Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-3

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-3

3 – மீண்டும் வருவாயா?

பள்ளி விட்டு வெளியே வர குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் சிலர், பள்ளி பேருந்தில் சிலர் என கிளம்பிக்கொண்டிருந்தனர். வாட்ச்மேன் மற்றும் சில ஆசிரியைகள் உடன் இருந்து அனுப்பி வைத்தனர். ஜீவா, ஜீவிதா, இருவரும் கூட்டிச்செல்ல ஆள் வருவார்கள் என கூறி ஓரமாக நின்றனர். ஜீவா வாட்ச்மேனிடம் “அங்கிள்..நான் வந்துட்டேன்.” என சிரிப்புடன் வந்து அருகில் நின்றான்.

“அடேடே..ஜீவா குட்டி.. இந்த வருஷம் 1st std ஆஹ்?” என அவனை வம்பிழுக்க கேட்க

அவனும் முகம் சுருக்கி “நான் குட்டி இல்ல. பெரிய பையனாயிட்டேன்.. இந்த வருஷம் 2nd std.” என கூற அவனின் இந்த செயலை கண்டு ரசித்தார். பின் சிரித்துக்கொண்டே “அப்டியா..வளந்துட்டீங்களா..அப்போ நீங்களே வீட்டுக்கு தனியா போகப்போறிங்களா?”

“அங்கிள், என்ன கூட்டிட்டு போக ஆட்டோ வரும்..போன வருஷம் விட கொஞ்சம் வளந்துட்டேன். உடனே ரொம்ம்ம்ம்ப பெரிய பையனாகிடமுடியுமா? கொஞ்சம் கொஞ்சம்தான் வளர முடியும். ஆனா அதுக்காக நீங்க என்னை குட்டின்னு கூப்பிடாதிங்க.” என அவன் குறைபட அவரும் சிரித்துக்கொண்டே “சரி சரி. ஆட்டோ இன்னும் வரல.. அங்க போயி உக்காரு. நான் வந்ததும் கூப்பிடறேன்.”

“இல்ல அங்கிள், இது என் பிரண்ட், ஜீவிதா. இந்த ஊருக்கு இவங்க புதுசு. இவ அம்மா கூட்டிட்டு போக வருவாங்க. நான் இங்கேயே இவ கூட நிக்கிறேன். அவங்க வந்தா அப்போதான் தெரியும்..அவளை அனுப்பிச்சு வெச்சிட்டு அப்புறமா நான் போயி உக்காந்துக்கறேன் அங்கிள்.” என பொறுப்பாக பெரியமனிதன் தோரணையில் கூற

வாட்ச்மேன் “சரிங்க பெரிய மனுஷா” என சிறுவர்கள் இருவரும் சிரித்தனர்.

ஜீவிதாவிடம் விசாரிக்க “என் பேர் ஜீவிதா, 2nd std படிக்கிறேன் அங்கிள். எங்க அம்மா பேங்க்ல ஒர்க் பண்ராங்க. ட்ரான்ஸ்வர் கிடைச்சதால கொடைக்கானல்ல இருந்து போன வரம் தான் சென்னை வந்தோம்.” என கூறினாள். அவரும் சரி என இருவரையும் ஓரமாக நிற்கவைத்துவிட்டு மற்ற குழந்தைகளை கவனிக்க சென்றுவிட்டார்.

 

நிரு அங்கே வேகமாக வந்தவள் “ஜீவி குட்டி” என முதலில் ஜீவா தான் கோபமாக திரும்பினான். யாரோ தன்னை குட்டி என சேர்த்து அழைப்பதாக எண்ணிவிட்டான். ஆனால் திரும்பி நிருவைகண்டவன் அப்டியே அமைதியாக நிற்க அவனை ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவள் புன்னகையுடன் அருகில் இருந்த ஜீவிதாவை பார்த்து “சாரி டா குட்டி. அம்மாக்கு கொஞ்சம் டைம் ஆகிடுச்சு. நாளைல இருந்து கரெக்ட் டைம்க்கு வந்துடறேன்.” என கூற ஜீவிதா “ஓகே மா. அம்மா இது ஜீவா, என் பிரண்ட். என் கிளாஸ்மேட் தான். எனக்கு அடுத்த ரோல் நம்பர். நீங்க வர வரைக்கும் என் கூட இருக்கேன்னு சொன்னான்.” என சந்தோசமாக தனக்கு கிடைத்த புது தோழமையை அறிமுகப்படுத்த நிருவும் குனிந்து ஜீவாவின் தலையை வருடி “சோ ஸ்வீட். தேங்க்ஸ் செல்லம் அண்ட் சாரி கொஞ்சம் வெயிட் பண்ண வெச்சுட்டேன். நீங்க எப்படி போவீங்க? யாரு கூட்டிட்டு போக வருவாங்க?” என

