Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1

ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1

9. குறைப் பிறவி

 

 


“சீக்கிரம் வந்திடு. நீ வந்துதான் பாலுவுக்குக் கஞ்சி குடுக்கணும்” என்று ரஞ்சிதம் தெருவில் போகும் வரை சொல்லிக்கொண்டிருந்தாள் பங்கஜம்.

பங்கஜத்திற்குச் சொத்தோடு சுகத்தோடு, அன்பும் கனிவும் நிறைந்த கணவனும் இருந்து என்ன பயன்? உடன்பிறந்த நோய் அவளை நித்திய நோயாளியாக்கி இருந்தது. கலியாணம் ஆகி இந்த ஐந்து வருஷங்களில் நான்கு குழந்தைகள் பெற்றாள். வயிற்றில் ஒன்று தரித்ததும், கையிலிருக்கும் மற்றொன்று குழியை அடையும்…இப்படியே மூன்று குழந்தைகளும் இறந்தன. இப்பொழுது வயிற்றில் ஏழுமாதம்.

திடீரென்று போனவாரம் கைக்குழந்தை பாலுவுக்கு இரண்டு நாள் ஜ்உரம் கண்டிருந்தது; மறுநாள் நெற்றியிலும் முகவாயிலும் ஓரிரு முத்துக்கள் தோன்றின. நான்காம் அவை பெருகின; ஒரு வாரத்திற்குள், அம்மைக் கொப்புளங்கள் இல்லா இடமே தெரியாத அளவுக்கு உடம்பெங்கும் பரந்து….

பங்கஜத்துக்கும் அவள் கணவன் ராஜாரமனுக்கும் ‘குழந்தை பிழைக்காது’ என்ற எண்ணம் வலுவடைந்தது. பங்கஜத்துக்கோ எழுந்து நடமாட முடியாத பலஹீனம்….. அவளுக்கு டி.பி. இருக்கலாமோ என்று வேறு டாக்டர் சந்தேகிக்கிறார்….

பாலு ஸ்மரணையற்றுக் கிடக்கிறான், அவனைப் பங்களாவின் காம்பவுண்ட் சுவரோரமாக அமைந்திருக்கும் ‘அவுட் ஹவுஸி’ல் கட்டிலில் கிடத்தி இருக்கிறார்கள். அவனருகே கூட, பங்கஜம் வரக்கூடாதாம். இது டாக்டரின் யோசனை.

சமையல்காரனோ, அவன் ஒரு மாயாவி’ அவன் எப்பொழுது வருவான் எப்பொழுது சமைப்பான் என்று யாருக்கும் தெரியாது. காலையில் காப்பி குடிக்கப் போகும்போது ‘இன்று என்ன சமைப்பது?’ என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொண்டு விட்டால் போதும். அதன்பின் சாப்பாட்டு நேரத்தில் அங்கு எல்லாம் தயாராயிருக்கும். மற்ற நேரத்தில் அவன் கண்ணில் படமாட்டான்.

குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்காகவே ரஞ்சிதம் வேலைக்கு அமர்த்தப்பட்டாள். தன் குழந்தையைத் தானே கவனித்துக்கொள்ள பங்கஜத்திற்குக் கொள்ளை ஆசையிருந்தும் சக்தி இல்லை’ வைத்திய சாஸ்திரமும் வாய்த்திருக்கும் கணவனும் அதற்கு அனுமதிக்கவில்லை.

‘இப்பொழுதுதான் ரஞ்சிதம் இல்லையே, அவள் வரும் வரை நான் போய்ப் பார்த்துக் கொண்டால்…’

பங்கஜம் அறைக்கதவைத் திறந்துக்கொண்டு, பாலு படுத்துக்கிடக்கும் அந்தத் தனி வீட்டில் நுழைந்தாள். வேப்பிலை சயனத்தில் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தான் பாலு. கட்டிலுக்கு அருகே இருந்த ஸ்டூலில் உட்கார்ந்து அதன் விதியைக் கணக்கிடுவதுபோல்–குழந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் பங்கஜம்.

