Tamil Madhura நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 1

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 1

துளசி மாடம்
முன்னுரை

1978 ஜூன் மாதம் முதல் 1979 ஜனவரி மாதம் வரை ‘கல்கி’ வார இதழில் வெளியான இந்நாவல் இப்போது புத்தக வடிவில் வெளி வருகிறது.

தொடராக வெளிவரும் போதும், நிறைந்த போதும், ஏராளமான அன்பர்களின் நுணுக்கமான கவனிப்பையும், பாராட்டையும் பெற்ற இந்நாவலை இப்போது புத்தக வடிவில் தமிழ்ப் புத்தகாலயத்தார் கொண்டு வருகிறார்கள்.

“பண்பாடு என்பது பரவலாகும் போது வெறும் தேசிய அடையாளப் புள்ளி (National Identity) நீங்கி மானிடம் என்கிற சர்வதேச அடையாளப் புள்ளி (International Identity) வந்து விடுகிறது.

சங்கரமங்கலம் என்ற ஒரு சிறிய தமிழ்நாட்டுக் கிராமத்தில் இந்தக் கதை நிகழ்ச்சிகள் நடந்தாலும் இதில் வரும் மனிதர்கள் அல்லது முக்கிய கதாபாத்திரங்கள் அந்தச் சிறிய கிராமத்துக்கு அப்பாலும் – அதைவிடப் பரந்த பெரிய உலகத்தைப் பாதிப்பவர்கள் – பாதித்தவர்கள், பாதிக்கப் போகிறவர்கள்” – என்ற கருத்தை இந்த நாவலின் முடிவுரையில் காண்பீர்கள். அதையே இங்கும் முதலில் நினைவூட்ட விரும்புகிறேன். உலகத்தைப் பொறுத்தவரை அழகிய தென்னிந்தியக் கிராமமான சங்கரமங்கலத்தில் விசுவேசுவர சர்மாவின் இல்லத்துத் துளசி மாடத்தில் தொடர்ந்து தீபம் ஏற்றப்படுகிறது என்பது தான் முக்கியம். ஆனால் அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரையிலோ அந்த தீபம் எந்தக் கைகளால் யாரால் – ஏற்றப்படுகிறது என்பது மட்டுமே மிகவும் முக்கியம்.

பூரண ஞானிகளும் விருப்பு வெறுப்பற்ற அறிவாளிகளும் உலகெங்குமுள்ள மனிதர்களை இனம், நிறம், மொழி, வேறுபாடுகளைக் கருதாமல் சமதிருஷ்டியோடு பார்க்கிறார்கள். சமதிருஷ்டியும், சஹ்ருதயமும், பக்குவத்தாலும் பண்பாட்டுக் கனிவு, முதிர்ச்சி ஆகியவற்றாலுமே வருவன. அவை எல்லாருக்கும் எல்லா இடத்திலும் வந்து விடுபவை அல்ல.

சர்மாவுக்கும், இறைமுடிமணிக்கும், அறிவாலும் சமதிருஷ்டியாலும் கிடைக்கும் கனிவு, சீமாவையருக்கும் பிறருக்கும் எதனாலும் எப்போதும் கிடைக்கவில்லை என்பதைத்தான் கதை நமக்குச் சொல்லுகிறது. மகாகவி பாரதி கூறுவதைப் போல்,

“நோக்கும் இடம் எங்கும்
நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்”

என்கிற ‘சமதரிசனம்’ தான் அறிவின் முடிவான பயன். அத்தகைய சமதரிசனம் விசுவேசுவர சர்மாவுக்கு இருக்கிறது. காமாட்சியம்மாளுக்குக் கூட முடிவில் அந்தச் சமதரிசனம் வரத்தான் செய்கிறது. ஆனால், அந்தச் சமதரிசனமே அவளது முக்தியாகவும் அமைந்து விடுகிறது கதையில்.

அத்தகைய சமதரிசனமும் மன விசாலமும் ஏற்பட இக்கதை ஒரு சிறிது உதவினாலும் அதற்காக இதை எழுதிய ஆசிரியன் பெருமகிழ்ச்சியடைய முடியும் என்பதை வாசகர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நா. பார்த்தசாரதி

‘தீபம்’
சென்னை – 2
16-2-1979
——-

துளசி மாடம்
அத்தியாயம் 1

புதன் கிழமைக்கும் வெள்ளிக் கிழமைக்கும் நடுவில் சங்கரமங்கலம் விசுவேசுவர சர்மாவின் அந்தக் குடும்பத்தில் அப்படி என்னதான் நடந்து விட்டது? ரவி பாரிஸிலிருந்து எழுதி வியாழக்கிழமை காலையில், இங்கே கிடைத்திருக்கிற அந்த விமானத் தபால் – கடிதம்தான் இந்த மாறுதல்களை உண்டாக்கியிருக்க வேண்டும். கடிதத்தைப் பார்த்தபின் என்ன செய்வது என்ற மலைப்பு, இனி எப்படி நடக்கும் என்ற ஆவல், எப்படி அதற்கு ஒத்துக் கொள்வது என்ற தயக்கம், யார் யார் என்ன நினைப்பார்கள் என்ற பயம் – எல்லாம் விசுவேசுவர சர்மாவின் மனத்தைப் பற்றிக் கொண்டு உலுக்கின.

