சாவியின் ஆப்பிள் பசி – 5

ம்மா, நான் குளிச்சு இன்னியோடு நாப்பத்தேழு நாளாச்சு!” என்று சொல்லும்போதே அபரஞ்சியின் கண்கள் மலர்ந்து காது மடல் சிவந்து போயிற்று.

“அடிப்பாவி! அந்த மேட்டுப்பட்டி மிராசுதார் புள்ளையா வயித்துல?” என்று தாயார் நாகரத்னம் வியக்க, பதில் ஏதும் கூறாமல் கால் கட்டை விரலால் தரையைக் கீறினாள் அபரஞ்சி.

“சொல்லித் தொலையேண்டி. அந்த ஐயர் சிநேகத்தை விட்டுருன்னு எத்தனை முறை சொல்வேன்? நீயானால் பெரிய பெரிய இடங்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளிட்டு எந்நேரமும் அவர் நினைப்பிலேயே மிதந்துட்டிருக்கே?”

“அவருக்கென்ன குறைச்சலாம்? பெரிய மிராசுதாராச்சே?”

“ஆத்துலே வெள்ளம் புரண்டாலும் நாய் நக்கித்தாண்டி குடிக்கணும். அவர் மிராசுதாராயிருந்தா நமக்கு என்னடி ஆச்சு? பொட்டு கட்டிக்கிட்டவளுக்கு எல்லாரும் பொது. தனிப்பட்ட முறையில் ஆசையை வளர்த்துக்கக் கூடாது. நம்ம குலதர்மம் அப்படி. ஒருத்தன் கூட சிநேகம் வச்சுக்கவா உனக்குக் கோயில்ல வச்சு பொட்டு கட்டினேன்.”

“மாட்டேன். நான் அவரைத் தவிர, வேற யாரையும் தொட மாட்டேன்.”

“என்னடி சொன்னே?” என்று கையை ஓங்கினாள் நாகரத்னம்.

“சரிதான், நிறுத்தும்மா! உன் மிரட்டலுக்கு நான் பயப்படப் போறதில்லே!” என்று மிஞ்சினாள் அபரஞ்சி.

“என்னடி ரொம்பத்தான் பேசறே! கத்த வித்தையெல்லாம் பெத்த தாய் கிட்ட காட்டறயா?”

“பெத்த தாயாவா நடந்துக்கற நீ? பொட்டு கட்டித் தொலச்சாச்சு. தாசி குலம்னு முத்திரை குத்தி வாசல்ல பலகை மாட்டாத குறைதான். எனக்கு இந்த அசிங்க வாழ்க்கை பிடிக்கல. பல பேருக்கு உடம்பைக் கொடுத்துட்டு பட்டும் பகட்டுமா காசு மாலையைச் சாத்திக்க மனசு இடம் தரலே.”

“ஒருத்தனோட குடும்பம் நடத்தறதுக்காக ஆண்டவன் நம்மைப் படைக்கலடீ! பல பேருக்குச் சந்தோஷம் கொடுக்கற பிறவிகள் நாம். மேட்டுப்பட்டி ஐயரோட மட்டும் நீ சிநேகமா இருக்கிறதால என்ன லாபம்? ஊரும், உலகமும் உன்னை உத்தமின்னு பேசிடப் போகுதா? தாசிங்கிற பேரு மாறிடப் போகுதா?”

“எனக்கு உலகைப் பத்திக் கவலையில்லே. அது எப்பவும் என்ன வேணாலும் பேசிட்டுத்தான் இருக்கும். இந்த அவலங்கெட்ட வாழ்க்கை எனக்குப் பிடிக்கலைன்னா என்னை விட்டுடு. நீ சம்பாதிச்ச சொத்தை நீயே வச்சுக்க. எனக்கு வேணாம் அது. உனக்கு இந்த எச்சில் வாழ்க்கை பிடிச்சிருக்கலாம். மணம் வீசலாம். ஆனால் எனக்குப் பிடிக்கல்லே. உடம்பெல்லாம் முள் குத்தற மாதிரி இருக்கு.”

வாசலில் தாழம்பூ மணம் வீசியது.

நிமிர்ந்து பார்த்தாள் நாகரத்னம்.

குமாரசாமி கையில் தாழம்பூவோடு வந்து கொண்டிருந்தான்.