மணி ஒன்றாயிற்று.

இன்னும் ரஞ்சிதத்தைக் காணோம்; குழந்தைக்குப் பங்கஜமே மருந்து கொடுத்தாள். கஞ்சி கொடுத்தாள். வேப்பிலைக் கொடுத்தால் விசிறிக்கொண்டு ரஞ்சிதத்தின் வருகைக்காகக் காத்திருந்தாள்.

ரஞ்சிதத்தைக் காணோம். பங்கஜத்தின் கணவன் ராஜாராமன் மூன்று மணிக்கு வந்தான். பங்கஜம் பாலுவின் அருகில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டான்.

“பங்கஜம், என்ன இது’ ஏன் இங்கே வந்தே?”

“வீட்டுக்குப் போன ரஞ்சிதத்தைக் காணோம்… குழந்தைக்கு யாரு கஞ்சி குடுக்கறது, மருந்து குடுக்கறது…?”

சரி சரி, நீ உள்ளே போ, நான் பார்த்துக்கறேன்….” என்று கோட்டையும் ‘டை’யையும் கழற்றி அவளிடம் கொடுத்துவிட்டு, அவன் போய் பாலுவின் அருகில் உட்கார்ந்து கொண்டான்.

ரஞ்சிதமும் செல்லியும் சகோதரிகள். தங்கையின் குடிசையில்தான் செல்லியும் வாழ்கிறாள். ரஞ்சிதத்தின் புருஷன் கொத்தனார் வேலை செய்கிறான். மூத்தவளாய்ப் பிறந்தும் செல்லிக்குக் கலியாணம் ஆகவில்லை; ஆகாது.

செல்லிக்கு வயசு இருபதுக்குமேல் ஆகிறது என்றாலும் வளர்ச்சி பன்னிரண்டு வயதோடு நின்றுவிட்டது. முகமோ முப்பதுக்கு மேலே முதுமை காட்டியது…நரங்கிப் போன உருவம்; நாலடிக்கும் குறைவான உயரம்; கறுப்புமல்லாத சிவப்புமல்லாத சோகை பிடித்து வௌிறிப்போன சருமம். தலை முடியெல்லாம் ஒன்று சேர்ந்து சிக்குப் பிடித்து, எலிவால் மாதிரி பின்புறம் தொங்கும். முன் பற்கள் இரண்டும் உதட்டைக் கிழித்துக்கொண்டு வௌித்தெரியும்…அவளை யாரும் மணக்க முன்வராததற்குக் காரணம் இந்த அங்க அவலட்சணங்கள் மாத்திரமேயன்று. அவள் முழுமை பெறாத மனித ராசி; குறைப் பிறவி’

குடிசை வாசலில் உட்கார்ந்து முறத்தில் கொட்டிய அரிசியில் நெல் பொறுக்கிக் கொண்டிருந்தாள் செல்லி.

தொடர்ந்து பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதும், அப்படியே உறங்கிப் போவதும் அவளுக்குத் தினசரிப் பழக்கம். ரஞ்சிதத்துக்குத் தன் தமக்கையின் மீது உயிர். செல்லிக்கோ மனிதர்கள் என்றாலே பாசம்தான். மனிதர்கள் என்ன, நாயும் பூனையும்கூட அவளது எல்லையற்ற அன்புக்குப் பாத்திரமாகிவிடும். சொல்லப் போனால் அவைதான் அவளது அன்பை ஏற்றுக் கொண்டன. மனிதர்கள்– அவள் தங்கையைத் தவிர–மற்றவர்கள் அவளைக் கண்டாலே அருவருத்து ஒதுங்கி நடந்தார்கள். இப்பொழுதும் கூட அவள் அருகே சொறி பிடித்த ஒரு கறுப்பு நாய்க்குட்டி வாஞ்சையுடன் நின்று வாலை ஆட்டிக் கொண்டிருக்கிறது. அவளுக்கும் அதற்கும் அத்யந்த நட்பு.

