Tamil Madhura நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 29

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 29

அத்தியாயம் 29

“கோவில் வழிபாடு – முதலிய பல உடனடியான பொது நன்மை சம்பந்தப்பட்ட அவசர விஷயங்கள் தீர்ப்பைப் பொறுத்துக் காத்திருப்பதால் ஒரு வாரம் என்பது மிகவும் அதிகமான காலதாமதமாக இருக்குமோ?” என்று கருத்துத் தெரிவித்தார் எதிர்த்தரப்பு வக்கீல். அவருடைய கோரிக்கைக்குப் பின் அடுத்த மூன்றாவது நாளே தீர்ப்புக் கூறுவதாக அறிவித்தார் நீதிபதி.

அன்று அவ்வளவில் கோர்ட்டு கலைந்தது. கோர்ட் வாசலில் கூடி நின்று கொண்டிருந்த அர்ச்சகர்கள் வேணு மாமா வெளியே வந்ததும், அவரருகே வந்து சூழ்ந்து கொண்டனர்.

“என்ன சுவாமீ! ஏதோ நம்பிக்கையிலே உம்ம கிட்டத் தனியாச் சொன்னதைப் பதிவு பண்ணிக் கோர்ட்டிலேயே போட்டுக் காட்டி மானத்தை வாங்கிட்டேளே? இப்படிப் பண்ணலாமா நீங்க?” – என்று கைலாசநாதக் குருக்கள் அவரிடம் பரிதாபமான குரலில் கேட்டார்.

“பொய் சொல்றவாளை எங்கே வேணுமானாலும் எப்பிடி வேணுமானாலும் மானத்தை வாங்கலாம் சுவாமி! அதுலே தப்பே இல்லே” – என்று தாட்சண்யமே இல்லாமல் கடுமையாக அவருக்குப் பதில் சொன்னார் வேணு மாமா. அர்ச்சகர்கள் அந்தக் கடுமையைத் தாங்கமுடியாமல் அவரை விட்டு விலகிச் சென்றனர்.

“பொய் சொல்றவாளுக்கு அவா சொந்த வாயும் நாக்கும் கூட ஒத்துழைக்காது. அந்த வாட்ச்மேன் கமலி புரியாத பாஷையில் பேசினாள்னு முதல்லே சொல்லிட்டு அப்புறம் தடுமாறிப் போய்த் தமிழிலேதான் பேசினாள்னு உளறினான் பாருங்கோ. பஜனை மடம் பத்மநாப ஐயரும் மத்தவாளும் என்னையும் கமலியையும் ரதி மனமதச் சிற்பத்தின் கீழே ஆபாசமான நிலையிலே பார்த்ததாகப் புளுகிட்டு ரதி மன்மத சிற்பம் இரண்டாவது பிரகாரத்திலே இருக்குன்னு சாதிச்சானே? பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமோ? நேத்து விசாரணையோடு விட்டிருந்தாலும் பரவாயில்லே இன்னிக்கு அவா வக்கீல் தயார்ப் பண்ணிக் கொண்டு வந்துவிட்ட அத்தனை சாட்சிகளும் நன்னா அசடு வழிஞ்சுட்டா” – என்றான் ரவி.

“அது மட்டுமில்லேடா! கடவுள் மேலே ஆணையா நெஜம் பேசறோம்னு பிரமாணம் பண்ணிட்டுப் பொய் புளுகின இந்தப் பக்த சிகாமணிகளைவிட மனசாட்சி மேலே ஆணையா நெஜம் பேசறே’ன்னு உள்ளதை உள்ளபடியே சொன்ன அந்த நாஸ்திகன் எத்தனையோ சிலாக்கியமானவன்” என்று இறைமுடிமணியைப் புகழ்ந்தார் சர்மா.

அன்று கோர்ட்டில் பஜனை மடம் பத்மநாய ஐயர் முதலியவர்கள் தங்கள் வயதுக்கும் படிப்புக்கும் சாஸ்திர ஞானத்துக்கும் கொஞ்சங்கூடப் பொருத்தமில்லாமல் ஆபாசமாக இட்டுக் கட்டிப் புளுகிய புளுகு சர்மாவை மிகமிக மனவேதனைப் படச் செய்திருந்தது. தன் மேலுள்ள விரோதம் ஒன்றையே நினைத்துத் தங்களைச் சிறுமைப்படுத்திக் கொள்ளக் கூட அவர்கள் தயங்கவில்லை என்பதும் அவருக்குப் புரிந்தது. கோர்ட் வாசலிலிருந்து வீடு திரும்பக் காரில் புறப்பட்டார்கள் அவர்கள்.