ரவியைப் பிரான்சுக்குப் போக அனுமதித்திருக்கவே வேண்டாமோ என்று தோன்றியது இப்போது. வேணு மாமாவின் யோசனைப்படி ஆங்கிலப் பத்திரிகைகளில் கொடுப்பதற்காக எழுதி வைத்திருந்த ‘மணமகள் தேவை’ – விளம்பரத்தைக் கொடுக்கும் எண்ணம் இப்போது அவருக்கு இல்லை. அப்படி ஒரு விளம்பரம் கொடுப்பதற்கு இனிமேல் அவசியம் இருப்பதாகவும் அவருக்குத் தோன்றவில்லை. அவர் முடிவு செய்வதற்கென்று இதற்குப்பின் அவருடைய திருக்குமாரனால் எதுவும் மீதம் விடப்பட்டிருக்கவில்லை. எல்லாம் முடிந்துவிட்டது. அல்லது கைமீறிப் போயிருந்தது.

வெள்ளிக்கிழமை காலை, உள்ளூர் நியூஸ் ஏஜெண்டு பத்திரிகைக்கு வாங்கி அனுப்புவதற்காக அந்த ‘மணமகள் தேவை’ விளம்பரத்தை அவரிடம் வந்து கேட்ட போது,

“இப்ப வேண்டாம்… மறுபடியும் நானே சொல்லி அனுப்பறேனே…?” என்று அவனுக்குப் பூசி மெழுகினாற் போலப் பதில் சொல்லி மறுத்துவிட்டார்.

புதன் கிழமை காலையில் பத்திரிகை போடும்போது, ‘நாளன்னிக்கு வெள்ளிக் கிழமை காலம்பர ஒரு விளம்பரம் தரேன். அதைப் பேப்பருக்கு அனுப்பிடணும். என்ன பணம் ஆறதுன்னு கணக்குப் பார்த்துச் சொன்னா அதுக்கும் கூடவே செக் எழுதித் தந்துடறேன்…” என்று கூறியிருந்தவர் வெள்ளிக் கிழமை அந்த எண்ணத்தை உடனே கைவிடும்படி அப்படி என்ன ஆயிற்றென்று புரியவில்லை.

தனக்குக் கிடைக்க இருந்த விளம்பரக் கமிஷன் போய் விட்டதே என்று ஏஜெண்டுக்கு வருத்தம். அந்த ஊரிலும், அக்கம் பக்கத்து ஊர்களிலுமாக இப்படி ஏதாவது பத்துப் பன்னிரண்டு விளம்பரங்களை வாங்கி அனுப்புவதன் மூலம் பத்திர்கைகளின் விற்பனைக் கமிஷன் தவிர விளம்பரக் கமிஷனாகவும் அவனுக்கு ஏதாவது கிடைக்கும். ஏஜெண்டைப் பொறுத்தவரை அந்த மாத விளம்பரங்களில் ஒன்று இப்போது போய்விட்டது. நஷ்டம்தான்.

“ஐரோப்பிய நகரம் ஒன்றில் சில ஆண்டுகள் வசித்துவிட்டுத் தாயகம் திரும்பும் மேற்படிப்பும் உயர்கல்வித் தகுதியும் உள்ள முப்பத்திரண்டு வயது மணமகனுக்கு மணமகள் தேவை. கௌசிக கோத்திரம் அல்லாத கோத்திரத்தைச் சேர்ந்தவர் எழுதவும். மணமகள் அழகாகவும் இலட்சணமாகவும் குடும்பப் பாங்காகவும் அடக்கமாகவும் இருக்க வேண்டும். பி.ஏ. வரை படித்திருந்தால் நல்லது. குறைந்த பட்சம் எஸ்.எஸ்.எல்.சி.யாவது பாஸ் செய்திருக்க வேண்டும். புகைப்படம் முதலிய விவரத்தோடு ஜாதகமும் அனுப்ப வேண்டும்” – என்னும் பொருள்பட ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய விளம்பரம் வேணு மாமாவின் ஆலோசனையோடு தயாரிக்கப்பட்டவுடனேயே பாரிஸூக்கும் ஒரு காப்பி அனுப்பப்பட்டது. விசுவேசுவர சர்மாவின் பிள்ளை ரவிக்கு அதை முதலில் அனுப்பச் சொன்னதே வேணு மாமாதான்.

