Tamil Madhura சிறுகதைகள் ஜடை பில்லை – கி.வா. ஜகன்னாதன்

ஜடை பில்லை – கி.வா. ஜகன்னாதன்

    • 1

 

    • பொழுது போகவில்லை யென்று என் பெட்டியை ஒழித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பெட்டியில் ஒடிந்த நகைகளும் தங்கக் காசுகளும் கிடந்தன. அப்போதுதான் அந்த ஜடைபில்லையைக் கண்டேன். அதை எங்கே வைத்திருந்தேனோ என்று யோசித்துக்கொண்டிருந்தாலும், இந்தப் பெட்டியை மேலே இருந்து இறக்கிப் பார்க்கச் சோம்பல் இடங் கொடுக்கவில்லை. இப்போதுதான் ஒழிந்தது.

 

    • அவன் – பிள்ளையாண்டான் – காலேஜுக்குப் போயிருந்தான். அவர் எங்கேயோ வியாபார விஷயமாக வெளியூர் போயிருந்தார். இந்த நேரத்தில் வழக்கமாக வந்து பேசிக்கொண்டிருக்கும் சொக்கநாயகி இன்று என்னவோ வரவில்லை. அவர்களுக்கும் வேலை இல்லையா?

 

    • அவருடைய கடையில், நாகரிகமாகச் சொன்னால் கம்பெனியில், முக்கியமான வேலைக்காரர் நாகநாத ஆசாரியார். சாதிப்பட்டத்தை விட்டுவிட்டு நாகநாதன் என்று கூப்பிட அவர் விரும்புவதில்லை. “எங்கள் தொழிற் சிறப்பைக் காட்டும் பட்டும் அது” என்று பெருமையோடு சொல்லிக் கொள்வார். ஆனால் அவர் என்னவோ குலத்தொழிலை விட்டு விட்டுக் கம்பெனி குமாஸ்தாவாகத்தான் இருக்கிறார். அவருடைய மனைவி சொக்கநாயகி. அவளுக்கு இந்தக் காலத்து நாகரிகம் அவ்வளவாகத் தெரியாது. சாது; உபகாரி.

 

    • பக்கத்துத் தெருவில் குடியிருந்தபடியால் அடிக்கடி வந்து கவனித்துக்கொள்வாள். எங்கள் வீட்டு வேலைக்காரி மகா ராங்கிக்காரி. எதிலும் வெட்டு ஒன்று. துண்டு இரண்டு தான். பற்றுப் பாத்திரம் தேய்க்கிறது, வீடு பெருக்குகிறது

 

    • இவற்றைத் திட்டமாகச் செய்வாள். அதற்குமேல் எது செய்யச் சொன்னாலும் காசைக் கீழே வை என்பாள். விறகுக் கடையிலிருந்து விறகு கொண்டுவர வேணுமா, தனியே இரண்டணாக் கொடுக்கவேண்டும்; கோதுமை அரைத்து வரவேணுமா, அரையணாவாவது கொடுக்க வேணும்; ஏதாவது அரைக்கச் சொன்னால் தனிக் கூலி. கடை கண்ணிக்குப் போய் வா என்று சொல்லிவிட்டால் போதும்; அவள் முணுமுணுப்பைச் சொல்லி முடியாது.

 

    • கம்பெனியில் வேலை செய்யும் வேலைக்காரர்களிடம் நான் ஒரு வேலை சொல்லக்கூடாது. அப்படி அவர் திட்டம் பண்ணியிருந்தார். இப்படியானால் வேலை எப்படி நடக்கும்? இந்த நிலையில் எனக்குச் சமய சஞ்சீவியாகச் சொக்கநாயகி வந்து சேர்ந்தாள். கலகலவென்று பெசுவாள். அவளுக்கு ஒளிவு மறைவு என்பதே இல்லை.

 

    • ஒருநாள், “உன் புருஷர் ஏன் பொன் வெள்ளி வேலையை விட்டுவிட்டார்?” என்று கேட்டேன்.

 

    • “விடுகிறதாவது, அம்மா? அவர் அதைத் தொடவே இல்லையே! அவர் தகப்பனார் அவரைப் பள்ளிக்கூடத்தில் படிக்கவைத்தார். அப்போதிலிருந்தே அவருக்குத் தொழில் என்றால் வெறுப்பாம். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. தொழிலுக்குக் கௌரவம் உண்டு என்று அடிக்கடி சொல்லிக்கொள்கிறார். ‘நான்கூடத் தொழில் பழகி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என்றுகூடச் சில சமயம் வேதனைப்பட்டுக்கொள்வார்” என்றாள் அவள்.

 

    • அந்தச் சொக்கநாயகி இன்று வரவில்லை. ஏதோ நினைத்துக் கொண்டேன். மேலே இருந்து பெட்டியைக் கீழே கூடத்துக்குக் கொண்டுவந்து வைத்துக்கொண்டு திறந்து பார்த்தேன். எங்கே வைத்துவிட்டேனோ என்று கவலைப் பட்டுக்கொண்டிருந்த ஜடைபில்லையைக் கண்டேன்.

