Tamil Madhura சிறுகதைகள் குழலின் குரல் – கி.வா. ஜகன்னாதன்

குழலின் குரல் – கி.வா. ஜகன்னாதன்

    • மலையைச் சார்ந்த சிறிய ஊர் அது. அங்கே இயற்கைத் தேவி தன் முழு எழிலோடு வீற்றிருந்தாள். மலையினின்றும் வீழும் அருவி எப்போதும் சலசல வென்று ஒலித் துக்கொண்டே இருக்கும். மலர், காய், கனி ஆகியவற்றுக்குத் குறைவே இல்லை. தினை, சாமை, வரகு முதலிய தானியங்களும் நன்கு விளைந்தன.

 

    • இந்த அழகிய சூழ்நிலையில் அவர்களுடைய காதல் வளர்ந்தது. இளமையும் எழிலும் நிறைந்த இணையாக இருந்தார்கள்: அவன் பெயர் முருகன்; அவள் பெயர் மெல்லியல். அவன் அவளைக் கொஞ்சலாக மெல்லி என்றே அழைப்பான். நாகரிகம் முளைக்காத காலம் அது. நகரம் என்பதையே அறியாத காலத்தில் நாகரிகம் எங்கிருந்து உண்டாகும்?

 

    • இலைகளையும் பட்டைகளையும் ஆடையாக உடுத்து மலரையும் வித்தையும் அணியாக அணிந்து மக்கள் இன்புற்றார்கள். புறத்தோற்றத்தில் இன்று காணும் விரிவான பண்டங்களும், அமைப்புகளும் அன்று இல்லை. ஆனால் இன்று மிக அருமையாக மக்களின் அகத்தே காணப்படும் அன்பும் அமைதியும் அக்கால மக்களின் உள்ளத்தில் விளங்கின.

 

    • மேலே சொன்ன மலைச்சாரற் சிற்றூரில் அமைதியாக வாழ்ந்த மக்களிடையே கதிரவனையும் திங்களையும் போல அவ்விரண்டு காதலரும் வாழ்ந்தார்கள். அவர்களுக்குச் சுறுசுறுப்பாக மானையும் சிங்கத்தையும் போலத் துள்ளிக் குதித்து வேலை செய்தும், விளையாடியும் பொழுது போக்கத் தெரியும்; காதல் புரியத் தெரியும். கலகலவென்று சிரிக்கத் தெரியும். காலையும் மாலையும் அவர்கள் காட்டினூடே சென்று மலரையும் காய்கனிகளையும் தொகுத்து வருவார்கள். அருவி காலாக ஓடும ஓரிடத்தில் மூங்கில் அடர்ந்து வளர்ந்திருந்தது. அப்புதரின் அருகில் அருவிநீர் தத்திக் குதித்து நுண்டுளியை வீசும் பாறை ஒன்று உண்டு. அங்கே அவ்விருவரும் அமர்ந்து மலையையும் வானையும் கண்ணால் அளந்து பார்த்து இன்புறுவார்கள். அவர்களுக்கு அதிகமாகப் பேசத் தெரியாது. ஆனால் அவர்களுடைய கண்கள் தம்முள்ளே பேசிக்கொள்ளும். அந்தப் பார்வைக்குப் பொருளுரைக்க இன்று வளம் பெற்று விளங்கும் எந்த மொழியிலும் சொல் இல்லை.

 

    • அவர்களுடன் வாழ்ந்தவர்களுக்கு அவ்விருவருடைய காதலையும் கண்டு பொறாமை உண்டாகவில்லை; வியப்புத்தான் உண்டாகியது. அவர்கள் தங்களினும் உயர்ந்தவர்கள் என்ற உணர்ச்சி தோன்றியது. அவர்களை வணங்க வேண்டும் என்பது போன்ற ஆசை எழுந்தது. ஆனால் அவர்களுக்குக் காலில் விழுந்து வணங்கத் தெரியாது. அவர்களை நெருங்காமல் நின்று கையைத் தூக்கிக் குவித்தனர். காமனும் ரதியும்போல அவ்விருவரும் வாழ்ந்தார்கள். ஆனால் காதலின் தெய்வங்களாகிய அவர்களைப்பற்றிய கற்பனையை அவர்கள் அறியார்.