வேணு மாமாவின் பிள்ளை சுரேஷுக்குப் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ அலுவலகத்தில் பெரிய உத்தியோகம். சுரேஷ் முதலில் ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நியூயார்க்கில் இருந்தான். அப்புறம் பாரிஸுக்கு மாற்றப்பட்டு இப்போது சில ஆண்டுகளாகப் பாரிஸில் இருக்கிறான். பாரிஸில் குடும்பத்தோடு வசித்து வந்த சுரேஷ் அங்கு வந்ததிலிருந்தே தன் தந்தையையும் ஒரே தங்கையையும், வரச்சொல்லிச் சங்கரமங்கலத்துக்கு எழுதிக் கொண்டே இருந்தான். வேணு மாமாவும் அவர் பெண்ணும் அசையவே இல்லை. கடைசியாக நாலைந்து மாதங்களுக்கு முன்பு சுரேஷ் இரண்டு பேருக்குமாக அங்கிருந்து விமான டிக்கட்டையே வாங்கி அனுப்பிவிட்டான். வேணு மாமாவும் அவர் பெண்ணும் பாரிஸ், லண்டன் எல்லாம் சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பிய பின்புதான் பாரிஸிலிருக்கும் தன் பிள்ளை ரவியைப் பற்றிய சில விவரங்கள் விசுவேசுவர சர்மாவுக்குத் தெரிந்தன.

வேணு மாமா அந்த விபரங்களைத் தெரிவித்த போது, முதலில் விசுவேசுவர சர்மாவால் அவற்றை நம்பக் கூட முடியவில்லை. வேணு மாமா என்னவோ மிகவும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் தான் சர்மாவிடம் அதைச் சொல்லியிருந்தார். புறங்கூறுவது போலவோ குறை கூறுவது போலவோ அவர் சர்மாவிடம் அதைக் கூறவில்லை.

“உமக்குத் தகவல் தெரியணும்கிறதுக்காகத்தான் இதைச் சொன்னேன். உடனே கோபத்தோடு அசட்டுப் பிசட்டுன்னு ஆத்திரப்பட்டு அவனுக்கு லெட்டர் எழுதிப்பிடாதேயும். எழுதறதுன்னாக்கூட இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு இதெல்லாம் ரொம்ப நாசூக்காகவும் மனசு புண்படாமலும் எழுதணும். ‘ஏண்டா போன இடத்தில் நீ பாட்டுக்கு யாரோ ஒரு பிரெஞ்சுப் பெண்ணைக் காதலிக்கிறியாமே?’ -ன்னு எழுதாதீரும். ‘நீ இந்த தடவை ஊருக்கு வரபோது உனக்குக் கல்யாணம் பண்ணிடலாம்னு நானும் உங்கம்மாவும் நினைக்கிறோம். பேப்பர்லே இந்த மாதிரி விளம்பரம் பண்ண உத்தேசித்திருக்கேன்’னு எழுதும். அதுக்கு அவன் என்ன பதில் எழுதறான்னு பார்க்கலாம்” என்பதாக வேணு மாமாதான் அந்த யோசனையைச் சொல்லியிருந்தார். அந்த யோசனைப்படி சர்மா ரவிக்கு இரண்டு வாரம் முன்பு எழுதியிருந்த கடிதத்துக்குத்தான் வியாழக்கிழமை காலையில் சுருக்கமாகவும், தீர்மானமாகவும், ஓரளவு கண்டிப்பாகவும் பாரிஸிலிருந்து பதில் வந்திருந்தது.

ரவியின் கடிதம் சற்றே பதற்றத்தோடும் அவசரத்தோடும் எழுதப்பட்டிருந்தது போல் தோன்றியது.

“மணமகள் தேவை விளம்பரம் அவசியமில்லை. அதை உடனே நிறுத்தவும். இங்கு சில மாதங்களுக்கு முன்பு வந்திருந்த வேணு மாமாவோ, அவர் பெண் வசந்தியோ என்னைப் பற்றிய விவரங்களை உங்களுக்குச் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் அந்த விவரங்களை எல்லாம் சொல்லியதன் பின் உங்களுக்கு எழுந்த சந்தேகத்தின் பேரில் நீங்கள் எழுதியிருந்தாலும் சரி, எந்த விவரமும் உங்களுக்குத் தெரியாமல் நீங்களாகவே எனக்கு எழுதியிருந்தாலும் சரி, என் பதில் இதுதான். இதில் மாறுதல் எதுவும் எதிர்பார்க்க வேண்டாம்.