“நுணலும் தன் வாயால் கெடும்னு வசனம் சொல்வாளே சர்மா! அதுபோல அவா நிர்ப்பந்தப்படுத்தி இங்கே கொண்டு வந்து நிறுத்தின சாட்சியங்களே அவாளை நன்னாக் காமிச்சுக் குடுத்துடுத்து” என்றார் வேணு மாமா. கமலி எதுவும் பேசாமல் காரில் மௌனமாக அமர்ந்திருந்தாள்.

“இதை எல்லாம் பார்த்துட்டு எங்க தேசத்தைப் பத்தியே தப்பா நினைச்சுக்காதேம்மா! உயர்ந்த விஷயங்களும் சாஸ்திரங்களும் தத்துவங்களும் தோன்றின அளவு உயர்ந்த மனிதர்கள் அதிகம் தோன்றாததுதான் எங்களோட குறை. படிக்கறதுக்கும் வாழறதுக்கும் சம்பந்தமில்லாமப் போனதுதான் இன்னிக்கு இந்த தேசத்தோட கோளாறு” என்று உருக்கமான குரலில் மன்னிப்புக் கேட்பதுபோல் கமலியைப் பார்த்துச் சொன்னார் சர்மா.

“அறியாமையால் மனிதர்களில் யாரோ சிலர் செய்யும் தவறுகளுக்குத் தேசம் எப்படிப் பொறுப்பாகும்? தேசத்தைப் பற்றித் தப்பாக நான் ஏன் நினைக்க வேண்டும்?” – கமலியே பதிலுக்கு அவரைக் கேட்டதிலிருந்து தேசத்தைப் பற்றி அவள் தவறாக எதுவும் நினைக்கவில்லை என்று தெரிந்தது.

*****

கோர்ட் வழக்கு என்று மற்றவர்கள் அலைந்து கொண்டிருந்த சமயத்தில் காமாட்சியம்மாளின் உடல் நிலை மேலும் மோசமாகி இருந்தது. குமாரும் பார்வதியும்தான் வீட்டில் அம்மாவைக் கவனித்தும் கொண்டிருந்தார்கள். ஒரு கோபத்துடனும் முரண்டுடனும் மற்றவர்களைத் தன்னருகே அண்டவிடாமல் வீம்பு பிடித்தாள் அவள். சர்மா தன்னைக் கலந்து கொள்ளாமலும், பொருட்படுத்தாமலுமே ரவிக்கும் கமலிக்கும் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறார் என்று அறிந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து காமாட்சியம்மாள் மீளவே இல்லை. அன்றிலிருந்து படுத்த படுக்கையாகி விட்டாள். சர்மாவையோ மற்றவர்களையோ பொருட்படுத்தக் கூடாதென்ற முரண்டில் தன் பிறந்தகத்து ஊருக்குக் குமாரைப் பஸ்ஸில் புறப்பட்டுப் போகச் சொல்லி முன்பு சங்கரமங்கலத்தில் பிரம்மோத்ஸவ சமயத்தில் வந்து தங்கள் வீட்டில் தங்கிவிட்டுச் சர்மாவுடன் கோபித்துக் கொண்டு வேறு வீட்டுக்குப் போய்த் தங்கிய தன் பெரியம்மாப் பாட்டியை அழைத்து வரச் செய்திருந்தாள் காமாட்சியம்மாள். கமலியே வேணு மாமா வீட்டுக்குப் போயிருந்ததனால் பாட்டி தன்னோடு வீட்டில் தங்க ஆட்சேபணை எதுவும் இராதென்று எண்ணித்தான் காமாட்சியம்மாள் அவளை வரவழைத்திருந்தாள். பத்து அரைத்துப் போடுவதற்கென்றும் நாட்டு வைத்தியம் சொல்வதற்கென்றும் பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டி வேறு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தாள்.

