ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 5’

 ராமாயி பொங்கல் பாத்திரத்தை வீட்டில் இறக்கி வைத்துவிட்டுத் தன் புருஷனைக் கூட்டிவரக் காட்டிற்குக் கிளம்பினாள். முத்தாயாளும் கூட வருவேனென்று அழுதாள். “நீ இங்கேயே இரு முத்து. நான் சீக்கிரமாக வந்திடறேன்” என்று கால்படி உழக்கை எடுத்து ஒரு குத்துப் பொரியை அதில் போட்டுவிட்டு அவள் புறப்பட்டாள். அவள் புருஷன் எருமைக்குப் புல் கொண்டு வருவதற்காகத்தான் இன்று காட்டிற்குப் போயிருந்தான். இன்று விசேஷ நாளானதால் வழக்கம் போல வரும் சக்கிலிப் பையனும் வரவில்லை. அதனால் சின்னப்பனே இன்று காட்டுப் பக்கம் போயிருந்தான். ஆனால், பொழுது போயும் தன் புருஷன் இன்னும் ஏன் வீடு வரவில்லை என்பது ராமாயிக்கு விளங்கவில்லை. அதற்காகத்தான் தானே போய்ச் சீக்கிரமாகக் கூட்டி வரச் சென்று கொண்டிருந்தாள். காடு சுமார் அரை மைலுக்கு மேலிருக்கும். குறுக்கு வழியாகச் சென்றால் மூன்று காடு தாண்டினால் போதும். அதனால் இட்டேறியில் செல்வதை விட்டுக் காட்டுப் பாதையில் ராமாயி நடந்தாள். வழி பூராவும் தட்டைக்காய்க் கொடிகள் ஒன்றோடொன்று பின்னிக் கிடந்தன. நடக்கும் போது கால்களைச் சுற்றிக் கொண்டு தடுமாறச் செய்தன. காட்டில் விதையாமல் முளைத்திருந்த வெங்கக் கற்கள் காலைக் காயப்படுத்தின.

     அந்தி வேளை, சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தான். சூழ்ந்திருந்த ஊஞ்சல் மரங்களிலும், சங்கம் புதர்களிலும் பொன்னிற மின்னல் கம்பிகள் ஊசலாடிக் கொண்டிருந்தன. இடையிடையே ஓணான்களும், பூச்சி புழுக்களும் போவதால் ‘சர, சர’வென்ற சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ராமாயி வேகமாக நடந்தாள். எதிரே யாராவது வருகிறார்களா என்று தலையைத் தூக்கிப் பார்த்துக் கொண்டாள். அடுத்த ஊருக்குப் போய் நூல் போட்டுவிட்டுப் பஞ்சு வாங்கி வந்த மணியக்காரரின் தாயாரைக் கண்டதும் அவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது. “இந்த வயதில் கூட பணம் சேர்ப்பதில் எவ்வளவு ஆசை பார்!” என்று சொல்லிக் கொண்டாள்.

     பெரியவள் ராமாயியைக் கண்டதும், “அடி, ஆத்தா, இந்த நேரத்திலே மஞ்சளும் மணமுமான இந்தப் பக்கத்திலே தனியே வரலாமா?” என்று சொல்லிக் கன்னத்தில் கை வைத்தாள்.

     ராமாயிக்கும் மனத்திற்குள் கொஞ்சம் பயம்தான். இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு, “என்னூட்டுக்காரரைக் கூட்டியாரப் போறேன்” என்றாள்.

     கிழவி கன்னத்திலிருந்த கையை எடுக்காமல் கொஞ்சம் நெற்றியைச் சுழித்துக் கொண்டு, “அவனை நீ தான் கோல்பிடித்துக் கூட்டியார வேணுமா? எனக்கும் எழுபது வயசாச்சு. இந்த அதிசயத்தைக் கண்டதில்லையம்மா. என் கலியாணமான வருஷம்…” என்று பெரிய பேச்சாக ஆரம்பிக்கவும் ராமாயி தடுத்து “இல்லே நேரமாச்சு, பூசையெல்லாம் பண்ணியாச்சு; இன்னம் காணமேன்னு போறேன்” என்றாள்.

     கிழவி வாயெடுப்பதற்குள் மீண்டும் ராமாயி, “நீங்களே போய் பஞ்சு வாங்கி வரணுமா? யாராவது போறவங்ககிட்டக் கொடுத்துட்டா வாங்கியார மாட்டார்களா?” என்றாள்.

