ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 21’

திருடன் புகுந்த வீடு மாதிரி சாமான்கள் கண்டபடி ஒழுங்கின்றி அலங்கோலமாக சிதறிக் கிடந்தன. படுக்கைப் பாய் சுருட்டி வைக்கப் படவில்லை. புகையிலைக் காம்புகளும், பாய் கோரைகளும், காய் தொல்லிகளும் இன்னம் பல தினுசான தூசி துப்புகளும் பெருக்காததால் எங்கும் நிறைந்திருந்தன. எதற்கோ இறக்கி வைத்த பானை ஒன்று அடுக்கேறாமல் கீழே தனித்திருந்தது. அடுப்பு நிறைய கிடந்த சாம்பல் வழித் தெரிய வரும் ஆசாமி எங்கே என்று காத்திருந்தது. ஏன் இப்படி? தினம் இவ்விதம் வீடு இருந்தது கிடையாதே? இன்று மட்டும் யாது காரணம் என்று கேட்டால், கடந்த இரவு சம்பவத்தின் விளைவுதான் இவ்வளவும் என்று சொல்ல வேண்டும். ராமாயி என்னவோ கனாக் கண்டவள் போல உட்கார்ந்திருந்தாள். விடிந்தது தெரியும். கோழி கூப்பிட்டது தெரியும். தன்னுடைய கணவன், “பாலை அடுப்பிலே வச்சிருக்கிறேன். ஏதாவது பூனை, கீனை உருட்டி விடப் போவுது” என்று சொன்னதும் தெரியும். ஆனாலும் என்ன? அவள் மனத்திற்கு ஒன்றும் தெரியவில்லை. முழுதும் விளங்காத விடுகதையைப் போல் நெரடாக இருந்தது. சரி, இன்னும் எவ்வளவு நேரம் அப்படியே இருப்பாளோ பார்ப்போம்.

     நாகம்மாள் கண்காது தெரியாமல் இழுத்துப் போர்த்துக் கொண்டு தூங்குகிறாள். தூங்குகிறாளோ விழித்திருக்கிறாளோ? அடித்துப் போட்ட மாதிரி அசையாது இருக்கிறாள். முத்தாயா, ‘அம்மா, அம்மா’ என்று கூப்பிடுவதும், ராத்திரி தின்ன மறந்த கருப்பட்டியை ருசி பார்ப்பதுமாய் இருந்தாள். சின்னப்பன் வழக்கப்படி வெகு நேரத்திலேயே படுக்கையை விட்டு எழுந்து விட்டான். ஆனால் வெளியே செல்லவில்லை. காலையில் எழுந்ததும் எழாததுமாய் வெளியில் வரும் போது ‘பட்’ என்று நெலவு அடித்தது. ‘ஆ’ என்று அடிபட்ட இடத்தைத் தடவிக் கொண்டே வாயிற் படியில் இறங்கினான். ‘என்ன துர்ச்சகுனமோ விடிந்ததும் விடியாததுமாய்’ என்று கலவரத்துடன் பாலைக் கறந்து கொண்டு வந்தான். இன்று ஏனோ தோட்டம் போக அவனுக்கு மனம் இல்லை. ஆனால் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை. ஒரு மாதமாகக் கட்டுத்தரைக்கு ஒரு முளை வேண்டியிருந்தது. இன்று செய்து முடிப்போமென்று ஒரு வேப்பங்கொம்பை எடுத்துச் செதுக்க ஆரம்பித்தான். சின்னப்பன் ‘லொட், லொட்’ என அரிவாளினால் வெட்டும் போது சிறு சிறு மரத்துண்டுகள் தெறிக்கும். முத்தாயி அவைகளை ஒன்றுவிடாது பொறுக்கி விளையாட விரகு சேர்த்துக் கொண்டிருந்தாள். “இது தான் சாதம் செய்ய, இதுதான் குழம்பு செய்ய…” என்று முத்தாயா சொல்லும் போதெல்லாம், சின்னப்பன் மெதுவாகச் சிரிப்பான். சில சமயம் துண்டுகள் விழாத போது குழந்தை அருகில் வந்து, “ஏன் சின்னய்யா எனக்கு வெறகு கொடுக்க மாட்டாயா?” என்று கேட்பாள். அவனுக்கு அது ஒன்றும் காதில் விழாது. ஆயிரம் யோசனைகள் அவன் உள்ளத்திலே ஊசலாடிக் கொண்டிருக்கையில் குழந்தையின் கேள்வி எங்கே பதியப் போகிறது? “என்ன நாகம்மாளா பங்குப் பேச்சைக் கிளப்பியிருக்கிறாள்? இவளுக்கா இந்த யோசனை உதித்தது? இருக்காது. இவ்வளவு நாளாகத் தாய் போன்று ஒற்றுமையாக குடும்பத்தை நடத்தியவளா பிரிக்க முயல்கிறாள்? நல்லதனம் திடீரென்று மறைந்து விடுவதும் உண்டோ?” என்று எண்ணுவாள்.