‘அப்பாவைப் பற்றியோ, ரவி அண்ணாவைப் பற்றியோ, கமலியைப் பற்றியோ, பேசினாலே அம்மா எரிந்து விழுகிறாள், கோபப்படுகிறாள் – அவளுக்கு, அதனால் உடம்புக்கு அதிகமாகி விடுகிறது’ என்று தெரிந்து குமாரும் பாருவும் அவர்களைப் பற்றியெல்லாம் அம்மாவிடம் பிரஸ்தாபிப்பதையே தவிர்த்துக் கொண்டிருந்தார்கள். கூப்பாடுகளும் வெளிப்படையான சண்டை சச்சரவும் இல்லை என்றாலும் வீட்டில் சண்டையின் அறிகுறியான ஒரு வேண்டத்தகாத அமைதி தொடர்ந்து நிலவிக் கொண்டுதானிருந்தது.

ஒத்தாசைக்காகக் குமார் பெரியம்மாவைக் கிராமத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்து விட்ட தினத்தன்று மாலையிலேயே அந்தப் பெரியம்மா காமாட்சியம்மாளிடம் தற்செயலாகக் கமலியைப் பற்றி விசாரித்திருந்தாள்.

“ஏண்டீ காமு! இந்தாத்திலே மின்னே நா வந்திருக்கிறப்போ ஒரு வெள்ளைக்காரி உன் புள்ளையோட வந்து தங்கியிருந்தாளே அவ எங்கேடீ? ஊருக்குத் திரும்பிப் புறப்பட்டுப் போயிட்டாளா? அவளாப் போனாளா இல்லை நீங்களே போகச் சொல்லிட்டேளா?”

காமாட்சியம்மாள் முதலில் இதற்குப் பதிலே சொல்லவில்லை. ஒன்றுமே காதில் வாங்கிக் கொள்ளாதது போலப் பேசாமல் இருந்துவிட்டாள். ஆனால் கிழவி விடுகிற வழியாயில்லை. தொணதொணத்தாள்.

“இப்போ இதை ஏன் விசாரிக்கிறேன் தெரியுமோடீ காமு? ஒரு சமாசாரம் கேழ்வைப் பட்டேண்டீ! நம்மூர் மனுஷா கொஞ்சப்பேர் பெரியவாளைப் பார்க்கப் புறப்பட்டுப் போயிருந்தா, அவா திரும்ப ஊருக்கு வந்து சொன்னா: அந்த வெள்ளைக்காரியும் உன் புள்ளையுமாப் பெரியவாளைப் பார்க்க அங்கே வந்திருந்துதுகளாம். அந்த வெள்ளைக்காரி ஸௌந்தரிய லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம், பஜகோவிந்தம்லாம் பெரியவா மின்னாடி ஸ்பஷ்டமா பாடினதோட மட்டுமில்லாமே அவா பாஷையிலேயும் மொழி பெயர்த்துச் சொன்னாளாம். பெரியவா ரொம்பச் சந்தோஷமாக் கேட்டுண்டிருந்தாளாம். அவர் மௌனம்கறதாலே ஒண்ணுமே பேசலையாம். ஆனா ரொம்பப் பிரியமாக் கேட்டதோட மட்டுமில்லாமத் திருப்தியோட இவாளை ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிச்சார்னு அதைப் பார்த்துட்டு வந்து ஊர்லே மனுஷா ஒரேயடியாக் கொண்டாடறா. ஊர் முழுக்க இதே பேச்சுத்தாண்டி. நேக்கே ஆச்சரியமாப் போச்சு, நம்பறதுக்கும் முடியலே. நம்பாமே இருக்கறத்துக்கும் முடியலே. ஒரு விசேஷமில்லாதவாளை அவா அப்பிடிப் பிரியமா உட்கார வச்சுண்டு பேசறதும் வழக்கமில்லே. ரெண்டு வருஷத்துக்கு மின்னாடி இந்தூர்ச் சீமாவையர் மடத்துச் சொத்தைக் கையாடிப்பிட்டுப் பெரியவாளைப் பார்த்துத் “தாராள மனசோட க்ஷமிக்கணும்னு” போய் நின்னப்போ அவர் மௌனமாயில்லாமே இருந்தும் கூட ஒரு வார்த்தை கூடப் பேசாமல் “போயிடு!”ன்னு கையை மட்டும் மறிச்சு அசைச்சுப் போகச் சொல்லிட்டாராம். அப்பேர்க்கொத்தவர் இவாகிட்ட இப்படி பிரியமா இருந்தார்னா அதுலே என்னமோ விசேஷம் இருக்கணும்டீ காமு…”

“எங்கிட்டயும் வந்து சொன்னா… ஆனா நான் அதை நம்பலே பெரியம்மா! வேற யாரும் சொல்லலே… இந்தப் பிராமணரே தான் சொன்னார். என் மனசை மாத்தறதுக்காகக் கதை கட்டி அளந்து விடறார்னுதான் நெனைச்சேன். ‘மடத்து மானேஜரே லெட்டர் போட்டிருக்கார்… படிச்சுக்காட்டறேன்… கேளு’ன்னார், அதையும் நான் கேட்கல்லே.”

