மூத்த பிள்ளை டா, எப்படி டா என்னால் அவனை மறந்து வாழ முடியும்? என்னை சொன்ன ஒன்பது மாசமா சொல்ல முடியல்லையா? நாங்க மும்பைல இருந்த சூழ்நிலை என்னன்னு உனக்கு தெரியுமா? முதல் நான்கு மாசமும் இவரோட பிசினஸ் பிரச்சனை அதற்கு அப்பொறம் வீட்டில் சொல்லலாம்னு இருந்தால் அப்போ தான் பிரச்சனையே ஆரம்பிச்சது.
இங்க ஆட்சி மாறிருச்சி அதற்கு காரணம் தமிழ் நாட்டுல இருந்து வந்த ஒரு ரிபோர்டர். அதனால் தமிழ் நாட்டுல இருந்து வந்தவங்களை தேடித் தேடி கொல்ல ஆரம்பிச்சாங்க. நானும் உன் அப்பாவும் மறைந்து வாழ்ந்தோம். நாங்கள் மட்டும் இல்லை இன்னும் நிறைய பேர். கிட்டத்தட்ட நான்கு மாசமா இந்த பிரச்சனை தீவிரமா இருந்தது. அதற்கு அப்பொறமா இராணுவம் தான் கன்ரோல் பன்னது.
கடவுளோட அருளால் என் பிரசவம் நெருங்க நெருங்க பிரச்சனை குறைய ஆரம்பித்தது. என் பிரசவம் நேரம் எந்த பிரச்சனையும் இல்லை. அவன் கடவுள் ஆசிர்வாதத்தோடு பிறந்தவன், அதனால் தான் ஒரு லெடர் கூட போட முடியல்லை. இந்த பிரச்சனை இந்தியா முழுவதுமே தெரியும். என் மனசு மாற்றத்திற்காக உங்க அப்பா எல்லாவற்றையுமே அங்க விட்டுட்டு வந்துட்டாரு”
“நான் இங்கே இருந்தாலும் என்னால் ஆரவை மறக்க முடியல்லை பகலில் எல்லோர் கூடவும் பேசுவேன். நான் வந்த கொஞ்ச நாளில் அமைதியா இருக்கிறதைப் பார்த்து வீட்டில் எல்லோருமே மும்பை பிரச்சனையால் இப்படி இருக்கிறேன்னு நினைச்சாங்க, ஆனால் அது உண்மை இல்லை, என் பிள்ளையால தான் இப்படி இருந்தேன். அவனை நினைத்து நான் அழாத நாளே இல்லை, அவரும் என்னை சமாதானபடுத்துவாரு, அப்பொறம் இரண்டு வருஷம் கழிச்சு நீ பிறந்த, அப்பொறம் நான் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பினேன்” என்றார்.
“ஆரம்பத்திலேயே இதைப் பற்றி மாமா கிட்ட சொல்லி இருந்தால் என் பிள்ளையை இழந்திருக்க மாட்டேன், எங்க தப்பு தான்” என்று அவர் கண்ணீர் வடிக்க ஆரவ் அப்படியே மயங்கிச் சரிந்தான்.
அனைவரும் “ஆரவ்” என்று அனைவரும் பதற கிறு ஆரவை மடியில் வைத்து அழுதாள். எதற்கு கலங்காமல் அனைத்திலும் சிங்கமென முகம் கொடுப்பவன் இன்று இந்த நிலையில் இருப்பது அனைவரையும் வெகுவாக பாதித்தது.
அவனை அவசரமாக ஹொஸ்பிடலில் அட்மிட் செய்தனர். கிறுவோ அவனை விட்டு நகரவே இல்லை. டாக்டரிடம் சண்டையிட்டு ஆரவுடன் வாட்டிற்குள் நுழைந்தாள். அவனை பரிசோதித்த டாக்டர், அதிக டிப்ரஷனினாலே இந்த நிலமை எனவும் பயப்படத் தேவையில்லை எனவும் கூறிச்சென்றார். அனைவரும் அங்கேயே இருக்க அஸ்வின் அனைவரையும் சமாளித்து வீட்டிற்கு வீட்டிற்கு அனுப்பினான்.