நான் என் மனத்தை மிகவும் கவர்ந்துவிட்ட பிரெஞ்சு யுவதி ‘கெமெலை’க் (Camille-என்ற அவள் பெயரை என் உச்சரிப்பு வசதிக்காகக் ‘கமலி’ – என்று இந்தியத் தன்மையூட்டி அழைக்கிறேன் நான்) காதலிக்கிறேன்; அவளும் என்னைக் காதலிக்கிறாள். நான் இன்றி அவள் வாழ முடியாது. அவளின்றி நான் வாழ முடியாது. இது நிச்சயம். அவளுடைய பெயரில் நான் செய்துள்ள மாற்றம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அவளும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கவும் என் பெற்றோர்களாகிய உங்களையெல்லாம் காணவும் மிகவும் ஆவலாக இருக்கிறாள். இம்முறை நான் வரும்போது கமலியையும் அங்கு அழைத்து வருவதாக முடிவு செய்திருக்கிறேன்.

மகாலட்சுமி போன்ற அழகும், புன்னகை மாறாத துறுதுறுவென்ற முகக் களையும், மாற்றுக் குறையாத சொக்கத் தங்கம் போன்ற நிறமும் உள்ள மருமகளை அவளிடம் அழைத்து வருவதாகத் தயவு செய்து அம்மாவிடம் சொல்லுங்கள். கமலிக்கும் இந்தியத் தாய்மார்கள், இளம் பெண்கள் இவர்களோடெல்லாம் பழகிப் பல விஷயங்களை அறிய வேண்டும் என்பதில் கொள்ளை ஆசை. அம்மாவோ, நீங்களோ, கமலியிடம், எந்தவிதமான கோபதாபங்களையோ மனஸ்தாபங்களையோ காண்பிக்கக் கூடாது. இது என்னுடைய வேண்டுகோள்.

சின்ன வயதில் நீங்கள் எனக்குக் கற்பித்த சமஸ்கிருத காவியங்களில் ‘காந்தர்வ விவாகம்’ – என்பதற்கு விளக்கம் சொல்லும்போது, “கொடுப்பவர்களும் ஏற்பவர்களும் இன்றிச் சகல இலட்சணமும் பொருந்திய ஓர் இளைஞனும் இளம் பெண்ணும் தமக்குள் தாமே சந்தித்து மனமும் உடம்பும் இணைவது” என்று விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள். விவாகங்களில் உயர்ந்த தரத்து விவாகம் அதுதான் என்பதையும் விளக்கியிருக்கிறீர்கள். அதை இப்போது உங்களுக்கு ஞாபகப்படுத்த மட்டும் விரும்புகிறேன்.

‘உங்கள் மன உணர்ச்சிகள் எப்படி இருக்கும்? அம்மா என்ன நினைப்பாள்?’ – என்றெல்லாம் என்னால் இங்கிருந்தே அநுமானம் செய்து கொள்ள முடிகிறது.

குமார் நன்றாகப் படிக்கிறானா? பாருவுக்கு என் பிரியத்தைச் சொல்லவும். இருவரிடமும் அவர்களுடைய பிரெஞ்சு மன்னி அவர்களைச் சந்திக்க மிகவும் ஆவலாக இருக்கிறாள் என்று சொல்லவும்.

வேணு மாமாவையும் அவர் பெண் வசந்தியையும் கேட்டதாகச் சொல்லுங்கள். வசந்தி இங்கு வந்திருந்த போது கமலியோடு நன்றாகப் பழகினாள். கமலிக்கு அவளையும் அவளுக்குக் கமலியையும் ரொம்பப் பிடித்துப் போயிற்று.

மாமாவிடமும், வசதியிடமும், நாங்கள் வருகிற தகவலைச் சொல்லவும்.

உங்கள் பிரியமுள்ள
ரவி.”

அருமைப் பிள்ளையாண்டான் ரவியின் இந்தக் கடிதத்தைத் திரும்பத் திரும்பப் பலமுறை படித்துவிட்டார் சர்மா. அவருடைய மனைவி காமாட்சி வேறு தொணதொணத்தாள்.

