ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 9’

பொங்கல் கழிந்து ஒரு மாதமாயிற்று. ஆயினும் அதைப் பற்றிய பேச்சே இன்னும் ஊரில் அடிப்பட்டுக் கொண்டிருந்தது. பள்ளுப்பறை பதினெட்டுச் சாதிக்கும் இந்தப் பேச்சு உபயோகமான பொழுது போக்காயிருந்தது. “அக்கா, என்னூட்டிலே அப்படி குபு குபுன்னு பொங்கல் சாய்ந்திருக்காட்டி என்னாவது நடந்திருக்கும்” என்பாள் ஒருத்தி.

     “ஆத்தாள் கிருபை இல்லாட்டி கட்டாப்பு எம்பொண்ணு பிழைக்கிறதேது” என்பாள் மற்றவள். இப்படி அம்மனுக்குக் கூட அதனால் கௌரவம் உயரத்தான் செய்தது. இந்த வைபவத்தை ஒரு மாதம் அல்ல, ஒரு வருஷத்திற்கு பின்னும் பேசிக் கொண்டிருக்கச் சிலர் தயாராயிருந்தார்கள். ஒரு விஷயம் அது நல்லதோ கெட்டதோ, அவசியமோ அனாவசியமோ, ஆகக் கூடியதோ ஆக முடியாததோ என்ன சங்கதியானாலும் அதை வளர்த்திக் கொண்டே பொழுதைக் கழிப்பதில் தான் சிலருக்குப் பிரியம். அம்மாதிரி விவரங்கள் அவர்களோடு நிற்காம வீட்டுக்கு வீடு பரவி, கூடிய சீக்கிரம் கிராமம் முழுவதும் வியாபித்து விடும். இப்போது இப்படிப்பட்டவர்களுக்குத் தான் கெட்டியப்பன் – நாகம்மாள் கிடைத்து விட்டார்களே. இனி சும்மாவா விடுவார்கள்!

     காட்டிலும், மேட்டிலும், களத்திலும், இட்டேறியிலும் முதலில் ஓரிருவர் ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்தது பின்பு பகிரங்க ரகசியமாயிற்று. உள்ளேயிருப்பவர்களுக்குத் தெரியாததெல்லாம் எப்படித்தான் வெளியில் இருப்பவர்களுக்குத் தெரிந்து விடுகிறதோ! ஒரு வேளை கற்பனை ரொம்பவும் உதவி செய்கிறது போலும்! நாலைச் சொல்லி வைப்போமே; பத்துக் கல்லு போட்டால் ஒரு கல் குறியாக விழாதா என்பது அவர்கள் எண்ணம். அதன் பின் நுணுக்கமாக ஆராய்ச்சி செய்யத் தலைப்பட்டு விடுகிறார்கள். சின்னப்பனுக்கு இதைக் கேட்கும் தோறும் ஒரு சாண் கயிற்றை எடுத்துச் சுறுக்குப் போட்டுக் கொள்ளலாமாவென்று தோன்றும். பரம்பரையாக அவனுடைய பாட்டன், பூட்டனெல்லாம் எவ்வளவோ மானமரியாதையாக வாழ்ந்திருக்கிறார்கள். அவனுடைய தகப்பனார் காலத்தில் அவர் தான் ஊருக்குப் பெரிய மனிதர். அதாவது தோட்டி முதற்கொண்டு தொண்டைமான் வரையிலும் அனைவரும் தங்களுடைய வழக்குகளைத் தீர்த்துக் கொள்ள அவரிடம் தான் வருவார்கள். அவர் குணத்தில் தங்கமானவராய் இருந்ததைப் போலவே, பல்வேறு சச்சரவுகளையும் இரண்டு கட்சியாரும் சரியென ஒத்துக் கொள்ளும்படி சொல்வார். கடைசியாக மனஸ்தாபத்தோடு வந்தவர்கள், மகிழ்ச்சியோடு “மவராசன் எது சொன்னாலும் ரண்டு கண்ணுக்கு மூக்கு வெச்சது போலத்தான்” என்று வாழ்த்திக் கொண்டே போவார்கள். சின்னப்பனும் தன் தகப்பனைப் போல ‘நேர்மையானவன்’தான் என்றாலும் இப்போது இவனிடத்தில் யாரும் எந்த வழக்குகளையும் தீர்த்து வைக்கச் சொல்வதில்லை. இதற்குப் பல காரணங்கள்; முக்கியமாக ஊருக்குள் இரண்டு கட்சி இருப்பதுதான்.

