Tamil Madhura பயணங்கள் முடிவதில்லை - 2019,Uncategorized பயண காவியம் – ஏஞ்சலின் டயானா

பயண காவியம் – ஏஞ்சலின் டயானா


செப்டம்பர் மாதம் 2004ஆம் ஆண்டு நான் பதினொன்றாம் வகுப்பிற்காகப் புதிய பள்ளியில் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. சிறு வயதில் இருந்தே பள்ளியின் சார்பாக அழைத்துச் செல்லப்பட்ட எந்த சுற்றுலாவிற்கும் அதுவரை நான் சென்றிருந்ததில்லை. என் அப்பா அனுமதித்ததில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்!

காலாண்டு விடுமுறைக்கு வட இந்தியாவிற்குச் சுற்றுலா அழைத்துச் செல்லவிருப்பதாகவும் விரும்புபவர்கள் பெயர் கொடுக்கலாம் என்றும் வகுப்பு ஆசிரியை அறிவித்தபோது நாங்கள் அப்போதே கனவுலகில் மிதக்க ஆரம்பித்துவிட்டோம். 

“ஆப்பிள் பெண்ணே! நீ யாரோ?! பாட்டு ஷூட் பண்ணினாங்கள்ல அங்க கூட கூப்பிட்டுப் போகப் போறாங்களாம்.. அதான்-டீ குலு-மணாலி வரைக்கும் நாம போகப் போறோம்!” எனத் தோழி ஒருத்தி கூறிய போது “கடவுளே! அப்பா கிட்ட எப்படி பெர்மிஷன் வாங்கப் போறேன்-னு தெரியலையே!” என அங்கலாய்ப்பு ஆரம்பித்தது எனக்கு! 

‘எப்படியும் அப்பா சம்மதிக்கப் போவதில்லை.. வீணாக ஆசையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்’ என்று என்னை நானே தேற்றிக் கொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மனதின் ஒரு ஓரத்தில் ஏக்கம் வந்து எட்டிப் பார்ப்பதை ஏனோ என்னால் தடுக்க முடியவில்லை..

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அம்மாவோ ‘என்ன வழக்கத்திற்கு மாறாக வீடு இவ்வளவு அமைதியாக இருக்கிறதே?! அதுவும் வந்ததும் வராததுமாக பாடப் புத்தகத்தை வேறு எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறாளே! ஏதோ விஷயம் இருக்கிறது’ என யூகித்தவர்களாய் “என்னடி! ரொம்ப அமைதியா இருக்க?” எனக் கேட்கவும் “அப்பா கிட்ட தான் சொல்லுவேன்” என்றேன் நான்.

அப்போ கண்டிப்பா ஏதோ பெரிய ப்ளான் வைத்திருக்கிறாள் என உறுதிப் படித்தியபடி அம்மா உள்ளே செல்ல.. குஷி பட ஸ்டைலில் உண்ணாவிரதம் இருந்தாவது அப்பாவிடம் பெர்மிஷன் வாங்கி விட வேண்டும் என்று நான் முடிவே செய்துவிட்டிருந்தேன்.

ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இல்லாதபடி நான் விஷயத்தைக் கூறியதும் என் அப்பா சம்மதித்து விட்டார். எனக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை! “இதெல்லாம் ஒன்ஸ் இன் எ லைஃப் டைம் ஆப்பர்சூனிட்டி! இதுக்கு நான் தடையா இருப்பேன் –னு நினைச்சியாடா?!” என அப்பா கேட்ட போது நான் வாயடைத்துப் போனேன். 

மறுநாளே முதல் ஆளாகப் பள்ளியில் பணம் கட்டியாயிற்று. அந்த நொடியில் இருந்து உற்சாகம் பற்றிக் கொள்ள என்னவெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என பட்டியல் போடத் தொடங்கினேன் நான்.

நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது. சுற்றுலா செல்லவிருக்கும் அனைவரும் மாலை நான்கு மணிக்கு பள்ளி வளாகத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. லிஸ்ட் பிரகாரம் பொருட்கள் எல்லாம் ஒருமுறைக்கு இரண்டு முறை சரி பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன்.

அடுத்தது அப்பாவைத் தான் நான் தேடுவேன் என்று தெரிந்து வைத்திருந்த என் அம்மா “அப்பா கடைக்குப் போயிருக்காங்க.. நீ கிளம்பி ரெடியா இரு. அப்பா வந்ததும் ஸ்கூல்-க்கு கூப்பிட்டுப் போவாங்க” என்றார்கள். “ஏன்-மா இப்போ போய் அப்பா கடைக்கெல்லாம் போயிருக்காங்க? அதான் எல்லாம் வாங்கியாச்சே. பொண்ணு பதினைந்து நாள் டூர் போறாளே.. நாம பக்கத்துல இருப்போம்-னு தோணல! வரட்டும் பேசிக்கிறேன்” என்று முகத்தை தொங்க வைத்துக் கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தேன்.

“குட்டிமா!” என்ற அந்த ஒற்றை அழைப்பில் கோபங்கள் பஞ்சாய் பறக்க “என்னப்பா நீங்க?..” என ஆரம்பிப்பதற்குள் கிஃப்ட் பேப்பர் சுற்றிய ஒரு பொருளை என்னிடம் அப்பா நீட்டினார். “தி ஒன்லி பெர்ஸன் ஹூ சர்ப்ரைஸஸ் மீ ஆல் த டைம்!” என்ற வாக்கியத்தை இம்முறையும் மெய்ப்பித்திருந்தார் என் அப்பா!

அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயா அவர்கள் மாணவர்களிடம் பிரத்தியேக கவனம் செலுத்தியது நாம் அனைவரும் அறிந்ததே. என் எண்ணங்கள் கவிதையாய் பிறப்பெடுத்திருந்த கால கட்டம் அது. 

கலாம் ஐயா குறித்து கோர்வையாய் காகிதங்களில் நான் சிதறவிட்டிருந்த துளிகளை ஒன்றுசேர்த்து அதைக் கவிதை அச்சில் வார்த்து பாதுகாப்பாய் ஃப்ரேம் செய்து அவர் நீட்டிய போது அந்த விழிகளில் நான் கண்டது ஊக்கமா பெருமிதமா எனப் பிரித்தறிய முடியாமல் “எதுக்குப்பா இது?! கடைசி நேரத்துல போய் அலைஞ்சுருக்கீங்களே!” என்றேன்.

