சாவியின் ஆப்பிள் பசி – 26

விக்டோரியா மெமோரியல்’ பார்த்துவிட்டு, அப்படியே எதிரில் மியூசியத்தையும் பார்த்தானதும், “அப்பா வீட்டுக்குப் போகலாமா?” என்றாள் சகுந்தலா.

“ஏன் இதுக்குள்ளவா களைச்சுட்டே!” என்று கேட்டார் ராமமூர்த்தி.

“இதிலெல்லாம் எனக்கு அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்லை” என்றாள் சகுந்தலா.

“சரி, கொஞ்சம் லேக் பக்கம் பார்த்துட்டு அப்படியே வீட்டுக்கு போயிடலாம், வா!” என்றார் ராமமூர்த்தி. அங்கிருந்து இருவரும் லேக் ஏரியாவுக்குப் போனார்கள்.

சகுந்தலா உற்சாகமில்லாமல் காணப்பட்டாள். காரிலேயே வீட்டுக்குப் போய் இறங்கிக் கொண்டார்கள்.

டிரைவர் மறுபடியும் இரண்டு மணிக்கு வந்து, “புறப்படலாமா?” என்று கேட்டபோது, “இல்லை; நீங்க வண்டியை எடுத்துட்டுப் போயிடுங்க! இன்றைக்கு இனிமே நாங்க வெளியிலே போகப் போறதில்லை!” என்றாள் சகுந்தலா.

“நாளைக்கு வரட்டுமா?” என்று கேட்டான் டிரைவர்.

“நாளைக்கும் வேண்டாம்.”

ஊர் சுற்றிப் பார்த்த களைப்பில் ராமமூர்த்தி அயர்ந்து தூங்கிவிட்டார். கண் விழித்ததும் கெடியாரத்தைப் பார்த்தார், “ஐயோ, நாழியாயிடுத்தே! வெளியே போக வேண்டாமா, சகுந்தலா?” என்று கேட்டார்.

சகுந்தலா சோபாவில் மௌனமாய் யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

“என்ன சகுந்தலா! ஏன் இப்படிப் பிரமை பிடிச்ச மாதிரி இருக்கே? என்ன ஆச்சு உனக்கு? சீக்கிரம் புறப்படு, கார் வந்துடும்” என்றார் ராமமூர்த்தி.

“அப்பா! உடம்பு ஏதோ மாதிரி இருக்கு. மனசிலும் உற்சாகமில்லை. வண்டியைத் திருப்பி அனுப்பிச்சுட்டேன்” என்றான் சகுந்தலா.

“அப்படியா? பேலூர் மடத்துக்குப் போகணும்னு ஆசைப்பட்டியே!”

“ஆமாம், இப்ப வேணாம். இன்னொரு சமயம் வரும்போது பார்த்துக்கலாம்” என்றாள். அவளுக்கும் ஆசைதான். ராமகிருஷ்ணரை நிறையப் படித்திருக்கிறாள். அவர் உபதேசம் ஒவ்வொன்றும் உபநிஷதம் போல இருப்பதாகச் சொல்லியிருக்கிறாள்.

“அம்மா பசி வந்தவுடன் என்னை எழுப்பு சாப்பிடுகிறேன்” என்றது குழந்தை.

“உன் பசியே உன்னை எழுப்பிவிடும்” என்றாள் தாய்.

அடேயப்பா! எத்தனை சுருக்கமாக அமைந்துவிட்ட தத்துவம் இது! இந்தச் சுருக்கத்திலும் எத்தனை சுலபமாக அர்த்தத்தை வெளிக் காண்பிக்கிறது!

அந்த உயர்ந்த மகானின் பாதம் பட்ட பேலூர் மடத்தைப் பார்க்க வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆசை இப்போது அமுங்கிப் போயிருந்தது.

“என்ன சகுந்தலா இது! உன் உடம்புக்கு என்ன? மறுபடி எப்போ கல்கத்தா வரப் போகிறோம்? எப்போது பேலூர் பார்க்கப் போகிறோம்? டாகூர், டாகூர்னு உயிரை விடுவாயே! அவர் வீட்டையாவது போய்ப் பார்க்க வேண்டாமா?” என்றார் ராமமூர்த்தி.

மனசின் அடி ஆழத்தில் ஒரு ‘தீ’ கிழித்த மாதிரி இருந்தது. ஒரு கணம் உடலில் பளிச்சென்று வெளிச்சம் பரவி அடுத்த கணம் அழிந்தது. “அப்புறம் பார்த்துக்கலாம். அதுக்காகவே ஒருமுறை வந்தாப் போச்சு!” என்று தீர்மானமாய்க் கூறிவிட்டாள். அவள் உற்சாகம் குன்றி வித்தியாசமாக நடந்து கொண்ட விதம் ராமமூர்த்திக்குக் கவலை தந்தது.

“வெளியே போயிட்டு வரலாம், வா. அப்புறம் எல்லாம் சரியாயிடும்” என்றார்.

