Tamil Madhura சிறுகதைகள் வல்லிக்கண்ணன் கதைகள் – மூக்கபிள்ளை வீட்டு விருந்து

வல்லிக்கண்ணன் கதைகள் – மூக்கபிள்ளை வீட்டு விருந்து

மூக்கபிள்ளையின் மனசாட்சி திடீரென்று உறுத்தல் கொடுக்க ஆரம்பித்தது.

அது அப்படி விழிப்புற்று அரிப்புதருவதற்கு பத்திரிகைகளில் வந்த சில செய்திகள் தான் காரணமாகும்.

சுகமாய் சவாசனம் பயின்று கொண்டிருக்கிற மனசாட்சி சிலபேருக்கு என்றைக்காவது திடும்விழிப்பு பெற்று, குடை குடை என்று குடைந்து, முன் எப்பவோ பண்ணிய பாபத்துக்கு – அல்லது தவறுக்கு – பரிகாரமாக இப்போது செயல் புரியும்படி தூண்டி துளைப்பது ஏனோ தெரியவில்லை. மனித மனம், மனசாட்சி என்பதெல்லாம் விசித்திரமான தத்துவம் என்றோ, எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத புதிர் என்றோதான் எண்ணவேண்டி இருக்கிறது.

மூக்கபிள்ளை அப்படித்தான் நினைத்தார்.

“வடக்கே ஒரு ஊரில்” எவனோ ஒருவன் எப்பவோ ஒரு காலத்தில் ரயிலில் டிக்கெட்டு வாங்காமலே பிரயாணம் செய்திருந்தானாம் பலப்பல வருடங்களுக்குப் பிறகு இப்போ அவன் தனது தவறை உணர்ந்து வருத்தப்பட்டு ரயில் கட்டணமும் அபராதத் தொகையும் சேர்த்து ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பி நல்ல பேரும் பத்திரிகைப் பிரபலமும் பெற்றுக் கொண்டான்.

தெற்கே ஒரு நபரும் அதே மாதிரி, மனசாட்சியின் தொந்தரவுக்குப் பணிந்து எந்தக் காலத்திலோ இலவசமாக செய்திருந்த பிரயாணத்துக்கு உரிய பணத்தையும் அதற்கான வட்டியையும் சேர்த்து ரயில்வேக்கு அனுப்பி வைத்தான். இதுவும் பத்திரிகைச் செய்திதான்.

இவையும் இவைபோன்ற வேறு சில தகவல்களும் மூக்கபிள்ளையின் கவனத்தைக் கவர்ந்து. மனசில் ஆழமாய் பதிந்து, உள்ளுற வேலை செய்யலாயின.

“தன்னெஞ்சறிவது பொய்யற்க; பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். திருவள்ளுவர் பெரிய ஆளு தான். சரியாத்தான் சொல்லி வச்சிருக்காரு” என்று அவர் எண்ணிக் கொண்டார்.

– ஆனா இந்த நெஞ்சு அதாகப்பட்டது மனசாட்சி, ஏன் உடனுக்குடனே சுடுவதில்லை? அநேகம் பேருக்கு சுடுவதே இல்லை போல் தெரியுதே! சில பேருக்கு மட்டும் குழிப் பிள்ளையை எடுத்து மடியிலே வச்சு அழுகிற கணக்கிலே, அதுவும் புள்ளை மக்கி மண்ணாகி எலும்புகள் கூட உருமாறிப் போவதற்குப் போதுமான காலம் ஆகிவிட்ட பிறகு, தன்னெஞ் சறிந்து பொய்த்ததற்காக இத்தன்னெஞ்சு திடீர்ச்சுடுதல் பண்ணுவானேன்?…

இந்த ரீதியிலே மூக்கபிள்ளையின் மனதின் ஒரு பகுதி எண்ண வளையங்களை அதிரப் பண்ணவும், “சீ மூதி, நீசும்மா கிட” என்று அவர் அதன் மண்டையில் ஓங்கி அடித்தார்.