மணி ஐந்தாகியும் ரஞ்சிதம் வேலைக்குப் போகாததைக் கண்டசெல்லி குடிசைக்குள் எட்டிப் பார்த்தாள்,

“ரஞ்சிதம், நீ வேலைக்குப் போகலியா’…”

“இல்லே….நான் போகமாட்டேன்.” “ஏண்டி….என்னா நடந்திச்சு?”

“அந்த புள்ளைக்கி மாரியாத்தா வாத்திருக்கு…பாத்தாவே பயமா இருக்கு…ஸ்…அப்பா” என்று உடம்பைச் சிலிர்த்துக் கொண்டாள் ரஞ்சிதம்.

“யாருக்கு…பாலுவுக்கா?”

“டாக்டரு வந்து, அந்த வௌிவூடு இருக்கு பாரு அதிலே கொண்டு போயிப் போடச் சொல்லிட்டாரு புள்ளையெ…..பெத்தவகூட கிட்டப் போகக் கூடாதாம்…என்னெப் பாத்துக்கச் சொன்னாங்க புள்ளையெ…வீட்லே போயிச் சொல்லிட்டு வர்ரேன்னு வந்துட்டேன். நான் போக மாட்டேண்டி அம்மா…எனக்குப் பயமாயிருக்கு….” என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டு தலையை உசுப்பினாள் ரஞ்சிதம்.

“இம்மா நேரம் புள்ளை எப்படித் துடிக்கிறானோ? பெத்தவளும் கிட்ட இல்லாம அந்த ஐயா எப்படித் தவிக்கிறாரோ” என்று சொல்லித் தவித்தாள்.

அவளது குனிந்த பார்வையில், பாலுவின் சிரித்த முகம் தெரிந்தது. அவனது பிஞ்சுக் கரங்கள் அவள் முகத்தில் ஊர்வதுபோல் இருந்தது.

“நான் போய்ப் பாலுவைப் பார்த்துக்கிட்டா….சம்மதிப்பாங்களா?….அந்த ஐயா என்ன சொல்லுவாரோ?….”

இந்த யோசனைகள் தோன்றியதும் அந்தப் பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது.

பாலுவைப் பார்த்துக்கொள்ளும் ‘ஆயா’ உத்தியோகம் முதலில் செல்லிக்குத்தான் கிடைத்தது.

முதல் நாள் அவள் வேலைக்குப் போகும்பொழுது ராஜாராமன் வீட்டில் இல்லை. பங்கஜம் மட்டுமே இருந்தாள். அவளே சம்பளம், வேலை நேரம் எல்லாம் பேசினாள்.

பங்கஜம் சொன்னது எதுவும் செல்லியின் காதுகளில் விழவில்லை. பங்கஜத்தின் மடியில் உட்கார்ந்து கொண்டு தன்னைப் பார்த்துக் கன்னங்கள் குழியச் சிரித்து வரவேற்ற அந்தக் குழந்தையிடம் லயித்தவாறே, அவள் சொல்லுவதற்கெல்லாம் தலையாட்டினாள் செல்லி.

குழந்தை செல்லியிடம் தாவினான்.

செல்லி குழந்தையை வாங்கி அணைத்துக் கொண்டாள்.

இத்தனை நேரம் குழந்தையைத் தூக்கி வைத்திருந்ததனால் களைத்துப்போன பங்கஜம், அறைக்குள் போய்க் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

செல்லி பாலுவைத் தூக்கி கொண்டு தோட்டமெல்லாம், வீடெல்லாம் சுற்றித் திரிந்து மகிழ்ந்தாள். பொம்மைகளையும், சொப்புகளையும் வைத்துக்கொண்டு குழந்தையோடு விளையாடினாள்.

குழந்தைக்குச் சோறூட்டும்போதும் காலில் கிடத்தித் தாலாட்டும்போதும் அந்தக் குறைப் பிறவிக்கும் கூட நெஞ்சில் நிறைவு பிறந்தது.