என் ஆசிரியரை சந்தித்த போது வட இந்தியா வரை செல்லவிருப்பதால் கலாம் ஐயாவைப் பார்க்க முறையான அனுமதி கிடைத்தால் எங்களை அழைத்துச் செல்லும் எண்ணம் இருப்பதாக அவர் கூறியதும் சட்டென என் எழுத்துக்கள் ஞாபகம் வரவே இதை ஏற்பாடு செய்து வந்ததாகவும் வரும் வழியிலே என் தமிழம்மாவிடம் ஒப்புதலும் வாங்கி வந்ததாகவும் என் அப்பா கூறிய போது மிகவும் சிரத்தையோடு அதை எடுத்து வைத்துக் கொண்டேன்! 

எப்போதுமே என் நினைவுகள் செயல்களாய் உருவெடுக்கும் முன்னே அதற்கு உயிர் கொடுக்கும் சிற்பியாய் அவற்றை வண்ணமயமாக்கும் தூரிகையாய் எனக்காகக் கடவுளால் பரிசளிக்கப்பட்டவர் தான் என் தந்தையோ எனப் பலமுறை நான் வியந்தது உண்டு!

பள்ளியின் ஆடிட்டோரியத்திற்கு ஒவ்வொருவராக வந்து சேர்ந்து கொண்டிருந்தனர். என் அப்பா என்னைப் பள்ளியில் ட்ராப் செய்யவும் மிகுந்த குதூகலத்தோடு நானும் அவரை இரயில் நிலையத்தில் சந்திப்பதாகக் கூறிவிட்டு என் தோழிகளைத் தேடிச் சென்றேன். 

பள்ளியில் இருந்து இரயில் நிலையம் பத்து நிமிட இடைவெளியில் தான் இருந்தது. கணக்கெடுப்பு ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிந்த பிறகு பள்ளிப் பேருந்தில் ஆரவாரமாகக் கிளம்பிய போது வானத்தை நெருங்கிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது.

 மொத்தம் எழுபத்திரண்டு பேர்! அவரவர் குடும்பத்தோடு பதினைந்து நாட்களுக்குத் தேவையான லக்கேஜ் அத்தனையும் கொண்டு வந்து நிறைத்திருக்க இரண்டே ப்ளாட்ஃபார்ம் கொண்ட எங்கள் ஊரின் அழகிய சுத்தமான இரயில் நிலையம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது!

G:\Pratilipi\dscn05262093328 (1).jpg

“பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. வண்டி எண் 12641 கன்னியாகுமரியில் இருந்து நிஜாமுதீன் வரை செல்லும் திருக்குறள் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் ப்ளாட்ஃபார்ம் ஒன்றை வந்தடையும்..” என்கிற அறிவிப்பு எங்களை விட எங்கள் ஆசிரியர்களுக்குத் தான் படபடப்பை அதிகரிக்கச் செய்தது.

சிறிய இரயில் நிலையம் ஆகையால் வண்டி இரண்டு மூன்று நிமிடங்களுக்கு மேல் நிற்காதென்பதாலும் அதற்குள்ளாக அத்தனை பேரின் உடைமைகளையும் பத்திரமாக ஏற்றியாக வேண்டுமே என்கிற பதைபதைப்பும் அங்கிருந்த அத்தனை பேரின் முகத்திலும் பார்க்க முடிந்தது.

வெறும் ஊர் சுற்றிப் பார்க்க மட்டுமல்ல குழுவாக இணைந்து துரிதமாக ஒரு காரியத்தை எப்படி செய்து முடிப்பது என்று கற்றுக் கொள்ளவும் மற்றவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் உதவ வேண்டும் என்கிற மனப்பான்மையும் வளர்க்கவே இது போன்ற சுற்றுலாக்கள் வரையறுக்கப்படுகின்றன என அப்போது முதலே நான் உணரத் தொடங்கினேன்.

G:\Pratilipi\img20171025wa0121147556.jpg

நாங்கள் அனைவரும் சங்கிலி போல வரிசையாகக் கை கோர்த்து நிற்க பெரிய வகுப்பு பையன்களும் ஆசிரியரும் அவரவர் முன்பாக சமமாகப் பிரித்து வைக்கப்பட்ட உடைமைகளோடு காத்திருக்க.. வண்டி வந்து சேரவும் இரண்டே நிமிடத்தில் நாங்கள் நிறைவான நிஜங்களுடன் கண்ணை விட்டு மறையும் வரை பெற்றோரிடம் கையசைத்து விடை பெற்றவாறே எங்கள் கனவுப் பயணத்தைத் தொடங்கினோம்!

உடைமைகள் எல்லாம் தேடிக் கண்டுபிடித்து அவரவர் இருக்கையில் பத்திரமாக வைத்தோம். மேற்கே ஆதவன் மெல்ல மறையத் தொடங்க மாலைப் பனிக் காற்று மனதில் ஒரு இனம் புரியாத புத்துணர்ச்சி ஏற்படுத்தியது. 

ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பதும் இரயிலின் இரைச்சல் தாண்டி ‘அண்தாக்ஷரி’ விளையாடுவதும் கதை பேசுவதுமாய் அன்றைய இரவு கழிந்தது. நல்ல வேளை இந்த செல்ஃபோனின் ஆதிக்கம் அந்த நாட்களில் இல்லை! அருகிலிருப்பவரைத் தொலைதூரத்தில் இருப்பவராய் பாவிக்கும் அளவிற்குத் தொழில்நுட்பம் அப்போது வளர்ச்சி கண்டிருக்கவில்லை. பேசிப் பேசிக் களைத்து உறங்கிப் போனோம்.

அதிகாலையில் சென்னை எழும்பூர் கடந்து வண்டி ஆந்திரா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அசந்து உறங்கிக் கொண்டிருந்த எனக்கோ செவிகளில் தேன் தமிழ் மறைந்து கார சாரமாய் புதிய பாஷை உட்புக சுடச்சுட முட்டை தோசையின் நெடி வேறு என் நாசியைத் துளைத்துப் பசியைத் தூண்ட சட்டென முழித்து இரயில் எந்த ஸ்டேஷனில் நிற்கிறது என்று கண்ணைக் கசக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

G:\Pratilipi\image559.jpg

“ஹேய்! நாம விஜயவாடா வந்துட்டோம்டீ.. இங்க முட்டை தோசை அவ்ளோ ஸ்பெஷல்!” என்று என் தோழி ஒருத்தி செய்முறை விளக்கம் சொல்ல ஆரம்பித்திருந்தாள். எங்கள் உணவும் வந்துவிட இதை நினைத்துக் கொண்டே சாப்பிடத் தொடங்கினோம்.