 

    • நாள் ஓடிக்கொண்டிருந்தது. அருவியும் ஓடிக் கொண்டிருந்தது. அவர்கள் காதல் பாறைபோல உறுதியாக இருந்தது.

 

    • என்றாவது காட்டுக்குள்ளே போகும்போது அவனும் அவளும் மரச்செறிவினூடே பிரிந்து போய்விடுவார்கள். அவன் மெல்லி என்று கூவுவான். அந்தக் குரல் மலையிலே பட்டு எதிரொலிக்கும். மான்களை விழித்துப் பார்க்கச் செய்யும். அவள் காதில் அந்தக் குரல் விழுந்தாள் அதற்கு எதிர்க் குரல் கொடுப்பாள். அதைச் சிள் வண்டின் ஒலியென்று சொல்லலாமா? சே! அதில் இனிமை இல்லையே! அவன் முழங்கிய குரல் சிங்கத்தின் கர்ஜனையைப் போல இருக்கும். அவள் எதிர் கூவிய குரலோ இருதயத்துக்குள்ளே சென்று புகும். அதில் ஓர் இனிமை நிலவும்.

 

    • இரண்டு குரலும் மலைச்சாரலில் ஒன்றை யொன்று தழுவி எதிரொலிக்கும். அது மறைவதற்குள் அவர்கள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். அப்புறமும் ஓர் ஒலி- இரட்டை ஒலி-கேட்கும். அவளை அவன் தேடிக் கூவிய குரல் அன்று; இருவரும் இணைந்து ஒன்றுபட்டபோது உண்டாகும் சிரிப்பொலி. கச்சேரியின் இறுதியிலே தாள வாத்தியங்கள் சேர்ந்து ஓர் ஆவர்த்தம் வாசித்தது போல இருக்கும். அந்த இணைந்த ஒழி. அந்தச் சிரிப்பிலே தாளக் கட்டு இருக்கும்; ஒலியே நடனமிடும். அவர்கள் உள்ளம் ஒன்றி மகிழும் இன்ப நடனத்தின் புறத்தோற்றம் அது; ஒட்டும் இரண்டுளத்தின் தட்டு அது.

 

    • அவன் கடித்த பாதிக் கனியை அவள் சுவைத்து உண்ணுவாள். அவள் கடித்த பாதிக் கனியை அவன் உண்ணுவான். ஒருநாள் இருவருக்கும் இடையே ஒரு விவாதம் எழுந்தது; சிறு பூசலாக மாறியது. அது இல்லா விட்டால் காதல் ‘கனியும் கருக்காயும்’ போன்றது அல்லவா? ஒரு பழத்தை அவன் வைத்திருந்தான். “நீ அதைப் பாதி கடித்துத் தின்றுவிட்டுத் தா” என்றாள் அவள். “நான் மட்டும் முழுப் பழத்தைக் கடிப்பேனா? நீ கடித்துத் தந்ததைத்தான் நான் தின்பேன்” என்றான் முருகன். அப்படி யானால் இருவரும் ஒன்றாகத் தின்போம் என்று முடிவு கட்டினார்கள்.

 

    • ஒரே சமயத்தில் ஒரு கனியை எப்படி இருவரும் கடித்துத தின்பது? எதிரும் புதிருமாக நின்று கடித்தார்கள். பறிக்காமல் மரத்தில் இருந்தபடியே கடித்துப் பார்த்தார்கள். அப்படியும் முடியவில்லை. உடனே ஒரு தந்திரம் செய்தான். பழத்தை எடுத்துக் கடித்தான். அவள் கையில் கொடுத்தான். ஆனால் தான் கடிதத்தைத் துப்பிவிட்டான்.