அன்று மத்தியானம் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை ‘ஆயா’ என்று அழைத்துக் கொண்டே விழித்தான்.

கூடத்துத் தூண் ஓரத்தில் கவிழ்ந்த பார்வையுடன் குந்தி உறங்கிக் கொண்டிருந்த செல்லி, தலை நிமிர்ந்து பார்த்தாள். தொட்டிலின் விளிம்பைப் பற்றிப் பிடித்துக்கொண்டு தலையை மட்டும் வௌியே நீட்டி அவளைக் கூப்பிட்டுச் சிரித்த குழந்தையின் தோற்றம் அவளை உள்ளும் புறமும் சிலிர்க்க வைத்தது. ஓடிவந்து குழந்தையைக் கைநிறைய வாரிக் கொண்டாள். குழந்தையை மடிமீது இருத்திக் கொஞ்சினாள்.

காலமெல்லாம், ஆயுள் முழுவதும் இப்படியே ஒரு குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே கழித்துவிட்டால்?…

அந்த பாக்கியம் யாருக்குக் கிட்டும்? செல்லிக்குக் கிட்டும்’

பாலு அவன் மடிமீது கிடந்தே வளர்வான்; பள்ளிக்கூடம் போய் வருவான்; பிறகு பெரியவனாகி ஆபீசுக்குப் போவான்….அப்புறம் கலியாணமாகி, அவனும் ஒரு குழந்தையைப் பெற்று அவள் மடிமீது தவழவிடுவான்….

ஒரு தாய்க்கே உரிய அர்த்தமற்ற சிந்தனைகளில் அவன் மகிழ்ந்து கொண்டிருந்தாள். கூடத்துச் சுவரிலிருந்த ஒரு போட்டோ அவள் கண்ணில் பட்டது.

“பாலு…அதாரு….?” என்று போட்டோவைக் காட்டினாள் செல்லி.

“அம்மா அப்பா….” கைகளைத் தட்டிக் கொண்டு உற்சாகமாகக் கூவினான் பாலு.

“அம்மா மூஞ்சி எப்படியிருக்கு?” என்றாள் செல்லி.

பையன் முகத்தைச் சுளித்துக்கொண்டு மூக்கை உறிஞ்சிக் காட்டினான்.

“போதும் போதும்…” என்று சொல்லி சிரித்தாள் செல்லி. குழந்தையும் சிரித்தான்’

“அப்பா மூஞ்சி எப்படியிருக்கு?…”

மறுபடியும் முகத்தைச் சுளித்து மூக்கை உறிஞ்சி…

செல்லி சிரித்தாள்’ குழந்தையும்தான்.

“பாலு மூஞ்சி எப்படியிருக்கு?”

கண்களை அகலத் திறந்து முகம் முழுதும் விகசிக்கப் புன்முறுவல் காட்டினான் குழந்தை.

“என் ராஜா’ ” என்று குழந்தையை அணைத்துக் கொண்டாள் செல்லி.

“ஆயா மூஞ்சி….”

முகம் விகசிக்கக் கண்கள் மலரச் சிரித்துக் கொண்டே செல்லியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டான் குழந்தை.

அப்பொழுதுதான் ஆபீசிலிருந்து வந்த ராஜாராமன் அவர்களின் பின்னால் வந்து நின்று புது ‘ஆயா’ வும் குழந்தையும் விளையாடுவதை ரசித்துக் கொண்டிருந்தான்.

குழந்தையின் முத்தத்தை ஏற்றுக் கொண்டவுடன், ஏற்றுப் பிறந்த சாபமே தீர்ந்ததுபோல் அவள் தேகாந்தமும் புளகமுற்றது. குழந்தையை முகத்தோடு அணைத்து முத்தமிட்டாள் செல்லி.

