ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 13’

ற்றில் பாதத்தளவு ஜலம் ‘குரு குரு’வென ஓடிக் கொண்டிருந்தது. சில இடங்களில் பாறையோரங்களில் முழங்காலளவு ஜலம் கூட நின்றிருந்தது. அங்கெல்லாம் ஆற்று நீரில் சின்னஞ்சிறு மீன்கள் துள்ளி விழுந்து கொண்டிருந்தன. அவைகளைச் சமயம் பார்த்து அடித்துக் கொண்டு போவதற்கு இரண்டொரு கொக்குகளும், வேறு சில பட்சிகளும் கரையோரத்தில் உட்கார்ந்திருந்தன. நாகம்மாள் அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே தோப்பினுள் அடியெடுத்து வைத்தாள். அவள் இப்போது போய்க் கொண்டிருக்கும் இடம் சற்று வழுக்கலானது. ஆற்றங்கரை மேட்டிலிருந்து நீர்வரை பெரும் பாறை பாசி பூத்து புல்லும், பூண்டும் சூழ்ந்திருந்தது. அங்கே ஜாக்கிரதையாகத் தான் காலடி எடுத்து வைக்க வேண்டும். கொஞ்சம் தவறினாலும் முழங்கால் உடைந்து விடும். நாகம்மாளுக்குச் சொல்ல வேண்டுமா? காந்த பூமியை இரும்பு பற்றியிருப்பது போலல்லவா அவள் பாதங்கள் ஒட்டிப் போகின்றன! க்ஷணத்தில் பாறை தாண்டி மேலே நடந்தாள்.

     இனித்தான் வெளிச்சத்திலிருந்து இருட்டிற்கு வந்த தடுமாற்றம் ஏற்படும். ஆனால் பழக்கமானவர்களுக்கு இது ஒரு பொருட்டேயல்ல. நாகம்மாளின் வீச்சு நடையிலிருந்து இதற்கு முன்னும் அவள் இங்கு வந்து பழகியிருக்கிறாள் என்று தெரிகிறது. அப்போது நல்ல மத்தியான வேலைக்கு கிட்டத்தட்ட ஆகிவிட்டதென்றாலும் அங்கு ‘கருகும்’ மெனவே இருந்தது. அவ்விடத்தில் ஒரு மனிதன் அல்ல, மலையே இருந்தாலும் வெளியில் உள்ளவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியாது. நாகம்மாள் நேராகப் போய்க் கொண்டிருந்த பெரிய வழியை விட்டு குறுக்கு வழியாக ஒரு சந்திற்குள் புகுந்தாள். சிறிது தூரத்தில் ஒரு சமசதுரமான இடத்திற்கு வந்தாள். மறைவான அவ்விடத்தில் ஒரு சிறு மைதானம் பூசி வழித்த களம் போல அவ்வளவு சுத்தமாக எப்படியிருக்கிறதென்ற சந்தேகம் எழலாம். இந்த இடம் இரண்டொரு வருஷத்திற்கு முன்பெல்லாம் ஒரு காரியத்துக்காக உபயோகப்பட்டு வந்தது. ஆனால் போலீசாரின் ஒரு நாளைய பிரவேசத்தால் சட்டி முட்டிகளும், வேலாம் பட்டைகளும் மூங்கில் குழாய்களும் இன்னும் கட்டுப்பானை சாராயம் காய்ச்சுவதற்கு வேண்டிய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. பின்பு அந்த இடத்திற்கு அவ்வளவாகப் போக்குவரத்தில்லை. தன்னுடைய உல்லாச நண்பர்களை இழந்து விட்டதனாலோ என்னவோ அந்த இடமும் வர வர சோபை இழந்து வருகிறது.

     அம்மைதானத்தைத் தாண்டி சிறிது தூரத்தில் இரண்டு நாகமரம் கிட்டக் கிட்ட முட்டிக் கொண்டிருக்கின்றன. அங்கு வந்தவுடன் நாகம்மாள் தன் வீச்சு நடையை நிறுத்திவிட்டு மரத்தடியில் உட்கார்ந்தாள். அதே சமயம் “வந்து விட்டாயா?” என்ற குரல் எங்கிருந்தோ வந்தது.