மூக்கபிள்ளை டிக்கட் வாங்காமல் பிரயாணம் செய்ததில்லை. அவர் அதிகமாகப் பயணம் போனதே கிடையாது அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம் என்கிற மாதிரி, அவருக்கு சொந்த ஊரான சிவபுரம்தான் சொர்க்கம் ஆகும்.

பரபரப்பு மிகுந்த கடைகளில் சாமான்கள் வாங்கி விட்டு, பில்படி பணத்தை கொடுக்காமல் அவர் நைசாக நழுவியதில்லை. அல்லது நோட்டுக்கு சில்லறை கொடுக்கிறபோது ஓட்டல் காரனோ, ஷாப்காரனோ அல்லது வேறு எவனுமோ, கவனப் பிசகாக அதிகப்படியாக ஒரு ரூபா ரெண்டு ரூபா தாள்களை கொடுத்து விடுகிறபோது, நம்ம அதிர்ஷ்டம் என்று எண்ணி அதை அமுக்கிக் கொண்டு வந்ததில்லை அவர். நின்று, பில்படி பணம் இவ்வளவு; பாக்கி இவ்வளவு தான் உண்டு; ஆனால் தரப்பட்டுள்ள தொகையோ இவ்வளவு இருக்கு என்று எடுத்துச் சொல்லி அதிகப்படியாக வந்ததை திருப்பிக் கொடுத்து விட்டுதான் அவர் வெளியேறுவார். “ஊரான் காசு நமக்கென்னத் துக்கு?” என்ற பாலிசி அவருடையது.

ஆகவே பொதுச்சொத்து எதையும் மூக்கபிள்ளை சுரண்டிய தில்லை. தனிநபர் எவரையும் அவர் ஏமாற்றியதில்லை. பின்னே அவருடைய மனசாட்சி குரங்குத்தனம் பண்ணுவானேன்?

சுகவாசிகள் மிகுந்த சிவபுரத்தில் சுத்த சுயம்பிரகாசச். சுகவாசியாக வாழ்ந்த மூக்கபிள்ளை மற்றவர்களிலிருந்து கொஞ்சம் மாறுபட்டவராக நடந்து வந்தார். சமூக ஜீவியாக அவர் அந்த ஊரில் வசித்து வந்தபோதிலும் சமூகத்தோடு ஒட்டி உறவாட விரும்பாதவர் போல் விலகியிருந்தார். சொந்தக்காரர்கள் வீடுகளுக்குப் போவதில்லை; மற்றவர்களோடு நெருங்கிப் பழகுவதில்லை; ஊர்ப் பொது விவகாரங்களில் அக்கறை கொள்வதில்லை; கோயில் திருவிழாக்கள், விசேஷ பூஜைகள் போன்ற சந்தர்ப்பங்களில் ஊராரோடு சேர்ந்து கோவிலுக் குப் போவதில்லை; இப்படி எவ்வளவோ சம்பிரதாயங்கள் இல்லையா – அவற்றில் எதையுமே அவர் அனுஷ்டிப்ப தில்லை.

ஆனால் ஊர் இழவு, ஊர் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அவசியம் – தலையைக்காட்ட வேண்டும்” என்று சமூகநியதி வரையறை செய்துள்ள பொதுக் காரியங்களுக்கு வேண்டா வெறுப்பாக அவரும் போகத்தான் வேண்டியிருந்தது. அப்போது கூட “பேருக்குத் தலையைக் காட்டி விட்டு வருகிற” வேலைதான். “இன்னொருத்தன் வீட்டிலே கையை நனைக்கிற சோலியே கிடையாது”. அதாவது, விருந்துச் சாப்பாட்டில் பங்கு பற்றுவது இல்லை, ரொம்ப நேரம் இருந்து கலகலப்பாக பேசி, உற்சாகமாக சிலரை பரிகசித்தும் சிலரால் கேலி செய்யப்பட்டும் பொழுது போக்குவது என்பதெல்லாம் அவருடைய வாழ்க்கை நியதிக்கு அப்பால்பட்ட விஷயங்கள்.