ராஜாராமன் அப்பொழுதுதான் அவள் முகத்தைப் பார்த்தான். அவன் முகம் அருவருப்பால் நௌிந்தது; மனம் குமட்டியது. தனது அழகுச் செல்லம் இந்த அசிங்கத்தின் மடியில் அமர்ந்து…

அவன் கண்கள் இறுக மூடிக்கொண்டு திரும்பி விட்டான். அப்பொழுதுதான் அவள் அவனைப் பார்த்தாள்.

ராஜாராமன் விடுவிடென்று தன் மனைவியின் அறைக்குச் சென்றான். குழந்தையின் தொந்தரவோ, அழுகைக் குரலோ இல்லாததால் பங்கஜம் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

“இந்த கோர சொரூபத்தை யாரு பிடிச்சிட்டு வந்தது?” என்று இரைந்தான் ராஜாராமன். பங்கஜம் திடுக்கிட்டு எழுந்தாள்.

“யாரைச் சொல்றீங்க?”

“குழந்தையைப் பாத்துக்க இந்தக் குட்டிச்சாத்தான் தானா கிடைச்சுது?”

“யாரு, ஆயாவைச் சொல்றீங்களா?”

“ஆமா…..ஆயாவாம் ஆயா….கர்மம், கர்மம்…..பாக்கச் சகிக்கல்லே’ கொழந்தை பயப்படலியா?…மூஞ்சியெப் பார்த்தா வாந்தி வருது…”

“கொழந்தை ஒண்ணும் பயப்படலே….நீங்கதான் பயப்படுறீங்க…” என்றாள் சிரித்துக்கொண்டே பங்கஜம்.

–வௌியா குழந்தை அழும் குரல் கேட்டது:

“ஆயா…ஹம்ம்…ஆயா….ஆ…’ குழந்தையின் குரல் வீறிட்டது.

ராஜாராமன் அறையிலிருந்து வௌியே ஓடி வந்தான்.

பங்களாவின் கேட்டைத் திறந்துகொண்டு வௌியேறிய செல்லி கதவுகளை மூடிவிட்டுத் தெருவிலிறங்கிப் போய்க் கொண்டிருந்தாள். அந்தக் ‘குட்டிச்சாத்தா’னை நோக்கி, இரண்டு கைகளையும் ஏந்திக்கொண்டு, அவள் போகும் திக்கைப் பார்த்து வீறிட்டு அலறிக்கொண்டிருந்தான் பாலு.

ராஜாராமன் குழந்தையை தூக்கிக்கொண்டபின், அவள் போவதையே பார்த்தவாறு நின்றான்.

‘நான் சொன்னதைக் கேட்டிருப்பாளோ?….அவள் மனம் எவ்வளவு புண்பட்டிருந்தால் இப்படிப் போவாள்’….சீ’ நான் என்ன மனிதன்….?’

குழந்தை அழுதது.

அதன் பிறகு செல்லி அந்தப் பக்கம்கூட வந்தது கிடையாது. மறுநாள் முதல் அவள் தங்கை ரஞ்சிதம், பாலுவுக்கு ஆயாவானாள்’

செல்லிக்கும் மீண்டும் சொறி நாயே துணையாயிற்று’

முறமும் கையுமாய்க் குனிந்திருந்த செல்லி, கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள்…குடிசைக்குப் பின்புறம் சென்றாள். அவளைத் தொடர்ந்து நாயும் ஓடிற்று. குழந்தையின் அருகில் உட்கார்ந்து வேப்பிலைக் கொத்தால் விசிறிக்கொண்டிருந்தான் ராஜாராமன்.

குழந்தை அடிக்கொருதரம் வேதனை தாங்கமாட்டாமல் அழத் தெம்பில்லாமல் ஈனமான குரலில் சிணுங்கிச் சிணுங்கி அழுதான்.

தாயின் அருகே இருக்கக்கூடாத நிலையில், நிராதரவாய்க் கிடந்து நோயில் துடிக்கும் தன் குழந்தையின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது ராஜாராமனின் கண்கள் கலங்கின. இறந்து போன குழந்தைகளின் பயங்கரக் காட்சி அடிக்கடி மனசில் திரை விரித்தது.

