Tamil Madhura சிறுகதைகள் வல்லிக்கண்ணன் கதைகள் – வானத்தை வெல்பவன்

வல்லிக்கண்ணன் கதைகள் – வானத்தை வெல்பவன்

கண்ணாடி முன்நின்ற சிங்காரம் மார்பை நிமிர்த்திக் கொண்டான். கைகளை உயர்த்தியும் தாழ்த்தியும், மூச்சை உள்ளுக்கிழுத்தும் நீளமாக வெளியிட்டும், தன் அழகைத் தானே பார்த்து மகிழ்ந்தான். தலையை ஆட்டினான். முகத்திலே ஒரு சிரிப்பைப் படரவிட்டான்.

“தம்பி சிங்காரம்! நீ சாமானியன் இல்லை. அரும்பெரும் சாதனைகள் புரியவந்தவன். வானமே எல்லை. அதை எட்டிப் பிடிப்பது அல்ல. உன் நோக்கம். அதை வெல்வதே நம் குறிக்கோள்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

இப்படி தன்னம்பிக்கை ஊட்டிக் கொள்வது தான் ஒவ்வொரு நாளும் சிங்காரம் செய்கிற முதல் வேலை ஆகும்.

சிங்காரம் தோற்றத்தில் சாதாரணன்தான். ஆனால், அவன் மனம் மற்றவர்களின்றும் மாறுபட்டது. எல்லோரையும் விடத்தான் தனித்தன்மை உடையவன் என்று அவன் எண்ணினான். இவர்களை எல்லாம் விட நான் உயர்ந்தவன் என்று அவன் மனம் மந்திரம் உச்சரிப்பது போல் எப்பவும் முனகிக் கொண்டேயிருக்கும்.

அவன் ஒரு லூஸ், அரைக்கிறுக்கு, ஒரு மாதிரிப் பேர் வழி என்று மற்றவர்கள் அவனை மதிப்பிட்டார்கள். அவனைப் பரிகசிக்கவும் செய்தார்கள். சந்தர்ப்பம் வாய்க்கிற போதெல்லாம் மட்டம் தட்டி மகிழ்ந்தார்கள்.

மடையர்கள், மண்ணாந்தைகள், மக்குப் பிளாஸ்திரிகள், மழுங்கடிக்கப்பட்டவர்கள் என்று மற்றவர்களைப் பற்றி மனசுக்குள் திட்டித் திருப்தி கொள்வான் சிங்காரம்.

ஒருநாள் வரும் அப்போது இவர்கள் அறிவார்கள் இந்த சிங்காரம் யார் என்பதை. இதுவும், அவன் தனக்குத் தானே உரம் ஏற்றிக் கொள்வது தான்.

எப்படியாவது ஏதாவது சாதனைகள் புரிந்து, மாமனிதன் என்று தன் பெயரை நிலை நிறுத்திவிட வேண்டும் என்பதே சிங்காரத்தின் எண்ணமாய், ஆசையாய், பெரும் கனவாய் இருந்தது.

ஒருநாள் பாருங்க! இந்த சிங்காரம் திடீர்ப் பிரபலஸ்தன் ஆகியிருப்பான். பத்திரிகைகளில் எல்லாம் அவன் பெயர், படம், பேட்டிகள் வரும். ரேடியோ சிங்காரத்தின் பெருமைகளை ஒலிபரப்பும். தொலைக்காட்சி சிங்காரத்தின் சாதனையை ஒளி ஒலி பரப்பும். அப்ப தெரிந்துகொள்வீங்க. நம்ம சிங்காரம் உண்மையிலேயே பெரிய ஆளுதான் என்கிறதை.

