Tamil Madhura சிறுகதைகள் பெண் உரிமை- கி.வா. ஜகன்னாதன்

பெண் உரிமை- கி.வா. ஜகன்னாதன்

    • 1

 

    • “கல்யாணி, உனக்கு இன்னும் பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகவில்லையா? எவ்வளவு நாழிகை அப்படியே உட்கார்ந்திருப்பாய்? எப்போது குளிக்கிறது, எப்போது சாப்பிடுகிறது?”

 

    • “இன்றைக்குத்தான் பள்ளிக்கூடம் இல்லையென்று சொன்னேனே, அம்மா. எங்கள் பழைய தலைமை ஆசிரியர் இறந்து போனார். அதற்காக விடுமுறை.”

 

    • “மனிதர்கள் தினமுந்தான் இறந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக விடுமுறை விட்டுக்கொண்டே இருந்தால், இருக்கிறவர்கள் படித்து முன்னுக்கு வரவேண்டாமா?- இந்தக் கிழங்கு வேண்டாம் வேண்டாம் என்று முட்டிக் கொண்டேன். கேட்கிறாரா? கழற் கோடி கழற்கோடியாக எதையோ வாங்கிக்கொண்டு வந்து உருளைக் கிழங்கு என்று கொடுக்கிறார் உங்கள் அப்பா. பாதிக்குமேல் தோல்!… இன்னும் உன் மாமா கடிதமே போடவில்லை…”

 

    • கல்யாணியின் அம்மா இப்படிச் சமையல் அவசரத்தில் தன் பேச்சை அவியலாக ஆக்கிக்கொண்டிருந்தாள்.

 

    • “ஏன் அம்மா, லொடலொட என்று கத்திக்கொண்டே இருக்கிறாய்? இந்தக் கதையைப் படித்து முடிக்கிற வரையும் உன் திருவாயை மூடிக்கொண்டு இருக்க மாட்டாயா? என்று கோபத்தோடு சொன்னாள் கல்யாணி.

 

    • “என்ன கதை அது, அப்படி என்னை வாயடைக்கும்படி செய்ய?”

 

    • “உன் வாயை அடக்கும் கதைதான் இது. படிக்கிறேன், கேட்கிறாயா? சதா கல்யாணம், கல்யாணம் என்று இரவும் பகலும் ஜபிக்கிறாயே, அது கூடாது என்பதை எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார், இந்த எழுத்தாளர்!”

 

    • “அவனுக்கு நான் சொல்கிறது எப்படியடி தெரியும்?” என்று அம்மா கேட்டாள்.

 

    • கல்யாணி, “ஐயோ, அம்மா!” என்று சொல்லிச் சிரித்தாள். “கதையில் உன்னைப்பற்றி வரவில்லை, அம்மா; பெண்கள் அவசியம் கல்யாணம் பண்ணிக்கொள்ளத்தான் வேண்டும் என்று உன்னைப் போன்ற கர்நாடகங்கள் சொல்கிறார்களே, அதற்குத் தக்க பதில் இந்தக் கதையில் வருகிறது. அதைத்தான் சொல்கிறேன்” என்றாள்.

 

    • “அது என்னடி அதிசயம்? பெண்களுக்குக் கலெக்டர் உத்தியோகம் கொடுக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறானா? இல்லை, கன்யாமாடம் கட்டவேண்டும் என்று எழுதியிருக்கிறானா?

 

    • “கவர்னர் உத்தியோகம் கொடுக்க வேண்டுமாம்!”

 

    • “எழுதினது ஆண்பிள்ளையா? பெண்பிள்ளையா?”

 

    • “யாராக இருக்கும் என்று உனக்குத் தோன்றுகிறது?”

 

    • “யாரோ போது போகாமல் புக்ககத்தில் விழுந்து தத்தளிக்கிற பைத்தியக்காரப் பெண்ணாக இருக்க வேண்டும்…” என்றாள் அம்மா.

 

    • அவள் சோதிடம் பொய்த்துவிட்டது.