“வா, குமாரசாமி! என்ன விசேஷம் இன்னைக்கு? ஏது தாழம்பூ?” என்று நாகரத்னம் கேட்க, “பாப்பாவுக்குத் தலை பின்னி விடற நேரமாச்சே. அதுக்குப் பிடிக்குமேன்னு ஏரிக்கரைப் புதர்லேர்ந்து வெட்டி வந்தேன்.”

“பாவம், உனக்குத்தான் இந்தக் குடும்பத்து மேலே எத்தனை அக்கறை?” என்று சூள் கொட்டினாள் நாகரத்னம்.

“அது சரி, அம்மாவுக்கும் பொண்ணுக்கும் என்ன தர்க்கம்?”

“எப்பவும் உள்ளதுதான். அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கலையாம். மிராசு ஐயரோடதான் வாழப் போறாளாம், குமாரசாமி! நீ இப்பவே ஐயர்கிட்டே போய் அபரஞ்சி முளுகாம இருக்காங்கற செய்தியைச் சொல்லிட்டு வா.”

“சொல்றேன் அபரஞ்சி. ஆனா இப்ப அதுக்கு நேரம் சரியில்லே. ஐயாவோட சம்சாரம் உடம்புக்கு முடியாமப் படுத்திருக்காங்க. பாவம், நாலு நாளா நல்ல காய்ச்சல்! வண்டி அனுப்பி வைத்தியரைக் கூட்டியாரச் சொன்னாங்க. நான் தான் போய்க் கூட்டி வந்தேன். ஜன்னி மாத்திரை தேய்ச்சுக் கொடுத்திருக்காரு வைத்தியர். அந்தம்மாவுக்கு உடம்பு நல்லபடி குணமாயிடணும்னு மாரியாத்தாளை வேண்டிக்கிட்டிருக்கேன். காலையிலேர்ந்து சாப்பிடக் கூட நேரமில்லே.”

“பலகாரம் சாப்பிடறயா? புட்டு செஞ்சி வச்சிருக்கேன்.”

“புட்டா? திடீர்னு என்ன புட்டு மேலே ஆசை வந்திருச்சு, உனக்கு?”

“எனக்கில்லை. அபரஞ்சிக்குத்தான். புள்ளைதாச்சிப் பொண்ணு கேட்டுதேன்னு செஞ்சிருக்கேன்.”

“எனக்கு மனசே சரியில்லைம்மா. இப்ப எதுவும் இறங்காது.”

இந்தக் குமாரசாமி ஒரு வித்தியாசமான பிறவி.

நாலு ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு, ஊருக்கு நல்லவனாய், நாலு பேருக்கு உபகாரமாயிருந்து கொண்டு ஜீவனம் நடத்தும் அபூர்வப் பிறவி. ஐயர் குடும்பத்தைப் போலவே, அபரஞ்சி குடும்பத்தையும் ஒரு வாஞ்சையோடு நேசித்து ஆதரவாகப் பழகி வருபவன்.

அபரஞ்சியை நெஞ்சுக்குள் வைத்துத் தினமும் ஆராதிக்கும் ஒரு ஊமைக் காதலனாய் வாழ்ந்து கொண்டிருந்தான். இப்போது அந்தக் காதலும் நீறுபூத்த நெருப்பாகி, அதுவும் சாம்பலாகி விட்டது.

மேட்டுப்பட்டி ஐயரின் மனைவி தலையைச் சாய்த்து ஒரு மாதம் ஓடிவிட்டது.

ஆரம்ப துக்கங்கள் ஓரளவு வடிந்து மிராசு ஐயர் மறுபடியும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற வதந்தி ஊருக்குள் அடிபட்ட போதிலும் ஐயர் அதையெல்லாம் லட்சியம் செய்யாமல் இரவு பகலாக அபரஞ்சியின் மூச்சுக் காற்றையே சுவாசித்துக் கொண்டிருந்தார்.

ஆனாலும், அபரஞ்சிக்கு அதைக் கேட்காவிட்டால் இதயம் வெடித்துவிடும் போலிருந்தது. “கல்யாணம் செஞ்சுக்கப் போறீங்களாமே? பேசிக்கிறாங்களே?”

“ம்… அதையெல்லாம் நீ நம்பறயா? வயது அம்பதுக்கு மேல ஆச்சு! இனிமே கல்யாணம் என்ன வேண்டிக் கிடக்கு? என் பேர் சொல்ல பிள்ளையா குட்டியா?”