சிங்காரம் “தன் நெஞ்சோடு கிளத்தி” மகிழ்கிற தனிமொழி தான் இதுவும். அபூர்வமாக ஒன்றிரண்டு பேரிடம் இதைச் சொல்லவும் செய்தான். அவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இதை சொன்னார்கள். வானத்தை வெல்லப் போகிறவன் என்று சிலர் குறிப்பிட்டார்கள். வானத்தை வளைக்கப் போகிறவன் என்றும், வானத்தை அளப்பவன் என்றும் கேலியாக சொல்லிக்கொண்டார்கள். கடைசியில் அது “வானம் பார்த்தான்” என்ற பெயராக ஒட்டிக்கொண்டது சிங்காரத்தின் மீது.

”அப்படி என்னதான் செய்யப் போறே?” என்று அவனிடமே கேட்டார்கள். “அதுக்காக என்ன ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறே?” என்றும் விசாரித்தார்கள்.

”காலத்துக்காக காத்திருக்கிறேன்” என்றான் சிங்காரம். “இப்ப நான் எதுவும் செய்யவில்லை. சமயம் வருகிறபோது என் ஆற்றல் வெளிப்படும்” என்றான்.

“சரியான லூசு” என்று மற்றவர்கள் கருதினார்கள். “மறை கழன்று விட்டது. கூடிய சீக்கிரம் முழுசாகக் கழன்று போகும். அன்று சிங்காரம் இருக்க வேண்டிய இடம் மனநல மருத்துவ மனையே ஆகும்” என்றார்கள்.

சிங்காரம் பைத்தியம் மாதிரி தான் நடந்து கொண்டான். கண்ணாடி முன்நின்று பேசுவது போலவே, தெருவில் நடந்து போகிற போது சட்டென நின்று “இப்படிச் செய்தால் என்ன?” என்று கேட்பான். “இதை செய்யலாமா?” என்பான், அடிக்கடி உரத்த குரலில் வெளிப்பட்டுவிடும் அவன் சிந்தனை.

யார் யாரோ எப்படி எப்படி எல்லாமோ செயல் புரிந்து சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துவிடுகிறார்கள். மற்றவர்களை விட அதிகம் தும்மியவன். ஒரு மணி நேரத்தில் மிக அதிகம் கொட்டாவி விட்டவன். ஒரு நாள் முழுவதும் தன் கை இரண்டையும் தட்டிக் கொண்டே இருந்தவர். இத்தனை ஆயிரம் தடவைகள் தட்டினார். மூன்று நாட்கள் ஓயாது பேசிக் கொண்டே இருந்தார். விடாது சைக்கிள் ஒட்டினார். எண்ணிக் கையில் மிக அதிகமான இட்டிலிகளை தின்று தீர்த்த சூரர். ஓயாது நாட்கணக்கில் சிரித்தார். இவ்விதம் சாதனை படைத்த வர்கள் விவரம் பத்திரிகைகளில் வருவதை சிங்காரம் படித்திருக்கிறான்.

நாமும் இதுபோல் ஏதாவது சாதனை புரிந்து காட்ட வேண்டும் என்று சிங்காரம் ஆசைப்பட்டான். ஆராய்ச்சி என்று ஏதாவது செய்யலாம் என்று நினைத்தான்.

“நாய்க்கு வேலையும் இல்லை. நிற்க நேரமும் இல்லை என்பது பழமொழி. அப்படி ஒரு நாய் வேலை எதுவும் இல்லாமலே ஒரு நாளில் எங்கு எங்கெல்லாம் போகிறது. எப்ப எப்ப ஓடுகிறது. எப்போ நிற்கிறது என்று ஆராய வேண்டும்” என்று எண்ணினான் சிங்காரம். “பளா பளா இது அருமையான அய்டியா” என்று ஆரவாரித்தது அவன் மனம்.

இதை சிங்காரம் ஒரு நண்பனிடம் கூறினான். அந்த நண்பன் இவனுக்கு அண்ணன்! வேலை மெனக்கெட்டு பழம் பத்திரிகைகளில் வருகிற துணுக்குச் செய்திகளை எல்லாம் சேகரித்து, வகைப்படுத்தி, வெவ்வேறு ஃபைல் போட்டு, பாதுகாக்கிறவன். அதைப் பெரிய சாதனையாகக் கருதுகிறவன்.

