சாவியின் ஆப்பிள் பசி – 32

யிலில் சிங்காரப் பொட்டுவும், சேட்டும் ஏறினது சிங்காரத்தை ‘இறங்கு! இறங்கு!’ என்று சேட் சொன்னது, “நான் மாட்டேன்! நான் மாட்டேன்!” என்று சிங்காரம் மறுத்தது எதுவுமே சாமண்ணாவின் கவனத்தில் பதியவில்லை.

அவன் பார்வை நகரும் பிளாட்பாரத்தில் லயித்திருந்தது. தூரத்தில் தெரிந்த நுழைவாயில் மீதும், மாடிப்படிகள் மீதும் அலைந்தது. இந்தக் கடைசி நேரத்தில் கூட மனத்தில் அந்த ஆசை துளிர்த்திருந்தது. அவள் வரமாட்டாளா?

ஆமாம்; சுபத்ரா அவசரமாக அந்த வாயில் வழியாக ஓடி வந்து, அவனைப் பார்த்துக் கையை ஆட்டுவாள் என்று எதிர்பார்த்தான். அப்படி நடக்காதா என்று ஏங்கினான். அந்த ஒரு நிகழ்ச்சியைத் திரும்பத் திரும்ப மனத்திரையில் பார்த்துக் கொண்டே சென்னை வரை போய் விடலாம்; அந்த இனிய நினைவில் உடல் உபாதையோ, மன வேதனையோ மறந்து போகும் என்று எண்ணினான்.

ஊருக்குப் போன பின்னர் சுபத்ராவை, அவள் நினைவை மனத்தில் பூஜித்து, ஓர் இழந்த காதலின் இன்பமான சோகத்தை வாழ்க்கை முழுதும் அனுபவித்துக் கொண்டிருக்கலாம். மனத்தின் இடையறாத பொழுது போக்காக அது இருந்து கொண்டிருக்கும்.

பிளாட்பாரம் விரைவாக நகர்ந்தது. வாசல் மறைந்தது, மேலே கூரை மறைந்தது. ஜனங்கள் பின் தங்கினார்கள். பரந்த வெளி தோன்றி அதன் பரப்புகளில் தண்டவாளப் பின்னல் தெரிந்தது. அதை அடுத்து கல்கத்தாவின் வானம் நீலமாகத் தெரிய ஆரம்பித்தது.

என்ன அற்ப ஆசை! தன்னைத் தானே பரிகசித்து, விழியின் அடிவாரத் திவலையை வழித்தான்.

அப்போதுதான் சிங்காரம் அவனது காலடிகளைப் பற்றியிருந்தான்.

“அண்ணே, உங்களை விடமாட்டேன். உங்களை விட மாட்டேன்” என்று டிராமாவில் வசனம் பேசுவது போல் பேசினான்.

தமது முயற்சி வீணாவதைக் கண்ட சேட்ஜி சாமண்ணாவை நோக்கி, “சாமு! இவருக்கு ஒரு உத்தரவு போடுங்க!” என்றார்.

“இந்தா சிங்காரம்! சொன்னா கேட்க மாட்டே நீ! எழுந்திருக்கப் போறயா, இல்லையா?” என்று சற்று அதட்டலாகக் கேட்டான் சாமண்ணா.

அவனது காலைப் பூப்போலப் பற்றியிருந்த சிங்காரம் மெள்ள எழுந்திருந்தான். அவன் கண்கள் கலங்கி இருந்தன.

“சிங்காரம்! இதென்ன? எனக்காக நீயும் வாழ்க்கையைப் பாழாக்கிக்கப் போறயா? ஒரு ஊனத்தின் மேலே இரக்கப்பட்டு எல்லாரும் தங்களை ஊனமாக்கிக் கொள்ளக் கூடாது. இரக்கம் உண்மையான இரக்கமாயிருந்தால் மற்றவர் ஊனத்தின் வேதனையைப் போக்குவதற்குப் பாடுபடணும். நீ சினிமாவிலே சேர்ந்து நல்லா சம்பாதி! நிறையப் பணம் சேர்த்து ஊனமுற்றவங்களுக்குப் பள்ளியோ, விடுதியோ நடத்து. என் ஒருத்தன் ஊனத்தை மட்டும் முக்கியமாகக் கருதாதே. எனக்குக் காலில் தான் ஊனமே தவிர, மனசிலே இல்லை. அதனாலே நான் தைரியமா இருந்துப்பேன். மனசிலே தைரியம் இல்லாம இருப்பாங்க பாரு, அவங்களைக் காப்பாத்து…”