“ஏன்னா, நீங்க ஒரேயடியாகக் கவலையிலே மூழ்கறாப்பலே ரவி அப்படி என்னதான் எழுதியிருக்கான்? எனக்குந்தான் கொஞ்சம் படிச்சுச் சொல்லுங்கோளேன்; கேட்கிறேன்;”

“உனக்கு இப்போ ஒண்ணும் தெரிய வேண்டாம். நீ குய்யோ முறையோன்னு கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டிப்பிடுவே. விஷயம் இரசாபாசமாயிடும்.”-

“நீங்க படிச்சுக் காட்டலேன்னா அதைப் படிச்சுத் தெரிஞ்சுக்க முடியாதுன்னு நினைச்சுக்க வேண்டாம். பாருவைப் படிக்கச் சொல்றேன். இல்லேன்னாச் சாயங்காலம் குமார் வந்தான்னா அவனைப் படிக்கச் சொல்லிக் கேட்டுப்பேன்.”

-காமாட்சியம்மாள் இப்படிச் சொல்லவே சர்மா முன் ஜாக்கிரதையாக அந்தக் கடிதத்தை இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டிக் கொண்டார். இரும்புப் பெட்டிச் சாவி எப்போதும் அவர் இடுப்பை விட்டு இறங்காது. சாதாரணமாகவே தூண்டித் துருவி விசாரிக்கும் இயல்புள்ள காமாட்சியம்மாளிடம் ‘உனக்கு இப்போ ஒண்ணும் தெரிய வேண்டாம். நீ குய்யோ முறையோன்னு கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டிப்பிடுவே… விஷயம் இரசாபாசமாயிடும்’ என்று அவர் பதில் சொல்லிய விதமே அவள் ஆவலை அதிகப்படுத்திவிட்டிருக்கும். காமாட்சியம்மாளுக்குக் கொஞ்சம் காது மந்தம். வழக்கம் போல் ‘உனக்கு இப்போ ஒண்ணும்…’ என்று இரந்து உரத்த குரலில் தொடங்கிய சர்மா அந்த முதல் மூன்று சொற்களுக்குப் பின் ஒலியை மெதுவாக்கி மற்ற வார்த்தைகளை மென்று விழுங்கினாற் போல அமுக்கி விட்டார். ஆகவே உரையாடலின் பின் பகுதியில் அவர் என்ன சொன்னாரென்று நல்ல வேளையாகக் காமாட்சியம்மாளுக்குப் புரியவில்லை.

*****

சங்கரமங்கலம் அக்கிரகாரம் மற்ற எல்லா அக்கிரகாரங்களையும் போல வம்பு தும்புகளும், புறம் பேசுதலும், பொருளற்ற விரோதங்களும், பயனற்ற முரண்டுகளும் நிறைந்ததுதான். எல்லாவிதமான மனிதர்களும் அங்கு இருந்தார்கள். புதுமையை அங்கீகரிக்காத வறட்டுப் பிடிவாதம், சாதி சம்பிரதாய ஆசார அநுஷ்டானங்களுக்கு முக்கியத்துவமளிக்கும் பழைய வைதிகர்களின் பிடிப்பு, படித்த இளைஞர்கள் உத்தியோகங்களுக்காகக் கிராமத்தைவிட்டு வெளியேறுதல், கட்சி கட்டுதல், ஒற்றுமையின்மை, வயல் வரப்புச் சண்டை, வைக்கோல் போருக்குத் தீ வைத்தல் சகஜமாக அந்தக் கிராமத்திலும் இருந்தன.

இன்றைய இந்தியக் கிராமம் என்பது முழுவதும் பழமையான நன்மைகள் நிறைந்ததுமில்லை. முழுவதும் புதுமையான வளர்ச்சிகள் நிறைந்ததுமில்லை. பழைமையை விடமுடியாமல், புதுமையைப் புறக்கணிக்கவும் முடியாமல், சடங்கு சம்பிரதாயங்களை தவிர்க்கவும் முடியாமல், விஞ்ஞான விவேக வளர்ச்சிகளை விட்டுவிடவும் ஏற்கவும் இயலாமல் தவிக்கும் ஓர் இரண்டுங்கெட்டான் நிலையில் அது இருந்தது. தர்மம், அதர்மம், நியாயம், அநியாயம், பணத்தாசை, பொறாமை, திருட்டு, நட்பு, விரோதம், அசூயை, விபூதி, துளசி, சீட்டாட்டம், புகையிலை, பொடி, வேதம், அத்யாயனம், வறுமை, செல்வம் என்று இவையெல்லாம் எப்படி ஒன்றோடொன்று ஒட்டாதவையோ அப்படியே இந்தியக் கிராமங்களின் நிலையும் ஒன்றோடென்று ஒட்டாமல் இருந்தது.

