Tamil Madhura புறநானூற்றுக் கதைகள் சிவந்த விழிகள் – புறநானூற்றுச் சிறுகதை

சிவந்த விழிகள் – புறநானூற்றுச் சிறுகதை

 

கடூர் அரண்மனையில் அன்று ஆரவாரம் நிறைந்திருந்தது. திரும்பிய இடமெல்லாம் மகிழ்ச்சியின் அறிகுறிகள் தென்பட்டன. அரண்மனையைச் சேர்ந்த பகுதிகளில் சிறப்பான அலங்காரங்கள் செய்திருந்தார்கள். அங்கங்கே மங்கள வாத்தியங்கள் இன்னிசை முழக்கின. இவ்வளவிலும் கலந்து கொள்ள அரசன் அதியமானோ அரண்மனையைச் சேர்ந்த ஏனைப் பெரியவர்களோ, அந்தச் சந்தர்ப்பத்தில் தலைநகரத்திலேயே இல்லை. 

எல்லோரும் போருக்குச் சென்றிருந்தார்கள். திருக் கோவலூர் அரசன் மலையமான் திருமுடிக்காரியோடு அதியமான் போர் தொடுத்திருந்தான். போர் என்றால் சாதாரண போர் இல்லை அது! அதியமானுடைய ஆற்றலுக்கே ஒரு சோதனையாக அமைந்திருந்த போர் அது! 

இந்தப் பயங்கரமான நிலையில், அவன் தலைநகரிலிருந்து வெகு தொலைவில் சென்று போர்க்களத்திலே தங்கியிருக்கும் 

 

போது, இங்கே தகடூரில் அவன் அரண்மணை கோலாகலத்தில் மூழ்கியிருக்கிறது என்றால் ஆச்சரியமாக இல்லையா? 

ஆனால் அவனுடைய போர்ப் புறப்பாட்டுக்குப் பின் அரண்மனையிலே நிகழ்ந்த ஒரு மங்கல நிகழ்ச்சியைத் தெரிந்து கொண்டால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. நடந்திருந்த நிகழ்ச்சி ஆரவாரத்துக்கும் மகிழ்ச்சிக்கும் ஏற்ற 

மங்கலம் நிறைந்த ஒன்றுதான்

போருக்காக அதியமான் புறப்பட்டுச் சென்றபோது அவன் மனைவி மகப்பேற்றுக்குரியவளாக இருந்தாள். அவளுக்கு அப்போது நிறைமாதம். அவன் போருக்குச் சென்ற சில நாட்களிலேயே அவள் பொற்சிலை என்று கூறத்தக்க ஆண்மகவு ஒன்றைப் பெற்றாள். அதியனுக்குப் புதல்வன் பிறந்த அந்த மகிழ்ச்சியில்தான் தகடூர் அரண்மனை கண்ணுக்கினிய காட்சி களாலும், செவிக்கினிய இசையினாலும் நிறைந்திருந்தது. மகன் பிறந்த நல்ல செய்தியைச் சென்றுரைப்பதற்காக உடனே போர்க் களத்திலிருந்த அதியமானுக்குத் தூதன் அனுப்பப்பட்டிருந்தான்

மகன் பிறந்த நல்ல வேளையோ என்னவோ, அதியமானுக்குப் போரிலும் எதிர்பார்த்ததைவிடவிரைவில் வெற்றிகிட்டிவிட்டது. தன்னால் வெல்லவே முடியாது என்று மலைத்துப் போயிருந்த திருமுடிக்காரியை மிக எளிதில் வென்றுவிட்டான் அவன். வெற்றி – மகிழ்ச்சியோடு போர்க்களத்திலிருந்து தலைநகருக்குப் புறப்படும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோதுதான், ‘புதல்வன் பிறந்திருக்கிறான்’ என்ற களிப்புக்குரிய மங்கலச் செய்தியோடு தகடூரிலிருந்து தூதன் வந்து சேர்ந்தான். 

செய்தியறிந்ததும் உடனே சென்று புதல்வனைக் காண வேண்டும் என்ற ஆசையால் போர்க்கோலத்தைக்கூட மாற்றிக் கொள்ளாமல் அப்படியே புறப்பட்டுவிட்டான் அவன். மலையமான் மேல் படையெடுத்து வந்த வேகத்தைவிடப் புதல்வனைக் காண்பதற்காக அதியமான் சென்ற இந்த வேகம் அதிகமாக இருந்தது. 