 

ஜீவா பேசுவதற்கு முன் ஜீவிதா “அவனுக்கு ஆட்டோ வரும்மா.” என கூற

நிரு “அப்போ அதுவரைக்கும் நான் இருக்கேன். ஜீவிமா நாம ஜீவாவை ஆட்டோ வந்ததும் ஏத்திவிட்டுட்டு போலாம் ஓகேவா?” என அவளும் தலையசைக்க ஜீவா நிருவின் கன்னம் வருடி “சோ ஸ்வீட்.. தேங்க்ஸ் நீங்க என் கூட இருக்கறதுக்கு, அண்ட் சாரி ஆட்டோ வர கொஞ்சம் டைம் ஆகும் டிராபிக்ல இருக்கும்னு நினைக்கிறேன்.” என இவள் கூறியது போலவே கூற இவளுக்கு சிரிப்பு வந்தது.

அதற்குள் அங்கே இருந்த ஆசிரியர்கள் மற்றும் வாட்ச்மேனிடம் சென்று சொல்லிவிட்டு வரலாம் என நினைத்தவள் “சரி ஒரு 5மின்ஸ் இங்கேயே இருங்க. நான் வாட்ச்மேன் அண்ணாகிட்ட மிஸ் கிட்ட எல்லாம் பேசிட்டு வரேன். நீங்க வரீங்களா?” என

ஜீவி “நாங்க ஆல்ரெடி பேசிட்டோமே. வாட்ச்மேன் அங்கிள் கூட ஜாலியா பேசுனாங்க. அவங்களும் ஜீவாவோட பிரண்ட் தான் மா.” என நிரு சிரிப்புடன் “சரி இங்க இருங்க” என சற்று முன்னே சென்று அவர்களிடம் பேசிவிட்டு தான் ஜீவிதாவின் அம்மா என கூறிவிட்டு இனி தினமும் தான் வரும் வரை குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லி பேசிக்கொண்டிருந்தனர்.

 

இதனிடையில் ஜீவாவின் நண்பர்கள் வர அதில் ஒருவன் “ஏய்.. ஜீவா… இன்னும் ஆட்டோ  வரலையா?” என்றான்.

இவனும் “இன்னும் இல்லை. ட்ராபிக்ல இருக்கும்.”

“இதுக்கா நீ அவ்ளோ சீக்கிரமா வந்த? எங்ககூடவே விளையாடிட்டு மெதுவா வந்திருக்கலாம்ல?”

“இல்ல..ஜீவிதா அம்மா வந்துடுவாங்கள்ல. அதான் சீக்கிரம் வந்துட்டோம்.” என ஜீவா கூறினான்.

ஜீவாவுடன் எப்போதும் சண்டை போடும் ஒரு சிறுவன் இன்றும் இவனால் டீச்சரிடம் மாட்டிகொண்ட கோபத்தில் இருந்தான். அதனால் அவனை காயப்படுத்த எண்ணி “ஜீவிதா அம்மா தானே வராங்க. உன் அம்மாவா வராங்க.?” என்றான்.

ஜீவா முறைக்க ஜீவாவின் இன்னொரு நண்பன் “ஹரிஷ், நீ ஏன் அவனை டீஸ் பண்ற?” என திட்ட

அவனோ மீண்டும் “நான் உண்மைய தானே சொன்னேன். அவனுக்கு அம்மா இல்லேல்ல?”

ஜீவா “என் அம்மா என் கூட தான் இல்லை.வேற ஊர்ல இருக்காங்க. சீக்கிரம் வருவாங்க.” என்றான் வெடுக்கென்று

ஹரிஷ் “அதெல்லாம் சும்மா சொல்லிருப்பாங்க. அம்மா யாராவது பையன விட்டுட்டு இருப்பாங்களா? உன்ன ஏமாத்துறாங்க. உங்க அம்மா இல்ல. ” என்றான்

கடுப்பான ஜீவா அவனை அடிக்க அங்கே சலசலப்பு ஏற்பட சற்று தூரத்தில் இருந்து இதை கண்ட நிரு, வாட்ச்மேன், ஆசியர்கள் அனைவரும் அங்கே வர அதற்குள் ஹரிஷின் அம்மா அங்கே வந்து “என்ன ஸ்கூல் இது, என்ன பையன் இவன்..இப்டி போட்டு அடிக்கிறான். இந்த மாதிரி பசங்கள எல்லாம் ஏன் ஸ்கூல்ல  வெச்சிருக்கீங்க. யாரோட பசங்க..கூப்பிடுங்க .” என கத்தி கொண்டிருக்க

அங்கே அனைவரும் வந்துவிட நிரு “என்னாச்சு மேடம்.. எங்க பசங்கள ஏன்  கத்திட்டு இருக்கீங்க.?”