ஊர் இழவு என்றால், சாவு வீட்டுக்குப் போவது, நீர்மாலையில் கூட்டத்தோடு கூட்டமாக வாய்க்கால் வரை போய் வருவது, பிணத்தைத் தூக்குகிற வரையில் இழவு வீட்டில் காத்திருந்து அப்புறம் பாடையோடு சுடுகாடு வரை போய் ஆகவேண்டியதை எல்லாம் முடித்து கடைசியில் ஆற்றில் குளித்துவிட்டுத் திரும்புவது என்பது தலைமுறை தத்துவமாகக் கையாளப்படுகிற வழக்கமாகும்.

வரவர சில சுகவாசிகள் இதையெல்லாம் ஒழுங்காகச் செய்வதில்லை. சும்மா தலையை காட்டிவிட்டுத் திரும்பி விடுவார்கள். மூக்கபிள்ளையின் வழக்கமும் அதுதான்.

ஆனால் “ஊர் வழக்கம்” ஒன்றை அவர் தட்ட முடியாமல் போயிருந்தது. …

ஒரு வீட்டில் கல்யாணம் நடந்தால் பல தினங்களுக்கு பிறகு “நல்ல மாசத்துப் பழம்” என்று வாழைப் பழங்களும் சிறிது சீனியும் ஊர் பூராவுக்கும் வழங்குவார்கள். “மறு வீடு வீட்டு பலகாரம்” என்று, மைசூர் பாகு லட்டு மற்றும் சில இனிப்பு தினுசுகள், முறுக்கு, மிக்ஸ்சர் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் வைத்து சொந்தக்காரங்களுக்கு (சொக்காரங்களுக்கு) வழங்குவர். இது “ஊர் வழக்கம்” ஆகும்.

பெரியவர் யாராவது இறந்து போனால், மகள் அல்லது பேத்தி ஊருக்கு “கடலை போடுவது” வழக்கம். அரைப்படி கடலை – வசதி மிகுந்தவர்கள். 1 படி கடலை கூட – “ஊர் வழக்கம்” ஆக உறவுக் காரர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.

அநேகமாக எல்லா வீட்டாரும் இம்மாதிரி “ஊர் வழக்கங்”களை தட்டாமல் வாங்கிக் கொள்வார்கள். ஒன்றிரண்டு பேர்தான் நாங்கள் என்னத்தை திரும்பச் செய்யப் போகிறோம் எங்களுக்கு ஊர் வழக்கம் வேண்டாம்” என்று மறுத்து விடுவார்கள்.

மூக்கபிள்ளை ஒன்றிரு தடவைகள் மறுத்துப் பார்த்தார், “வழக்கம் கொண்டு வருகிற பெண்கள், சும்மா வாங்கித்தின்னு வையிங்க. ஊர் வழக்கத்தை விடுவானேன்? என்று கொண்டு வந்ததை அவர் வீட்டிலேயே வைத்துவிட்டுப் போனார்கள். அதன் பிறகு அவர் மறுத்ததில்லை. சடங்கு வீடுகளிலிருந்து “சர்க்கரைப் பொங்கல்” (பாச்சோறு) வரும். கோயில் திருவிழாக் காலங்களில் “புளியோதரை”, “பருப்புப் பொங்கல், சர்க்கரை பொங்கல். சுண்டல் பிரசாதம் வரும். கல்யாண வீட்டுப் பணியாரங்கள் வரும்.

“சும்மா சாப்பிட்டு வையிங்க” என்று பெண்கள் தாராளமாகக் கொடுத்து விட்டுப் போனார்கள்.

