சாவியின் ஆப்பிள் பசி – 22

ல்லிகை வாடை அடர்ந்து கமழ மந்தார வானம் வெயிலைத் தணித்தது. தென்னம் ஓலைகள் வானத்தை வரிவரியாகக் கீறியது. கிள்ளைகளின் குரல்கள் அடுத்தடுத்துக் கொஞ்சின.

கார் ஓரிடத்தில் போய் நிற்க, சாமண்ணாவும் சகுந்தலாவும் கீழே இறங்கித் தென்னை நிழல்களில் நடந்தார்கள். வெகுதூரம் நடந்த பின்னர் மனித நடமாட்டம் இல்லாத இடத்தை அடைந்தார்கள்.

தூரத்தில் குன்றுகள் மெல்லிய நீலத்தில் தெரிந்தன. சுற்றி வரப் பயிரும் தழையும் சேர்ந்து பசும் சோலையாக இருந்தன.

இருவரும் ஒரு பாறை அருகே நின்ற போது அதன் ஓரமாக மாலை போலச் சிறு ஓடை மினுக்கிக் கொண்டிருந்தது.

“என்ன அழகாக இருக்கு பாருங்க!” என்றாள் சகுந்தலா.

சாமண்ணாவின் உள்ளத்தில் கீதம் போல் ஒரு கிளுகிளுப்பை உண்டாக்கியது ஓடைத் தண்ணீர். அவன் ஒரு போதையில் தோய்ந்தான். ஸெடானும் சகுந்தலாவும் அவனை முற்றிலும் மாற்றியிருந்தார்கள். மூச்சு கூட இன்பத்தில் திணறியது.

“இனி வாரம் ஒரு முறையாவது இங்கே வரணும் சாமு!”

“நீயும் நானும் மட்டும்தானே!”

“எனக்கு இன்னிக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை! அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கேன்” என்றாள்.

“நானும் அப்படித்தான்.”

இருவர் கண்களும் பின்னிக் கொண்டு நின்றன.

சகுந்தலா தாழம்புதர் ஓரம் சுற்றி வர ‘ஆ’ என்றாள்.

“என்ன, என்ன?” என்று பதறினான் சாமண்ணா.

அவள் நொண்டிக் கொண்டு வர, சாமண்ணா குனிந்து அவள் காலைப் பார்த்தான். காலின் பக்கவாட்டில் ஒரு பெரிய முள் தைத்திருந்தது.

“ஐயோ, அப்படியே நில்லு. இதோ எடுத்துடறேன்.”

அவன் அவள் இடது பாதத்தை, மெதுவாகப் பிடித்து முள்ளை அகற்ற முயன்றபோது அவள் பாலன்ஸ் வேண்டி அவனது தோளில் கையை ஊன்றினாள்.

சாமண்ணா முள்ளை எடுத்து அப்பால் எறிந்ததும் சற்று நொண்டியபடியே அவனை விட்டு விலகிக் கொண்டாள்.

பார்வையை ஒரு மாதிரியாகச் சுழற்றிக் கொண்டு, சிரிப்பு உண்டாக்கிய கன்னக் குழிவுகளுடன், “உங்க சகுந்தலை நாடகம் மாதிரி இல்லை!” என்றாள் அவள்.

அவனுக்குப் பெருமூச்சு வந்தது.

“ஆனா இந்த நாடகத்தில் உன் பெயர் பொருந்துகிற மாதிரி என் பெயர் பொருந்தலையே! சுத்த நாட்டுப்புறமான பெயர்!” என்றான் சலித்துக் கொண்டே. சோர்வுடன் அவன் ஒரு பாறை மீது சாய, அவன் அருகே பாறை மீது கைவைத்த வண்ணம் நின்றாள் சகுந்தலா.

“ஏன் சாமு! பெயர் பொருந்தினாத்தான் எல்லாம் பொருந்தினதா அர்த்தமா?”

அவள் தணிவான குரலில் கேட்டாள். அந்தத் தணிவு அவளது அந்தரங்கத்தைத் தொடும் அந்நியோன்யத்தைக் காட்டியது.

“பெயராவது பொருத்தமா இருக்க வேண்டாமா?”