அவரோ “வாங்கமா உங்க பசங்க தானா? என் பையன எப்படி அடிச்சிருக்கான் பாருங்க. இதுதான் நீங்க சொல்லிகுடுத்த லட்சணமா? குழந்தையை உருப்படியா வளக்காம நான் ஏன் கத்துறேன்னு கேக்கவந்தாச்சு.” என வசைபாடி விட்டு மீண்டும்  அங்கு வந்த ஆசிரியர்களிடம் கத்திக்கொண்டிருந்தார்.

 

நிரு குழந்தைகளை திரும்பி பார்க்க ஜீவி “அம்மா, ஹரிஷ் தான் பஸ்ட் வம்பிழுத்தான். ஜீவாகிட்ட உன் அம்மா இல்லைனு சொல்லி டீஸ் பண்ணான். ஜீவா அப்டி சொல்லாதேன்னு சொல்லியும் கேக்கல. மறுபடியும் சொன்னதும் தான் ஜீவா அடிச்சிட்டான்.” என்றாள். மற்ற குழந்தைகளும் “ஆமா ஆன்ட்டி எப்போப்பாரு அந்த ஹரீஷ் ஜீவாகிட்ட இப்படித்தான் டீஸ் பண்ணிட்டே இருக்கான். அவன் மேல தான் தப்பு” என கூறியும்

நிரு அங்கே எதுவும் கூறாமல் அமைதியாக நின்றிருந்தவனிடம் “ஜீவா அவனை அடிச்சியா? அது தப்பில்லையா?”

“ம்ம்.. அவன் எனக்கு அம்மாவே இல்லேனு சொல்றான் அதான் கோபம் வந்திடுச்சு. அடிச்சுட்டேன்.. அப்டி பேசாதேனு அவனுக்கு நான் சொல்றேன்ல.. அவன் திரும்ப திரும்ப ஹர்ட் பேசுறதுதானே தப்பு.?” என கேள்வியை அவளிடமே கேட்க

ஜீவாவின் ஆசிரியை வந்து “ஜீவா, வா வந்து அவன்கிட்ட அடிச்சதுக்கு சாரி சொல்லு.”

“சாரி மிஸ். நான் வரமாட்டேன். நான் தப்பு பண்ணலையே” என நடந்ததை கூறி அவன் மன்னிப்பு கேட்க மறுத்தான்.

ஆசியருக்கு புரிந்தாலும் இப்போதைக்கு பிரச்சனையை முடித்துவைக்க எண்ணி “ஆனா ஜீவா இப்போ நீ சாரி சொல்லல, நாளைக்கு உன் அப்பாவை கூட்டிட்டு தான் வரணும்.”

“ஓகே மிஸ் நாளைக்கு நான் அப்பாவை கூட்டிட்டு வரேன்.. தப்பு பண்ணாம சாரி சொல்லக்கூடாதுனு அப்பா சொல்லிருக்காங்க.” என அதே முடிவுடன் அதே நிமிர்வுடன் கூற நிருவிற்கு ஒரு நொடி என்னவோ போல் இருந்தது.

இருப்பினும் அவனை கைபிடித்து சென்று அந்த பெண்மணியின் முன்னால் நிறுத்தி, “மேடம், எங்க பையன் உங்க பையன அடிச்சதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். சின்ன குழந்தைங்க தெரியாம பேசிட்டு அடிச்சுகிட்டு இருக்கறது தான். ஆனா அவங்க மனசுல எதையும் வெச்சுக்க மாட்டாங்க. கொஞ்ச நாள்ல இவங்களே நல்ல பிரண்ட்ஸா கூட மாறலாம். ஆனா அதுக்குள்ள ஒன்னு உங்க குழந்தையை ஸ்கூல் விட்டு கூட்டிட்டு போகணும், இல்ல எங்க குழந்தையை கூட்டிட்டு போகணும்னு முடிவு பண்றது எல்லாம் வேண்டாமே. அவங்களுக்கு எடுத்து சொன்னா புரிஞ்சுப்பாங்க. ப்ளீஸ் மேடம், இதுல உங்க குழந்தையோட படிப்பும் இருக்கு.