அவன் சொன்னான்: “இது புது ஐடியா ஒண்ணுமில்லே. இங்கிலாந்திலே லண்டன் மாநகர் அருகே ஒரு இடத்தில் ஒருவன் என்ன செய்தான் தெரியுமா? ஒரு நாளில் ஒரு பசுமாடு, காலையில் எழுந்ததில் இருந்து என்ன செய்யுது, எங்கெங்கே போகுது, எத்தனை தடவை படுக்குது, அப்புறம் எழுந்து எப்படி எங்கெல்லாம் நடந்து திரியுது என்று ஆராய்ச்சி நோக்கில் ஸ்டடி பண்ணி விரிவாக எழுதி வைத்தான். அவன் பசுமாட்டின் செயல்பாடுகளை ஆராய்ந்தான். நீ ஒரு நாயின் நடமாட்டத்தை ஆய்வு செய்ய ஆசைப்படுகிறாய். அவ்வளவுதான்”

சீ என்றாகிவிட்டது சிங்காரத்துக்கு. புரட்சிகரமா ஏதாவது பண்ணவேணும் என்றான்.

“டிரஸை அவுத்துப் போட்டுவிட்டு ஊர் நெடுக சுத்து! அதுவும் ஒரு புரட்சிதான்” என்று கிண்டல் செய்தான் நண்பன்.

கைகளை ஊன்றி தலைகீழாக நடந்தவன். முதுகு காட்டி (பின்னெக்காட்டி) நடந்து முன்னேறியவன், உருண்டு உருண்டே ஊர் வழி போனவர்கள், தாவித் தாவி நடந்தவர்கள் பற்றி எல்லாம் தகவல்கள் இருக்கின்றன என்று நண்பன் விவரித்தான்.

“சே என்ன செய்வது? வானமே எல்லை. அதை வென்றாக வேண்டுமே!” என்று சிங்காரம் ஏக்கத்தோடு பேசினான்.

“ஒண்ணு செய்யி. கோபுரத்து மேலே ஏறி நின்று, உன்னை விட்டேனா பார் என்று கூவிக்கொண்டு மேலே நோக்கிப் பாய்ந்து பார்” என்று கெண்டை பண்ணினான் நண்பன்.

சிங்காரம் பேசாமல் அவனை விட்டுப் பிரிந்தான். என்ன செய்வது? பெரிதாக என்னவாவது செய்தாக வேண்டுமே! என்னதான் பண்ணுவது? இதுவே அவனது மனக்குமைச்சலாகி விட்ட எந்நேரமும்.

இதே நினைப்பாக ரோடில் நடந்து கொண்டிருந்தான் சிங்காரம்.

அபூர்வமான நிகழ்ச்சி ஒன்று நடந்தது அப்போது, ஒரு குதிரை வெறிபிடித்தது போல் நடுரோடில் வேகமாக ஓடிவந்தது. யாருடைய குதிரையோ, கட்டிலிருந்து விடுபட்டு, தலைதெறிக் கிற வேகம் என்பார்களே அப்படி வந்தது. லாடம் கட்டிய அதன் கால்கள் கற்களில் பட்டு தீப்பொறி கிளப்பின. ஜனங்கள் மிரண்டு பயந்து ஓரங்களில் ஒதுங்கினார்கள். “ஏஏய், வெறிபுடிச்ச குதிரை. வழிவிட்டு விலகி நில்லுங்க..!” என்று கத்தினார்கள் பலர். குதிரையை மடக்கிப் பிடிக்க பின்னே சிலர் ஓடிவந்தார்கள். சிங்காரத்தினுள் உற்சாகம் கரை புரண்டது. இந்தக் குதிரையோடு போட்டி போட்டு ஒடணும். குதிரையை விட வேகமாக ஓடிக்காட்டணும் என்ற எண்ணம் அவனுள் கிளர்ந்தெழுந்தது.