 

    • அதைக் கண்டவுடனே அம்மா ஞாபகந்தான் வந்தது. எத்தனை அன்பாக அதை எனக்குக் கொடுத்தாள்! “சுந்தரி, இந்த ஜடைபில்லை ஆகி வந்தது. இதை ஜாக்கிரதையாக வைத்துக்கொள். இந்தச் சிவப்புக் கல் எங்கும் கிடைக்காது. இதை நான் தலையில் வைத்துக்கொண்டு நவராத்திரி ஜோத்திரைக்குப் போனேன். அப்போது உங்கள் அப்பா என்னைக் கண்டார். அப்புறம் கல்யாணம் ஆயிற்று. இதைப் பிரித்துவிடாதே! கல் நன்றாக இருக்கிறதென்று பிரித்து மோதிரம், கடுக்கன் என்று செய்யத் தோன்றும். இதைப் பிரிக்காமலே வைத்திரு. உன் மூத்த பெண்ணுக்கு இதைச் சூட்டி அழகு பார். அவளுக்கே பிற்காலத்தில் கொடுத்துவிடு…” அவள் என்ன என்னவோ சொன்னாள். வரும் காலத்தை ஒவ்வொருவரும் தம் கையில் வைத்துக் கொள்ளத்தான் ஆசைப்படுகிறார்கள்; திட்டம் போடுகிறார்கள். ஆனால் இது நம்மிடம் அகப்படுவதில்லையே!

 

    • என்னுடைய மூத்த பெண்ணுக்கு கொடு என்று அம்மா உபதேசம் செய்தாள். மூத்த பெண்ணா? எனக்கு ஒரே ஒரு பெண்தான் பிறந்தாள். அம்மாவுக்கு அது தெரியும். ஆனால் அந்தக் கடன்காரி பன்னிரண்டு வருஷம் வளர்ந்து தன் கடனை வாங்கிக்கொண்டு போய்விட்டாள். அப்புறந்தான் எத்தனையோ தவம் பண்ணிச் சிவகுமாரன் பிறந்தான். ஆமாம். அவள் போகிறபோது இவன் வயிற்றில் இருந்தான்.

 

    • ஜடைபில்லையை எந்தப் பெண்ணுக்குக் கொடுப்பது? சுவாமி என்னை வாழைமரத்தைப்போல வைத்துவிட்டார். ஒரு குலை தள்ளியதோடு நிற்கிறதல்லவா வாழை? சே சே! எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தார்களே! இருந்தாலும் உருப்படியானது – முருகா, சண்முகா, குழந்தை தீர்க்காயுசாக இருக்கவேண்டும்.

 

    • என்னவோ சொல்லவந்தேன்; மனசு எப்படி எப்படியோ தாவுகிறது. அம்மாவுக்கு ஜோசியம் தெரிந்திருந்தால் அப்படி எல்லாம் சொல்லியிருக்க மாட்டாளோ என்னவோ! இந்த ஜடைபில்லையைப்பற்றிச் சொல்லும்போது அவள் எவ்வளவு மகிழ்ந்துபோனாள்! சேந்தமங்கலத்தில் இதைச் செய்த ஆசாரி வரப்பிரசாதியாம். தெய்வங்களுக்குத் திருவாபரணம் செய்வதில் மிகவும் கெட்டிக்காரனாம். அவனிடம் மனுஷர்களுக்கு நகை செய்து தரும்படி கேட்கவே பயப்படுவார்களாம். யாருடைய இஷ்டத்துக்கும் வசப்பட மாட்டானாம். தானே மனசு இசைந்து யாருக்காவது ஏதாவது செய்துகொடுத்தால் அவர்கள் அமோகமாக வாழ்வார்களாம்!

 

    • அம்மா வக்கணையாகத்தான் சொன்னாள். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. அம்மாவுக்கு முன்னாலே அப்பா போய்விட்டார். ஜடைபில்லை அவளுக்கு நீண்ட மாங்கிலிய பலத்தைத் தரவில்லையே! அது கிடக்கட்டும். நான் வாங்கிக் கொண்டேனே! எனக்கு ஒரு பெண் பிறந்தாளே; அவள் இருந்தாளா?

 

    • இந்த எண்ணங்களை யெல்லாம் அந்தக் காலத்தில் நான் எண்ணவில்லை. அம்மா தந்ததை ஆசையோடுதான் வாங்கி அணிந்துகொண்டேன். ஜடைபில்லை என்னவோ அழகான வேலைப்பாடு உள்ளதுதான். அன்னம் தன் மூக்கில் ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டிருக்கிறது போல உள்ளே ஒரு சிற்பம். அந்தக் காலத்தில் பழைய சிவப்புக்கு மோஜு அதிகம்; எந்த வீட்டுக்குப் போனாலும் அந்த வீட்டு அம்மாள் என்னை நிறுத்தி என் தலையைக் குனியச் செய்து அதைப் பார்ப்பாள். அப்போதெல்லாம் எனக்கும் பெருமை தாங்காது.

