சாவியின் ஆப்பிள் பசி – 8

வாசலில் ஓட்டல்காரர் மகள் லல்லு நின்று கொண்டிருந்தாள். ‘அச்சச்சோ’ போல, கையால் முகத்தை மூடி மூடித் திறந்து கொண்டிருந்தாள். பிறகு தாவணி தடுக்காமலிருக்க ‘ததக் பிதக்’ என்று காலை வைத்து உள்ளே வந்தாள்.

வக்கீல் மாமி கோமளத்திற்குக் கதி கலங்கிற்று. அவள் லல்லுவைப் பலமுறை பார்த்திருக்கிறாள். சும்மா இருந்தால் இருப்பாள். இல்லாவிட்டால் யாரையாவது ஒரு அடி அடிப்பாள். ஊர்ப் பசங்கள் அவளை ‘அடி’ லல்லு என்று கூப்பிட்டு அவளுடைய எலிவால் தலைமயிரைப் பிடித்து இழுப்பார்கள். லல்லு அவர்களை அடிப்பதற்குத் துரத்துவாள்.

“வா, லல்லு” என்று கோமளம் வாய் நிறையச் சிரித்து அழைத்தாள்.

உண்மையில் சிரிக்கவில்லை. பயத்தை மாற்றிக் கொண்டு சிரிப்பது போல் பாசாங்கு செய்தாள். “ரே, ரே, லல்லுவா?” என்றார் வரதாச்சாரி.

“மாமா! மாமா! சாமண்ணாவை ஜெயில்லே போட்டிருக்காளாமே! உங்களுக்குத் தெரியுமா?” என்று சோகத்தோடு கேட்டாள் லல்லு.

“தெரியாதேம்மா!”

“எங்க அப்பாவை அவர் கொன்னுட்டார்னு சொல்லி போலீஸ்ல அவரைப் பிடிச்சுண்டு போய் ஜெயில்லே வச்சிருக்காளாமே! எனக்கு அழுகையா வரது மாமா! நீங்க எனக்குக் கொஞ்சம் உதவி பண்ணுவேளா?”

“என்ன செய்யணும்?”

“பாலு மாமா கிட்ட போய் உதவி கேட்டேன். அவர் வக்கீல் மாமா கிட்டே போன்னு சொல்லிட்டார். நீங்க போய் போலீஸ்காரா எல்லாரையும் ஜயிச்சு சாமண்ணாவை இழுத்துண்டு வரணும்” என்று மாமி பக்கம் திரும்பி, “வக்கீல் மாமாகிட்ட நீங்க சொல்லுங்க மாமி!”

“சொல்றேன். மாமாவுக்கு என்ன ஃபீஸ் தருவே!”

“எவ்ளோ வேணாலும் தருவேன். எங்கப்பா பீரோ நிறையப் பணம் வெச்சிருக்கார்!”

“சரி செய்யறேன். சாமண்ணாகிட்டே உனக்கு ஏன் இத்தனை அக்கறை?”

“தெரியாதா மாமா! அவரைத்தானே நான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன். அப்பா சொல்லிண்டிருந்தாரே!”

“அவன் தான் கொலை பண்ணிட்டு கேஸ்ல மாட்டிண்டிருக்கானே!”

“ஐயோ! அது அவர் செய்யலை மாமா! வேற ஆளு.” தலையில் அடித்துக் கொண்டாள்.

“யாரு அது?”

“எனக்குத் தெரியும். முதல்ல நீங்க சாமண்ணாவை ஜயிச்சுண்டு வாங்கோ. அப்புறம்தான் நான் அதைச் சொல்வேன்.”

வந்தது போலவே திரும்பினாள். வாசலை நோக்கி வேகமாகப் போனாள். வாசல் படிகளில் நொண்டி அடித்து இறங்கினாள். தெருவில் பாண்டி ஆடுவது போலக் குதித்துக் குதித்துப் போனாள்.

மத்தியானம் மூணு மணிக்குச் சொல்லி வைத்தாற் போல் சாமண்னா வந்தான்.