அதிலும் ஜீவநதி ஒன்று பாய்கிற தீரவாசத்துப் பிரதேசமாக இருந்துவிட்டாலோ இந்தப் பிரச்னைகள் இன்னும் அதிகம். சங்கரமங்கலம் தீரவாசத்தில் இருந்த வளமான கிராமம். அங்கே பாயும் அகஸ்திய நதி வற்றி மணல் தெரிந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை. பொன் விளையும் பூமி என்பார்களே அப்படிப்பட்ட கிராமம். கிராமத்திலிருந்து வெளியேறி பெரிய உத்தியோக அந்தஸ்தில் இருக்கிறவர்களின் பட்டியலில் முதலிடம் யுனெஸ்கோவில் உள்ள வேணு மாமாவின் பிள்ளை சுரேஷுக்குத்தான். தொழில் துறையில், வியாபாரத்தில் சர்க்கார் உத்தியோகங்களில், கம்பெனி நிர்வாகப் பதவிகளில் அந்தக் கிராமத்திலிருந்து சென்றவர்கள் பலர் இருந்தாலும் சுரேஷுக்கு அடுத்த இடம் என்னவோ சர்மாவின் பிள்ளை ரவிக்குத்தான் தரப்பட்டிருந்தது.

நாலைந்து ஆண்டுகளுக்கு முன் இப்போது பாரிஸில் ரவி பார்க்கும் இந்த உத்தியோகத்திற்காக அவன் விண்ணப்பித்த போது தனக்கு இது கிடைக்கும் என்ற நம்பிக்கையே அவனுக்கு இல்லை.

பிரான்ஸில் உள்ள பெரிய பல்கலைக் கழகத்துக்காக ‘புரொஃபஸர் ஆஃப் இண்டியன் ஸ்டடீஸ் – அண்ட் ஓரியண்டல் லாங்வேஜஸ் டிபார்ட்மெண்ட்’ பதவிக்கு மனுக்களைக் கோரி இந்தியன் கவுன்ஸில் ஃபார் கல்ச்சுரல் ரிலேஷன்ஸ் விளம்பரம் செய்திருந்தது. பி.எச்.டி. தவிர தமிழ், சமஸ்கிருந்தம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமையோடு பிரஞ்சு மொழிப் பயிற்சியில் டிப்ளோமாவும் தகுதிகளாகக் கோரிக் குறிப்பிடப்பட்டிருந்தன.

ரவியிடம் இந்த எல்லாத் தகுதிகளும் இருந்தன. ஒரு வருஷத்துக்கும் குறைவாகச் சென்னையில் ஒரு கல்லூரியில் வேலை பார்த்தபோது மாலை நேரங்களில் சும்மா இருக்க வேண்டாமே என்று ‘அல்லயான்ஸ் பிரான்ஸேயில்’ சேர்ந்து வாங்கிய பிரெஞ்சு டிப்ளோமாவும் பயன்பட்டது இப்போது.

அந்த உத்தியோகத்திற்காக டில்லியில் நடந்த இண்டர்வ்யூவுக்கு மொத்தம் ஆறுபேர் வந்திருந்தார்கள். அதில் இருவர் அதிகம் வயது மூத்தவர்கள் என்பதால் தகுதி இழந்தனர். வேறு இருவருக்குப் பிரெஞ்சு மொழி ஞானம் சரியாயில்லை. இன்னொருவருக்குச் சமஸ்கிருதம் போதுமான அளவு தெரியவில்லை. இண்டர்வ்யூ நடத்தியவர்களுக்கு எல்லா வகையிலும் – கம்பீரமான அழகிய தோற்றம் உட்படத் – திருப்தியளித்தது ரவிதான். அதனால் ரவிக்கு அந்தப் பதவி கிடைத்தது.

முதலில் அவன் பெற்றோர் தயங்கினாலும், அந்தப் பதவிக்காக இந்தியாவில் கனவிலும் எதிர்பார்க்க முடியாத சம்பளத் தொகையைக் கேள்விப்பட்டதும் சம்மதித்தார்கள். இதுதான் வெளிநாட்டில் ரவிக்கு ஓர் உத்தியோகம் கிடைத்த வரலாறு.

இன்று புதிதாக எழுந்துள்ள பிரச்னையையும் இந்தப் பழைய வரலாற்றையும் சேர்ந்தே இப்போது மறுபடி நினைத்தார் சர்மா. ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் வேணு மாமாவையும் அவர் பெண் வசந்தியையும் கலந்தாலோசிக்கலாம் என்று சர்மாவுக்குத் தோன்றியது.

ரவியின் கடிதத்தை எடுத்துக் கொண்டு வடக்குத் தெருவில் இருந்த வேணு மாமாவின் வீட்டுக்குச் சென்றார் சர்மா.

அவர் போன சமயம் வேணு மாமா வீட்டில் இல்லை. வேணு மாமாவின் மகள் வசந்தி கூடத்தில் நாற்காலியில் சாய்ந்தபடி ‘ஈவ்ஸ் வீக்லி’ படித்துக் கொண்டிருந்தாள்.