“இல்லைப்பா!”

“ஏம்மா, என்ன விஷயம்? மறுக்காமல் சொல்லு” என்று ராமமூர்த்தி குனிந்து அவளது கையை எடுத்து நாடி பார்த்தார். நெற்றியில் கை வைத்தார்.

“காய்ச்சல் எதுவும் இல்லையே!”

“உள்ளுக்குள் இருக்கப்பா!”

“மருந்து ஏதாவது?”

“வேண்டாம்.”

ஆஸ்பத்திரியிலிருந்து மாலையில் சுபத்ராவை விடுதலை செய்தார்கள். பளபளக்கும் ரோல்ஸ் ராய்ஸில் ஏறப் போனவளை நிறுத்தி, ப்ளாஷ் பல்புகள் பளிச்சிடப் பத்திரிகைக்காரர்கள் சுபத்ராவைப் படம் எடுத்துக் கொண்டார்கள்.

சுபத்ராவின் கார் அவளது வீட்டு வாசலில் போய் நின்ற போது அங்கேயும் நிருபர்கள் கூட்டம் அவளைச் சூழ்ந்து கொண்டது. புகைப்படக்காரர்கள் அவளைப் பல கோணங்களில் படமெடுத்ததும், “ஸார், நீங்களும் சேர்ந்து நில்லுங்க” என்று சாமண்ணாவை அழைத்து அவள் பக்கத்தில் நிறுத்திப் போட்டோ எடுத்தார்கள்.

“சமீபத்தில் தங்களுக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று சுபத்ராவிடம் கேட்டனர்.

“ஓ! அது என் வாழ்க்கையிலேயே பெரிய அனுபவம்! சாமண்ணாவின் நடிப்பு என்னை அந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படுத்திவிட்டது. அதென்னவோ, அந்த நடிப்பு அவரை நிஜ துஷ்யந்தனாகவே ஆக்கிவிட்டது. நான் அவரை நிஜ துஷ்யந்தன் என்றே நம்பிவிட்டேன்.” இதைச் சொல்லிவிட்டு அவள் சாமண்ணாவைப் புன்னகையோடு பார்த்தாள்! எதையோ, எண்ணியவளாய்க் கலகலவென்று சிரித்தாள்.

“மன்னிக்கணும் மேடம்! நீங்களும் கூட நிஜ சகுந்தலையாவே ஆயிட்டீங்களே!”

“ஆமாம்.”

“இனிமே நீங்க சாமண்ணா கூடத்தானே ஜோடியா நடிப்பீங்க?”

“ஆமாம்! எப்பவுமே இனி சேர்ந்தேதான் எல்லாமே…” என்று அந்த வார்த்தையை அவள் முடிக்குமுன்பே பலத்த கரகோஷம்!

போர்ட்டிகோவிலிருந்து எல்லோரும் உள்ளே போனார்கள். மேற்கத்தி முறையில் மது வழங்கப்பட்டது. கிராமபோன் இந்திப் பாடல்களைப் பாடியது. இரண்டு பெரிய பங்காக்கள் ஹாலில் ஆடின. சுபத்ரா விருந்தாளிகளிடையே அங்கங்கே நின்று உரையாடினாள். அவ்வப்போது சாமண்ணாவின் கைகளைப் பிடித்துத் தன் இடுப்போடு அணைத்துக் கொண்டாள்.

சாமண்ணா அந்த ஸ்பரிசத்தில் காந்தர்வ பரவசமாகிக் காற்றில் மிதப்பது போல் உணர்ந்தான். தன் பழைய நிலையைச் சற்றே எண்ணிப் பார்த்தான்.

அவனது கிராமம். அவனது குடும்பம். அவனது தாயார். அந்த வறுமை…

‘சாமண்ணா! எப்படி ஆயிட்டேடா நீ! நான் பார்க்கக் கொடுத்து வைக்கலியேடா!’

விருந்து வைபவங்கள் எல்லாம் முடிந்து ஒவ்வொருவராக விடைபெறும்போது ராமமூர்த்தியும் சகுந்தலாவும் அவன் நினைவில் குறுகுறுத்தார்கள். ‘அதான் காரை அனுப்பியாச்சே! ஊரெல்லாம் சுற்றிக் காட்டச் சொல்லியாச்சே! இதுக்கு மேலே என்ன செய்துட முடியும்?’ என்று ஆத்திரத்தோடு மனச்சாட்சிக்குப் பதில் கூறிக் கொண்டான்.

ஊருக்குத் திரும்பிய சகுந்தலா, சில நாட்கள் காய்ச்சலோடு இருந்தாள். சாதாரண ஜுரம்தான்.

நாலு நாட்கள் படுக்கையிலேயே இருந்தபின் ஐந்தாவது நாள் மெல்ல எழுந்து தோட்டத்தில் உலாவத் தொடங்கினாள்.