இதை எல்லாம் வாங்குறமே நாம ஊராருக்கும் உறவுகாரங்களுக்கும் திருப்பி செய்ய சந்தர்ப்பம் வரவா போகுது? என்று அவர்மனம் ஆதியில் குறுகுறுத்தது. இதுக்காகவே, வசை இருக்கப்படாதுன்னே, நான் விசேஷ வீடுகளில் சாப்பிடுகிறது இல்லை. நம்ம வீட்டிலே என்ன விசேஷம் வரப்போகுது. நாம ஊர் கூட்டி சாப்பாடு போடப் போறோம்” என்று அவர் எண்ணினார்.

ஆனாலும் போகப் போக அவருடைய மனமும் ஆட்சேபிக்கவில்லை. மூக்கபிள்ளையும் “ஊர் வழக்கங்களை வாங்கி அனுபவித்துக் கொண்டிருந்தார்.

இப்போது அவருடைய மனசாட்சி உதைத்துக் கொண்டது. தொந்தரவு கொடுத்தது.

முந்திய தினம் ஒரு வழக்கம் வந்தது. வசதியான வீடு. “மறுவீடு வீட்டுப் பலகாரம்” என்று நிறையவே கொடுத்து அனுப்பியிருந்தார்கள். இனிப்புகளும், காரங்களுமாய் வகை வகையான தின்பண்டங்கள்.

“எனக்கு வேண்டாம் இனிமே நான் ஊர் வழக்கத்தை வாங்கப் போறதில்லே” என்று அறிவித்தார் மூக்கபிள்ளை.

“இதென்ன புது வழக்கம்? எப்பவும் போலே வாங்கி வையுங்க. பலகாரமெல்லாம் தினுசு தினுசாயிருக்கு சும்மா சாப்பிடுங்க. நான் வேணும்னா காப்பி போட்டுத் தரட்டுமா?” என்றாள் அதைக் கொண்டு வந்தவள். அவள் கொஞ்சம் வாயாடி.

அங்கே அப்படி, இங்கே இப்படி என்று வாயடி அடித்து, கொண்டு வந்ததை அவருக்கே விட்டு விட்டு போனாள்.

அதுமுதல் அவர் மனம் அரித்து கொண்டேயிருந்தது.

– இதெல்லாம் “வட்டி இல்லாக் கடன்” என்பாக. இப்ப ஒருத்தர் செய்தா, மற்றவர் பிறகு எப்பவாவது திரும்பச் செய்யணும். அவர் இல்லாவிட்டாலும், அவர் பேரை சொல்லி அவருடைய மகனோ மகளோ பேரப்பிள்ளைகளோ செய்வாங்க. எதுவுமே செய்யாத என் போன்றவர்கள் – நானாக எதுவும் ஊருக்குச் செய்யப் போவதில்லை எனக்குப் பிறகு என் பேராலே செய்றதுக்கும் யாருமில்லை. அப்படி இருக்கையிலே ஊர் வழக்கங்களை வாங்கி அனுபவிப்பது எப்படி நியாயம் ஆகும்?…

– ஒருத்தர் இல்லாவிட்டால் இன்னொருவர் எப்பவாவது பழிச்சொல் உதிர்ப்பாங்க. பொம்பிளைகள் சில சமயம் வசையாப் பேசுறதும் வழக்கமாகத்தானே இருக்கு நாங்க அதைச் செய்தோம், இதைசெய்தோம் ஊர்க்காரங்க வயணமா வாங்கிச் சாப்பிட்டாங்க. இந்த ஊரு எங்களுக்கு என்ன செஞ்சுதுயின்னு நீட்டி முழக்குவாங்க.