“ஏன் அப்படிச் சொல்றீங்க? பொருத்தமாய்த்தானே இருக்கு! சாமு – சகுந்தலா!”

“இல்லை, உனக்கு எந்த விதத்திலும் பொருத்தம் இல்லாதவன் நான்.”

“அதை எப்படி நீங்க சொல்ல முடியும்? நான் தான் சொல்லணும்!” என்றாள் ஓர் உரிமையோடு.

“அப்போ நீயே சொல்லு. நான் பொருத்தமானவன் தானா?”

சாமண்ணாவின் கண்கள் அவள் பார்வையை நோக்கிப் படபடத்தன.

“என் மனம் அதைக் கண்டுபிடித்து விட்டது.”

“பொருத்தமானவன் என்றா?”

“ஆமாம்.”

“ஹூம்! என்னிடம் அப்படி என்ன வசீகரம் இருக்கு!”

“சாதாரண நடிகரா நீங்க? உங்களிடம் உள்ள அந்த நடிப்புக் கலை ஒன்று போதாதா?”

“அது ஒன்று மட்டும் போதுமா?”

“போதுமே! அதுவே கோடி பெறும்!”

சாமண்ணா மேலே பேசவில்லை. எல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைத்தவன், எதுவும் சொல்ல முடியாமல் மௌனமாய் விட்டான்.

தூரத்தில் கார் வரும் ஓசை கேட்டு அவன் திரும்ப, அவளும் விலகிச் சாலையைப் பார்த்தாள். அந்த ஸெடான் அவர்கள் அருகே வந்து கொண்டிருந்தது.

“ஸார்! நீங்க கையைக் காட்டின மாதிரி இருந்தது. அதான் வந்துட்டேன்!” என்றான் டிரைவர்.

இருவரும் வண்டியை நோக்கி நடந்தார்கள். பொழுது சாய்ந்து கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்கு அப்போதுதான் தெரிந்தது.

திரும்பும் பிரயாணம் பூராவும் அந்த இனிமை மௌனம் நீடித்தது.

அந்த இனிமையில் பாப்பாவின் நினைவு மறந்தே போய் விட்டது அவனுக்கு.

மூன்றாவது நாள் தான் அவனது கல்கத்தா பயணம்!

காலையில் சிங்காரப் பொட்டு பெரிய மாலையுடன் வந்து, சாமண்ணாவின் கழுத்தில் அந்த மாலையைப் போட்டு விட்டு “நீங்க பெரிய நடிகரா வரணும்” என்று கை கூப்பி வணங்கினார். இருவரும் தழுவிக் கொண்டார்கள்.

சிங்காரப் பொட்டு இவ்வளவு நல்ல உள்ளத்துடன் வந்து தனக்கு நல்வாழ்த்துக் கூறியது சாமண்ணாவின் உள்ளத்தைத் தொட்டது.

மத்தியானம் அவன் ரயில் நிலையத்திற்குப் புறப்பட்ட போது, பலரும் நிலையத்திற்குத் தன்னை வழி அனுப்ப வருவார்கள் என்று எதிர்பார்த்தான்.

ஆனால், ரயில் நிலையத்துக்குப் போன போது பிளாட்பாரத்தின் வெறுமை அவனுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. அங்கு பயணிகளைத் தவிர அவனுக்குத் தெரிந்தவர்கள் யாரையுமே காணவில்லை.

நாடகக் கம்பெனி ஆசாமிகளைக் கூடக் காணோம். இன்னும் வக்கீல், டாக்டர், பாவலர் ஒருவருமே வரவில்லை!

முதல் வகுப்பில் போய் ஏறிக் கொண்டான். அவனைத் தவிர அந்தப் பெட்டியிலும் வேறு பயணிகள் யாரையும் காணவில்லை. வண்டி புறப்படுகிற போதாவது யாரேனும் வருவார்களா என்று எதிர்பார்த்தான். முதல் மணி அடித்து இரண்டாம் மணியும் அடித்தாயிற்று. எவருமே அவன் கண்ணில் தென்படவில்லை. மனம் வெதும்ப, எழுந்து வந்து, வாயில் நிலையைப் பிடித்து நின்றான். வண்டி புறப்பட்டு விட்டது. அப்போதுதான் அந்த வெறுமை அவன் மனசில் இறங்கியது.