 

    • ஹூம்! அதெல்லாம் பழைய கதை. நான் புக்ககத்துக்கு வந்த பிறகும் அதை அணிந்து கொண்டேன். நாளடைவில் சிவப்புக்கு மதிப்புக் குறைந்தது. வைரம் எங்கும் டாலடிக்க ஆரம்பித்துவிட்டது. போலி வைரங்களும் வந்துவிட்டன. விலையிலே எவ்வளவு உயர்ந்ததானாலும் பழைய சிவப்பைத் தீண்டுவார் இல்லை; மட்டமான ரங்கூன் வைரத்துக்கு முன்புகூட அதற்குச் செலவாணி இல்லாமற் போயிற்று. நான் எப்போதாவது இதைத் தலையில் வைத்துக் கொள்வேன். பெண் பிறந்த பிறகு அவளுக்கு வைத்தேன். “என்ன அம்மா இது, கர்நாடகம்!” என்று அவள் சொல்வாள். ஆனாலும் எனக்காக வைத்துக்கொள்வாள். ஆமாம், நான் சொன்னால் அது அவளுக்கு வேதம். எதற் கெடுத்தாலும், ‘அம்மா அதைச் செய்யட்டுமா’. ‘அம்மா அதை வாங்கட்டுமா’, ‘அம்மா எனக்கு அது வாங்கித்தா’- இப்படியே ஒரு நாளைக்கு நூறு தரம் அம்மாவைக் கூப்பிட்டுவிடுவாள். அவள் அழகும் சூட்டிகையும் அறிவும் என்னிடம் உள்ள அன்பும் – எதைக் கண்டாலும் ஆசை! எதற்காகத்தான் அப்படி ஆசைப்பட்டாளோ! ‘நான் சீக்கிரம் போய்விடுவேன்; அதற்குள் எல்லாம் பார்த்துவிட வேண்டும்’ என்றுதான் அப்படி ஆசைப்பட்டாளோ? பாவி எனக்கு அப்போது ஒன்றும் தெரியவில்லை.

 

    • ஹூம்! மறுபடியும் எங்கேயோ போய்விட்டேனே! இந்தப் பாழும் மனசு எத்தனை நாளானாலும் மறக்காது போல் இருக்கிறது.

 

    • அன்றைக்கு அவளைக் கட்டையிலே வைத்துவிட்டு இதைப் பெட்டியிலே போட்டதுதான். சரியாகப் பதினெட்டு வருஷங்கள் ஓடிவிட்டன. இதைப் பார்த்தால் அம்மா ஞாபகம் வருகிறது. அதோடு அவள் நினைவும் வருகிறது.

 

    • சிந்தனையிலே என்னை மறந்து பெட்டியைத் திறந்து வைத்தபடியே உட்கார்ந்து கொண்டிருந்தேன். “அம்மா!” என்று கூப்பிட்டபடியே சொக்கநாயகி வந்தாள். “ஏண்டி இன்றைக்கு இவ்வளவு நேரம்?” என்று கேட்டேன்.

 

    • “அவர் சாப்பிட்டுவிட்டு உடனே போகிறவர், கொஞ்ச நாழிகை தங்கிப் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்கு முன் தான் கடைக்குப் போனார்” என்றாள். எத்தனைதரம் நான் கம்பெனி என்று சொல்லித் தந்தாலும் அவள் கடை என்று தான் சொல்கிறாள். அது புத்தகக் கடைதானே?

 

    • “இருந்திருந்து இந்த வயசில் என்ன அப்படி இங்கிதமான பேச்சு?” என்று புன்னகை பூத்தபடியே கேட்டேன்.

 

    • “போங்கள், அம்மா! என் மகள் மீனாட்சியின் கல்யாணத்தைப் பற்றிப் பேசினார். யாரோ தூரத்து உறவில் சேலம் ஜில்லாவில் சேந்தமங்கலம் என்ற ஊரில் ஒரு பையன் இருக்கிறானாம். அவன் தொழிலில் கெட்டிக்காரனாம். இப்போதுதான் இவருக்குத் தொழிலில் மதிப்பு வந்திருக்கிறதே. அவன் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவனாம். அவனுக்கே மீனாட்சியைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிடலாம் என்று சொன்னார்.”

 

    • “ஓஹோ! கல்யாணம் கூடுகிறது. நல்லது; சுவாமி நல்லபடியாகக் கல்யாணம் நடத்தவேண்டும்” என்றேன்.

 

    • “இதென்ன, பெட்டியைத் திறந்து போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே!’ என்று சொக்கநாயகி கேட்டாள்.

 

    • “நீ வரவில்லை. இதில் எதையோ தேடுவதற்காக எடுத்து வைத்துக்கொண்டேன்; என்ன என்னவோ ஞாபகம்!”

 

    • “எதைத் தேடினீர்கள்?”

 

    • பழைய கதையை அவளுக்குச் சொல்ல நாக்கு எழுந்தது. ஆனால் அடக்கிக்கொண்டேன். அவள் கல்யாணச் செய்தியைச் சுபமாக வந்து சொல்கிறாள்; இந்தச் சமயத்தில் நாம் நம் அழுகையைச் சொல்வதாவது!

 

    • ஆனாலும் அந்த ஜடை பில்லையை எடுத்து அவளுக்குக் காட்டினேன். அதை அவள் கையில் வாங்கிப் பார்த்தாள். நான் பெட்டியை மூடி உள்ளே வைத்துவிட்டு வந்தேன்.

 

    • “ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறதே!” என்றாள் அவள்.