– சிலபேரைப் பற்றி சில சமயங்களில் அநேகர் பேசுவது உண்டே! ஊர் சாப்பாடுன்னு சொன்னா பந்திக்கு முந்தி வந்திருவான் வாய்க்கு ருசியா வழிச்சு வழிச்சுத் தின்பான். ஒரு கல்யாண வீடு கருமாதி வீடு எதையும் விட்டுவிடமாட்டான். அவன் வீட்டிலே இதுவரைக்கும் எந்த விசேஷமும் செய்த தில்லை. யாருக்கும் சாப்பாடு போட்டதில்லே. என்னத்தை செய்யப்போறான்? அப்படியே செய்தாலும், ரொம்பச் சுருக்கமாச் செய்து ஊர்ச்சாப்பாடு போடாம ஒப்பேத் திடுவான். –

இப்படி நினைக்க நினைக்க மூக்கபிள்ளையின் மனம் சங்கடப்படலாயிற்று.

“என்னைப் பத்தியும் நாலு பேரு நாலைச் சொல்லத்தானே செய்வான்? இப்பவே யார் யாரு என்னென்ன பேசு றாங்களோ?” என்று முணுமுணுத்தார் அவர்.

மூக்கபிள்ளை வீட்டில் விசேஷம் என்று எதுவும் வந்த தில்லை. இனிமேல் செய்வதற்கு வாய்ப்பும் இல்லை.

“நம்ம வீட்டில் கல்யாணம் கார்த்திகை ஆண்டு நிறைவு சடங்கு என்று எதுவும் நடக்கப்போவதில்லை. பெண்டாட்டிக் காரி இருந்தா, போன வருசம் நமக்கு அறுபது வயசு நிறைஞ்சதுக்கு சட்டிப்பரிதி (சஷ்டியப்தபூர்த்தி) கொண்டாடி யிருக்கலாம். அதையே ஒரு கல்யாணம் மாதிரி நடத்தி ஜாம் ஜாம்னு ஊரை அழைச்சுச் சாப்பாடு போட்டிருக்கலாம்.

காலையிலே இட்லி பலகாரம் மத்தியானம் பாயசம், வடையோடு சாப்பாடுன்னு தடபுடல் பண்ணியிருக்கலாம். அதுக்குத்தான் கொடுத்து வைக்கலியே! இப்படி இருக்கையிலே ஊர் வழக்கத்தை மட்டும் வாங்கிக்கிட்டேயிருந்தால் என்ன அர்த்தம்? ஊருக்கு நாமளும் செய்யிறதா இருந்தால், சரீன்னு சொல்லலாம். அதுதான் இல்லைன்னு ஆயிட்டுதே! அப்புறம்? என்று அவர் “நெஞ்சோடு கிளத்தல்” பண்ணினார்.
உறுத்திக் கொண்டே இருந்த மூக்கபிள்ளையின் மனசாட்சி, பரிகாரமாக ஒன்று செய்யவேண்டும், ஊருக்கு நாமும் சிறிது பணம் செலவு பண்ணிக் கடனை தீர்க்கணும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.

– என்ன செய்யலாம்.

– மிட்டாய் கடையிலே ஸ்வீட், காரம் வாங்கி வந்து, பங்கு போட்டு “ஊர்வழக்கம் மாதிரி எல்லா வீடுகளுக்கும் சப்ளை பண்ணிவிடலாமே!

“செய்யலாம்தான். ஆனா என்ன காரணத்தை சொல்லி வழங்குவது? நம்ம விவகாரமெல்லாம் தான் எல்லாருக்குமே தெரியுமே சும்மானாச்சியும் அர்த்தம் இல்லாமல் இப்படிச் செய்தால் யார் வாங்கிக் கொள்ளுவாங்க? நூறுகேள்வி கேட்டு இல்லாத நொள்ளாப்பு பேசி திருப்பி அனுப்பிவிடுவாங்களே. சிவபுரம் ஆசாமிகள், லேசுப்பட்டவர்களா? என்றும் அவர் எண்ணினார்?”

– அப்படியானால்?