“பொய்யாயிருக்காதுடீ! நடந்திருக்கும்னு தான் தோண்றது. நம்மூர் மனுஷா அத்தனை பேர் வந்து வாய் ஓயாமக் கொண்டாடறாளே?… பொய்யாயிருந்தா அப்பிடிக் கொண்டாடுவாளோடீ?”

காமாட்சியம்மாள் மௌனத்தில் ஆழ்ந்தாள். மேற்கொண்டு பெரியம்மாளிடம் என்ன பேசுவதென்றே அவளுக்குத் தெரியவில்லை. கமலிக்கும் ரவிக்கும் கலியாணம் ஏற்பாடாகியிருப்பது முதல் சகலத்தையும் தெரிந்து கொண்டுதான் பெரியம்மா தன்னிடம் இப்படிப் பேச்சுக் கொடுத்து ஆழம் பார்க்கிறாளா, அல்லது சாதாரணமாகத் தனக்குத் தெரிந்திருப்பதைத் தெரிவிக்கிறாளா என்று காமாட்சியம்மாளால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது அப்போது. பெரியம்மா அதற்குள் தன் பழைய கேள்வியையே இரண்டாம் முறையாகத் திரும்பவும் கேட்டுவிட்டாள்.

“என்னடீ! பதிலே சொல்ல மாட்டேங்கறே? அந்த வெள்ளைக்காரி இங்கே இருக்காளோ? ஊருக்குத் திரும்பிப் போயாச்சோ? உன்னைத் தாண்டீ கேழ்க்கறேன்…”

“இன்னம் போகல்லே பெரியம்மா! வடக்குத் தெருவிலே வேணு மாமா ஆத்திலே போய்த் தங்கியிருக்கா. அந்த மாமாவோட பொண் வசந்திக்கும் இவளுக்கும் ரொம்ப சிநேகிதம்! பம்பாயிலேருந்து அவளும் பொறப்பட்டு வந்திருக்கா. எங்கேயாவது போகட்டும். இப்போ இங்கே தொல்லையில்லாம நிம்மதியாயிருக்கு” – இந்த உரையாடல் இதற்கு மேல் நீளாமல் கவனித்துக் கொள்ளவே காமாட்சியம்மாள் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. ஆனால் தொடர்ந்து பெரியம்மாவை அவளால் அப்படித் தவிர்த்துவிட முடியவில்லை.

இரண்டு நாள் கழித்துப் பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டி, “ஏண்டி காமு! நீ எங்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லலியேடீ? கோர்ட்டிலே கேஸு நடக்கறதாமே! ஊரெல்லாம் பேசிக்கிறாளே? உங்காத்துக்காரர் சாட்சி சொன்னாராம். உன் பிள்ளை சாட்சி சொன்னானாம்” – என்று பெரியம்மாவையும் வைத்துக் கொண்டு பேச்சை ஆரம்பித்தபோது தவிர்க்க முடியாமல் கமலியைப் பற்றிய பேச்சு வந்து விட்டது. காமாட்சியம்மாளே பாட்டியிடம் அதுபற்றி விசாரித்தாள்: “அது என்ன கேஸ் பாட்டீ! எனக்கொண்ணுமே தெரியாது. இப்போ இந்தாத்திலே இதெல்லாம் யாரும் எங்காதிலே போடறதும் இல்லே…”

“என்னமோ அந்த வெள்ளைக்காரப் பொண்ணு நம்ம கோவில்லே எல்லாம் நுழைஞ்சதாலே கோவிலோட சாந்நித்யம் கெட்டுப் போச்சு, மறுபடி கும்பாபிஷேகம் பண்ணியாகணும்னு ஊர்க்காரா பணம் கேட்டுக் கேஸ் போட்டிருக்காளாமே? அது செருப்புக் காலோட கோவிலுக்குள்ளே நுழைஞ்சுதாமே?”