 

    • “எங்கள் அம்மா கொடுத்தது. ஒன்றரைப் பவுன் தங்கம் போட்டுச் செய்ததாம். இதை அழிக்கக்கூடாதென்று வைத்திருக்கிறேன்… வந்து … அந்தப் பிள்ளையாண்டான் எந்த ஊர்க்காரன் என்று சொன்னாய்?”

 

    • “சேந்தமங்கலமாம்.”

 

    • “அடே, அதே ஊர்தான் போல் இருக்கிறது!”

 

    • “என்ன அம்மா சொல்கிறீர்கள்? உங்களுக்கு அந்த ஊர் தெரியுமா?”

 

    • நான் சற்றுச் சிந்தனையில் ஆழ்ந்தேன். “சேந்தமங்கலந்தானே? இந்த ஜடைபில்லையைக்கூட அந்தச் சேந்தமங்கலத்தில்தான் யாரோ பண்ணினார்களாம்” என்றேன்.

 

    • “அப்படியா, ஆச்சரியமாக இருக்கிறதே, அம்மா! இது நல்ல சகுனமாகக்கூடத் தெரிகிறது. நான் சேந்தமங் கலத்துப் பிள்ளையைப்பற்றிச் சொல்லவந்தேன். நீங்கள் சேந்தமங்கலத்து ஜடைபில்லையைக் காட்டுகிறீர்கள்!” அவள் காணாததைக் கண்டது போல ஆச்சரியத்தில் மூழ்கிப் போனாள்.

 

    • ஐயோ பாவம்! இதன் பூர்வ கதையை அவள் அறிந்தால்? அவளுக்கு எதற்கு அது தெரியவேணும்? அவள் அடைகிற சந்தோஷத்தை நாம் அதிகமாக்க முடியாவிட்டாலும் அதைக் கெடுப்பானேன்?

 

    • 2

 

    • ஒரு வாரம் கழித்துச் சொக்கநாயகி வந்தாள். “ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள்; சீக்கிரம் செய்து விட்டு வீட்டுக்குப் போகவேண்டும்” என்றாள். என்னிடம் உள்ள அன்பினால் எனக்கு உதவி செய்வது அவள் இயல்பு. கடைக்குப் போய் ஏதாவது வாங்கி வருவாள்; சாமான்களை ஒழுங்கு பண்ணி வைப்பாள்.

 

    • “ஏன் இந்த அவசரம்?” என்று கேட்டேன்.

 

    • “நாளைக்கு அந்தப் பிள்ளை வருகிறார். பெண்ணைப் பார்க்க வேண்டுமாம்; மீனாட்சியைப் பார்த்துவிட்டு வேண்டாமென்று சொல்ல ஆள் இருக்கிறானா? வருகிறவர்களுக்கு உபசாரம் செய்ய வேண்டும்; அது சம்பந்தமான வேலை இருக்கிறது. அதோடு…” என்று அவள் இழுத்தாள்.

 

    • “என்ன தயங்குகிறாய்? சொல்” என்றேன்.

 

    • “அவர்கள் வரும்போது இவளுக்கு அலங்காரம் பண்ணிக் காட்ட வேண்டாமா? அதற்கு ஏதாவது நகை இருந்தால் கொடுங்கள். பிறகு திருப்பித் தந்துவிடுகிறேன். முக்கியமாக அந்த ஜடை பில்லையை…”

 

    • “அது எதற்கடி பைத்தியம்? கர்நாடக நகையல்லவா அது?” என்றேன். அதன் கதை தெரிந்தால் அவள் கேட்பாளா?

 

    • “இல்லை, அம்மா, அது ரொம்ப அழகாக இருக்கிறதம்மா. இவளுக்குப் புதுச் சிவப்பில் அப்படி ஒன்று பண்ணிப் போடவேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. எங்கள் ஜாதியில் ஜடைபில்லை யென்றால் மதிப்பம்மா” என்று கெஞ்சினாள்.

 

    • அவள் எனக்குச் செய்துவரும் உபகாரத்துக்கு இது எம்மாத்திரம்! ஆனால் நான் செய்வது உபகாரமாக இல்லாமல் – கடவுளே, முருகா! நீதான் காப்பாற்றவேண்டும், இந்த ஜடைபில்லையினால் ஒன்றும் நேராமல் நீ துணையிருக்க வேண்டும்.

 

    • மனசு தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டு தவித்தாலும், அவ்வளவு ஆசையாகக் கேட்கும்போது மறுக்க முடியவில்லை. முருகனை நினைத்துக்கொண்டு கொடுக்கத் துணிந்துவிட்டேன்.

 

    • “உனக்கு இல்லாமல் எதற்கு வைத்திருக்கிறேன்? ஏதோ இருக்கிற நகைகளைக் கொடுக்கிறேன். ஆண்டவன் அருளால் மீனாட்ச்சிக்கு நல்ல இடம் கிடைத்துச் சௌக்கியமாக வாழட்டும்.”

 

    • “நல்லதம்மா, நாளைக்குக் காலையில் வந்து வாங்கிக் கொள்கிறேன்” என்று சொல்லி அவள் போய்விட்டாள். மறுநாள் ஓர் ஒற்றைவடம் சங்கிலி, ஒரு ஜோடி வளை, அந்த ஜடை பிள்ளை, ஒரு மோதிரம், எல்லாம் வாங்கிக் கொண்டு போனாள். அதற்கு மறுநாளே பத்திரமாக எல்லாவற்றையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டாள்.