அவருக்கு “திடீர்னு ஒரு ஐடியா” உதயமாயிற்று. ஊரை அழைத்து ஒரு விருந்து கொடுக்கலாம். சித்திரா பெளர்ணமிச் சிறப்பு விருந்து என்று காரணம் கூறலாம். சித்திரா பெளர்ணமி எல்லோருக்கும் முக்கியமான நாள். அன்று நயினார் (சித்திரபுத்திர நயினார்) நோன்பும் கூட. பெளர்ணமியின் போது உல்லாச விருந்து உண்பது மக்களுக்கு பிடித்தமான விஷயம்.

சித்திரான்னங்களை உண்ண ரொம்ப பேர் பிரியப்படுவார்கள் சிவபுரம் வாசிகள் சித்திரா பெளர்ணமியன்று ஒரு சிறப்பு சித்திரான்ன விருந்து உண்டு மகிழட்டுமே என்று எண்ணினார் அவர்.

இந்த எண்ணம் கிளைவீசி வளர வளர மூக்கபிள்ளைக்கு இருப்புக் கொள்ளவில்லை. “இதுதான் சரி” என்று குதித் தெழுந்தார். “சக்கைப்போடு போட்டிருவோம்! ஜமாய்ச்சுப் போடுவோம்” என்று சொல் உதிர்த்தபடி அங்குமிங்கும் நடந்தார். கைகளை தேய்த்து கொண்டார். தானாகவே சிரித்தார். “பேஷ் பேஷ்” அருமையான ஐடியா என்று பாராட்டி மகிழ்ந்து போனார்.

முதல் வேலையாக மூக்கபிள்ளை செய்தது பஞ்சாங்கத்தைப் பார்த்து சித்திரா பெளர்ணமி என்று வருகிறது என்று கண்டுபிடித்ததுதான்.

பன்னிரண்டு நாட்கள் தான் இருந்தன.

பரவால்லே, அதுக்குள்ளே எல்லா ஏற்பாடுகளையும், முடித்து விடலாம் என்று திருப்தி அடைந்தார் அவர்.

பிறகு காரியங்கள் துரிதமாக நடந்தன. நல்ல தவசிப் பிள்ளை” இரண்டு பேரை வரவழைத்தார். தேவையான சாமான்களுக்குப் பட்டியல் போட்டு அனைத்தையும் வாங்கித் தீர்த்தார்.

மூக்கபிள்ளை எவருடனும் தாராளமாகக் கலத்து பழகுவ தில்லை ஆதலால், யாரும் அவர் வீட்டைத் தேடி வந்து பேசிப் பழகி “என்ன ஏது” என்று விசாரிப்பது கிடையாது.

இருப்பினும் மூக்கபிள்ளை என்னவோ பண்ணப்போறார் என்று மற்றவர்கள் யூகித்தார்கள் “அப்பாவி! என்னத்தையும் பண்ணிட்டுப்போறான்” என்று ஒன்றிருவர் கருத்து தெரிவித்தார்கள்.

மூக்கபிள்ளையும் தனது எண்ணத்துக்கு தீவிர விளம் பரம் கொடுக்கத் தயாராக இல்லை, விருந்து அன்றைக்கு எல்லோருக்கும் சொன்னால் போதுமென்று நினைத்து விட்டார்.

“சித்திரா பெளர்ணமி மத்தியானம் விரதச் சாப்பாடு வீட்டிலேதான் சாப்பிடுவாங்க ராத்திரிக்கு நம்ம சித்திரான்னச் சிறப்புச் சாப்பாடு. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சம் பழச் சாதம், வடை, பூம்பருப்புச் சுண்டல்” என்று திட்டம் தீட்டினார் அவர்.

அதன்படியே ஏற்பாடு செய்தார்.

காலையிலேயே “அழைப்புக்காரன்” ஆறுமுகத்தைக் கூப்பிட்டு, சிவபுரம் சுகவாசிகள் எல்லோர் வீட்டுக்கும் போய் “சித்திரா பெளர்ணமி சித்திரான்னச் சிறப்புச் சாப்பாடு” பற்றிச் சொல்லி, அழைக்கும்படி ஏற்பாடு.