     என்ன இது, இந்தத் தனியிடத்தில் யார் இப்படி அழைப்பது? பேயா, பிசாசா, காட்டேறியா அல்லது வனதேவதை தானோ என்ற சந்தேகம் வேண்டாம். இதோ அந்தக் குரலுக்குச் சொந்தக்காரனான கெட்டியப்பனே கீழே இறங்கி வருகிறான். “நான் வெகுநேரமாப் பாத்துக்கிட்டிருந்தேனே? ஏன் இவ்வளவு நேரம்? தடத்திலே யாருடனோ நின்று பேசிக்கிட்டிருந்தாயே, யார் அது?” என்று கெட்டியப்பன் கேட்டான்.

     “என்ன, இங்கிருந்து தெரியிதா?”

     “ஆமாம் உச்சாணிக்கிளையிலிருந்து பாத்தேன். சற்று மங்கலாத் தெரிஞ்சது.”

     “உன் தீரமே தீரம்” என்று வியந்து கொண்டே நாகம்மாள், “வெளியே தலைகாட்ட முடியலை” என்றாள்.

     “ஏன் அப்படி?”

     “என்னத்தைச் சொல்றது? நான் இந்த பத்து இருபது நாளாய் வாய் திறப்பதில்லை. பேசாமல் என்ன நடக்கிறதென சோதிச்சுப் பார்த்தேன். பேச்சு அப்படியே தணிகிறது.”

     “நீ சொல்றது ஒண்ணுமே தெரியல்லையே!” என்றான் கெட்டியப்பன்.

     “இதுக்கு ஒரு வழி சொல்லு. இனி, என்னாலே அவர்களோடு சேந்து வாழ முடியாது. அவனும் அவன் பெண்டாட்டியும் எக்கேடோ கெட்டுப் போகட்டும். அதைப் பத்தி துளியும் எனக்கு அக்கரையில்ல. நான் பிரிஞ்சு வந்தாலே போதும்.”

     “நானும் அதைத்தானே சொல்லிட்டிருக்கிறேன்” என்றான் கெட்டியப்பன்.

     “ஆமாம் இன்னும் எத்தனை நாளைக்குப் பேசாமலே இருப்பது?”

     “ஏன், நீ சொல்லலையா? நேரடியாச் சொல்றதுதானே? தெரிஞ்சு போகுது.”

     “எப்படி சொல்றதிண்ணுதான் எனக்கு கஷ்டமாயிருக்குது. ஏனோ, சொல்லாமலே உட்டுடலாமிண்ணு கூடப் பாக்கிறேன்.”

     “சே, சே, அதுக்குத்தானா இமுட்டுக் கூடிக்கூடிப் பேசியது. கடைசியிலே இப்படிச் செய்வாய்ன்னு தெரிஞ்சிருந்தா, நான் முன்னுக்கு வந்திருக்கவே மாட்டேன்” என்று சலிப்போடு கூறினான் கெட்டியப்பன்.

     “நீ அப்படியெல்லாம் என்னை நினைக்காதே. நான் கேட்டுடுறேன் அங்கேயே.”

     “அங்கே என்றால் எங்கே? சின்னப்பனிடம் தானே?” என்று அவன் அவசரமாகக் கேட்டான்.

     “ஆமாம்” என்று நாகம்மாள் தலையசைத்தாள்.

     “சரிதான், முதலில் என்னவோ சொன்னயே, அது என்ன? யார் என்ன சொல்றாங்க?”

     “யாரா? காலுக்கு வராத சில்லறையெல்லாம் தான், அந்த வெட்டிப் பேச்சு பேசுது. நான் பாகத்தைப் பிரிக்கச் சொன்னால் முடியாதின்னு சொன்னால் என்ன செய்யறது?”

     “என்ன செய்யறதா? அப்புறம் சின்னப்பன் ஏத்துப் பூட்டியிடுவானா? தண்ணி, காடு பாய்ந்திடுமா? அவன் தான் தோட்டத்திற்குள் கால எடுத்து வைச்சுற முடியுமா?” என்று கோபமாகக் கேட்டான் கெட்டியப்பன்.

     “இதெல்லாம் வம்புதானே?”

     “இதில் வம்பு கிம்பு ஒண்ணுமில்லே. அவன் ஒழுங்கா ஒத்து வராமே போனாதானே வம்பு தேடிக்கிறான். நீ வம்புக்கு ஒண்ணும் போகலியே? இதில் தப்பு என்ன? உம் புருஷன் சம்பாதிச்சதிலே உனக்குப் பாகம் இல்லையா? இப்படி நீ சும்மாவே இருந்தா அவன் தோட்டம் காடெல்லாம் வித்துக்கிட்டு மாமியார் ஊர் போய்விடறான். அவள் போட்ட மாய பொடி தானே இது.”