 

    • என்னடி சமாசாரம்? மாப்பிள்ளை எப்படி இருக்கிறான்? அவனுக்குப் பெண் பிடித்திருக்கிறதா? கல்யாணம் எப்போது எங்கே நடக்கிறது?” என்று கேட்டேன்.

 

    • “பிள்ளை தங்கமானவர். என்ன அமரிக்கையாகப் பேசுகிறார்! நிறம் கொஞ்சம் மாநிறந்தான். ஆனால் மூககும் முழியுமாக இருக்கிறார். அநேகமாகக் கல்யாணம் தீர்மானம் ஆனபடிதான். அதைப்பற்றி இனிமேல்தான் இவர் எழுதித் தெரிந்துகொள்ளவேணும். வந்தவர்கள் நேற்றே ஊருக்குப் போய்விட்டார்கள்.”

 

    • “மீனாட்சிக்கு அவனைப் பிடித்திருக்கிறதா?”

 

    • “அதெல்லாம் எங்களுக்குத் தேவை இல்லை. அவளுக்கு என்று தனியே ஒன்று உண்டா, அம்மா? எங்களுக் குத் தெரியாததை அவள் என்ன காணப் போகிறாள்? நாங் கள் நல்லதைத்தான் செய்வோம்?”

 

    • “என்னடி சொக்கு, பத்தாம் பசலிப் பேச்சைப் பேசுகிறாய்? இந்தக் காலத்தில் பெண்ணும் பிள்ளையும் ஒருவரோடு ஒருவர் பேசித் தெரிந்துகொண்டு கல்யாணம் செய்வதல்லவா நாகரிகம்?”

 

    • “அதெல்லாம் எங்களுக்கு வேண்டாம், அம்மா. அந்த நாகரிகம் இல்லாமல் நாங்கள் ஒன்றும் கேட்டுப் போக வில்லை. நீங்கள் உங்கள் வீட்டு ஐயாவோடு முன்னாலே பேசித்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டீர்களோ?” துப்பாக்கியை என் பக்கமே திருப்பிவிட்டாள்.

 

    • “அது பழைய காலம்!” என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.

 

    • “அது போதும்” என்று அவள் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள்.

 

    • “என்ன, விஷயத்தைச் சொல்லாமல் போகிறாயே! கல்யாணம் எப்போது வைத்திருக்கிறீர்கள்?”

 

    • “அதெல்லாம் இனிமேல் தான் தெரிய வேண்டும். உங்களுக்குத் தெரியாமல் நடந்துவிடுமா, அம்மா?”

 

    • அவள் போய்விட்டாள். ஜடை பில்லை அணிந்த நேரம் தீய நிமித்தமின்றிக் கல்யாணம் சுபமாக முடிய வேண்டுமே என்று நான் ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொண்டேன்.

 

    • 3

 

    • கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. இந்தத் தையிலேயே நடத்திவிடுவதாகத் தீர்மானம் செய்தார்கள். எங்கள் எசமானர், நாகநாத ஆசாரியாருக்கு – சொக்கநாயகியின் கணவர்தாம் – வேண்டிய உதவி செய்வதாக ஒப்புக் கொண்டார். கல்யாணத்தைப் பெண் வீட்டிலே செய்வதாக ஏற்பாடு. ஆகையால் நாகநாதருக்குப் பொறுப்பு அதிகமாயிற்று. சொக்கநாயகி விழுந்து விழுந்து வேலை செய்தாள். அடிக்கு ஒரு தரம், “நீங்கள் நகை கொடுத்த நேரம் இந்தக் கல்யாணம் நடக்கிறது!” என்று சொன்னாள் அவள். “கல்யாணம் நிறைவேறட்டும்” என்று நான் சொன்னேன்.

 

    • கல்யாணத்துக்கும் நான் இரவல் தந்தேன். அவர்களும் புதிய நகைகளைச் செய்திருந்தார்கள். முக்கியமாகப் புதிய சிவப்பில் ஒரு ஜடைபில்லை செய்து போட்டிருந்தார்கள். ஆகையால் இந்த ஜடைபில்லையைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று. ‘நல்ல வேளை!” என்று நான் ஆறுதல் பெருமூச்சு விட்டேன். குறிப்பிட்ட சுப முகூர்த்தத்தில் மீனாட்சிக்கும் சேந்தமங்கலம் வரதப்பனுக்கும் கல்யாணம் நடைபெற்றது. கல்யாணத்தின்போது நானும் இவரும் சிவகுமாரனும் நாகநாத ஆசாரியார் வீட்டிலேயே இருந்தோம்.

 

    • முகூர்த்தம் முடிந்தவுடன் நான் தாம்பூலம் வாங்கிக் கொண்டு வந்துவிட்டேன். “ஏதாவது வேணுமானால் சொல்லியனுப்பு” என்று சொக்கநாயகியிடம் சொல்லி வந்தேன்.

 

    • சாயங்காலம் ஆறு மணி இருக்கும். சுவாமிக்கு முன் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்தேன். சொக்க நாயகி வெகு வேகமாக வந்தாள். படபடப்புடன் வந்து கையைப் பிசைந்துகொண்டே, “அம்மா, அம்மா! நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று கவலைக் குறியோடு சொன்னாள்.