     யாரும் நேரடியாகத் தன்னிடம் நாகம்மாளின் நடத்தையைப் பற்றிச் சொல்வதில்லையென்றாலும், அப்போதைக்கப்போது நடப்பு விவரங்கள் சின்னப்பனுக்குத் தெரிந்து கொண்டுதானிருந்தன. ஒரு நாள் இதை மனதில் வைத்துக் கொண்டு தன் மனைவியை இரண்டு அடி பலமாகப் போட்டு விட்டான். பாவம், எதிர்த்துச் சொல்லக்கூடத் தெரியாத ராமாயி தன் தலைவிதியை நொந்து கொண்டே குப்புறப்படுத்து அழு அழு என்று அழுததுதான் மிச்சம். இன்னொரு நாள் தன் மனைவியிடம் “நீதான் சொல்லக்கூடாதா?” என்றான்.

     “என்ன?” என்று அவள் கேட்டாள்.

     “என்னவா? அதுதான் ஊர் சிரிக்குதே, உங்காது செவிடாவா போச்சு?”

     “அதெல்லாம் கேட்டுத்தான் இருக்கிறேன். என்னை என்ன பண்ணச் சொல்றீங்க?” என்றாள்.

     சின்னப்பன் பேசாமல் இருந்தான். அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்படியே பிறர் நினைப்பார்கள்? என்ன அசிங்கம்! குடும்பத்தின் பெயரைக் கெடுக்கத் தோன்றிவிட்டாளே! இந்த நாசக்காரியால் இன்னும் என்னென்ன அனர்த்தங்கள் விளையுமோ என்று நினைக்கும் போதே அவனுக்கு நடுக்கமெடுத்தது.

     “எழுந்து போங்க, பால் கறக்க நேரமாகவில்லையா? என்னத்துக்கு விருமத்தி பிடிச்சாப்பலே உக்காந்திட்டே இருக்கிறீங்க” என்றாள் ராமாயி.

     சின்னப்பனுக்கு அப்போதுதான் இன்னும் பால் கறக்காமல் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்தது. ‘உம்’ என்று ஒரு விதச் சலிப்போடு எழுந்தான். ஒரு மூலையில் ஒதுக்கி வைத்திருந்த குப்பைகளைப் பார்த்து “இதெ வழிச்சுக் கொட்டப்படாதா?” என்றான் வெறுப்போடு. அதே சமயம் திண்ணையோரம் கோழிக்கூடு இன்னும் மூடாமல் இருப்பதையும், கோழியும் குஞ்சுகளும் சத்தம் இடுவதையும் கண்டான். இவைகளை எல்லாம் காணக்காண சின்னப்பன் கோபம் அதிகரித்துக் கொண்டே வந்தது.

     “ஏன் இதெல்லாம் அப்படியப்படியே கிடக்குது? பாங்காக் கவனிக்க ஒருத்தரும் இல்லையா?” என்றான் கோபமாக. அதட்டிப் பேசினாலே விறுக்கெனப் பயந்து கொள்கிற சுபாவம் உள்ளவள் ராமாயி. தன் கணவன் என்ன கேட்டான் என்பதையே மறந்துவிட்டு, “இதெல்லாம் அக்கா தான் பாத்துக்குவா” என்றாள்.

     “அவளுக்கு வரவரப் புத்தியும் கெட்டுப்போச்சு” என்றான் சாதாரணமாக. தன் அண்ணன் மனைவியிடம் சின்னப்பனுக்கு எப்போதும் அதிக மதிப்பு உண்டு. ஆதியிலிருந்து ‘அவர்கள், நீங்கள்’ என்று மரியாதை தப்பி ஒரு போதும் குறிப்பிட்டதில்லை. ஆனால் இன்று அவன் வாயிலிருந்து ‘அவள்’ என்று வருகிறது. இதெல்லாம் நடத்தையின் பலன் போலும்!