     ‘நல்லதனமா? இப்பாதகி எப்போதும் தான் மனத்தில் இப்படி விஷத்தை வைத்துக் கொண்டிருந்தாளோ என்னவோ?’ ஆனால், அடுத்த கணமே, ‘இல்லை இந்த வெள்ளை மனதில் இப்போது தான் யாரோ கரியைத் தடவி விட்டார்கள். ஆனால் அவள் யாராயிருந்தாலும் சரி, பிரம்மாவாயிருந்தாலும் சரி பார்த்து விடுகிறேன்” என்று தனக்குத் தானே கோபப்படுவான்.

     பொழுது வேலிக்கு மேல் வந்து விட்டது. வெயில் சுள்ளென்று அடித்தது. பந்தக்காலில் கட்டியிருந்த ஆட்டுக்குட்டி, ‘ம்மா, ம்மா’ எனக் கத்தியது. அதைத் தொடர்ந்து எங்கோ ஒரு சேவல் ‘படபட’வென இறக்கையை அடித்துக் கொண்டது. “ஏண்டா யாரடா வேலியோரம் ஆட்டை உட்டது” என்று ஒரு பெண் குரலும் ஓங்கி எழுந்தது. சின்னப்பன் குடலறுந்தவன் போல காரணமின்றித் திடுக்கிட்டுப் பின்னும் தன் காரியத்தைத் தொடங்கினான். ராமாயி அவன் அருகில் வந்து நின்றாள்.

     “ஏதாவது வேலை இருந்தால் போய்ப் பார்க்கிறது தானே? ஏன் இப்படி பனைமரம் மாதிரி நின்று கொண்டிருக்கிறாய்” என்றான்.

     ராமாயி சுற்றிலும் பார்த்து விட்டு உள்ளே போனாள்.

     மத்தியானம் வரையில் சின்னப்பன் முளை செதுக்குவதிலேயே இருந்தான். அதற்குள் ராமாயி வீட்டு வேலைகளையெல்லாம் செய்து முடித்து விட்டு தன் கணவனைச் சாப்பிடக் கூப்பிட்டாள். சின்னப்பன் “நான் அப்புறம் சாப்பிட்டுக் கொள்கிறேன். குழந்தையைக் கூப்பிட்டு சாதம் போடு” என்று சொல்லிவிட்டான்.

     ராமாயி மெதுவாக, “அக்கா இப்பொழுதுதான் எழுந்திருந்தாள் போலிருக்குது. சாப்பிடக் கூப்பிடட்டுமா?” என்றாள்.

     “தினம் கூப்பிடுகிறதுதான் வழக்கமா?”

     “இல்லெ, இல்லெ…” என்று இழுத்தாள் ராமாயி.

     “என்ன இல்லெ?…”

     “கோவிச்சிட்டு பேசாதிருந்தாலும் இருப்பாள். ஒரு பேச்சு கூப்பிட்டதினால் என்ன குறைஞ்சு போயிடும்?”

     சின்னப்பனும் மனுஷத்வம் உள்ளவன் தான். ஹிருதயமற்ற போக்கே அவனுக்குப் பிடிக்காது. என்னவோ தெரியாத்தனத்தில் கேட்டிருப்பாள் என்று நினைத்தான்.