 

    • “இல்லை, அம்மா, இல்லை. சாட்சாத் ஆண்சிங்கம் ஒன்று எழுதியிருக்கிறது. சுந்தரேசன் என்று கொட்டை எழுத்தில் பெயர் போட்டிருக்கிறது.”

 

    • “என்ன எழுதியிருக்கிறான்? படி, பார்க்கலாம்.”

 

    • கல்யாணி கதையில் வரும் பகுதியைப் படிக்க ஆரம்பித்தாள். அம்மா ஏதோ கேள்வி கேட்கவே, கதையில் வரும் சந்தர்ப்பத்தை விளக்கினாள். “இதிலும் கல்யாணி என்ற பெண்ணை வைத்துத்தான் கதை எழுதியிருக்கிறார். சீக்கிரம் அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று அவளுடைய மாமா பிள்ளை சொல்கிறான்.

 

    • அவளோ மேலும் மேலும் படித்து, விஞ்ஞான ஆராய்ச்சியிலே ஈடுபட வேண்டுமென்று சொல்கிறாள். அப்பா அவளிடம் கல்யாணம் பண்ணிக்கொள் என்று சொல்கிறார். அப்போது அந்தக் கல்யாணி சொல்கிறாள்: அதைப் படிக்கிறேன், கேள்…..”

 

    • “சரி, சரி, வாசி.”

 

    • “அந்தப் பெண் சொல்கிறள்: ‘அப்பா, நான் ஆண் பிள்ளையாகப் பிறந்திருந்தால் என்னை இப்படித் தொந்தரவு செய்வீர்களா? பெண்ணாகப் பிறந்ததாலே பிறர் சொன்னபடிதான் நடக்க வேண்டுமென்று நீங்கள் சொல்லும் பிரமதேவன் தலையில் எழுதிவிடுகிறானா? அவளுக்குப் படிக்க வேண்டும் என்ற ஆவல் இல்லையா? அறிவு இல்லையா? சுதந்திரம் இல்லையா? பெண்ணுக்கு இன்பம் வேண்டும் என்று கல்யாணம் செய்து வைக்கிறீர்கள். அதை இன்பம் என்று விரும்புகிறவர்களுக்கு நீங்கள் குசாலாய்க் கல்யாணம் செய்து வையுங்கள். அறிவுலகத்திலே நட்சத்திரமாக, சந்திரனாக, ஏன்-சூரியனாகவே ஒளிர வேண்டும் என்று ஆசைப்படுகிற பெண்களை அவர்கள் போக்கிலே விட்டால் ஆணுலகத்துக்கு அவமானம் உண்டாகி விடுமா?”

 

    • “போதும், போதும் இந்தப் பிரசங்கம்! யாரோ பொழுது போகாதவன் எழுதியிருக்கிறானாம்! இவள் வாசிக்கிறாளாம்! காலம் கலிகாலம்!”

 

    • “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. அந்தக் கல்யாணி எக்கேடு கெட்டால் எனக்கு என்ன? இந்தக் கல்யாணி கல்யாணம் செய்துகொண்டு என் கண்முன் குடித்தனம் பண்ணிக் குழந்தை குட்டிகளோடு வாழப் போகிறதைக் கண்ட பிறகுதான் நான் செத்துப் போவேன்!”

 

    • இப்படி இவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போது கல்யாணியின் தந்தை ராமசாமி வெளியிலிருந்து வந்தார்.

 

    • “இங்கே கல்யாணி படுத்துகிற பாடு என்னால் சகிக்க முடியவில்லை. ஊரிலே இருக்கிற சோம்பேறிகளெல்லாம் கதை எழுதுகிறார்களாம்! நல்லதாக எழுதக் கூடாதோ?” என்று அந்த அம்மா சொல்வதைக் கெட்டு, “கல்யாணி, இன்றைக்கு என்ன சொற்பொழிவு ஆயிற்று?” என்று கேட்டார் ராமசாமி.