 

    • அவள் கடிக்காத பழம் அவனுக்கு இனிக்குமா? அவள் அந்தக் குறைக்கணியைக் கடித்துண்டு பின்னும் குறையாக்கினாள். அதை அவன் சட்டென்று பிடுங்கி உண்டான். இருவரும் காடே அதிரும்படி சிரித்தார்கள்.

 

    • தேவலோக வாசிகளுக்குக்கூட இந்த இன்பம் கிடைக்காதே!

 

    • தேவர்கள் அவர்களைக் கண்டு கண் போட்டு விட்டார்களோ? மாசுமறுவற்று விளங்கிய அவளுடைய உடம்பில் ஏதோ கோளாறு உண்டாயிற்று. அவனோடு அவளால் வெளியே வர முடியவில்லை. இன்றியமையாத காரியங்களுக்கு மாத்திரம் அவன் வெளியே போய் வந்தான். அப் போதெல்லாம் அருவி முன்போலக் குளிர்ச்சியாக இல்லை. மலர்கள் மணம் வீசவில்லை. பறவைகளின் குரல் கவர்ச்சியாக இல்லை. உலகமே அவனுக்குச் சுவைக்கவில்லை. காய் கனிகள் கொண்டு வந்து மெல்லிக்கு ஊட்டுவான். அவள் சிறதளவு உன்பாள்.ஆனால் உடனே வாந்தி எடுத்து விடுவாள். அவளுக்கு என்ன நோய்? அவனுக்கு விளங்க வில்லை.

 

    • கடைசியில்…!

 

    • ஆம்; மெல்லத் தன் முருகனைப் பிரிந்து சென்றுவிட்டாள். அவள் மெலிந்த உடல் கீழே கிடந்தது. அதை அவன் புரட்டிப் புரட்டிப் பார்த்தான். கையை எடுத்தான். அது விறைப்பாக இருந்தது. அவள் கண் நட்டுப் போயிற்று. அது இருதயத்தை வெளிப்படுத்தும் மொழியைப் பேசவில்லை. இருதயமே நின்றுவிட்டபோது இனி எப்படி ஒலிக்கும்? அவன் அவள் உடம்பைக் கட்டிக் கொண்டு அழுதான். ஆயுளில் அப்போதுதான் அழுகிறான். முகத்தோடு முகத்தைத் தேயத்துக்கொண்டான். எத்தனை இன்பமாக, வெதுவெதுப்பாக அம்முகம் இருக்கும்! இப்போது அதில் ஒன்றுமே இல்லை; சில்லிட்டிருந்தது. அவனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. அந்த உடம்பு இனி எழுந்திருக்காது. அவனோடு காட்டுக்கு வராது. அதன் தொண்டையிலிருந்து காட்டின் அந்தகாரத்தையும் கிழித்துக்கொண்டு வரும் இன்பக் கீச்சொலி எழும்பாது. கொடிபோல இருந்த உடல் மரமாகிவிட்டது. இனி என் செய்வது!

 

    • இரண்டு மூன்று நாட்கள் உண்ணாமல் உறங்காமல் அவன் கதறினான். அந்தச் சோகக்களத்திற்கு வந்து பார்க்க யாருக்கும் தைரியம் இல்லை. ஆனாலும் தூரத்தில் எல்லோருமே கூட்டமாக வந்து நின்றுகொண்டு பார்த்தார்கள். முருகன் இப்போது பசியினாலும் சோகத்தாலும் மயக்கம் போட்டு விழுந்துவிட்டான்.

 

    • தூரத்தில் நின்றவர்கள், அவனும் பிணம்போலக் கிடப்பதைக் கண்டார்கள். மெல்ல நெருங்கிப் பார்த்தார்கள். அவன் மயங்கிக் கிடந்ததை அறிந்துகொண்டார்கள். மூச்சு மெல்ல வந்துகொண்டிருந்தது. தண்ணீரை முகத்தில் தெளித்தார்கள். அவன் கண்ணை விழித்தான். சிறிது கனியைத் தந்தார்கள். பாதி மயக்கத்தில் அதை உண்டான். பிறகு தெளிவு பிறந்தது.