நேற்று வரை எல்லோரும் எப்படித் தன்னைப் போற்றிப் புகழ்ந்தார்கள்! இன்று அவர்களில் யாருமே ரயில் நிலையத்திற்கு வரவில்லையே! தனக்குள்ளாக நினைத்துக் கொண்ட அந்தஸ்து, மதிப்பு, கௌரவம் எல்லாம் வெறும் ஏமாற்று விஷயங்கள் தானோ? சகுந்தலா? அவளையும் காணோமே!

வண்டி நகர்ந்து கொண்டிருக்க, பிளாட்பாரத்தில் தூரத்து ‘கேட்’டைத் திறந்து அந்த உருவம் வந்து கொண்டிருக்க, சாமண்ணா வெளியே எட்டிப் பார்த்தான். கையை உயர்த்தி ஆட்டினான். ஆனால் அதற்குள் வண்டி வேகம் பிடித்துவிட்டது. உருவத்தின் ஓட்டம் அதனோடு ஈடுகொடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அது இழைத்துக் கொண்டு நிற்க, சாமண்ணா கண்ணை அகலத்தில் கொண்டு பார்த்தான்.

யார் அது? சகுந்தலாவா? பாப்பாவா?

உயரம் பார்த்தால் பாப்பா மாதிரி தெரிந்தாள்.

ஆனால் அந்த நடை சகுந்தலா போலவே தோன்றியது.

சாமண்ணாவுக்கு ஒரு நிச்சய நினைவு. சகுந்தலாவைத் தவிர வேறு யார் இப்படி ரயில் நிலையம் வர முடியும்? இதற்கெல்லாம் ஒரு நாகரிகம் வேண்டுமே! அது சகுந்தலாவுக்குத்தான் உண்டு. பாப்பாவிடம் நிச்சயம் இராது.

பிளாட்பாரம் மங்கியதும் சாமண்ணா உள்ளே தலையை இழுத்தான். அவனுக்கு நிம்மதி இல்லை. இருக்கை கொள்ளவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 30கல்கியின் பார்த்திபன் கனவு – 30

அத்தியாயம் 30 சக்கரவர்த்தி சந்நிதியில் மாரப்ப பூபதி போனவுடனே பொன்னன் குதித்துக் கொண்டு குடிசைக்குள் சென்றான். வள்ளியின் கோபத்தை மாற்றுவதற்கு ஒரு வழி கிடைத்தது என்ற எண்ணம் அவனுக்குக் குதூகலம் உண்டாக்கிற்று. மாரப்பன் சொன்னதையெல்லாம் கொஞ்சம் கைச்சரக்கும் சேர்த்து அவன் வள்ளியிடம்

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 10திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 10

நார்ப் பெட்டியும் கையுமாக பொன்னாச்சி, பாஞ்சாலி, சரசி, நல்லக்கண்ணு நால்வரும் சந்தைக்கு நடக்கின்றனர். ஞாயிற்றுக் கிழமைச் செலவு சாமான் வாங்க அவர்கள் வந்திருக்கையில் அப்பன் பச்சையை வைத்தியரிடம் அழைத்து சென்றிருக்கிறார். “என்ன புள்ள மார்க்கட்டா?” என்ற குரல் கேட்டுச் சிலிர்த்துக் கொண்டு

கல்கியின் ‘பரிசல் துறை’-5கல்கியின் ‘பரிசல் துறை’-5

5 செப்டம்பர் 30ம் தேதி வேலம்பாளையம் ஒரே அல்லோலகல்லோலமாயிருந்தது. அன்று தான் கள்ளுக்கடை மூடும் நாள். அன்று தான் குடிகாரர்களுக்குக் கடைசி நாள். பெருங்குடிகாரர்களில் சிலர் அன்றெல்லாம் தென்னை மரத்தையும் பனைமரத்தையும் கட்டிக் கொண்டு காலம் கழித்தார்கள். சிலர் நடு வீதியில்