‘சீ’ காசும் பணமும் இருந்து பயன் என்ன?’ அவனுக்கு வாழ்கையே அர்த்தமற்றுத் தோன்றியது.

மணி ஆறு அடித்தது.

இன்னும் ஆயாவைக் காணோம்.

வாழ்வே இருண்டதுபோல் கைகளில் முகம் புதைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் ராஜாராமன்: இருள் படரும் நேரத்தில் அவள் வந்தாள்.

“சாமீ…”

‘யாரது? வாசற்படியில் கூனிக் குறுகிக்கொண்டு நிற்கும் அது…யாரது, செல்லியா?’

“செல்லி…”

“சாமீ….நான்தானுங்க செல்லி வந்திருக்கேன்….”

அவள், உடம்பெல்லாம் மஞ்சள் பூசிக் குளித்து, தலை வாரி முடித்து, நெற்றியில் பொட்டிட்டுக்கொண்டு–இயன்ற அளவு தன்னை அலங்கரித்துத் தன் குரூபத் தோற்றத்தை மறைக்க முயலும் புன்னகையோடு எதையோ அவனிடம் யாசிப்பவள் போல் நின்றிருந்தாள்.

கொளந்தைக்கி ஒடம்பு சரியில்லேன்னு இப்பத்தான் சொன்னா ரஞ்சிதம்…அவளுக்குப் பயமா இருக்காம். எனக்கு மனசு கேக்கலே…பார்க்கலாம்னு வந்தேனுங்க…நீங்க கோவிச்சிக்காமெ…இருந்தா கொளந்தையை ஒடம்பு கொணமாகற வரைக்கும் நானே பாத்துக்கிட்டுமுங்களா…” அவள் தயங்கித் தயங்கித் தொடர்பில்லாமல், மனசில் உள்ளதைச் சொல்லிவிட வேண்டும் என்ற ஆசையில் பேசினாள்.

கட்டிலில் கிடந்த குழந்தை புரண்டான்; சிணுங்கி அழுதான். செல்லி உள்ளே ஓடி வந்து அவன் அருகே நின்று விசிறினாள், ராஜாராமன் மீண்டும் முகத்தைக் கைகளில் புதைத்துக் கொண்டான்.

“அவன் உன் குழந்தை’…அவன் உன் குழந்தை’….என்று முனகிக்கொண்டே வௌியேறினான்.

இரவெல்லாம் கண் விழித்துக் குழந்தையைப் பாதுகாத்தாள் செல்லி, அந்தக் குழந்தையின் அருகே தனித்திருந்து தானே அதன் தாய்போலப் பணிவிடை புரிவதில் வாழ்வே நிறைவுற்றது போன்ற திருப்தி பிறந்தது அவளுக்கு.

குழந்தைக்கு தண்ணீர் விடப்போகிறார்கள். செல்லியின் இடைவிடாத கண்காணிப்பினாலும், பரிவு மிக்க பணி விடைகளினாலும் பாலு நோய் தீர்ந்தான். பெற்றவள் கலி தீர்ந்தாள்.

ஆனால் குழந்தையின் முகமெல்லாம் அம்மையின் குரூர வடுக்கள் முத்திரை பதித்து அழகைக் கெடுத்திருந்தன; கரிந்து போன மரப்பாச்சி போலிருந்தது குழந்தை. தனது அழகுச் செல்வத்தைக் கண்டு யாரேனும் ‘காணச் சகியாத கோரச் சொரூபம்; குட்டிச்சாத்தான்’ என்று முகம் சுளிப்பார்களோ என்று எண்ணியபோது ராஜாராமன் மனம் குமுறினான்.

செல்லியின் கண்களுக்குப் பாலு அழகாய்த்தான் இருந்தான். பிள்ளை தேறினானே, அதுவே பெரும் பாக்கியம் என்று எண்ணி அவள் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

மாலையில் செல்லிக்குத் தலைவலித்தது; உடம்பெல்லாம் வலித்தது. இரவில் காய்ச்சல் வருவது போல் அனத்தியது. பங்களாவின் காம்பவுண்ட் சுவரருகே இருந்த அந்தச் சிறு வீட்டின் வராந்தாவில் கோணியை விரித்து, பழம் புடவையால் போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள்.