 

    • “நான் சொற்பொழுவு செய்யவில்லை அப்பா; இந்தக் கதையில் ஒரு கல்யாணி வருகிறாள். அவள் என் கருத்துக்கு இணங்கச் சுதந்தர வாழ்வு வாழ்கிறவள். அவள் பேசுவதாகக் கதையில் ஒரு பகுதி வருகிறது. அதைத்தான் வாசித்துக் காட்டினேன்.”

 

    • “நீ முதலில் படித்து இந்தப் பரீட்சையில் தேறு; பிறகு பார்த்துக் கொள்ளலாம் உன் சுதந்தர வாழ்வை. இப்போதே அதைப்பற்றி ஏன் வீண் வாதங்கள்?” என்று சொல்லிவிட்டு ராமசாமி குளிக்கப் போனார்.

 

    • * * * *

 

    • சிறிய ஆரம்பப் பாடசாலையின் தலைமை உபாத்தியாயராகிய ராமசாமியின் மூத்த பெண் கல்யாணி எஸ்.எஸ். எல்.ஸி படித்துக்கொண்டிருந்தாள். முதல் குழந்தை ஆகையால் அவளுக்குச் சின்னஞ் சிறு பிராயத்திலே படிப்பிலே உற்சாக மூட்டினார் ராமசாமி. அவளும் சுறுசுறுப்பாகப் படித்து வந்தாள். ஒவ்வொரு வகுப்பிலும் அவள் நிறையப் புள்ளிகள் பெற்றுத் தேர்ச்சியும் பரிசும் பெற்றாள்.

 

    • கல்யாணி இளம் பெண். ஆனாலும் புத்திசாலி. அவளுக்குச் சிட்டுக் குருவி மேல் ஆசை. அதைப் போல விட்டு விடுதலையாகி நிற்பதில் ஆசை. ‘நாமும் படித்து உத்தியோகம் செய்ய வேண்டும்; காசும் சம்பாதிக்க வேண்டும்; புகழும் சம்பாதிக்க வேண்டும்’ என்பது அவள் கட்சி.

 

    • “சம்பாதித்துக்கொண்டே இருக்கிறாய்; பிறகு?” என்று அம்மா கேட்பாள்.

 

    • “பிறகு என்ன? அப்படியே வாழ்கிறது.”

 

    • “ஆண் துணை வேண்டாமோ?”

 

    • “உலகத்து மக்களெல்லாம் துணையாக இருக்கிறார்களே.”

 

    • “போடி பைத்தியம்! யாராவது கேட்டால் சிரிப்பார்கள். ஓர் ஆடவன் துணை வேண்டாமாம்! கன்னியாகவே காலம் கழித்து விட்டால் உடம்பு பளரும்போது யார் உதவி செய்வார்கள்?”

 

    • “அண்ணன், தம்பி இல்லையா?”

 

    • “அவரவர்கள் குடும்பம் என்று ஏற்பட்டால் உன்னை யார் கவனிப்பார்கள்?”

 

    • “ஆடவர்களை யார் கவனிக்கிறார்கள்?”

 

    • “அவர்களுக்குப் பெண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்; கவனித்துக்கொள்கிறார்கள்.”

 

    • கல்யாணி சிறிது மௌனமானாள். தானும் ஆடவர்களைப் போல இருந்து உத்தியோகம் செய்ய வேண்டுமென்று அவளுக்கு ஆசை. ஆடவர்களை எதிர்பாராமல் தன் சொந்த உழைப்பாலே வாழ வேண்டும், அதுதான் சுதந்திர வாழ்வு என்று எண்ணினாள். ஆனால் ஆடவர்கள் கல்யாணம் பண்ணிக்கொள்கிறார்கள்; பிள்ளைக்குட்டி பெறுகிறார்கள்; முதுமைப் பிராயத்தில் பிள்ளைகள் அவர்களைக் காப்பாற்றுகிறார்கள். பெண்கள் கல்யாணம் பண்ணிக் கொண்டால்தான் உடனே அடிமையாகி விடுகிறார்களே!