 

    • “ஏன் என்னை விழிக்கச் செய்தீர்கள்!” என்று அழுதான்.

 

    • அவர்கள் அவனிடம் பயந்துகொண்டே ஆறுதல் கூறினார்கள். அந்த உடம்பினால் இனி ஒன்றும் பயன் இல்லை என்று எடுத்துச் சொன்னார்கள். நாள் ஆக ஆக அவ்வுடல் உருவிழந்து நாற்றம் அடிக்கத் தொடங்கியது. அவன் அதை அனுகுவதற்குக் கூசினான்.

 

    • எப்படியோ ஆறுதல் கூறி மேல்லியின் உடலைக் கொண்டு போய்ப் புதைத்தார்கள். அவனுடைய விருப்பப் படியே நாள்தோறும் சென்று அமர்ந்துகொண்டு அளவளாவும் மூங்கிற்புதரின் அடியில் அடக்கம் செய்தார்கள்.

 

    • அன்று தொடங்கி அவன் மற்ற வேலைகைளை மறந்தான். அருவிக்கரையில் மூங்கிற் புதருக்கு அடியில் வந்து உட்கார்ந்து ஒரே யோசைனையில் ஆழ்ந்திருப்பான். மெல்லி நிலத்தைப் பிளந்துகொண்டு தன் நல்லுருவத்தோடு வந்து தன் முன் நிர்கப்போகிறாள் என்ற பைத்தியக்காரக் கற்பனை ஒன்று அவனுக்கு உண்டாயிற்று. ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் அங்கே சென்று நெடுநாழிகை அப்படியே அமர்ந்துகொண்டிருப்பான். காட்டிலே அவள் பிரிந்து சென்றுவிட்டால், “மெல்லி!” என்று கூவி அழைப்பானே, அப்படிக் கூவி அழைப்பான். அந்தக் குரலே எதிரோலிக்குமே யன்றி மெல்லியின் பெண்மைக்குரல் எழாது. ஒருகால் தான் புதைந்திருக்கும் இடத்திலிருந்து மெல்லி குரல் கொடுப்பாளோ! அவன் தன் காதை அவளைப் புதைத்த இடத்தில் வைத்துப் பார்ப்பான். அப்படியே நெடுநேரம் படுத்துக் கிடப்பான். பாவம்! ஏமாற்றத்தை யன்றி அவனுக்கு வேறு என்ன கிடைக்கும்?

 

    • ஏதேனும் பறவை கீச்செனக் குரல் எழுப்பினால் அவள்தான் கூவுகிறாளோ என்று மயங்குவான். பிறகு உண்மை தெரிந்து விடுவான்.

 

    • மாதக்கணக்கில் அவன் இப்படியே பொழுது போக்கினான். மெல்லி கிடந்த நிலத்தில் பசுமை படர்ந்தது. அங்கிருந்த மூங்கில்கள் ஓங்கி வளர்ந்தன. அவன் துயரமும் வளர்ந்ததே யன்றிக் குறையவில்லை. 2 காதை நேரித்துக்கொண்டு கேட்டான்.”ஆம்! மெல்லியின் குரல்தான்!” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். அதில் சொற்களின் உருவம் தோன்றவில்லையே யன்றி அந்தக் குரல்-இனிய உயிரை உருவும் குரல்-அவளுடையதுதான் என்பதில் சந்தேகமே இல்லை.

 

    • காற்று வீசிக்கொண்டிருந்தது. அதனோடு இடை விட்டுவிட்டு அந்தக் குரல் கேட்டது. அவன், “மெல்லீ” என்று கூவினான்; குதித்தான்; துள்ளி நாலுதிசையிலும் ஓடினான். குரல் எங்கிருந்து வருகிறது?

 

    • பூமியிலிருந்து வரவில்லை. பூமிக்கு மேலிருந்து வந்தது. மெல்லி மரத்தின்மேல் ஏறிக் கொண்டிருக்கிறாளோ?