G:\Pratilipi\maxresdefault.jpg

ட்ரெயினில் பாதி கோச் எங்கள் பிள்ளைகள் தான் என்பதால் ஒவ்வொரு கேபினுக்கும் சென்று பேசுவதும் வாக்மேனில் பாட்டுக் கேட்பதுமாய் அந்த நாளும் கடந்து போக நள்ளிரவில் இரயில் நாக்பூர் ஸ்டேஷனில் நிற்பதாய் அறிவிப்பை வைத்துத் தெரிந்து கொண்டேன். அது என்னவோ நாக்பூர் என்றாலே ‘ஹால்டிராம்ஸ்’ புராடக்டுகள் தான் ஞாபகத்திற்கு வரும் எனக்கு எப்போதும்!

எங்களில் முக்கால்வாசி பேருக்கு ஹிந்தி பேசத் தெரியாவிட்டாலும் எழுதவும் வாசிக்கவும் தெரியுமென்பதால் அரைகுறையாய் பெயர்ப் பலகைகளை வாசித்துக் கொண்டும் ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொண்டும் நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தோம். 

G:\Pratilipi\img201509291509472352612.jpg

இப்படியாக இரண்டு இரவுகள் இரண்டு பகல்களைக் கடந்து கிட்டத்தட்ட நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்குப் பிற்பாடு நிஜாமுதீன் இரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து தங்குமிடத்திற்குச் சென்று உணவருந்தி விட்டுப் பயணக் களைப்பில் அடித்துப் போட்டது போல அப்படி ஒரு தூக்கம் எங்களுக்கு!

மறுநாள் காலையில் எங்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த பேருந்தில் கிளம்பி தில்லியில் மிகவும் பிரபலமான சுற்றுலாப் பயணிகள் விரும்பிப் பார்க்கும் இடமாகிய குதுப் மினார் நோக்கிச் சென்றோம். 

G:\Pratilipi\250px-Qutub_Minar_Delhi_02.jpg

குதுப் மினார் என்பது 72.5 மீட்டர்கள்(237.8 அடி) உயரம் கொண்ட கோபுரமாகும். மேலும் செங்கல்லால் செய்த உலகிலேயே உயர்ந்த பள்ளி வாயில் தூபி இதுவே. குதுப் மினார் இந்திய-இஸ்லாமிய கட்டிடக் கலைக்கு மிகவும் புராதனமான எடுத்துக்காட்டாகப் பெயர் பெற்றது என்பது நாம் அறிந்ததே.

அதன் முழு உயரத்தையும் என் கேமிராவில் படம் பிடிக்க நான் முயன்று கொண்டிருந்த போது எங்கள் இயற்பியல் ஆசிரியர் “கொடும்மா நான் ஃபோட்டோ எடுத்துத் தரேன்” என்றதும் நானும் போய் கேமிராவில் கவர் ஆகும்படி நின்று கொண்டேன்.

என் தோழியோ “இன்னுமாடீ இதெல்லாம் நம்பிட்டு இருக்க? ஃபிலிம் கழுவினப்புறம் தான் தெரியப் போகுது.. ஒன்னு ஃபோட்டோ-ல கோபுரம் மட்டும் கவர் ஆகியிருக்கும் இல்லனா பாதி வரைக்கும் கவர் ஆகியிருக்கும். கண்டிப்பா உன்னையும் சேர்த்து ஃபோட்டோ எடுத்திருக்க சான்ஸே இல்ல!” என்றாள். அவரோ அங்கு உயிரைக் கொடுத்து குனிந்து நிமிர்ந்து ஆங்கிள் பார்த்துக் கொண்டிருந்ததை இப்போது நினைத்தாலும் சிரிப்பை அடக்க முடிவதில்லை.

அடுத்ததாக நாங்கள் பார்க்கச் சென்றது தொழில் ரீதியான கட்டுமானவியல், நுண்கலை, மதம் மற்றும் அரசு சார்ந்த தரப்புகளில் பரவலான ஈர்ப்பைப் பெற்றுள்ள தில்லியின் வசீகரமான இடமாகிய பஹாய் வழிபாட்டுத்தலமான தாமரைக் கோயில் ஆகும். 

G:\Pratilipi\1424461327.jpg

அதன் அமைப்பு ஒன்பது பகுதிகளைக் கொண்ட வட்டமான வடிவத்தைக் கொண்டதாக இருந்தது. தாமரை மலரினால் ஈர்க்கப்பட்ட இதன் வடிவம், ஒன்பது பக்கங்களை அமைப்பதற்கு மூன்று கொத்துகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட 27 சார்பற்று நிற்கும் பளிங்கு தரித்த ‘இதழ்கள்’ கொண்ட தொகுப்பாக இருந்தது.

இதன் சிறப்பான தனித்தன்மை என்னவென்றால் மற்ற எந்த மதத்தைச் சேர்ந்தவரும் கோயிலின் உட்பகுதியில் எந்த மொழியிலும் பிரார்த்திக்கலாம். ஆனால் எந்த இசைக்கருவிகளும் இசைக்கப்படக் கூடாதென்பதால் அந்தத் துல்லியமான அமைதி நம் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி மனதை ஆட்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

பாரம் தீர்த்து மனம் காற்றுக்கு ஈடாய் லேசாகிய திருப்தியுடன் அடுத்ததாக நாங்கள் பயணிகளால் மிகவிரும்பி விஜயம் செய்யப்படும் இந்தியா கேட் ஸ்தலத்திற்குச் சென்றோம். 

G:\Pratilipi\India-Gate-2.jpg

தில்லி மாநகரின் மையப்பகுதியில் ஒரு முக்கியமான தேசியச்சின்னமாக இது கம்பீரமாக வீற்றிருக்கிறது. 42மீ உயரமுள்ள இந்த கலைச்சின்னம் பாரீஸ் நகரிலுள்ள ஆர்ச்-டி-ட்ரையோம்பே எனும் அலங்கார வளைவுக்கட்டுமானத்தின் தோற்றத்தை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேய ராணுவத்தின் சார்பாக போரிட்டு முதலாம் உலகப்போரில் இறந்த 70000 வீரர்களின் நினைவாகவும் 1919ம் ஆண்டில் நிகழ்ந்த மூன்றாவது ஆங்கிலேய-ஆப்கானியப் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாகவும் எழுப்பப்பட்டிருக்கும் இந்த நினைவுச்சின்னம் ஆரம்பகாலத்தில் ‘இந்திய போர் நினைவுச்சின்னம்’ என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

சிவப்பு மற்றும் வெளிர் நிற மணற்பாறைக் கற்கள் மற்றும் கிரானைட் கற்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னத்திற்கு அடியில் ‘அமர் ஜவான் ஜோதி’ எனப்படும் அணையாவிளக்கு எரிந்து கொண்டிருப்பதை எங்களால் பார்க்க முடிந்தது. 