வாசலில், தென்னை மரத்தின் கீழ் பசு மாட்டைக் கட்டிக் கறந்து கொண்டிருந்தான் வேலைக்காரன்.

உள்ளே காப்பி களேபரத்தில் இருந்தாள் கோமளம். கூடத்தில் டிகாஷன் மணத்தது.

வரதாச்சாரி தமது கருங்காலி மேஜை முன் உட்கார்ந்து, மறுநாள் கேசுகளின் பைல் பார்த்துக் கொண்டிருந்தார். கண்ணுசாமி இழுக்க, மேலே பங்கா ஆடியது.

“ஸார்” என்று அடங்கிய குரலில் அழைத்தான் சாமண்ணா. வரதாச்சாரி திரும்பிப் பார்த்தார்.

“வாப்பா!” என்றார்.

உள்ளே வந்தவன் உட்காராமல் பவ்யமாக நின்று கொண்டே இருந்தான்.

“உட்காரப்பா” என்றார்.

பெஞ்சு ஓரத்தில் சொல்பமாக உட்கார்ந்தான். கண்கள் லேசாகக் கலங்கி இருந்தன. களைப்பாக இருந்தான்.

“ஸார்! நீங்க இப்படி ஒரு டிராமா நடிகன் மேல பெரிய மனசு பண்ணி, விடுதலை வாங்கித் தந்தீங்களே, ஏழேழு ஜன்மத்துக்கும் கடமைப்பட்டிருக்கேன்,” என்று வரதாச்சாரி எதிர்பார்ப்பதற்கு முன் அவர் காலடியைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டு எழுந்தான்.

வேண்டாம் என்பது போலக் கால்களைத் தூக்கிக் கொண்டார் வரதாச்சாரி. “இதெல்லாம் எதுக்கு சாமண்ணா? யாரோ பணம் கொடுத்தாங்க. நான் என் தொழிலைத்தான் செஞ்சேன். இதிலே வேறே ஒண்ணுமில்லை.”

இதற்குள் கோமளம் கூடத்திற்குள் வந்து சாமண்ணாவைப் பார்த்ததும் தயங்கி நின்றாள்.

“வா! சாமண்ணாதான்! வந்து பாரு” என்றார் வரதாச்சாரி.

கோமளத்தின் நினைவில் சாமண்ணாவின் நாடக்ச் சேட்டைகள் எல்லாம் நிழலாட, பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ஒதுக்கமாக நின்றாள்.

“நமஸ்காரம் மாமி” என்று உள்ளே பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு, “உங்காத்து மாமா தான் என்னைக் காப்பாத்தினார். ஜன்மத்துக்கும் மறக்க மாட்டேன். எனக்கு நேர்ந்த இந்த அவமானத்தை என்னால தாங்க முடியலை. நான் கொலைகாரன் இல்லைங்கறதை வக்கீல் ஸார் தான் வாதாடி நிரூபிக்கணும், அப்பதான் நான் நாலு பேருக்கு முன்னால தலை நிமிர்ந்து நடமாட முடியும்” என்றான்.

“உங்க டிராமா நிறையப் பார்த்திருக்கேன். உங்க நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். கடவுள் உங்களைக் காப்பாத்துவார். கவலைப்படாதீங்க” என்று சொன்ன கோமளம் உள்ளே போய் இரண்டு பேருக்குமாகக் காப்பி கலந்து கொண்டு வைத்தாள்.

சூடாக அதைச் சாப்பிட்ட பிறகுதான் வக்கீல் ஸார் புது மனிதர் போலப் பேசினார்.

குரலை வெகுவாகத் தணித்து, “ஏம்பா, உனக்கும் அந்தப் பாப்பாவுக்கும் ஏதாவது உறவு இருந்தா எங்கிட்ட கூச்சப் படாமல் சொல்லு” என்றார்.

சாமண்ணா காலி டம்ளரைத் தள்ளி வைத்தான்.