கிறு முன்னேயே மீராவிடம் ஆரவின் வளரத்தவர்கள் வருவதைப் பற்றி கூறியிருந்ததால் அவள் ஒருவரும் அறியாமல் அவர்கள் பேசுவதை வீடியோ எடுக்க போடாகிராபரிடம் கூறி இருந்தாள். அதன்படி அவனும் எடுத்த வீடியோவை மீராவிடம் வழங்க அதை ACP சரணை அழைத்து வழங்கி இருவரையும் கைது செய்ய வைத்தாள். அவர்களும் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
அஸ்வின், மீரா, கிறு மாத்திரமே ஹொஸ்பிடலில் இருந்தனர். வீட்டிலோ அருணும், தேவியும் தங்களால் தனது குழந்தைக்கு இப்படி ஒரு நிலை என்று அழ அவர்களை மற்றவர்கள் சமாதானப்படுத்தினர். வினோ, மீரா இருவருமே எப்போது ஆரவ் அவர்களை ஏற்றுக் கொள்கிறானோ அன்றே அவர்களுடன் பேசுவதாக கூறிவிட்டனர்.
ஹொஸ்பிடலில் ஆரவ் கண்விழிக்க கிறு அவன் தலைக்கு அருகில் தலை வைத்து அவன் கைகளை பிடித்து உறங்கிக் கொண்டு இருந்தாள். அஸ்வின், மீரா இருவருமே வெளியே உள்ள கதிரையில் உறங்கினர். ஆரவ் புன்னகைத்து கிறுவின் தலையில் இதழ்பதிக்க கிறு விழித்துக் கொண்டாள்.
“கண்ணா இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்க
“எனக்கு எதுவுமே இல்லை. நல்லா தான் இருக்கேன், நீ என் பக்கத்துல இருக்கும் போது எனக்கு என்ன நடக்கபோகுது?” என்று ஆரவ் கேட்க
கிறு அவனை விழித்துப் பார்த்தாள்.
“எதுக்கு அப்படி பாக்குற?” என்று ஆரவ் கேட்க,
“நீ என் மேலே கோபமா இருந்தியே” என்று கூற
“அது போயிருச்சு” என்று கண்சிமிட்டினான்.
அவள் புன்னகைத்து “இரு, டாக்டரை அழைச்சிட்டு வரேன்” என்று நகர அவள் கைபிடித்து நிறுத்தினான்.
“நான் நல்லா இருக்கேன், ஆமா யாரு இருக்கா உன் கூட?” என்று கேட்க,
“அஸ்வின், மீரா” என்றாள்.
“மற்றவர்கள் எங்கே? வீட்டிற்கு போயிட்டாங்களா?” என்று கேட்க,
அவள் ஆம் என்று தலையாட்டி குனிந்துக் கொண்டாள்.
“கண்ணம்மா இங்கே பாரு, நீ தேவையில்லாமல் உன் மனசை போட்டு குழப்பிக்காத புரியிதா? எனக்கு எல்லாவற்றையும் ஏத்துக்க டைம் வேணும்” என்றான்.
அவள் புன்னகைக்க அவளை அணைத்துக் கொண்டான்.
“உங்க ரொமேன்ஸ் முடிஞ்சுதா? உள்ள வரலாமா?” என்று அஸ்வின் கேட்க
“யாரு இங்க ரொமேன்ஸ் பன்றது?” என்று கேட்க
“நீங்க இரண்டு பேரும் தான்” என்றாள் மீரா.
“இது தான் உங்க ஊருல ரொமேன்ஸ் சொல்றதா?” என்று கிறு கேட்க,
அதற்கு மீரா பதிலளிக்க வாய் திறக்க
“அம்மா தாயே, இரண்டு பேரும் கொஞ்சம் வாயை மூடுங்க” என்றான் ஆரவ்.
இருவரும் புன்னகைக்க, விசாரிப்புகளை அஸ்வின் மீரா தம்பதியினர் ஆரம்பித்தனர்.
பின் கிறு மீரா,வினோ முடிவைக் கூற அதற்கு ஆரவ்,
“இங்க பாரு மீரா, இத்தனை வருஷமா பெத்து வளர்த்த அவங்களை கஷ்டபடுத்தாத” என்று கூற
“அண்ணா அவங்க பன்ன தப்பிற்கான தண்டனை இது தான். யாரும் இதைப் பற்றி பேச வேணாம்” என்றாள் மீரா முடிவாக.
