ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 7’

நாகம்மாள் தோட்டத்திற்கு வந்து சேர்ந்த போது சூரியன் மரக்கிளைக்கு மேலே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். நாற்புறமும் அசைந்தாடிக் கொண்டிருந்த கிளைக்கு மேல் சூரிய வெளிச்சம்பட்டு மின்னிக் கொண்டிருந்தது. காக்கைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மண்ணுக்கு மேல் சிதறிக் கிடந்த எள்ளுகளைக் கொத்த ஆரம்பித்தன. வேலியோரத்தில் ஒரு மாடு மேய்ச்சலுக்காகக் கட்டப்பட்டிருந்தது. அப்போது இரண்டு நெடும் பாத்திக்கு மேல் சின்னப்பன் உழுதிருந்தான். காளைகள் பஞ்சுப் பூமியை உழுவதைப் போல் சுலபமாக தலைகுனியாமல் போய்க் கொண்டிருந்தன. சின்னப்பன் கையிலிருக்கும் உழுக்கோலால் கொழுவில் கட்டிக் கொள்ளும் மண்ணை அடிக்கடி தடவிவிட்டுக் கொண்டே சென்றான். இவ்வளவு நேரம் சாலிட்டுக் கொண்டிருந்த கருப்பன் எள்ளுக் கூடையை நாகம்மாளிடம் கொடுத்துவிட்டுப் பட்டி திறந்து விடுவதற்காகப் போனான்.

     அவன் நாலடி போவதற்குள், “அடே ராகிக் காட்டிலே பண்டம் பூந்திடப் போவுது, ஜாக்கிரதை” என்றாள் அதட்டலாக. ‘சரி’ என்று தலையசைத்துச் சென்றவனைக் கூப்பிட்டு, “ஏண்டா சொன்னது காதிலே கேக்கலையா?” என்றாள். அவன் ‘திரு திரு’வென விழித்தான்; இந்த மாதிரி அதட்டல் அதிகாரங்கள் எல்லாம் சின்னப்பனுக்குத் துளி கூடப் பிடிக்காது. “அவனை ஏன் பயப்படுத்த வேண்டும்? இங்கே எள்ளு விளாவில் விழுவுதில்லை” என்றான் சின்னப்பன்.

     “ஆமாம், நான் தான் ஊட்டியிலிருந்து கருப்புக் கம்பளியைப் போத்திக்கிட்டு வந்திருக்கேன்; உங்களைக் கண்டா எல்லாரும் பயப்படுவாங்க” என்றாள் நாகம்மாள்.

     “ஏன் அவனை மறுபடியும் கூப்பிட்டீங்க?”

     “தண்ணி கொண்டாரத்தான். குடிக்காமே தாகமாகவே இருந்திரமுடியுமா?”

     “தண்ணீங்கிற பேச்சே எடுக்கக் காணாமே. நீங்க மனசுக்குள்ளவே சும்மா நெனச்சிருப்பீங்க” என்றான் சின்னப்பன்.

     அவள் வெறுப்போடு அவன் முகத்தைப் பார்க்காமல் கூடையிலிருந்து குத்துக் குத்தாக எள்ளை வாரி இறைத்தாள். கருப்பன் திரும்பிக் கூடப் பார்க்காமல் வேகமாக நடந்தான்; ஏனென்றால் பார்த்து விட்டால் அது கூட ஒரு குற்றம் ஆகிவிடாதா?

     நேர் கோடு கிழித்ததைப் போல கலப்பை பூமியைப் பிளந்து கொண்டு தெற்கே போகும். பின்பு வளைந்து மறுபுறம் திரும்பும். நாகம்மாள் மௌனமாகச் சாலிட்டுக் கொண்டே வந்தாள்.

     இள மத்தியானத்துக்குள் பாதிக்காடு உழுதாகிவிட்டது. அப்போது ஒரு சிறுமி பழைய சாதத்தைக் கொண்டு வந்து வேலா மரத்தடியில் இறக்கி வைத்தாள். சின்னப்பனும் ஏரை நிறுத்திவிட்டுக் கை கால் அலம்பிக் கொள்ள கிணற்றுப் பக்கம் போனான். நாகம்மாள் கூடையை வரப்போரத்தில் வைத்துவிட்டு அங்கேயே உட்கார்ந்து விட்டாள். வந்த பெண், கூடைக்குள்ளிருந்து சோற்றுக் கலயத்தை எடுத்து வெளியே வைத்தாள். ஒரு கொட்டைச் செடியிலிருந்த இலையைக் கிள்ளி வந்து சோற்றுக் கலயத்தை மூடிவிட்டு, “ஏக்கா பல் விளக்கியாச்சா” என்று நாகம்மாளைப் பார்த்துக் கேட்டாள். நாகம்மாள் அவள் கேட்டதற்குப் பதில் சொல்லவில்லை. “உங்க அம்மா உன்னைச் சோறு கொண்டு போகச் சொன்னாளா?” என்றாள்.