 

    • இதை நினைக்கும்போது அவளுக்கு ஆடவர் உலகத்தின்மேல் கோபம் கோபமாக வந்ந்து. “எல்லோரும் சுயநலப் புலிகள்!” என்று முணுமுணுத்தாள். அப்படியே சந்தனையில் ஆழ்ந்தாள்.

 

    • திடீரென்று சிந்தனையினின்றும் விழித்துக் கொண் டாள் கல்யாணி: அவளுக்கு இப்போது தெளிவு உண்டாயிற்று. சுதந்தரமாகவும் இருக்க வேண்டும்; குடும்பமும் நடத்த வேண்டும். பொருந்தாத இந்தச் சிக்கலைப் பொருந்தும்படி செய்ய ஒரு வழி கண்டுபிடித்து விட்டால்.

 

    • “அம்மா, கணவன் மனைவி இரண்டு பெரும் உத்தியோகம் பார்த்தால் என்ன?” என்று கேட்டால்.

 

    • “கிறிஸ்தவர்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள்.” “அவர்களும் மனிதர்கள்தாமே? நான் ஒன்று சொல்கிறேன், கேள் அம்மா. நான் என் விருப்பப்படி படிப்பேன். படித்து உத்தியோகம் கிடைத்த பிற்பாடுதான் கல்யாணம் செய்துகொள்வேன். நான் உத்தியோகத்தில் இருப்பதைத் தடுக்கத கணவனாக இருந்தால்தான் கல்யாணம் செய்து கொள்வேன்.”

 

    • “அவன் உனக்குச் சமைத்துப் போடா வேண்டுமாக்கும்!” “அது அவன் இஷ்டம். அவன் உத்தியோகம் செய்வதை நான் தடுக்கப் போவதில்லை. அவனும் என்னைத் தடுக்கக் கூடாது…”

 

    • “என்ன, இன்னும் தர்க்கம் முடிந்த பாடு இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே ராமசாமி வந்தார். சாப்பிட்டு விட்டுப் பள்ளிக்கூடம் போய்விட்டார்.

 

    • * * * *

 

    • பரீட்சை முடிந்தது. மிகவும் நன்றாக எழுதினாள் கல்யாணி. அதுத்தபடி கல்லூரிக்குப் போய்ப் படிக்க வேண்டும். எப்படியும் அவளுக்கு அரசாங்கத்தாரின் உபகாரச் சம்பளம் கிடைக்கும். திருச்சிராப்பள்ளியா, சேலமா, எங்கே படிக்கப் போவது என்ற யோசனையில் அவள் ஈடுபட்டிருந்தாள்.

 

    • ராமசாமியின் தங்கை கணவர் திருச்சியில் இருந்தார். விடுமுரைக்குக் கல்யாநியைத் திருச்சிக்கு அனுப்பும்படி அவளுடைய அத்தை, ராமசாமியின் தங்கை, எழுதியிருந்தாள். அதன்படி அவரே அவளைக் கொண்டு போய் விட்டு வந்தார். கல்யாணிக்கும் அங்கே போய்க் கல்லூரிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆசை.

 

    • கல்யாணி திருச்சிக்குப் போனாள். அவளுடைய அத்தை பெண் கமலம் அவளுடன் ஒட்டிக்கொண்டு பழகி னாள்; கல்யாணியைவிட இரண்டு வயசு சின்னவள். கல்யாணியைவிட இரண்டு வயசு சின்னவள். கல்யாணியைப் போலக் கமலமும் நிறையப் பத்திரிகை படிக்கிறவள். ஒரு தொடர்கதை விடாமல் படித்துவிடுவாள். இரண்டு பேரும் கதைகளையும் நாவல்களையும் பற்றிப் பேசிப் பேசிப் பொழுது போக்கினார்கள்.