 

    • உற்றுக் கவனித்தான்; கூர்ந்து மூச்சை அடக்கிக் கொண்டு கேட்டான். ஒலி மூங்கிற்புதரின் மேலிருந்து வருவதாக உணர்ந்தான். அண்ணாந்து பார்த்தான். ஆம்; நிச்சயமாக மெல்லி அந்த மூங்கிற் புதரின் மேலேதான் இருக்கிறாள். காற்று வேகமாக வீசியது; அந்தக் குரலும் சற்று உரத்துக் கேட்டது. அவனுக்கு ஒரே எக்களிப்பு. ‘மெல்லி, எங்கே இருக்கிறாய்?’ என்று எழுந்து அங்கும் இங்கும் சுற்றினான். அதன்மேல் ஏறிப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.

 

    • மறுபடியும் அந்தக் குரல். அவன் வேகமாக மரத்தின் மேல் ஏறினான். உடம்பை அதன் முள் கிழித்தது. அதை அவன் பொருட்படுத்தவில்லை. மேலே ஏறினான். அந்த ஒலி சற்றே நின்றது. ‘மெல்லி!’ என்று கூவினான்.

 

    • காற்று வீசியது; மீட்டும் குரல் கேட்டது. அவன் அந்தக் குரல் எங்கிருந்து வருகிறதென்று ஆராய்ந்தான். ‘மெல்லி எப்படி மூங்கிலுக்குள்ளே புகுந்துகொண்டாள்? ஏன் அவள் வார்த்தை பேசாமல் வெறும் ஒலியை மாத்திரம் எழுப்புகிறாள்?’

 

    • உண்மையை அவன் உணரவில்லை. அவன் தன் உள்ளத்தே மெல்லியை வைத்தவன். உலகம் முழுவதும் அவனுக்கு மெல்லியாகவே தோன்றியது. உண்மை இதுதான். நன்றாக உயர்ந்திருந்த மூங்கிலில் வண்டுகள் ஆங்காங்கே துளைத்திருந்தன. காற்று வேகமாக வீசி மூங்கிலினுள்ளே புகுந்து வெளிவரும்போது இனிய ஒலி எழுப்பியது. அந்த ஒலியையே மெல்லியின் குரலாக அவன் எண்ணி ஏமாந்தான்.

 

    • மூங்கிலிலிருந்துகொண்டு மெல்லி அழைப்பதாக முருகன் எண்ணினான். ஒலிவந்த மூங்கிலுக்கு அருகே சென்றான். காற்று வீசும்போதெல்லாம் அந்த ஒலி எழுந்தது. நிச்சயமாக மெல்லி அந்தச் சிறு மூங்கிலுக்குள்ளேதான் புகுந்து கொண்டிருக்கிறாள் என்று நம்பினான். அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தான். பசித்தபொழுது கீழே இறங்கிக் காட்டிற்குள் சென்று கனியையும், காயையும் பறித்து உண்டுவிட்டு வந்து, மறுபடியும் மூங்கிலின்மேல் ஏறி உட்கார்ந்து கொள்வான்.

 

    • ஒரு வாரம் ஆயிற்று. அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்த மூங்கிலை ஒடித்துக்கொண்டு தன் குடிலுக்கே போனால் என்ன என்ற எண்ணம் உண்டாயிற்று. சில நாழிகை யோசனையில் ஆழ்ந்தான். கடைசியில் மளுக்கென்று அந்த மூங்கிலின் நுனிப்பகுதியை ஒடித்தான்; வீட்டுக்குக் கொண்டுபோனான். அதை வைத்துக்கொண்டு கொஞ்சினான். கண்ணில் ஒற்றிக்கொண்டான்; முத்தமிட்டான்.