“பிள்ளை இல்லங்கற கவலை வேணாம் உங்களுக்கு. இப்ப உங்க குழந்தை என் வயிற்றிலே வளருது.”

“கேள்விப்பட்டேன். குமாரசாமி சொன்னான். ஹூம்…” என்று பெருமூச்சு விட்டார் மிராசுதார்.

“ஏன் விரக்தியாப் பேசறீங்க? பெருமூச்சு விடறீங்க? சந்தோஷமா இல்லையா உங்களுக்கு? நானே இதை உங்களுக்கு என் வாயாலே சொல்லலையேன்னு வருத்தமா?”

“அதெல்லாம் இல்லை. உன் வயிற்றில் பிறக்கப் போகிற அந்தப் பிள்ளை என் குழந்தைதான்னு நான் ஊர் அறியச் சொல்லிக்க முடியாதே!”

“அப்படின்னா அந்தக் குழந்தையைப் பற்றின கவலை உங்களுக்கு இல்லையா?”

“இருக்கு. ஆனாலும் என்ன செய்ய முடியும்?”

“இப்ப அதன் எதிர்காலம்?”

“அதை நீதான் முடிவு செய்யணும்!”

அபரஞ்சிக்குத் தலை சுற்றியது. மயங்கிக் கீழே விழப் போனவளை அப்படியே தாங்கிப் பிடித்துக் கொண்டார் ஐயர். நாகரத்னம் ஓடி வந்து, “ஐயோ, என் அபரஞ்சிக்கு என்ன ஆச்சு?” என்று பதறியபடி தண்ணீரை முகத்தில் தெளித்தாள். அபரஞ்சி மயக்கம் தெளிந்து எழுந்ததும் ஐயர் அவளிடம், “நீ கொஞ்சம் படுத்துத் தூங்கு. நான் அப்புறம் வந்து பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து போனார். அவர் வெளியே போனதும் அபரஞ்சி தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.

“புனிதமான உணர்வுகளோடு ஒருத்தருக்கு சமூக அந்தஸ்து தரும் தகுதி எனக்கு இல்லையா?”

“என் வயிற்றில் வளரும் இந்தச் சிசு உலகத்தைப் பார்க்கும் போது அதுக்குக் கிடைக்கக் கூடிய பட்டம்:

‘தேவடியா பெத்த குழந்தை!’

நான் இதை வளர்க்கக் கூடாது… அவரும் இதை வளர்க்கப் போவதில்லை. ஒரு வேளை எனக்குப் பிறக்கப் போகும் குழந்தை பெண் குழந்தையாப் பிறந்துட்டா? பிற்காலத்தில் சமூகம் என் மகளை ஏற்றுக் கொள்ளுமா? ஐயோ, அதை நினைக்கவே பயமாயிருக்கு. வேற யார் கிட்டேயாவது கொடுத்து வளர்க்கச் சொல்ல வேண்டியதுதான். யார்கிட்ட, யார்கிட்ட?

குமாரசாமி கண்முன் தோன்றிப் பளிச்சென்று மறைய, “அம்மா குமாரசாமியைக் கொஞ்சம் கூப்பிட்டு வரச் சொல்றயா? நான் அவரோடு நிறையப் பேசணும்.”

ஒரு வெள்ளிக்கிழமை, விளக்கு வைக்கும் நேரத்தில்… பாப்பா பிறந்தாள்.

“உனக்கு எப்ப கல்யாணமாச்சுன்னு எங்கிட்டே சொல்லவேயில்லையே!”

“நான் உங்களைச் சந்திச்ச ஒரு மாசத்துக்கெல்லாம் ஆயிட்டுது. இப்பத்தானே உங்களைப் பாக்கறேன்.”

“நான் ஜெயிலுக்குப் போனப்புறமா? அப்படின்னா உன் புருஷன் இப்ப எங்க இருக்கான்?”

“நீங்க இருக்கிற அதே ஊர்லதான். என்னை அவர் தள்ளி வச்சதுக்காகக் கூட நான் வருத்தப்படலை. ஆனா தாசி மகள்னு சொல்லி விரட்டியதைத்தான் பொறுத்துக்க முடியலை. நான் ஒழுங்கா, கௌரவமா, குடும்பப் பெண்ணா வாழ்ந்துகிட்டிருக்கும் போது நதிமூலம் ரிஷிமூலம் பாக்க வேண்டிய அவசியம் எதுக்குன்னு எனக்குப் புரியலை.”

“நான் இப்பவே அவனைப் போய்ப் பார்க்கட்டுமா?”