 

    • சுந்தரேசன் என்ற எழுத்தாளர் எழுதி வரும் தொடர் கதையில் கல்யாணி என்ற பெண் சுதந்தர உணர்ச்சியுள்ளவளாக இருப்பதைப்பற்றி இருவரும் பேசினார்கள். “அவர் எப்போதுமே பெண்களின் கௌரவத்தைக் குறைக்காமல் எழுதுகிறார். யாரோ பெண்தான் ஆணின் புனைபெயரோடு எழுதுகிறாலோ என்று சந்தேகப்படுகிறேன்” என்றாள் கல்யாணி. “அதென்ன புதுமையாகச் சொல்கிறாயே?” என்று கேட்டாள் கமலம்.

 

    • “அது தெரியாதா உனக்கு? சில பேர் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பார்கள். கதை எழுதுவார்கள். அவர்கள் எழுதுவதாகத் தெரிந்தால், கதையின் மொழி பெயர்ப்பு, அதனால் கிடைக்கும் லாபம், எந்தப் பத்திரிகை இல அது வருகிறது, அதன் ஆசிரியர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்-என்றெல்லாம் மேலதிகாரிகள் கேட்பார்களாம். அந்தத் தொல்லைக்குப் பயந்துகொண்டு புனை பெயர் போட்டுக்கொள்வார்கள். சிலர் தம்முடைய மனைவியின் பெயரில் எழுதுவார்களாம். பெண்களின் உரிமையை வற்புறுத்தும் இந்தப் பேர்வழி, நிச்சயமாக ஒரு பெண்ணாகவே இருக்க வேண்டும். பெண்கள் பேரை ஆண்கள் உபயோகித்துக் கொள்ளும்போது ஏன் நாம் ஆண் பெயரை வைத்துக்கொள்ளக் கூடாது என்று தோன்றியிருக்கும். யாரோ சுந்தரி என்ற பெயர் உள்ளவளே சுந்தரேசன் என்று எழுதுகிறாள் போலிருக்கிறது” என்று கல்யாணி உற்சாகத்தோடு சொன்னாள்.

 

    • இப்படியே பொழுது போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் சென்னையிலிருந்து ஓர் இளைஞன் திருச்சிக்கு வந்தான். அவன் கமலத்தின் தகப்பனார் நாராயணனுடைய நண்பர் ஒருவருடைய பிள்ளை; அக்கௌண்டன்ட் ஜெனரல் காரியாலயத்தில் வேலை பார்க்கிறவன். ராமகிருஷ்ணன் என்பது அவன் பேர்.

 

    • ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் இரண்டையும் பார்த்து விட்டுப் போகலாம் என்று நாலு நாள் விடுமுறை பெற்றுக்கொண்டு வந்தான் ராமகிருஷ்ணன். நாராயணன் வீட்டில்தான் தங்கினான்.

 

    • கமலமும் கல்யாணியும் வழக்கம்போல் தொடர் கதை கலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். புனை பெயரைப்பற்றிய பேச்சும் வந்தது, “நீங்கள் பத்திரிகை கலைப் படிக்கிறது உண்டோ?” என்று கேட்டான் சென்னையிலிருந்து வந்த இளைஞன் ராமகிருஷ்ணன்.

 

    • “அதைத் தவிர வேறு வேலையே கிடையாது?” என்று சொல்லிச் சிரித்தார் நாராயணன்.

 

    • “யாருடைய கதைகள் உங்களுக்குப் பிடிக்கும்?” என்று கேட்டான் ராமகிருஷ்ணன்.

 

    • “உங்களுக்கு யார் கதை பிடிக்கும்?” என்று கமலம் கேட்டாள்.

 

    • “எனக்கு எழுத்தாளர் எல்லோருமே நண்பர்கள். அதனால் எல்லோருடைய கதையும் பிடிக்கும்” என்றான் அவன்.