     “சரிதான் போய்க் கூப்பிடு” என்றான்.

     ராமாயி உடனே குழந்தையைத் தேடுகிற மாதிரி, “முத்து இங்கேயா இருக்கிறாய்” என்று கேட்டுக் கொண்டே நாகம்மாள் படுத்திருக்கும் அறைக்குள் போனாள்.

     “இங்கே அவள் இல்லை” என்று நாகம்மாளே பதில் சொன்னாள். ராமாயி கனிவுட்ன, “எங்காவது அந்தப்பக்கம் இருப்பாள் அக்கா, நீயாவது வா, சோறு தின்னு” என்றாள்.

     “உடம்புக்கு நல்லாயிருந்தால் நீ சொல்ல வேண்டுமா ஆயா?” என்று எழுந்து உட்கார்ந்து, “கொஞ்சம் சுடுதண்ணி இருந்தா கொண்டு வா” என்றாள்.

     வாஸ்தவத்தில் வெந்நீருக்கு அவசியமே இல்லை. ஆனால் நிஜ வியாதிக்காரி என்று காட்ட வேண்டாமா? ராமாயி, “இதோ கொண்டாறேன், அக்கா” என்று வெளியில் வந்தாள்.

     நாகம்மாள் தனக்குள், ‘அதிக விறைப்பாயிருப்பதும் ஆபத்தே. முள்ளுமேல் போட்ட வேட்டியை மெள்ள மெள்ளத்தான் எடுக்க வேணும். இவர்களுக்குச் சொல்கிறேன் புத்தி’ என்று நினைத்தாள். சின்னப்பன் தலையை அசைத்து, “என்ன சமாதானம் பண்ணினாயா” என்று ராமாயியைக் கேட்டான்.

     அவள் சிரித்தாள். “ஓஹோ நீயும் தேவலாமே” என்று அவனும் சேர்ந்து சிரித்தான்.

     அதே சமயம் முத்தாயி, “சின்னையா, யாரோ வந்திருக்காங்க” என்று சொல்லிக் கொண்டு வெளியிலிருந்து ஓடி வந்தாள்.

     “யாரது” என்று விசாரித்தவாறே சின்னப்பன் வெளியே எட்டிப் பார்த்தான். வாசலில் சக்கிலியாள் நின்றிருந்தான். சின்னப்பனுக்கு அவனைக் கண்டதும் பாதி விஷயம் விளங்கி விட்டது. மைத்துனன் காரியம் தாட்டிவிட்டது, அவ்வளவு தான். “என்னடா?” என்று சின்னப்பன் வாய் திறப்பதற்குள், “அதுதானுங்க, பேச்சு, மூச்சு அத்துப் போச்சு. உடனே கவுண்டிச்சியோடு புறப்பட வேண்டியதுதானுங்க” என்றான். இதை அவன் சொல்லி முடிக்க முக்கால் நாழிகைக்கு மேல் பிடித்தது.

     ராமாயிக்கு இதைக் கேட்டதும் அளவு கடந்த துக்கம் ஏற்பட்டது. அவளுக்குத் தெரியும், இம்மாதிரி சக்கிலியாட்கள் இம்மாதிரிதான், சாவு நேர்ந்தாலும், சீக்கிரத்தில் நேரடியாகச் சொல்ல மாட்டார்கள். இதுதான் அவர்கள் வழக்கம். வேறு யாராவது பாத்தியப்படாதவர்களிடமா யிருந்தால், ‘அங்கே ஒரு பெரிய காரியமாப் போச்சுங்க’ என்று பளிச்சென்று சொல்லி விடுவார்கள். “இந்தப் பத்து நாளா பல்லி சொன்னது சரியாப் போச்சு” என்று ராமாயி பிரலாபிக்கலானாள். சின்னப்பன் அதறாமல், “ஏண்டா அப்படியொன்றும் பயமில்லையே? போகிற வரை பேச்சு இருக்குமல்ல?” என்றான்.

     சக்கிலி பேசவில்லை. அவன் விழியும் மௌனமும், ‘போய் வெகு நேரம் ஆகிவிட்டது’ என்பதைத் தெரிவித்தது.