“நீங்க இப்படியெல்லாம் சொல்லாதீங்க. உங்களுக்காகத்தான் நான் வாழணும்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொன்னாலும் சரி, உங்களை விடப் போவதில்லை” என்று ஆவேசத்துடன் கூறினான் சிங்காரம்.

“சரி! நீ என்னைக் காப்பாத்தணும்னா அதுக்குப் பணம் வேணாமா? வெறும் கை முழம் போடுமா? நீ சம்பாதிச்சாத்தானே என்னைக் காப்பாத்த முடியும்! வீண் ஆவேசம் சோறு போடாது. முதல்லே சேட்ஜி சொல்றதைக் கேளு. அப்புறம் என்னைக் கவனிக்கலாம். சேட்டுக்குத் தொந்திரவு கொடுக்காதே!”

சிங்காரத்திற்கு சாமண்ணாவின் வார்த்தைகள் சரியாகப் பட்டன.

“அண்ணே! நீங்க சொல்றதை ஏத்துக்கிடறேன். ஆனா ஒரே ஒரு வருஷம் தான் இந்தக் கல்கத்தாவில் இருப்பேன். அப்புறம் ஊரோட வந்துருவேன். அதுக்கப்புறம் ஆயுசு முழுதும் உங்க கூடத்தான். இது சத்தியம்?” என்றான்.

“அப்படிச் சொல்லுங்க சிங்காரம்! இப்பத்தான் சரியாப் பேசறீங்க!” என்று சேட்ஜி சந்தோஷப்பட்டார்.

“சரி! ரயில் நகர்ந்துட்டுது. இப்போ எப்படி இறங்குவீங்க?” என்று சாமண்ணா கேட்கும் போதே வண்டியின் வேகம் குறைந்தது.

அவுட்டரில் அது அனுமதிக்காகத் தங்க, “வா சிங்காரம், இப்ப இறங்கிடுவோம்!” என்றார் சேட்.

வண்டிக்குள்ளிருந்த துணை நடிகன் ராமசாமி சேட்டின் கைகளைப் பற்றி மெள்ள இறக்கினான். சிங்காரம் ‘பொத்’ தென்று குதித்தான்.

சேட் அப்படியே எம்பி ராமசாமியைப் பார்த்தார். “தம்பி! ஐயாவை ஜாக்கிரதையாகக் கொண்டு போய் ஊரிலே சேர்த்துடு! தூங்கிடாதே! ஜாக்கிரதை. கூடையிலே பழம், ஸ்வீட், ரசகோலா எல்லாம் வெச்சிருக்கேன். வால்டேர்ல சாப்பாடு வாங்கிக் கொடு. நீயும் சாப்பிடு. அப்புறம் ஊர்ல ரெண்டு நாள் தங்கியிருந்துட்டு அவர் ‘போ’ன்னு சொன்னப்புறம் புறப்பட்டு வா. வரபோது தேவராஜ முதலி தெருவிலேர்ந்து ஜாலர் துணியும், காகித மல்லியும் மறந்துடாம வாங்கிட்டு வா” என்று சேட்ஜி குரலை உயர்த்திச் சொன்னார்.

வார்த்தைகள் வெளிக்காற்றில் பறந்து போயின.

இரண்டு இரவுகளும் ஒரு பகலும் பிரயாணம் செய்த அலுப்பும் களைப்பும் சாமண்ணாவின் முகத்தில் தெரிந்தன. ஒரு வார்த்தை பேசவில்லை. சுபத்ராவின் நினைவுச் சுழலில் சிக்கி ஒரு உன்மத்த நிலையிலிருந்தான்.

உலகம் முழுவதும் இப்போது அன்னியமாகத் தோன்றியது அவனுக்கு. வழியில் குறுக்கிட்ட ஆறுகள், வயல்கள், ஸ்டேஷன்கள் யாவும் வெறும் சூன்யங்களாகத் தோன்றின.