1971ம் ஆண்டு நடைபெற்ற இந்திய பாகிஸ்தானியப் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக இந்த விளக்கு உருவாக்கப்பட்டதென்பதைக் கேள்விப்பட்டபோது எங்கள் கண்களில் ஒருவித கர்வம் தொற்றிக்கொள்ள எங்கள் கைகள் தானாக அவர்களுக்கு சல்யூட் செய்யத் தவறவில்லை.

எங்கும் இருள் கவ்வத் தொடங்கியிருக்க அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டவாறே இரயிலில் பஞ்சாப் நோக்கிப் பயணமானோம். அதிகாலைக் குளிரில் நடுங்கியவாறே தங்குமிடம் செல்லுகையில் சீக்கியர்களின் சுறுசுறுப்பை கண்டு வியந்து போனோம். 

ரங்கநாதன் தெரு போன்ற குறுகிய சாலையின் இருபுறத்திலும் கடைகள். அதன் ஒவ்வொரு வாசலிலும் ஓங்குதாங்கான ஒரு சீக்கியர் ஊரே எட்டிப் பார்க்கலாம் போல அத்தனை பெரிய கடாயில் நெய் பொங்கப் பொங்க  வட்ட நிலவின் அளவிற்குப் பூரியைச் சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்க நாங்களும் வயிறார உண்டுவிட்டு அம்ரித்ஸர் பொற்கோவில் நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம்.

G:\Pratilipi\amritsar.png

ஸ்ரீஹர்மந்திர் சாஹிப் என்று அழைக்கப்படும் இந்த தங்கக்கோயில் சீக்கிய மதப்பிரிவினரின் அடையாளச் சின்னமாகும். இந்தக் கோயிலின் மேல்தளப் பகுதி 400 கிலோ எடையுள்ள தங்கத் தகடுகளால் போர்த்தப்பட்டிருக்கிறது. சாதி, மத, தேச பாகுபாடு இல்லாமல் அனைவரும் இந்தக் கோயிலுக்குள் செல்லலாம். இருப்பினும் ஒரு சில விதிமுறைகள் காலங்காலமாக இங்கு பின்பற்றப்படுகின்றன.

காலணிகளைத் தவிர்ப்பது, உட்பிரகாரத்தில் தரையில் அமர்வது, முக்கியமாக உள்ளே நுழைவது முதல் வெளியே வரும் வரை ஆண்கள் தலையில் கர்சீஃப் அளவு துணியைக் கட்டியிருப்பதும் பெண்கள் தலையில் முக்காடிட்டுக் கொள்வதும் ஆகிய வழக்கங்கள் இங்கு நடைமுறையில் உள்ளன.

முழுவதுமாக மறைக்கப்படாத தலை எங்கு தெரிந்தாலும் ஓங்கி தட்டும்படி உத்தரவு போலும்.. அதற்காகவே நியமிக்கப்பட்டிருந்த வயதான ஒருவர் தடிமனான கம்பு ஒன்றைக் கையில் வைத்தபடி நின்றுகொண்டிருந்தார். சகோதரத்துவம் மற்றும் சமத்துவம் போன்ற கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் நான்கு வாசல்கள் இந்த கோயிலுக்குள்ளே செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. 

சலவைக்கல்லால் ஆன இரண்டு அடுக்கு அமைப்பைக் கொண்டுள்ள இந்த குருத்வாராவை சுற்றி அம்ரித் சரோவர் எனும் புனித தீர்த்தக்குளம் அமைந்திருக்கிறது. ஆதி கிரந்த் என்றழைக்கப்படும் சீக்கியர்களின் வேத நூல் புத்தகம் பகல் பொழுதில் மட்டும் இந்த கோயிலின் உள்ளே காட்சிக்கு வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது.

இந்த அற்புத குருத்வாரா வளாகத்திற்குள் நுழைந்த கணமே அச்சூழலின் ஆன்மீக தூய்மையையும் இறையுணர்வுக்கு மனிதர்கள் அளிக்கும் முக்கியத்துவத்தையும் நம்மால் உணர முடியும். அதன் பிற்பாடு ஒரு பெரிய அறையில் பயத்தம் பருப்புக் கூழ் பந்தியாகப் பரிமாறப்படுகிறது. 

கூட்ட நெரிசலில் எங்களோடு வந்த மற்றவர்களைத் தவறவிட்ட நாங்கள் கொஞ்சம் பேர் நான்கு முறை முழு பிரகாரத்தையும் சுற்றி வந்தாயிற்று. ஒருவேளை பந்தி அறையில் இருப்பார்களோவென உள்ளே சென்று பார்க்கையில் எங்களைப் பந்தியில் அமர வைத்து விட்டனர். 

“ஐயோ போச்சு.. நாம வந்த வழிய மறந்துட்டோம். இங்க வேற மாட்டிக்கிட்டோம்! எல்லாரும் நம்மள விட்டுட்டுப் போகப் போறாங்க. வாங்க டீ போய்டலாம்” என தோழி ஒருத்தி சொல்லிக் கொண்டிருக்கையில் அந்த அறையின் வாசல்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. பயந்து போய் வெளியே ஓடி விட எத்தனிக்கையில் கதவருகில் நிற்பவரின் பஞ்சாபி பாஷை வேறு புரியவுமில்லை. 

‘என்னப்பா இது! நுழையும் போது பாசமா கூப்பிட்டாங்க.. இப்போ வெளில விட மாட்றாங்க’ என நாங்கள் பதற ஆரம்பிக்கையில் நல்லவேளை ஆபத்பாந்தவனாக எங்கள் ஆசிரியர் அங்கு வந்துவிட தப்பித்தோம் பிழைத்தோம் எனப் பேருந்திற்கு ஓடி வந்துவிட்டோம்.