குபிரெனப் பாய்ந்து குதிரையின் பக்கத்திலேயே ஒடலானான் சிங்காரம். மூச்சுப் பிடித்து வேகம் வேகமாக ஒடிக்கொண்டேயிருந்தான்.

இது மற்றவர்களுக்கு நல்ல வேடிக்கைக் காட்சி ஆயிற்று. ஒஒ எனக் கூச்சலிட்டும், கைதட்டியும், வாயினால் சீட்டி அடித்தும், கைகளை வீசியும் அவரவர் உற்சாகத்தை வெளிப் படுத்தினார்கள்.

இதனால் குதிரைக்கு மிரட்சி ஏற்பட்டது. பக்கத்தில் ஓடி வருபவன் தன்னை அடக்கிப் பிடிக்கவே வருகிறான் என்று அதற்கு தோன்றியிருக்க வேண்டும். அது வெகுண்டு திரும்பி சிங்காரத்தைத் தாக்கியது. காலால் ஓங்கி எற்றியது.

அப்பாவி சிங்காரம் அதிர்ச்சியோடு கீழே விழுந்தான். அவனை மிதித்துக் கொண்டு திரும்பிய குதிரை வந்த வழியே திரும்பி ஓடலாயிற்று.

“பாவம் பைத்தியக்காரன்!” என சிங்காரத்துக்காக இரங்கல் தெரிவித்தார்கள் ரோடு ஒரங்களில் நின்றவர்கள்.
(“உங்கள் பாரதி, 2000)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

விசுவின் ‘வாழும்மட்டும் நன்மைக்காக…’விசுவின் ‘வாழும்மட்டும் நன்மைக்காக…’

வாழும்மட்டும் நன்மைக்காக…… “டேய் … பஸ்சுல ஏறும் போது கண்டக்டர் என்ன வயசுன்னு கேட்டா என்ன சொல்லணும்!!?” “13….அப்பா” “முட்டா பயலுக்கு பிறந்தவனே…  நான் என்ன சொல்லி கொடுத்தேன்..?”” “11…ப்பா” “மறந்துடாத..!! “சரி.. இப்ப நான் தான் கண்டக்டர் .. நீ

வல்லிக்கண்ணன் கதைகள் – நினைத்ததை முடிக்காதவர்வல்லிக்கண்ணன் கதைகள் – நினைத்ததை முடிக்காதவர்

கொம்பங்குளம் சிங்காரவேலு எங்கோ போய்விட்டான்! அந்த ஊரில் பரபரப்பான பேச்சாயிற்று அது. “சிங்காரவேலு, போயிட்டானாமே? எங்கே போயிருப்பான்? ஏன் ஊரை விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் போனான்?” இப்படி பல கேள்விகள் பலராலும் ஒலிபரப்பப்பட்டன. சிங்காரவேலு கொம்பங்குளம் ஊரின் கவனிப்புக்குரிய முக்கியப் புள்ளியாகத்தான்

சுந்தரும் புள்ளிவால் பசுவும் : காரூர் நீலகண்ட பிள்ளைசுந்தரும் புள்ளிவால் பசுவும் : காரூர் நீலகண்ட பிள்ளை

சுந்தரும் புள்ளிவால் பசுவும் : காரூர் நீலகண்ட பிள்ளை (மலையாளக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் பன்னிரண்டு வயது சுந்தர் ஊர்ப்பசுக்களை மேய்த்தான். அவன் உழைப்புக்காகச் சோறும் கறியும் அவனுக்குக் கிடைத்தன.   கோடையில் ஒருநாள் அதிகாலையில் அவன் மூன்று பசுக்களை