மறுநாள் காலை மணி ஒன்பதாகியும் செல்லி எழுந்து வரக்காணோம்.

தோட்டத்தில் உலாவ வந்த ராஜாராமன் வராந்தாவில் செல்லி படுத்துக் கிடப்பதை பார்த்தான். அருகில் வந்து நின்று “செல்லி…. செல்லி…..” என்று அழைத்தான்.

பதில் குரலைக் காணோம்.

முகத்தில் மூடியிருந்தத் துணியை மெல்ல விலக்கினான்—-

அவள் முகமெல்லாம் அம்மைக் கொப்பளங்கள் முகிழ்ந்திருந்தன. கண்ணிமைகளும், உதடுகளும் துடித்துச் சிவந்து பார்க்கும்போதே அவனுக்கு உடல் சிலிர்த்தது.

அவள் மெல்லக் கண் திறந்து ஏதோ முனகினாள். செல்லிக்கு அம்மை கண்டுவிட்டது என்று தெரிந்தவுடன் பங்கஜம் கூட எழுந்து ஓடி வந்தாள்.

“ஐயோ, நீங்க ஏம்மா வந்தீங்க….. போங்கம்மா…. உள்ளே போங்கம்மா…. ” என்று செல்லி கெஞ்சினாள்.

டாக்டர் வந்தார்; டாக்டரைக் கண்டதும் பங்கஜம் வீட்டுக்குள் நுழைந்தாள். டாக்டர் செல்லிக்கு மருந்து கொடுத்தார். அவள் டாக்டரிடம் வேண்டிக் கொண்டாள்:

“சாமி…. நான் ஆசுபத்திரிக்கிப் போயிடுறேனுங்க….. அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க….”

“வேண்டாம் செல்லி, வேண்டாம்” என்று ராஜாராமன் இடைமறித்தான்.

“மிஸ்டர் ராஜாராமன். அந்தப் பொண்ணு சொல்வதுதான் சரி. ஒடம்பு நல்லாகணும்னா, ஆசுபத்திரிக்கு அனுப்பிச்சுடறதுதான் நல்லது” என்றார் டாக்டர்.

அதன் பிறகு ரஞ்சிதத்துக்குச் சொல்லியனுப்பப்பட்டது.

“அடி எம் பொறவி அக்காவே…. நா அப்பவே சொன்னேனே கேட்டியாடி….” என்று அழுது புழம்பிக் கொண்டே ஓடி வந்தாள் ரஞ்சிதம்.

ராஜாராமன் ஆபீசுக்கு லீவு போட்டு விட்டு வீட்டிலேயே தங்கியிருந்தான். ரஞ்சிதம் தான் செல்லியைப் பார்த்துக் கொண்டாள். பாசம் இருந்தா பயம் அற்று போகாதா, என்ன?

சாயங்காலம் நாலு மணி சுமாருக்கு ஆசுபத்திரியிலிருந்து, செல்லியைக் கொண்டு செல்ல ‘வான்’ வந்து வாசலில் நிற்கிறது’

ராஜாராமனும் பங்கஜமும் சவம் போல் வௌிறிப் போய் நிற்கிறார்கள்; ரஞ்சிதம் சேலைத்தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு அழுகிறாள். செல்லி காம்பவுண்ட் சுவரருகே வந்து நின்றாள்’

–என்ன பயங்கரத் தோற்றம்’

ரஞ்சிதம் ஓடிச் சென்று அவளைக் கைத்தாங்கலாய் அழைத்து வருகிறாள். காரின் அருகே வந்ததும் செல்லி ஒருமுறை சுற்றும் முற்றும் பார்க்கிறாள். அவளருகே ராஜாராமனும் ரஞ்சிதமும் நிற்கின்றனர். காரிலேற முடியாமல் செல்லி தவிக்கிறாள்; பார்வை கலைகிறது’

“என்ன வேணும் செல்லி, என்ன வேணும்?…. பயப்படாமல் கேள்…..’ ” என்கிறான் ராஜாராமன்.