 

    • “அப்படியானால்-” கல்யாணி இழுத்ததை ஊகித்துக் கொண்ட கமலம், “உங்களுக்குச் சுந்தரேசன் என்ற எழுத்தாளரைத் தெரியுமோ?” என்று கேட்டாள். “நன்றாகத் தெரியும்” என்று பதில் வந்தது. “இவள் சொல்கிறாள்; அது அவருடைய சொந்தப் பெயராக இருக்காது என்கிறாள்” என்று கமலம் சொன்ன பொது, “அட! அது எப்படி உனக்குத் தெரிந்தது?” என்று கல்யணியையே கேட்டான் ராமகிருஷ்ணன். அவன் ஆச்சரியத்துள் மூழ்கினான்.

 

    • “அவர் எழுத்திலிருந்து ஊகித்தேன்” என்றாள் கல் யாணி. தன ஜோசியம் பளித்ததைப் பற்றி அவளுக்கு உள்ளூர மகிழ்ச்சி பொங்கியது. “அப்படியானால் அவளுடைய சொந்தப் பெயர் என்ன?” என்று கமலம் கேட்டாள்.

 

    • “அவனுடைய பெயரைத்தானே கேட்கிறாய்?” “அவன் ஏது?” “நீ கேட்பது எனக்கு விளங்க வில்லையே!” “கல்யாணியின் ஊகம உங்களுக்குப் புரிந்ததோ? யாரோ ஒரு பெண்தான் அந்தப் புனைபெயரில் எழுதுகிறாள் என்றல்லவா அவள் சொல்கிறாள்?” என்று கமலம் விஷயத்தை விளக்கினாள்.

 

    • அதைக் கேட்டவுடன், “பெண்ணா?” என்று ராமகிருஷ்ணன் இடிஇடி யென்று சிரித்தான். “நல்ல ஜோசியம்! ஏன் அப்படி எண்ணினாய்?” என்று கல்யணியைக் கேட்டான் அவன். கமலமே கல்யாணியின் கட்சியை விளக்கினாள். பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த ராமகிருஷ்ணன், “இன்று எனக்கு ஒரு லாபம் கிடைத்தது” என்றான். “என்ன லாபம்?” “இனிமேல் நான் சுந்தரி என்ற புனைபெயரில் எழுதலாம் என்று தோன்றுகிறது.”

 

    • “நீங்கள் கதை எழுதுவீர்களா?” என்று கல்யாணி ஆவலோடு கேட்டாள். “மாமா அறிந்த ராமகிருஷ்ணனும், பத்திரிகையில் எழுதும் சுந்தறேசனும், நீ ஊகித்த சுந்தரியும் அடியேன் தான்!” என்று சொல்லி அவன் சிரித்தான். “அடடே, அப்படியா சமாசாரம்?” என்று நாராயணனும் கூடச் சிரித்தார்; கமலமும் சிரித்தாள். கல்யாணி மாத்திரம் சிரிக்கவில்லை. கல்யாணி தன்னுடைய எழுத்தில் எவ்வளவு மோகம் கொண்டிருக்கிறாள் என்பதை ராமகிருஷ்ணன் உணர்ந்து கொண்டான். தன கருத்தை அவன் எவ்வளவு அழகாகக் கதைகளில் எழுதுகிறான் என்று அவள் ஆச்சரியப் பட்டால். அவளை அறியாமலே அவள் மனம் அவனிடம் தாவியது. ராமகிருஷ்ணன் சென்னைக்குப் போனான். கல்யாணி நாமக்கல் போனாள்.

 

    • கல்யாணி இப்போது அம்மாவுடன் வாதம் செய்வதை நிறுத்தி விட்டாள். அப்பாவிடம், “கல்லூரிப் படிப்பில் வீண் செலவாகும்; அதனால் உங்களுக்கும் கஷ்டம்” என்று மாத்திரம் சொன்னாள். அறிவாளியாகிய அவர் தம மகளின் மனமாற்றத்தைத் தெரிந்து கொண்டார். மேலே விசாரணை செய்தார். திருச்சிக்குப் போய்த் துப்பறிந்தார். கல்யாணிக்குக் கல்யாணம் செய்யும் முயற்சியைத் தொடங்கினார். ராமகிருஷ்ணனுக்கும் கல்யாணிக்கும் ஒரு சுப முகூர்த்தத்தில் கல்யனமாயிற்று. அவள் சென்னை வாசியானாள்.