“சகுந்தலா! உனக்கு என்னம்மா, என்னம்மா?” ராமமூர்த்தி இதற்குள் நூறு தடவை கேட்டுவிட்டார்.

“ஒன்றுமில்லை” என்ற சாரமற்ற சொல்தான் அவளிடமிருந்து வந்த பதில்.

பின்னொரு நாள் மாலை சகுந்தலா காரை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பியதும், ‘சகுந்தலா பழைய நிலைக்கு வருகிறாள்’ என்று எண்ணி மகிழ்ந்தார்.

முதலில் பிரதான சாலைக்குள் காரை ஓட்டிச் சென்ற சகுந்தலா அங்கிருந்து ஊரைவிட்டுச் சற்றே விலகினாள்.

ஓரிடத்தில் காரை நிறுத்திப் புதுக்காற்றை சுவாசித்தாள். வெளி இயற்கையின் மெலிதான மணம் அதில் பரவியிருந்தது. உள்ளே இருதயமெல்லாம் புகுந்து குளிர்ச்சி தருவது போல் இருந்தது. பிறகு திரும்பவும் கார் ஏறி மேலும் சற்று தூரம் சென்று அந்தக் கிளைப்பாதை ஓரம் நிறுத்தினாள். கீழே இறங்கியதும் கால் நடுங்கிற்று. அடிகளை மெதுவாக முன்னே வைத்து நடக்க ஆரம்பித்தாள்.

சாலை ஒரு அவிழ்ந்த நாடா போலக் கிடந்தது. மாலை மயக்கத்தில் இடதுபுறம் வயலும், பாறைகளும் நிழல் சித்திரங்களாய் மாறிக் கொண்டிருந்தன.

வலது புறம் மல்லிகைப் புதர்களிலிருந்து வந்த மணத்தில் சாமண்ணாவை நுகர்ந்தாள்.

ஏன் இந்த ஓடையில் துக்கம் நிரம்பியிருக்கிறது? இதைப் பார்த்ததும் என் மனத்தில் ஏன் சுமை ஏறுகிறது? இயற்கையே அங்கங்கு சோகங்களை ஒளித்து வைத்திருக்குமோ?

அந்த சகுந்தலைக் காட்சி பனியிலிருந்து விலகியது போல் பிரத்யட்சமாயிற்று.

…காலில் முள் குத்துகிறது. பாறையைப் பிடித்துக் கொண்டு நிற்கிறாள். ‘சாமு’ குனிந்து அந்த முள்ளை எடுக்கிறான்…

மேலே நடந்தாள்.

அந்தப் பிரதேசமே துக்கத்தை இறுக்கமாக வைத்திருப்பது போல் தோன்றியது.

“சாமூ!” என்று முனகலாய் அழைத்தாள். பழைய மாலைப் பொழுதில் இங்கே நிச்சிந்தையாய், நிர்மலமாய் அவனுடன் உலாவிய காட்சிகள் அவள் கண்ணீரில் கரைந்தன.

1 thought on “சாவியின் ஆப்பிள் பசி – 26”

  1. Mr சாமண்ணா! அடுத்து வெள்ளைக்காரிதான் பாக்கி.
    இந்த நடிகனின் வாழ்க்கையும் நாடகமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ஆப்பிள் பசி – 3 (Audio)சாவியின் ஆப்பிள் பசி – 3 (Audio)

  “தம்பி, அப்படின்னா என்ன செய்யப் போறீங்க? டிராமா தான் இல்லையாமே. எங்களோடு பூவேலிக்கு வந்துடுங்களேன்,” பாப்பாவின் முகத்தைப் பார்த்து, “என்னம்மா, நான் சொல்றது சரிதானே?” அவள் சாமண்ணாவின் முகத்தைப் பார்த்தாள். சாமண்ணா சொன்னான். “நீங்க ஏதோ டிராமாவுக்கு வந்தீங்க. வந்த

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 21திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 21

அப்பன் இறந்தாலும் அம்மை இறந்தாலும் வெகு நாட்களுக்குத் துயரம் கொண்டாடுவதற்கில்லை. ஏனெனில் வயிற்றுக் கூவலின் முன் எந்த உணர்ச்சியும், மான – அபிமானங்களும் கூடச் செயலற்றுப் போய்விடும். உயிர் வாழ்வதே உழைப்புக்கும் அரைக் கஞ்சியின் தேவைக்கும் தான் என்றான பிறகு மென்மையான

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 19கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 19

அத்தியாயம் 19 – கச்சேரியில் கள்வன்      ‘மகா-௱-௱-ஸ்ரீ மகாகனம் பொருந்திய முத்தையப் பிள்ளை அவர்கள் நாளது ஜுலை மீ 20வ புதன் கிழமை இராத்திரி 11 மணிக்கு உம்முடைய வீட்டுக்கு விஜயம் செய்வார்கள். அவர்களை தக்கபடி உபசரித்து வரவேற்பதற்குச் சித்தமாயிருக்க வேண்டியது.