இரண்டாம் நாள் காலையில் ஆந்திரத்து ஊர்கள் வரிசையாக வந்தன.

‘இன்னி சாயங்காலம் ஆயிடுமோ ஊர் போய்ச் சேர’ என்று யோசித்தான்.

மாலையில் ஊரின் அடையாளங்கள் வந்தவுடன் ஒரு கனவிலிருந்து உண்மைக்கு வருவது போல் இருந்தது.

சட்டென்று கால்களைத் தூக்கிப் போட, அப்போது தோன்றிய வலி அவனது உண்மைக் கோலத்தை விளக்கிற்று. அவன் ஊனம்!

“ஐயா, மெதுவாக!” என்றான் ராமசாமி.

சாமண்ணா அவன் தோளில் படிந்து கொண்டான். ஒற்றைக் காலைத் தாவித் தாவிக் கதவருகில் வந்தான்.

அவனை மெதுவாகப் பிடித்து உட்கார வைத்து இறக்கினான் ராமசாமி.

இதற்குள் வண்டி நகர்ந்து வேகம் பிடிக்கவே, “இந்தாங்க, இதை மறந்துட்டீங்களே!” என்று ஒரு குரல் வண்டியிலிருந்து கேட்டது.

முதல் வகுப்பிலிருந்த ஒருவர் வெளியே எட்டி அவனது ‘க்ரச்’ இரண்டையும் எடுத்துப் போட்டார்.

வண்டி பளிச்சென்று விலகிப் போய்விட, அதுவரை தொடர்ந்த ஒரு துணையான ஜனக் கூட்டமே தன்னைத் தனிமையாக்கிவிட்டது போன்ற உணர்வுடன் ஸ்டேஷனைப் பார்த்தான்.

வெறிச்சென்றிருந்தது. கிராதி வேலி நெடுந்தூரம் போய் ஒரு வெறுமையை வளைத்துக் கொண்டிருந்தது. சற்று எட்டத்தில் அவன் இரண்டு ‘க்ரச்’களும் அலங்கோலமாய்க் கிடந்தன.

“யார் யாருக்கோ தந்தி கொடுத்திருக்கிறேன் என்று சேட் கூறினாரே! ஒருவரையுமே காணோமே! சாமூ! இதுதான் வாழ்க்கையின் அப்பட்டம்” என்று ஒரு குரல் ஒலித்தது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். யாருமில்லை.

பிளாட்பாரத்தில் சேட் கொடுத்திருந்த பழக்கூடை கவிழ்ந்திருந்தது. அதன் மீது சுற்றிக் கட்டியிருந்த கோணி கிழிந்து இரண்டொரு ஆப்பிள் வெளியே விழுந்திருந்தது.

அவற்றில் ஒரு ஆப்பிளைக் கையில் எடுத்தான். அதில் சுபத்ராவின் முகம் தெரிந்தது.

பற்களால் அதைக் கடித்துச் சுவைத்தான். சட்டென்று நிறுத்தினான். ஸ்டேஷனையும் சுற்றுப்புறத்தையும் பார்த்தான். மறுகணம் ‘தூ தூ’ என்று துப்பினான்.

கையிலிருந்த அந்த ஆப்பிளை அப்படியே தண்டவாளத்தில் எறிந்தான்.

‘பசிக்கு ஆப்பிள் சாப்பிடலாமா? அதுவும் இனிமே’ மனம் முனகியது.

“ராமசாமி!”

“என்ன ஐயா?”

“போலாம்.”

“சரி ஐயா!”

ராமசாமி க்ரச்சை எடுத்துக் கொடுக்க, சாமண்ணா தன்னைத் தாங்கிக் கொண்டு மெதுவாக நடந்தான். ஒவ்வொரு அடிக்கும் உலகம் எம்பி எம்பி விழுந்தது. ஸ்டேஷன் வெளியே ஜட்கா ஒன்று காத்திருந்தது. வண்டிக்காரன் சாமண்ணாவை ஏற இறங்கப் பார்த்தான்.

‘என்ன அப்படிப் பார்க்கிறே? நான் தான் நாடக நடிகன் சாமண்ணா’ என்று சொல்ல வேண்டும் போல இருந்தது.