“மத்தது எல்லாம் எப்பிடியோ எனக்குத் தெரியாது பாட்டீ? ஆனாக் கமலி செருப்புக் காலோட கோவில்லே நுழைஞ்சாங்கறதை நான் நம்பலே. இந்தாத்திலே அந்தப் பொண் தங்கியிருந்தப்போ நான் கவனிச்சவரை சுத்தம் ஆசார அநுஷ்டானத்திலே அவமேலே அப்பழுக்குச் சொல்ல முடியாது பாட்டீ! நம்ம மனுஷா இல்லே, நம்ம தேசம் இல்லே, நம்ம நிறம் இல்லேங்கறதைத் தவிர மரியாதை அடக்க ஒடுக்கம் – பணிவு, பவ்யம் இதிலெல்லாம் குத்தம் சொல்ல முடியாது.”

இதைக் கேட்டு முத்துமீனாட்சிப் பாட்டியே தன் செவிகளை நம்ப முடியாமல் பேசுவது காமாட்சியம்மாள் தானா என வியந்து சந்தேகத்தோடு அவள் முகத்தைப் பார்த்தாள்.

“ஏன் பாட்டி அப்பிடிக் கண்ணை இடுக்கிண்டு என்னை என்னமோ மாதிரி பார்க்கறேள்? நான் இப்படிப் பேசறேன்னு சந்தேகப்படறேளா? நமக்கு வேண்டாதவங்கறதுக்காக ஒத்தரைப் பத்தி அபாண்டமாப் பொய்யும் புளுகும் பேசிடறது சரியில்லே. கமலி மேலே நேக்கிருக்கிற மனஸ்தாபம் வேறே. அவளும் ரவியும் போயிருக்கச்சே பெரியவா அவ ஸ்லோகம் சொல்லிக் கேட்டுத் திருப்தியா கேள்விப்பட்டுட்டு இங்கே வந்து சொல்றா. அதை நாம கொறை சொல்லலாமோ? ஒருத்தரை நமக்குப் பிடிக்கல்லேன்னா இல்லாததையும் பொல்லாததையும் எல்லாம் சொல்லிக் கோர்ட்டிலே போட்டு மானத்தை வாங்கறது இந்தூர்க்காராளுக்கு ஒரு வழக்கமாப் போச்சு-”

“கோர்ட்டிலே அந்த வடக்குத் தெரு வேணு கோபாலன் தான் கமலிக்கும் உங்காத்துக்காரருக்கும் வக்கீலாம். ‘கமலி பத்தரைமாத்துத் தங்கம். சாட்சாத் சரஸ்வதியோட அவதாரம்னு’ வேணுகோபாலன் வீட்டிலே போய்ப் பேசிப்பிட்டு வஸ்திரதானம் வாங்கிண்டு கோர்ட்டிலே போய், ‘அவ கோவில் ஆசாரத்தையே கெடுத்துட்டா’ள்னு நேர் மாறாகச் சாட்சி சொன்னாராம் கைலாசநாதக் குருக்கள். அவர் தன்னாத்திலே வந்து சொன்னதை இரகசியமா டேப் ரெக்கார்டுலே பதிவு பண்ணி வச்சுண்டிருந்து கோர்ட்டிலே ஜட்ஜுக்குப் போட்டுக் காமிச்சிப் பொய்ச்சாட்சி’ன்னு வாதாடி குருக்களோட மானத்தை வாங்கிப்பிட்டாராம் அந்த வேணுகோபாலன்.”

“பின்னே என்ன பாட்டீ? அத்தனை வயசானவர், கோவில்லே சுவாமியைத் தொட்டுப் பூஜை புனஸ்காரம்லாம் பண்றவர், வாய் கூசாமக் கூண்டிலே ஏறிச் சத்தியம் பண்ணிட்டுப் பொய் சொல்லலாமோ?”

“பொய் சொன்னதோட மட்டுமில்லாமே கமலியும் ரவியும் கோவில்லேயே என்னமோ அசிங்கமா நடந்துண்டான்னு வேற கதை கட்டி விட்டாளாம்டீ காமு!”

“கேஸ் எப்பிடி ஆகும்னு ஊர்ல பேசிக்கிறா பாட்டி?”