 

    • “என்னடி வந்து விட்டது?” என்று கேட்டேன்.

 

    • “அம்மா நான் எதைச் சொல்லட்டும்? நீங்கள் முன்பு கொடுத்தீர்களே, அந்த ஜடைபில்லை வேண்டும். எங்களுக்கே வேண்டும். அதன் விலை எவ்வளவு ஆனாலும் தந்துவிடுகிறேன்.”

 

    • எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அந்த ஜடைபில்லை காரணமாக ஏதோ குழப்பம் நேர்ந்திருக்கிறது என்பதை ஊகித்துக்கொண்டேன். என் வயிறு பகீரென்றது.

 

    • “என்னடி சொல்கிறாய்? நிதானமாகச் சொல்லேன்” என்றேன். அவள் சொன்னாள்.

 

    • கல்யாணம் எல்லாம் ஆனபிறகு மாப்பிள்ளை வரதப்பன் மீனாட்சியைத் தனியே அழைத்தானாம், ஏதோ பேச வேண்டுமென்று. அவள் வெட்கப்பட்டாளாம். “உன் அம்மாவையும் அழைத்துக்கொண்டு வா” என்றானாம். அம்மாவுக்கும் வெட்கம். கடைசியில் நாகநாத ஆசாரியும் மீனாட்சியும் போனார்கள். “அந்த ஜடைபில்லை எங்கே?” என்று கேட்டான். நாகநாதருக்கு ஒன்றும் விளங்கவில்லை. மறைவில் இருந்தபடியே கவனித்த சொக்கநாயகி அங்கிருந்தபடியே பதில் சொன்னாளாம். “அது ஐயா வீட்டது” என்றாளாம். மாப்பிள்ளை எப்படியாவது அது வேண்டும் என்றானாம். ” அது கிடைக்கும் என்றுதான் உங்கள் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள ஒப்புக் கொண்டேன்” என்றானாம். இப்படியும் உண்டோ?

 

    • இதை அவள் சொல்லி அழாக் குறையாகக் கெஞ்சினாள்; “என்ன விலையானாலும் கொடுத்துவிடச் சொல்கிறேன்” என்று சொல்லும்போது அழுகையே வந்து விட்டது.

 

    • “என்ன இது? அசடே! அழாதே. இது என்ன பிரமாதம்? இல்லாததைக் கேட்காமல் இருக்கிறதைக் கேட்டானே, அதற்குச் சந்தோஷப்படு. அதைப் போய் எதற்காக அவ்வளவு ஆசையாகக் கேட்கிறான்?”

 

    • “அவர் கல் வேலையில் கெட்டிக்காரராம். அது நன்றாக இருக்கிறதாம்…” அவளால் பேச முடியவில்லை.

 

    • நான் சிறிது யோசித்தேன். ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். விறுவிறுவென்று உள்ளே போனேன். அந்த ஜடை பில்லையைக் கொண்டு வந்து முருகன் சந்நிதானத்தில் வைத்து நமஸ்காரம் செய்தேன். “இந்தா சொக்கு, நீயும் நமஸ்காரம் செய்து இதை எடுத்துக்கொள்” என்றேன்.

 

    • அவள் நமஸ்காரம் செய்துவிட்டு, “நீங்களே உங்கள் கையால் தாருங்கள்” என்றாள்.

 

    • நான் முருகனைத் தியானித்துக்கொண்டே அதை எடுத்தேன்; “சொக்கு, ஆண்டவன்தான் இப்படி ஒரு திருவிளையாடலைச் செய்திருக்கிறான். இந்த ஜடைபில்லையை மீனாட்சிக்குக் கல்யாணச் சீதனமாக நான் கொடுக்கிறேன். அவள் என் பெண். என்னுடைய அம்மா தந்தது இது. அவள் பேரும் மீனாட்சி. தன் பேரையுடைய பேத்திக்கு இது உரிமையாவதில் அவள் ஆத்மா சாந்தி அடையும். எடுத்துப் போய் மீனாட்சிக்குக் கொடு. அவள் மகராஜியாய் வாழட்டும்.” நான் ஆவேசம் வந்தவளைப் போலப் பேசினேன்.

 

    • “என்ன அம்மா இது? விலைக்கு வாங்கிக்கொள்ளத்தான்….”

 

    • “அதைப்பற்றிப் பேசாதே. போய் முதலில் காரியத்தைக் கவனி.”

 

    • 4

 

    • மீனாட்சி கருவுற்றிருந்தாள். அவளை வரதப்பன் அழைத்துக்கொண்டு வந்திருந்தான். “அம்மா, உங்கள் பெண் நாளைக்கு உங்கள் மருமகப் பிள்ளையோடு வரப் போகிறாள்” என்று முதல் நாளே சொக்கநாயகி சொன்னாள். ஆம், என் நிபந்தனைகளை அவள் ஒப்புக்கொண்டு விட்டாள்.

 

    • ‘என் பெண்’ மீனாட்சி வந்தாள். வரதப்பனுடன் பேசிப் பழகினேன். நல்ல பிள்ளை; சாமர்த்தியசாலி.