     “கொறப்பயங்கிட்டே கொடுத்து விட்டாக் கூட, செட்டி பஞ்சு கொடுத்திடுவான். ஆனால் என் நூற்புக்கு எல்லாரையும் போலவா துட்டு வாங்குவேன்? இன்னைக்கு மூணு அணா எச்சா வாங்கி வந்திருக்கிறேன்” என்று இடுப்பில் சொருகியிருந்த முடிச்சைத் தொட்டுக் காட்டினாள். கிழவியின் சாமர்த்தியத்தைக் கேட்டு சிரித்துக் கொண்டே, “நான் போய் வாரேன்” என்று ராமாயி நடந்தாள்.

     தனது புருஷன் கிணற்றடியில் இருப்பானென்று பார்த்தாள். ஆனால் அங்கே காணோம். இரண்டொரு ஆட்டுக் குட்டிகள் தான் வேலி முட்களைத் தின்று கொண்டிருந்தன. வெகுதூரத்தில் இவளுடைய புடவையைக் கண்டதும் மாடு ‘அம்மா’ எனக் கத்தியது. ‘சரி குடிசைக்குள் தான் இருப்பார். ஆமாம், இந்நேரத்தில் குடிசையில் என்ன செய்கிறார்?’ என்று யோசித்துக் கொண்டே போனாள்.

     சின்னப்பன் குடிசைக்குள்ளிருந்த கயிற்றுக் கட்டிலின் மேல் உட்கார்ந்திருந்தான். அந்தக் கிராமத்திலிருந்தும் அவன் தேகம் திடகாத்திரமானதல்ல. அதிலிருந்தே இளமையில் அவன் அதிக நோயினால் கஷ்டப்பட்டிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அவனது முகத்தில் வாழ்வின் சஞ்சலச் சாயைகள் ஒன்றுமில்லை. கஷ்ட ஜீவனத்தின் கவலைகள் இல்லையாதலால் கண்களில் ஜீவகளை தளும்பிக் கொண்டிருந்தது.

     சின்னப்பனுக்கு அவளைக் கண்டதும் பெரிய ஆச்சரியமாயிருந்தது. “நீ இங்கே எதற்காக வந்தாய், நானே வரலாமெனுருந்தேனே” என்றான்.

     அவள் பேசவில்லை. அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய குரலைக் கேட்க அவளுக்கு என்னமோ போலிருந்தது.

     “இங்கே ஏன் உக்காந்துகிட்டு இருக்கீங்க?” என்று சொன்னவள், அதற்குள் அங்கே கட்டிப் போட்டிருந்த புல்லைப் பார்த்துவிட்டு, “எடுத்துக்கிட்டு வராமே நல்லா ‘ரோசனை’ பண்ணீட்டிருந்தீங்க” என்றாள்.

     சின்னப்பன், “வந்தாப் போகுது” என்றான். அவனுடைய கண்கள் கலங்கியிருந்தன. ரொம்ப மெதுவாகப் பேசுவதிலிருந்தே அதிக வருத்தமடைந்திருந்தான் என்பது தெரிந்தது. ராமாயி, “சரிதான், சொன்னா ஒரு பேச்சிலே எழுங்கோ” என்றாள். அவள் முகமும் துயர அலைகளால் வாடியது. இளங்காற்றில் நழுவிப் போன மார்புச் சேலையைக் கூட எடுத்துச் சொருகவில்லை. ஒரு காலைக் குடிசைக் கம்புமேல் வைத்து நின்று கொண்டிருந்தாள். சின்னப்பன் கட்டில் கயிற்றை ஒவ்வொன்றாகத் தடவியவாறே, “அதோ அடிபடுதே… அந்த தப்பட்டைச் சத்தம், அதைக் கேக்க எனக்கு எப்படி இருக்குது தெரியுமா?” என்றான். அவன் ‘அந்தச் சத்தம்’ என்றவுடன் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்த சப்தம் ரொம்பப் பலமாகக் கேட்பது போலிருந்தது அவளுக்கு. அரைகுறையாக அர்த்தமானாலும் முழுதும் தெரியவேண்டி, “என்ன?” என்றாள்.

     “என்னவா? உங்கிட்ட முந்தி பலதரம் சொன்ன கதைதான். உம், என்னவோ நம்ம ஊர் பூரா தலைகால் தெரியாது குதிக்குது. ஏமாளியாயிருந்தவங்க கூட கொம்மாளம் போடறாங்க. இதே மாதிரிதான் பத்து வருஷத்துக்கு முன்னாலே நடந்த பொங்கலின் போது நானும், என் அண்ணனும்…” என்று நிறுத்தினான்.

     “அந்தக் குப்பையைக் கிளறதுலே என்ன சொவம் இருக்குது. ஒடம்பிலே வாணம்பட்டு மேனாடுபோன மவராசன் புண்ணியவான்னு சொல்லுங்க” என்றாள் ராமாயி.