“உனக்கெதுக்குடி அம்மா இப்போ அந்தக் கவலை? ஏற்கெனவே அரை உடம்பாப் போயிட்டே, கிழிச்சுப் போட்ட நாராப் படுத்த படுக்கையா இருக்கே. இந்தக் கவலை வேற எதுக்கு? நோக்கு இருக்கற கவலை போறாதோடீ?”

“கவலையில்லே… தெரிஞ்சுக்கலாமேன்னுதான் கேக்கறேன்.”-

“வேணுகோபாலனும் உங்காத்துக்காரரும் கேஸைப் பத்தியே கவலைப்படாமே தங்களுக்கு ஜெயிச்சுடும்கற நம்பிக்கையோட கலியாண காரியங்களைக் கவனிச்சுண்டிருக்காளாம். இன்னிக்குக் கூட வேணுகோபாலனாத்துலே சுமங்கலிப் பொண்டுகள் பிரார்த்தனையாம். அவரோட சொந்தப் பொண்ணோட கலியாணத்துக்கு முந்தி எப்பிடி சுமங்கலிப் பொண்கள் பிரார்த்தனை பண்ணறதுண்டோ அப்பிடியே இந்த வெள்ளைக்காரி கலியாணத்துக்கும் கூடப் பண்ணியாறதாம்…”

இந்த உரையாடலை இதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த காமாட்சியம்மாளின் பெரியம்மா இப்போது மெல்லக் குறுக்கிட்டாள்:

“என்னடீ காமு! பாட்டி ஏதோ கலியாணம்கறாளே? என்னதுடீ?”

முதலில் காமாட்சியம்மாள் சிறிது தயங்கினாள். அப்புறம் எதையும் மறைப்பதைவிட உண்மை பேசுவது நல்லதென்று, பெரியம்மாவிடம் எல்லா விவரமும் சொல்லித் தன் மனஸ்தாபத்தையும் கூறிவிட்டாள். இந்தக் கலியாண ஏற்பாடு காரணமாகவே தனக்கும் தன் கணவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமற் போய்விட்டது என்றும் கூறினாள் காமாட்சியம்மாள்.

“கலி முத்திப் போச்சு! அதுனாலேதான் இப்பிடி எல்லாம் நடக்கறது டீ” – என்றாள் பெரியம்மா.

காமாட்சியம்மாள் அதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை.

“உன் பிள்ளை ரவிக்குத்தான் புத்தி இப்பிடிப் போச்சுன்னா சகல் சாஸ்திரமும் வேதமும் படிச்ச உங்காத்துக்காரருக்கு ஏண்டீ இப்பிடிப் புத்தி போச்சு?”

“… விட்டுத் தள்ளுங்கோ… இனிமே அதைப் பத்தி நாம பேசிப் பிரயோஜனமில்லே பெரியம்மா, நாம் சொல்லி இங்கே யாரும் கேக்கறவா இல்லே…”

இதைச் சொல்லும்போது காமாட்சியம்மாளுக்குத் தொண்டை கமறியது, குரல் கரகரத்து நைந்தது. உணர்வும் சொற்களும் கலந்து குமுறின. கண்களில் ஈரம் பளபளத்தது.

“வியாகரண சிரோமணி குப்புசாமி சர்மாவோட வம்சத்திலே இப்பிடி ஒண்ணு நடக்கணும்னு தலையிலே எழுதி இருக்கு… கிரகசாரம் தான்… போ…”

-காமாட்சியம்மாள் தன் முகம் பெரியம்மாவுக்கும் முத்து மீனாட்சிப் பாட்டிக்கும் நேரே தெரியாதபடி படுக்கையில் மறுபுறம் ஒருக்களித்தாற் போலத் திரும்பிப் படுத்துக் கொண்டாள். அவள் கண்களில் நீர் வழிந்தோடியது. ரவியின் கலியாணத்தைப் பற்றி அவள் வருடக்கணக்காகக் கட்டி வைத்திருந்த கோட்டைகள் தகர்ந்த வேதனையில் மெல்ல அழத் தொடங்கியிருந்தாள் அவள்.

“கஞ்சி சாப்பிடறயாடீ? வெறும் வயத்தோட எத்தனை நாழிதான் இருப்பே?”