     வழக்கத்துக்கு மாறாக இன்று பக்கத்து வீட்டுச் சிறுமி சாதம் கொண்டு வந்ததால் இப்படிக் கேட்டாள் நாகம்மாள்.

     “ஆமாம். எங்க அம்மா தான் போகச் சொன்னா” என்றாள்.

     “எப்பவும் இல்லாத அதிசயமா இன்னைக்கு ஏது போகச் சொல்லீட்டா” என்று சிரித்துக் கொண்டே நாகம்மாள் கேட்டாள்.

     “எங்கம்மா ‘நீயாச்சு கொண்டு போய் சோறு கொடுத்திட்டு வா; பாவம் ராமாயி ஒருத்தியா கஷ்டப்படுறா’ என்றாள். நானும் எங்க தோட்டத்துக்கு இதுலே தானே போகவேணும்; இதையும் வாங்கிட்டு வந்தேன் என்றாள்.

     இந்த சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு இன்னும் நடந்த விஷயங்களை எல்லாம் கேட்டறிய வேண்டி, “பாப்பா உங்குணம் தங்கமான குணம்; அதனாலேதான் உன்னைக் கண்டாலே எனக்குப் பேச வேணுமினுருக்குது. உம், அப்புறம் என்ன பேசினாங்க?” என்றாள்.

     பாப்பாவும் உலகத்தைப் புரட்டிவிடுகிற பெரியதொரு ரகஸ்யம் தன்னிடம் இருப்பதைப் போல, “உன்னைப்பத்தித் தான் என்னமோ பேசீட்டிருந்தாங்க” என்றாள்.

     சிறு குழந்தைகளுக்கு இம்மாதிரி விஷயங்களில் சிரத்தையே கிடையாது. வீணாக அவர்களுடைய வாயைக் கிளறினால் இல்லாததைக் கூடக் கண்டபடி சொல்ல ஆரம்பிப்பார்கள். பின்பு அதனால் எத்தனை சண்டைகளோ?

     நாகம்மாள் துருவிக் கேட்டாள். அவளுக்குத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற பேரவா மிகுந்திருந்தது. இதற்குள் சின்னப்பன் அருகில் வந்துவிட்டான். அவன், தலைத் துண்டை விரித்துப் போட்டு அதன்மேல் உட்கார்ந்தான். சிறுமி, சாதத்தைக் கரைத்து கையில் ஊற்றினாள். நாகம்மாள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அசையவில்லை. அவள் மனதில் பல சிந்தனைகள் உருண்டோடிக் கொண்டிருந்தன. இந்தப் பரந்து கிடக்கும் காட்டிலும், தோட்டத்திலும் தன் கணவனுக்குச் சேர வேண்டிய பாகம் பாதி இல்லையா? தானும் தன் குழந்தைக்கு அழகான சீலை, ஒரு நகை நட்டு பண்ணிப் போட்டு பார்த்தால் எப்படியிருக்கும்? மாதத்திற்கு நாலு பேருக்குக் குறையாமல் அவர்களுக்கு வேண்டியவர்கள் சொந்தம் பாராட்டிக் கொண்டு வந்து விடுகிறார்கள். இதெல்லாம் யார் சம்பாதித்தது?

     நல்லதோ, கெட்டதோ எதுவும் இப்படித்தான். ஒரு சிறு வித்து எப்படி பிஞ்சும் பூவும் குலுங்கும் விருக்ஷமாகி அதன் நிழலிலே எத்தனையோ ஜீவராசிகளுக்குக் குளிர்ந்த நிழலைத் தருகிறதோ, அந்த மாதிரி இந்தச் சிறு கனல் பொரியும் அவள் மனதில் மகாப் பெரிய அனல் மலையை வளர்க்கலாயிற்று. அப்படியே சிலை மாதிரி உட்கார்ந்து கொண்டிருந்தாளேயொழிய எழுந்திருக்கவில்லை.