 

அதியமான் தகடூரை அடைந்து அரண்மனைக்குள் நுழைந்தபோது தமிழ் மூதாட்டி ஒளவையாரும் அங்கே தன் : புதல்வனைக் காண்பதற்காக ஏற்கனவே வந்திருப்பதை அறிந்தான். ஒளவையாரும் அவன் வரப்போவதை முன்பே அறிந்து எதிர் கொண்டழைத்துக் கொண்டு சென்றார். இருவரும் உரையாடிக் கொண்டே அரண்மனையில் அந்தப்புரப் பகுதியை அடைந்தனர். 

அந்தப்புரத்தில் பணிப்பெண்கள் அதியமான் குழந்தையைக் கண்டு செல்ல வரப்போவதை அறிந்து மலர்களால் நன்கு அலங்கரிக்கப் பெற்ற சிறு தொட்டில் ஒன்றிலே குழந்தையை எடுத்துவிட்டிருந்தார்கள். சின்னஞ்சிறிய தங்கப்பதுமை போலிருந்த குழந்தை கைகால்களை உதைத்து அழுது கொண்டிருந்தது. அதியமான் மெய்யில் கவசமும் கையில் வேலுமாகப் போர்க்கோலத்துடனேயே தொட்டிலருகிற் சென்று 

குழந்தையைக் கண்டான். அவனது முகத்திலும் கைகால்களிலும் மார்பிலேயும் போரில் பட்டிருந்த புண்கள் தெரிந்தன. ஆனால், அந்த நிலையிலேயும் புதல்வனைக் கண்ட மகிழ்ச்சி அவன் முகத்தில் நிலவியது. குழந்தையின் பட்டு மேனியையும் பிஞ்சுக் கைகால்களையும் மலர்ந்த முகத்தோடு சிவந்த தன் கண்களில் ஆவல் திகழப் பார்த்தான் அவன். ஒளவையாரும் பக்கத்திலே நின்று கொண்டிருந்தார். குழந்தை முன்போலவே கை கால்களை ஆட்டி உதைத்து அழுது கொண்டுதான் இருந்தது. கீச்சுக் குரலில் கத்தி விறைத்தது! அது ஏன் அப்படி அழுது விறைக்கிறது? என்று அதியமானுக்குப் புரியவில்லை . அவன் தனக்குப் புரியாத அந்தச் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் நோக்கத்துடன் ஒளவையாரைப் பார்த்தான். 

சரியாக அதே சமயத்தில் ஒளவையாரும் அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே கேட்டார் அதியா குழந்தை ஏன் கால்களை உதைத்துக்கொண்டு அழுகிறது என்பதை நீ தெரிந்து கொண்டாயா?” 

“இல்லையோ அது எனக்குத் தெரியாத்தனால்தான் நீங்களே சொல்லிவிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.” 

 

“சொல்கிறேன் கேள்! ஆனால் நான் சொல்லத் தொடங்குவதற்கு முன் குழந்தையைக் காண்பதற்காக நீ எத்தகைய தோற்றத்தோடு வந்திருக்கிறாய் என்பதை நீயே ஒருமுறை பார்த்துக் கொள்! உன் கையிலே இரத்தக்கறை படிந்த கூரிய வேல். கால்களிலே போரில் வெற்றிக்கு அறிகுறியாகப் புனைந்த வீரக்கழல்கள். உடம்பெல்லாம் வியர்வை வடிகிறது! மார்பிலே, ஆறாத பசும் புண்கள் இரணமாகக் காட்சியளிக்கின்றன. புலியோடு போர் செய்து அதைக் கொன்றுவிட்டு வந்திருக்கும் வலிமை நிறைந்த யானையைப் போலத் தோன்றுகிறாய் நீ! மலையமான் திருமுடிக்காரியின் மேல் உனக்கேற்பட்ட சினம், அவனை வென்று வாகை சூடிவிட்டு வந்திருக்கும் இப்போதும் ஆறவில்லை போலும்! உன் கண்களில் ஆத்திரத்தினாலும் பகைவர்களோடு போர் செய்துவிட்டு வந்ததினாலும் ஏற்பட்ட சிவப்பு இன்னும் நீங்கவேயில்லை. போரில் சிவந்த விழிகள் புதல்வனைக் கண்ட பின்னும் தமது இயல்பான நிறத்தை அடையவில்லையே!” 