“வேண்டாம் பெரியம்மா! பசியே தோணலை. மந்தமா இருக்கு! சித்தே நாழி கண் மூடறேன். ரொம்ப அசதியா இருக்கு.”

அவர்களோடு சம்பாஷணையைத் தவிர்க்க விரும்பிக் காமாட்சியம்மாள் பொய்யாகக் கற்பித்துக் கொண்ட தூக்கம் அது.

*****

நாளைக் காலையில் கேஸ் தீர்ப்பு என்றால் முதல் நாள் முழுவதும் சர்மாவும், வேணு மாமாவும் பரஸ்பரம் வேண்டியவர்களைப் பார்த்துக் கலியாணத்திற்கு அழைப்பதும் பத்திரிகை கொடுப்பதுமாக இருந்தனர். கோர்ட்டைப் பற்றியோ கேஸைப் பற்றியோ, தீர்ப்பைப் பற்றியோ கவலையில்லாமல் அலைந்து கொண்டிருந்தார்கள் அவர்கள். சென்னையிலிருந்து ஒரு வாரப் பத்திரிகை ஆசிரியர் இந்த விநோதமான கலியாணத்தை – நான்கு நாளும் ஒரு நிகழ்ச்சி கூட விடாமல் புகைப்படம் எடுக்க வரலாமா என்று அனுமதி கேட்டு எழுதியிருந்தார். ‘ஆட்சேபணையில்லை; வரலாம்’ – என்று பதில் எழுதியவுடன், அந்தப் பத்திரிகையாசிரியருக்கு ஒரு திருமண அழைப்பிதழையும் தபாலில் அனுப்பி வைத்தார் வேணு மாமா. தினசரிப் பத்திரிகைகளில் கோர்ட் செய்தியும், கேஸ் நடப்பது பற்றிய செய்தியும், போதாதென்று ஒரு பிராம்மண இளைஞருக்கும் ஒரு பிரெஞ்சுக்காரக் கோடீசுவரரின் மகளுக்கும் சாஸ்திர முறைப்படி, நான்கு நாள் நடக்கப் போகும் திருமணம் பற்றிய செய்தியும் பளிச்சென்று வெளி வந்து தடபுடல் பட்டுக் கொண்டிருந்தது. அது ஒரு பரபரப்பான செய்தியாகிப் பரவிவிட்டதால் எங்கும் அதைப் பற்றிய பேச்சாகவேயிருந்தது.

சர்மா இறைமுடிமணிக்குக் கலியாணப் பத்திரிகை கொடுக்க அவருடைய விறகுக்கடைக்குப் போனபோது, அவர் அப்போது தான் கிடைத்த தமது இயக்க நாளேடான ‘சீர்திருத்தச் செய்தி’யைத் தபாலிலிருந்து தனியே பிரித்து எடுத்துப் படித்துக் கொண்டிருந்தார். ‘சீர்த்திருத்தச் செய்தி’ ஒரே பிரதிதான் தபாலில் சங்கரமங்கலத்துக்கு வந்து கொண்டிருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளாக அதற்குச் சந்தாக்கட்டி அதை விடாமல் வரவழைத்துக் கொண்டிருந்தார் இறைமுடிமணி. அதிகம் கடைகளுக்கோ நியூஸ் ஸ்டால்களுக்கோ வந்து தொங்காத தினசரி அது. அதிலும் அந்த அதிசயத் திருமணத்தைப் பற்றி அக்ரகாரத்திலும் ஓர் அதிசயம் – என்ற தலைப்பில் செய்தி பிரசுரமாகியிருந்தது. இறைமுடிமணி, சிரித்தபடியே அதை சர்மாவிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். சர்மா அதைப் படித்துவிட்டு இறைமுடிமணியிடமே திருப்பிக் கொடுத்தார். திருமண அழைப்பிதழை வாங்கிக் கொண்ட இறைமுடிமணி, “வேறே ஒரு கோர்ட்டில் சீமாவையர் எங்க மேலே போட்ட கேஸ் நடந்துக்கிட்டிருக்கு. அந்த பொண்ணு மலர்க்கொடியை உங்க சீமாவையரு கையிலேருந்து காப்பாத்துறதுக்காக அவரு மாந்தோப்பில் நாங்க நுழையப் போக தோப்பிலே திருட நுழைஞ்சதாக எங்க மேலே கேஸ் போட்டுக் கோர்ட்டிலே நடக்குது விசுவேசுவரன்! நானும் எங்க ஆளுங்களும் ஜெயிலுக்குப் போயிடணும்னு சீமாவையருக்கு கொள்ளை ஆசைப்பா. அவரு ஆசைப்படி நடந்து நான் ஜெயிலுக்குப் போகாமே வெளியிலே இருந்தேன்னாக் கலியாணத்துக்குக் கட்டாயமா வர்றேன்ப்பா” என்றார்.