ஹரிஷ், இப்போ நடந்த சண்டைனால நீ இந்த ஸ்கூல் விட்டு போகணுமா?” என வினவ

அவன் தனது பெற்றோரை பாவமாக பார்த்துவிட்டு “இல்ல ஆண்ட்டி… எனக்கு இங்க தான் பிடிக்கும். என் பிரண்ட்ஸ் இங்க தான் இருக்காங்க.” என

நிரு “சார், இனிமேல் இப்டி நடக்காது. ஜீவா இனிமேல் உங்க பையன்கிட்ட எந்த பிரச்சனையும் பண்ணமாட்டான்.” ஜீவாவை பார்த்துக்கொண்டே “அது என் பொறுப்பு” என்றாள் .. “இந்த பிரச்சனைய இதோட விட்றலாமே?” என ஹரிஷின் தந்தை ஒரு முடிவுடன் “சரி மா. பாத்துக்கோங்க. ஹரிஷ் வா போலாம்.” என கிளம்ப ஆயத்தமாகினர்.

 

ஜீவாவின் கண்களில் கோபமும், இயலாமையும் தெரிய நிருவை பார்த்தான். ஆசிரியர்கள், குழந்தைகள் கூட்டம் அதிகம் கலைந்ததும் ஹரிஷின் பெற்றோர்களிடம் மீண்டும் சென்ற நிரு “அதோட மேடம், உங்க பையன்கிட்டேயும் அவன் என்ன பேசுனான், அது சரியான்னு விசாரிங்க. அடிக்கற குழந்தை மேல மட்டும் தான் தப்புனு இல்லை. அவனை அவ்ளோ கோபப்படுத்தி பாத்தது யாருனு உங்க பையன்கிட்டேயே கேளுங்க. ஹரிஷ், இனிமேல் ஜீவாவோட அம்மா இல்ல இருக்காங்கனு நீ பேசுனா உன்னை இந்த ஸ்கூல் விட்டு கூட்டிட்டு போகவேண்டாம்னு கேட்ட நானே கம்பளைண்ட் பண்ணி கூட்டிட்டு போக சொல்லிடுவேன். ஓகே?” என ஹரிஷ் தலை குனிய அவரின் அம்மா “ஹலோ, நீ யாரு என் குழந்தையை அதிகாரம் பண்ண?” என முடிப்பதற்குள் கையமர்த்தி “இந்த மாதிரி நீங்க முதல அவசரப்பட்டு எல்லாத்துக்கு கத்துறத நிப்பாட்டுங்க. இப்போவும் சொல்றேன். உங்க பையன விசாரிங்க. அப்புறம் பேசுங்க. அதோட ஜீவா தப்பு பண்ணல. தப்ப தட்டி கேட்ருக்கான். நான் அங்க மன்னிப்பு கேட்டது என்ன இருந்தாலும் அவனால இவனுக்கு அடிபட்ரிச்சு. ஒரு அம்மா நிலைமைல இருந்து உங்க ஆதங்கத்தை புரிஞ்சுக்கிட்டதால தான். குழந்தையை எப்படி வளக்கணும்னு முதல நீங்க நல்லா தெரிஞ்சுக்கோங்க.” என்று நிரு திரும்பிவர ஜீவா இதை பார்த்துக்கொண்டிருந்தான்.

 

அதற்குள் ஜீவாவின் ஆட்டோ வந்துவிட்டதென கூற இவர்களும் அவனுடனே சென்றனர். ஆட்டோ டிரைவரிடம் ஜீவாவை இறக்கிவிட்டு பின் தாங்கள் கூறும் அபார்ட்மெண்ட்க்கு செல்ல சொன்னாள். ஆனால் இறுதியில் இருவர் இருப்பதும் ஒரே அபார்ட்மெண்ட் என தெரியவர ஒன்றாகவே சென்றனர்.

ஜீவாவிற்கு நிருவிடம் ஏதோ கேட்க பேசவேண்டுமென தோன்ற ஆனால் அமைதியாக வந்தான்.

அபார்ட்மெண்ட் வந்திறங்கியதும் நிரு “என்ன ஜீவா சார், ஏதோ கேக்கணும் போல? இன்னும் என் மேல கோபம் போகலையா?” என கிண்டல் செய்ய

அவன் “அது அப்போ.. நீங்க அவங்ககிட்ட சாரி சொல்லும்போது கோபம் வந்தது. ஆனா அப்புறம் நீங்க அவங்ககிட்ட மறுபடியும் கூப்பிட்டு எனக்காக  மிரட்டும்போது கோபம் போயிடிச்சு.. ஆனா எனக்கு ஒரு டவுட். அவங்களை தனியா கூப்பிட்டு சொன்னதை நீங்க எல்லார்முன்னாடியும் வெச்சு சாரி சொல்லும்போதே சொல்லிருக்கலாமே.?”