சர்மாவைப் பார்த்ததும், “வாங்கோ மாமா! அப்பா வெளியிலே போயிருக்கார்… திரும்பற சமயம் தான்… உட்காருங்கோ” – என்று வரவேற்றாள் வசந்தி.

“அப்பா வர்றபோது வரட்டுமே… அதுவரை உங்கிட்டப் பேசறதுக்கே நெறைய விஷயம் இருக்கு அம்மா…”

“சித்தே இருங்கோ மாமா… உள்ளே அம்மாகிட்ட உங்களுக்குக் காபி கலக்கச் சொல்லிட்டு வந்துடறேன்…”

“காபியா? எனக்கெதுக்குமா; இப்பத்தானே சாப்பிட்டுட்டு வந்தேன்…”

“அதுனாலே என்ன! நான் சாப்பிடப் போறேன். எங்கூடச் சேர்ந்து இன்னொரு கப் சாப்பிடுங்கோன்னு நான் சொன்னாச் சாப்பிட மாட்டேளா என்ன?”

“பேஷா, நீ வற்புறுத்தினா எப்படி நான் மாட்டேங்கறது?”-

வசந்தி உள்ளே சமையலறைக்குப் போய்விட்டு வந்தாள். வேணு மாமாவின் மனைவி அதாவது வசந்தியின் அம்மா – சர்மாவுக்கு முன்னால் வந்து நின்று பேச மாட்டாள். சில பெண்டுகள் சில ஆண்களுக்கு முன்னால் நேருக்கு நேர் நின்று பேசுவதில்லை என்பது கிராமங்களில் நீடித்த மரியாதை வழக்கமாக இன்னும் இருந்து வருகிறது. படிப்பு, பழக்க வழக்கம் எல்லாவற்றிலும் வசந்திக்கும் அவள் அம்மாவுக்கும் நடுவிலேயே ஒரு தலைமுறையின் பெரிய வித்தியாசங்கள் இடைவெளிவிட்டுத் தெரிந்தன. வேணுமாமாவின் சம்சாரம் சர்மாவுக்கு முன்னால் வருவதையோ எதிர் நின்று பேசுவதையோ கூடத் தவிர்த்தாள். வேணுமாமாவின் பெண் வசந்தியோ, சர்மாவுக்கு முன் நாற்காலியில் அமர்ந்து எந்த விஷயத்தையும் பற்றி அவரோடு நேருக்கு நேர் விவாதிக்கவும், சிரித்துப் பேசவும் தயாராக இருந்தாள்.

“என்ன மாமா? ரவிகிட்டே இருந்து உங்க லெட்டருக்குப் பதில் வந்துதா?”

“வந்திருக்கும்மா! அது விஷயமாத்தான் உங்கிட்டவும் உங்கப்பாகிட்டவும் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்…”

“என்ன எழுதியிருக்கான் மாமா?”

ரவியின் கடிதத்தை அப்படியே எடுத்து வசந்தியிடம் நீட்டினார் சர்மா.

வசந்தி கடிதத்தைப் படித்துவிட்டு அவரிடம் திருப்பிக் கொடுத்தாள். ‘கமலி ரொம்பத் தங்கமான பெண்’ – என்ற பாராட்டுரை வசந்தியின் வாய் நுனிவரை வந்துவிட்டது. சர்மா எப்படி, என்ன மனநிலையோடு வந்திருக்கிறாரோ என்றெண்ணி அந்த வார்த்தைகளை அப்போது அவசரப்பட்டுச் சொல்லிவிடாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் அவள்.

உள்ளேயிருந்து வசந்தியின் அம்மா அவளை அழைக்கும் குரல் கேட்டது. வசந்தி போய் இரண்டு டவரா டம்ளர்களில் காபியை எடுத்துக்கொண்டு வந்தாள்.

காபி குடித்து முடிக்கிறவரை இருவரும் மேற்கொண்டு எதுவும் பேசிக் கொள்ளவில்லை. காபி குடித்து முடித்ததும் சர்மாதான் முதலில் ஆரம்பித்தார்.

“இப்படி நடந்துடும்னு நான் சொப்பனத்துலேகூட நினைச்சுப் பார்த்ததில்லேம்மா!”

“நீங்க வருத்தப்படற அளவுக்குத் தப்பா ஒண்ணும் இப்போ நடந்துடலியே மாமா?”

“இன்னும் என்ன நடக்கணும்கிரே?”