‘குழந்தை ஏன் கால்களை உதைத்துக்கொண்டு அழுகிறது என்று கேட்டால், நீங்கள் எதையெதையோ கூறுகிறீர்களே?” 

“பொறு அதியா! என் விடை பொருத்தமானதா, இல்லையா என்று நான் கூறப்போவனவற்றை முழுமையாகக் கேட்டுவிட்டு அதன்பின் சொல்” 

“சரி! சொல்லுங்கள் தாயே, கேட்கிறேன்.” 

”மாபெரும் வீரனாகிய உனக்குப் பிறந்த மகன் வீரத்திலோ, ஆண்மையிலோ உன்னைவிடத் தாழ்ந்தவனாகவா இருப்பான்..? நீ போர்க் கோலத்தோடு வந்திருப்பதைக் கண்ட உன் மகன் எதற்காக அழுகின்றான் தெரியுமா?” 

“எதற்காக அழுகின்றான்?” 

‘தானும் இப்போதே போருக்குப் புறப்பட வேண்டும். உன்னைப்போல் வேல் ஏந்தி வீரக்கழல்களை அணிய வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறான் உன் மகன். கொண்டு வாருங்கள் வேலை!’ என்றுதான் அவன் அழுது கால்களை உதைக்கிறான்!” 

ஒளவையார் சிரித்துக்கொண்டே இவ்வாறு அதியமானிடம்  கூறினார்

“என்ன? வேடிக்கையாகக் கற்பனை செய்தல்லவா கூறுகிறீர்கள்?’‘ 

”இல்லை. உண்மைதன் அதியா ! சந்தேகமாக இருந்தால் இதோ பாரேன்” என்று கூறிக்கொண்டே அவன் கையிலிருந்த வேலை வாங்கிக் குழந்தையின் முகத்தருகே காட்டினார் ஒளவையார். என்ன அதிசயம் குழந்தை அழுவதை நிறுத்திவிட்டு வேலையே பார்த்தது. அதியமான் வியந்து ஒளவையாரையும் குழந்தையையும் மாறி மாறிப் பார்த்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கண் திறந்தது! – புறநானூற்றுச் சிறுகதைகண் திறந்தது! – புறநானூற்றுச் சிறுகதை

  அரண்மனைக்கு எதிரே திறந்தவெளியில் ஒரு பெரிய யானை துதிக்கையை ஆட்டிக்கொண்டு நின்றது. சுற்றிலும் அரண்மனை வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். யானையின் அருகே பாகன் கையில் அங்குசத்தோடு நின்றான். பக்கத்திலிருந்த மேடை மேல் அமைச்சர்களுக்கும், மந்திரச் சுற்றத்தினருக்கும் நடுவில் ஓர் இருக்கை

பரிசிலர்க்கு எளியன்!- புறநானூற்றுச் சிறுகதைபரிசிலர்க்கு எளியன்!- புறநானூற்றுச் சிறுகதை

  சிற்றரசனான பாரி வள்ளலின் பறம்பு மலையை மூவேந்தர் களும் முற்றுகையிட்டிருந்தனர். பாரியின் மேல் அவர்களுக்கு இருந்த பொறாமையின் அளவை அந்த முற்றுகையின் கடுமையே காண்பித்தது. பாரியை வெல்ல வேண்டும், அல்லது கொல்ல வேண்டும். இரண்டிலொன்று முடிந்தாலொழிய எவ்வளவு காலமானாலும் தங்கள்

தோற்றவன் வெற்றி! – புறநானூற்றுச் சிறுகதைதோற்றவன் வெற்றி! – புறநானூற்றுச் சிறுகதை

  ‘வெண்ணிப் பறந்தலை’ என்ற இடத்தில் நிகழ்ந்த அந்தப் பயங்கரமான போரில் கரிகாலன் வெற்றி அடைந்தான். அந்த வெற்றியைக் கொண்டாடும் விழா அன்று அவையில் சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தது! பாவாணர் பலர் அவன் வெற்றி மங்கலச் சிறப்பைப் பாடல்களாகக் கூறிப் பாராட்டிப்