நிரு “சொல்லிருக்கலாம் தான். ஆனா  அம்மா கூட இல்லேனு அவன் மட்டும் கிண்டலா சொன்ன விஷயம் அங்க வேடிக்கை பாத்த எல்லாருக்கும் தெரியவரும். எதுக்கு அது? அதோட என்ன இருந்தாலும் நீ அவனை அடிச்சது தெரியாம அடி பலமா பட்டிருந்தா பாவம் தானே. அப்புறம் அவன் சொன்னத தானே எல்லாரும் சொல்லுவாங்க. அம்மா கூட இருந்திருந்தா இதெல்லாம் சொல்லிகுடுத்திருப்பாங்க. அப்பா பொறுப்பில்லாம வளத்திட்டாருனு. அந்த மாதிரி ஒரு நேம் அப்பாக்கு தேவையா சொல்லு?” என கேட்க

அவனோ பாவமாக பார்த்துவிட்டு “இல்ல, அப்பா ரொம்ப நல்லவரு. அவர யாருமே குறைசொல்லக்கூடாது.” என்றான்.

“குட். சோ இனிமேல் இப்டி ப்ரோப்லேம் வந்தா, கோபம் வந்தா மிஸ்கிட்ட இல்ல வீட்ல இல்லாட்டி பெரியவங்ககிட்ட சொல்லணும். நீயா சட்டுனு அடிக்க போகக்கூடாது. ஓகேவா?”

“ம்ம்” என வேகமாக தலையசைத்தான்.

ஜீவா “அவங்ககிட்ட எங்க பசங்க தான்னு என்னையும் சேத்தி தான் சொன்னிங்களா?” என வினவ

நிரு “ஆமா, எனக்கு நீயும் ஜீவி மாதிரி தான்.” என கூற

ஜீவா என்ன நினைத்தானோ “அப்டினா நானும் உங்கள இனிமேல் அம்மானே கூப்பிடவா?”

“தாராளமா கூப்டு.” என்றதும் ஜீவிதாவும் குதிக்க ஜீவாவும் மகிழ்ச்சியானான்.

அவளது பேர் நிர்பய நேத்ரா என்றதும் அவனுக்கு சரியாக கூற வராமல் “ஓகே உங்கள நிரு மான்னு கூப்பிடறேன்” என்றவனை ராமு “ஜீவா தம்பி” என அழைக்க “ராமு தாத்தா வந்துட்டாரு. அப்பா வரவரைக்கும் அவரு தான் என்ன பாத்துப்பாரு. சரி நான் கிளம்புறேன். டாடா” என்றவன் மீண்டும் வந்து நிருவின் கைபிடித்து கீழே குனிய சொல்லி “தேங்க்ஸ் நிரு மா” என கூறி முத்தமிட்டு ஓடிவிட்டான். அவளுக்குள்ளும் ஜீவாவை கண்டதில் இனம் புரியா மகிழ்ச்சி இருந்தது மனம் லேசாக ஜீவிதாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-13ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-13

13 – மீண்டும் வருவாயா?     சிவகாமி “அதோட உங்க குடும்பமோ பெரிய குடும்பம், நிறையா பேர் இருப்பாங்க. நீங்க கூட இருந்தாலாவது பரவால்லை. கல்யாணம் பண்ணி அவங்ககிட்ட விட்டுட்டு போறது, எப்படி ஒத்துவரும்னு தெரில..தப்பா எடுத்துக்காதீங்க தம்பி. இப்போ

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-10ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-10

10 – மீண்டும் வருவாயா? வீட்டிற்கு வந்த பின்னும் வாணியிடமும், நிருவிடமும் பேசி ஜீவிதாவை தன்னுடன் வைத்துக்கொண்டான். அவனுக்கு சற்று தனிமையில் இருக்கவேண்டும், ஏதோ யோசிக்கவேண்டுமென தோன்றினாலும் குழந்தைகள் பேசிக்கொண்டே உடன் சுற்றிக்கொண்டே இருக்க அன்றிரவு அவனும் அவர்களோடு விளையாடி விட்டு

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-5ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-5

5 – மீண்டும் வருவாயா? ஜீவன் “நித்து நீ எப்போ திரும்பி வருவ? ஒருவேளை நீ கூட இருந்து வளத்திருந்தா ஜீவா இப்போ இருக்கறமாதிரி தான் அம்மா அம்மானு இருந்திருப்பான்ல..நம்ம பையனுக்கு அம்மா ஏக்கம் வந்திடிச்சா? இல்ல ஜீவிதாவோட அம்மா அவளோ