 

    • * * * *

 

    • கல்யாணியும் ராமகிருஷ்ணனும் நாமக்கல்லுக்கு வந்திருந்தார்கள். அவள் இப்போது தாய்மைப் பருவத்தை அடைந்திருந்தாள். அவள் தாய் அவளைக் கண்டு பூரித்துப் போனாள். அவள் விரும்பியது நிறைவேறிவிட்டது.

 

    • பக்கத்து வீட்டுக்காரியோடு கல்யாணியின் தாய் பேசிக் கொண்டிருந்தாள். ஏதோ பேச்சு வந்தது. “அப்படித்தான் சிறு பெண்ணாக இருக்கும்போது தோன்றும். வயசு வந்நால் மாறிவிடும். எங்கள் கல்யாணி எவ்வளவு லூட்டி அடித்தாள்! கல்யாணமே பண்ணிக்கொள்ளப் போவதில்லை என்று பிடிவாதமாகச் சொன்னாள். அப்படிப் பண்ணிக்கொண்டாலும் உத்தியோகம் பார்ப்பேன் என்று வீறாப்புப் பேசினாள். இப்போது…” என்று அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த கல்யாணி அங்கிருந்தபடியே, “இப்போது நான் உத்தியோகம் பார்க்கத்தான் பார்க்கிறேன்” என்று சொன்னாள்.

 

    • திடுக்கிட்ட தாய் அவளைப் பார்த்து, “அது என்ன கூத்து? என்ன உத்தியோகம் பார்க்கிறாய்?” என்று கேட்டாள்.

 

    • “குமாஸ்தா உத்தியோகம்.”

 

    • “எங்கே?”

 

    • “வீட்டிலேதான். அவர் கதை சொல்கிறார்; நான் எழுதுகிறேன். அவருக்கு நான் குமாஸ்தா!” என்று சொலிலிவிட்டுப் புன்னகை பூத்தாள் கல்யாணி.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கீரைத் தண்டு – கி.வா. ஜகன்னாதன்கீரைத் தண்டு – கி.வா. ஜகன்னாதன்

புதிய வீட்டில் சுற்றிலும் செடி கொடிகளைப் போட வேண்டும் என்பது விசாகநாதனின் ஆசை. கண்ட கண்ட செடிகளைப் போட்டால் யாருக்கு என்ன லாபம்? கறி வேப்பிலை மரம் அவசியம் இருக்க வேண்டும். பசலைக் கொடியும் அவசியந்தான்; எப்போதும் கொத்தமல்லி கிடைக்கும்படி இரண்டு

5 + 55 + 5

“அம்மா டிபன் பாக்ஸ் கட்டினியா” கத்தினாள் வசந்தி. “எல்லாம் ரெடி… மத்தியானம் சாப்பிட தக்காளி சாதம், முட்டை பொரியல் வச்சிருக்கேன். இன்னைக்காவது முழுசா சாப்பிடு”   “சரிம்மா… மத்யானம்  ஸ்பெஷல் க்ளாஸ் வச்சிருக்கேன். ஒவ்வொரு க்ளாஸ் பிள்ளைகளும் சாப்பிட்டுட்டு பத்து கணக்கு போடணும். இதுனால

இது காதலா?இது காதலா?

வணக்கம் பிரெண்ட்ஸ், தனது  ‘இது காதலா’ சிறுகதை மூலம் நம் மனதைக் கொள்ளை கொள்ள வந்திருக்கும் எழுத்தாளர் உதயசகி அவர்களை வரவேற்கிறோம். காதலில்லாமல் மணந்த திவ்யா ப்ரணவ் இருவரும் தங்கள் வழி செல்லத் தீர்மானிக்கின்றனர். அவர்கள் நினைத்தபடி பிரிய முடிந்ததா ? இல்லை மஞ்சள்