பின் அவர்கள் இருவரும் வீடு செல்ல காலையில் ஆரவ், கிறு இருவருமே வீடு சேர்ந்தனர். அன்றைய தினம் அமைதியாக கழிய கிறு ஆரவ் உறங்கும் நேரம் அனைவரிடமும் ஆரவ் கூறியதைப்பற்றி கூறினாள். ஆரவ் இந்த அளவிற்கு மனம் மாறியதே பெரிய விடயமாக இருந்தது. பின் அதைப் பற்றி எவரும் பேசவில்லை. அனைவருடனும் அவன் சகஜமாகப் பேசினாலும் பெற்றவர்களுடன் முன்பு போன்ற ஒட்டுதல் இருக்கவில்லை.
அடுத்த நாள் அனைவரும் தத்தமது இடங்களிற்கு கிளம்ப தயாராக அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். முன்பை விட ஓரளவு பேசிச் சாப்பிட்டனர். சாப்பிட்டுக் கொண்டிருந்த மீரா அவசரமாக வாசிங் பேசனிற்குச் சென்று வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். பின் அனைவருக்கும் இந்த நற்செய்தி கூறப்பட மீண்டும் அந்த வீடு விழாகோலம் பூண்டது.
இன்னும் சில மாதங்களில் இந்த மகிழ்வு இல்லாமல் செல்ல போகின்றதே இன்று சந்தோஷமாக இருக்கின்றார்கள் என்று விதி அவர்களைப் பார்த்து சிரித்தது.
அஸ்வினை மீராவுடன் இங்கேயே இருக்குமாறு கூறி மும்பையில் நம்பகரமான வேறு ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டனர். அன்றைய தினம் செல்ல இருந்தவர்கள் எவருமே செல்லவில்லை.
“அஸ்வினும் அப்பா ஆக போறான். சூப்பருல்ல, அவனுக்கும் குட்டி குழந்தை, சின்ன கண்ணு, குட்டி மூக்கு, குட்டி வாய், சின்ன கால், கை அழகா இருக்கும் இல்லையா? அவளை தூக்கும் போது செம்ம பீல் வரும் போல இருக்கே, நமக்கு பொண்ணு பொறந்தாலும் அப்படி இருக்குமா டி” என்று அவன் ஏக்கமாக கேட்க,
அதைப் பார்த்தவளுக்கு அவன் ஏக்கம் புரிய
“ஆமா டா, உன்ன போலவே இருப்பா” என்றாள்.
“நீ முதலில் இந்தியாவிற்காக விளையாடு, செம்பியன்ஷிப்பை இந்தியாவிற்காக எடுத்து கொடு. அப்பொறமா இதையெல்லாம் பார்த்துக்கலாம்” என்றான்.
“கண்டிப்பா உனக்காக நான் அதை பன்னுவேன் டா, என்ன பிரச்சனை வந்தாலும் கப்பை ஜெயிக்காமல் இருக்க மாட்டேன்” என்றாள் உறுதியாக.
அவள் அறியவில்லை அவனுடைய ஆசைக்காக தன் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றை இழக்க இருக்கிறாள் என்று.
அடுத்த நாள் அனைவருமே சென்றனர். இதற்கிடையில் நாட்கள் நகர்ந்து ஒரு மாதமும் சென்றது. தர்ஷூ,ஜீவிக்கு இது ஐந்தாவது மாதமாக இருந்தது. இன்னும் இரண்டு மாதங்களில் இருவருக்கும் வளைகாப்பு ஒன்றாக வைப்பதாக முடிவெடுக்கப்பட்டது. மீராவிற்கு இது இரண்டாவது மாதம் என்பதால் அஸ்வின் அவளை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டான்.
ஆரவ், கிறுஸ்தி இருவருமே தினமும் மீராவின் குழந்தையுடன் பேசுவார்கள். அதற்கு அஸ்வின்
“என் பையன் மேலே பாசமா இருப்பானோ இல்லையோ கண்டிப்பா உங்க இரண்டு பேரு மேலேயும் பாசமா இருப்பான்” என்று கூறி சிரிப்பான்.
அதற்கு இடையில் இன்னும் இரண்டு மாதங்களில் நெட் போல் மெச் ஆரம்பமாகப் போவதாகவும், ஒரு மாதத்தில் பயிற்சிகள் ஆரம்பிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. அதனால் ஷ்ரவன், கீதுவின் நிச்சயம் மற்றும் திருமணம் அதற்குள் நடைபெற வேண்டும் என்று பெரியவர்களால் முடிவு செய்யப்பட்டது.