     “ஆமா, ஆமாம். நீ சொல்றது சரிதான். அந்த முண்டை வந்து போன பிறகு தானே எனக்கு விசயம் பூரா தெரிஞ்சுது. எப்படியோ ஒரு தப்புத் தண்டா இல்லாமே காரியம் ஆனாப் போதும்.”

     “அதைப் பத்திக் கவலைப்படாதே. நான் அப்படி உன்னை மாட்டி விடுவனா? வீணா நீ ஏன் அங்கலாய்க்கிறாய். சட்டுப்புட்டுனு காரியத்தில் கண்ணாயிருந்து சாதிக்கப் பாரு. வீணா நாளை ஓட்டாதே” என்றான் கெட்டியப்பன்.

     “அப்படியே ஆவட்டும். நீ மற்றவங்க கிட்டயும் இதைப் பத்தி கலந்து கொள். அவுங்க என்ன சொல்கிறாங்க பாப்போம்.”

     “என்ன, நம்ம மணியக்கார அண்ணனிடம் தானே? நல்லாச் சொன்னாய். அவுங்க இதுக்கு அட்டி சொல்லமாட்டாங்க” என்றான் கெட்டியப்பன்.

     “என்னமோப்பா. நீங்க எல்லாம் பாத்து என்னை எப்படிச் செய்யச் சொல்றீங்களோ அப்படிச் செய்றேன். என்னாலே வஞ்சகம் இல்லே. அதுதான் சொல்றதெல்லாம் சொல்லீட்டேன். நான் போறேன்” என்று கிளம்பினாள் நாகம்மாள்.

     “சரி, சரி. சொன்னதெல்லாம் மனசிலிருக்கட்டும் ஏனோ தானோன்னு இருந்திட்டா கடைசியிலே நீயும் உம்மவளும் ஓடு எடுக்க வேண்டியதுதான்” என்று எச்சரித்து விட்டு, “நானும் கூட வாரேன். போக வேண்டியதுதான்” என்று புறப்பட்டான்.

     “நல்ல கூத்து. நாம் போற மாட்டும் இங்கேயே இருப்பா. இது வேறெ யாராச்சு கண்டாக்கா போச்சு. ஊறுதென்றால் பறக்கிறதின்னும் சொல்லும் சனங்கள். அப்புறம் என்ன வேணுமானாலும் ஆரம்பிச்சு விடுவாங்க” என்றாள்.

     “அப்படி எவனாவது வாய் அசைச்சா, குதிங்கால் நரம்பை வெட்டீட மாட்டனா? நீ ஒண்ணுக்கும் பதறாதே” என்றான் கெட்டியப்பன்.

     “நானும் அப்படித்தான் மிரட்டிக்கிட்டு வாறேன்” என்று கூறிக்கொண்டே நாகம்மாள் நடந்தாள்.

ஆர். சண்முகசுந்தரம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 09அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 09

அம்மாவுக்கு ஒரு தம்பி உண்டு. சுத்த தத்தாரி. நாங்கள் கஷ்டப்பட்ட காலத்திலே கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. நான் மிராசுதாரிடம் சிநேகிதமான பிறகு என்னை அண்டினான். அவன் அந்த உலகத்து ஆசாமி. அவன் மூலம் பணம் அனுப்புவேன். அவன் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து அக்காவின்

கல்கியின் பார்த்திபன் கனவு – 51கல்கியின் பார்த்திபன் கனவு – 51

அத்தியாயம் 51 காளியின் தாகம் பேச்சுக்குரல் நெருங்கி வருவதாகத் தோன்றவே, பொன்னன் விக்கிரமனை மண்டபத்துக்குள் ஒதுக்குப்புறமாக இருக்கச் சொல்லிவிட்டு எட்டிப் பார்த்தான். மண்டபத்தை நோக்கி இரண்டு பேர் வருவது தெரிந்தது. ஆனால் இருட்டில் முகம் ஒன்றும் தெரியவில்லை. அப்போது பளீரென்று ஒரு

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 15கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 15

அத்தியாயம் 15 – பசியும் புகையும்      வீட்டுக் கதவு பூட்டியிருப்பது கண்டு ஒரு கணம் திகைத்து நின்றான் முத்தையன். இதை அவன் எதிர் பார்க்கவேயில்லை. நின்று யோசிக்கவும் நேரமில்லை. கைகளை நெறித்துக் கொண்டான். உதட்டைக் கடித்துக் கொண்டான். கணத்துக்குக் கணம் போலீஸ்காரர்களின்