“அப்படி எதுவுமில்லை ஸார்! அந்தப் பெண் தான் என்னைக் கல்யாணம் செய்து கொள்ளணும்னு நினைக்கிறா!”

“நீ அப்படி நினைக்கலையாக்கும். அவ மட்டும்தான் உன் மேலே பிரேமை வச்சிருக்காளா? உனக்கு இஷ்டமில்லையா?”

“இஷ்டமில்லைன்னு சொல்ல மாட்டேன். நான் இன்னும் ஒரு முடிவுக்கு வரலை. அவள் என் நடிப்பிலே ஒரு ரசிப்பு வச்சிருக்கா! அந்த வகையில் நானும் அவளோட சிநேகமாயிருக்கேன்.”

“அவ்வளவுதானே. ஒரு வேளை வேற சம்பந்தம் ஏதாவது உண்டோன்னு…”

“அப்படியெல்லாம் கிடையாது ஸார்!”

“அதானே கேட்டேன்” என்று சொல்லி வரதாச்சாரி இழுத்தார்.

“சொல்லப் போனா, ஏதோ அபிமானத்துலதான் அவள் இந்த உதவியை எனக்குச் செய்திருக்கணும். அவளைப் பார்க்கவே எனக்கு வெட்கமாயிருக்கு. எனக்கு முழு விடுதலை வாங்கித் தந்துட்டீங்கன்னா ஊரை விட்டே போயிடுவேன். வேறு எங்கயாவது டிராமாக் கம்பெனிலே சேர்ந்துப்பேன்!”

“இரு! இரு! விசாரணை முடியட்டும். முதல்லே நீ கொலை செய்யலைன்னு நிரூபிச்சாகட்டும். அப்புறம் தான் மற்றதெல்லாம்” என்றார் வரதாச்சாரி.

சாமண்ணா மறுபடியும் வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான். எட்ட நின்றபடியே மாமிக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, “காப்பி ரொம்ப நன்றாயிருந்தது மாமி! காலையிலிருந்து தலைவலி மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. இப்ப பட்டுனு நின்னுப் போச்சு” என்றான்.

மாமிக்குப் பரம சந்தோஷம்.

சாயங்காலம் பாப்பா வந்த போது வரதாச்சாரி தமது அலுவலக அறையில் உட்கார்ந்திருந்தார்.

வாசலில் வண்டிச் சத்தம் கேட்டதும் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.

பாப்பா ஒரு மின்னல் போலப் பின் படியில் இறங்கிக் கொண்டிருந்தாள்.

மயில் நிறத்தில் புடைவை, மேலே இடது தோள் ஓரம் ப்ரூச் குத்தியிருந்தாள். இடுப்பை இறுக்கி ஒட்டியாணம்.

குமாரசாமி அவள் பின்னோடு வந்தான்.

அறைக்குள் வந்தபோது பரிமளம் வீசிற்று.

நல்ல நிலவில் சமைத்த முகம். இரு கண்ணும் மருட்சியாகப் பார்த்தபோது யௌவனம் அவளைக் கனவு சுந்தரியாகக் காட்டியது.

கண்களில் கவலை தெரிய, வந்ததும் வராததும், “ஸார், காரியம் வெற்றியா?” என்று வக்கீலைப் பார்த்துக் கேட்டாள்.

வரதாச்சாரி சிரித்தார். “கவலைப்படாதேம்மா! எல்லாம் சரியப் போயிடுத்து. ஜாமீன்ல விட்டாச்சு! முனகாலா அவசரப்பட்டுக் கைது பண்ணிட்டார்! சாமண்ணா கிட்டே வலுவான அலிபை இருக்கு! அன்னி ராத்திரி பூரா உங்க ஊர் தெருக்கூத்திலே இருந்திருக்கான். அந்த ஊரே கூடி வந்து சாட்சி சொல்லுமே, இது போதும் எனக்கு. இனிமே போலீஸ் அவன் மேல கை வைக்க முடியாது. அது சரி; வாசனை ஜமாய்க்கிறதே, என்ன ஸெண்ட் அது? ஆட்டோ தில் பஹாரா?”