“வேணாம். ஒரு தடவை நீங்க கோபப்பட்டு ஓட்டல்காரனோட மோதிப் பட்ட துன்பம் போதும். இனியும்…”

“நான் கோபப்பட மாட்டேன், பாப்பா! நீ என்னை நம்பு. நியாயத்தைத்தான் எடுத்துச் சொல்வேன்.”

“வேண்டாங்க. அதெல்லாம் இப்ப அவர் காதிலே ஏறாது. அந்த ஓட்டல்காரன் பொய்யும் புளுகும் பேசி அவர் மனசைக் கலைச்சு விஷத்தைப் பாய்ச்சி வச்சிருக்கான். அதைக் கேட்டுக்கிட்டு அவர் ஆவேசம் வந்த மாதிரி குதிச்சு எவ்வளவு கேவலமாப் பேச முடியுமோ அவ்வளவும் பேசி என்னை வீட்டை விட்டே துரத்திட்டாரு. அப்புறம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு? அவரோடு இனி என்னால வாழ முடியாது.”

“அதனாலே இப்படியே வாழாவெட்டியாவே இருந்துடப் போறயா?”

“வாழ்நாள் முழுக்க ஒருத்தி ஒருவனோடு வாழணுங்கறதெல்லாம் இப்ப இல்லே. காலம் மாறிப் போச்சு. ஒருவனைப் பிரிஞ்சப்புறம் இன்னொருவனுடன் வாழறதிலே தப்பில்லைன்னு ஆயிட்டுது. ஒருவனை விடாம இன்னொருவனுடன் வாழறதுதான் தப்பு. ஒரு பெண் எப்போது எவனோட வாழறாளோ அப்போது அவனுக்கு துரோகம் செய்யாமலிருந்தாப் போதும். அதுதான் கற்புன்னு ஏதோ ஒரு புஸ்தகத்துலே படிச்சிருக்கேன். எனக்கு அந்தக் கருத்து புடிச்சிருக்கு. நான் அப்படித்தான் வாழப் போறேன்! அப்படி இன்னொருத்தனுடன் வாழறதுனு தீர்மானிச்சா அந்த இன்னொருத்தர் நீங்களாத்தான் இருப்பிங்க.”

சாமண்ணா சுவரோரம் நின்ற பழைய இரும்புப் பெட்டியைப் பார்த்தான். அதற்கு மேல் சுவரில் மாட்டப்பட்டிருந்த அபரஞ்சி போட்டோவுக்கு மாலை போட்டு எதிரில் சின்ன குத்து விளக்கு ஏற்றி வைத்திருந்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 18கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 18

அத்தியாயம் 18 – அபிராமியின் பிரயாணம்      முத்தையனும் குறவனும் தப்பிச் சென்ற செய்தி கேட்ட உடனே வீட்டை விட்டுக் கிளம்பிய ஸர்வோத்தம சாஸ்திரி அன்றிரவு திரும்பி வரவில்லை. அப்புறம் ஐந்து ஆறு நாள் வரையில் அவர் வரவில்லை. கடைசியில் ஒரு நாள்

சாவியின் ஆப்பிள் பசி – 35சாவியின் ஆப்பிள் பசி – 35

நினைக்க நினைக்க மனசில் வேதனையும் ஆச்சரியமும் பெருகியது சாமண்ணாவுக்கு. ‘தொடர்ச்சியாக எந்த பின்னமும் இல்லாமல் என் மீது உயிரை வைத்துள்ள பாப்பாவை உதாசீனப்படுத்தி விட்டேன். இது எவ்வளவு பெரிய தவறு? சில நாட்களே பழகிய சுபத்ரா என்னை அலட்சியப்படுத்துகிறாள் என்று தெரிந்தபோது

கல்கியின் ‘பரிசல் துறை’-5கல்கியின் ‘பரிசல் துறை’-5

5 செப்டம்பர் 30ம் தேதி வேலம்பாளையம் ஒரே அல்லோலகல்லோலமாயிருந்தது. அன்று தான் கள்ளுக்கடை மூடும் நாள். அன்று தான் குடிகாரர்களுக்குக் கடைசி நாள். பெருங்குடிகாரர்களில் சிலர் அன்றெல்லாம் தென்னை மரத்தையும் பனைமரத்தையும் கட்டிக் கொண்டு காலம் கழித்தார்கள். சிலர் நடு வீதியில்