     சின்னப்பன் பாப்பாவிடம் மெதுவாக, “அவுங்களையும் சோறு குடிக்கச் சொல்லு” என்றான்.

     “பல்லு விளக்கச் சொன்னேன்! அதையே கேக்கலையே” என்றாள் பாப்பா. அவள் சொல்லியது அருகிலிருக்கும் பத்துப் பேருக்குக் கேட்கும் போலிருந்தது.

     நாகம்மாள் வெடுக்கென்று, “இந்தத் தலைவலியில் பழைய சோத்தை நான் வாயில் கூட ஊத்த மாட்டேன்” என்றாள். சின்னப்பன் அதைக் கேட்டு “தலைவலியானால் ஊட்டுக்குப் போயிடறது” என்றான்.

     “போயிட்டா சாலிட வேறே ஆள் இருக்குதாக்கும்?”

     “அடே, மாரா, மாரா” என்று கூப்பிட்டான் சின்னப்பன்.

     “மாரனும் வேண்டாம் செல்லனும் வேண்டாம்” என்று தானே எழுந்தாள்.

     “இல்லை, வெயிலில் இருந்தால் இன்னும் நோவு எச்சாகிவிடும்” என்று சின்னப்பன் மறுபடியும் மாரனைக் கூப்பிட ஆரம்பித்தான். மாடு மேய்த்துக் கொண்டிருந்த மாரன் சத்தத்தைக் கேட்டு எழுந்து ஓடி வந்தான். நாகம்மாள் சற்று நிழலில் உட்கார்ந்தாள். பாப்பாத்தி மீதி சாதம் எவ்வளவு இருக்கிறதென்று அளவு பார்த்துக் கொண்டே குடிக்க ஆரம்பித்தாள். இதைக் கண்ட நாகம்மாள் அவசர அவசரமாகக் கையைக் கழுவிக் கொண்டு, “கலயத்தை இப்படிக் கொடு” என்று கையை நீட்டினாள். சின்னப்பனுக்கு இதைக் காண ஆச்சரியமா யிருந்தது. திடீரென்று தோன்றிய நோவு மாயமாகத் தான் மறைந்து விடுமாக்கும் என்று நினைத்துக் கொண்டு ‘தாய், தாய்’ என்று காளையைத் தட்டினான். அந்தி வானத்தைக் கிழித்துக் கொண்டு செல்லும் சூரியனைப் போல கலப்பையும் பூமியைக் கிழித்துக் கொண்டு சென்றது.

ஆர். சண்முகசுந்தரம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘பரிசல் துறை’-5கல்கியின் ‘பரிசல் துறை’-5

5 செப்டம்பர் 30ம் தேதி வேலம்பாளையம் ஒரே அல்லோலகல்லோலமாயிருந்தது. அன்று தான் கள்ளுக்கடை மூடும் நாள். அன்று தான் குடிகாரர்களுக்குக் கடைசி நாள். பெருங்குடிகாரர்களில் சிலர் அன்றெல்லாம் தென்னை மரத்தையும் பனைமரத்தையும் கட்டிக் கொண்டு காலம் கழித்தார்கள். சிலர் நடு வீதியில்

ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1

7. துறவு   “எங்கே, போனவங்களெ இன்னங் காணலியே…..” என்று முனகிக்கொண்டே, வாசற்படியை ஒரு கையால் பற்றியவாறு, பாதித்தெருவரை உடம்பை வளைத்து நீட்டித் தெருக்கோடி வரை பார்த்தாள் பங்கஜம் அம்மாள். அப்பொழுதுதான் அடுத்த வீட்டு வாசலில், சேலைத் தலைப்பில் ஈரக் கையைத்

கல்கியின் ‘பரிசல் துறை’-4கல்கியின் ‘பரிசல் துறை’-4

4 குமரி போனதும் கொஞ்ச நேரம் பழனி பரவச நிலையிலிருந்தான். அவனுடைய உடம்பிலும் உள்ளத்திலும் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால் மறுபடியும் வாசலில் காலடிச் சத்தம் கேட்கவே, பழனி பரவச நிலையிலிருந்து கீழிறங்கினான். “யாராயிருக்கலாம்?” என்று யோசிப்பதற்குள்ளே, காளிக் கவுண்டன் உள்ளே