‘ஹூம்! நாடகத்தை அவன் எங்கே பார்த்திருக்கப் போகிறான்!’ என்றது இன்னொரு மனம்.

“எங்கே போகணும்ங்க?”

“கோட்டை மைதானத்துக்கு அடுத்த அஞ்சு ராந்தல் தெருவுக்குப் போ!”

“ஒரு ரூபாய் கொடுங்க” வண்டியைத் தாழ்த்தி சாமண்ணாவை ஏற வைத்தான் வண்டிக்காரன்.

“ராமசாமி! பின் படுதாவைப் போடு” என்றான் சாமண்ணா. படுதா விழுந்தது.

ஊரைப் பார்க்க சாமண்ணாவுக்கு விருப்பமில்லை. வண்டி வீட்டு வாசலில் போய் நின்றதும் மெதுவாக இறங்கினான். தெரு விளக்கு மஞ்சளாய்ச் சிணுங்கிக் கொண்டிருந்தது. யாரையுமே காணோம்.

வீடு நிசப்தமாக இருந்தது. அவனை சோகத்துடன் அது பார்க்கும் பிரமை ஏற்பட்டது.

‘டக் டக்’.

க்ரச்சின் ஓசை இப்போது அவன் காதிலேயே வித்தியாசமாகக் கேட்டது.

படிகளை அணுகினான்.

வராந்தாவில் படுத்திருந்த உருவம் மெள்ள எழுந்தது. தள்ளாடித் தூணைப் பிடித்தவாறு அவனை உற்று நோக்கியது.

“என்ன கந்தா! நான் தான் வந்திருக்கேன்! கதவைத் திற” என்றான்.

கந்தப்பன் வாய் பொக்கையாக அவிழ, “ஐயாவா, வரணும், வரணும்” என்று சொல்லி அவசரத் தடுமாற்றத்துடன் ஓடிக் கதவைத் திறந்தான். லாந்தர் ஏற்றியதும் வீடு பளிச்சிட்டது.

ஆவலுடன் ஒவ்வொரு அறையாகப் போய்ப் பார்த்தான். பழமை நினைவுகள் ஒவ்வொரு பகுதியிலும் ஒட்டியிருந்தன.

கடைசியாகக் கூடத்துக்குப் போன போது கந்தப்பன் அவனது க்ரச்சுகளைக் கவனித்து விட்டான்.

“சாமி! இதென்ன!” என்று பதறினான்.

“ஒண்ணுமில்லை கந்தப்பா! கொஞ்ச நாள் ஆட வேண்டாம்னு கடவுள் சொல்லிட்டாரு! கட்டுப் போட்டிருக்கேன்! அவ்வளவுதான்” என்றான் சாமண்ணா.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ராமசாமி சாமண்ணாவை அணுகி, “அப்போ நான் புறப்படட்டுங்களா?” என்றான்.

“சரி, நீ போயிட்டு வா. சேட் கிட்டே ரொம்ப விசாரிச்சதாச் சொல்லு! இனி கந்தப்பன் என்னைக் கவனிச்சுக்குவான்” என்றான் சாமண்ணா.

மூன்று நாட்களாகியும் சாமண்ணா வந்திருப்பதை அந்த ஊரில் யாரும் கவனிக்கவில்லை. மனசில் அந்த எண்ணம் ஒரு பாறையாக அமிழ்ந்தது. ‘எல்லோரும் என்னை மறந்துவிட்டார்களா?’

கூடத்தில் எரிந்து கொண்டிருந்த லாந்தர் விளக்கு காற்றில் மெல்ல ஆடியது.

‘எவ்வளவு பெரிய வீடு இது! பரிவாரத்தோடு இதில் நிறைந்து வாழப் போகிறோம் என்று நினைத்தோமே!’ இப்போது அதன் விசாலமே அவனுக்கு வேதனையாக இருந்தது.

சட்டென்று ஒரு குரல்: “மாமா!”

அந்த அச்சச்சோ பெண் எதிரில் நின்றாள்.