 

    • ஒருநாள் வீட்டுக்கு வந்திருந்தான். பேசிக் கொண்டிருந்தான். “ஏன் அப்பா, அந்த ஜடை பில்லையை ஜாக்கிரதையாக வைத்திருக்கிறாயா?”என்றேன்.

 

    • “ஜாக்கிரதையான இடத்தில் இருக்கிறது” என்றான்.

 

    • “ஆமாம், அதைக் கொண்டுவந்து கொடுத்தால்தான் மறுகாரியம் என்று அன்று தடபுடல் பண்ணி விட்டாயாமே! அப்படிச் செய்யலாமா?” என்று கேட்டேன்.

 

    • “செய்யக் கூடாதுதான். ஆனால் நான் அதற்கு ஆசைப் பட்டதற்குக் காரணம் உண்டு. அது ஒரு கதை.”

 

    • சேந்தமங்கலம் வரதப்ப ஆசாரியார் பொற்கொல்லர்களில் சிறந்தவர். சாஸ்திரம் தெரிந்தவர. ஆலயங்களுக்கு வேண்டிய நகைகளைச் செய்கிறவர். அவருடைய பேரன்தான் இந்த வரதப்பன். வரதப்ப ஆசாரியார் ஒரு சமயம் அந்த ஊர் வரதராஜஸ்வாமி கோயில் தாயாருக்கு ஒரு ஜடை பில்லை செய்தார். ஒரு ஜமீன்தாருடைய பிரார்த்தனை அது. அவர் நல்ல சிவப்புக் கல்லாக வாங்கிக் கொடுத்தார். உறுதியான கட்டடமாக இருக்க வேண்டுமென்று சொன்னார். ஒன்றரைப் பவுனுக்கு மேலே தங்கம் போட்டு மிகவும் நன்றாக அன்னமும் கொடியுமாகச் சிற்பம் அமைத்துச் செய்தார். மிகவும் அழகாக இருந்தது நகை. அதைக் காணும்போது அவருக்கே அதில் ஆசை விழுந்தது. அப்போது அவர் புதிதாகக் கல்யாணம் செய்துகொண்டிருந்தார். தம் மனைவிக்கும் அப்படி அதே அச்சில் ஒன்று செய்து அணிய வேண்டும் என்று ஆசைப் பட்டார். கோயிலுக்கு நகையைச் செய்து கொடுத்துவிட்டார். சில வருஷங்களாகக் கல் சேர்த்துத் தம் மனைவிக்கும் அதே அச்சில் ஒன்று செய்து அணிவித்தார். ஆனால் அதை அணிந்த மறுவருஷம் அவர் மனைவி காலமாகி விட்டாள். தாயாருக்குச் செய்த நகையில் ஆசை வைத்ததற்குத் தண்டனை என்று எண்ணி அவர் வருந்தினார். இரண்டு குழந்தைகள் இருந்தமையாலும் வயசு நாற்பத்தைந்து ஆகிவிட்டபடியாலும் அவர் வேறு கல்யாணம் செய்துகொள்ளவில்லை. அதுமுதல் ஒரு விரதம் எடுத்துக்கொண்டார். ‘இனிமேல் நகை செய்வதானால் ஆலயங்களுக்குத்தான் செய்வது’ என்று அவர் தீர்மானித்தார். அவரிடம் கோயிலுக்குப் பின் கோயிலாக வந்துகொண்டே இருந்தது.

 

    • தம் மனைவி அணிந்திருந்த ஜடை பில்லையை அவர் யாருக்கோ விற்றுவிட்டார். அதைக் கண்டாலே அவருக்குப் பிடிக்கவில்லை.

 

    • “இந்தக் கதையை என்னுடைய தகப்பனார் எனக்குச் சொன்னார். ‘நான் அம்மா அணிந்திருந்த ஜடை பில்லையைப் பார்த்திருக்கிறேன். கோயிலில் தாயாருடைய ஜடை பில்லை எப்படியோ அப்படியே இருக்கும். என்ன அழகான கல்! என்ன அற்புதமான வேலைப்பாடு!” என்று அப்பா அடிக்கடி சொல்வார். நான் கோயிலில் பெருமாளையும் தாயாரையும் தரிசிக்கும்போது என் கண் அந்த ஜடை பில்லையைத் தேடும். உற்சவ காலங்களில்தான் அலங்காரம் பண்ணுவார்கள். அப்போதெல்லாம் நான் தாயாருக்குப் பின்னாலே போய் ஜடை பில்லையைப் பார்ப்பேன்.

 

    • ‘எங்கள் தாத்தா பண்ணின இரண்டு ஜடை பில்லைகளில் ஒன்று மனிதரை அடைந்தது. மற்றொன்று தெய்வத்தை அடைந்தது. தெய்வத்தை அடைந்த இது நித்திய அழகோடு எவ்வளவு சிறப்பாக இருக்கிறது! மற்றொன்று யார் தலையில் ஏறியதோ? எப்படி இருக்கிறதோ? இப்போது அதை யார் அணியப் போகிறார்கள்? பிரித்துக் குலைத்திருப்பார்கள் என்று எண்ணமிடுவேன்.