“என்ன ஆச்சு. எங்க போய்ட்டீங்க. ஏன் இவ்ளோ நேரம்?” என்று மற்றவர்கள் விசாரிக்கையில் நடந்தவற்றை மிரட்சி விலகாமல் விவரித்துக் கொண்டே சென்ற போது நாங்கள் அடுத்ததாக பார்த்த இடம் எங்கள் மனதை இன்னும் கணக்கச் செய்தது. 

ஜாலியன்வாலா பாக் படுகொலை என்பது அம்ரித்ஸர் நகரின் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13இல் ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் பிரித்தானிய இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட பீரங்கிச் சூட்டு நிகழ்வைக் குறிப்பதென்பது நாம் அறிந்ததே.

G:\Pratilipi\DSC07386.JPG

ஆங்கிலேயருக்கு எதிரான ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் பெருகி வந்த அந்த கால கட்டத்தில் மக்களிடையே எழுச்சியும் எதிர்ப்பும் வேகமாயின. இந்நிலையில் ஜாலியன்வாலா பாக் திடலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இத்திடல் நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருக்க உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழியே இருந்தது.

இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் இராணுவ ஜெனரல் டையர் நூறு வெள்ளையினப் படையினரையும் ஐம்பது இந்திய சிப்பாய்களையும் அழைத்து வந்து எந்த எச்சரிக்கையும் தராமல் கூட்டத்தை நோக்கிச் சுடுமாறு உத்தரவிட்டிருக்கிறான். 

மக்கள் வாயிலை நோக்கி முண்டியடித்து ஓட.. சிலர் சுவர்களின் மீது ஏறிக் குதிக்க.. வேறு சிலர் திடலின் நடுவிலிருந்த கிணற்றில் வீழ்ந்தனர். அதிகாரப்பூர்வமாக மொத்தம் 379 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். அன்றிரவு ஊரடங்குச் சட்டம் வேறு நடைமுறையில் இருந்ததால் காயம்பட்டவர்கள் அங்கேயே காலை வரையில் வேதனையில் ஓலமிட்டிருக்கின்றனர்.

அந்தச் சுவற்றில் குண்டுகள் துளைத்திருந்த பகுதிகளையும் இரும்புக் கம்பிகளால் மூடப்பட்டிருந்த கிணற்றின் ஆழத்தையும் பார்க்கையில் அன்று வீதிகளில் தெளிக்கப்பட்ட நம் சொந்தங்களின் செங்குருதியின் விலையே இன்று நமது சுதந்திர வாழ்வின் ஆணி வேர் என்பது எங்களுக்குப் புரிந்தது. கிடைத்த பொக்கிஷத்தை நாம் சரிவரப் பாதுகாக்கிறோமா என்ற கேள்விக்கு விடை தேடியபடி ராணுவ எல்லை வாசற்பகுதி நோக்கிச் சென்றோம்.

வாகா பார்டர் என்றழைக்கப்படும் இந்தப் பகுதி நம் நாட்டின் அம்ரித்ஸர் நகரத்தையும்  பாகிஸ்தான் நாட்டிலுள்ள லாகூர் நகரத்தையும் இணைக்கிறதுஇந்த வாசற்பகுதியின் இருபுறத்திலும் பாகிஸ்தான் மற்றும் நம் நாட்டிற்குரிய அலுவலக கட்டிடங்கள், சோதனைச் சாவடிகள், தடுப்பு அமைப்புகள் போன்றவற்றைக் காண முடிந்தது.

G:\Pratilipi\201610022358561452_Stone-throwing-in-IndiaPakistan-joint-border-ceremony-in_SECVPF.gif

ஸ்வர்ணஜயந்தி என்றழைக்கப்படும் இந்த எல்லை வாசலைச் சுற்றிலும் அத்தனை பசுமையானக் காட்சியளித்தது. முக்கியமாக, பாகிஸ்தான் மற்றும் நம் நாட்டின் ராணுவ காவல் வீரர்கள் தினமும் மாலை நேரத்தில் முரசு மற்றும் ஊதுகுழல் கருவிகளின் பின்னணி இசையுடன் அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றை விரிவாக அரை மணி நேரத்திற்கு நடத்துகின்றனர். 

பார்வையாளர்களின் உற்சாகக் கரவொலியோடு வாத்திய ஒலிகளும் கலந்திட எங்கள் மாணவர்கள் சிலருக்கும் நம் தேசியக் கொடியை ஏந்தி எல்லை வாயில் வரை சென்று வர வாய்ப்பு கிடைக்க அங்கே தேசிய உணர்வினால் மெய் மறந்து அக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

இந்தக் காட்சிகளை ஒருமுறை நேரில் பார்க்கும் இரு நாட்டு குடிமக்களுக்கும் பரஸ்பர பகையுணர்வு மனதில் தோன்றவே தோன்றாது என்பது உண்மை. பின் எங்கிருந்து முளைக்கிறது எல்லைப் பகை என்பது தான் இதில் யோசிக்க வேண்டிய விஷயம்!

அங்கிருந்து டேராடூன் சென்று இரவு தங்கி விட்டு காலையில் முசூரி நோக்கிப் பயணமானோம். இந்த மலைப்பாதை அத்தனை ரம்மியமானது!

G:\Pratilipi\kemptyFall-cover.jpg

 கடல் மட்டத்திலிருந்து 4500கிமீ உயரத்தில் அமைந்திருக்கும் முசூரியின் கெம்ப்டி நீர்வீழ்ச்சி யமுனாத்ரி சாலையில் இருந்து 15கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பல பாறைகளைக் கடந்து இந்நீர்வீழ்ச்சி சமநிலைப் பகுதிகளை அடைகிறது. இங்கிருந்து 12 கிமீ அக்லார் நதியைக் கடந்து யமுனை நதியை அடையலாம். ஒரேநாளில் இத்தகைய அழகை ரசித்திட முடியுமென்றால் படைத்தவனும் ரசனையற்றவனே!

மறுநாள் இமாலய மலைத்தொடர்களுக்கான நுழைவாயிலான ரிஷிகேஷ் நோக்கிச் சென்றோம். மற்றொரு புனித நகரமான ஹரித்துவார் அங்கிருந்து ஏறத்தாழ 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, மற்றும் யமுனோத்ரி உள்ளிட்ட இடங்களுக்கு யாத்திரை செல்வதற்கான துவக்கப் புள்ளியாக ரிஷிகேஷ் இருக்கிறது. 450 அடி உயரத்தில் அமைந்திருக்கும் தொங்கு பாலமான லக்‌ஷ்மண் ஜூலா பாலத்திலிருந்து பார்த்தால் ரிஷிகேஷின் மொத்த அழகையும் கண்டு களிக்கலாம். 