     “ஏண்டாப்பா உசுரு இருந்தா சக்கிலியாள் விடுவாங்களா?” என்று கேட்டுக் கொண்டே சின்னப்பனின் பெரியப்பா வந்தார்.

     “புறப்பட வேண்டியதுதான். இதோ சங்கதி தெரிவிக்கிறேன். காடு கரையிலிருப்பவர்கள் வந்து சேரக் கொஞ்சம் நேரமாகுமல்ல?” என்றார் பெரியவர்.

     அவர் சொல்வதும் செய்வதும் சரியாக இருக்கும். அரை நொடியில் அங்கு, இங்கிருந்த யாவருக்கும் செய்தியைப் பரப்பி விட்டார். அதைக் காதில் கேட்டதும் சின்னப்பனின் நெருங்கிய பந்துக்கள் புறப்படத் தயாரானார்கள்.

     முதலில் நாகம்மாளும் தங்களுடன் வருவது உசிதமென நினைத்தான். ஆனால் வீட்டைப் பார்த்துக் கொள்ள ஒரு ஆள் வேண்டாமா?

     ஆகையால் நாகம்மாளிடம், “நீங்க வீட்டைப் பாத்துக் கொள்ளுங்க. அவள் அங்கிருப்பதானாலும் நான் சீக்கிரமாக வந்து விடுகிறேன்” என்று முத்தாயாளை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு புறப்பட்டான்.

     இந்த மாதிரி சமயங்களில் குரோதம் மறைவது சகஜந்தானே.

     “நீங்கள் வேணுமானாலும் இருந்து வாங்க, அதற்கென்ன?” என்றாள் நாகம்மாள். அவள் என்ன நினைத்துச் சொன்னாளோ நமக்குத் தெரியாது. ஆண்களும், பெண்களுமாகப் பத்துப் பதினைந்து பேருக்குப் புறப்பட்டார்கள். ராமாயி ‘போய் வருகிறேன்’ என்று நாகம்மாளிடம் சொல்லவும் மறந்து விட்டாள். ஆனால் நாகம்மாள் அவைகள் ஒன்றையும் லட்சியம் செய்யவில்லை. ‘நல்ல சமயத்தில் இருவரும் போனார்கள். பொறுங்கள், உங்களைத் தொலைத்து விடுகிறேன்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

ஆர். சண்முகசுந்தரம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 61கல்கியின் பார்த்திபன் கனவு – 61

அத்தியாயம் 61 பொன்னன் பிரிவு பொன்னன் அந்த அதல பாதாளமான அருவிக் குளத்தில் இறங்கிய அதே சமயத்தில், சிவனடியார் அருவியின் தாரைக்குப் பின்னாலிருந்து வெளிப்பட்டார். பொன்னனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைச் சொல்லி முடியாது. அவன் மேலே போகலாமா, வேண்டாமா என்று தயங்கி நின்றபோது,

கல்கியின் பார்த்திபன் கனவு – 35கல்கியின் பார்த்திபன் கனவு – 35

அத்தியாயம் இருபத்தைந்து சமய சஞ்சீவி தன்னைப் பின்தொடர்ந்து இரண்டு பேர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியாத பொன்னன், அரண்மனை தோட்டத்திற்குள் உற்சாகத்துடன் போய்க் கொண்டிருந்தான். இடையிடையே அவன், “வள்ளி! அதோ அந்த மாமரத்தடியில் தான் மகாராஜாவும் மகாராணியும் சாயங்கால வேளையிலே உட்காருவது

சாவியின் ‘ஊரார்’ – 07சாவியின் ‘ஊரார்’ – 07

7 கடிதத்தைப் பிரித்துப் படித்தாள் கமலா. “கபாலி என்ன எழுதியிருக்கான்? நல்ல சமாசாரம் தானே?” செருப்பு கடித்த இடத்தில் எண்ணெயைத் தடவிக் கொண்டே கேட்டார் சாமியார். “ஆமாங்க, அடுத்த வெள்ளிக் கிழமை வராராம். உடனே புறப்படணுமாம்.” “உனக்கு நல்ல காலம் பொறந்துட்டுதுன்னு