“சந்தோஷமாப் பிள்ளையையும் மாட்டுப் பொண்ணையும் வரச்சொல்லிப் பதில் எழுதுங்கோ மாமா! என்னையும் அப்பாவையும் பொறுத்த மட்டிலே நாங்க நேர்லே அங்கே போயிருந்தப்பவே எல்லாம் உறுதியாத் தெரிஞ்சு போச்சு. நாங்க வந்து சொன்னதுலே உங்களுக்குச் சந்தேகம் இருக்கப்படாதுங்கிறதுக்காகத்தான் நாசூக்காகவும் நாகரிகமாகவும் ‘மணமகள் தேவை’ விளம்பரத்தை அவன் கவனத்துக்கு அனுப்பற மாதிரி அனுப்பச் சொன்னோம். இப்போ ரவியே அவன் கையெழுத்தாலே எல்லாத்தையும் தெளிவா உங்களுக்கு எழுதியாச்சு…”

“ஏம்மா?… நீ ஒண்ணும் தப்பா நெனச்சுக்க மாட்டேன்னா… உங்கிட்ட ஒரு யோசனை…?”

“என்ன மாமா?”

“சில ஈரோப்பியன் லேடீஸ் பணத்துக்கு ஆசைப்பட்டு இண்டியன்ஸை லவ் பண்ற மாதிரிப் பழகறதுண்டாம். அப்புறம் ஹெவியா – அவாளுக்குப் பணம் குடுத்துட்டா – டைவோர்ஸ் பண்ணிண்டு விட்டுட்டுப் போயிடுவாளாம்; நீதான் அந்தப் பெண்ணோட நன்னாப் பழகியிருக்கியாமே. அவ வேணா ரவியோட இங்கே வரட்டும் – அதை நான் வேணாம்னு சொல்லலே. வந்தப்புறம் நீ வேணா அந்தப் பெண்ணோடத் தனியாக் கொஞ்சம் பேசிப் பாரேன் – ”

“என்னத்தைப் பேசச் சொல்றேள் மாமா?”

“பண விஷயம் தான்… வேற எதைப் பேசச் சொல்லப் போறேன்?”

“உங்களுக்கு யாரோ தப்பாச் சொல்லியிருக்கா மாமா! ‘கமலி’ அந்த ‘டைப்’ இல்லே. அவ ரவி மேலே உயிரையே வெச்சிருக்கா. பணம் ஒண்ணும் அவளுக்குப் பெரிய விஷயமில்லே. அவ ஒரு பெரிய கோடீசுவரனோட பொண்ணு. பாரிஸ்லேயும் பிரெஞ்சு ரிவேரா (Riviera)விலும் ஒரு செயின் ஆஃப் ஹோட்டல்ஸுக்கு அவ அப்பா சொந்தக்காரர். அது தவிர மில்லியன் கணக்கில் விலை மதிப்புள்ள முதல் தரமான வொயின் யார்ட் – அதாவது திராட்சை நிலப் பண்ணைகளும் அவருக்கு உண்டு. உங்க சங்கரமங்கலத்தைப் போலப் பத்துச் சங்கரமங்கலத்தையே அவர் விலைக்கு வாங்கலாம்.”

சர்மா ஓரிரு விநாடிகள் அவளுக்கு என்ன பதில் சொல்வதென அறியாமல் மௌனமாயிருந்தார்.
————-

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 26தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 26

அத்தியாயம் 26 கமலி ரவி கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போதே ஸ்ப் கோர்ட்டிலிருந்து ஸம்மன் சர்மாவுக்கும் கமலிக்கும் வந்து சேர்ந்திருந்தது. கமலி போய்த் தரிசனம் செய்திருந்த சங்கரமங்கலம், பூமிநாதபுரம் கோவில்களின் தூய்மை கெட்டு விட்டதால் அவற்றுக்கு மறுபடி உடனே சம்ப்ரோட்சணம்

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 4தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 4

அத்தியாயம் 4   மூச்சு இரைக்க இரைக்க ஓடி வந்த வேகத்திலிருந்து நின்று நிதானித்துக் கொண்டு சர்மாவின் பெண் பார்வதி அப்போது வசந்தியிடம் பேசுவதற்குச் சில விநாடிகள் ஆயின.   “வசந்தி அக்கா…! அப்பா ரவி அண்ணாவுக்கு எழுதிக் குடுத்த ‘ஏரோகிராமை’

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 2தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 2

அத்தியாயம் 2   இரண்டு மூன்று நிமிஷ மௌனத்துக்குப் பின் மறுபடியும் சர்மா வசந்தியைக் கேட்டார்.   “உங்கண்ணா சுரேஷ் பாரிஸிலேயே இருக்கானே; அவனுக்கு உங்கப்பாவை விட்டுத் தகவல் எழுதச் சொன்னா ஏதாவது பிரயோஜனப்படுமோ…?”   “எங்கப்பா எதை எழுதி, அண்ணா