வீட்டில் விளக்குகளை ஏற்றி வைத்துக்கொண்டு இலைகளை ரெடி பண்ணி வைக்கச் சொன்னார். ஆட்கள் ஏழுமணி முதல் தயாராக இருந்தார்கள்.

ஆனால், அழைக்கப்பட்ட நபர்களில் ஒருவர் கூட வரவில்லை,

மணி எட்டு. எட்டரை. ஒன்பது என்று ஓடியது. ஊகூங். ஒரு ஆளைக் கூடக் காணோம்.

மூக்கபிள்ளை மனம் குமுறிக் கொண்டிருந்தது. அவர் முகம் “என்னமோ மாதிரி மாறிவிட்டது வீட்டில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்.

ஒன்பதே கால்.

திரும்பவும் ஆறுமுகத்தை அனுப்பி வைத்தார்.

சுகவாசிகள் மிகுந்த சிவபுரத்தில் விசேஷமான பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள், எத்தனையோ உண்டு. ஒரு வீட்டில் விசேஷம், விருந்து என்றால் ஊரார் எதிர்பாக்கிற சம்பிரதாயங்கள் பலவாகும்.

முதலில் விசேஷ வீட்டுக்காரரே நேரில் ஒவ்வொருவரையும் கண்டு விஷயத்தைச் சொல்லி அழைக்கவேண்டும். “சாப்பாட்டையும் நம்ம வீட்டிலேயே வச்சுக்கிடுங்க” என்று வற்புறுத்தவேண்டும். விசேஷ நாளுக்கு முதல் நாள் அழைப்புக்காரன் வீடு வீடாக போய், நாளைக்கு இன்னார் வீட்டு விசேஷம் – தாம்பூலத்துக்கும் சாப்பாட்டுக்கும் அழைச்சிருக்கு” என்று சொல்லிப் போக வேண்டும். அப்புறம் விசேஷத்தன்று சாப்பாடு நேரத்தில் “ஐயா, சாப்பாட்டுக்கு வாங்க இலை போட்டாச்சு” என்று அறிவிக்கவேண்டும்.

சுகவாசி வருகிறாரோ வரவில்லையோ, அழைக்கத் தவறக்கூடாது. அழைப்பு விட்டுப் போனால் அதுபெரும் தவறாகக் கருதப்படும்.

ஊர் மரபு அப்படி இருக்கையில்.

இந்த மூக்கபிள்ளை என்ன நெனச்சுப்போட்டான்? பெரிய லார்டு ரிப்பன் பேரனோ? வீட்டிலே இருந்துகிட்டு ஆள் மூலம் சொல்லி அனுப்புவானாம் நாம ஓடிப்போகணுமாம் சாப்பிடற துக்கு நாம என்ன சோத்துக்கு அலைந்துபோயா கிடக்கிறோம்? என்று கொதிப்புற்றனர் சிலர்.

இந்த மூக்கபிள்ளை புத்தி போனதைத்தான் பாரேன். சித்ரா பெளர்ணமி – நயினார் நோன்பு – வருஷத்திலே ஒரு நாள விரதம் ஆச்சே? இட்லி உப்புமா இப்படிச் சாப்பிடுவாங்களா? சோறு வகைகளை தின்னப் போவாங்களா?” என்றனர் சில பேர்.

“அவன் யார் வீட்டு விருந்துக்கு வந்தான், நாம அவன் அழைச்ச உடனே அவன் வீட்டுக்கு போகணும் என்பதுக்கு? என்று கேட்டார்கள் பலர்.

ஆறுமுகம் இதைஎல்லாம் மூக்கபிள்ளையிடம் ரிப்போர்ட் பண்ணினான்.

தவசிப்பிள்ளைகளும் பரிமாற ரெடியாக நின்றவர்களும் பிள்ளையையும் சித்திரான்ன வகைகளையும் மாறி மாறிப் பார்த்தார்கள். இவ்வளவு ஏற்பாடுகளும் வீணாச்சுதே என்ற மனச்சுமை அவர்களுக்கு.