     “அது நெசந்தான்; ‘கமுந்த பாலு கலயம் ஏறாது.’ ஆனால் அதை நெனைக்க நெனைக்க… அடடா! அன்னைக்கு ஆட்டம் கட்டினதிலிருந்து சாமத்து வரை எப்படிக் குதித்துக் கொண்டிருந்தோம். அன்னைக்கு ராத்திரி வாணத் தீயில் அண்ணன் ஒடம்பு வெந்து போகுமின்னு எவந்தான் நெனைச்சான்! உம், ஆத்தா இத்தனை நாளாக் கொண்டாடாததிலிருந்தது கூட எனக்கு ஒரு விதத்தில் நல்லதாக இருந்தது. ஆனா இப்போ அந்த நெனைப்பெல்லாம் புத்தீசல்போலப் ‘பொல பொல’ன்னு வருதே!” என்றான். ராமாயி கணவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். வெளியில் ஒரே இருட்டு! குடிசைக்குப் பக்கத்திலுள்ள பட்டியிலிருந்த ஒரு ஆடு ‘மே, மே’ எனக் கத்தியது. ராமாயி என்னவோ நினைத்துக் கொண்டு வந்து அது எப்படியோ முடிந்து விட்டது! தன் புருஷனை அதிக சந்தோஷமூட்ட வந்தவள், தானே அவனுடைய சோகத்திற்கு அதிக தூபம் போட்டவளானாள். ஆனால் இதையெல்லாம் சமாளித்துக் கொண்டு, “இப்படி உட்கார்ந்திருந்து என்ன லாபம்? போவலாமே” என்றாள்.

     சின்னப்பனும் அவள் சொன்னதைத் தட்டாமல் எழுந்தான். அவன் கையிலிருந்த புல்கட்டை தான் வாங்கிக் கொண்டு, “இந்த வருஷம் உங்க அக்கா கூட ஏன் பொங்கலுக்கு வல்லை” என்றாள்.

     “அவ கைக்குழந்தைக்கு மாந்தமாம்; ஒரு வாரமாப் படுத்துக் கிட்டிருக்குதாம். அதனாலே இங்கே நலக்கத்தோடு ஏன் எடுத்து வரமேணுமின்னு நின்னுட்டா. அவ புருஷங்கூட வரமுடியாத போச்சு” என்றான்.

     அப்போது ராமாயிக்கு அன்று மாலை நாகம்மாள் நடந்து கொண்டது ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் தன் கணவன் எங்கே கோபித்துக் கொள்வானோ என்று அஞ்சி ஏதோ சொல்ல வாயெடுத்தவள் அடக்கிக் கொண்டாள்.

     “இருந்தாலும் ஒரு பொம்பளெ, அத்தனை பேருக்கெதிரில் கெட்டியப்பனோடு அப்படி சிரிப்பும் விளையாட்டுமா இருப்பாளா?”

     “அந்தப் பேச்சையே எடுக்காதே” என்று கசப்புடன் சின்னப்பன் கூறினான்.

ஆர். சண்முகசுந்தரம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 28கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 28

அத்தியாயம் 28 – சந்திப்பு      பஞ்சநதம் பிள்ளை ஜீவியவந்தராயிருந்த காலத்தில் கல்யாணி தன்னுடைய இருதயமாகிய கோட்டையை கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாத்து வந்தாள். அதில் முத்தையன் பிரவேசிப்பதற்கு அவள் இடங்கொடுக்கவில்லை. அவ்வாறு இடங்கொடுப்பது பாவம் என்று அவள் கருதினாள். ஆகவே, முத்தையனுடைய நினைவு

கல்கியின் பார்த்திபன் கனவு – 34கல்கியின் பார்த்திபன் கனவு – 34

அத்தியாயம் 34 மாரப்பனின் மனக் கலக்கம் பொன்னனையும் வள்ளியையும் நள்ளிரவில் மாரப்பபூபதி தொடர்ந்துபோன காரணம் என்ன? இதை அறிந்து கொள்வதற்கு நாம் மறுபடியும் அன்று சாயங்கால நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும். சக்கரவர்த்தியின் சந்நிதியிலிருந்து வெளியேறியபோது மாரப்பன் அளவில்லாத மனச்சோர்வு கொண்டிருந்தான். சாம்ராஜ்யத்திற்காகத்

சாவியின் ஆப்பிள் பசி – 31சாவியின் ஆப்பிள் பசி – 31

சற்று தலை குனிந்திருந்த சாமண்ணா நிமிர்ந்தான். “என்ன சொல்றே சிங்காரம்?” என்றான். “அவங்க அந்த்கோஷ் கூடப் போயிட்டிருக்காங்க” என்றான் சிங்காரப் பொட்டு. “சிங்காரம்! இந்த ஊர் நாகரிகம் வேற! இங்கிலீஷ்ல நாலு பேர்கிட்டே தைரியமாப் பேசுவாங்க! அவ்வளவுதான்; அப்புறம் வந்துருவாங்க பாரு”