G:\Pratilipi\14368773_1259570970729156_2504735638806400616_n-1.jpg

அழகான ராட்சசியாய் பொங்கிப் பிரவாகித்து வந்த புனித நதியாம் கங்கையில் நீராடும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. மாசுபடாத சாம்பல் நிற நதியில் அங்கங்கே தூவப்பட்டிருந்த சம்மங்கி பூக்கள் ஓடமென மிதந்து வந்துகொண்டிருந்தன. 

நண்பகல் வெயில் வெளியில் சுட்டெரிக்க கங்கையோ ரத்தத்தை உறைய வைக்கும் அளவு குளிருவதால் தான் என் தோழி கண்ணீர் விட்டு நடுங்கிக் கொண்டிருக்கிறாள் என்று நான் நினைத்திருக்க அவளோ ‘ஸாரி டீ!” என்றாள். “எதுக்கு இப்போ ஸாரி சொல்ற” எனக் கேட்டேன்.

“கொஞ்சம் வெயிட் பண்ணு” என்று சொல்லி மூன்று முறை நீரில் மூழ்கி விட்டு ‘இல்லடி! அன்னைக்கு உன் ரெக்கார்டு நோட் காணோம் னு தேடிட்டு இருந்தியே. நான் தான் எடுத்து வெச்சுட்டேன். நான் மட்டும் நோட் சப்மிட் பண்ணலன்னா தனியா திட்டு வாங்கணும்ல அதான் “ என்றாள்.

“சரி அதுக்கு இப்போ என்னடீ.. அதான் நோட் இப்போ இருக்குல்ல. அதுவுமில்லாம இந்த இடத்துல இப்போ இது முக்கியமா?” என்றேன். “எதாவது பாவம் பண்ணியிருந்தா கங்கையில மூணு தடவை முங்கி எந்திரிச்சா பாவம் போயிடும்னு எங்க பாட்டி சொல்லியிருக்காங்க. இப்போ உன் கிட்ட ஸாரியும் கேட்டுட்டேன். ஐ ஆம் க்ளீன் நௌ!” என்று அவள் கூறிய போது “நீயெல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல.. போடீ.. அப்டியே ஆத்தோட போயிடு” என்று சொல்லி அவளைக் கிண்டல் செய்து அழவே வைத்து விட்டோம்.

உண்மையில் ரிஷிகேஷில் இருந்து தான் இமாலயத்தில் உள்ள ஷிவாலிக் மலைத்தொடருக்கு கங்கை நதி செல்கிறது என்பதுடன் வட இந்திய சமவெளிகளுக்கும் பாய்ந்தோடுகிறது என வரலாற்றுப் பாடத்தில் படித்ததை நினைவுபடுத்திக் கொண்டே தோழிகளுக்காய் கரையில் நின்று கொண்டிருந்தேன்.

திடீரெனக் காதருகே வெப்பக் காற்று வீச ‘ஷ்…. ஷ்..’ என சத்தம் வேறு. யாரோ பயமுறுத்த தான் விளையாடுகிறார்கள் எனக் கருதி விட்டு ‘அட.. சும்மா இருங்கடீ’ எனக் கூறித் திரும்பிப் பார்த்தால்.. என் முகத்திற்கு வெகு அருகில் மிகப் பெரிய மலைப் பாம்பு!

தன் கழுத்தைச் சுற்றியிருந்த மலைப் பாம்பின் கழுத்தைக் கையில் லாவகமாகப் பிடித்தபடி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.. இதை சற்றும் எதிர்பாராத நானோ அதுவரை இப்படிப்பட்ட பாம்பை நேரில் கண்டதுமில்லாததால் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தேன்.

எங்கள் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்த பிற்பாடு தான் எனக்கு உயிரே வந்தது போலிருந்தது. என்னை பின் தொடர்ந்து வந்த தோழிகளோ “என்னடி இது! வித்தைக்காரரப் பார்த்து பயந்து இந்த ஓட்டம் ஓடி வந்திருக்க?!” என விழுந்து விழுந்து சிரித்தார்கள். 

நானோ அசடு வழிவது தெரிந்தால் இன்னும் கிண்டல் செய்வார்கள் என்பதனால் அதைக் கண்டு கொள்ளாதவாறு சப்ஜியை சுவைத்து உண்டு கொண்டிருந்தேன். இந்த சிரிப்பலைகள் எங்கள் பயணத்திலும் தொடர்ந்தது. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டல்லவா! நாங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?! ஆற்றில் குளித்ததும் வயிறார உண்டதும் களைப்பைத் தர நன்றாகத் தூங்கி விட்டோம். 

மறுநாள் எங்கள் பயணத்தின் மிக முக்கியமான நாளாக இருக்க அன்று நாங்கள் கண்டது உலக அதிசயங்களில் ஒன்றான ஆக்ரா நகரத்திலுள்ள தாஜ் மஹால். இது முகலாயப் பேரரசர் ஷாஜகான் அவர்களால் அவரது மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டப்பட்டிருக்கிறதென்பது நாம் சிறு வயது முதலே கேள்வியுற்ற வரலாறு தான். 

G:\Pratilipi\taj-mahal-agra-india-559337169-58ead4733df78c5162a001bf.jpg

காலத்தைக் கடந்து வீற்றிருக்கும் இந்தக் காதலின் சின்னம் மனிதனால் இதைவிடப் பேரழகான ஒரு கட்டிடத்தைக் கட்டவே முடியாது என்று சொல்லுமளவிற்கு வெண்பளிங்கு கற்களினால் இழைக்கப்பட்டு முகலாயர்களின் பெருமையை நூற்றாண்டுகள் கடந்தும் இவ்வுலகிற்குப் பறைசாற்றி வருகிறது.

நாங்கள் சென்ற நேரம் பிற்பகலாய் இருந்தபடியால் மெல்ல மெல்ல இருள் சூழ அலங்கரிக்கப்பட்ட மணப்பெண்ணாய் மின்னொளியில் யமுனை ஆற்றங்கரையினிலே மிளிர்ந்த தாஜ் மஹாலைக் காணக் கோடிக் கண்கள் இருந்திருந்தாலும் ரசித்துத் தீர்த்திருக்க முடியாது. அத்தனை தெய்வீகமான பேரழகு!