     அப்போது நாகம்மாள் எங்கிருந்தோ வந்துவிட்டாள். ஆகையால் இவர்கள் சம்பாஷனை அப்படியே பாதியில் நிற்க வேண்டியதாயிற்று. சின்னப்பன் அருகிலிருந்த பால் கலயத்தை எடுத்துக் கொண்டு கட்டத்தரைக்குப் போனான். அவனிடம் இப்போது நாலு எருதுகள் தானிருக்கின்றன. கறவைக்காக இருந்த இரண்டு பசுக்களில் ஒன்றைப் போன வருஷம் திருப்பூர் தேரில் விற்று விட்டான். அதற்குப் பதிலாக வேறு பசு வாங்கவில்லை. குழந்தை முத்தம்மாள் பால் குடியை மறந்து விட்டாளாதலால் அந்த ஒரு பசுவே அவர்களுக்கு எதேஷ்டமாக இருந்தது. காளைகள் எப்பொழுதும் தோட்டத்தில் தானிருக்கும். பசுவையும் பால் கறந்தவுடன் தோட்டத்திற்குப் பிடித்துக் கொண்டு போய் விடுவான். சின்னப்பனைக் கண்டவுடன் கன்றுக்குட்டி ஒரு குதி துள்ளிக் குதித்தது. ‘இந்த வாயில்லாப் பண்டத்திற்குக் கூட விசுவாசம் இருக்கிறது. அந்தப் பழிகாரிக்கு அது கூட இல்லையே’ என்று நினைத்தான். வேட்டியை முழங்காலுக்கு மேல் இழுத்துக் கோவணம் போட்டுக் கட்டிக் கொண்டு, எதிரில் துடித்துக் கொண்டிருந்த கன்றிடம், “பால் குடிக்க ரொம்ப ஆசையா” என்று அதன் ரஞ்சிதமான முதுகைத் தடவிக் கொண்டே அவிழ்த்து விட்டான். கன்று நாலு கால் பாய்ச்சலில் சென்று அடிமடியை நாலு மோது மோதி வாயை வைத்துச் சப்பியது. அருகே, எங்கோ சென்று கொண்டிருந்த எருமை ஒன்று இந்தக் காட்சியை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றது. எருமையையும் பசுவையும் சின்னப்பன் மாறி மாறிப் பார்த்தான். ஒருவேளை அந்த வெள்ளைக்கும் கருப்புக்கும் உள்ள ஒற்றுமையைப் போலத்தான் குடும்பத்திலும் தற்போது ஒற்றுமை இருக்கிறதென நினைத்தானோ என்னவோ!

     பின்பு பால் கறந்து கொண்டு வீட்டிற்குத் திரும்பினான். வீதித் திண்ணையோரம் முத்தாயி ஒண்டியாக நின்றிருப்பதைக் கண்டதும், “இங்கே ஏனாத்தா நிக்கிறாய்?” என்று அன்பாக அதனுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான். “அம்மாளைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். இப்பத்தான் மாமன் கூட்டிப் போனாங்க” என்றாள் முத்தாயி. ‘மாமன்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் ‘திகீல்’ என்றது சின்னப்பனுக்கு. சகஜமாக மாமன் என்று முத்தாயி கெட்டியப்பனைத் தான் சொல்வாள்.

     “சரி கண்ணு நீ இப்படி விளையாடீட்டு இரு. அம்மா வருவாங்க” என்று கூறிவிட்டு அவன் உள்ளே போனான்.

     ராமாயி உள்ளிருந்தவாறே “நான் போயிட்டா வெடுக்கிண்ணு போயிடும்; இந்தச் சங்காத்தம் ஒழிஞ்ச மாதிரி” என்று உரக்கச் சொல்லிக் கொண்டு வந்தாள். சின்னப்பன் தெரிந்து கொண்டவனாய், “நீயும் போக வேண்டாம். அவளும் போக வேண்டாம். இந்தா பாலைக் காச்சு போ” என்று பால் கலயத்தைக் கொடுத்தான்.

     ராமாயி என்னவோ முணுமுணுத்துக் கொண்டே உள்ளே போய் அடுப்பை மூட்டினாள். சின்னப்பன் திண்ணையின் மீது மேல் துண்டை விரித்துப் படுத்தான்.

     முத்தாயி “சின்னய்யா, என் கிலுகிலுப்பையைப் பாத்தயா?” என்று ஆனந்தப் பெருக்குடன் ஓடி வந்து அவன் மடி மீது விழுந்தாள். சின்னப்பன் அவளிடமிருந்த கிலுகிலுப்பையை வாங்கிப் பார்த்தான். புத்தம் புதிசாக பளபளவென்று மேல்தகடு இன்னும் மெருகு போகாது இருக்கக் கண்டு, “இது ஏது?” என்று ஆச்சரியப்பட்டான். ஒரு வேளை பொங்கலில் வாங்கினதாக இருக்குமோ? அப்படியானால் இந்தப் பளபளப்பு இன்னும் இருக்குமா? குழந்தைதான் உடைக்காமல் இன்னும் விட்டு வைக்குமா?