 

    • குடிலுக்குக் கொண்டுபோன பிறகு அதில் ஒலி எழும்பவில்லை. ஒருகால் அந்த இடத்தில் இருந்தபடியேதான் குரல் எழுப்புவாளோ? மறுபடியும் அதை அருவிக் கரைக்குக் கொண்டுபோனான். அதில் ஒலி எழவில்லை. ‘ஐயோ! நான் அவளை ஓட்டிவிட்டேனே!’ என்று அழுதான். மறுபடியும் என்னவோ தோன்றிற்று. மூங்கிலை எடுத்து ஒரு துளையில் வாயை வைத்து முத்தமிட்டான். அப்போது ஒரு பெருமூச்சு வந்தது. அதனால் சிறிது ஒலி வந்தது. மறுபடியும் அவன் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினான். கடைசியில் வாயை வைத்து ஊதினால் அந்த ஒலி உண்டாவதை அறிந்தான். அதுமுதல் அதை ஊதிக் கொண்டே இருந்தான். அவன் காற்றாகப் பேசினான்; அவள் வெறும் ஒலியாகப் பேசினாள்.

 

    • குழலின் ஒலியைப் போன்ற குரல் மெல்லிக்கு இருந்தது. அவள் உயிரோடு இருந்த காலத்தில் அவள் குரல் ஒன்றுதான் அவனுக்குத்தெரியும்; குழலின் ஒலி தெரியாது. யாருக்குமே தெரியாது. ஒப்போது குழலின் ஒலியை அவள் முரலாக அவன் எண்ணினான்-அதை ஊதிக்கொண்டே உலாவினான். அவனுடைய சோககீதம் அதிலிருந்து வெளியாயிற்று.

 

    • அவன் ஊதஊத அவனுக்கே ஒருவிதத் தேர்ச்சி உண்டாயிற்று. ஆனால் அது அவனுக்கே தெரியவில்லை. அவள்தான் வேறு வேறு வகையில் குரல் கொடுக்கிறாள் என்று நினைத்தான். ஊதிக்கொண்டே இருந்தான்.

 

    • அதுதான் உலகில் முதல்முதல் உண்டான குழல். அதைக் கண்டு பிற்காலத்தில் புல்லாங்குழலை உண்டாக்கினார்கள். தன் காதலியே குழலாக இருந்து குரல் கொடுக்கிறாள் என்ற மயக்க உணர்வோடு முருகன் வாழ்ந்தான். அவன் சோகத்தில் பிறந்தது புல்லாங்குழல்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

இனி எல்லாம் சுகமே – Audioஇனி எல்லாம் சுகமே – Audio

வணக்கம் தோழமைகளே, ‘இனி எல்லாம் சுகமே’ என்ற அழகான கதையின் மூலம் நம் தளத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் எழுத்தாளர் சூர்யா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்தக் கதை அனைவருக்குமானது அல்ல என்று முன்னரே எழுத்தாளர்  குறிப்பிட்டுவிட்டார். இருந்தாலும் கதையின் ஒவ்வொரு வார்த்தையும்

சேதுபதி விசுவநாதனின் ‘ஏக்கம்’ – சிறுகதைசேதுபதி விசுவநாதனின் ‘ஏக்கம்’ – சிறுகதை

பச்சை பசேல் என்று வயல்வெளி நிறைந்த ஊர். அதிகாலை நேரத்தில் பறவைகள் தங்களின் உணவுக்காக கூட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருந்த நேரம். கைகளில் தூக்குபோசியில் சோறும் வெங்காயமும் தலையில் வேலை உபகரணங்களையும் தூக்கி கொண்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர் ஊர்மக்கள்.

குற்றவாளி யார்?குற்றவாளி யார்?

குற்றவாளி யார்? – புதுமைப்பித்தன் சிறுகதைகள் கிரௌன் பிராஸிகியூடர் திவான் பகதூர் அமிர்தலிங்கம் பலே ஆசாமி. கேஸ் விவாதிப்பதில் ரொம்பப் பழக்கம். உட்காரும்பொழுது ஜுரர்களுக்கு ஸ்பஷ்டமாக விளங்கும்படி செய்துவிட்டு உட்கார்ந்தார். அவர் சில வக்கீல்கள் மாதிரி கோர்ட்டின் பச்சாதாபத்தையும், இளகிய ஹ்ருதயத்தையும்