பாப்பா முகம் தாமரையாக மலர, “அவரை விட்டாச்சா? இப்ப எங்கே இருக்கார்?”

“எனக்குத் தெரியாது. அப்புறம் வரேன்னு சொல்லிட்டுப் போயிருக்கான். எங்கே போவான்? டவுன்லதான் எங்கேயாவது இருப்பான்.”

“ஏதாவது சொன்னாரா?”

“அதிகமாப் பேசலே. அப்படியே நன்றிப் பெருக்கிலே நனைஞ்சு போய் நின்னான். தழதழத்துப் போயிட்டான்.”

“ஜாமீனுக்கு ஏற்பாடு பண்ணினது யார்னு கேட்டாரா?”

“கேட்டான்!”

“என்ன சொன்னீங்க?”

“உன் பேரைச் சொன்னேன்!”

“அப்ப என்ன சொன்னாரு?”

“உன் பேரைச் சொன்னதும் முகமெல்லாம் பிரகாசமாச்சு!”

“அப்புறம்?”

“ரொம்ப ஒண்ணும் பேசலை. முகத்துல நன்றி தெரிஞ்சுது.”

“அப்புறம்?”

வக்கீல் விழித்தார். பாப்பாவின் கேள்விகளில் அவளது தத்தளிப்பு தெரிந்தது.

“வேறே ஒண்ணுமே சொல்லலையா?”

“சொன்னான், மாமியைப் பார்த்து, ‘நீங்க கொடுத்த காப்பி நன்னாயிருந்தது’ன்னு சொல்லிட்டுப் போயிட்டான்.”

“என்னைப் பார்க்கணும்னு ஒரு வார்த்தை கூடச் சொல்லலையா?”

வக்கீல் சற்றுத் தவித்தார்.

“அதெல்லாம் அவர் கிட்ட சொல்வானா? ரொம்ப நல்ல பையன்! கட்டாயம் அவனே உன்னைத் தேடிண்டு வருவான் பாரு!” என்றாள் கோமளம் மாமி.

“மாமி, இவர் எப்ப வந்தார்? எவ்வளவு நேரம் இருந்தார்? நீங்க அவரோட பேசினீங்களா?”

“இதோ இந்த பெஞ்சு ஓரத்துலதான் உட்கார்ந்துண்டிருந்தான். அரை மணி நேரம் இருந்தான். காப்பி கொடுத்தேன். சாப்பிட்டான்.”

அவசரமாக அந்த ஓரத்தை ஒரு பார்வை பார்த்துத் திரும்பினாள்.

“அவனுக்குப் பெரிய நிம்மதி. விடுதலை கிடைச்சுது கோடி சம்பத்து கிடைச்ச மாதிரி!”

குமாரசாமி ஒரு கித்தான் பை கொண்டு வந்திருந்தான். அதிலிருந்து ஒரு வெள்ளித் தட்டையும் பழங்களையும் எடுத்தான்.

பாப்பா அதை வாங்கி நன்றிப் பெருக்கோடு வரதாச்சாரியிடம் கொடுத்து விட்டு நமஸ்காரம் செய்தாள்.

“இதெல்லாம் எதுக்கம்மா?” என்று அவர் தயங்க, “இருக்கட்டும்! எனக்கு நீங்க பெரிய உதவி செஞ்சிருக்கீங்க! இது என் வாழ்க்கையிலே மறக்க முடியாத கட்டம்!” என்றாள் பாப்பா.

“வரட்டுங்களா?” என்று வக்கீலிடம் விடைபெற்றுக் கொண்டான் குமாரசாமி.

“சரி, அடுத்த வாரம் ஒரு நடை வந்துட்டுப் போங்க. வரச்சே, நல்ல முருங்கைக்காயா கிராமத்திலிருந்து கொண்டு வாங்க” என்றார் வரதாச்சாரி.