     சின்னப்பன், குழந்தையின் தலையை அன்புடன் தடவி விட்டுக் கொண்டு, “இது உனக்கு யாரு கொடுத்தாங்க” என்று கேட்டான். அதற்குள் தலையில் நிறைய மண் இருப்பதைப் பார்த்து நன்றாகத் தட்டிவிட்டுக் கொண்டே “யாராச்சு தலையில் மண்ணைப் போட்டுக் கொண்டா விளையாடுவாங்க?” என்றான்.

     “எல்லாம் மண்ணை அள்ளிப் போட்டுக்கரப்போ, நான் போட்டுக்காமே எப்படியிருக்கிறது சின்னையா?” என்று கேட்டது குழந்தை.

     சின்னப்பனுக்கு சிரிப்பு வந்தது. ஆமாம் வாஸ்தவம் தான். கோவணம் கட்டாத ஊரில், கோவணம் கட்டினவன் பைத்தியக்காரன் தான். ஆனாலும் இந்தக் குழந்தைக்கு இருக்கிற யூகம் இதைப் பெற்றவளுக்கு இல்லையே! எல்லாரும், யோக்கியமாக ஒழுங்காக இருக்கிற போது அவளுக்கேன் புத்தி இப்படிப் போச்சு என்று எண்ணினான். முத்தாயி என்னென்னவோ கேட்டுக் கொண்டேயிருந்தாள். அவள் கேட்கிற போதெல்லாம், “ஆம், இல்லை” என்று சொல்லிக் கொண்டிருந்தான் சின்னப்பன். “என்னப்பா, அப்பனும் மவளும் கொம்மாளம் போடறீங்க” என்று குரல் கேட்கவும் சின்னப்பன் திரும்பிப் பார்த்தான். தடியை ஊன்றிக் கொண்டு மேக்கால வளவுப் பெரியவர் நிற்பதைப் பார்த்து “வாங்க, மாமா, வாங்க வாங்க. ஏது இந்தப் பக்கம் அத்தி பூத்தாப்பலே” என்று எழுந்து உட்கார்ந்தான்.

     “அட, இல்லையப்பா, நம்ம செங்காளி காங்கயம் போயிருந்தானாக்கும். இந்த எளவு கிலுகிலுப்பை ரண்டு மூணு வாங்கியாந்திட்டான். அவனூட்டு புள்ளை பசங்கள் அதை வெச்சுக்கிட்டு, குடு குடுன்னு ஆட்றதுகள். அதைப் பாத்து நம்ம வளவுப் பையன் கத்தறான். இந்தக் கெரகம் என்ன சொன்னாலும் கேக்க மாட்டீங்கது. நாளைக்கு நீ சந்தைக்குப் போனா ஒண்ணு வாங்கியாந்து தொலைச்சிடப்பா” என்றார்.

     அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தன் வீட்டுக் குழந்தைக்கு கிலு கிலுப்பை கிடைத்த விஷயம் விளங்கி விட்டது. செங்காளி வகையறாக்கள் கெட்டியப்பனுடைய அத்தியந்த நண்பர்கள். அவர்களிடம் சின்னப்பனைச் சேர்ந்தவர்கள் சரியாகக் கூட பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ள மாட்டார்கள். “ஓஹோ, அங்கிருந்துதான் கைக்குக் கைமாறி நம்ம வீட்டுக்குக் கிலுகிலுப்பை வந்ததா? சரிதான், இதுதான் இங்கே எதற்கு இருக்கிறது?” என்று முத்தாயி கையில் வைத்திருந்த கிலுகிலுப்பையை எடுத்தான். அவள் தூங்கிவிட்டதால் மெதுவாக கிலுகிலுப்பையை விட்டு விட்டாள். அதை எறிந்து விட உத்தேசித்தவன் அதையே பெரியவரிடம் கொடுத்து விடலாமென நினைத்தான். பின்பு ஏனோ, “நாளைக்குப் போனால் வாங்கியாரனுங்க. அதுக்காக இன்னேரத்திலே வராது போனால் என்னுங்க” என்று அவரைத் தாட்டி விட்டான். அப்புறம் அந்தச் சாமானை வெகுதூரத்திற்கப்பால் போய் விழும்படி விசிறி எறிந்தான். உடனே, ‘ஐயோ, விடியாலே குழந்தை விளையாடக் கேட்டா எதைக் கொடுப்பது’ என்று எண்ணினான். ராமாயி வேலையை முடித்துக் கொண்டு தன் கணவனைச் சாப்பாட்டுக்கு அழைக்க வந்தாள். தூங்குகிறானென சற்று நின்று நிதானித்தாள். பிறகு “என்னுங்க” என்று குரல் கொடுத்தாள். சின்னப்பன் விழித்துக் கொண்டு தான் படுத்திருந்தான் என்றாலும் ஏனோ பேச இஷ்டப்படாமல் கம்மென்றிருந்தான். ராமாயி மறுபடியும் கூப்பிட்டுவிட்டு தட்டி எழுப்பலாமென கீழே உட்கார்ந்தாள்.