“அச்சச்சோ! நீங்க வந்துட்டேளா! லைட் எரிஞ்சதுன்னு பார்த்தேன். எப்போ வந்தேள்? இத்தனை நாளா எங்கே போயிருந்தேள்? நான் ரொம்பப் பயந்து போய்ட்டேன் மாமா!” என்றாள்.

அந்த நேரத்தில் அவள் பேச்சு எவ்வளவு பெரிய ஆறுதலைத் தந்தது! சாமண்ணாவின் மனசில் சோகமான இன்பம் பொங்கியது.

“ஏன் பயந்தே?”

“ரொம்ப நாளாக் காணல்லையா? உங்களை ஜெயில்லே போட்டுட்டாளோன்னு நினைச்சேன்.”

“என்னையா, எதுக்கு?”

“எங்க அப்பாவைக் கொலை செஞ்சீங்கன்னு போலீஸ்காரர் உங்களைப் பிடிச்சுண்டு போனா இல்லையா?”

“ஆமாம்!”

“அதுக்காக உங்களை ஜெயில்லே போட்டுட்டாளோன்னு நினைச்சேன். இன்ஸ்பெக்டர் முனகாலா மாமாவைப் பார்த்து நானே சொல்லணும்னு நினைச்சேன்!”

“என்ன சொல்ல நினைச்சே?”

“சாமண்ணா மாமாவை விட்டுடுங்க! எங்க அப்பாவை அவர் கொலை செய்யலை. அது வேறே மாமான்னு சொல்லணும்னு நினைச்சேன்.”

சாமண்ணா நிமிர்ந்து பார்த்தான். சற்று அதிர்ந்தான்.

“யார் அந்த வேற மாமா?”

“காதர் பாட்சா மாமா!”

“யார்? அந்த ஆர்மோனியக்காரனா?”

“மாமா! அவன் தான் விறகுக் கட்டையாலே எங்க அப்பா தலையிலே அடிச்சுக் கொன்னுட்டான்.”

“நீ பார்த்தியா?”

சாமண்ணா ஆச்சரியத்தோடு கைகளை ஊன்றி இன்னும் நிமிர்ந்தான்.

“ஆமாம், நான் அப்ப பாத்ரூம்ல இருந்தேன்.”

“நிஜம்மா?”

“நிஜம்மாத்தான்! அந்தக் கடன்காரனைக் கண்டதும் பயந்து போயிட்டேன். கட்டையாலே அடிச்சு, அந்தக் கட்டையைக் கொண்டு போய் புழைக்கடை ஓலைக் கூரையிலே சொருகிட்டு ஓடிட்டான். கண்ணாலே நான் பார்த்தேன்.”

“அப்போ நீ ஏன் இதை அன்னிக்கே சொல்லலை!”

“என்னை யாரும் கேட்கலையே மாமா? கேட்டிருந்தா சொல்லியிருப்பேன்!”

தாவணி கட்டிய அவள், துக்கம் காட்டியது வயசுக்கு மீறி இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 01கல்கியின் பார்த்திபன் கனவு – 01

பார்த்திபன் கனவு முதற்பாகம் அத்தியாயம் ஒன்று தோணித்துறை காவேரி தீரம் அமைதி கொண்டு விளங்கிற்று. உதயசூரியனின் செம்பொற்கிரணங்களால் நதியின் செந்நீர்ப் பிரவாகம் பொன்னிறம் பெற்றுத் திகழ்ந்தது. அந்தப் புண்ணிய நதிக்குப் ‘பொன்னி’ என்னும் பெயர் அந்த வேளையில் மிகப் பொருத்தமாய்த் தோன்றியது.

சாவியின் ஆப்பிள் பசி – 30சாவியின் ஆப்பிள் பசி – 30

சாயங்காலம் எல்லோருமாக ஆஸ்பத்திரிக்குப் போகும் போது, சுபத்ராவுக்காகக் காத்திருந்தார்கள். அரை மணி காத்திருந்த பிறகு, சேட் எழுந்து போய் டெலிபோன் பண்ணிப் பார்த்துவிட்டு, “இன்னும் வீட்டுக்கு வரலையாம் ஜீ” என்று டைரக்டரிடம் சொன்னார். டைரக்டர் பொறுமை இழந்து கொண்டிருந்தார். “வந்திரட்டம். அவங்க