“பாலு….. பாலுவை ஒருதடவை பாத்திட்டு….” அவள் குரல் அடைத்தது; கண்கள் கலங்கின.

“இதோ….உனக்கில்லாத பாலுவா….” என்று உள்ளே ஓடினான்….

கன்னங்கரேலென்று நிறம் மாறி, இளைத்துத் துரும்பாய் உருமாறிப் போன குழந்தையுடன் வந்து அவளருகே நின்றான்.

“பாலு….”

“ஆயா”… குழந்தை சிரித்தான்.

“பாலு, அப்பா மூஞ்சி எப்படி இருக்கு?”

குழந்தை முகத்தைச் சுளித்து வலிப்புக் காட்டினான்.

“அம்மா மூஞ்சி?”

—மறுபடியும் அதே சுளிப்பு; வலிப்புக் காட்டினான்.

“பாலு மூஞ்சி எப்படி?” கண்கள் மலரச் சிரித்தான் குழந்தை.

“ஆயா மூஞ்சி?”

சிரித்துக் கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிடத் தாவினான் குழந்தை. அம்மைக் கொப்புளங்கள் நிறைந்த முகத்தை மூடிக்கொண்டு விலகிக்கொண்டாள் செல்லி.

“ரஞ்சிதம், கொளந்தையைக் கவனமாப் பாத்துக்க. நான் போய் வரேன் சாமி…வரேன் அம்மா” என்று கரம் கூப்பி வணங்கினாள். ராஜாராமன் கண்களைத் துடைத்துக்கொண்டான்.

“போய் வா’…” என்று கூவினாள் பங்கஜம். அவள் உதடுகள் துடித்தன; அழுகை வெடித்தது.

ஆசுபத்திரி கார் அவளை ஏற்றிக்கொண்டு நகர்ந்தது…. கார்மறையும் வரை அவர்கள் எல்லோரும் தெரு வாசலிலேயே நின்றிருந்தனர்.

எங்கிருந்தோ ஓடிவந்த அந்தக் கறுப்புச் சொறி நாய், ஆசுபத்திரிக் காரைத் தொடர்ந்து ஓடியது’

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 23திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 23

செங்கமலத்தாச்சி நிறையப் பன ஓலை சேகரித்து முன்னறை முழுவதும் அடைத்து இருக்கிறாள். சரசி அவள் உள்நோக்கைப் புரிந்து கொண்டு விட்டாற் போல் தோன்றும்படி வெடுக்கென்று கேட்கிறது. “ஆச்சி! அவியல்லாம் அளத்துக்குப் போகாம மொடங்கிட்டா, பொட்டி செலவிருக்குமா? ஆரு வாங்குவா?” அந்தச் சிறுமியை

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 40கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 40

அத்தியாயம் 40 – ராயவரம் ஜங்ஷன் சாதாரணமாகவே ஒரு ரயில்வே ஜங்ஷனைப் போல கலகலப்பான இடம் வேறு கிடையாது என்று சொல்லலாம். அதிலும், ராயவரம் ஜங்ஷனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அங்கே நாலு முக்கியமான இடங்களுக்குப் போகும் நாலு ரயில் பாதைகள்

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 05வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 05

அந்த வார்த்தகர் அவனைக் கெஞ்சித் தமக்கு திவான் வரி போடாமல் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அவனிடம்நூறு கொடுப்பார். இம்மாதிரி நமது சமயற்காரன் ஒவ்வொரு நாளும் பல உத்தியோகஸ்தர்களிடத்திலும் வர்த்தகர்களிடத்திலும் பெருத்த பெருத்த தொகைகளை இலஞ்சம் வாங்கத் தொடங் கினான். அவன் திவானினது