     “நான் சும்மா தான் படுத்திருக்கிறேன், வேலையிருந்தாப் போயிப்பாரு” என்றான்.

     “நீங்க… சோறு…” என்று ஆரம்பிக்கும் போதே, “எனக்கு வாண்டாம்” என்று சின்னப்பன் சொல்லிவிட்டான்.

     “அப்படியானால் சோத்துக்குத் தண்ணி ஊத்தி மூடிவிடட்டுமா? அக்காளும் வாண்டாமிண்ணுட்டாள்.”

     சின்னப்பன் மௌனமாகவே படுத்திருந்தான். ராமாயிக்கு இதெல்லாம் பிடிக்காது. யார் எக்கேடு கெட்டுப் போனாலும் என்ன? நாம் ஒழுங்காய் இருந்தால் போதும் என்று நினைப்பவள் அவள். எந்த மூதேவியின் பொருட்டோ தன் கணவன் பட்டினி கிடப்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்று நினைத்தாள்.

     “இப்படியே இனி சாப்பிடாமத்தான் இருந்திடப் போறீங்களா?” என்றாள்.

     “அப்படியிருந்திட்டா சௌக்கியமாப் போகுமா?”

     “ஆமாம், அப்படியே விட்டுட்டாலும் இன்னும் சில பேருக்குக் கொண்டாட்டம் தான்!”

     “இதெல்லாம் விதி. இந்த மூக்குப் போன மூதேவி எல்லாம் உதித்துவிட்டுத் திரியுதே!”

     “நீங்க பேசறது எனக்கொன்றும் தெரியலை. இப்படி இல்லாததெல்லாம் நீங்களே உண்டு பண்ணுவீங்க போலிருக்குதே. என்னமோ யார் கண்டது? சும்மா ஏன் சமுசயப்படவேணும்?” என்றாள் ராமாயி.

     சின்னப்பன் அவளையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தான். பின்பு “குழந்தையை எடுத்துப் போயி உள்ளே படுக்க வை” என்று கூறிவிட்டு ‘விர்’ரென்று எழுந்து வெளியே போனான்.

     “எங்கேயாவது ரவிசு ரச்சைக்குப் போகாதீங்க” என்று சொல்லியபடியே அவள் ஸ்தம்பித்து நின்றாள்.

ஆர். சண்முகசுந்தரம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 4திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 4

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேங்கடம்பின் மால் பட்டு அழிந்தது பூங்கொடி யார் மனம் மாமயிலோன் வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே…

சாவியின் ஆப்பிள் பசி – 17சாவியின் ஆப்பிள் பசி – 17

 பெருந்தொகை ஒன்று கைக்கு கிடைத்ததும் சாமண்ணாவின் மனம் கிறுகிறுத்தது. சட்டென தாயாரின் முகம் மின்னி மறைந்தது. தாயின் கையில் அதைக் கொடுப்பது போலவும், அவள் காலில் விழுந்து வணங்குவது போலவும், அவள் ஆனந்தக் கண்ணீரோடு நிற்பது போலவும் தோன்றியது. “சேட்ஜி! நாடகம்

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 7திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 7

அன்று நாச்சப்பன் பொன்னாச்சியையும் அன்னக்கிளியையும் கசடு கலந்து கிடக்கும் உப்பை, ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குக் கொண்டு போடப் பணிக்கிறான். அவை யாரேனும் கருவாடு போடவோ, தோல் பதனிடவோ வாங்கிப் போவார்களாக இருக்கும். அன்னக்கிளியைப் பார்க்கையில் பொன்னாச்சிக்கு அச்சமாக இருக்கிறது. அவளுடைய