 

    • “அன்று தை வெள்ளிக்கிழமை. பாவி நான் கண் போட்டதனாலோ என்னமோ தாயார் கோயிலுக்குள் எழுந்தருளியபோது விக்கிரகம் கீழே விழுந்துவிட்டது. மல்லாக்க விழுந்தமையால் விக்கிரகம் சேதமில்லாமல் பிழைத்தது. ஆனால் ஒரு கல்லின்மேல் தாக்கியமையால் ஜடை பில்லை சிதறிப் போயிற்று. நானே அதைக் குலைத்தது போன்ற அங்கலாய்ப்பு ஏற்பட்டுவிட்டது. அந்த ஜடை பில்லையின் முழு உருவமும் அப்படியே என் அகக் கண்ணில் நின்றது.

 

    • “இந்த வேதனையைப் போக்கியது உங்கள் ஜடை பில்லை. அதே அச்சு. நிச்சயம் இது பழைய ஜடை பில்லைதான் என்று தெரிந்துகொண்டேன். எனக்குக் கண் நோட்டம் தெரியும் அல்லவா?”

 

    • “இது உன் தாத்தா செய்ததுதான் என்று எப்படித் தெரியும்?” என்று கேட்டேன்.

 

    • “தொழிலாளிக்கு அடையாளம் நன்றாகத் தெரியும், அம்மா. இதைக் கண்டவுடன் மீனாட்சியைக் கட்டிக் கொள்வதென்று தீர்மானம் செய்துவிட்டேன்.”

 

    • “அப்படியானால், மீனாட்சியை நீ பார்த்துப் பிரியப் படவில்லை. இந்த ஜடை பில்லைக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டாய் என்று சொல்.”

 

    • “அப்படி இல்லையம்மா. இவள்தான் என்னை முதலில் கவர்ந்தாள். பிறகு குலம், கோத்திரம், சீர் , செனத்தி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் ஜடைபில்லை செய்து விட்டது.”

 

    • “அப்புறம்?”

 

    • ”அப்புறம் என்ன? கல்யாணத்தன்று பார்த்தால் இவள் தலையில் காகிதப்பூ மாதிரி புதுக் கல் பில்லை ஒன்று உட்கார்ந்திருந்தது. எனக்குப் பெரிய ஏமாற்றமாகி விட்டது. எப்படியாவது அதை அடையவேண்டுமென்ற ஆத்திரத்தில் தடபுடல் படுத்திவிட்டேன். நீங்கள் மனசு வைத்தீர்கள்”

 

    • :அந்த ஜடைபில்லை எங்கே?”

 

    • “அதைத்தான் சொல்ல வருகிறேன், அம்மா. கல்யாணம் ஆனவுடன் நேரே வரதராஜப் பெருமாள் கோயிலுக்குப் போனேன். நகையை அழுக்கெடுத்துச் சுத்தம் பண்ணி மெருகேற்றியிருந்தேன். தாயார் இழந்த ஜடைபில்லை மறுபடியும் கிடைத்துவிட்டது போல யாவரும் மகிழ்ந்தார்கள். நான் தாயாருக்கே அதைச் சமர்ப்பித்துவிட்டேன். அது இனி தெய்வீக நகை ஆகிவிட்டது. அம்மா, புண்ணியமெல்லாம் உங்களைச் சேர்ந்த்து.”

 

    அவன் இதைச் சொல்லி விட்டு ஒரு பெருமூச்சு விட்டான். அதன் எதிரொலி போல என்னிடமும் நீண்ட பெருமூச்சு எழுந்தது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வல்லிக்கண்ணன் கதைகள் – மூக்கபிள்ளை வீட்டு விருந்துவல்லிக்கண்ணன் கதைகள் – மூக்கபிள்ளை வீட்டு விருந்து

மூக்கபிள்ளையின் மனசாட்சி திடீரென்று உறுத்தல் கொடுக்க ஆரம்பித்தது. அது அப்படி விழிப்புற்று அரிப்புதருவதற்கு பத்திரிகைகளில் வந்த சில செய்திகள் தான் காரணமாகும். சுகமாய் சவாசனம் பயின்று கொண்டிருக்கிற மனசாட்சி சிலபேருக்கு என்றைக்காவது திடும்விழிப்பு பெற்று, குடை குடை என்று குடைந்து, முன்

வல்லிக்கண்ணன் கதைகள் – புது விழிப்புவல்லிக்கண்ணன் கதைகள் – புது விழிப்பு

அவன் உளம் சோர்ந்து, உணர்ச்சிகள் குன்றி, செய்வதற்கு எதுவுமற்று, செய்யும் வகை என்னவென்று புரியும் சக்தியற்று, எதிலுமே ஆர்வமும் அக்கறையும் இல்லாதவனாய் மாறி இருந்தான். அவன் பெயர் – என்னவாக இருந்தால் என்ன! இன்றைய இளம் தலைமுறையை சேர்ந்தவன். “எதிர்காலம் என்னுடையது!”

அசோகர் கதைகள் 3 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்அசோகர் கதைகள் 3 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்

கதை மூன்று – அன்பு வளர்க்கும் அண்ணல்   அந்தக் காடு நல்ல அடர்த்தியான காடு, கங்கை நதிக் கரையிலே உள்ள காடு வேறு எப்படியிருக்கும்! வானுறவோங்கி வளர்ந்ததோடு நெருங்கி அடர்த்திருந்த மரங்கள், அந்தக் காட்டில் பகலவன் ஒளி பாயாமல் செய்தன;