மூக்கபிள்ளை தொண்டையைச் செருமினார்: ஆறுமுகம் என்றார்.

“ஐயா!” என்றான் அவன் பணிவோடு.

“உனக்கு அழைப்புக் கூலி ரெண்டு ரூபாயா? ரெண்டுதரம் அழைச்சிருக்கே நாலு ரூபாயாச்சு. இன்னும் ரெண்டு ரூபா வாங்கிக்கோ. இந்த ஊர் பெரியவாள்களும் பிரமுகர்களும் தானே நம்ம வீட்டு விருந்துக்கு வரமாட்டோம்னு சொல்லிப் போட்டாக! போகட்டும். நீ வடக்கூர் கீழுர் பக்கம் போயி, அங்கே உள்ள ஏழை எளிய பிள்ளைகளை எல்லாம் இங்கே வரசொல்லு ஐயா வீட்டிலே நயினார் நோன்பு பூசை சித்திரான்ன பிரசாதம்னு சொல்லி அனுப்பு. வருஷத்திலே ஒரு நாள் அதுக புதுமையா, திருப்தியாச் சாப்பிடட்டும். நீயும் வயிறாறச் சாப்பிடு. நீ சாப்பிட்ட பிறகு போனாப் போதும். வே, இலையைப் போடும் எனக்குப் பரிமாறும்! திண்ணையிலே இலை போட்டு ஆறுமுகத்துக்கு பரிமாறும். என்று மிடுக்காக உத்திரவிட்டார்.

“செய்தது எதுவும் வீணாகி விடாது!” என்றார் அவர் தவசி பிள்ளைகளுக்கு எடுத்து சொல்வது போல.

– இருக்கிற சுகவாசிகளுக்கே மேலும் மேலும் விருந்தளிப் பதை விட, ஏழை எளியதுக வயிற்றுக்கு சோறு போடுவது ரொம்பப் பெரிய விஷயமாக்கும்!

இப்படிப் பொன்மொழி தீட்டிக் கொண்டது மூக்கபிள்ளை மனம்.
(மஞ்சு, 1984)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுந்தரும் புள்ளிவால் பசுவும் : காரூர் நீலகண்ட பிள்ளைசுந்தரும் புள்ளிவால் பசுவும் : காரூர் நீலகண்ட பிள்ளை

சுந்தரும் புள்ளிவால் பசுவும் : காரூர் நீலகண்ட பிள்ளை (மலையாளக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் பன்னிரண்டு வயது சுந்தர் ஊர்ப்பசுக்களை மேய்த்தான். அவன் உழைப்புக்காகச் சோறும் கறியும் அவனுக்குக் கிடைத்தன.   கோடையில் ஒருநாள் அதிகாலையில் அவன் மூன்று பசுக்களை

அவன் சட்டையில் இவன் மண்டை… : பன்னாலால் படேல்அவன் சட்டையில் இவன் மண்டை… : பன்னாலால் படேல்

அவன் சட்டையில் இவன் மண்டை… : பன்னாலால் படேல் (குஜராத்திக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன்   ஹோலி பண்டிகையின் அந்தி நேரம். கிராமப் பையன்கள் அநேகர், வேப்பமரத்தின் கீழ் கூடிநின்று, ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரி வீசி விளையாடிக்

அப்புவின் கதை : ரண்டி சோமராஜுஅப்புவின் கதை : ரண்டி சோமராஜு

அப்புவின் கதை : ரண்டி சோமராஜு (தெலுங்கு கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் முத்துத் தீவு என்று ஒரு சிறு கிராமம் இருந்தது. ஆனால் அந்த ஊரில் முத்துக்கள் சேகரிக்கப்படவுமில்லை; அது ஒரு தீவுமில்லை. அந்த ஊர் வெகு தூரத்தில் தன்னந்தனியாக