தந்தையும் மகளும் புறப்பட்டார்கள். குமாரசாமி போவதற்கு வழிவிட்டு, பாப்பா தயங்கினாள். சட்டென்று அந்த பெஞ்சு ஓரத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள். அது, சீதை அனுமனிடமிருந்து கணையாழியை வாங்கி ஒற்றிக் கொண்ட மாதிரி இருந்தது.

தட்டைப் பார்த்துக் குனிந்திருந்த வரதாச்சாரி தலைதூக்க அந்தச் செய்கையை உடனே கவனித்து விட்டார்.

ஒரு கணம் அவர் கண் பனித்தது.

குமாரசாமியும் பாப்பாவும் போனதும் வக்கீல் மாமி, “மூக்கும் முழியுமா தேச்சு வச்ச குத்து விளக்காட்டம் ரவிவர்மாப் படம் மாதிரி எத்தனை அழகா இருக்கா இந்தப் பெண்? சாமண்ணாகிட்ட உயிரையே வெச்சிருக்காளே. அந்தப் பிள்ளையாண்டான் என்னடான்னா விட்டேத்தியா ஒட்டுதல் இல்லாம இருக்கான். அவன் வந்தா புத்தி சொல்லணும்…” என்றாள்.

“நீ கூடச் சின்ன வயசிலே இப்படித்தாண்டி இருந்தே!” என்று மனைவியின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளினார் வக்கீல்.

ஒரு வாரம் வரை, சாமண்ணா மேக்-அப் மேன் வீட்டு மாடியில் தங்கி இருந்தான். வெளியில் எங்கும் போகவே இல்லை. துக்கமாக இருந்தது. நாடக வாழ்வு முடிந்தது போலத் தோன்றியது.

இனி கொலைக் கேஸ் முடிகிற வரை நாடகம் எங்கே நடக்கப் போகிறது?

வேறு ஊருக்குப் போய் விடலாமா? வேறு கம்பெனி எங்கேயாவது பார்த்துச் சேரலாமா? எத்தனை நாள் இப்படி வேலை எதுவுமில்லாமல் வண்டியை ஓட்ட முடியும்?

வாசல் கதவை யாரோ தட்ட, சற்றுக் கலங்கிய கண்களுடன் சாமண்ணா எழுந்து போய்த் திறந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 39கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 39

அத்தியாயம் 39 – திருப்பதி யாத்திரை திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமானுக்கு உலகத்திலே நாம் எங்கும் கேட்டறியாத ஓர் அபூர்வமான சபலம் இருந்து வருகிறது. தம்மிடம் வரும் பக்தர்களின் தலையை மொட்டையடித்துப் பார்ப்பதில் அவருக்கு ஒரு திருப்தி. வேறே எங்கேயாவது மொட்டையடித்துக்

சாவியின் ‘ஊரார்’ – 06சாவியின் ‘ஊரார்’ – 06

6 குமாருவின் கையில் ஒரு விளையாட்டுத் துப்பாக்கி இருந்தது. அதில் ‘கேப்பு’களை வைத்து ‘டப்டப்’பென்று சுட்டுக்கொண்டிருந்தான். அவன், “கொள்ளைக்காரங்க எதிரிலே வந்தா இதாலேயே சுட்டுடுவேன்” என்று வீரம் பேசினான். “இது ஏதுடா துப்பாக்கி?” “மாமா சேலம் போய் வந்தாரே, அப்ப வாங்கிட்டு

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 1கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 1

அத்தியாயம் 1 – பறித்த தாமரை      பூங்குளம் என்று அந்தக் கிராமத்துக்குப் பொருத்தமாய்த்தான் பெயர் அமைந்திருந்தது. நீர்வளம் நிறைந்த ஊருக்கு உதாரணம் வேண்டுமானால், பூங்குளத்தைத் தான் சொல்ல வேண்டும். ஆடி, ஆவணி மாதத்தில் ஊருக்கு வெளியே சென்று பார்த்தால் குளங்களிலும், ஓடைகளிலும்,