தில்லி, ஆக்ரா, ஜெய்பூரை உள்ளடக்கிய தங்க முக்கோணத்தில் ஆக்ரா அங்கம் வகிப்பதால் பயணத்தின் தொடர்ச்சியாக ‘பிங்க் சிட்டி’ என்றழைக்கப்படும் ஜெய்பூரை அடைந்தோம். 

மறுநாள் கச்சவாஹா ராஜவம்சத்தின் தலைநகராகத் திகழ்ந்த ஆம்பேர் எனும் ஸ்தலத்திற்குச் சென்றோம். மூத்தா என்னும் ஏரிக்கரையின் மீது அமைந்துள்ள ஆம்பேர் கோட்டையானது பல அரண்மனைகள், மண்டபங்கள், சபைக் கூடங்கள், கோயில்கள் மற்றும் நந்தவனங்களைக் கொண்டுள்ளது.

G:\Pratilipi\3-day-private-golden-triangle-tour-delhi-agra-and-jaipur-in-new-delhi-198411.jpg

அதிற்சில பகுதிகளை பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகள் மீது சவாரி செய்தவாறே சுற்றிப் பார்த்தோம். நம் ஊரில் கோயில் மாடுகளைப் பார்ப்பது போல வழி நெடுக ஒட்டகங்களைக் கண்டபோது தொட்டுப் பார்க்க ஆசையாக இருந்தது.

இதற்கிடையில் நாங்கள் வந்திருந்த பேருந்தின் பெர்மிட்-டில் ஏதோ குளறுபடியாக நடு இரவு பனிரெண்டு மணிக்குள் ராஜஸ்தான் எல்லையை விட்டு வெளியே வந்தாக வேண்டிய கட்டாயம். இரவு உணவிற்காகப் பேருந்துகள் எங்கும் நிறுத்தப்படவில்லை. 

“ரொம்ப பயமா இருக்குடீ! ஒருவேளை பனிரெண்டு மணிக்குள்ள நாம பார்டர் க்ராஸ் பண்ணலன்னா நம்ம எல்லாரையும் போலீஸ் பிடிச்சி வெச்சுப்பாங்களா?!” என ஒருத்தி ஆரம்பிக்க சில பிள்ளைகள் அழுது விடும் நிலைமைக்குச் சென்று விட்டார்கள்.

“ஆமாடி! மாட்டினோம்னா ஒட்டகம் மேய்க்க விட்ருவாங்க. இனிமே வீடு, ஸ்கூல் எல்லாத்தையும் மறந்துற வேண்டியது தான்” என இன்னொருத்தி பற்ற வைக்க அனைவரும் பயத்தில் பிரார்த்தித்துக் கொண்டே வாட்ச்-சையும் ஜன்னலையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அதெப்படி ஒரேயடியாக இவர்கள் சந்தோஷமாக இருக்கலாம் என விதி நினைத்திருக்கும். அதனால் தான் இந்த சின்ன ட்விஸ்ட் போல! இறக்கை மட்டும் தான் இல்லை மற்றபடி வானில் பறப்பது போன்று அழகாக சாதுரியமாக பேருந்தை இயக்கி எங்கள் டிரைவர் ராஜஸ்தான் எல்லை தாண்டி ஒரு மோட்டலில் வந்து நிறுத்தினார்.

இரவு உணவுகள் தீர்ந்து விட்ட நிலையில் அனைவருக்கும் பெரிய பெரிய டம்ளர்களில் பால் வழங்கப்பட பிடித்ததோ இல்லையோ எங்களது அட்வென்ச்சர் கதைகளைப் பேசிக் கொண்டே அதை அருந்திவிட்டு கடைசி இலக்கான எங்கள் பயணத்தின் ஆரம்பப் புள்ளியாகிய தில்லி  நோக்கிப் பயணமானோம்.

பல அதிசயங்களைத் தன்னுள் பொதிந்திருக்கும் அற்புத பொக்கிஷப் பெட்டி போன்று புராதனத்தையும் நவீனத்தையும் ஒருங்கே கொண்டுள்ள தில்லி மாநகரமானது அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச பெருநகரங்களில் ஒன்றாகக் கம்பீரமாக வீற்றிருக்கிறது.

மீதமிருந்த எங்களது பயண நேரம் குறைவாக இருந்தபடியால் ஒரே நாளில் முக்கியமான சில இடங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. முதலாவதாக நாங்கள் மறைந்த இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையாரின் ஞாபகார்த்தப் பொருட்களைத் தாங்கி நிற்கும் நினைவு அருங்காட்சியமாகிய இந்திரா காந்தி மியூசியம் சென்றோம்.

G:\Pratilipi\indira_gandhi_memorial.jpg

தேசிய சுதந்திர போராட்ட காலத்திலிருந்து துவங்கும் பல அற்புதமான புகைப்படங்கள், இந்திரா காந்தி அம்மையார் பயன்படுத்திய பொருட்கள், நேரு மற்றும் இந்திரா காந்தி குடும்பத்தாரின் அபூர்வ புகைப்படங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்த இந்த மியூசியம் மிகவும் வசீகரமான முறையில் பராமரிக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்லாது ஒரு சரித்திர சோகம் நிகழ்ந்த இந்த ஸ்தலத்தில் இந்திரா காந்தி அம்மையார் அவரது பாதுகாவலர்களால் 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தன்று உடுத்தியிருந்த புடவை, காலில் அணிந்திருந்த செருப்பு, தோள் பை போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

G:\Pratilipi\download (1).jpg

மற்றொரு சோக சரித்திரத்தின் அடையாளமாக இந்திரா காந்தி அம்மையாரின் மகன் திரு ராஜீவ் காந்திக்கான ஞாபகார்த்தப் பொருட்களுக்காகவும் இங்கு சில அறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. 

G:\Pratilipi\download (2).jpg

1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டது நாம் யாவரும் அறிந்ததே. காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் குண்டு வெடிப்பு நடந்த பிற்பாடு எஞ்சிய அவரது உடையின் பகுதிகளைப் பார்ப்பவர்கள் கனத்த இதயத்தோடு தான் திரும்பக் கூடும்.

அடுத்ததாக நேரு அருங்காட்சியகம் மற்றும் கோளரங்கம் சென்றோம். இது கல்வி மற்றும் பொழுதுபோக்கு இரண்டையும் சேர்த்தே வழங்குகிறது. எங்களுக்கென்னவோ இவ்வுலகம் தாண்டிச் சென்று அண்டவெளி மற்றும் கிரகங்கள் மத்தியில் இருப்பது போன்று இருந்தது! 