“அதெல்லாம் நடக்காதுப்பா… ஜெயிலுக்கெல்லாம் நீ போகமாட்டே. கலியாணத்துக்குக் கட்டாயம் வந்துடு தேசிகாமணீ!” என்று வற்புறுத்திச் சொல்லிவிட்டு வந்தார் சர்மா. மறுநாள் விடிந்தது. சப்கோர்ட்டில் கேஸ் நடந்தபோது கூடியிருந்ததைவிட அதிகக் கூட்டம் தீர்ப்பைக் கேட்கக் கூடி விட்டது. அன்று கமலி, சர்மா ஆகியோரின் மேல் உள்ளூர் ஆஸ்திகர்கள் போட்டிருந்த வழக்கின் மேல் தீர்ப்புக் கூறப்பட இருந்தது. கமலி வசந்தி, ரவி, சர்மா, வேணு மாமா, இறைமுடிமணி எல்லோருமே நீதி மன்றத்துக்கு வந்திருந்தார்கள். சீமாவையர் முதலிய பிரமுகர்களும் வந்திருந்தார்கள். பத்திரிகை நிருபர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததற்குக் காரணம் ஏற்கெனவே எல்லாப் பத்திரிகைகளும் இந்த வழக்கைப் பற்றிய செய்திகளை முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்திருந்ததுதான். தீர்ப்பை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இது பற்றி எங்கும் பரபரப்பான பேச்சு இருந்தது.

நீதிபதி தமது இருக்கையில் வந்து அமர்ந்ததும் கோர்ட் அமைதியடைந்து நிசப்தமாகியது. நிறையப் பக்கங்களில் எழுதப்பட்டிருந்த அந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி படிக்கத் தொடங்கினார். முதற் சில பக்கங்களைப் படித்து முடிக்கும்வரை அதிலிருந்து யாரும் வழக்கின் முடிவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்து மதத்தின் நிலைகள் பழக்க வழக்கங்கள், அதில் மத மாற்றத்துக்கான சாஸ்திர பூர்வமான – அதிகார பூர்வமான ஒரு சடங்கு என எதுவும் இல்லாமலிருப்பது ஆகியவை பற்றி முதலில் விரிவாக விவரிக்கப்பட்டிருந்தது. நீதிபதி தொடர்ந்து தம்முடைய தீர்ப்பைப் படித்துக் கொண்டிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 4தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 4

அத்தியாயம் 4   மூச்சு இரைக்க இரைக்க ஓடி வந்த வேகத்திலிருந்து நின்று நிதானித்துக் கொண்டு சர்மாவின் பெண் பார்வதி அப்போது வசந்தியிடம் பேசுவதற்குச் சில விநாடிகள் ஆயின.   “வசந்தி அக்கா…! அப்பா ரவி அண்ணாவுக்கு எழுதிக் குடுத்த ‘ஏரோகிராமை’

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 16தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 16

அத்தியாயம் 16 இறைமுடிமணி அவர்களைத் தம்முடைய புதுக் கடைக்கு வரவேற்று உட்கார வைத்துச் சந்தனம் கல்கண்டு கொடுத்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவர்கள் புறப்படுவதற்கு முன், “கொஞ்சம் இப்பிடி வர்றியா விசுவேசுவரன்? உங்ககிட்ட ஒரு நிமிஷம் தனியாப் பேசணும்” –

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 8தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 8

  அத்தியாயம் 8   வசந்தி மாடியிலிருந்து படியிறங்கிக் கீழே வந்த போது காமாட்சியம்மாள் மணைப் பலகையைத் தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டு புடவைத் தலைப்பையே விரித்துச் சமையல்கட்டு முகப்பில் ஒருக்களித்தாற்போலப் படுத்துக் கொண்டிருந்தாள். மாமி தூங்கிக் கொண்டிருக்கிறாளோ என்று முதலில்