G:\Pratilipi\Viharin.com-Hall-at-Nehru-Planetarium.jpg

இவ்விடங்களிலேயே நாங்கள் அதிக நேரம் செலவிட்டபடியால் பேருந்தில் செல்லும் வழியிலே இந்திய அரசியல் அமைப்பின் தூணாக விளங்கும் பாராளுமன்றம் எனப்படும் பார்லிமெண்ட் அல்லது மக்களவைக் கூடம், ராஷ்டிரபதி பவன் எனப்படும் ஜனாதிபதி மாளிகை போன்றவற்றைத் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டே சென்றோம்.

பின்பு 2.41 கி.மீ நீளத்தில் சிவப்புக் கற்களால் கட்டப்பட்டு கம்பீரமான தோற்றத்தைக் கொண்டுள்ள வரலாற்று காலத்தின் சாட்சியமாகவும் புராதன கலைச்சின்னமாகவும் விளங்கும் செங்கோட்டை காணச் சென்றோம். நேரம் குறைவாக இருந்தபடியால் உள்ளே சென்று பார்க்க முடியாவிட்டாலும் அதன் முன்பாக நின்று புகைப்படமாவது எடுத்துக் கொள்ள முடிந்ததே என சந்தோஷப்பட்டுக் கொண்டோம்.

G:\Pratilipi\aa-Cover-qea86fhlo7igmum5hkv8grtni5-20170815012401.Medi.jpeg

கடைசி அத்தியாயமாக நவீன போக்குவரத்து வசதியை அளிக்கும் நோக்கத்துடன் மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து சர்வதேச தரத்தில் உருவாக்கியுள்ள மெட்ரோ ரயிலில் முதன்முறையாகப் பயணித்தோம். 

G:\Pratilipi\delhi-metro-main.gif

ஆயினும் மெட்ரோ நிலையத்திலிருந்து வெளியே வருகையில் மாணவிகளில் சிலர் நிதானிக்காமல் மின் நகர்த்தியில்(எஸ்கலேட்டர்) கால் வைத்ததில் சட சடவென உருண்டு விழுந்தனர். நல்லவேளையாக அவர்கள் சுதாரித்து எழுந்து கொண்டனர். அன்றிலிருந்து எஸ்கலேட்டர் என்றாலே எனக்கு பயம்!

உலகில் கிடைக்கும் எந்த ஒரு பொருளையும் வாங்கி விடலாம் என்று சொல்லும்படியான ‘ஷாப்பிங் செண்டர்’ என்ற பெருமை கொண்ட தில்லியில் அவரவர் பெற்றோருக்கும் உடன்பிறப்புகளுக்கும் பை நிறைய அள்ளிக் கொண்டு ஊர் வந்து சேர்வதற்காக நிஜாமுதீன் ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம்.

இட்லி, தோசை, அரிசி வகையறாக்களை பதினைந்து நாட்கள் கண்களிலே பார்க்க முடியவில்லை. பனிப்பொழிவு அதிகமாய் இருந்த காரணத்தினால் மணாலி வரை செல்ல முடியவில்லை. அப்துல் கலாம் ஐயா அவர்கள் அந்த சமயத்தில் அவசர பயணமாக வேறு இடத்திற்குச் சென்றிருந்ததால் அவரையும் பார்க்க முடியவில்லை.  

இப்படி சில அசௌகரியங்களும் நிறைவேறாத சிற்சில ஆசைகளும் இருந்தாலும் கண்களால் ஒருமுறை மட்டுமே பார்த்த இவ்விடங்கள் எத்தனை வருடங்களானாலும் மறக்க முடியாத காவியப் பயணமாய் எங்கள் மனதில் பசுமையாய் பதிந்திருந்தது.

ரயிலில் இரண்டு நாட்கள் கடந்ததே தெரியவில்லை. யார் யார் எந்த கம்பார்ட்மெண்டில் உறங்கினோம் என்பது கூட புரியாத அளவிற்கு அலுப்பு. மூன்றாம் நாள் இரவில் அத்தனை பெற்றோரும் ஆவலோடு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வந்து காத்திருக்க எங்கள் பயண அனுபவங்கள் அத்தனையும் ஒரு சேரக் கொட்டித் தீர்த்துவிட மாட்டோமா என்றிருந்தது! 

“பயணங்கள் முடிந்தாலும்

      கனவுகள் என்றும் தொடரும்!…”


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வட நாடு முதல் வயிற்று வலி வரை!! – அர்ச்சனா நித்தியானந்தம்வட நாடு முதல் வயிற்று வலி வரை!! – அர்ச்சனா நித்தியானந்தம்

சுற்றுலா என்றாலே ஐந்து முதல் ஐம்பது வரை அனைவருக்குமே அலாதி ஆனந்தம் தான். அட்டவணை வாழ்க்கையிலிருந்து சிறிது நாட்கள் அத்துவானக் காட்டில் தொலைந்துவிட்டு வந்தாலும், ரீஸ்டார்ட் செய்த கணினியைப்போல உடலும், மனமும் உற்சாகம் கொள்கின்றன.  நான் பள்ளிப்படிப்பு பயின்ற காலங்களில், கோடை

ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 6ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 6

தன் மகன் கடல் தாண்டிப் போகப் போகிறான் என்று அபிராமி யாரிடமும் சொல்லவில்லை. ஒரே வாரத்தில் கைக்குப் பணம் கிடைத்து விடுகிறது. “இது நான் உனக்குக் கடைசியாகக் கடன் வாங்கித் தந்திருக்கிறேன். நீ முன்னுக்கு வரணும்னு நம்பிக்கையோடு தந்திருக்கிறேன்…” “அம்மா…! என்

சிரிப்பு வருது 1சிரிப்பு வருது 1

சில படங்கள் நீங்கள் சிரிக்க சிந்திக்க பொருத்தமான பெயர். காரை எப்படி  வெளில எடுத்திருப்பார்? இதுவும் கார் சமாச்சாரம்தான். பறந்து பறந்து ஓட்டிருப்பாரோ பயபுள்ளக்கு  அதிர்ஷ்டம் ஒரு தடவை கதவைத் தட்டிருக்கு. அத்தப் போயி இன்னொரு தபா டெஸ்ட் பண்ணிருக்கு….